தினமும் யோகா செய்யுங்கள் மன நிம்மதி கிடைக்கும் – காவல் ஆய்வாளர் பேச்சு
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சர்வேதச யோகா தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் முத்துகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,உடற்கல்வி முக்கியம் ஆகும்.பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.உடற்பயிற்சி செய்யும்போது பல நல்ல விசயங்கள் நமது மனதுக்கும்,உடலுக்கும் கிடைக்கும்.மாணவர்களாகிய நீங்கள் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதற்கும்,யோகா செய்வதற்கும் இந்த சிறு வயதில் பழகி விட்டால் உங்களின் வாழ்க்கை பிற்காலத்தில் பிரகாசமாக இருக்கும்,தினமும் யோகா செய்யுங்கள்.மன நிம்மதி அடையுங்கள்.பெற்றோர் ,பெரியவர்கள் சொல்லும் நல்ல விசயங்களை கடைபிடியுங்கள்.உங்களின் பள்ளி ஆசிரியர்கள் உங்களுக்கு பல வழிகளில் நல்ல வாழ்க்கைக்கு வழிகாட்டுவார்கள்.அவற்றை பயன்படுத்தி வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள்.என்று பேசினார்.விழாவில் மாணவர்கள் ராஜேஷ்,ரஞ்சித்,விக்னேஷ்,ஆகியோர் பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்தனர்.யோகா தொடர்பாக ஆங்கிலத்தில் மாணவர் ரஞ்சித்தும்,தமிழில் மாணவர் விக்னேஷும் பேசினார்கள்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா செய்து இருந்தார்.விழா நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. தேவகோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துகுமார் யோகா தினம் தொடர்பாக பேசினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் உடன் உள்ளார்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களில் வீணாவதிலிருந்து செலவு எதுவும் இல்லாமல் நல்ல பொருள்கள் தயாரித்துப் பயன்படுத்தும் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சிக்கு வந்தவர்களை மாணவர் ஜெகதீஸ்வரன் வரவேற்றார். தேவகோட்டை சரக உதவித் தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி கண்காட்சியைத் தொடக்கி வைத்து தலைமை தாங்கிப் பேசுகையில், மாணவர்கள் அனைவரும் நமக்குத் தேவை இல்லாமல் உபயோகப்படாமல் உள்ள பொருள்களில் இருந்து நல்ல பொருள்களாக மாற்றி நன்றாகக் கொண்டு வந்துள்ளீர்கள். நமக்குத் தேவை இல்லை என நினைக்கும் பொருள்கள் நமக்குப் பல வழிகளில் பயன்படுவதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனப் பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.
1ம் வகுப்பில் மாணவி திவ்யஸ்ரீ தென்னங்குச்சி, தெர்மோகோல் கொண்டு கிளிக்கூண்டு, சுத்தியல், துப்பாக்கி ஆகியவற்றையும்
2ம் வகுப்பு மாணவன் வெங்கட்ராமன் தேங்காய் மூடி, பட்டன் கொண்டு ஆந்தையும்
3ம் வகுப்பு மாணவி ஜனஸ்ரீ அரச இலை கொண்டு யானை உருவமும்
4ம் வகுப்பு மாணவி வள்ளியம்மை தண்ணீர் டப்பாவில் தராசும்
5ம் வகுப்பு மாணவி காயத்ரி முட்டைக் கூடு கொண்டு பூங்கொத்து, பொம்மை ஆகியவற்றையும்
6ம் வகுப்பு மாணவன் சஞ்சய் தண்ணீர் டப்பாவில் பூங்கொத்தும்
7ம் வகுப்பு மாணவி எழுதும் மேசையை காலண்டர் அட்டை கொண்டும்
8ம் வகுப்பு மாணவி அட்டை, குச்சிகள் கொண்டு தபால் பெட்டியும்
செய்து முதல் பரிசினை பெற்றனர். கண்காட்சிக்காக 100க்கும் மேற்பட்ட பொருட்களைச் செய்து கொண்டு வந்தனர்.
