Tag: முனைவர் ப.சு. மூவேந்தன்

  • (Peer Reviewed) உரைக்கொள்கை உருவாக்கமும் பொருள்விளக்கப் பொருத்தப்பாடும் (திருக்குறள் – பொற்கோ உரையை முன்வைத்து)

    முனைவர் ப.சு. மூவேந்தன்
    உதவிப் பேராசிரியர்
    (தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
    தமிழாய்வுத் துறை, அரசு கலைக் கல்லூரி,
    திருத்தணி 631209
    திருவள்ளூர் மாவட்டம்.

    உரைக்கொள்கை உருவாக்கமும் பொருள்விளக்கப் பொருத்தப்பாடும்
    (திருக்குறள் – பொற்கோ உரையை முன்வைத்து)

    ஆய்வுச் சுருக்கம் (Abstract)

    தமிழ் இலக்கியப் பரப்பில் உரைகள் இன்றியமையாத இடத்தினை வகிக்கின்றன. உரைகள் பல்கிப் பெருகிய காலமும் இருந்ததை தமிழ் இலக்கிய வரலாறுகள் தெளிவுறுத்துகின்றன. மூல நூலாசிரியனுக்கும் கற்போனுக்கும் இடையே கால இடைவெளி ஏற்படும்போது மூல நூலாசிரியரின் கருத்தைத் தெளிவுபடுத்த ஆசிரியர்கள் தந்த விளக்கங்களே உரைகளாக அமைந்தன. அவ்வகையில் தமிழின் உரைகள் சிறப்புப் பெற்றனவாக அமைந்துள்ளன. தமிழ் இலக்கிய நூல்களில் பெருமளவினதான உரைகளைக் கொண்டது திருக்குறள் ஆகும். பேராசிரியர் பொற்கோ, திருக்குறள் விளக்கமாக உரைநூல் வகுத்துள்ளார். திருக்குறள் உரை விளக்கத்தில் பேராசிரியர் பொற்கோ ஆண்டுள்ள உரை நெறிகளை இக்கட்டுரை தெளிவுறுத்துகிறது.

    உரைகள் மூலநூற் கருத்தினை அறிவதற்குப் பெருந்துணை புரிகின்றன. எனினும் உரைகளில் உரையாசிரியரின் ஆளுமையே பெரிதும் நிற்கிறது. இதனால் மூல நூலாசிரியன் கருத்து இன்னது என்பது படிப்பாளர் அறிந்துகொள்ள வழியேலாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஒரு நூலுக்குப் பல உரைகள் எழும் நிலை ஏற்படுகிறது. பேராசிரியர் பொற்கோ, திருக்குறள் உரை விளக்கத்தின்வழி, இலக்கிய உரைக்கொள்கை வகுத்துள்ள திறத்தினையும், அதன்வழி உணர்த்தப்படும் பொருள்விளக்க நிலையினையும் இக்கட்டுரை புலப்படுத்துகிறது.

    அறிமுகம் (Introduction)

    உலக இலக்கியத்தின் வளமார்ந்த கூறுகள் யாவற்றையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் நூல்களில் திருக்குறள், தலைமைத் தன்மையுடையது. அதன் கருத்து வளமும் பொருளாழமும், சொற்சுருக்கமும் பயிலும்தொறும் புதுமையளிக்க வல்லவை. திருக்குறளின் பொருளமைதியில் மனம்கொண்ட சான்றோர்கள் தாம் திருக்குறளின்வழி கண்டுணர்ந்த விளக்கங்களை ஏனையோரும் நுகரும்பொருட்டு அதற்கு விளக்கங்கள் தரலாயினர். அவ்வாறு அவர்கள் உரைத்த விளக்கங்கள் பின்னாட்களில் பெருமளவிலான தடை விடைகளை உருவாக்கி, ஆய்வுப் போக்கிற்கு வழியமைத்துத் தந்தன. அவ்வகையில் தமிழ் உரைமரபில் திருக்குறள் தனித்துவம் மிக்கதாகத் திகழ்கிறது.

    இலக்கியநூல்களில் பெருமளவில் உரைவளம் பெற்ற நூல் திருக்குறள் ஒன்றே என்பது அதன் சிறப்பிற்குச் சான்றாக அமைந்துள்ளது. திருக்குறள் உரைகள் புதுப்பொருள் தரும் விதத்திலும் ஆய்வு நோக்கிலும், குறளின் இலக்கியக் கோட்பாடு, இலக்கண நோக்கு, மொழியியல், தத்துவம், அறிவியல், அரசியல், இலக்கிய நயம் முதலான கூறுகளை எடுத்துரைக்கும் விதத்திலும் அமைந்துள்ளன. திருக்குறள் உரைகளில் தமிழ்ப் பேராசிரியர்களின் திருக்குறள் உரைகள் தனித்துவம் மிக்கவையாகத் திகழ்கின்றன. அவை தமிழர்தம் பண்பாடு, மொழி, கலை, நாகரிகம், சொல்வளம், பொருள்வளம் ஆகியனவற்றை அடியொற்றியதாக அமைந்தன. அவ்வகையில் ஆய்வுப் போக்கில் அமைந்த ஒன்றாகத் திகழும் பேராசிரியர் பொற்கோவின் திருக்குறள் விளக்க உரைநெறிக் கொள்கை, இக்கட்டுரையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

    நூற்பதிப்பு

    பேராசிரியர் பொற்கோவின் திருக்குறள் உரைவிளக்கம், 2004இல் சென்னை பூம்பொழில் வெளியீடாக வெளிவந்துள்ளது. இதன் திருத்தப்பட்ட பதிப்பு 2010இல் வெளியாகியுள்ளது. தான் பயின்ற காலத்தில் மனங்கொண்ட பொருள்நிலையினையும், மாணவர்களுக்குப் பாடம் நடத்துங்கால் நிகழ்ந்த தடை விடைகளையும், தான் ஆய்வு செய்யுங்காலத்து உளங்கொண்ட கருத்தியல் விளக்கங்களையும் கருத்தில் கொண்டு பல்லாண்டுகள் உழைத்து ஆழ்ந்து சிந்தித்த பின்னரே குறளுரையினை நூல்வடிவில் கொண்டு வந்துள்ளார் என்பதனை நூலின் முகவுரை (ப. 8) தெளிவுறுத்துகிறது.

    உரையின் நோக்கம்

    திருக்குறள், பல பொதுமைக் கருத்துகளுக்கு இடமளிப்பது. இதன் காரணமாகவே அது உரையாசிரியரின் எண்ணத்திற்கும் கருதுகோளுக்கும் ஏற்ப நெகிழ்ந்து கொடுக்கும் வன்மையுடையதாய் விளங்குகின்றது. இதனால் உரையாசிரியர்கள் பலரும் தங்கள் கருத்தினைத் திருக்குறளில் புகுத்த முயல்வது இயல்பான ஒன்றாக உள்ளது. இதனால் திருவள்ளுவர் கருத்து இதுதான் என்று துணிந்து கூறுகின்றனர். இதில் உரையாசிரியர் பொற்கோவுக்கு உடன்பாடில்லை. மரபார்ந்த இலக்கணப் பயிற்சியும் மொழியியற் சிந்தனைத் திறனும் மிக்க அவர் தனது உரையின் நோக்கத்தினைப் பின்வருமாறு நூலின் முன்னுரையில் தெளிவுபடுத்துகின்றார்.

    ‘திருக்குறளைப் படிக்க வந்தவர்களிடம் ஊகமான கருத்துகளைச் சொல்லி அவற்றை நம்பவேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. சொல் விளையாட்டுகளில் ஈடுபட்டு நம்முடைய கருத்தைத் திருக்குறளில் திணிக்கக் கூடாது. இந்த உணர்வோடு மாணவர்களுக்குத் திருக்குறளைச் சொல்லிக் கொடுக்க நினைத்தால் எப்படிச் சொல்லிக் கொடுப்போமோ, அதைத்தான் இந்த உரைவிளக்கத்தில் முறையாகவும் சுருக்கமாகவும் பதிவு செய்திருக்கிறேன்.”  (முன்னுரை, ப. ix)

    திருக்குறள் உரைக்கொள்கை

                திருக்குறள் விளக்கத்தில் பொற்கோவின் உரைநெறியானது

    • திருக்குறளின் சிறப்பினை எடுத்துரைத்தல்
    • உரை மரபைப் பின்பற்றுதல்
    • பழமை போற்றுதல்
    • புதுமையைக் கொணர்தல்
    • உரைநெறி வகுத்தல்

    என்னும் நிலைகளில் அமைந்துள்ளது. இவற்றில் உரைநெறி வகுத்துள்ள பாங்கு மட்டும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டப்படுகிறது.

    உரைநெறி வகுத்தல்

    பேராசிரியர் பொற்கோ, ஒரு செறிவான வரையறையுடன் திருக்குறள் உரையை வகுத்துள்ளார். அவர் திருக்குறளின் ஒவ்வொரு குறளுக்கும் உரை வகுத்துள்ள உரைநெறி,

    • உரைத்தொடர் உருவாக்குதல்
    • உரைத்தொடர் விரிவாக்கம் செய்தல்
    • பொருள்விளக்கமும் குறிப்பும் தருதல்

    என்னும் மூன்று நிலைகளில் அமைந்துள்ளது. இம்மூன்று நிலைகளிலேயே 1330 குறள்களுக்கும் விளக்கம் தந்துள்ளார். இது பொற்கோ உரைவிளக்கத்தின் உரை நெறியாக அமைந்துள்ளது.

    உரைத்தொடர் உருவாக்குதல்

    ‘உரைத்தொடர்’ என்பதில் திருக்குறளின் செய்யுள் வடிவம் உரைநடைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமையும் முறையினைப் பொருள்விளக்கத்தின் தொடக்க நிலையாகக் குறிப்பிடுகின்றார் உரையாசிரியர்.

    இவ்வாறு குறளை உரைநடைப்படுத்தும் முறையினையும், உரைநடைப்படுத்திய விதத்தினையும், ‘செய்யுள் நடையில் உள்ள தொடர்கள் இயல்பாக ஆற்றொழுக்காக இல்லாமல் பல நேரங்களில் மாறி அமைந்திருக்கும், சில நேரங்களில் இயல்பாக அமைந்திருக்கும். செய்யுளில் உள்ள தொடர்களை இயல்பாக ஆற்றொழுக்கில் உரைநடை வரிசைப்படி மாற்றி அமைத்தால் செய்யுளின் பொருள் நமக்குப் புலப்படத் தொடங்கிவிடும்” என்று குறிப்பிடுகிறார். சான்றாக,

                கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்சம்

              நடுவொரீஇ யல்ல செயின்.                   –        (குறள். 116)

    என்னும் குறளினை, “தன்நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின் கெடுவல்யான் என்பது அறிக” என்று உரைத்தொடராக்குகின்றார். இவ்வாறு உரைத்தொடர் உருவாக்குவதன் வழியாகச் செய்யுளின் திரண்ட கருத்தினை உரைநடைப்படுத்துவது தெளிவாகிறது.

    உரைத்தொடர் விரிவாக்கம் செய்தல்

    குறளின் பொருள்விளக்க நிலையின் இரண்டாவது நிலையாக ‘உரைத்தொடர் விரி’ அமைந்துள்ளது. முதலில் குறளின் தொடர்களையும், சொற்களையும் கொண்டு உரைத் தொடராக்கிக் காட்டும் உரையாசிரியர், அதன் பின்னர் உரைத்தொடராக மாற்றும் போக்கும் தெளிவாகிறது. உரைத்தொடரின் பொருளை மேலும் பொருள் உணர்த்தும் நிலைக்கு இட்டுச் செல்வதாக இப்பகுதி அமைந்துள்ளது. சான்றாக,

                புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி

              மூக்கிற் கரியா ருடைத்து.                       –           (குறள். 277)

    என்னும் குறளுக்கு, “இந்த உலகம் புறங்குன்றி கண்டனையரேனும் அகத்தில் குன்றி மூக்கினைப் போலக் கரியராய் உள்ள துறவிகளை உடையது” என்று உரைத்தொடர் விரிவாக்கம் செய்துள்ளார்.

