Tag: முனைவர் ம. பிரபாகரன்

  • [நூல் அறிமுகம்] (Peer Reviewed) ஆனந்த் நீலகண்டனின் ”Vanara: The Legend of Baali, Sugreeva and Tara”: மாற்றி யோசிக்கப்படும் பழைய கதையின் யதார்த்தம்

    முனைவர் ம.பிரபாகரன்,
    இளநிலை ஆய்வாளர்,
    பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (EFEO),
    புதுச்சேரி.

    ஆனந்த் நீலகண்டனின் ” Vanara: The Legend of Baali, Sugreeva and Tara ”: மாற்றி யோசிக்கப்படும் பழைய  கதையின் யதார்த்தம்

    சென்ற ஆண்டு(2018)  வெளியான ஆனந்த் நீலகண்டனின்  ” Vanara: The Legend of Baali, Sugreeva and Tara ” ( 304 pages, Published November 14th 2018 by Penguin Random House) என்ற ஆங்கில நாவலைச் சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. அதனை ஆய்வு நோக்கில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற  என் அவாவே இக்கட்டுரை. கட்டுரையைத் தொடங்குவதற்கு முன் இந்நாவலை எழுதிய  ஆனந்த் நீலகண்டன் பற்றிய  குறிப்பைத்  தருவது பயனுடையதாயிருக்கும் என்று கருதுகிறேன்.

    பின்வரும் ஆசிரியர் குறிப்பு விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது.

    ஆனந்த் நீலகண்டன்:

    Anand Neelakantan (born 5 December 1973) is an Indian author,columnist, screenwriter, television personality and motivational speaker. He has authored four fiction books.His debut work Asura, The Tale of the Vanquished is based on the Indian epics of Ramayana. His next book series was Ajaya-Roll of the Dice , Ajaya – Rise of Kali based ,the two books on the epic Mahabharata told from Kaurava perspective. Anand’s books voice the suppressed party or the defeated party.

    Anand Neelakantan also had signed with The producers of Baahubali, the blockbuster film for a 3 book Series based on their film Baahubali and the series will be a prequel to the film. The first book of this trilogy , Rise of Sivagami was released in March 2017. Netflix has announced a webseries on the book. His books have been translated to different languages such as Hindi, Malayalam, Tamil, Telugu, Kannada, Marathi, Bengali ,Gujarati, Assamese and Indonesian Bahasa.

    Anand’s Asura is one of the 100 books to be read in a life time as per Amazon. The book has sold more than half a million copies across the years. Three of Anand Neelakantan’s books have been shortlisted for crossword award during the respective years and he is also listed as one among the 100 top celebrities in India in 2015, 2017 by ForbesIndia. All his books have got critical accreditions from various people across the world

    Anand also writes a column for New Indian Express on current affairs and his fortnightly column is called Acute Angle (நன்றி- விக்கிப்பீடியா)

    வானரா என்ற இந்த நாவல், பழைய இராமாயணத்தில் சொல்லப்பட்ட வாலி, சுக்ரீவன் கதையைத் தலைகீழாக யோசித்திருக்கிறது அல்லது மாற்றி யோசித்திருக்கிறது. நமக்கெல்லாம் இராமாயணத்தில்  வாலி என்று சொன்னவுடன், அவன், தன் தம்பி சுக்கீரிவனின்  மனைவி ரூமா மீது  கொண்ட  மோகத்திற்காக,  அவனை அடித்து விரட்டி விட்டு, தம்பி மனைவியை அபகரித்துக்கொண்டான்; அவன் எவ்வளவுதான் வீரனாக இருந்தாலும்  தம்பி மனைவி மீது ஆசை கொண்டதால் அவன்  ஒரு துஷ்டன் என்ற கருத்தே ஞாபத்திற்கு வரும். ஏனென்றால் வால்மீகி, கம்பன் ஆகியோர் எழுதிய இராமாயணத்தில் வாலி பற்றி அப்படி ஒரு பார்வையே காணப்படுவதாலும் அது நமக்கு சிறு வயதிலிருந்தே திரும்பத் திரும்ப கதைகளின் வாயிலாகவும் பாடங்களின் வாயிலாகவும் தொலைக்காட்சித் தொடர்களின் வாயிலாகவும்  சொல்லப்பட்டதாலும் வாலியைப் பற்றி அப்படி ஒரு கருத்து நம்முள் நிலைத்துவிட்டது.

    தமிழில், பழைய இராமாயண வாலியை அடியொற்றி ”வாலி” என்றொரு சினிமா எடுக்கப்பட்டதும், அது பெரிய வெற்றியைப் பெற்றதும் இங்குச் சுட்டிக் காட்டத்தக்கது. இராமாயணம் நடந்த கதையல்ல என்று கூறுவாரும் அது நடந்த கதையே என்று கூறுவாரும் உள்ளனர். அது நடந்த கதையோ, நடக்காத கதையோ அதுவல்ல நம் பிரச்சினை. எந்தக்  கதையும் திடீரென்று தான்தோன்றியாக உருவாகிவிட முடியாது. எல்லாக் கதைகளுக்கும் சமூக அடிப்படையும் சமூக உளவியலும் உண்டு என்பதை மறுக்க முடியாது.

    ஒரு கதை ஏன் படைக்கப்படுகிறது? அதன் நோக்கம் என்ன? என்று பார்ப்பதும் ஒரு கதை எந்தச் சூழலில் இருப்பவர்களால் எழுதப்படுகிறது? என்று கவனிப்பதும் மிகவும் அவசியமானதாகும். நோக்கத்திற்காகவே கதை எழுதப்படுமா? அது எப்படி? படைப்பாளி தான் கண்டதை எழுதுகிறான். அது எப்படி ஒரு குறிப்பிட்ட நோக்கிற்காக எழுதப்பட்டது என்று கூற முடியும்? என்று கேட்கலாம். நோக்கத்திற்காக எழுதப்பட்ட கதைகளும் உண்டு. நோக்கம் சூழலில் மறைந்து கிடக்கும் கதைகளும் உண்டு. சூழல் சுயேச்சையாக இயங்கும் தன்மை உடையது என்று மார்க்ஸ் கூறுவதை இவ்வண் கருதுக.

    இராமனைத்  தன் கதையில் கடவுளாக்க ஆசைப்பட்டவர் வால்மீகி என்பர். இராமனை மனிதனாகக் காண விரும்பியவர் கம்பன் என்பர். இப்படி படைப்பளர்களின் விருப்பம் கதையில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.  எங்ஙனமாயினும்  கதைகளுக்கு  நோக்கம் இருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது. நிற்க.

    வானரா நாவல், பழைய இதிகாச கதையைக் கருவாகக் கொண்டது ஆகையால், ஏன் இதிகாச, புராணக் கதைகளை ஏன் திரும்பித் திரும்பி எழுத வேண்டும் என்ற விமர்சனத்தையும் இவ்விடத்தில் நினைவு கூர வேண்டியிருக்கிறது. வால்மீகி இராமாயணத்தை எழுதி முடித்த பிறகு ஏன் கம்பன் அதை  மீண்டும் தமிழில்  எழுதினார்? ஏன் பல்வேறு மொழிகளில் இராமாயணம் திரும்பத் திரும்ப எழுதப்பட்டது? வியாசர் எழுதியதற்குப் பிறகு மகாபாரதமும் மீண்டும்  பலமுறை பல்வேறு மொழிகளிலும்  எழுதப்பட்டுவிட்டனவே ஏன்  தற்போது மகாபாரதத்தை ஜெயமோகன் திரும்ப எழுதுகிறார்? என்ற கேள்வி இங்கு நாம் கேட்க வேண்டியிருக்கிறது.

    இன்று புராணக் கதைகள், இதிகாசக் கதைகள் போன்றவை, தொலைகாட்சித் தொடர்களாக ஏன் மீண்டும் மீண்டும் எடுக்கப்படுகின்றன? அதற்கான சமூகத்  தத்துவப் பின்புலம் என்ன? என்று நாம் கேட்க வேண்டியுள்ளது. ஏனென்றால்  சமூகத்தின் உளவியலைப் புரிந்து கொண்டால்தான் கடந்த கால கதைகளுக்கு நிகழ்கால அர்த்தம் உண்டு என்பதையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். அப்போது பழைய கதைகள் மீண்டும் மீண்டும் எழுதுவதற்கான தேவையையும் அதற்குப் பின்னால் இருக்கும் நோக்கத்தையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

    பழைய கதைகளைத் திருப்பி எழுதும் போது பெரும்பாலும் இரண்டு வித போக்குகள் பின்பற்றப்படுகின்றன. முதலாவது, இருக்கும் கதையை அப்படியே திருப்பிச் சொல்வது, இரண்டாவது பழைய கதையை நிகழ்கால அரசியல், சமூகப் பண்பாட்டினை விளக்கப் பயன்படுத்துவது. இவற்றுள் ஆனந்த் நீலகண்டனின் ‘ வானரா ‘ என்ற இந்த நாவல் இரண்டாவது வகையைச் சேர்ந்தது எனலாம்.

    இந்தியாவின் நிகழ்கால அரசியல் மற்றும் சமூகப் பண்பாட்டினை விமர்சன பூர்வமாக அவர்  வாலியின் கதையின் மூலம் விளக்கும் திறம் வரவேற்கப்பட வேண்டியது. இந்தியாவில் மக்கள் உளவியல் உருவாக்கத்தில் தொன்மக் கதைகள் வகிக்கும் பெரும் பங்கை யாரும் மறுத்துவிட முடியாது. அதே போல இந்திய வரலாற்று உருவாக்கத்திலும் தொன்மக் கதைகள் வகிக்கும் பங்கு கணிசமானது. இதைச் சரியாகப் புரிந்துகொண்ட ஆனந்த் நீலகண்டன், தற்கால அரசியல், சமூகப் பண்பாட்டை  விமர்சனப்பூர்வமாக அணுகுவதற்கு இதிகாச கதையாகிய வாலியின் கதையை அல்லது  கிஷ்கிந்தை படலத்தைப் பயன்படுத்துகிறார்.

    இந்த முறைமையைத்தான் அவர் இவருடைய முந்தைய நாவல்களான அஜயா (இரண்டு புத்தகங்கள்), அசுரா ஆகிய நாவல்களுக்கும் பயன்படுத்தியிருந்தார். வரலாறு சொல்லப்பட்ட கதைகளில் மட்டுமே இல்லை; சொல்லப்படாத அவற்றின் பக்கங்களிலும் இருக்கும்; அவ்வரலாறு, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்குரிய உண்மையான வரலாறாகவும் இருக்கும் என்பதையே ஆனந்த் நீலகண்டனின் வானரா என்னும் இந்நாவல் மட்டுமல்ல, இவரின் முந்தைய நாவல்களும் கூறுகின்றன.

    நிகழ்ந்து நடந்து முடித்துவிட்ட நிகழ்ச்சிகள், கதைகள் போலவே சொல்லப்படுகின்றன. நேற்றைக்கு நடந்த ஒரு விபத்தை நேரிலே பார்த்தவர் இன்னொருவரிடம் அதைச் சொல்லும் போது அதைக் கதை போலவே சொல்கிறார். நாம் இங்கு என்ன சொல்ல வருகிறோம் என்றால் இறந்தகால நிகழ்ச்சிகள் நிகழ்காலத்தில் சொல்லப்படுகிற போது, அவை கதைகளாகவே மாறிவிடுகின்றன. அதைச் சொல்பவர்களின் நோக்கங்களும் அதில் இடம் பெற்றிருக்கும்.

    ஒரு நிகழ்ச்சி  இரண்டு பேரால் சொல்லப்படும் போது அல்லது பலரால் சொல்லப்படும் போது வேறு வேறு வகையில் சொல்லப்பட வாய்ப்புண்டு. விருமாண்டி படத்தில் ஒரே கதை  கொத்தாளத்  தேவரால் (பசுபதி) சொல்லப்படும் போது  விருமாண்டிக்கு (கமல்ஹாசன்) எதிரானதாக அமைந்து   விருமாண்டியை வில்லனாக காட்டும். அதே கதை விருமாண்டியால் சொல்லப்படும் போது அது கொத்தாளத் தேவரை வில்லனாக காட்டும். இங்குப் பார்வையாளர் என்ன நினைக்கிறார். கொத்தாளத்தேவர்  சொல்வது சரியா? விருமாண்டி சொல்வது சரியா? படத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகள் சூழல்களின் பின்னணியில்  விருமாண்டியை நல்லவனாகவும், கொத்தாளத் தேவரை வில்லனாகவும் புரிந்துகொள்ள பார்வையாளரைத் தூண்டும். இதில் முடிவு எடுக்க வேண்டியவர் பார்வையாளரே. இது போன்ற ஒரு பார்வைதான் இந்த வானரா நாவல் என்று கூறலாம்.