ஆசிரியை முத்து லெட்சுமி, முத்து மீனாள், வாசுகி ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.
நிறைவாக மாணவி சக்தி நன்றி கூறினார்.
பட விளக்கம் :
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கழிவிலிருந்து செல்வம் கண்காட்சியை தேவகோட்டை உதவித் தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.
சுட்டி கிரியேசன்ஸ் அழகிய தங்க மீன் வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு
சுட்டி விகடன் 15/12/2015 இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான அழகிய தங்க மீன் வடிவத்தை உருவாக்கிக் காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் .
சுட்டி கிரியேசன்ஸ் அழகிய தங்க மீன் வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் . நேரடியாகப் புத்தகத்தை பார்த்துச் செய்தபோது எடுத்த படம்.
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் தின நாள் விழிப்புணர்வு நடைபெற்றது.
விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் உலக எய்ட்ஸ் தினம் தொடர்பாகவும், நல்ல பழக்கங்களை சிறு வயதிலேயே கற்று கொள்ளவேண்டும் என்றும், எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோய் இன்று மேலாண்மை செய்ய கூடிய வகையில் நம் நாட்டில் உள்ளது. பருவ வயதில் வரக்கூடிய மன பதட்டங்களை எதிர்கொள்ள ஆசிரியரின் உதவியுடன் நல்ல பழக்கங்களை பழகிக் கொண்டாலே எந்த நோயும் வராது என்று பேசினார். மாணவர் முனீஸ்வரன், மாணவிகள் சௌமியா, தனம் ஆகியோர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். நிறைவாக ஆசிரியை கலாவல்லி நன்றி கூறினார்.
பட விளக்கம் :
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் தின விழாவில் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் பேசினார்.
உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம்
அறம் செய விரும்பு திட்டத்தின் மூலம் சிவகங்கை மாவட்டம் குக்கிராமத்தின் அரசு நடுநிலைப் பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் உதவி:
“ஆனந்த விகடன் – ராகவா லாரன்ஸ்” ஆகியோரின் “அறம் செய விரும்பு” திட்டத்தின் கீழ் அறம் செய விரும்பு திட்டத்தில் உதவி கோரிய சிவகங்கை மாவட்டம் …
காரைக்குடியில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சக்கோட்டை ஒன்றியம் நேமம் பழையூர் என்கிற ஊரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு 50 லிட்டர் நல்ல தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது. அந்த தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மாட்டுவதற்கு பணியாளர் அவர்கள் சென்னையில் இருந்து வந்து பகல் முழுவதும் வேலை செய்தார்.
பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அந்த ஊரில் கடைகள் இல்லாத நிலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழசிவல்பட்டி என்கிற ஊருக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொடுத்து மிகுந்த உதவியாக இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்பு தலைமை ஆசிரியர் திரு.ரவிச்சந்திரன் அவர்களும், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளும், மாணவர்களும் எங்களை இன் முகத்துடன் வரவேற்றனர். தண்ணீரைக் குடித்து விட்டு அருமையாக இருப்பதாகச் சொன்னார்கள். மாணவர்களின் முகத்தில் அவ்வளவு சந்தோசம். அதனை விட தங்கள் மாணவர்களுக்கு நல்ல தண்ணீர் கிடைத்து விட்டதைப் பார்த்து தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் மிகுந்த சந்தோசம். அதனைக் கண்ட நமக்கும் சந்தோசம்.
படக்குறிப்பு: பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் திரு. ரவிச்சந்திரன் அவர்களும் மாணவர்களும்
லெ. சொக்கலிங்கம்,
அறம் செய விரும்பு – தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையால் நடத்தப்படவுள்ள தேசிய போட்டிக்கு மாணவர்களைப் பள்ளி அளவில் தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.
மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையால் கட்டுரை மற்றும் ஓவியம் தொடர்பாக போட்டிகள் பள்ளி அளவில் நடத்தப்பட்டன. பெட்ரோல் மற்றும் எரிவாயு ஆகிய இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் ஓவிய போட்டியும், நான் எவ்வாறு பெட்ரோலிய பொருள்களைப் பாதுகாப்பது, சேமிப்பது, தேசிய அளவில் இதனைப் பாதுகாப்பது தொடர்பாக எவ்வாறு எடுத்துச் செல்வது என்கிற தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன. 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்தப் போட்டியில் பள்ளி அளவில் கலந்துகொண்ட 70 க்கும் மேற்பட்ட மாணவர்களில் மாநில அளவில் கலந்துகொள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
போட்டிக்கான நிகழ்ச்சியில் மாணவர் ரஞ்சித் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியை முத்து மீனாள் போட்டிகளை நடத்தினார். போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளில் மூவரைத் தேர்வு செய்து பரிசு வழங்கப்பட்டது.
கட்டுரைப் போட்டியில் 8ம் வகுப்பு மாணவர் கண்ணதாசன் முதல் பரிசும், 7ம் வகுப்பு மாணவி தனலெட்சுமி இரண்டாம் பரிசும், அதே வகுப்பு மாணவி பார்கவி லலிதா மூன்றாம் பரிசும் பெற்றனர்.
ஓவிய போட்டியில் 8ம் வகுப்பு மாணவி தனம் முதல் பரிசையும், 7ம் வகுப்பு மாணவி பிரவீணா இரண்டாம் பரிசையும், அதே வகுப்பு மாணவர் பரத்குமார் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
நிறைவாக மாணவர் ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.
பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையால் நடத்தப்படவுள்ள கட்டுரை மற்றும் ஓவிய போட்டிக்கு தகுதி போட்டி பள்ளி அளவில் நடத்த பட்டது.
பறவைகளுக்கு உணவு தரும் பழ மரங்களை நடுங்கள் … பறவைகள் ஆர்வலர் பேச்சு …
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பறவைகள் அறிமுகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பெண் மருத்துவர் பார்கவி முன்னிலை வகித்தார். பறவைகள் ஆர்வலர் பிரசன்னா சிறப்புரை நிகழ்த்தும்போது பறவைகள் பற்றியும் அவற்றின் நன்மைகள் பற்றியும், காடுகளில் அதிகமான மரங்கள் வளர்வதற்குப் பறவைகள்தான் காரணம் என்பது பற்றியும், மரம் நடும்போது பறவைகளுக்கு உணவு தரும் பழ மரங்களை நடுங்கள் என்றும், இருவாட்சி, கொக்கு, தையல்கார குருவி, மான் சிட்டு, தவிட்டுக் குருவி, மீன் கொத்தி, கிளி வகைகள், மரங்கொத்தி போன்ற பறவைகளின் படங்களை காண்பித்தும், அதன் குணங்களை தெரிந்து கொள்ள செய்தும் விளக்கிப் பேசினார்.
மேலும் பேசுகையில், மனிதன் இல்லாமல் பறவைகள் வாழ முடியும். ஆனால், பறவைகள் இல்லாமல் மனிதன் வாழமுடியாது. எனவே பறவைகள் அழியாமல் பாதுகாக்க பழம் தரும் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவிகள் பரமேஸ்வரி, தனலெட்சுமி, சந்தியா, ராஜலெட்சுமி, கார்த்திகா, கிருத்திகா; மாணவர்கள் ஜீவா, ரஞ்சித், ராஜேஷ் ஆகியோர் பறவைகள் தொடர்பாகக் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர். நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பறவைகள் அறிமுகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சியினை பறவைகள் ஆர்வலர் பிரசன்னா விளக்கிக் கூறினார்.
உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம்.
விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? தீயணைப்பு அதிகாரி செயல் முறை விளக்கம்:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி பள்ளி மாணவர்களுக்குச் செயல் முறை விளக்கம் அளித்தார்.