    பொருள் விளக்கமும் குறிப்பும் தருதல்

    திருக்குறள் உரைவிளக்கத்தின் மூன்றாவது நிலையாகப் ‘பொருள் விளக்கமும் குறிப்பும்’ அமைந்துள்ளது. இப்பகுதியில் ஒவ்வொரு குறளுக்குமான பொருள் விளக்கமும் இலக்கணக் குறிப்புகளும் பாடபேதங்களும் பிற செய்திகளும் விரிவாக இடம் பெற்றுள்ளன.

    உரைத்தொடர், உரைத்தொடர் விரி, பொருள்விளக்கமும் குறிப்பும் ஆகியன விளக்குமுறையின் படிநிலைகளாக அமைந்துள்ளன. பொருள் விளக்க நிலையில் ஒவ்வொன்றாகச் சொல்லிச் செல்வதாக இப்படிநிலை வளர்ச்சி அமைந்துள்ளது. இப்பொருள் விளக்க நிலையில் தேவைப்படும் இடங்களில் நீண்ட விளக்கங்களைத் தந்துள்ளார். இவை ஆசிரியர் தம் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் விதத்தினைக் காட்டுவதாக அமைந்துள்ளது. ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகையில் இலக்கியத்தில் இடம்பெறும் சொற்களையும், அதன் பொருளையும் அறிந்து கொள்ளும் விதத்தில் ஒவ்வொரு நிலையாக மாணவர்களைப் பொருளுணத்தும் நிலைக்கு இட்டுச் செல்வதை ஒத்ததாய் இப்பகுதி அமைந்துள்ளது.

    திருக்குறளின் உரைவிளக்க முறையினை இவ்வாறு அமைத்துள்ள தன்மை குறித்து, “இந்த உரைவிளக்கத்தில் ஒவ்வொரு குறளையும் உரைநடை வரிசையில் அமைத்துக் காட்டி வாசிப்பாளர்களுக்குத் திருக்குறளை நெருக்கமாக்கியிருக்கிறேன்; அடுத்த நிலையில் தேவையான சொற்களை மட்டும் இட்டு நிரப்பிப் பொருள் புலப்பாட்டுக்கு வழி வகுத்திருக்கிறேன்; மூன்றாவது நிலையில் தேவையான விளக்கங்களையும் குறிப்புரைகளையும் முறையாகச் சேர்த்திருக்கிறேன்” (ப. 8) என்று குறிப்பிடுவதன்வழி அறிய முடிகிறது.

    சொல் நிலையில் பொருள்விளக்கம் செய்தல்

    ஒரே குறளுக்கு இரண்டு, மூன்று பொருள்விளக்கங்கள் தரும் பகுதிகளும் பொற்கோ உரையில் உள்ளன. திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ள சொற்களின் பொருளுணர்த்தும் திறன் அவ்வாறு அமைந்திருப்பதும் அதற்கு ஒரு காரணமெனக் குறிப்பிடுகிறார்.

    இருபொருள் உரைத்தல்

                தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்

              கற்றனைத் தூறு மறிவு      –        (குறள். 396)

    என்னும் குறளுக்கு, “மணற்கேணி தோண்டத் தோண்ட நீர் சுரக்கும்; மாந்தர்களிடம் கற்க கற்க அறிவு ஊறும்” என்று ஒரு பொருளும், “தோண்டத் தோண்ட மணற்கேணியில் நீர் ஊறும்; அதுபோலக் கற்கக் கற்க மாந்தரிடம் அறிவு ஊறும்” என்று மற்றொரு பொருளும் உரைக்கின்றார். இதில் ஒரு பொருள் உவமை போன்றும், மற்றொரு பொருள் பொருள்போலவும் கொள்ளப்பட்டு இருபொருள் தரப்பட்டுள்ளது. இவ்வடிப்படையில் ஒரு குறளுக்கு மூன்று பொருளும் தந்துள்ள நிலையினைக் காண முடிகின்றது.

              “மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயிற்

              பலர்காணத் தோன்றன் மதி.”       –        (குறள். 1119)

    என்னும் குறளுக்கு, “இவள் பலர் காணத் தோன்றமாட்டாள். இவள் முகத்தை ஒத்து விளங்க நீ விரும்பினால் இனிமேல் பலர் காணத் தோன்றாதே என்பது ஒரு பொருள்; நீ இவள் முகத்தை ஒத்து விளங்குவது உண்மையானால் இனி நீ பலர் காணும் வண்ணம் பொதுவில் தோன்றாதே என்பது இன்னொரு பொருள்” என்று இருபொருள் உரைக்கின்றார்.

              “மாலைநோய் செய்தல் மணந்தா ரகலாத

              காலை யறிந்த திலேன்”     –        (குறள். 1226)

    என்னும் குறளில் இடம்பெறும் காலை என்னும் சொல் காலைப் பொழுது, நேரம், சமயம், காலம் என்னும் பலபொருள் கொண்டதாய் அமைந்துள்ளதனைக் கருத்தில் கொண்டு   இருபொருள் உரைக்கும் நிலைப்பாட்டினை மேற்கொள்வதனைக் காண முடிகிறது.

    “மாலைப் பொழுது இப்படி எனக்கு நோய் செய்யும் என்பதை நான் இப்போது தான் உணர்ந்துகொள்கிறேன். என் காதலர் என்னை விட்டுப் பிரியாதபொழுது நான் இதனை அறிந்ததில்லை. காதலர் உடன் இருந்தபொழுது மாலைப் பொழுதுக்குத் துன்பம் தருகின்ற வல்லமை உண்டு என்பது எனக்குத் தெரியாது. ஒவ்வொரு நாளும் வருகின்ற மாலைப் பொழுது இப்படித் துன்பம் தரும் என்பது தெரிந்திருந்தால் அவர் என்னை விட்டுப் பிரிய இடங்கொடுத்திருக்க மாட்டேன்” என்று ஒரு பொருளும், “இன்று காலையில்தான் அவர் என்னை விட்டுப் பிரிந்தார். காலையில் அவர் என்னோடு உடன் இருந்தார். மாலைப் பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை அவர் என்னோடு உடன் இருந்த காலைப் பொழுதில் நான் தெரிந்துகொள்ளவில்லை” என்று மற்றொரு பொருளும் உரைக்கின்றார்.

    உரை மறுப்பும் ஏற்பும்

    பொற்கோ, திருக்குறள் உரைத்திறன் வகுத்தலில் பிறர் உரைகளை மேற்கோளாகக் காட்டுதல், பிறரது உரைகளின் நயங்களை எடுத்துரைத்தல், பிற உரையாசிரியர்களின் கருத்தியல் பொருத்தப்பாட்டை மறுத்தல், அவர்களின் விளக்கமுறைத் தெளிவின்மையைக் காட்டுதல் என்பன போன்ற நிலைகளில் உரைவிளக்கப் பகுதிகள் அமைந்துள்ளன.

    பிறர் உரை மறுத்துத் தம் உரையை நிறுவுதல்

    பொற்கோ, திருக்குறள் மூல வடிவில் நுண்ணிய வாசிப்பும், ஏனையோர் உரைகளில் ஆழ்ந்த பயிற்சியும், அகலமான வாசிப்பும், தீவிரமான ஆய்வுப் போக்கும் கொண்டு விளங்குவதனை அவரது உரைக் குறிப்புகள் காட்டுகின்றன. அவ்வகையில் திருக்குறள் உரையாசிரியர்கள் பலரது கருத்துகளைக் கோடிட்டுக் காட்டியும், சிலரது உரைகளை ஒட்டியும் ஏற்றும் மறுத்தும் விளக்கம் செய்துள்ளார். இவ்வாறு அமையும் பகுதிகள் தனிநிலை ஆய்வுக்குரிய பொருண்மைகளைக் கொண்டு விளங்குகின்றமையான், ஆய்வின் விரிவஞ்சி இங்கு, பிற உரைகளை மறுத்துத் தம் உரையை நிறுவும் பாங்கு எடுத்துரைக்கப்படுகிறது.

    பிறர் உரையை மறுக்கும்போது மிக நயமாகவும் நாகரிகமாகவும் வெளிப்படுத்தும் பாங்கு அவரது உரைநயத்திற்குச் சான்றாக அமைகிறது. தம்முடைய மறுப்புகளில் எந்த உரையாசிரியர் பெயரையும் சுட்டாது அவர்களுடைய கருத்துகளையே தம் மறுப்புகளுக்கு உரியதாக்கிக் கொள்வது அவரது செவ்விய உரைநெறியாக உள்ளது.  இவ்வாறு அமையும் பகுதிகள் திருக்குறள் விளக்கத்தில் நீண்ட விவாதங்களுக்கு உரியனவாக அமைந்துள்ளமை கருதத்தக்கது.

              “அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற்

              பிறவாழி நீந்த லரிது.”                          –        (குறள். 8)

    என்னும் குறள் விளக்கத்தில், “துன்பக் கடலை நீந்திக் கரைசேருதல் அரிது என்று ஆசிரியர் தெளிவாகக் கூறுதலால் இறைவன் தாளாகிய புணை என்பது இவ்விடத்தில் பொருந்தாது. புணையைப் பிடித்துக்கொண்டு கரை சேருதலும் நீந்துதலும் வேறு வேறு என்பதைக் கருதுக” என்ற பிற உரையாசிரியர் கருத்தை மறுத்து, “பிறஆழி என்பதற்குப் பொருளும் இன்பமும் ஆகிய கடல் என்று பொருள் கூறுவதைவிட, அறத்துக்கு மாறாகிய மறச் செயல்களால் விளையும் துன்பக் கடல் என்று பொருள் செய்வதே பொருத்தம்” என்று விளக்கமும் தருகின்றார்.

                “இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்

                 முயல்வாரு ளெல்லாந் தலை”       –        (குறள். 47)

    என்னும் குறளில் இடம்பெறும் முயல்வார் என்பதற்கு, “முயல்வார் என்பது வானப்பிரத்த நிலையில் மனைவியோடு காட்டில் இருந்து தவம் செய்வோரைக் குறித்தது என்று கூறுவாரும் உளர்” என்று பிறர் உரையைக் குறித்துப் பின்னர், “திருவள்ளுவர் துறந்தார் பெருமையை வியந்து வியந்து பாராட்டிப் போற்றியவர் என்பதை மறவாமல் இக்குறளுக்கு உரைகூறுதல் வேண்டும். எனவே, முயல்வார் என்பதற்கு அறஇயல்பு அல்லாத வேறு நெறிகளில் முயல்வார் என்று பொருள் கொள்ளுவதே பொருந்தும்”  என்று விளக்கம் தருகின்றார்.

              “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்

                சான்றோ னெனக்கேட்ட தாய்.”   –        (குறள். 69)

    என்னும் குறளுக்கு “தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும் தன் மகனைக் கல்வி கேள்விகளான் நிறைந்தானென்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய். பெண்ணியல்பாற் றானாக அறியாமையின் கேட்ட தாய் என்றார்” என்று பொருளுரைப்பார் பரிமேலழகர். “பெண் இயல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய் என்றார் என்று கூறும் விளக்கம் சிறப்புடைத்து ஆகாது” என்று பரிமேலழகர் உரையை மறுத்து, “சான்றோன் என்னும் சொல்லுக்குப் போர்வீரன் என்று பொருள்கொண்டால் தானாக அறியாமையின் கேட்ட தாய் என்று விளக்கம் கூறுவது பொருந்தும்” என்று விளக்கமும் தருகின்றார்.  இவ்விடத்தில் சான்றோன் என்பதற்கு கல்வி கேள்விகளில் சிறந்தவன் என்று பொருள்கொள்வதைவிட, மிகச் சிறந்த போர்வீரன் என்று கொள்வதே பொருத்தமானதாக அமைந்துள்ளது.