    வால்மீகியும், கம்பனும் பார்த்த பார்வையிலிருந்து வேறுபட்டு ‘வாலி’யை இவர் பார்க்கிறார். பெண்ணால் வீழ்ந்தவர்கள் என்று கூறப்படும் புராண நாயகர்களுள் வாலியையும் ஒருவராக வைத்துச் சொல்வது வழக்கம். ஆனால் இந்நாவலைப் படித்தால் வாலி, பெண்ணால் வீழவில்லை. சுக்ரீவனின் துரோகத்தால் விழுந்தார் என்பது  ஒருவரின் சிந்தனையில் பசுமரத்தாணி போல் பதியும். ஏனென்றால் இந்நாவலில் சுக்ரீவனின் மனைவி மீது வாலி இச்சை கொள்ளவில்லை. மாறாக  வாலியின் மனைவி  ‘ தாரா ‘ மீதுதான் சுக்ரீவன் இச்சை கொண்டு வாலியின்  வீழ்ச்சிக்குக் காரணமாகிறார். சுருக்கமாக இந்நாவலின் கதையைச் சொல்ல முயல்வோம்:

    சுக்ரீவன், தாராவை ஒருதலையாகக் காதலிக்கிறார். ஆனால் தாரா, வாலியைத் தீவிரமாகக் காதலிக்கிறார்;  தாராவின் அன்பால் நெகிழ்ந்த வாலி, அவளை மணமுடிக்கிறார். அதன் பின்னும் சுக்ரீவன், தாரா மீது கொண்ட இச்சையை விடவில்லை. அண்ணன் வாலி, தம்பியை மிகவும் நம்புகிறார். ஆனால் தம்பி சுக்ரீவன், அண்ணன் மனைவி என்று தெரிந்த பின்னரும் தாராவை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று எண்ணுகிறார். ஒரு கட்டத்தில் தாராவை அடைவதற்கு வாலிக்குக் கள்ளில் நஞ்சு கலக்கும் அளவுக்குக் கூட போய்விடுகிறார் சுக்ரீவன். இது தாராவுக்கு தெரிகிறது. இருந்தும் வாலியிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் வாலி, தம்பியை மிகவும் நம்புகிறார்.

    எனினும்  கடைசியில்  ஒருவழியாக வாலி, சுக்ரீவனின் இச்சையை அறிந்து கொள்கிறார். அவரை அடித்து உதைத்து நாட்டை விட்டுத் துரத்துகிறார். சுக்ரீவன் வாலியுடன் சண்டைக்கு வரும் நேரத்தில் எல்லாம் வாலி அவரை நன்றாக அடித்து உதைத்தாரே தவிர, ஒருபோதும் கொல்லத் துணியவில்லை. காரணம்,  தம்பி சுக்ரீவன்  மீது அவருக்கு அவ்வளவு அன்பு. இதை ஒருமுறை வாலியே தாராவிடம் கூறுகிறார். தன் தம்பியை அடித்து விரட்டிய பிறகு தம்பி மனைவி ‘ரூமா’, சுக்கிரீவன் போய்விட்டதால் தனக்கு வாலியே கணவனாக வேண்டும் என்கிறாள். அவரை அடைய தந்திரங்கள் செய்கிறார். அதற்கு வாலி, தன் தம்பி மனைவி ஒரு போதும் தனக்கு மனைவியாக ஆக முடியாது. தம்பி மனைவி மரியாதைக்குரிய ஸ்தானம் வகிப்பவர் என்று ரூமாவை முற்றிலும் விலக்கிவிடுகிறார்.

    இப்படி வாலியின் எண்ணப் போக்கு இருக்க, சுக்ரீவன், அனுமனிடம்  வாலி தன் மனைவியை அபகரித்துவிட்டார் என்று கூறி நம்ப வைக்கிறார். அனுமன் சூழ்நிலைகளின் பாதிப்பால் உண்மையில் வாலி, சுக்ரீவனின் மனைவியை அபகரித்து விட்டதாகவே நினைத்து விடுகிறார். உண்மை தெரியாத அனுமரும் சுக்ரீவனை நல்லவர் என்று நம்பி இராமன், இலக்குமணர்களிடம் வாலி, சுக்ரீவனின் மனைவியை அபகரித்துவிட்டதாகக் கூறி, அவர்கள் இருவரும் சுக்ரீவனின் மனைவி ‘ரூமா’ வை மீட்டுக் கொடுத்தால், சீதையை இராவணனிடம் இருந்து மீட்க அவர் உதவுவார் என்று கூறுகிறார். உண்மை தெரியாத இராமரும் இலட்சுமணரும்,  சுக்ரீவனின் பொய்யை நம்பிவிடுகின்றனர்.

    இறுதியில் இராமரின்  துணையுடன் சுக்ரீவன், தன் அண்ணன் வாலியைக் கொல்லத் துணிகிறார். கொன்றும் விடுகிறார். வாலியின் வதத்திற்குப் பிறகு தாராவைச் சுக்ரீவன் அடைய முயன்றாலும் உண்மை தெரிந்த தாரா, சுக்ரீவனை முற்றிலும் வெறுத்து ஒதுக்கிவிடுகிறார். இறுதியில் சுக்ரீவன், வானர சேனைகளுடன் இராமனுக்கு உதவியாக சென்று சீதையை மீட்க உதவுகிறார். வாலியின் மகன் அங்கதனும் அவர்களுடன் செல்கிறான். வெற்றிக்குப் பிறகு சுக்ரீவன், அங்கதன் மற்றும்  போரில் அழிந்தது போக மீதமுள்ள படையுடன் கிஷ்கிந்தை திரும்புகிறார்.

    அதற்குப் பிறகும் சுக்ரீவன், தாராவிடம் கொண்ட மோகத்தைக் கைவிடவில்லை. சுக்ரீவன் தன் காதலைத் தாராவிடம் சொல்கிறார். தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சுகிறார். தாரா, அவரை விலக்கிவிடுகிறார். தன் இறுதிக் காலத்தைக் கிஷ்கிந்தை அரச மாளிகைக்கு  வெளியே வாலியின் நினைவுடன் வாழ்கிறார் தாரா. கதையின் மிகச் சுருக்கத்தையே நாம் இங்குச் சொல்லியிருக்கிறோம்.  ஒருவர் கதையைப் படித்தால் இன்னும் பல ஆச்சரியமான, சந்தோசமான, துக்கமான தருணங்களை அங்கே உணர முடியும்.

    இனி இக்கதையின் மையத் தன்மையை இங்குச் சுட்டிக் காட்ட வேண்டும்:

    இந்நாவல், மாற்றி யோசிக்கும் தன்மைக்கு உதாரணம் என்று மேலே கூறினோம். இன்னும் தெளிவாகக் கூறப் போனால் இந்நாவல், மரபான சிந்தனையில் மாற்றத்தை கோருகிறது. இம்மாற்றம் கதையில் மட்டுமல்ல பண்பாட்டு மாற்றமாகவும் இருக்க வேண்டும் என்கிறது. பண்பாட்டு மாற்றமா? எப்படி? என்று உடனே ஒருவருக்குக்  கேள்வி எழும். வானரர் என்ற சொல்  வனநரர் என்பதன் திரிபு என்ற பொருளில் நாவல் ஆசிரியர் பயன்படுத்துகிறார். வனநரர் என்பது காட்டில் வாழும் மக்கள் தொகுதியினரைச் சுட்டும் சொல். இந்தக் காடுவாழ் மக்களே வானரர் என்று அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறும் நீலகண்டன் அவர்கள் வைதீகத்தால் ஒடுக்கப்பட்டதாலே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கதையின் ஊடாகச் சொல்லிச் செல்கிறார்.

    வைதீகத்தின் கோரப் பிடியில் இருந்து தன் மக்களை விடுவிக்கும் கதாநாயகனாகவே வாலி படைக்கப்பட்டுள்ளார். வனநரர்களின் பண்பாட்டுச் சூழல்கள் நன்றாக நாவலில் படம் பிடித்துக் காட்டப் பெற்றுள்ளன. வனநரர்கள் எனப்படும் வானரர்களின் பண்பாடு,  வைதீகர்களின்  பண்பாட்டிலிருந்தும், வைதீகத்தின் எதிரியான அசுரர்களின் பண்பாட்டிலிருந்துமே வேறுபாடு உடையதாகக் காணப்படுகின்றது.

    அசுரர்கள் நகர பண்பாட்டை நோக்கி முன்னேறும் பொழுது அவர்களுக்குள் ஏற்படும் ஏற்றத் தாழ்வு பிரச்சனைகள், வனநரர்கள் சமூகத்தில் இல்லாததைக் காணும் வாலி தான் அசுரர்களைப் போல் தன் சமூகமும்  நகரமயப்படுவதை வெறுக்கிறார். முதலில் அசுரர்களின் நகரத்தை விடப் பெரிய நகரத்தை உருவாக்க நினைக்கும் வாலி, பின்பு அசுரர்கள் மத்தியில் நகரப் பண்பாட்டின் விளைவாக ஏற்பட்ட கொடூரமான இயற்கை மீறிய பண்பாட்டுச் சீரழிவுகளைக் கண்டு தன் நகரக் கனவைக் கைவிடுகிறார். இந்நாவலில் வனநரர்களின் சமூகப் பண்பாடு ஆதிக்கம் செலுத்தும்  வைதீகப் பண்பாட்டிலிருந்து முற்றிலும் விலகி நிற்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் நாவலாசிரியர்.

    மேலும் இந்நாவலில்  வனநரர்கள், வைதீகத்தின் ஆதிக்கத்திற்குள் இருப்பதே சரி; வைதீக ஆதிக்கத்திற்குள், அசுரர்களின் ஆதிக்கத்திற்குள் அடிமையாக இருந்தால் உணவாவது கிடைக்கும்; இல்லையேல் செத்துப் போக வேண்டியது வரும் என்று நினைக்கும் வனநரர்களின்  முன்னோடிகளையும்  காண முடிகிறது. இப்போக்குடையவர்களை வாலி வெறுக்கிறார். வாலியின் சமூக நோக்கு ஆதிக்கத்திற்கு எதிரானதாக இருந்த போதிலும் ஒரு கட்டத்தில் அது நகரப் பண்பாட்டிற்கு எதிராக திரும்புவதன் பலவீனத்தைத் தாராவின் சிந்தனை, பேச்சு ஆகியவற்றின் வாயிலாக நாவலாசிரியர் சரியாக உணர்த்துகிறார்.

    மேலும் வைதீகத்தின் ஆன்மா வழியிலான பக்தி மார்க்கமே  ஒருவரை உய்விக்க கூடியது என்ற எண்ணமுடையவராக  அனுமன் இருப்பதையும்; அவர் பக்தி அடிப்படையில் வைதீகத்தை சுவீகரித்தவராகவும் நாவலில் காட்டப்படுகிறார். அனுமனின் சமூகவியல் நோக்கு இன்னும் அழுத்தமாக நாவலில் பதிவு செய்யப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சுக்ரீவனைப் பொறுத்தவரை அவருக்கு வனநரர்களின் சமூக முன்னேற்றம் என்பதெல்லாம் பற்றி கவலை ஒன்றும் இல்லை. அவர் சுயநலத்தின் மொத்த உருவமாக இருக்கிறார். அவருக்குத் தாராவும் அவரது மகிழ்ச்சியும் மட்டுமே போதுமானவையாக இருக்கின்றன. இதற்காக வாலியை இராமனின் துணையோடு கொன்றும் விடுகிறார். அனுமனைப் போல இராமனும் இலட்சுமணனும்  சுக்ரீவனின் நடிப்பில் ஏமாந்து போகின்றனர். தம்பி மனைவியை அபகரித்தவன் வாலி என்றே நம்பியும் விடுகின்றனர்.

    ஒருவேளை சுக்ரீவனின் நாடகம், இராமனுக்குத் தெரிந்திருந்தால் இராமன் என்ன செய்திருப்பார்? என்பது நாவலின் போக்கில் நமக்குச் சொல்லப்படவில்லை. வாலி, வைதீக ஆதிக்கத்திற்கு எதிரானவர். நிச்சயம் இராமனுக்கு இராவணனை வீழ்த்த உதவி செய்யமாட்டார் என்று உறுதியாகச் சொல்லலாம். மேலும் இவ்விசயத்தில் வாலி இராமனை நிச்சயம் எதிர்த்து நின்றிருப்பார் என்றே நாம் கதையின் போக்கு வைத்து  அனுமானிக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில் அண்ணன் மனைவியை அபகரிக்க நினைத்த சுக்ரீவனின் துணையை இராமன் நாடியிருப்பாரா? அல்லது அவரைக் கொன்றிருப்பாரா? இதெல்லாம் கதைக்கு அப்பாற்பட்ட விசயம்.

    நாம் ஏற்கெனவே கூறியது போல  சுக்ரீவனின் ‘அண்ணி மோகம்’, அனுமனுக்குத் தெரியாது. காரணம், சந்தர்ப்ப சூழல், சுக்ரீவனை அனுமன் நம்பும்படி செய்து விடுகிறது. அனுமனுக்கு சுக்ரீவனின் ‘அண்ணி மோகம்’  தெரிந்திருந்தால், நிச்சயம் அவர் சுக்ரீவனுக்கு உதவியிருக்க மாட்டார் என்பதற்கான குறிப்பை நாவலில் ஆசிரியர்  தெளிவாகத் தெரிவிக்கின்றார். அப்படி அனுமனுக்கு தெரிந்தால் அவர்  இராம, இலக்குவரிடம் கூறி சுக்ரீவனுக்கு உதவ வேண்டாம் என்று அவர்களைத் தடுத்திருப்பார்; ஆனால் வாலியின் உதவி நிச்சயம் கிடைக்காது என்பதையும் அவர் அவர்களுக்கு உணர்த்தியிருப்பார்; இது எல்லாம் கதைக்கு அப்பாற்பட்ட விசயம் என்றாலும் நமக்கு இப்படியெல்லாம் சிந்திப்பதற்கு நாவல் களம் வழங்குகிறது.