தீபாவளி பண்டிகையின் போது பள்ளி மாணவர்கள், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? என்பது குறித்து தேவகோட்டை தீயணைப்பு நிலையத்தின் சார்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் செயல் விளக்கப் பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்குப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியை கலாவல்லி வரவேற்புரை வழங்கினார்.
இதில் தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி கருப்பையா பள்ளி மாணவ-மாணவிகள் எப்படி தீபாவளி பண்டிகையின் போது பாதுகாப்பாகப் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்? என்பது குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தார். மேலும் பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைக்க வேண்டும்? எப்படி பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும்?என்பதையும் விளக்கிச் சொன்னார்.
பின்னர் விழாவில் தீயணைப்பு அதிகாரி கருப்பையா பேசியதாவது; சீன பட்டாசு வேண்டாம். பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் குழந்தைகள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பெரியவர்களின் மேற்பார்வையில் வெடிக்க வேண்டும். பெற்றோர்கள் சீன பட்டாசுகளை வாங்கித் தரவேண்டாம். தீ விபத்தை A,B,C,D,E என வகைப் படுத்துகின்றனர்.
A என்பது எரிந்து சாம்பலாகி தண்ணீர் ஊற்றி அணைப்பது ஆகும்.
B என்பது ஆவியாகி எண்ணெய்யில் பட்டுத் தீ பிடிப்பது ஆகும். இதனை மணல் போட்டு அணைத்தல் வேண்டும்.
FIRE விளக்கம்:
FIRE என்பதில் F என்கிற எழுத்துக்கு தீயை கண்டுபிடி- Find
I என்ற எழுத்துக்கு தீயை தெரியப்படுத்துதல் – Inform
R என்ற எழுத்துக்கு தீயில் இருந்து காப்பாற்றுதல் – Rescue
E என்ற எழுத்துக்கு தீயில் இருந்து வெளி ஏறுதல் – Escape/Exit
என்கிற விளக்கத்தைக் கொடுத்தார்.
மாணவர்கள் வெடி வெடிக்கும்போது அம்மா அப்பாவைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு வெடிக்கவும்.
வெடிக்காத வெடியைக் கையில் எடுக்கக் கூடாது .
ராக்கெட் வெடி வாங்க வேண்டாம்.
குப்பைகளைப் பக்கத்தில் போட்டு வெடிக்க வேண்டாம்.
இறுகிய உடைகளைப் போட்டு கொண்டு வெடி வெடிக்க வேண்டும்.
தீ பிடித்து விட்டால் வாளி தண்ணீரை அப்படியே ஊற்றாமல் கப்பில் அள்ளித் தெளிக்க வேண்டும்.
மேலும் தீ காயங்களின் வகைகளையும், தீ காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தேவகோட்டை தீயணைப்பு நிலையத்தைச் சார்ந்த, கனகராஜ் பாலமுருகன் வழங்கினார்கள். ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டு செயல் விளக்கத்தைப் பார்த்து பயன் பெற்றனர்.
நிகழ்ச்சியில் பரமேஸ்வரி, தனம், ரஞ்சித், காயத்ரி, கார்த்திகா, பிரவீணா, ராஜலெட்சுமி, பரத், ராஜேஸ்வரி உட்பட பல மாணவ, மாணவியர் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர். மாணவ,மாணவியர் இனி வரும் தீபாவளி பண்டிகை அனைத்தையும் விபத்தில்லா தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடுவோம் என உறுதி எடுத்துக் கொண்டனர். நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
பட விளக்கம் :
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி கருப்பையா பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம்
மாநில அளவில் நடைபெற்ற நியூஸ் 7 சேனலில் தனியார் பள்ளிகளுக்கு இணையாகப் போட்டி போட்டு வெற்றி பரிசாக ரூபாய் 5,000 பணமும், சான்றிதழும் பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி முதலாம் ஆண்டு நிறைவு பேச்சு போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் சார்பாக நடைபெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழா பேச்சு போட்டி மதுரையில் நடைபெற்றது.இதில் இரண்டாவது சுற்றில் 7 மையங்களில் வெற்றி பெற்ற முதல் 3 மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஜூனியர் பிரிவில் மொத்தம் 21 மாணவர்கள் பங்கெடுத்தனர்.
மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமி சிறப்பு பரிசாக ரூபாய் 5,000 மும்,சான்றிதழும் வெற்றி பெற்றார்.இப்போட்டியானது சென்னையில் நடைபெற்றது. மாணவியின் தாயார் இதுவரை காரைக்குடியை விட்டு வேறு எங்கும் சென்றதில்லை.
எனவே நியூஸ் 7 தொலைக்காட்சியின் செலவில் இவரது தாயார், ஆசிரியை முத்து மீனாள் ஆகியோர் அரசு விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் கலந்து கொண்டார்கள்.இவரது தாயார் வீட்டு வேலை செய்து சொற்ப சம்பளத்தில் வேலை பார்ப்பவர். தந்தைக்கு நல்ல வேலை இல்லை.
இந்த சூழ்நிலையில் ஆசிரியர் உதவியுடன் ( அரசு விடுமுறை அன்று) இம்மாணவி சென்னை சென்று அங்கு வந்திருந்த தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவியும் இது போன்று மாநில அளவில் நடை பெற்ற போட்டியில் கலந்து கொண்டது இது தான் முதல் முறை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன் முதலாக நடைபெறும் போட்டியில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி பெற்று பரிசுத் தொகை ரூபாய் 5,000 வெற்றி பெற்றது பாராட்ட வேண்டிய ஒன்று.இந்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு நன்றி.மேடையில் தனது மகள் பரிசு வாங்குவதைப் பார்த்த தாய் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார். பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டதில் நானும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
பள்ளியில் காலை வழிப்பாட்டு கூட்டத்தில் சான்றிதழையும் ,பரிசுத் தொகையும் மாணவியைப் பாராட்டி கொடுத்த போது அவரது தாயார் இது வரை சென்னை வரை செல்லாத என்னை விடுமுறை நாளன்று அழைத்துச் சென்று நல்லபடியாக அழைத்து வந்த ஆசிரியைக்கும்,மிகப்பெரிய வெளிச்சத்தின் நடுவே மிகப்பெரிய கூட்டத்தின் முன்பாக எனது மகள் பேசுவதையும்,பரிசு வாங்குவதையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த தருணத்தை எண்ணி இப்பள்ளிக்கும் , நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கும் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.
பட விளக்கம் :
மாநில அளவில் நடைபெற்ற நியூஸ் 7 சேனலில் தனியார் பள்ளிகளுக்கு இணையாகப் போட்டி போட்டு வெற்றி பரிசாக ரூபாய் 5,000 பணமும்,சான்றிதழும் பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமி பரிசு பெற்றபோது எடுத்த படம். உடன் நியூஸ் 7 சேனல் செய்தி பிரிவு ஆசிரியர் திரு.பகவான் சிங் ,நடுவர்கள் நுருல்லா ,கவிதா முரளீதரன்,சம்பத், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம், பயிற்சி அளித்த ஆசிரியை திருமதி.முத்து மீனாள் , மாணவியின் தாயார் திருமதி.மீனாள் .
வல்லமை இதழின் இந்தவார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை “சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்” திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள். லட்சிய ஆசிரியர் என்பவர் உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கல்வியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில் தினமலர் நாளிதழ் வழங்கிய இந்த ஆண்டுக்கான லட்சிய ஆசிரியர் விருதையும், அத்துடன் மற்றுமொரு விருதாக, “அக்னி சிறகுகள் அறக்கட்டளை” வழங்கிய நல்லாசிரியர் விருதினையும் சென்ற வாரத்தில் பெற்ற திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள், கல்வியில் ஒரு சமூக மாற்றத்தை நிகழ்த்தும் வகையில் அவர் ஆற்றிவரும் தொடர் முயற்சிகளுக்காக வல்லமை இதழ் சார்பில் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.