    இவ்வாறு அமைவதில் உரையாசிரியரின் பொருத்தப்பாடு அவரது உரைக்கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு ஏற்றதாக அமைந்திருப்பதனைக் காண முடிகிறது.

    புதுமை விளக்கம் தருதல்

                சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்

              நிறைகாக்குங் காப்பே தலை.                –        (குறள். 57)

    என்னும் குறள் விளக்கத்தில் “ஆணாயினும் பெண்ணாயினும் வழிதவறிப் போக வேண்டும் என்று தாமே விரும்பினால் அவர்களை நெறிப்படுத்துவதற்காக அவர்களைச் சிறைவைப்பதாலும் காவல் காப்பதாலும் பயன் இல்லை. ஒழுக்கக் கேட்டினால் வருகின்ற தீமைகளை உணர்த்தி ஒரு பெண்ணின் மனத்தில் நிறைகுணத்தை உண்டாக்கி அதை அவளே காக்குமாறு செய்தல் தலையாய காப்பு என்றார். மகளிர்க்கே சொன்னார் எனினும் ஆடவர்க்கும் இது பொருந்தும்” என்று புதுவிளக்கம் தருகின்றார். இவ்விளக்கத்தின்வழி பெண்ணின் நிறை ஆண்களின் செயல்பாட்டினைப் பொறுத்தே அமைகிறது என்ற விளக்கமும் உணர்த்தப்படுகிறது. இதேபோன்று,

                கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்

              கொற்கத்தி னூற்றாந் துணை                –           (குறள். 414)

    என்னும் குறளுக்கு, “ஒருவன் கல்வி பெறவில்லை யென்றாலுங்கூட அவன் நூலறிவும் நுண்ணறிவும் உடையார்தம் வாய்ச்சொற்களைக் கேட்பானாகுக. ஏனென்றால் அந்தக் கேள்வி அவனுக்குச் சிந்தனையில் தளர்ச்சி நேருகின்ற பொழுதெல்லாம் ஊன்றுகோல் போல நின்று துணைபுரியும். நடக்கின்ற ஒருவனுக்குச் சோர்வின் காரணமாகக் கால் தடுமாறும் பொழுது கையில் இருக்கின்ற ஊன்றுகோல் உதவுவது போல, சிந்தனையோட்டத்தில் தளர்ச்சி ஏற்பட்டு ஒருவனுக்குத் தடுமாற்றம் ஏற்படும் பொழுது அவன் பெற்ற கேள்வி அறிவு அவனுக்கு உறுதுணையாக நிற்கும்” என்று விளக்கம் தருகின்றார்.

    இவ்வாறு அமையும் விளக்கங்கள், காலத்தின் பொருத்தப்பாட்டையும் பொதுமைச் சிந்தனையையும் வலியுறுத்தும் விதத்தில் அமைந்துள்ளன.

    காலத்தின் தேவைக்கேற்ற விளக்கம் தருதல்

    திருக்குறள், எல்லாக் காலத்திற்கும் ஏற்றதும் பொருத்தமானதுமாகும். அவ்வகையில் அதன் விளக்கமும் காலத்தின் தேவைக்கேற்ற விதத்தில் அமைதல் வேண்டும். இத்தகு நிலையில் பொற்கோ உரைவிளக்கமும் அமைந்துள்ளது. சான்றாக.

              ஒல்லும் வகையா னறவினை யோவாதே

              செல்லும்வா யெல்லாஞ் செயல்   –           (குறள். 33)

    என்னும் குறளுக்கு, “ஒருவன் தன்னால் முடிந்த வகையில் அறச் செயல்களை இடைவிடாமல் அவற்றுக்குத் தேவை ஏற்பட்ட பொழுதெல்லாம் செய்தல் வேண்டும். நல்வினை ஒன்று நடைபெற வேண்டுமானால் அந்தத் தேவையினைக் கண்டும் காணாததுபோல் இருந்து விடாமலும், அந்தச் சூழலில் இருந்து நழுவித் தப்பித்துக் கொள்ளாமலும் முடிந்த வகையில் அந்த நல்வினை நிகழப் பாடுபட வேண்டும். ஒரு நல்வினையை நிறைவேற்ற ஒருவன் மனத்தால் பாடுபடலாம்; சொல்லால் உதவலாம்; செயலால் உதவலாம்; இயன்ற வகையில் தன்னாலான பொருளை வழங்கியும் உதவலாம்; முடிந்தால் எல்லா வழியிலும் ஒருசேரவும் உதவலாம்; அப்படியெல்லாம் வினையாற்றி அறம் வளர்க்கப்பட்டால் தான் சமுதாயம் மகிழ்ச்சியாக வாழ முடியும். இது இல்லறத்தார்க்கும் பொருந்தும்; துறவறத்தார்க்கும் பொருந்தும்” என்று விளக்கம் தருகின்றார்.

    இவ்வாறு அமையும் உரைவிளக்கப் பகுதிகள் இக்காலச் சூழலுக்குப் பெரிதும் பொருந்த வருவதனை உணர முடிகிறது.

    இலக்கிய நயம் காணல்

              அலரெழ வாருயிர் நிற்கு மதனைப்

              பலரறியார் பாக்கியத் தால்                   –           (குறள். 1141)

    என்னும் குறள் விளக்கத்தில், “அலரால் பாதிக்கப்பட்ட தலைவன் கூறியது. களவு வெளிப்பட்டு அலராகும்போது ஏற்படுகின்ற மனநலிவு மற்ற துன்பங்களிலிருந்து வேறுபட்டது. இந்த மனநலிவு மனநலிவுக்கு உட்பட்டவர்க்கு மட்டுமே தெரியும். மற்றவர்க்குத் தெரியாது. இந்த நலிவு காதலர் உயிரைப் போக்காமல் இப்போது காத்து நிறுத்தியிருக்கிறது. காதலர் தம் நட்பு இந்த அலர் மூலம் உயிர்ப்போடு நெஞ்சில் எழுந்து நிற்றலால் உயிர் நீங்காது நிற்கிறது. இந்த உண்மை, காதலர்க்கு மட்டுமே தெரியும். மற்றவர்க்குத் தெரியாது. வெளியுலகிற்குத் தெரியாத நுட்பமான செய்திகள் இங்கே நயமாகச் சுட்டப்படுகின்றன”149 என்று திருக்குறளின் நுட்பத்தினை எடுத்துரைக்கின்றார்.

                காமமு நாணு முயிர்காவா தூங்குமென்

               னோனா வுடம்பி னகத்து              –           (குறள். 1163)

    என்னும் குறளின் சிறப்பினை, “உயிராகிய காத்தண்டில் ஒரு பக்கம் காமம் தொங்குகிறது. இந்தக் காத்தண்டு அவளுடைய மெல்லிய உடலுக்குத் துன்பம் தருவதாக இருக்கிறது. காமம், நாணம் ஆகிய இரண்டில் எதையும் விடமுடியாமல் அவள் தவிக்கிறாள். மிக நுட்பமாக உணர வேண்டிய இந்தச் செய்தியை இந்தக் குறள் ஒரு படம்போல ஆக்கிக் காட்சிப்படுத்திக் காட்டுகிறது” என்று நயம்பட எடுத்துரைக்கின்றார்.

              மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும்

              வேலைநீ வாழி பொழுது.            –           (குறள். 1221)

    என்னும் குறளின் பொருட்சிறப்பினை, “வேலை என்ற சொல் 1. வேலினை உடையாய், 2. வேலாக விளங்குகின்றாய் என இரண்டு பொருளையும் தரும். வேலை என்பதற்குக் கடல் என்றும் பொருள் கொள்ளலாம். பிரிந்திருக்கின்ற மகளிரின் உயிரை உண்ணுகின்ற கடலாக விளங்குகிறாய் என்றும் பொருள் கொள்ள இடமுண்டு. வேலை என்பதற்குக் காலம், சமயம் என்றும் பொருள் உண்டு. மாலைப்பொழுதே நீ மாலை நேரமல்ல; பிரிந்திருக்கின்ற மகளிரின் உயிரை உண்ணுகின்ற பொழுது என்றும் பொருள் கொள்ள இடமுண்டு.

    இத்துணைப் பொருள்களும் சந்திக்கின்ற முறையில் ஆசிரியர் இந்தத் தொடரை அமைத்திருப்பது இலக்கிய நோக்கில் உணர்ந்து உணர்ந்து பாராட்டத்தக்கது” என்றும்,

                ஒருநாள் ளெழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார்

               வருநாள்வைத் தேங்கு பவர்க்கு   –        (குறள். 1269)

    என்னும் குறள் விளக்கத்தில், “புற உலகுக்கும் அக உலகுக்கும் உள்ள உறவு நிலையை இந்தக் குறள் மிக அழகாக விளக்குகிறது. மிக இன்றியமையாத உளவியல் உண்மை ஒன்று போகிற போக்கில் எளிதாக எடுத்துப் பேசப்படுகிறது” என்றும்,

                உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்

               கள்ளுக்கில் காமத்திற் குண்டு              –        (குறள். 1281)

    என்னும் குறள்விளக்கத்தில், “எனக்கும் என் தலைவனுக்கும் உள்ள உறவை இத்தகையது என்று சொல்லாமல் காம உணர்ச்சி பற்றிய ஒரு பொது உண்மையினைத் தலைவி தோழிக்கு இங்கே எடுத்துக் கூறியிருப்பது தமிழ் அகப்பொருள் நுட்பத்தின் ஒரு தனிச்சிறப்பு. உளவியல் நோக்கில் இந்தச் செய்தி மிக இன்றியமையாதது” என்றும்,

                ஊடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து

              கூடற்கட் சென்றதென் னெஞ்சு.   –        (குறள். 1284)

    என்னும் குறள்விளக்கத்தில், “தனது நெஞ்சு தன்னைவிடத் தன் காதலருக்கு நெருக்கமாக இருக்கிறது என்பதைத் தலைவி உணர்த்தும் பாங்கு உளவியல் நுட்பமும் இலக்கிய நயமும் உடையதாகத் திகழ்கிறது” என்றும்,

                ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பம்

              கூடி முயங்கப் பெறின்               –        (குறள். 1330)

    என்னும் குறள்விளக்கத்தில், “ஊடல் என்பது மேலோட்டமாகப் பார்த்தால் எரிச்சல் உண்டாக்குகிற ஒன்றாக விலக்கத்தக்க ஒன்றாக சிறுபிள்ளைத்தனம் கொண்டதாக, பகட்டுத்தனம் உடையதாகத் தோன்றுகிறது. ஆனால், உளவியல் நோக்கில் தலைமக்கள் பார்வையில் நன்கு ஆராய்ந்து பார்த்தால் ஊடல் என்பது தனிச் சிறப்புக்கு உரிய ஒரு மன நிகழ்ச்சி என்பது விளங்குகின்றது. இது பண்பட்ட மனித சமுதாயத்துக்கு மட்டுமே உரியது. இதனால் தான் ஊடலை மெச்சிப் பேசுவதற்காகவே ஒரு அதிகாரத்தைத் திருவள்ளுவப் பெருந்தகை அமைத்திருக்கிறார்” என்று திருவள்ளுவரைப் புகழ்ந்துரைக்கின்றார்.