    கதையில் வாலியின் தந்தை ஸ்தானம் வகிக்கும் அரவாணியாகிய  ரிக்ஷராஜா கதாபாத்திரம், குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. ஏனெனில் ரிக்ஷராஜாவே, வானர இனம் வைதீகத்திற்கும் அசுரர்களுக்கும் அடிமைப்பணி செய்யப் பிறந்ததல்ல; அதற்கு சுயமரியாதை என்பது அவசியம்; வைதீக, அசுர ஆகிய பிற ஆதிக்கப் பண்பாட்டிலிருந்து விடுபட்டுச் சுதந்திரமாக செயல்படுவதற்குரிய செயல்வன்மை வானர இனத்திற்கு உண்டு  என்று முழங்கி, வானர மக்கள் முன்னேற்றத்திற்காகச் சிந்திப்பதில்  வாலிக்கும் முன்னோடியாக விளங்குகிறார்.

    அவரே வாலி, சுக்ரீவன் ஆகியோரை அழைத்துக்கொண்டு போய் மகாபலியிடம் பயிற்சி பெற வைக்கிறார்; வாலியின் மீது அளவு  கடந்த நம்பிக்கையும், பாசமும் உடையவராக இருக்கிறார்; சுக்ரீவனின் வஞ்சகத்தை அறிந்து கொதிக்கிறார்; சுக்ரீவனை எச்சரிக்கவும் செய்கிறார்.  சுக்கிரீவன் அவரை உதைத்து இகழ்கிறார்; உதைகள் பட்டாலும்   வாலியைக் காக்கும் எண்ணமே அவர் மனத்தில் முதன்மையாக இருக்கிறது. இறுதியில் தாராவைக் காக்க,  காளை முட்டிப் பலியாகிறார். இந்நாவலில் மேலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கதாபாத்திரம், வாலி வளர்க்கும் ‘குட்டி ஓநாய்’. வாலியின் மீது அது கொண்ட அன்பு, தாராவின் அன்பை விட ஒருபடி மேலாக இருப்பதை  இந்நாவலைப் படிக்கும் ஒருவர் புரிந்துகொள்வார். கடைசியாக இந்நாவலின் பாவிகத்தைப் (மைய கருத்து) பின்வருமாறு சொல்லி, இக்கட்டுரையை முடிப்போம்

    மொத்தத்தில் இந்நாவல், காலம் காலமாக வழங்கி வரும் மரபான சிந்தனைகளில் இருக்கும் ஆதிக்கப் போக்கை இனம் காட்டி முற்போக்கு அடிப்படையில்  மாற்றி யோசிப்பதற்கான தேவையை வலியுறுத்துவதாக இருக்கிறது.

    ===============================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    வாநரா என்று இந்த ஆசிரியர் அறிமுகப்படுத்தியுள்ள நாவலின் மூல வடிவம் கிடைக்காததால் வாசித்து அறிய முடியவில்லை. இந்தக் கட்டுரையின் ஆசிரியர் விவரித்துள்ளதன் அடிப்படையில் இது, இடதுசாரிச் சிந்தனையின் அடிப்படையில் புனையப்பட்டுள்ள நாவல் என்ற தோற்றம் கிடைக்கிறது. அடிப்படையில் இடதுசாரிச் சிந்தனையாளர்கள் எல்லோரும் எப்படிச் சிந்திப்பார்களோ அதே கோணத்தில்தான் இந்த நாவல் இயங்கியிருக்கிறது என்று தெரிகிறது. இடதுசாரியினரும் பெரியாரியர்களும் சிந்திக்கும் விதத்தில்தான் நாவல் புனையப்பட்டுள்ளது. எனவே, இக்கட்டுரையாசிரியர் சொல்வது போல ‘மாற்றி யோசிப்பதன்’ அடிப்படை ரேகைகள் கூட இந்தப் புனைவில் வெளிப்படவில்லை என்பது புலனாகிறது. மாற்றி யோசிப்பது என்பதை விளக்குவதற்காக இக் கட்டுரையாசிரியர் ‘வாலி’ திரைப்பட எடுத்துக்காட்டை முன்வைத்திருப்பது, கம்பன், வால்மீகி போன்றோரின் இலக்கியத் திறனைத் திரைப்படங்களின் துணையோடு அளவிட்டுவிட முடியும் என்பதுபோன்ற தோற்றத்தைத்தான் தருகிறது.

    மற்றபடி, இக்கட்டுரை, மேற்படி நாவலுக்கு நல்ல அறிமுக முயற்சி என்று கொள்ளத்தக்கது. ஆய்வு என்ற முறையில் இதில் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

    ===============================================================

    Share
  • தூக்கும் பாவும்: சிறப்பும் பொதுவும்

    – முனைவர் ம.பிரபாகரன்

    யாப்பிலக்கண வரலாற்றில் முதன்முதலில் யாப்பருங்கல விருத்தியுரை, சங்கயாப்புடையார்,  செப்பலோசை ஏந்திசைச் செப்பல், தூங்கிசைச் செப்பல், ஒழுகிசைச் செப்பல் என்று மூன்று வகைப்படும் என்று கூறுவதாகக்  கூறுகிறது.  இது குறித்த சங்க யாப்பு சூத்திரங்களாவது:
                       “வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை
                          ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர் 

                           இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத்
                          தூங்கிசைச் செப்பல் என்மனார் புலவர்     

                         வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும்
                         ஒன்றிய பாட்டே ஒழுகிசைச் செப்பல்

     என்றார் சங்க யாப்புடையார். (பக். 227, யாப்பருங்கலம் விருத்தியுரையுடன், இரா.இளங்குமரன் பதிப்பு, கழகம், சென்னை: 1976)  இவ்விடத்தில்  ஓசை தொடர்பாகச் சில செய்திகள் விவாதிக்கப்படவேண்டியுள்ளது. இவ்விவாதமே இக்கட்டுரையின் பொருளாகிறது.  ஏந்திசைச் செப்பல் முதலான ஓசைகள் தளை அடிப்படையில் அமைந்தவை. இவ்வோசை குறித்த செய்திகளை யாப்பருங்கலம் தளை ஓத்தில் அமைக்காமல் செய்யுளியலில் எடுத்துக் கூறியுள்ளது. இதற்கு உரைவரைந்த யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் இந்த ஏந்திசை முதலான ஓசைகளைத் தளை ஓத்தில் சிறிதும்  குறிப்பிடாமல் செய்யுளியலில் வைத்தே விளக்குகிறார்.  எழுத்தோத்தில் உறுப்புக்களைத் தொகுத்துக் கூறும்போது அமிதசாகரர், 

          ”எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு
           இழுக்கா நடைய தியாப்பென மொழிப (சூ.1)   என்று கூறுவார்.  இச்சூத்திரத்தில் கூறியவற்றுள்ளுள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவற்றிற்கு முறையே எழுத்தோத்து, அசையோத்து, தளையோத்து, அடியோத்து, தொடையோத்து என்று தனித்தனி ஓத்து அமைக்கும் அமுதசாகரர் ஏன் தூக்கு என்னும் உறுப்பிற்கு தூக்கோத்து என்று தனி ஓத்து அமைக்கவில்லை என்பது இத்தொடர்பில் எழும் மற்றொரு வினாவாகும். தளையைக் கூறும் இடத்திலேயே ஓசையைக் கூறுவது பொருத்தமானதாகும். தளையோத்தில் ஓசையை விளக்காததற்குக் காரணம் என்ன? என்ற கேள்வி எழும்பினால்   தூக்கு என்ற ஓர் உறுப்புக் கூறியுள்ளதால் தூக்கோத்தில் ஓசையை விளக்குவார் என்று சமாதானம் கூறிக்கொள்ளலாம். ஆனால் தூக்கோத்து என்று  ஒரு ஓத்தே நூலில் இல்லை. அப்படியெனில் அமிதசாகரர் ஏன் தூக்கை செய்யுள் உறுப்பில் ஒன்றாகக் கூறினார்?

    நிற்க. யாப்பருங்கலத்தை எழுதிய அமிதசாகரர்தான் யாப்பருங்கலக் காரிகையையும் எழுதியுள்ளார். அந்நூலில் அவர் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற ஆறு உறுப்புக்களையே கூறியுள்ளார். அமிதசாகரிடம் ஏன் இந்த மாற்றம் காணப்படுகிறது? யாப்பருங்கலத்தில் செய்யுள் உறுப்பு எழுத்து முதலாக தூக்கு ஈறாகக் மொத்தம் ஏழு உறுப்புக்களைக் கூறும் அமிதசாகரர் யாப்பருங்கலக்காரிகையில் ஏன் எழுத்து முதலாக தொடை ஈறாக ஆறு உறுப்புக்களையே கூறுகிறார்?  அவர் ஏன் இப்படி குழப்புகிறார்? உண்மையில் அவர் குழப்பவில்லை. யாப்பருங்கலத்தில் அவர் செய்யுள் உறுப்புக்களுள் தூக்கை ஒன்றாகக் கொண்டதற்குக் காரணம்  நற்றத்தனாரும், பல்காயனாரும் தூக்கை ஓர் உறுப்பாகக் கூறியுள்ளதனால் ஆகலாம். யாப்பருங்கல விருத்தியின் மூலம் அறிய வரும் இது குறித்த இவ்விருவரின் சூத்திரங்களாவன:

                 ”யாப்பெனப் படுவ தியாதென வினவின்
                   தூக்கும் தொடையும் அடியுமிம் மூன்றும்
           நோக்கிற் றென்ப நுணங்கி யோரே”   என்றார் நற்றத்தனார்.

                 ”இமிழ்கடல் வரைப்பின் எல்லையின் வழாஅத்
                   தமிழியல் வரைப்பில் தானினிது விளங்கி
                   யாப்பியல் தானே யாப்புற விரிப்பின்
                  எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு
                  இழுக்கா மரபின் இவற்றொடு பிறவும்
                  ஒழுக்கல் வேண்டும் உணர்ந்திசி னோரே என்றார் பல்காயனார். (பக். 16, 17; மேலது)

     மேலே கண்ட  இருசூத்திரங்களில் தூக்கு ஓர் உறுப்பாகக் கொள்ளப்பட்டிருப்பினும் இரண்டாவது சூத்திரமான பல்காயனாரின் உறுப்புக் கோட்பாடே யாப்பருங்கலத்தோடு ஒத்து அமைகிறது. ஏனெனில் பல்காயனாரே எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தூக்கு என்ற ஏழ் உறுப்புக்களையும் கூறுகிறார். இவ்வேழு உறுப்புக்களும்தான் யாப்பருங்கலத்திலும் கூறப்பெற்றுள்ளது. இத்தொடர்பில் பல்காயனாரை அமிதசாகரர் பின்பற்றினாரா? அல்லது அமிதசாகரைப் பல்காயனார் பின்பற்றினாரா?.  யாப்பருங்கலம் 10-ஆம்  நூற்றாண்டைச் சார்ந்தது; ஆனால் யாப்பருங்கல விருத்தியுரை 11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தது  என்பதால் இவ்வுரையில் எடுத்துக்காட்டபெற்றுள்ள நற்றத்தனார், பல்காயனார் ஆகியோர் சூத்திரங்கள் யாப்பருங்கலத்திற்குப் பின்னரும் எழுதப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அல்லது யாப்பருங்கலத்திற்கு முன்னரும் எழுதப்பட்டிருக்கலாம்; அல்லது யாப்பருங்கலத்தாரும், பல்காயனாரும், நற்றத்தனாரும் சமகாலத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வாய்ப்புண்டு. அங்ஙனம்  அமிதசாகரரும் பல்காயனாரும் சமகாலத்தவராக (நற்றத்தனார் குறித்து தனியே விவாதிக்கிறோம்) இருந்தவர்களாக நாம் கொண்டால் இவர்கள் இருவரும்  தூக்கையும் சேர்த்து யாப்பு  உறுப்புக்கள் ஏழு என்று வேறு ஏதேனும் பொதுமூலத்தைப் பின்பற்றிக்  கூறிருக்கலாம்.

    நற்றத்தனாரைப் பொறுத்தவரை தூக்கு, தொடை, அடி ஆகிய மூன்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார். இதில் தூக்கு என்ற உறுப்பை அவர் முதலில் வைத்துக் கூறுவதைக் கவனிக்க. தூக்கு என்னும் உறுப்பிற்கு முதன்மை கொடுத்து முதலில் நூல் இயற்றியவர் நற்றத்தனாரா? அல்லது அவர் வேறு ஏதேனும் ஒரு மூலநூலை பின்பற்றிக் கூறினாரா? யாப்பருங்கல விருத்தி தரும் சூத்திரங்களை மட்டும்  வைத்துக்கொண்டு நம்மால் இவற்றையெல்லாம் உறுதியாகக் கூற இயலாது. அமிதசாகரர் தூக்கை நற்றத்தனார், பல்காயனார் ஆகியோரைப் பின்பற்றித்தான் யாப்பு உறுப்பாகக் கூறினாரா? நற்றத்தனார் தூக்கை முதல் உறுப்பாகக் கூறியிருக்க ஏன் அமிதசாகரர் பல்காயத்தைப் போலத் தூக்கைக் கடைசி உறுப்பாகக் கொள்கிறார்? எங்கனமாயினும் தூக்கை ஓர் உறுப்பாக அமைத்துக் கொள்வதில் அமிதசாகருக்கு நற்றத்தம் ஓர் உந்துதலாக இருந்திருக்கலாம்; அல்லது யாப்பருங்கலம் நற்றத்ததிற்கு உந்துதலாக இருந்திருக்கலாம். ஆனால் தூக்கையும் சேர்த்து யாப்பு உறுப்புக்கள் ஏழு என்று கூறுவதில் யாப்பருங்கலம் பல்காயத்தையே பின்பற்றுகிறது அல்லது பல்காயம் யாப்பருங்கலத்தையே பின்பற்றுகிறது. ஆக இங்கு நமக்கு எழும் சிறிய குழப்பம் பல்காயம் முந்தையதா? யாப்பருங்கலம் முந்தையதா? (நற்றத்தம் முந்தையதா?) என்பதாகும். பல்காயம் முந்தையது என்று ஒத்துக்கொண்டு ஆய்ந்தால் நாம் யாப்பருங்கலத்திற்குப் பதிலாக பல்காயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தூக்கு பற்றிய ஆராய்ச்சியை நடத்தலாமே? என்ற கேள்வி எழும். யாப்பருங்கலம்தான் முந்தையது  என்றால் யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டு இத்தூக்கு குறித்த ஆராய்ச்சியை நடத்தலாம். ஏனென்றால் காலநோக்கில் தூக்கையும் சேர்த்து ஏழு உறுப்புகள் என்று கூறும் முதல் நூல் எது என்பதே முக்கியமானது. ஏனெனில் அம்முதல் நூலே இவ்வுறுப்புக் கோட்டை முதன்முதலில் உருவாக்கியிருக்கும். இது ஒரு பக்கம் இருக்க இக்கட்டுரை தூக்கு பற்றியதாக இருப்பதால் நற்றத்ததையும் நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. தூக்கைக் கடைசி உறுப்பாகச் சேர்த்து பல்காயமும், யாப்பருங்கலமும் கூறுகின்றன என்பது முக்கியமானததுதான். ஆனால் தூக்கை முதல் உறுப்பாகக் கூறும் நற்றத்தம் இவ்விரு நூல்களைவிட முதன்மை பெறுகிறது என்பதில்  ஐயமில்லை.  நற்றத்தம் யாப்பருங்கலத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ அமைய வாய்ப்புண்டு என்பதை முன்னர் பார்த்தோம். எனினும் யாப்பருங்கலத் தூக்குக் கோட்பாட்டைக் கணிப்பதில் நற்றத்தம் துணைமைச் சான்றாகவே நமக்குப் பயன்படும். நாம்  தூக்கு பற்றிய இந்த ஆராய்ச்சியை யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டே செய்கிறோம். ஏனெனில் பல்காயம் யாப்பருங்கலத்தை விட முந்தையது; யாப்பருங்கலம் அதைப் பின்பற்றியது என்ற ஒரு வாய்ப்பை (Possibility) நாம் ஏற்றுக்கொண்டு ஏன் பல்காயம் தூக்கை ஏழு உறுப்புக்களில் ஒன்றாகக் கூறிவிட்டு, அதை விளக்க தூக்கோத்து என்ற ஒன்று அமைக்காமல் செய்யுளியலில் வைத்து விளக்குகிறது? என்று ஆராய்ச்சி செய்ய முடியாது. ஏனெனில் பல்காயம் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. அது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தூக்கு என்ற ஏழு உறுப்புக்களைக்  கூறியுள்ளமை மட்டுமே நம்மால் அறிய முடிகிறது. அந்நூலில் யாப்பருங்கலத்தைப் போல எழுத்தோத்து, அசையோத்து, சீரோத்து, தளையோத்து, அடியோத்து முதலியவையும், இயல்களும் அமைந்திருந்ததா என்று அறிய முடியவில்லை. எனவே நாம் பல்காயத்தை அடிப்படையாக வைத்து இவ்வாராய்ச்சியை செய்ய இயலாது. பல்காயமும், யாப்பருங்கலமும் தூக்கை விளக்குவதில்  ஒரு பொது மூலத்தைப் பின்பற்றியுள்ளன என்ற வாய்ப்பை நாம் ஏற்றுக் கொண்டாலும் பல்காயத்திற்கு நாம் எழுப்பிய கேள்விகள் பெரும்பாலும் அந்தப் பொது மூலத்திற்கும் பொருந்துகிறது அதாவது  அந்தப் பொது மூலம் எது? அவற்றில் எத்தனை இயல்கள் அமைந்திருந்தன? என்பன  போன்ற பிரச்சனைகள் வரும். பல்காயத்திற்காவது சூத்திரங்கள் கிடைக்கின்றன. ஆனால் நாம் ஊகம் செய்த பொது மூலத்தைப் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. எனவே நாம் தூக்குப் பற்றிய ஆராய்ச்சியை நமக்கு கிடைக்கும் யாப்பருங்கலத்தில் இருந்துதான் செய்ய வேண்டியிருக்கிறது; செய்ய முடிகிறது.   யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் இந்த ஆராய்ச்சியை செய்தாலும், தூக்குப் பற்றிய யாப்பருங்கலத்தின் சிந்தனை- பல்காயம் யாப்பருங்கலத்தை விட முந்தையது அல்லது இரண்டும் ஒரு பொது மூலத்தைப் பின்பற்றியுள்ளன என்ற வாய்ப்புக்களின் நோக்கில்-   பல்காயத்தின் சிந்தனையையோ அல்லது நாம் கருதிய  பொது மூலத்தின் சிந்தனையையோ  மீட்டுருவாக்கப் பயன்படும் என்று நாம் கருதுகிறோம்.

    யாப்பருங்கலமே தூக்கு பற்றிய இச்சிந்தனையை முதலில் கூறியது என்ற வாய்ப்பை நாம் ஏற்றுகொண்டாலும் தூக்கு குறித்த யாப்பருங்கல மரபின் நுட்பமான சிந்தனைகளை நாம் அறிந்து கொள்ளமுடியும். எனவே நாம் விரும்பினாலும் விரும்பாவிடிலும் யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டே அதாவது யாப்பருங்கலத்தை முதல் நூலாகக் கொண்டே இவ்வாராய்ச்சியைச் செய்ய வேண்டியிருக்கிறது; செய்கிறோம்.

    யாப்பருங்கலத்தில்  ‘தூக்கை’ச் செய்யுள் உறுப்பாகக் கூறும் அமிதசாகரர்  அதை ஏன் செய்யுளியலில் விளக்குகிறார் என்பதை  யாப்பருங்கல விருத்தியுரைகாரர் எழுத்தோத்து உரையில் தரும், (இக்கட்டுரையில் முன்னர் கண்ட   ஆசிரியர்களான)   நற்றத்தனார், பல்காயனார் ஆகியோரின்   சூத்திரங்கள்  உணர்த்துகின்றன:

    தூக்கு எனினும் பாட்டு எனினும் ‘ பா ‘ எனினும் ஒக்கும்.

                      ”தூக்கு பாட்டும் பாவும் ஒன்றென
                        நோக்கிற் றென்ப நுணங்கி யோரே  என்றார் பல்காயனார் ஆகலானும்,

                     ” பாவென மொழியினும் தூக்கினது பெயரே   என்றார் நற்றத்தனார் ஆகலானும் எனக் கொள்க. (பக். 17,18; மேலது)

    இங்கு தூக்கு எனினும் பா எனினும் ஒக்கும் என்று விருத்தியுரைகாரர் பல்காயனார் மற்றும் நற்றத்தனார் ஆகியோரது சூத்திரங்களை எடுத்துக்காட்டி விளக்குவதைக் காண்க. எனவே அமிதசாகரர் தூக்கை ஒரு செய்யுளுறுப்பாக எடுத்துக்கூறியிருந்தாலும்  தூக்கு என்பது பாவே என்பதனால் தூக்கோத்து என்று ஒரு தனி இயல் அமைக்காமல் ‘ பா ‘வை விளக்கும் செய்யுளியலிலேயே தூக்கையும் அதாவது பாக்களுடைய ஓசையையும் விளக்குகிறார் என்று கொள்ள வேண்டும். இத்தொடர்பில் எழும் மற்றொரு கேள்வி  தூக்கைச் செய்யுளுறுப்பாக விளக்காமலேயே அதைச் செய்யுளியலில்  விளக்கியிருக்கலாமே? என்பதாகும்.  விளக்கியிருக்கலாம்.  ஆனால் செய்யுளில் ஓசை என்பது மிகவும் முக்கியமானதாகையால் அதன் முக்கியத்துவத்தைக் காட்ட முன்னோர்களைப் பின்பற்றி அமிதசாகரர் தூக்கைச் செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகச் சுட்டிக்காட்டினார் எனலாம்.

    யாப்பருங்கலத்திற்குப் பிறகு யாப்பருங்கலக்காரிகையை எழுதும்போது செய்யுள் உறுப்புக்களில் ஒன்றாகச் சுட்டாததற்கு காரணம் என்ன? என்ற கேள்வியும் இத்துடன் எழும். அமிதசாகரர்  ஏற்கெனவே யாப்பருங்கலத்தில் தூக்கை ஓர் உறுப்பாகக் கூறிவிட்டதால் யாப்பருங்கலக்காரிகையில் அதனை மீட்டும் ஓர் உறுப்பாகக் கூறவேண்டிய அவசியம் இல்லை என்று கருதியிருக்க வேண்டும். அப்படியெனில் எழுத்து முதலான பிற உறுப்புக்களையும் அவர் யாப்பருங்கலக்காரிகையில் விளக்காமல் விட்டிருக்கலாமே என்று ஒருவர் கேட்கலாம். எழுத்து முதலான ஆறு உறுப்புக்களும் தனித்தனி உறுப்புக்கள்; ஓசை என்பது இவை அனைத்தும் சேர்வதால் உருவாவதாகும். அதாவது எழுத்து முதலானவை பகுதிகள் எனில் ஓசை என்பது முழுமையாகும். எனவேதான் அமிதசாகரர்  தூக்கு என்பதைப் பிற உறுப்புக்களைப் போல கொள்ளவில்லை. இதை அறிய அமிதசாகரின் தூக்கு பற்றிய சிந்தனையின் பரிணாம வளர்ச்சியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    யாப்பருங்கல முதற்சூத்திரத்தில், தூக்கு என்பது மற்ற உறுப்புக்களைப் போலாது ஓசையின் முழுமை நோக்கிய ஒன்றாக  இருப்பதால்  முக்கியத்துவம் உணர்த்தப்பட வேண்டும் என்று கருதிய அமிதசாகரர் தூக்கை ஓர் உறுப்பாக அறிவிக்கிறார்.  பாவே ஓசையாக இருப்பதால் தனி உறுப்பாக கூற வேண்டிய அவசியம் இல்லை  என்று அவர்  நினைத்திருந்தாலும் எல்லா பாக்களது ஓசையும் ஒரே ஓசை அன்று. எனவே பொதுவாகத் தூக்கைப் பா என்று கூறினாலும் அது வேறுபாட்டைத் தம்முள் அடக்கியதாகும். எனவே சிறப்புநிலையில் தூக்கு பாக்களுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை அறிவுறுத்த தூக்கை முதலில் உறுப்பாகக் கூறுகிறார். இது அவரின் முதல்நிலை. அடுத்து,  தூக்கோத்து அமைத்தாலும் செய்யுளியலில் மீண்டும் அவற்றைக் கூறவேண்டிய நிலை ஏற்படும்; எனவே இது கூறியது கூறல் என்னும் குற்றத்தின் பாற்படும். எனவே தூக்கோத்தைத் தன் நூலில் ஒரு தனி இயலாக அமைப்பதைத் தவிர்க்கிறார். இது இரண்டாம் நிலை. மூன்றாவது யாப்பருங்கலக்காரிகையை எழுதும்போது யாப்பருங்கலத்தின் பயிற்றுமுறைக்கும்  யாப்பருங்கலக்காரிகையின் பயிற்றுமுறைக்கும் இடையேயுள்ள  வேற்றுமையினாலும் அதாவது   யாப்பருங்கலக் காரிகை தொன்மை யாப்புநூலில் பயிற்சி இல்லாதவர்களுக்குப் பயிற்சி ஏற்பட  எழுதப்பட்டமையால் அதில்  செய்யுள் உறுப்புக்களில் நுட்பமான  தூக்கை ஒன்றாகக் கூறவேண்டிய தேவையின்மையாலும், அவர்   தூக்கை ஓர் உறுப்பாகக் கூறாமல் விடுவது மூன்றாவது நிலை.  (யாப்பருங்கலம் யாருக்காக எழுதப்பட்டதோ அவர்களிருந்தும், யாப்பருங்கலக் காரிகை படித்த மாணவர்கள் வேறானவர்கள்  அதாவது யாப்பருங்கலம் யாப்பு தொடர்பான ஆராய்ச்சி மாணவர்களுக்கும், யாப்பருங்கலக்காரிகை யாப்பு தொடர்பான தொடக்கநிலை மாணவர்களுக்கும் எழுதப்பட்டிருக்க வேண்டும்). இதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.  இத் தொடர்பில்  யாப்பருங்கலத்தில் விளக்கப்பட்டு யாப்பருங்கலக்காரிகையில் விளக்கப்பாடாத கூறுகள் எவை எவை என்பதும் யாப்பருங்கலத்தின் விளக்குமுறையும் யாப்பருங்கலக்காரிகையின் விளக்குமுறையும் எத்தன்மையன என்பதும்  ஒப்பிட்டு  விளக்கப்பட வேண்டியதாகவும் உள்ளது. இது வேறொரு கட்டுரைக்கான செய்தி ஆதலால் இதை இங்கு விரிவாகச் செய்ய முடியாது. எனினும் இங்கு   யாப்பருங்கலத்தையும், யாப்பருங்கலக்காரிகையையும்  ஒப்பிட்டு ஓர் உதாரணத்தை மட்டும்  சுட்டிக்காட்டமுடியும். அமிதசாகரர் யாப்பருங்கலக் காரிகையில்  முதற்காரிகையில்  அசைக்கு உறுப்பாகும் 13 எழுத்துக்களை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு அடுத்து அசைகளின் வகைகளாகிய நேரசை, நிரையசை ஆகியவற்றை விளக்கச் சென்றுவிடுகிறார். ஆனால் அவர் யாப்பருங்கலத்தில் அப்படி அசைக்கு உறுப்பாகும் எழுத்துக்களின் எண்ணிக்கையை மட்டும் கூறிவிட்டு அசைகளை விளக்கச் சென்று விடாமல்  சில எழுத்துகளுக்குரிய சிறப்புவிதிகளையும் கூறுகிறார். இதை யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம் ஆகியவற்றின் எழுத்துக்கள் குறித்த காரிகையையும் சூத்திரங்களையும் எடுத்துக்காட்டுவதின் வழி தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்:

    யாப்பருங்கலக் காரிகை:

    குறினெடி லாவி குறுகிய மூவுயி ராய்தமெய்யே              மறுவறு மூவின மைதீ ருயிர்மெய் மதிமருட்டுஞ்           சிறுநுதற் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையாய்
    அறிஞ ருரைத்த வளபு மசைக்குறுப் பாவனவே (கா.4)

    இங்கு அசைக்கு உறுப்பாக மொத்தம் 13 எழுத்துக்கள் கூறப்பெற்றிருப்பதைக் காண்க. எழுத்துக்களின் விளக்கம்  பற்றிய சூத்திரம் யாப்பருங்கலக்காரிகையில்  இது ஒன்றே ஆகும்.

    யாப்பருங்கலம்:

                        உயிரே மெய்யே உயிர்மெய் யென்றா
                        குறிலே நெடிலே அளபெடை யென்றா
                        வன்மை மென்மை இடைமை யென்றா
                       சார்பில் தோன்றும் தன்மைய வென்றா
                       ஐஒள மகரக் குறுக்கம் என்றாங்கு
                       ஐம்மூ வெழுத்தும் ஆம்அசைக் குறுப்பே (சூத்.2)

    இங்கு அசைக்கு உறுப்பாக 15 எழுத்துக்கள் கூறப்பெற்றிருப்பதைக் காண்க. இச்சூத்திரம் யாப்பருங்கலக்காரிகையைப் போல அசைக்கு உறுப்பாக உள்ள எழுத்துக்களைத் தொகுத்துகூறும் சூத்திரம் ஆகும். இதற்குப் பிறகு  யாப்பருங்கலம்  சில எழுத்துக்களின் சிறப்பு விதிகளை மேலும் இரண்டு சூத்திரத்தில் கூறுகிறது:

                     தனிநிலை ஒற்றிவை தாமல  கிலவே
                     அளபெடை அல்லாக் காலை யான (சூத். 3)

                     தளைசீர் வண்ணம் தாம்கெட வரினே
                    குறுகிய இகரமும் குற்றிய லுகரமும்
                   அளபெடை ஆவியும் அலகியல் பிலவே (சூத்.4)

    இவ்விரு சூத்திரச் செய்திகளும் யாப்பருங்கலக் காரிகையில் இல்லாததை கண்டு கொள்ள முடிகிறது. இதற்கான காரணம் மேலே விளக்கப்பெற்றது.  நாம் மேலே காட்டியுள்ளமை போன்று  யாப்பருங்கலத்தில் வரும்  அனைத்து இயல்களையும் யாப்பருங்கலக் காரிகையில் உள்ள இயல்களோடு  ஒப்பிட்டுக் காண வேண்டியது முக்கிய தேவையாகும்.

    தூக்கு, பாதொல்காப்பியம், யாப்பருங்கல மரபு ஒப்பீடு:

     தொல்காப்பியத்தில் தூக்கு என்பதும் பா என்பதும் தனித்தனி உறுப்புக்களாகச் சுட்டபெற்றிருக்க, யாப்பருங்கலத்தில் பா என்பதை விடுத்து தூக்கை மட்டும் உறுப்பாக ஏன் அமிதசாகரர் கொண்டிருக்கிறார்? என்பதும் இத்தொடர்பில் முக்கியத்துவம் பெறும் வினாவாகும். தூக்கு குறித்தும் பா குறித்தும் தொல்காப்பியத்தில் என்ன கூறப்பெற்றுள்ளது என்பதை முதலில் அறிந்து கொள்வோம்:

                    அகவ லென்ப தாசிரிய யம்மே (செய். சூத். 79)
                    அஃதன் றென்ப வெண்பா யாப்பே  (80)
                  துள்ளலோசை கலியென மொழிப     (81)
                     தூங்க லோசை வஞ்சி யாகும்          (82)
                     மருட்பா வேனை யிருசா ரல்லது
                    தானிது வென்னுந் தன்மை யின்றே  (83)
                   அவ்வியல் பல்லது பாட்டாங்குக் கிளவார் (84)
                  தூக்கியல் வகையே யாங்கென மொழிப ( 85)

                மேற்கண்ட நூற்பாக்கள் தூக்கு பற்றிய தொல்காப்பிய நூற்பாக்கள். தொல்காப்பியம் தூக்கு என்பதற்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை. மேலேகண்ட வண்ணம் தூக்கு என்பதன் வகைகளையே தருகிறது. அதாவது ஆசிரியத்திற்கு அகவல் ஓசை; வெண்பாவிற்கு அகவல் அல்லாத ஓசை; கலிக்குத்துள்ளலோசை; வஞ்சிக்குத் தூங்கலோசை; மருட்பாவிற்கு ஆசிரியம், வெண்பா ஆகியவற்றின் கலப்பு ஓசையே யன்றி அதற்கென்று தனித்த ஓசை இல்லை; இதோடு கூட  இவ்வோசைகள் இல்லாமல் பாட்டினை யாரும் கூற மாட்டார்கள் என்ற ஒரு கூடுதல் குறிப்பினையும் (84) தொல்காப்பியம் தருகிறது. தூக்கு என்பதற்கு ஏன் தொல்காப்பியம் வரையறை தரவில்லை. அப்படித் தராமல் ஏன் தூக்கின் வகைகளை மட்டும் கூறிச் செல்கிறது? இது குறித்து,  பா என்பதற்கு தொல்காப்பியம் என்ன விளக்கம் தருகிறது என்பதைப் பார்த்துவிட்டு அவ்விளக்கத்தையும் உட்படுத்தி விவாதிப்போம்; பா குறித்து தொல்காப்பியம் என்ன கூறுகிறது?:

    தொல்காப்பியம்,

    ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
     நாலியற் றென்ப பாவகை விரியே (செய். 103)

    என்று நான்குவகைப் பாக்களின் விரியைக் கூறிவிட்டு,
    பாக்களின் பொருண்மை பற்றி அடுத்த சூத்திரத்தில்,

    அந்நிலை மருங்கின் னறமுத லாகிய                         மும்முதற் பொருட் முரிய வென்ப (104)

                        என்று கூறுகிறது. அடுத்த இரு சூத்திரங்களில் விரித்துக் கூறிய பாவகையை தொகுத்துக் கூறுகிறது:

                  பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்                        ஆசிரி யப்பா வெண்பா வென்றாங்கு                                        ஆயிரு பாவினு ளடங்கு மென்ப ” (105)                                  ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை
                வெண்பா நடைத்தே கலியென  மொழிப ( 106)

    இதற்கடுத்தடுத்த  சூத்திரங்கள் பாக்களின் பொருண்மைகுறித்துப் பேசி செல்கின்றன. தூக்கிற்கு எழுப்பிய அதே வினாவை நாம் பாவிற்கும் எழுப்ப வேண்டியதிருக்கிறது: ஏன் தூக்கினைப் போல் தொல்காப்பியம் பாவிற்கும் விளக்கம் தராமல் பாவின் விரியையும், தொகையையும் தருகிறது. தொல்காப்பியர் தூக்கு என்பதற்கும் பா என்பதற்கும் இடையே என்ன வித்தியாசத்தைக் காட்டுகிறார்? தூக்கு என்பதையும் பா என்பதையும் ஏன் தனித்தனி உறுப்பாகக் காட்டினார்? ஏனெனில்  தொல்காப்பியர் செய்யுட்களில்  ஓசைகளின் வேறுபாட்டைத் அதாவது செய்யுளின் ஓசைகளைச் சிறப்புத்தன்மையில் குறிக்கத் தூக்கு என்பதையும் பொதுத் தன்மையில்  குறிக்கப் பா என்பதையும் பயன்படுத்துகிறார்.  அதாவது அகவல், அகவல் அல்லாதவை, துள்ளல், தூங்கல் ஆகிய ஓசையின் வெவ்வேறு வகைகளைத்  தனித்தனியே சுட்ட  தூக்கு என்ற உறுப்பைப் படைக்கிறார்; இதனையே நாம்  ”சிறப்பு நிலை” என்கிறோம். ஓசைகளை அகவல் முதலிய தனித்தன்மை கொண்டல்லாமல் அதாவது சிறப்புநிலையில் சுட்டாமல்  ஓசையின் வெவ்வேறு வகைகளின் மொத்தத்துவத்தைக் குறிக்க  ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற பெயர்களைக் கையாள்கிறார்  . இதை நாம் ”பொதுநிலை” என்று கூறுகிறோம்.   தூக்கு ஓசையின் தனித்தன்மையை அறிவுறுத்த உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும், பா செய்யுளின் மொத்தத் தன்மையை அறிவுறுத்த படைக்கப்பட்டது என்பதையும்  பேராசிரியர் தரும் விளக்கங்கள் மூலம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் கூறுவதாவது:

     தூக்கு:

     அகவலோசைக்கண் தூக்குவருங்கால் இருசீர் முதலா எண்சீர்காறும் பரந்துபட்ட அகவலோசையை நாற்சீர்க்கண்ணே துணித்துக்கொள்ள, அஃது ஆசிரியத் தூக்காமென்றவாறு. இருசீரால் துணிப்ப ஆசிரிய வோசையாகாது; முச்சீரால் துணிப்பினும் ஆசிரியவோசையாம்; என்னை? ஈற்றயலடி முச்சீர்த்தாமெனவும் இடையும் வரையாரெனவும் கூறினமையின் அஃதேல் அடிவகையானே அறுதியுணர்த்துமாகலின் தூக்கு எவன் செய்யுமெனின் – அவ்வடியினையுந் தூக்கானன்றி உணர்த்தலாகாது; என்னை? இருசீர் முதலாகப் பலசீர் தொடர்ந்த வழித் தூக்கு அறுப்புக்கொண்டன்றி இத்துணைச்சீர்கொண்ட அடி இஃதென்பது அறியலாகாமையின். அல்லதூஉம், ஆசிரியத்துள் எண்சீர் தொடர்ந்தும் பாச்சென்றவழி அதற்கு வருமெனப்பட்ட முச்சீரடியும் ஐஞ்சீரடியுமாகாது நாற்சீரடி இரண்டென்று அறிதற்குக் கருவி தூக்கென்பது கொள்க. அல்லாக்கால் 

             உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை
             யலங்குகுலை யிந்தின் சிலம்பிபொதி செங்காய்

    என்றவழி, ‘ உள்ளார்’, ‘ முள்ளுடை ‘ என்பன அடியெதுகையாக முச்சீரடியும் ஐஞ்சீரடியு மெனக்கொண்டு மயக்கமாமென்பது.