    இலக்கண நோக்கும் பொருளுணர்த்து முறையும்

    பொற்கோ உரைக்கொள்கையில் இலக்கண நோக்கும் மொழியியல் அணுகுமுறையும் சிறப்பிடம் பெற்றுள்ளன. இலக்கியத்தில் இடம்பெறும் சொற்களை இலக்கண நோக்கிலும் மொழியியல் நோக்கிலும் மனங்கொண்டு அவற்றிற்குரிய இலக்கணங்களைச் சுட்டிச் செல்வதும், அவ்விலக்கண அடிப்படையில் விளக்கம் தருவதையும் ஒரு மரபாகவே கொண்டுள்ளார்.

                 இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்

                குலனுடையான் கண்ணே உள     –           (குறள். 223)

    என்னும் குறள்விளக்கத்தில் இரு உரைகளைத் தருகின்றார். இவ்வாறு அமைவதற்கான காரணங்களை உரையின் இறுதியில், “உள என்ற பன்மை வினைமுற்று உரையாமை ஈதல் ஆகிய இரண்டையும் இருவேறு இயல்புகளாகுமாறு வற்புறுத்துகிறது. உள என்ற இந்த முற்று பன்மையில் இல்லாமல் ஒருமையில் இருந்திருந்தால் உரையாமை ஈதல் என்பதை ஒருதொடராக்கி எவ்வம் உரையாமல் ஈதல் என்று பொருள்கொள்ள இயலும். இங்கே உள என்ற பன்மை வினைமுற்றின் மூலம் இப்படிப்பட்ட உரைகளை நாம் உணரவேண்டி உள்ளது”  என்று குறிப்பிடுவதன்வழி தெளிவாகிறது.

    குறளின் தொடரமைப்பு விளங்கவில்லை எனல்

    சில குறள்களின் தொடரமைப்பு விளங்கவில்லை என்றும் அதற்கு வேறு விளக்கங்கள் கிடைத்தால் ஏற்கலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

                பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா

              ரிறைவ னடிசேரா தார்               –           (குறள். 10)

    என்னும் குறளின் தொடரமைப்பு குறித்து, “இந்தக் குறளின் தொடரமைப்பு சற்றே சிக்கல் வாய்ந்ததாக இருக்கிறது. நீந்துவர் என்பதற்கு உரிய எழுவாயை நாம் வலிந்து வருவிக்க வேண்டி உள்ளது” என்று கூறுகின்றார். இதே போன்று சில குறள்களின் (குறள். 25, 235) தொடரமைப்பும் சரியாகப் பொருள் விளங்கும் நிலையில் இல்லை என்று குறிப்பிடுகிறார்.

    பொருள்விளக்க இயலா நிலை கூறல்

    இயல்புடைய மூவர் (41) என்னும் சொல்லின் பொருளுக்கு இதுவரை வந்துள்ள விளக்கங்கள் தனக்கு நிறைவு தருவதாக இல்லை என்று கூறி, “இயல்புடைய மூவர் என்பதற்கு வேறு நல்ல விளக்கம் கிடைத்தால் ஏற்றுக்கொள்ளலாம்” என்று குறிப்பினைத் தந்துள்ளதனையும் காண முடிகிறது.

                அறத்தா றிதுவென வேண்டா சிவிகை

              பொறுத்தானோ டூர்ந்தா னிடை.  –           (குறள். 37)

    என்னும் குறள்விளக்கத்தில் “இந்தக் குறளுக்கு மேலும் விளக்கம் தேவைப்படுகிறது” என்று குறிப்பிடுகின்றார்.

    “சில சொல்லாட்சிகள், இலக்கண அமைப்பு முறைகள் திருவள்ளுவரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் திருவள்ளுவரின் சமகால நூல்களை வைத்துக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே இது மாதிரியான குறள்களுக்கு விளக்கம் தர முடியும்” என்றும் கூறுவது உரைநெறிக்கு மொழியியல் அறிவு மிக இன்றியமையாதது என்பதனைச் சுட்டுவதாக அமைந்துள்ளது.

    இவ்வாறு குறித்துள்ள நிலைமையினைக் குறித்து, “வள்ளுவர் ஒரு குறிப்பிட்ட குறளில் என்ன சொன்னார் என்பதை எப்படித் தெரிந்துகொள்ளுவது? தெரிந்து கொள்ள முடியாமல் போனால் விளங்கவில்லை என்று சொன்னால் பிழை இல்லை. ஊகமாகக் கருத்துகளைச் சொல்லி அவற்றை நம்ப வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. சொல் விளையாட்டுகளில் ஈடுபட்டு நம்முடைய கருத்தைத் திருக்குறளில் திணிக்கக் கூடாது” (ப. 233 ) என்று விளக்கம் தருகின்றார்.

    இவ்வாறு திருக்குறள் உரைவிளக்கத்தில் பொற்கோ வகுத்துள்ள உரைக்கொள்கை நெறி தெளிவாகிறது.

    முடிவுரை

    பண்டைய உரை மரபினைப் பல இடங்களில் பின்பற்றியும், பல்வேறு புதுமை நெறிகளையும் கொண்டதாய்ப் பொற்கோவின் திருக்குறள் உரைவிளக்கம் அமைந்துள்ளது. ஓர் இலக்கியத்தில் அமையும் சொல், தொடர், சூழல், காலம், இடம் நோக்கியனவாகவே அதன் உரைவிளக்கம் அமைய வேண்டும் என்பதும்

    முடிவுகள் (Results of Findings)

    திருக்குறள் கருத்துகள் இன்றைக்கும் நமக்குத் தேவைப்படுகின்றன. ஆதலால், திருக்குறளுக்குப் புதுமை நோக்கிலும், காலத்தின் தேவைக்கேற்ற விதத்திலும் பொருள் கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. திருக்குறளில் இடம்பெற்றுள்ள சொல்வளமும், கருத்தியல் நிறைவும் இதனை நிரப்பும் நிலையினை உரையாசிரியர்கள் வெளிப்படுத்தி வருவது அதன் சிறப்புக்கு அணி செய்வதாக அமைந்துள்ளது. பண்டைக் கால மரபார்ந்த உரைகளுக்கும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் உரைக்கும் பலவகையான வேறுபாடுகள் உள்ளன. எச்சொல்லையும் அதன் சொல்லுணர்த்த நோக்கம், பொருள் விளக்க நிலை, இடப்பொருள், காலப்பொருள் நிலையில் பொருள்கொள்ள வேண்டிய நிலைப்பாடு உள்ளதனை இவர்கள் உரைகள் தெளிவாக்குகின்றன. திருக்குறள் உரைவிளக்கம் போன்றே ஏனைய செவ்வியல் இலக்கியங்களையும் நாம் மறுவாசிப்புக்கும், உரையாக்கத்திற்கும் உட்படுத்தும்போது பல புதுமையான விளக்கங்களைப் பெறலாம் என்பது இதன்வழி உணரவும் உணர்த்தவும் படுகிறது.

    இறுதி முடிவுகள் (Conclusions) :

    பண்டைய இலக்கியங்களை அதன் உரைவழியாகவே அணுகும் நிலை தற்காலத்தில் உள்ளது. மூல வடிவம் உணர்த்தும் பொருள்நிலையை மனங்கொள்வதற்கு மாற்றாக உரையாசிரியர் தரும் உரை முடிபுகளையே ஏற்கும் வழக்காறும் நாளும் பெருகி வருகிறது. அவ்வாறு உரையின் வழியாக மூலத்தை அணுகுவதால் மூல நூலாசிரியரின் உண்மைப் பொருள் விளக்கம் முற்றுப்பெறாத நிலை உள்ளதனைத் தற்கால உரை மற்றும் பதிப்புநிலை குறித்த ஆய்வுகள் வெளிக்கொணர்ந்து உள்ளன. அவ்வாறான ஒரு உரைப்புதுமை அணுகுமுறையில் திருக்குறளையும் ஏனைய இலக்கியங்களையும் அணுகுவதற்கான வழித்தடத்தை இவ்வாறான உரைவிளக்கங்கள் உருவாக்கித் தந்துள்ளன என்பது இதன் எடுப்பும் முடிப்புமாக அமைந்துள்ளது.

    துணைநின்ற நூல் (Reference Books)

    1. பொற்கோ, திருக்குறள் உரைவிளக்கம், (4 தொகுதிகள்), பூம்பொழில் வெளியீடு, சென்னை, திருத்தப்பட்ட பதிப்பு 2010

    =======================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழில் தோன்றிய நூல்களிலேயே மிகுதியான உரையைக் கொண்ட நூல், திருக்குறள். திருக்குறளின் கருத்துகள், எக்காலத்திற்கும் ஏற்றதாய் விளங்குகின்றன. அதுபோல் எக்காலத்தும் உரையியற்ற உகந்த நூலாகவும் திருக்குறள் உள்ளது. பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணிபுரிந்து பொற்கோ அவர்கள், மாணவர்களுக்குப் பாடம் சொன்ன நிலையிலும், தாம் ஆழ்ந்து கற்ற நிலையிலும், ஆய்வு செய்த நிலையிலும், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு திருக்குறளுக்கு உரையினை வரைந்துள்ளார். பொற்கோ திருக்குறளுக்கு உரை எழுதியதன் நோக்கம், திருக்குறளை விளக்கப் பொற்கோ கைகொண்ட உரைநெறிகள் ஆகியவற்றை முறையாக விளக்குகின்றது கட்டுரை.

    ஒரே குறளுக்கு இரு விளக்கம், மூன்று விளக்கம் அளித்தல், புதிய விளக்கம் அளித்தல், இன்னும் விளங்க வேண்டிய இடங்கள் உள, காலத்தின் தேவைக்கேற்ப விளக்கமளித்தல், இலக்கண, மொழியியல் அறிவோடு விளக்குதல், பொருள் விளக்க இயலாநிலை என்னும் பல நிலைகளில் பொற்கோவின் திருக்குறள் உரைவிளக்கம் அமைகின்ற நிலையைக் கட்டுரையாளர் விரிவாக விளக்கிச் செல்கின்றார். பன்னிரண்டு திருக்குறளைக் கொண்டு பொற்கோவின் உரைக்கொள்கையையும் உரைவிளக்கப் பொருத்தப்பாட்டினையும் கட்டுரையாளர் விளக்கியுள்ளார். கட்டுரையாளருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    =======================================================

    Share
  • ஓளவையார் புறப்பாடல்களில் உலகியலும் புனைவியலும்

    முனைவர் ப.சு. மூவேந்தன்

    உதவிப்பேராசிரியர்

    தமிழியல்துறை (பணிநிரவல்)

    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

    அண்ணாமலைநகர்-608002

    முன்னுரை

    உயர்ந்த இலக்கியத் தன்மைகளைப் பெற்று, உயரிய குறிக்கோள் நோக்கில் உலகப் பொதுமைக் கூறுகளை நோக்கமாகக் கொண்டு படைக்கப் பெறுபவை செவ்விலக்கியங்கள் ஆகும். இத்தகு செவ்வியல் தன்மைகளைப் பெற்றவை சங்க இலக்கியங்கள் ஆகும்.

    உலகியலில் நிகழும் மனித வாழ்வின் சாரத்தை, புலவன் தன் படைப்பாக்கத் திறனுக்கு ஏற்றவாறு கற்பனை, உணர்ச்சி, வடிவம் தந்து புனைவாக்குகிறான். உலகியற்பண்புகளும், புனைவியலும் சங்கக் கவிதைகளில் கலந்து நிறகின்றன.

    நவீன திறனாய்வுக் கொள்கைகளில் யதார்த்தவியல் (realism) குறிப்பிடத்தக்க தாகும். உலகியல் நிகழ்வுகள் யதார்த்தத்தின் பாற்படுகின்றன. அது பொதுவுடைமைச் சிந்தனையின் விளக்கக் கொள்கையியல் என்றும் குறிக்கப் பெறுகிறது. புனைவியலை நோக்க உலக இயல்புகளைக் காட்சிப்படுத்தும் யதார்த்தவியல் சமுதாயத்திற்கு வளம் சேர்ப்பதாக அமைகிறது. சங்கப்புலவர்களில் ஓளவையார் தனித்திறம் மிக்கவராகத் திகழ்வதற்கு உலகியல் நிகழ்வுகளே களம் அமைத்துக் கொடுத்துள்ளன. உலகியல் நிகழ்வுகளைச் செய்யுளாக்க மரபுகளோடு இணைத்துக் கட்டமைக்கும் அவரது பாடற்புனைதிறத்தினைக் காட்டுவதாய் இக்கட்டுரை அமைகிறது.