       நரந்த நாறுந் தன்கையாற்
       புலவுநாறு மென்றலை தைவரு மன்னே

        என்றவழி, எண்சீரான் இரண்டு நாற்சீரடி வந்தனவென்று கோடுமன்றே தூக்கின்றாயினென்பது (பக். 379, சி.கணேசய்யர் பதிப்பு, தொல்காப்பியம் செய்யுளியல் பேராசிரியர் உரை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை: 2007)

     இங்குப் பேராசிரியர் குறிப்பிடும் துணித்தல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அடிகளைத் துணித்து நிறுத்துதல் என்பது பாக்களின் ஓசைக்கு மிகவும் இன்றியமையாதது. அடிகளைத் துணித்து நிறுத்துவதன் மூலமே குறிப்பிட்ட ஓசைகளைப் பெற முடியும் என்று பேராசிரியர் மேலே கண்ட பகுதியில் கூறுவது ஓசையின் சிறப்பு நிலையைக் குறிப்பதாகும். எண்சீர் தொடர்ந்து  அகவற்பா சென்ற வழித் தூக்கு என்ற உறுப்பு இல்லை என்றால் அங்கு ஆசிரிய ஓசையைப் பெற முடியாது.  அங்கு நான்கு சீரில் துணித்து அகவலோசையைப் பெற தூக்கு முக்கியம்.  அடிகளைத் துணித்தல் என்பதே தூக்கின் தனித்தன்மை அல்லது சிறப்புத்தன்மை அதனாலேயே தூக்கு தனி உறுப்பாகத் தொல்காப்பியராலும் நற்றத்தனாராலும், பல்காயனாராலும், யாப்பருங்கலத்தாராலும் கருதப்பட்டது. எனினும் பின்னால் நற்றத்தனாரும் பல்காயனாரும் தூக்கும் பாவும் என்ற ஒன்றே என்று முரண்படுவதையும் யாப்பருங்கல விருத்தி மூலம் அறிய முடிகிறது. அது ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டது. 

    பா என்பதற்கான பேராசிரியர் விளக்கம்: 

    பாவென்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லும் தெரியாமல் பாடமோதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற்கேதுவாகிய பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை. (பக்.205; மேலது)

     இவ்விளக்கம் நமக்கு உணர்த்துவது:  சேட்புலத்தில் இருந்தில் இருந்து   ஒருவர் பாடம் ஓதும்போது  அவர் பாடம் ஓதுவது   இன்னச் செய்யுள் என்பதை ஓசையின் மொத்ததுவத்தை வைத்துப்   அதைக் கேட்பவர் புரிந்து கொள்கிறார் . இவ்விளக்கத்தில்   பேராசிரியர் ஓசையின் மொத்தத்துவமாகிய ‘ பா’ வைப் பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை என்று குறிக்கிறார். இது நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட ஓசைக்குரிய பொது நிலையாகும்.

    இறுதியாக,  தொல்காப்பியர் ஓசையின் சிறப்புத்தன்மையையும், பொதுத்தன்மையையும் விளக்கப் பயன்படுத்திய  உத்தியைத்தான் அமிதசாகரர் தன் யாப்பருங்கல நூலில் பின்பற்றுகிறார். தூக்கும், பாவும் வேறு என்ற சிந்தனையை அவர் தொல்காப்பியர் வழியாகப் பெற்றிருந்தாலும் தூக்கையும் பாவையும் குறிக்க ஏன் இரு சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? இரண்டையும் இரண்டாகக் கருதி ஏன் தனி விளக்கம் தந்து கொண்டிருக்க வேண்டும்? அதனால் பயன் என்ன? அதனால்  கால விரயம்தான் மிஞ்சும்;  பாக்களைக் கூறும் போதே தூக்கு கிடைக்கும் அதனால் தூக்கிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை; அதை ஓர் உறுப்பாகவும் குறிக்கத் தேவையில்லை; தூக்கை ஓர் உறுப்பாகக் கூறி யாப்பு உறுப்புக்களின் எண்ணிக்கையைப் பெருக்காமல் தூக்கே பா என்று கூறுவதே சிறந்தது என்ற சிந்தனை வலுபெற்ற காலக்கட்டத்தைச் சார்ந்தவராக அவர் இருந்ததால் அவர் வாழ்ந்த காலகட்டத்தின் தூக்கு பற்றிய தர்க்கத்தையும் புறக்கணிக்க முடியாமலும் அதே நேரத்தில் தூக்கை முற்றிலும் விட முடியாமலும் இரண்டிற்கும் நடுவே ஊஞ்சல் ஆடிய அமிதசாகரரின் தூக்கு பற்றிய சிந்தனையைத்தான் அவரது நூலில் நாம் காண்கிறோம்.  அதாவது தூக்கு ஓர் உறுப்பாகக் குறிக்கப்பட வேண்டும் அதற்கான அறிவியல் அடிப்படையில் அமைந்த நியாயம் அவரை தூக்கைச் செய்யுள் உறுப்புக்களில் ஒன்றாக யாப்பருங்கலத்தில் குறிக்கச் செய்தது; ஆனால் தூக்கு எனினும் பா எனினும் ஒக்கும் என்ற அவரது காலகட்டத்தின் தர்க்கம் அவரை தூக்கிற்கென்று ‘ தூக்கோத்து’ என்ற தனி ஓத்து அமைக்கவிடாமல் தடுத்து, அதனை செய்யுளியலிலேயே விளக்கும்படிச் செய்தது. எனினும் இது ஆய்விற்குரியது.

    ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள்:

    1. அமிதசாகரர் – யாப்பருங்கலம் விருத்தியுரையுடன் , இரா.இளங்குமரன் பதிப்பு, கழகம், சென்னை: 1976.
    2. அமிதசாகரர் – யாப்பருங்கலக்காரிகை, குணசாகரர் இயற்றிய உரையுடன், உல்ரிக்கே நிகோலஸ் ஆங்கில மொழிபெயர்ப்பு, EFEO, புதுச்சேரி: 1993.
    3. தொல்காப்பிய மூலம் பாடவேற்பாடுகள்: ஆழ்நோக்காய்வு, கே.எம்.வேங்கடசுப்பையா, ச.வே.சுப்பிரமணியன், ப.வெ.நாகராசன், பன்னாட்டுத் திராவிட மொழியியற் பள்ளி, திருவனந்தபுரம்: 1996.

        4. தொல்காப்பியர் – தொல்காப்பியம் செய்யுளியல்
    பேராசிரியர் உரை, சி.கணேசய்யர் பதிப்பு,  உலகத்
    தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை: 2007

    *****

    ஆய்வாளர்
    பிரெஞ்ச் ஆசியவியல் பள்ளி (EFEO),
    புதுச்சேரி.

     

     

     

     

     

     

     

    Share
  • எழுத்திலா ஓசையும்  மாத்திரையும்

    -முனைவர் ம. பிரபாகரன்

    தொல்காப்பியத்தில் மாத்திரை ஓர் அடிப்படைச் செய்யுளுறுப்பாகக் கொள்ளப்பட்டுள்ளது. பிற நூல்களில் மாத்திரை அடிப்படைச் செய்யுள் உறுப்பாகக் காட்டப்படவில்லை.  எழுத்தைக் கூறும்பொழுதே மாத்திரையும் உள்ளடங்கி விடுகிறது; அதனைக் கருத்தில் கொண்டே தொல்காப்பியம் தவிர்த்த மற்ற யாப்பிலக்கண நூல்கள் மாத்திரையை ஓர் உறுப்பாகக் கொள்ளாமல் விட்டிருக்கின்றன எனலாம். தொல்காப்பியர் மாத்திரையைத்  செய்யுளியல் முதல் சூத்திரத்தில் செய்யுளுறுப்பாக கூறிவிட்டு, இரண்டாம் சூத்திரத்தில் மாத்திரைக்கு விளக்கம் கூற வரும்போது,  மாத்திரையின் இலக்கணம்  மேற்கிளந்தனவே அதாவது எழுத்ததிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று கூறுகிறார் (தொல்.செய்.2). அதே போல் தொல்காப்பியர் செய்யுளியல் முதல்சூத்திரத்தில்  எழுத்து என்பதையும் மாத்திரைக்கு  அடுத்து வைத்துக் கூறிவிட்டு, இரண்டாம் சூத்திரத்தில்  அதற்கு விளக்கம் கூறும் பொழுது மாத்திரைக்குக் கூறியது போலவே ‘ மேற்கிளந்தனவே ‘ அதாவது எழுத்ததிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்றே கூறுகிறார்(தொல்.செய்.2).  அதற்குப் பிறகு தொல்காப்பியர்   செய்யுளியலின் பல இடங்களிலும் எழுத்து பற்றி விளக்குகிறார். ஆனால் மாத்திரையைப் பொறுத்த வரை’ மேற்கிளந்தனவே ‘ என்று இரண்டாவது சூத்திரத்தில் கூறிய பிறகு தொல்காப்பியர் செய்யுளியலின்  எந்த இடத்திலும் மாத்திரையைப் பற்றிப் பேசவே இல்லை. மாத்திரையைத் தொல்காப்பியம் முதன் உறுப்பாகக் கூறினாலும் எழுத்திற்கே தொல்காப்பியம் மிகவும் முக்கியத்துவம் தருகிறது. தொல்காப்பியம் எழுத்துவகை அடிகள் கூறியிருப்பது இதற்கு நல்ல உதாரணம் ஆகும். இவ்வெழுத்துவகை அடிகளிலும் மாத்திரையின் முக்கியத்துவத்தை அதாவது ஓரடியில் இத்தனை மாத்திரை உள்ள அடிகள்தாம் வரவேண்டும் என்று தொல்காப்பியர் வலியுறுத்தவில்லை. இங்ஙனம் மாத்திரை என்பது தொல்காப்பியத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறாத உறுப்பாகவே இருக்கிறது. இப்படியிருக்க தொல்காப்பியர் ஏன் மாத்திரையை முதல் உறுப்பாகக் கொள்ள வேண்டும்? மாத்திரையை ஏன் தொல்காப்பியர் ஓர் உறுப்பாகக் கொண்டார் என்பதற்குப் பேராசிரியர் தரும் குறிப்பொன்று நல்லதொரு விவாதத்திற்கு  வழிவகுக்கிறது. அந்தக் குறிப்பாவது:

    இனி ஒருசாரார் மாத்திரையென்றது எழுத்தல்லோசையாகிய குறிப்பிசை கொண்டானென்பர். (தொல்காப்பியம் – பொருளதிகாரம் செய்யுளியல்,பக். 24; 2014, மறுபதிப்பு, மாணவர் பதிப்பகம், சென்னை)

    எழுத்தல்லோசையைக் குறிக்கத் தொல்காப்பியர் மாத்திரை என்பதை பயன்படுத்தியுள்ளார் என்று ஒருசார் ஆசிரியர் கூறுவதாக பேராசிரியர் இவ்வுரைப்பகுதியில் கூறுகிறார். இவ்வாறு கூறும் பேராசிரியர் மாத்திரை என்பது எழுத்தல்லோசையாகிய குறிப்பிசையை குறிக்காது என்று அவ்வொருசார் ஆசிரியர்களை மறுத்தும்  கூறுகிறார்:

    அக்குறிப்பிசை உறுப்பாக வருஞ் சான்றோர் செய்யுள் யாண்டுங் காணாமையின் நாம் அது வேண்டாமாயினாம் (மேலது, பக். 24) பேராசிரியர் கூறும்  எழுத்தல்லோசையை மாத்திரை என்று குறிப்பிடும் ஒருசார் ஆசிரியர் யாரென்று யாப்பிலக்கண வரலாற்றில் அறிய முடியவில்லை. இது குறித்த க.வெள்ளைவாரணரின் கருத்து இவ்விடத்தில் குறிக்கப்பாலதாகும்:

    மாத்திரை என்பதை எழுத்தல்லோசையெனக் கொண்ட ஆசிரியர் பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்களுள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருசார் ஆசிரியர் ” மாத்திரையென்றதனான் எழுத்தல்லோசையாகிய குறிப்பிசை கொண்டானென்பர் ” எனவரும். இவ்வுரைத் தொடர் தொல்காப்பியவுரை யாசிரியர்களுள் ஒருசாரார் கூறிய உரைவிளக்கத்தை யுளத்திற் கொண்டு பேராசிரியரால் எழுதப்பெற்றதென்பது, ‘ நாம் அது வேண்டாமாயினாம் ” எனப் பின்வரும் அவரது உரைத்தொடரால் உய்த்துணரப்படும் (பக், 24 அடிக்குறிப்பு, மேலது). நச்சினார்க்கினியர் இது குறித்து ஒன்றும் கூறவில்லை. மாத்திரை என்பது எழுத்தல்லோசையைக் குறிக்க வாய்ப்புண்டா? இது குறித்து இனி விவாதிப்போம்.