    சங்கக் கவிதைச் சிறப்பு

    கவிதை என்பது நுண்மையும், ஆழமும், வளப்பமும் உடையதாகத் திகழ வேண்டும். மேலும், சொல்லவந்த பொருளை நேரிடையாக, வெளிப்படையாகச் சொல்லாமல் ஆழ்ந்து நோக்கப் பலபொருள்களைத் தரவேண்டும். எழுத்துக்கு எழுத்து, சொல்லுக்குச் சொல், அடிக்கு அடி என அழகுசெய்யப்பட்ட நுண்ணிய வேலைப்பாடு கொண்டமைந்த சிற்பம் போன்றதாகக் கவிதை அமையவேண்டும். பயிலும்தொறும் புதுப்புதுப் பொருள்களைத் தந்துகொண்டே இருக்கவேண்டும். அதுவே தலைசிறந்த கவிதையின் மதிப்பீடாகும். இவ்வகையில அமைந்தவை சங்கக் கவிதைகளாகும். “ஒவ்வொரு சங்கநூற் கவிதையும் ‘வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால்’ போன்றமைத்தல் கண்கூடு” என்பார் ப. மருதநாயகம். (39:2000)

    உலகியலும் புனைவியலும்

    தொல்காப்பியம் திணைச்செய்யுள் மரபுகளைப் பற்றிப் பேசுகையில் அவை உலகவழக்கும் செய்யுள்வழக்கும் கலந்து படைக்கப்பெறும் என்று கூறுகிறது. நவீனக் கோட்பாட்டாளர்கள் இதனை புனைவியல் (Romanticism) நடப்பியல் (Realism) என்றுரைப்பர். இது தமிழுக்குப் புதியதன்று. நாடகவழக்கும், உலகியல் வழக்கும் பாடலில் பயின்றுவரும் திறத்தினைத் தொல்காப்பியம்,

    “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

    பாடல் சான்ற புலனெறி வழக்கம்”            (தொல்.பொருள். சூ. 999)

    என்று எடுத்துரைக்கிறது. இலக்கிய மரபு என்பதற்குத் தொல்காப்பியர் பயன்படுத்தும் சொல்லாக்கம் புலனெறிவழக்கு என்பதாகும். இதற்கு நச்சினார்க்கினியர் ‘கற்றறிந்தோர் உருவாக்கிப் பின்பற்றிய வழக்கு’ என விளக்கம் தருகின்றார். உலகியல் வழக்கு என்பது திணைச்செய்யுளின் தகுதியுடைய பாடுபொருள்களாக மக்களின் வாழ்க்கை -யையும் நிகழ்ச்சிகளையும் பாடுபொருளாகக் கொண்டமைவதாகும். நாடக வழக்காவது செய்யுளின் அடிப்படைப் பொருளை நயம்படத் தீட்டும் முறையாகும்.

    உலகியல் வழக்கு

    உலகியல் வழக்கு என்பது வாழ்வில் நிகழ்ந்த ஒன்றைச் சொற்களால் காட்டுவதோ, ஒரு நிகழ்ச்சியை விவரிப்பதோ, ஓர் உண்மை நிகழ்ச்சியை மொழிவதோ மட்டும் அன்று. வாழ்வின் பல்வேறு சூழல்களுக்குப் பொருந்தும் வண்ணம் ஒரு செய்யுளைப் படிக்கும் போது அதன் நிகழ்ச்சிகளை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பாங்கில் இத்தகைய நிகழ்ச்சி இயல்பானது என்றும் இத்தகைய நிகழ்ச்சி வாழ்வில் நிகழ்ந்திருக்கவும் கூடும் என்னும் நிலையில் படைத்துக் காட்டுவது ஆகும்.

    உலகியலில் செய்யுளுக்குரிய பொருளில் மிகச் சிறந்தது எதுவோ, விழுமியது எதுவோ, மிகுபுகழ் பெற்றது எதுவோ அதுவே பாடலின் பொருளாகத் தேர்ந்து கொள்ளப்படும். சங்க அகப்பாடல்களில் புனைவியல்நெறி மிகுந்தும், புறப்பாடல்களில் நடப்பியல் நெறி மிகுந்தும் படைக்கப்பெறும்.

    புறநானூற்றில் உலகியல்

    புறப்பாடல்கள் வீரம் செறிந்த சங்ககால வாழ்வின் விழுமிய வரலாற்றுப் பதிவுகளாக விளங்குகின்றன. புறப்பாடல்களில் போரையும், போரியல் வாழ்வினையும் சார்ந்த நிகழ்ச்சிகளே பொருளாக அமைந்துள்ளன. ஆதலால் அவற்றில் புனைவியலின் தன்மைகள் குறைந்தும், நடப்பியலின் தன்மைகள் மிகுந்தும் காணப்படுவது இயல்பு.  கற்பனைப் புலப்பாட்டுத் திறனைவிட, உலகியல் உற்றுநோக்கலே பெரும்பான்மையாக அமைந்துள்ளது.

    ஓளவையார் பாடல்களில் உலகியலும் புனைவியலும்

    ஓளவையார் பாடியதாக புறநானூற்றில் முப்பத்துமூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்கள் அதியமானோடு அவர் கொண்டிருந்த நட்பின் நிகழ்வுகளை வெளிப்படுத்துவதாகவும் அதன்அடிப்படையில் எழுந்த உணர்வுநிலைப்பாட்டினைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளன. இவ்உணர்வுக் கூறுகள் அனைத்தும் உலகியல் நிகழ்வுகளின் வெளிப்பாடு ஆகும். இப்பாடல்களைத் தானைமறம், இயன்மொழி வாழ்த்து, அரசவாகை, வாள்மங்கலம், கொற்றவள்ளை, விறலியாற்றுப்படை, பரிசில் துறை, கையறுநிலை, உண்டாட்டு, உவகைக்கலுழ்ச்சி, பாண்பாட்டு, வாழ்த்தியல், கடைநிலை என்னும் துறைகளைச் சார்ந்தவையாக  வகுத்துள்ளனர். இப்பாடல்களை,

    • புலமைச்செருக்கின் வெளிப்பாடு
    • புலப்பாட்டு வெளிப்பாடு
    • உணர்வுநிலை வெளிப்பாடு
    • மறஉணர்வு வெளிப்பாடு
    • வஞ்சின வெளிப்பாடு
    • வீர உணர்வு வெளிப்பாடு
    • நட்பின் இழப்பு வெளிப்பாடு
    • நட்பின் உணர்வு வெளிப்பாடு
    • நன்றியுணர்வு வெளிப்பாடு

    என்ற நிலைகளில் பொருத்திப் பார்க்கலாம்.

    புலமைச்செருக்கின் வெளிப்பாடு

          கல்வியின் காரணமாகத் தறுகண் என்னும் பெருமிதம் தோன்றும் என்கிறார் தொல்காப்பியர். உலக வாழ்வில் கற்றவர்கள் தாம் பெற்ற அறிவின் சிறப்பால் உயர்ந்தே நிற்பர். ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பது உலகியல் வழக்கு. ஔவையார்-அதியமான் அறிமுகப் பகுதி இதுபோன்றதொரு நிலையில் நிகழ்கிறது. அதியமானிடம் பரிசில் பெறுவதற்காகக் காத்திருக்கும் ஓளவையார், அவனது கால நீட்டிப்பினையும், தன்னை வந்து சந்திக்காத அதியனின் செயலையும் அறிந்து, வெகுண்டு வாயிலோனிடம்,

    “வாயிலோயே வாயிலோயே

    ………………………………………….

    கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி

    தன்அறி யலன்கொல்? என்அறியலன் கொல்?”

    என்று மனம்நொந்து கூறி, பின்னர்,

    “அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென

    வறுந்தலை உலகமும் அன்றே;

    ……………………………….

    எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”           (புறம். 206)

    என்று தன் புலமைக்கு ஏற்பட்ட இழுக்கின் உணர்வால் அவ்விடத்திலிருந்து அகன்ற நிகழ்வினைப் பாடலாக்கியுள்ளார். புலமைக்கு உரிய மதிப்பினைத் தரஇயலாத அதியனின் செயலைக்கடிவதனையும், புலவர்கள் எந்நிலையிலும் புலமைச்செருக்குடன் திகழ்ந்திட வேண்டும் என்ற கருத்தினையும் இதன்வழி வெளிப்படுத்தப்படுத்தக் காணலாம்..

    புலப்பாட்டு வெளிப்பாடு

    உலகியல் நிகழ்வுகளை உள்ளவாறே சொன்னால் அது இலக்கிய வடிவம் பெறாது. உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகிய மூன்றன்கூறும் நுட்பமுறப் படைக்கப் பெற வேண்டும். அப்போதுதான் சிறந்த இலக்கிய வடிவம் பெறும்;. அதியனின் தோற்றத்தை ஓளவையார்,

    “கையது வேலே காலன புனைகழல்

    மெய்யது விடரே மிடற்றது பசும்புண்

    வட்கர் போகிய வளர்இளம் போந்தை

    உச்சிக்கொண்ட ஊசிவெண் தோட்டு

    வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇ

    கரிஇரும் பித்தை பொலியச் சூடி

    வரிவயம் பொருத வயக்களிறு போல..”       (பா. 100:1-7)

    என்று புலப்படுத்துவது குறிக்கத்தக்கது. கையில் கூர்மை பொருந்திய வேல். காலில் வீரக்கழல். போருடன்றதால் நேர்ந்த வியர்வை. கழுத்திலே பசுமையான புண். பனம்பூ மாலையுடன் வெட்சிப்பூவும், வேங்கைப் பூவும் சூடியுள்ளான். இவை வீரனைக் காட்சிப்படுத்தும் சங்க நிகழ்வுகள் ‘வரிப்புலியுடன் போரிட்ட யானை, சண்டை முடிந்ததும் சினம் தணியாது நிற்றலைப் போல’ என்ற உவமைப் புனைவு. இடையே உன்னைச் சினங்கொள்ளச் செய்தவர் பிழைக்க மாட்டார் என்ற குறிப்பு. உன் புதல்வனைக் கண்ட பின்னும் உன் கண்கள் பகைவரை நோக்கிய கண்களைப் போலவே சிவந்தே உள்ளனவே! என போருடற்று மீண்டு வந்த அதியமான் தன் புதல்வனைக் காணவந்த நிகழ்வினை புலப்பாட்டு உணர்வு பொங்கப் புனைவுடன் உவமை கலந்து சிறந்த பாடலாக்கியுள்ளார்.

    உணர்வுநிலை வெளிப்பாடு

    வஞ்சின உணர்வு வேட்டைச்சமூகத்தின் மரபுவழி எச்சமாகும். சங்க இலக்கியத்தில் வஞ்சினம் கூறும் பாடல்கள் இத்தன்மையினவே. வஞ்சின உணர்வு போர் வீரர்களுக்கு ஆக்கம் தரும் ஒன்றாகப் புலவர்களால் விதந்துரைக்கப்படுகிறது. வஞ்சினப் பாடல்கள் வீரத்தை மிகுவிக்கத் துணை செய்கின்றன.

    அதியமான் நட்பினரான ஓளவையார் அவன் கொடைப்பண்பையும் வீரத்தையும் நயம்படப் பாராட்டுகிறார். இது நட்பின் உரிமையாக அமைந்துள்ளது. அதியமானின் வீரத்தையும், மனஉறுதியையும் போர்த் திறத்தினையும் பகைவர்களிடம் பெருமைபட எடுத்துக்கூறும் பகுதி நட்பின் உணர்வு வெளிப்பாடாக அமைந்துள்ளது.

    “களம்புகல் ஓம்புமின் தெவ்வீர், போரெதிர்ந்து

    எம்முளும் உளனொரு பொருநன் வைகல்

    எண்தேர் செய்யுந் தச்சன்

    திங்கள் வலித்த காலன் னோனே.”            (புறம். 87)

    பகைவர்களே! நீவிர் போர்க்களம் புகுவதைத் தவிர்ப்பீராக! ஒரு நாளில் எட்டுத் தேர் செய்யும் தச்சன் ஒரு மாதமாகச் செய்த தேரின் சக்கரத்தைப் போன்ற வலிமையும் போராற்றலும் உள்ள உறுதியுமுடையவன் என் தலைவன். என்று அதியனுக்காகத் தான் உரிமைகொண்டு பேசுவது கருதத்தக்கது.

    மறஉணர்வு வெளிப்பாடு

    பகைவர்களே! நீவிர் எப்படிப்பட்டவராயினும் அவனோடு போர் செய்தே தீருவோம் என்று மட்டும் கருதாதீர்! அவன் பேராற்றல் படைத்தவன்; ஒளிவீசும் கூரிய நெடுவேல் படை கொண்ட மழவர்க்குத் தலைவன். விளங்குகின்ற நுண்ணிய பூணணிந்த மார்பினை உடையவன். களவேள்வி செய்து நற்போர் செய்யும் முழவு போன்ற தோளை உடையவன். அவன் எம் தலைவன். அவனை வென்றுவிடலாம் என்று சொல்வது உமக்கு எளிது; ஆயின் செய்வது உமக்கு அரிதே! எனவே நீவிர் போர்க்களம் செல்லாதீர்! என்று தடுத்துக் கூறுவதனை,

    “யாவீர் ஆயினும் கூழைதார் கொண்டு

    யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓங்குதிறல்

    ஒளிறு இலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்

    கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்

    விழவு மேம்பட்ட நற்போர்

    முழவுத்தோள் என்னையைக் காணா ஊங்கே.”       (பா. 88)

    என்னும் பாடலில் காணலாம். இவ்விடத்தில் ஓளவையார் சங்க மூதின்மகளிர் வீர உணர்வினை வெளிப்படுத்தி நிற்கக் காணலாம்.

    வஞ்சின வெளிப்பாடு

    பகைவரை நோக்கி, அதியமானை நீங்கள் இளையவன்; எளியவன் என்று நினைத்தால் உங்களால் வெற்றிபெற இயலாது. அவன் யானையைக் கவ்வி இழுக்கும் முதலையைப் போன்ற வலிமையுடையவன்.

    “போற்றுமின் மறவீர் ! சாற்றுமின் நும்மை

    …………………………………………

    ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை

    …………………………………………

    இளையவன் என்று இகழின் பெறல்அரிது ஆடே.”          (பா. 104)

    என்று எடுத்துரைக்கின்றார். இதில் அதியனைத் தன் தலைவன் என்று கூறுவதன்வழி அவர் அவன் நாட்டு மக்களில் ஒருவராக நின்று ஒலிப்பதனைக் காண்கிறோம். இவ்விடங்களில் அதியன்மீதான நட்பின் நம்பிக்கையும், அன்பின் ஆழமும் அகலமும் உலகியல் நிகழ்வுகளோடு பொருந்தவருமாறு படைத்துள்ள திறம் வெளிப்படுகிறது.

    வீர உணர்வு வெளிப்பாடு

    வீரயுக வாழ்வில் போர் தவிர்க்க இயலாத ஒன்று என்று உணர்ந்த ஔவையார், உலகியல்புகளை எடுத்துரைத்து அதியனைப் போர்செய்யுமாறு வற்புறுத்துகிறார்.

    “மறப்புலி உடலின் மான்கணம் உளவோ?

    …………………………………….

    பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?

    …………….……………….

    வழுஇல் வன்கை மழவர் பெரும !

    இருநில மண்கொண்டு சிலைக்கும்

    பொருநரும் உளரோ நீ களம் புகினே”         (புறம். 90)

    வலிமை வாய்ந்த புலியின் முன் மான் கூட்டமானது நிற்கவும் கூடுமோ? மணலிலும் கல்லிலும் பெருமித நடை பயிலும் எருதிற்கு இழுக்கவியலாத துறைதான் உண்டோ? கணைய மரம் போலும் முழந்தாள்வரை நீண்ட கைகளை உடைய வீரர்க்குத் தலைவனே ! நீ களம் புகுந்தால் உனது நாட்டைக் கைக்கொள்ளும் வீரர் தாம் உளரோ! இவற்றில் வீரனுக்கு அறிவுரை கூறிப் போருக்குச் செல்லுமாறு குறிப்பிடும் திறத்தினைக் காணலாம். போரில் ஈடுபடுவது இயல்பான நிகழ்வு. எனினும் உலக நிகழ்வுகளை எடுத்துக்காட்டிப் போருக்குத் தயார்செய்வது புலவரின் திறத்தால் எழுந்த ஒன்றாதலை அறியலாம்.

    நட்பின் இழப்பு வெளிப்பாடு

    பல்காலும் நெருங்கிய நட்பினனாக விளங்கிய அதியன் இறந்ததுகண்டு பெருந்துயருற்ற ஓளவையார் தன் இழப்பினைப் பலவாறு பாடி வெளிப்படுத்துகிறார். ஈமத்தீயில், அதியமான் நெடுமான் அஞ்சியின் உயிரற்ற உடல் உள்ளது. அந்த ஈமத்தீ, அவன் உடலைச் சிதைக்காமல் குறையினும் குறைக! இல்லையேல், குறையாமல் விண்ணளவு முட்டச் சென்று நிறையினும் நிறைக! ஆயினும், திங்களைப்போன்ற வெண்கொற்றக்குடை கொண்ட ஞாயிறு போன்ற அஞ்சியின் புகழோ எந்நாளும் அழியாது என்பதனை,

    “எறிபுனக் குறவன் குறையல் அன்ன

    கரிபுற விறகின் ஈமஒன் அழல்

    குறுகினும் குறுகுக குறுகாது சென்று

    விசும்புற நீளினும் நீள்க பசுங்கதிர்த்

    திங்கள் அன்ன வெண்குடை

    ஞாயிறு அன்னோன் புகழ்மா யலவே.”              (பா. 231)

    என்று பாடிச் சிறப்பிக்கின்றார். இதில் திங்களையும் ஞாயிற்றையும் இணைமுரணாகப் பயன்படுத்திச் செய்யுளைக் கட்டமைக்கும் பாங்கினைக் காணலாம். அதியன் இல்லாத உலகில் வாழ்வது பயனற்றது என்று கருதும் ஓளவையார்.

    “இல்லா கியரோ காலைமாலை

    அல்லா கியர்யான் வாழும் நாளே”            (பா. 232)

    “நோகோ யானே தேய்கமா காலை

    …………………………

    உலகுபுகத் திறந்த வாயிற்

    பலரோடு உண்டன் மரீஇ யோனே.”     (பா. 233)

    எனக் குறிப்பிடும் சொற்கள் அவரது அவலஉணர்வுநிலையின் வெளிப்பாடாக உள்ளன.  பிரிவுத்துயரும் அதனால் எழும் அவல உணர்வும் உலகில்; இயல்பானவை. இதற்கு ஆட்படாதவர் எவருமிலர். இந்நிகழ்வினைப் பாடலாக்கிப் படிப்பவர் உள்ளத்திலும் அவ்வுணர்வு தோன்றுமாறு வடித்துள்ள பாடற்றிறம் எண்ணத்தக்கது.

    நட்பின் உணர்வு வெளிப்பாடு

    ஓளவையார் அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்றது நட்பின் பொருட்டே ஆகும். நட்பின் சிறப்பினைத் திருவள்ளுவர் ‘செயற்கரிய யாவுள நட்பு” என்று சிறப்பித்துக் கூறுவார். இவ்விடத்தில் ஓளவையார் அரசியல் அனுபவம் மிக்கவராகக் காட்சி தருவது கருதத் தக்கது.

    அதியமானின்பொருட்டு ஔவையார், தொண்டைமான்பால் தூது செல்கிறார். நிகழ இருந்த போரினைத் தவிர்ப்பது அவரது நோக்கம். தொண்டைமான் தன்னுடைய படைக்கலப் பெருமையை விளக்க, ஔவையாரைத் தனது படைக்கலக்கொட்டிலுக்கு அழைத்துச் செல்கிறான். நிலைமையை உணர்ந்துகொண்ட புலவர் வெகுண்டு,

    “இவ்வே பீலி அணிந்து மாலைசூட்டிக்

    கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்து

    கடியுடை வியன்நக ரவ்வே அவ்வே

    பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து

    கொல்துறைக் குற்றில மாதோ”   (புறம். 95)

    என்று கூறுவது நட்பின் உரிமை கருதியே ஆகும். இதில் தொண்டைமானின் படைக்கலப் பெருமையும், அதியமானின் படைக்கல நிலையும் காட்டப்படுகிறது. தமிழர்க்கே உரிய மானஉணர்ச்சி வெளிப்பாடும், மறப்பண்பும் புலவரை நடப்பியல் நிகழ்வாக்கிப் பாட வைக்கின்றது. இப்பாடலின் தன்மை வீரயுக வாழ்க்கையை வெளிப்படுத்தி நிற்கக் காணலாம்.

    நன்றியுணர்வு வெளிப்பாடு

    பெரியமலைச்சரிவிலே அரியமுயற்சியால் கிடைத்தற்கரிய சிறியஇலைகளைக் கொண்ட இனிய நெல்லிக்கனியை அரியது என்று கருதாமல், அதன் பயன் யாது எனவும் கூறாமல் எனக்கு அளித்த பெருமானே! நீ பால்போன்ற வெள்ளிய பிறை விளங்குகின்ற தலையும் நீலமணி அமைந்த கழுத்தும் கொண்ட இறைவனைப் போல நீயும் நிலைபெற்று வாழ்க! என்று அதியமானை வாழ்த்துகிறார். இது புலவரின் நன்றியுணர்வின் வெளிப்பாடாக அமைகிறது.

    “…………………………தொல்நிலைப்

    பெருமலை விடகரத்து அருமிசைக் கொண்ட

    சிறியிலை நெல்லித் தீம்கனி குறியாது

    சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே.”            (பா. 91)

    உலகானுபவமும் படைப்பாக்கமும்

    ஒரு கலைப்படைப்பில் புறவய உண்மை மட்டுமே முக்கியமல்ல. அது கலைஞர்மீது ஏற்படுத்துகிற தாக்கமும் முக்கியமானதாகும். குறிப்பிட்ட கலைஞனைப் பொறுத்த அளவில் இந்தப் பண்பு அழகியல் உண்மையாக எதிர்வினைபெற வேண்டும். அப்போதுதான் அது கலைப்படைப்பாக உருப்பெறும். புறவய உண்மையானது அழகியல் உண்மையாக உருப்பெறுகிறபோது அது, அதனைச் சார்ந்ததாக மட்டுமல்லாமல் அவனைச் சார்ந்ததாக அமைகிறது. இத்தகு சிறப்புக் கூறுகளைச் சங்க இலக்கியத்தில் இனம்காண முடியும் என்பதற்கு ஓளவையாரின் பாடல்கள் சான்றாக அமைந்துள்ளன.