    பேராசிரியர் எழுத்தல்லோசையாகிய குறிப்பிசை உறுப்பாக வரும் செய்யுள் யாண்டும் சான்றோர் இலக்கியங்களில் காணமுடியாமையின் மாத்திரை என்பது எழுதல்லோசையைக் குறிக்காது என்று கூறுவது விவாதத்திற்குரியது. ஏனென்றால் பொதுவாக இலக்கணத்தில் காணப்படும் பல கூறுகளுக்கு இலக்கியம் கிடைக்கவில்லை. உதாரணமாக தொல்காப்பியச் செய்யுளியலில் உள்ள பலவற்றிற்கு உதாரணங்கள் கிடைக்கவில்லை.தொல்காப்பியர் கூறியுள்ள  எழுத்துவகை அடிகளில் ஒரு சில அடிகளைத் தவிர சங்க இலக்கியத்தில் பெரும்பான்மையாக இடம்பெறவில்லை என்பர் ஆய்வாளர்கள். இதேபோல வீரசோழியர் விளக்கியுள்ள ஏழ்வகை பத்தியக் கவிகளுக்கும் இலக்கியங்கள் இல்லை. எனவே பேராசிரியரின் இந்த வாதம் பொருத்தமுடையதாகத் தெரியவில்லை. இத்தொடர்பில் ஒருசார் ஆசிரியர் மாத்திரை எழுத்தல்லோசையைக் குறிக்கும் என்ற கூறிய கருத்து நமக்கு கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டவசமானது; அவர்களின் வாதம் எத்தன்மைத்து, அவர்கள் என்னென்ன உதாரணங்களை எடுத்துக் காட்டினார்கள் என்பது நமக்குக் கிடைத்திருந்தால் இது தொடர்பான ஆராய்ச்சி செய்வதற்கு இன்னும் வசதியாக இருந்திருக்கும். எனினும் இது தொடர்பாக ஏதேனும் முடிவைப் பெற முடியாவிட்டாலும் இந்த விவாதம் இது குறித்த சிந்தனையைத் தூண்டும் என்று நம்புவோம்.

    மாத்திரை மற்றும் எழுத்தல்லோசை ஆகியவை குறித்துக் கிடைக்கும் கருத்துக்களை முதலில் தொகுத்துக்கொள்வோம்:

    யாப்பருங்கல விருத்தி:

    யாப்பருங்கலத்தில் மாத்திரை அடிப்படை உறுப்பாகக் கொள்ளப்படாத போதும் யாப்பருங்கல விருத்தி உரைகாரர் மாத்திரை பற்றி விவரித்துள்ளார்:

    குற்றெழுத்து ஒரு மாத்திரை, நெட்டெழுத்து இரண்டு மாத்திரை அளபெடை மூன்று மாத்திரை எனக் கொள்க. என்னை?

    குறிலொரு மாத்திரை நெடிலிரு மாத்திரை
    அளபெடை மூன்றென் றறியல் வேண்டும் என்பது பல்காயம். ஆகலின்.

    மாத்திரையாவது கண் இமைத்தலொடு கைநொடித்தல் ஒத்த காலம். என்னை?

    கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை
    நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே (தொல் எழுத்து 7)

    என்றார் தொல்காப்பியர். 

    கண்ணிமை கைநொடி என்றிவை இரண்டும்
    மின்னிடை அளவே எழுத்தின் மாத்திரைஎன்றார் சங்க யாப்புடையார்.

    ஒன்றிரண்டு டொருமூன் றொன்றரை அரைகால்
    என்றனர் பொழுதிவை இமைநொடி அளவேஎன்றார் பிறரும்.

    விளி முதலாயினவற்றுள் மூன்று மாத்திரையின் மிக்க பல மாத்திரையானும் அளபெடுத்து வருமாயினும். அவை செய்யுட்களுக்குப் பெரியதோர் உபகாரம்பட நில்லா ஆகலின் அவற்றிற்கு இலக்கணம் எடுத்து ஓதினார் இல்லை எனக் கொள்க.
    …………………………………………………….

    அரைநொடி என்ப தியாதென மொழியின்
    நொடிதரக் கூடிய இருவிரல் இயைபே(பக். 22,23, யாப்பருங்கல விருத்தி, இளங்குமரன் பதிப்பு, கழகம், சென்னை:1976)

    அளபெடையைக் குறித்துப் பேசும்பொழுதும் யாப்பருங்கலவிருத்தி மாத்திரை குறித்து சிந்தித்துள்ளது:

    ” அளபெடையாவன, மாத்திரை குன்றலிற் சீர் குன்றித் தளைகெட நின்றவிடத்து யாப்பழியாமைப் பொருட்டு வேண்டப்பட்டன. என்னை?

    மாத்திரை வகையால் தளைதபக் கெடாநிலை
    யாப்பழி யாமைநின் றளபெடை வேண்டும்என்றார் ஆகலின். (பக். 21: மேலது) 

    யாப்பருங்கலக்காரிகை குணசாகரர் உரை:

    அறிஞருரைத்த அளபும் ‘ என்று சிறப்பித்தவதனால் குற்றெழுத்து ஒருமாத்திரை. நெட்டெழுத்து இரண்டு மாத்திரை. அளபெடை மூன்று மாத்திரை. ஆய்தமும் மெய்யும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் அரைமாத்திரை. ஐகாரகுறுக்கமும் ஒளகாரக் குறுக்கமும் ஒன்றரை மாத்திரை. ஒற்றளபெடை ஒருமாத்திரை. ஆய்த குறுக்கமும் மகரகுறுக்கமும் ஒரோவொன்று கால்மாத்திரை எனக்கொள்க. என்னை, 

    ஒன்றிரண்டொருமூன் றொன்றரை யரைக்கால்
    என்றனர் பொழுதிவை இமைநொடி யளவே

    கண்ணிமை கைநொடி யளவே மாத்திரை
    நுண்ணிதி நுணர்ந்தோர் கண்ட வாறே (தொல். எழுத்7)

    அரைநொடி என்பது யாதென வினவின்
    நொடிதரக் கூடிய இருவிர லளவே (சங்க யாப்பு) 

    ஒற்றுக்கு மாத்திரை யொன்றே அளபெழுந்தாற்
    றெற்றக் குறியது வேயாம் 

    உன்னல் காலே ஊன்ற லரையே
    முறுக்கல் முக்கால் விடுத்த லொன்றேஎன்றாரும் உளரெனக் கொள்க. (பக்.122, 123, யாப்பருங்கலக் காரிகை, வே.பால்ராஜ் பதிப்பு, காவ்யா பதிப்பகம், சென்னை: 2007)

    பேராசிரியர்: மாத்திரை எழுத்தினது குணமாகலானும் அசையும் சீரும் அடியும் தூக்கும் பாவும் வண்ணங்களும் என்ற இன்னோரன்ன எல்லாம் மாத்திரை நிமித்தமாகத் தோன்றுவன ஆகலானும் மாத்திரை முன்னர் வைக்கப்பட்டது (தமிழ் இலக்கணப் பேரகராதி, பொருள்-யாப்பு 2,தமிழ்மண் பதிப்பகம், சென்னை, பக் 119:2005)

    நச்சர்: மாத்திரையானல்லது செய்யுள் வேறுபாடு உணரலாகாமையின் மாத்திரை செய்யுளுறுப்புகளில் முதலாவதாகக் கூறப்பட்டது. (மேலது, பக்.121)

    மேற்கண்ட  விளக்கங்களில் மாத்திரை என்பதற்கு எழுத்துக்களின் கால அளவு என்பதே பொருளாகக் கூறப்பட்டிருப்பதையும் இவ்விளக்கங்களில் எங்கும் மாத்திரை என்பதற்கு எழுத்தல்லோசை என்ற பொருள் இடம்பெறாமையையும் காண்க. இனி நிகண்டுகளில் மாத்திரை என்பதற்கு எழுத்தல்லோசை என்ற பொருள் காணப்படுகிறதா? எனக் காணலாம்:

    சேந்தன் திவாகரம்:

    அளவு:    மாத்திரை

    1. ”தாறு, கால், மாத்திரை, வரை, துணை, நேரம்
    2. காறு, பரிமாணம், அவதி, அளவு ஆகும்”

    இங்கு அளவு என்பதற்கு மாத்திரை பெயராகச் சுட்டப்பட்டிருக்கிறது. இங்கும் எழுத்தல்லோசை பற்றிய குறிப்பு இல்லை.

    பிங்கல நிகண்டு:

    அளவு: மாத்திரை,

    1. தனையுங் காறுங் தாறுந் துணையும்
    2. வரையும் பிரமாணமு மாத்திரையு மட்டு
      மளவின் பெயரென் றறைந்தனர் புலவர்

    மாத்திரை- கால நுட்பம்

    கலையும், துடியும், கணமும், மாத்திரையும்,
    நொடியும், பிதிரும், நுட்பமும், திட்பமும்
    நிமிடமும், கால நுட்பம் (ஆகும்)
    மாத்திரை- காலவிரைவு

    2.189. கணமும் மாத்திரையும் கால விரைவே

    இந்தப் பிங்கல நிகண்டு சூத்திரங்களில் மேலே கண்ட  சேந்தன் நிகண்டு போலவே  அளவு என்பதற்கு மாத்திரை குறிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மாத்திரை என்பதற்குக் காலநுட்பம் மற்றும் காலவிரைவு என்பது குறிக்கப்பெற்றுள்ளது. இங்கும் காலம் தொடர்பான பொருளே மாத்திரை என்பதற்கு குறிக்கப்பெற்றுள்ளது.

    சூடாமணி நிகண்டு:

    மாத்திரை

    1. 89. ஒல்லையே, இறையே, (உற்ற
      சிறுவரையறை(யுடன்) இலேசம்
      வல்லை, மாத்திரை(கள்), கால
      விரைவின் (பேர் வகுக்கில் ஆறாம்)

    இந்தச் சூடாமணி நிகண்டுச் சூத்திரத்திலும் திவாகரம் பிங்கல நிகண்டுகளைப்  போலவே மாத்திரை என்பதற்கு கால விரைவு குறிக்கப்பெற்றுள்ளது.

    இனி எழுத்தல்லோசை என்பதற்குரிய பொருள் இலக்கணங்களிலும், நிகண்டுகளிலும் காணப்படும் தன்மையைக் குறித்து பார்ப்போம்: 

    யாப்பருங்கல விருத்தி:

    எழுத்து ஓசையல்லாத ஏனைய ஓசைகளாகிய முற்கும் வீளையும் இலதையும் அநுகரணமும் முதலியன. அவை செய்யுட்கண் வந்தால் அவற்றையும் செய்யுள்நடை அழியாமல் அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் பிழையாமைக் கொண்டு வழங்கப்படும்.

    முற்கு – முக்குதல்; வீளை-சீழ்க்கை அடித்தல்;

    இலதை – கோழையை வெளிப்படுத்தல்: அநுகரணம் – போலச் செய்வது; அஃதாவது வேறொன்று செய்வது போலச் செய்யும் ஒலிக்குறிப்பு; பறவை கத்துவது போலவும் விலங்கு ஒலிப்பது போலவும் ஒலித்தல் முதலியன.

    எ-டு  ‘ மன்றலங் கொன்றை மலர்மிலைந் துஃகுவஃ
    கென்று திரியும் இடைமகனே – சென்று
    மறியாட்டை உண்ணாமல் வண்கையால் வல்லே
    அறியாயோ அண்ணாக்கு மாறு ‘

    என ‘ உஃகுவஃகு ‘ என்று வருதல் போல்வன. இவை இடைக்காடர் பாடிய ஊசிமுறியுள் காணப்படும். ‘ ஊசிமுறி ‘  எழுத்தாணியால் முறையாக எழுத முடியாத எழுத்தல்லாத ஒலிகள் எழுதப்பட இயலாமல் ஓராற்றான் குறிப்பிடப்பட வேண்டுதலின் பெற்ற பெயர். ஊசி- எழுத்தாணி; முறி- தடுமாறச் செய்தல் (பக். 146,தமிழ் இலக்கணப் பேரகராதி)

    எழுத்தல் ஓசையைப் பற்றி கிடைக்கும் விரிவான குறிப்பு இதுவே ஆகும். மேலே கண்ட பகுதியில் குறிக்கப்பெற்ற ஊசிமுறி என்ற நூல் தற்போது கிடைக்கவில்லை. அது கிடைத்திருந்தால் எழுத்தல்லோசை குறித்த கூடுதல் செய்தி நமக்கு கிடைத்திருக்கும்.