    புறப்பாடல்களில் சங்கச் சமூகத்தில் வாழ்ந்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வீரர்களே பொருளாகியுள்ளனர். ஏனைய செவ்வியல் இலக்கியங்களைப் போன்ற புராண, மீவியல்பு மாந்தர்கள் இடம்பெறவது இல்லை. அவர்கள் குறிக்கோள் கொண்ட மாந்தர்களாகவும், கூற்றை முன்னெடுத்துச் சொல்லும் மாந்தர்களாகவும் படைக்கப்பட்டுள்ளனர்.

    பண்டைத்தமிழர்களின் வீரநிலையை உலகியல் நிகழ்வுகளே காட்டுகின்றன. “இதில் அரசர்களின் புகழ்பாடுவதும், வீரத்தைப் புலவர்கள் கூறுவதும் உண்மை நிலையைக் காட்டுமா? என்ற ஐயம் சிலருக்குத் தோன்றலாம். அரசர்களாயும். புலவர்களாயும் விளங்கிய பூதப்பாண்டியன், நெடுஞ்செழியன், சோழன் நலங்கிள்ளி ஆகியோர் வெஞ்சினங் கொண்டு பாடிய வஞ்சினப் பாடல்கள் வீரநிலைக்காலப் பண்பாட்டினை விளக்கும் வாயில்களாக உள்ளன. ஏனெனில் மனிதன் சினங்கொள்ளும் போது விலங்கு நிலையை அடைகின்றான். சாதாரண மனிதர்கள் சினங்கொண்டால் எதையும் செய்யத் துணிவார்கள். செய்யத் தகாதன வெகுளியால் செய்தபின் வருந்துவர். ஆனால், இதில் சினங்கொண்டு வஞ்சினம் கூறும்போதும் பழந்தமிழர் உண்மையான மனநிலையை நாம் அறிகிறோம்” (கதிர். மகாதேவன். 127:1980)

    சங்கக் கவிதை மரபு தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று. அவற்றில் உலகியல் நிகழ்வுகள் புலவர்தம் படைப்பாற்றலால் செய்யுள் மரபினைப் பெற்றுச் சிறந்துள்ளன. நவீன படைப்பாக்கக் கொள்கைகளில் ஒன்றாகத் திகழும் யதார்த்தவியல், சங்கப் பாடல்களில் உலகியல்புகளாக வெளிப்பட்டுள்ளன.

    புறப்பாடல்களில் உலகியலுக்கும், அகப்பாடல்களில் புனைவியலுக்கும் புலவர்கள் முதன்மைதந்து படைத்துள்ளனர். ஓளவையார் படைத்துள்ள புறப்பாடல்கள் தமிழக வரலாற்று ஆவணங்கள் ஆகும். உலகியல் நிகழ்வுகளைத் தம் மன உணர்வுக்கு ஏற்றவாறு பொருளாக்கி, நட்பின் சிறப்பினைத் தமது பாடல்களின்வழி காட்டியுள்ள திறம் எண்ணி வியக்கத்தக்கது.

    ஓளவையார் சங்க இலக்கியத்தில் ஆளுமைத்திறன் மிகுந்த படைப்பாளராகத் திகழ்வதற்கு அவர் எடுத்துக்கொண்ட உலகியல்புகளே களமாக அமைந்துள்ளன. அதியமான் நெடுமான்அஞ்சியுடன் பெருநட்புப் பூண்டிருந்ததோடு, அவன் காலத்து வீரயுகவாழ்வியல் கூறுகளை வரலாற்றுப் பதிவுகளாக எடுத்துரைத்துள்ள திறம் தமிழர் வீரப்பண்பாட்டிற்குச் சான்றாக அமைந்திருக்கிறது.

    கருவிநூல்கள் :

    1. இளம்பூரணர், (உ.ஆ.), தொல்காப்பியம், பொருளதிகாரம், கழக வெளியீடு, சென்னை. 1988
    2. உ.வே.சாமிநாதையர், (ப.ஆ.), புறநானூறு மூலமும் பழைய உரையும், கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1967
    3. கதிர். மகாதேவன், பழந்தமிழர் வீரப்பண்பாடு-ஒப்பிலக்கியக் கணிப்பு, ஏரக வெளியீடு, மதுரை, 1980

    ———-

    Share
  • கு.ப.ரா. சிறுகதைகளில் பெண்மனப் பதிவுகள்

    முனைவர் ப.சு. மூவேந்தன்,

    உதவிப்பேராசிரியர்,

    தமிழியல்துறை,

    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

    அண்ணாமலைநகர் – 608 002.

    ————————————————————-

    முன்னுரை

    தமிழ்ச் சிறுகதைகளின் தொடக்கக் காலத்தில் சிறுகதைகள் எழுதிப் புகழ்பெற்றவர் கு.ப.ரா. ஆவார். அவரது சிறுகதைகள் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட இனமாகக் கருதப்பட்ட பெண்ணினத்தின் குரலாக ஒலிப்பதுடன் பெண்களின் மன உணர்வுகளை நுண்ணோக்கோடும் வெளிப்படையாகவும் அறிவிக்கின்றன. தமிழில் பெண்ணுர்வுகளைச் சிக்கல்களைச் சிறுகதைகளில் வெளிப்படுத்திய முதல் பதிவாளராக அவர் விளங்குகின்றார். அவரது ‘தனபாக்கியத்தின் தொழில்’, ‘குந்துமணி’ என்னும் இரு சிறுகதைகளில் வெளிப்படுத்தப்படும் பெண்மன உணர்வுப் பதிவுகள் குறித்து இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது.

    மனச் செயல்பாடுகள்

    மனிதனது ஆறாவது அறிவு மனம் ஆகும். மனிதனது செயல்பாடுகள் யாவற்றினுக்கும் மனமே அடிப்படை அலகாக அமைகின்றது. மனம் உள்ளவன் மனிதன். அவ்வகையில் நமது இலக்கியங்கள் மனம் என்பதனைக் குறித்துப் பரவலாகப் பேசியுள்ளன. மனத்தின் செயல்பாடுகளாலேயே மனிதச் செயல்பாடுகள் அமையும் என்பதனைக் கருதியே திருவள்ளுவர் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ என்று அறிவுறுத்தினார். ஆனால் நடைமுறைச் சிந்தாத்தந்தில் மனத்தின் செயல்பாடுகள் ஒத்த தன்மையினதாக அமைவதில்லை. தன்னைப் போன்றே மற்றவர்களுக்கும் மனம் என்பது உண்டு என்று அறியவாய்ப்பே கொடுக்கப்படாமல் ஆதிக்கத்தை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு ஆண்டுவரும் மாக்களின் செயல்பாடுகளைத் தனது சிறுகதைகளின் மூலம் காட்டியுள்ளார் கு.ப.ரா.

    மனஉணர்வு என்பது ஆண் பெண் யாவர்க்கும் ஒன்றுதான். என்றாலும் மனத்தின் வழியான செயல்பாடுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன என்னும் கருத்தினை ‘தனபாக்கியத்தின் தொழில்’ (1934), ‘குந்துமணி’ (1934) என்னும் சிறுகதைகளின்வழி புலப்படுத்தியுள்ளார் கு.ப.ரா.

    ‘தனபாக்கியத்தின் தொழில்’ (1934), ‘குந்துமணி’ (1934) என்னும் இரு சிறுகதைகளும் அன்றைய சமூகத்தில் தள்ளிவைக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பெண்ணினமான தேவதாசியர் நிலையைப் பேசுகின்றது. தேவதாசிச் சமூகத்தைச் சார்ந்த பெண்கள் ‘ஆடல் பாடல் வல்லாராகி;, இன்பமும் பொருளும் நல்கி, ஒருவர் மாட்டும் தங்காதார்’ என்ற கருத்து வலுப்பெற்றிருந்த காலகட்டத்தில் இக்கதைகள் படைக்கப்பட்டன என்பது கருத்தில் கொள்ளத் தக்கது. தாசியர் குலத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் சமூகத்தின் இழிநிலையிலிருந்து மேலே வருவதற்கு அனுமதிக்காத சமூகத்தை இக்கதைகளின்வழி காட்டுகின்றார் கு.ப.ரா.

    தனபாக்கியத்தின் காதல்

    ‘தனபாக்கியத்தின் காதல்’ என்னும் சிறுகதையில் இடம்பெறும் தனபாக்கியம் தாசியர் குலத்தில் பிறந்தவள்; என்றாலும் அவள் உள்ளத்தில் தன்னைக் காதலிப்பதாகச் சொல்பவனுடன் சேர்ந்து மணமுடித்துக் கொண்டு வாழ்ந்திட வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கின்றது. இதனால் தன் குலத்தின் இழிவும், ஊரார் தூற்றும் பழியும் நீங்கும் என்று நினைக்கின்றாள். அவள் ஒரு புலவனைக் காதலிக்கின்றாள். புலவனோ தாசியரைப் பழிவாங்க நினைக்கும் ஒரு வஞ்சகனால் அவள் வீட்டுக்குக் கொண்டுவந்து விடப்படுகின்றான். என்றாலும் பாதகமில்லை; புலவனாகிய சண்முகசுந்தரம் தனபாக்கியத்தை உயிருக்கு உயிராகக் காதலிக்கின்றான்: என்றாலும் தன் ஏழ்மையைக் கருத்தில் கொண்டு அவள் தன்னை விட்டுவிட்டுச் செல்லக்கூடும் என்ற அச்சவுணர்வு அவன் உள்ளத்தில் எப்பொழுதும் நிறைந்திருக்கின்றது. தனபாக்கியத்தின் உள்ளத்திலோ தான் ஒரு தாசிதானே என்று கருதி, புலவன் தன்னைவிட்டுச் செல்லக்கூடும் என்ற உணர்வு மேலெழுந்து நிற்கின்றது.

    “காதல் தழைப்பதற்கு உலகத்தில் இடையூறுகள் உண்டா? உண்டு. உதாரணமாக உன் தாய் என்னை இங்கு வரவேண்டாமென்று தடுத்துவிட்டால்? எதற்காக? நன்றாயிருக்கிறது அவள்தானே”     (ப. 22)

    என்னும் பகுதியில் புலவனின் வறுமைவயப்பட்ட வாழ்வியல் நிலை இக்காதலுக்குத் தடையாக நிற்கும் என்ற நிலைப்பாட்டினையும்,

    “அடி தனம் ! இனிமேல் அந்தப் பரதைப்பயல் இந்த வாசல் நுழையக்கூடாது தெரியுமா? என்று தனத்தின் தாய் கமலம் வெடுக்கென்று பேசினாள். தொழிலில் கண்ணும் கருத்தும் உடையவள் அவள் …..இன்றைக்கு அவன் வந்தால் வீட்டை விட்டுத் துரத்து”  (ப. 22)

    என்னும் பகுதியில் தனத்தின் தாய் எதிர்நோக்கியிருக்கும் வியாபார நிலையினையும் காட்டுகின்றார் கு.ப.ரா.

    “உன்னை ஏமாற்றும் நோக்கிலேயே புலவன் உன்னைக் காதலிப்பதாகக் கூறுகின்றான்” என்ற தனபாக்கியத்தின் தாயாரது குரலுக்கு, தனபாக்கியம் “காதல் என்பது வலிந்து வரக்கூடிய விசயமில்லை” என்று மறுத்துரைக்கின்றாள்.

    “நீ சுத்த அசடாயிருக்கியேம்மா. அவன் செய்யவாவது? என் மனசை ஆக்க அவனால் ஆகுமா?”              (ப. 23)

    என்று கேள்வி எழுப்புகிறாள். இதனால் பெண்ணின் மனதை யாரும் குழப்பவும் குறைத்தும் மதிப்பிட்டுவிட முடியாது என்பதனை இப்பகுதியில் எடுத்துரைக்கின்றார் கு.ப.ரா.

    மீண்டும் புலவன் வந்து தனபாக்கியத்தைச் சந்திக்கும் போது, தங்கள் காதல் நிறைவேறாது என்று அவநம்பிக்கைக் கொள்ளுகிறான். தான் ஒரு ஏழைப்புலவன் என்று தெ ரிந்துவிட்டால் அவள் தன்னை மறுத்துவிடுவாள் என்று கருதி அவளை விலக நினைக்கின்றான்;. அப்போது தனபாக்கியத்தின் உள்ளத்தில் எழும் மன உணர்வுகளையும், தாசியர்களைப் பற்றிய சமூக மதிப்பீட்டினையும் கு.ப.ரா. இவ்விருவரது உரையாடலின் மூலம் தெளிவாக்குகின்றார்.

    “நீங்கள் பணக்காரரா?

    இல்லை. நான் ஏழைப்புலவன். ஆ! என்னை வெறுக்கிறாயல்லவா?

    நீ பணத்தை விரும்புவது சகஜந்தானே….?

    என் ஜாதிக்குச் சகஜம் என்று சொல்லிக்காட்டுகிறீர்களா? என் ஜாதி ஸ்வபாவத்துடனா நான் உங்களை-என் குலத்து வழக்கப்படியா உங்களை – என்று அவள் விம்மி விம்மிச் சொல்வதற்குள் கண்ணீர் நெஞ்சை அடைத்து விட்டது”             (பக். 23-24)

    என்னும் பகுதியில் தெளிவாக உணர்த்துகின்றார்.

    தனபாக்கியம் தன் குலத்தொழிலாகிய தாசியர் குலத்தொழிலைச்; செய்யாமல் ஏழைப்புலவனைத் திருமணம் செய்து கொண்டு எவ்வாறு வாழமுடியும் என்று கேள்வி எழுப்புகின்றாள் அவளது தாய் கமலம். இனி நீங்கள் இருவரும் இங்கிருக்கக் கூடாது என்று ஆணையும் இடுகின்றாள்.

    “வெளியே கமலத்தின்குரல் கேட்டது.

    அடியே, அவனை வெளியே போகச் சொல்லு !

    மாட்டேனம்மா !

    ஆனால், இருவரும் வெளியே போங்கள் !”                                         (ப. 24)

    என்று கதையை நிறைவு செய்கின்றார். உண்மையாகக் காதலித்தவனை மணந்து கொள்வதற்குத் தனது தாய் உரிமை தராதபோது தன் வாழ்க்கையினை அவளே கையில் எடுத்துக்கொள்கிறாள். தன் காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறத் தயராகிவிட்டாள் என்று குறிப்பாக உணர்த்துகின்றார் கு.ப.ரா. இதில் பெண் மன உணர்வு வெளிப்பாட்டையும் சமூக எதிர்ப்புணர்வினையும், எதிர் வினையாற்றலையும் கதை நிகழ்ச்சிகளின் போக்கில் எடுத்துரைத்துள்ளார் கு.ப.ரா.

    தாசியர்குலப் பெண்கள் பணம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவார்கள் என்றும், தங்களிடம் வருகின்ற ஆண்களின் சொத்துக்களையெல்லாம் பறித்துக் கொள்வார்கள் என்ற கருத்தும் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் உண்மையான காதல் உணர்வால் உந்தப்பட்டு பொன்னையும் பொருளையும் இழப்பதற்குத் தயராகும் பெண்மன உணர்வினை இக்கதையின்வழி காட்டுகின்றார்.

    குந்துமணி

    காதலை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை ‘குந்துமணி’ ஆகும். இதில் பணக்கார இளைஞனான ராமு, தாசியர் குலத்தைச் சேர்ந்த ராஜலட்சுமியைக் காதலிப்பதாகப் பொய்சொல்லி அவளுடன் பழகுகின்றான். அவனது காதலை உண்மை என்று நம்பி அவனிடம் தன்னை ஒப்படைக்கின்றாள் ராஜலட்சுமி. நாட்கள் செல்லச் செல்ல அவளது உடல் மட்டுமே அவனுக்குத் தேவைப்படுகின்றது. அவளுக்கோ அவனால்  தனக்கு ஒரு வாழ்க்கை கிடைத்தால் தனது குலத்தொழிலை விட்டுவிட்டு தன்மானத்துடன் வாழலாமே என்ற உணர்வு எழுகின்றது. இந்தக் கதையிலும் அவளது தாய் பணக்கார ஆண்களின் மனஉணர்வினைத் தெளிவாக அறிந்துவைத்துள்ளாள்;. இதனால் இந்தக் காதல் நிலைக்காது என்ற கருத்தினைத் தன் வாய்மொழியாகப் பதிவுசெய்கிறாள்.

    “உங்களை வரவேற்பதில் என் தாயாருக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை.

    அவளிஷ்டம் எனக்கெதற்கு?

    நன்றாயிருக்கிறது! ….இல்லவேயில்லை. இப்படித்தான் புருஷர்கள் பேதைப் பெண்களின் மேல் பழியைச் சுமத்துவது”       (ப. 30)

    என்னும் பகுதியில் தன் தாயின் மறுப்பினையும், இளைஞனின் பொய்யைச் சொல்லி ஏமாற்ற நினைக்கும் மனப்பாங்கினையும் காட்டுகின்றான்.

    தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ராமுவை வலியுறுத்துகின்றாள் ராஜலட்சுமி. அந்நிலையில் அவர்களிடையே நடைபெறும் உரையாடல் பகுதியால் பெண்மன உணர்வுகளைப் பதிவிடுகின்றார்.

    “எங்கள் ஜாதித் தொழிலை நான் பழகவேண்டுமென்று படுத்துகிறாள் – அதாவது நான் பொட்டுக் கட்டிக் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்துகிறாள்.

    அதற்கு நான் வந்துகொண்டிருப்பது தடையொன்றும் இல்லையே?

    இல்லை, இல்லை நான் தான் மாட்டேன் என்று சொல்லிவிட்டேனே…

    ஏன்?

    ஏனா? உங்களுக்கு இன்னும் விஷயம் புரியவில்லையா? சொல்லுகிறேன்- என் தாயார் என்னை விலைமாதா இருக்க வேண்டுமென்கிறாள்.

    நீ சொல்வது எனக்கு அர்த்தமே ஆகவில்லை. இப்பொழுதும் அப்படித்தான்-

    அதாவது நான்…

    ராஜத்தின் முகம் வெளுத்தது. கண்கள் பயத்தால் பெரிதாகிப் பரந்தன.

    என்ன, என்ன? என்ன சொன்னீர்கள்?

    ராஜம் ஏனிப்படிப் பதறுகிறாய்? நான் என்ன சொல்லிவிட்டேன்?

    நான் உங்களுடைய வைப்பு என்கிறீர்களா?

    அதிலென்ன உனக்குக் குறை? எந்தப் பெயரானால் என்ன?

    அவன் சொன்னது ஒன்றும் அவள் காதில் விழவில்லை. கண்களில் நீர்வடிய, குழந்தை போன்ற விக்கல் குரலுடன்,

    நான்-ஆனால் நான் உங்கள் தாஸி தானா?

    சுத்த அசடா யிருக்கியே? பின் என்னவென்று எண்ணிக் கொண்டிருந்தாய்?

    நீங்கள்… ஆனால், என்னை மணக்கப் போவதில்லையா?

    ……………………

    நீங்கள் கொடுத்த உறுதிகளெல்லாம் பொய்யா?               (பக். 31-32)

    இப்பகுதியில் சமூகத்தின் கொடூரப்பிடியிலிருந்து வெளியேறத் துடிக்கும் அவளது உள்ள உணர்வினையும் அதை அலட்சியமாகவும், அது சமூக நடைமுறைதான் என்று சொல்லித் தப்பிக்க நினைக்கும் ஆணாதிக்க எதேச்சதிகார நிலைப்பாட்டினையும் பதிவிடுகின்றார். பெண்கள் சமூகத்தில் எத்தகைய நிலையிலிருந்தாலும் அவர்களைப் பொருளாகக் கருதும் நிலைப்பாட்டினை இக்கதையின்வழி காட்டுகின்றார் கு.ப.ரா.

    இவர்களது உரையாடல் இவ்வாறே நீண்டு கொண்டு செல்கின்றது. ஒரு கட்டத்தில் ராமு, ராஜலட்சுமியைப் பார்த்து,

    “ஓஹோ! ஏது குலப்பெண்களுக்கு மேற்போய்விட்டதே உனது எண்ணம்?”  (ப.32)

    என்று சொல்லி அவளை அடக்கப் பார்க்கின்றான். அப்பொது பொங்கிவரும் தன் மன உணர்வினை ராஜலட்சுமி,

    “நற்குணத்தில் குலப்பெண்களுக்குத்தான் உரிமையோ? ஐயோ! என் கனவுகளெல்லாம் கானலாகவா போகவேண்டும்? என்னுயிர் ஏக்கங்கள் இத்துடன் இப்படியா முடிவடைய வேண்டும்?”                 (ப. 32)

    என்று சொல்லி புலம்புகின்றாள். தான் பிறந்த குலத்தின் இழிநிலையைக் கருதி வருந்தவும் செய்கின்றாள்.

    இறுதியில் ஆண்சமூகத்தை எதிர்த்து வாழ்வது தன்னால் இயலாத செயல் என்று தன் விதியை நொந்தபடி தாசியாகவே தன் வாழ்க்கையைக் கழிப்பது என்று முடிவெடுப்பதாகக் கதையை நிறைவுசெய்துள்ளார் கு.ப.ரா.

    இவ்விரு கதைகளிலும் பெண்களின் மன உணர்வுகளையும், ஏக்கங்களையும், உணர்வுக் குமுறல்களையும் எடுத்துரைத்துள்ள அதே வேளையில் சமூகத்தில் எதிர்த்து வாழத்துடிக்கும் நிலையினை ஒருகதையிலும், சமூகத்தை எதிர்த்து நின்று வாழத் துடித்தாலும் பெண்களை ஆண்சமூகம் அடிமைகளாகவே கருதும் நிலைப்பாடு உள்ளதனை அடுத்த கதையின் மூலமும் எடுத்துரைத்துள்ளார்.

    இக்கதைகள் எழுதப்பட்டு பல ஆண்டுகள் கழிந்துள்ள பின்னரும், இன்றைக்கும் பெண்களின் மனஉணர்வுகள் மதிக்கப்படாத நிலையில் இருக்கின்றது. தமிழின் தொடக்கக் காலச் சிறுகதைகளில் பெண்களின் மன உணர்வுகளை மிகத் துல்லியமாக வெளிப்படுத்திய படைப்பாளர்களின் கு.ப.ரா. தனித்து விளங்கும் திறன் இக்கட்டுரையின்வழி தெளிவாகிறது.

    ———————-

    கருவி நூல் :

    1. அ, சதீஷ், (ப.ஆ.) கு.ப.ரா. கதைகள், அடையாளம் வெளியீடு, சென்னை. பதி. 2008.

    மதிப்பீடு

    மனித உறவுகளின் நுட்பமான தருணங்களைத் தமது படைப்பின் வெளிப்பாடாகக் கொண்டிருந்தவர் கு.பா.ரா. ஆண், பெண் உறவுகளைப் பற்றி அதிகம் எழுதியவர். இவரின் தனபாக்கியத்தின் தொழில், குந்துமணி என்னும் இரு சிறுகதைகளில் பெண்களின் மன உணர்வுகள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை மேற்கண்ட கட்டுரை ஆராய்ந்துள்ளது. கு.பா.ரா.வின் சமகால எழுத்தாளர்களின்  பெண் பற்றிய மனச்சித்தரிப்பிலிருந்து கு.பா.ரா.வின் பெண் பதிவுகள் எவ்வாறு தனித்துவம் பெறுகிறது என்று நோக்கியிருந்தால் இன்னும் அவரைப் புரிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கும்.

    கல்பனாசேக்கிழார்.


     

    Share