    இனி நிகண்டுகளில் இந்த எழுத்தல்லோசை குறித்து கூறப்பட்டுள்ள தன்மையைக் காண்போம்: 

    சேந்தன் திவாகரம்:

    அகவல்: ஆசிரியம், எழுத்திலாவோசை

    1. அகவலும் தொகையும் ஆசிரியப் பாவே

    1897 பிளிறலும் குளிறலும் பிரற்றலும் சிரற்றலும்
    மருளலும், பயிறலும், குரைத்தலும், கனைத்தலும்
    முளைத்தலும், அகவலும் எழுத்திலா ஓசை (தமிழ் நிகண்டுகள் தொகுதி -1, ச.வே.சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம்:2008)

    இங்கு  பிளிறல், குளிறல் பிரற்றல், சிரற்றல், மருளல், பயிறல், குரைத்தல், கனைத்தல், முளைத்தல், அகவல் என்பவை எழுத்திலா ஓசையனவாக குறிக்கப்பட்டுள்ளன. இங்கு மாத்திரை என்பது இடம்பெறவில்லை குறிப்பிடத்தக்கது. ஆனால் இங்கு  எழுத்திலா ஓசைக்கு அகவல் என்ற பொருள் குறிக்கப்பட்டிருப்பதைக் காண்க.பிங்கலத்தில், சேந்தன் திவாகரம் குறிப்பிட்டுள்ள எழுத்திலா ஓசை என்பது எடுத்தல் ஓசை என்று பதிவாகியுள்ளது. பிங்கலம்,  சேந்தன் திவாகரம் எழுத்திலா ஓசை என்று குறிப்பிட்டுள்ள ஒலிகளோடு சிலவற்றை விட்டுச் சிலவற்றை கூடுதலாக சேர்த்து,   எடுத்தல் ஓசை என்று கூறுகிறது. இது குறித்த பிங்கல நிகண்டு பகுதியாவது:

    அகவல்- எடுத்தல் ஓசை

    1. முரல்வும், நரல்வும், முக்கலும், பயிறலும்
      தெளிறலும் ஞெளிர்தலும், சிரற்றலும், பிரற்றலும்
      குளிறலும், குமுறலும், குருமித்தலும், நெளிர்தலும்
      அகவலும் எடுத்தல் ஓசைப் பெயரே (தமிழ் நிகண்டுகள் தொகுதி -1, ச.வே.சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம்:2008)

    அகவல் தொடர்பாக சேந்தன் திவாகரத்தையும், பிங்கலத்தையும் இவ்விடத்தில் ஒப்பிடுவது பயனுடையதாக இருக்கும்:

    எழுத்தில்லோசை

    சேந்தன் திவாகரம் (எழுத்திலா ஓசை)          பிங்கலம் (எடுத்தல் ஓசை)

    பிளிறல்        முரல்வு

    குளிறல்       நால்வு

    பிரற்றல்       முக்கல்

    சிரற்றல்       பயிறல்

    மருளல்        தெளிறல்

    பயிறல்         ஞெளிர்தல்

    குரைத்தல்   சிரற்றல்

    கனைத்தல் பிரற்றல்

    முளைத்தல் குளிறல்

    அகவல் குமுறல்

    குருமித்தல்

    நெளிர்தலும்

    அகவல்

    சூடாமணி நிகண்டிலும் எடுத்தலோசை விளக்கப்பட்டுள்ளது (சூத்.718, தமிழ் நிகண்டுகள் தொகுதி -1, ச.வே.சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம்:2008). ஆனால் அது தரும்  எடுத்தலோசையில் அகவல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சூடாமணி நிகண்டு காட்டும் எடுத்த லோசையைக் கீழ்கண்டவாறு அட்டவணைப் படுத்தலாம்:

    எடுத்தல் ஓசை

    சூடாமணி நிகண்டு

    தெளிறல்

    முரலல்

    முக்கல்

    சிரற்றுதல்

    பயிலல்

    குளிறல்

    நரலல்

    குருமித்தல்

    நெளிர்தல்

    பிளிறல்

    உளை

    பிரற்றல்

    நாம் மேலே கண்ட எழுத்திலா ஓசை என்பதும் எடுத்தல் ஓசை என்பதும் பாடவேறுபாடா? என்பது தெரியவில்லை. பாட வேறுபாடாக இருப்பின்  இவ்விரண்டின் பொருளும் ஒன்றா? வேறு வேறா? என்பது பற்றி ஒன்றும் கூற இயலவில்லை. இனி அடுத்து நாம் விவாதிக்க வேண்டியது, எழுத்திலா ஓசையைக் குறிக்க ஏன் அகவல் என்பது சுட்டப்படுகிறது? இங்கு அகவல் என்பது ஒருவகை ஓசை என்பது புரிகிறது. ஆனால் இது ஆசிரியப்பாவின் ஓசையா? என்ற கேள்வியும் இத்துடன்  எழுகிறது. அகவல் என்பதற்கு என்ன பொருள் நிகண்டுகளில், அகராதிகளில்  கொடுக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் பார்க்க வேண்டும். அழைத்தல் என்பதன் ஒரு பெயரே அகவல் என்று பொருள் தருகின்றது பிங்கல நிகண்டு:

    7: 238. கேதல், உளைத்தல், இகுத்தல், விளித்தல்
    மாஎனல், கூவுதல், வாஎனல், மத்தல்
    கரைதல், ஆகருடணை (இவையே அன்றி)
    அகவல் (என்பதும்) அழைத்தல் (ஆகும்) (சாந்தி சாதனா, சென்னை: 2000)

    அழைத்தல் என்பதன் பெயராகிய  அகவல் என்பதற்கும் யாப்பில் வரும் ஆசிரியப்பாவிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?  என்ற கேள்வியை இங்குக் கேட்டுவைத்துக்கொள்வோம். இனி அகவல் என்பதற்கு என்ன பொருள் நிகண்டுகளில் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பார்போம்.

    பிங்கல நிகண்டு:

    அகவல் – மயிற்குரல்

    8.8. அகவல், ஆலல், ஏங்கல், மயில்குரல் (சாந்திசாதனா, சென்னை: 2000)

    இங்கு அகவல் என்பதற்கு ஆலல், ஏங்கல், மயிற்குரல் என்ற மூன்று பொருளை பிங்கல நிகண்டு தருகிறது. இங்கு அகவல் என்பதற்கு மயில்குரல் என்ற பொருள் இடம்பெற்றிருப்பது கவனிக்கத் தக்கது. இந்த மயிற்குரல் அகவல் யாப்போடு ( ” அழைத்தல் ” என்னும் பொருளில்) தொடர்புடையதாக இருப்பது க.கைலாசபதி அவர்களால் தன் தமிழில்  வீரநிலைக் கவிதை என்ற நூலில் கூறப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் கூறுவதாவது:

    ”அகவுநர், அகவலர் அல்லது அகவர் என்னும் சொற்கள், மயிலைப் போல் ஒலியெழுப்பிப் பாடு, அழை, கூவு எனப்பொருள்படும் ‘ அகவு ‘ என்னும் பொருளடியாகத் தோன்றின” (குமரன் புத்தக இல்லம், பக் 158: 2006).

    இதன் மூலம் அகவல் என்பது அழைத்தல் என்ற பொருளுடையது  என்பதைத்  தெரிந்து கொள்கிறோம். ஏற்கெனவே நாம் கேட்டுவைத்திருந்த கேள்வியாகிய அழைத்தல் என்பதன் பெயராகிய  அகவல் என்பதற்கும் யாப்பில் வரும் ஆசிரியப்பாவிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?  என்பது குறித்து இனிப்பார்க்க வேண்டும். அகவல் அல்லது அழைத்தல் என்பதற்கும் யாப்பில் வரும் அகவல்பாவிற்கும் தொடர்பு உண்டு என்பதைக் கைலாசபதியின் கீழ்வரும் கூற்று உறுதிசெய்கின்றது:

    அகவல் என்பதற்கு அழைத்தல் என்பது பொருள். மகள் என்பது பெண்ணைக் குறிக்கும். இப்புலமகள் தன்மீது தோன்றும் தெய்வத்தை அழைப்பதாக இதனைக் கருதலாம். (பக். 95 மேலது).

    அகவுநர், அகவலர் அல்லது அகவர் என்னும் சொற்கள், மயிலைப் போல் ஒலியெழுப்பிப் பாடு, அழை, கூவு எனப் பொருள்படும் அகவு எனும் இச்சொல் அழைப்பவர், கூப்பிடுபவர் என்ற நேர் பொருளை உடையது (பக். 158, மேலது)

    இதனை மனத்தில் இருத்திக்கொண்டு இனி,  அகவுநரோடு; அவர்கள் பாடும் அகவல் பாட்டோடு, மாத்திரை என்பது தொடர்புபட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம். அகவலுக்கும் மாத்திரைக்கும் உள்ள தொடர்பு கைலாசபதி தரும் ஒரு குறிப்பு வழியாக நம்மால் ஊகிக்கமுடிகிறது. அவர் அகவுநர்கள் பாடும்போது கையில் மாத்திரைக் கோல் ஒன்று வைத்திருப்பர் என்று கூறுகிறார். இம்மாத்திரைக்கோல் என்பது அகவுநர்கள் அகவல் ஓசையை எழுப்பிப்பாடும்போது அவ்வோசையை குறிப்பிட்ட  கால அளவுக்குள்  உட்படுத்தி அல்லது கட்டுப்படுத்திப் பாடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். எனவே இந்த  அகவல் என்பது மாத்திரையோடு தொடர்புபட்டதாக அமைகிறது. ஆனால் அகவுநர்கள் பயன்படுத்தும் இந்தக் காலஅளவு என்பது புலமைநிலை படுத்தப்பட்ட, தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள  மாத்திரைக்கு முன்னோடியாக அமைந்தது எனலாம். அதாவது அகவல் என்பது எப்படிப் புலமைநிலையில் அமைந்த ஆசிரியத்திற்கு முன்னோடியாக அமைந்ததோ அதுபோல இந்த அகவுநர் மாத்திரைக்கோலைக் கொண்டு  அளவிட்ட  கால அளவு அல்லது மாத்திரை தொல்காப்பியம் போன்ற புலமைமரபில் பயன்படுத்தப்பட்ட மாத்திரைக்கு முன்னோடி என்று கொள்ள வேண்டும். இப்போது இவ்விடத்தில் நாம் மேலே குறிப்பிட்ட  கைலாசபதியின்  மாத்திரைக்கோல் குறித்த கூற்றை எடுத்துக்காட்டுவது பயனுடைதாக இருக்கும்:

    முற்குறித்த நோக்கின் தெளிவில், சில பாடல்கள் இப்பாணர்கள் இசைக் கருவிகளுக்குப் பதிலாக ஒரு மாத்திரைக்கோல் அல்லது கைத்தடியினைக் கொண்டிருந்தனர் என்று கூறுவது ஆர்வமாக நோக்குதற்குரிய கருத்தாகும். இதற்குரிய தமிழ்ச்சொல் ‘ கோல்’ என்பதன் பொருள் தடி, குச்சி, கிளை, கைக்கோல் என்பன. நன்கு துண்டிக்கப்பட்ட மெல்லிய கோல் ஒன்றைக் கையில் கொண்டு பாணர்கள் வெற்றி பெற்றோரைப் போர்களங்களில் புகழ்ந்தனர். மற்றொரு செய்யுளில், இக்கோல் நீண்ட மூங்கில்கள் வளருமிடத்திலிருந்து, ஒல்லியான கணுக்களைக் கொண்ட மூங்கில் தேர்ந்தெடுக்கப்பட்டு நன்கு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.. ஒல்லியான கோல் எனப்பொருள்படும் ‘ நுண்கோல் ‘ என்ற பெயர் அகவுநர் என்ற பெயரோடு முன்னொட்டாகச் சேர்க்கப்பட்டு ‘ ஒல்லியான கோல் கொண்ட பாணர் ‘ என்ற பொருளைத் தருகிறது. (பக். 160; மேலது)

    இங்கு மாத்திரைக் கோல் என்பது அகவுநரோடு தொடர்புபடுவதைக் காணலாம்.

    மேற்கண்ட கருத்துக்கள் வழி அகவலுக்கும் மாத்திரைக்கும் இடையே உள்ள தொடர்பை விளங்கிக்கொள்ளலாம். எழுத்திலா ஓசையும் அகவலாகக் குறிக்க பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.  அகவல் என்பது ஓசையே ஆகும்; அது  எழுத்திலா ஓசையாகவும் எழுத்துள்ள ஓசையாகவும் ( ஆசிரியப்பா) இருந்திருக்க வேண்டும். எழுத்திலா ஓசை எழுத்துள்ள ஓசையை விட காலத்தாற் முந்தியது எனக்கொள்ளலாம். மாத்திரை அல்லது  காலஅளவைப்  பயன்படுத்தியே எழுத்திலா (அகவல்) ஓசை அளக்கப்பட்டிருக்கிறது என்று ஊகிப்பது தவறாகாது. இதன் மூலம் பேராசிரியர் குறிப்பிடும் மாத்திரை என்பது எழுத்திலா ஓசையை குறித்தது என்ற ஒருசாராரின் கருத்து வலுவுடைத்தாக தோன்றுகிறது. இது மேலும் ஆய்விற்குரியது.

    ******

    சான்றாதார நூல்கள்:

    1. வெள்ளை வாரணர். க – தொல்காப்பியம் – பொருளதிகாரம் செய்யுளியல் உரைவளம், மறுபதிப்பு, மாணவர் பதிப்பகம், சென்னை.
    2. இளங்குமரன் இரா – யாப்பருங்கல விருத்தி, கழகம், சென்னை:1976
    3. வே.பால்ராஜ் பதிப்பு- யாப்பருங்கலக் காரிகை, காவ்யா பதிப்பகம், சென்னை: 2007
    4. கோபாலய்யர் தி.வே – தமிழ் இலக்கணப் பேரகராதி, பொருள் யாப்பு -1,தமிழ்மண் பதிப்பகம் சென்னை: 2005.
    5. சுப்பிரமணியன் ச.வே. – தமிழ் நிகண்டுகள் தொகுதி -1, மெய்யப்பன் பதிப்பகம்,சிதம்பரம்: 2008.
    6.  திவாகரம்-பிங்கலம்- சூடாமணி, சாந்தி சாதனா, சென்னை: 2000
    7. கைலாசபதி.க – தமிழ் வீரநிலை கவிதை, குமரன் புத்தக இல்லம் : 2006)

    ******

    கட்டுரையாசிரியர்
    ஆய்வாளர்,
    EFEO,
    புதுச்சேரி.

     

     

     

     

     

    Share