– அக்னி சிறகுகள் அறக்கட்டளை வழங்கிய நல்லாசிரியர் விருது
– 2015 ஆண்டுக்கான தினமலர் லட்சிய ஆசிரியர் விருது
– 2015 ஆண்டுக்கான புதிய தலைமுறை ஆசிரியர் விருது
– கற்பித்தலில் புதுமை புகுத்தும் ஆசிரியராக மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் தேர்வு
– ஆனந்த விகடனில், கலாமின் காலடிச்சுவட்டில் களத்தில் 100 இளைஞரெனத் தேர்வு
– சுட்டி விகடன் வழங்கிய கனவு ஆசிரியர் என்ற பாராட்டு
– நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுடன் ஆனந்த விகடன் குழுமம் இணைந்து செயல் பட உள்ள அறம் செய விரும்பு திட்டத்தில் சேவை செய்ய நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களால் தேர்வு,
எனக் கடந்த ஆண்டில் மட்டும் இவர் பெற்ற பாராட்டு மற்றும் விருதுகளின் பட்டியல் வளர்கிறது. அந்த வரிசையில் வல்லமை இதழின் வல்லமையாளர் விருதும் சேர்கிறது.
தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு.சந்திர மோகன் அவர்கள் புதியதலைமுறை வழங்கிய சிறந்த ஆசிரியர் விருது பெற்றமைக்காக தலைமை ஆசிரியர் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்தல்
திரு. லெ. சொக்கலிங்கமும், இவரது ஆசிரியர் குழுவினரும் மாணவர்களின் கல்வியில் காட்டும் அக்கறை மற்றும் சிறப்புப் பயிற்சிகளினாலும், இவரது தலைமையிலும், வழிகாட்டுதலிலும், முயற்சிகளினாலும் இப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களையும் விஞ்சும் வண்ணம் பலபோட்டிகளில் வெற்றிபெற்று வருகிறார்கள். இப்பள்ளி மாணவர்களின் கல்வித்திறம் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி என ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணமிருக்கும் சாதனைகள், ஒப்பீட்டில் சிறப்புக் கவனிப்பிற்காக நடத்தப்படும் தனியார் பள்ளிகளில் எந்த வகையிலும் சளைத்ததாக இல்லை.
– கல்வியை அதற்குரிய அனுபவத்தோடு கற்கும்போது, வாழ்க்கையின் எந்தச் சூழலிலும் அது மறக்காது
– கல்வி கற்பது வகுப்பறைக்குள் மட்டுமல்ல, மாணவர்களின் கல்வியை வகுப்பறைக்குள்ளேயே முடக்கிவிடாமல், வகுப்பறைக்கு வெளியேயும் அவர்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்கத் தேவை இருக்கிறது
என்ற தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியை வழி நடத்திச் செல்கிறார் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள்.
அரசு உதவி பெறும் பள்ளியான தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி, 1934 ம் ஆண்டு (இந்தியா சுதந்திரம் பெறுவதற்கும் முன்னரே) தேவகோட்டை மக்களின் கல்வி வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு துவங்கப்பட்டது. பின்தங்கிய சமுதாய மாணவர்களின் கல்வி, மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களின் கல்வி நலனுக்குக்காவும் துவக்கப்பட்ட பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிக்குறவ சமுதாய இன மக்கள், ஊர் ஊராய் சென்று குறி சொல்லும், ஜோசியம் பார்க்கும் தொட்டிய நாயக்கர் சமுதாய மாணவர்கள், இலங்கை அகதிகள் முகாம் மாணவர்கள் என அனைவரையும் அவர்களின் அவர்களது இருப்பிடத்தில் நேரடியாகச் சந்தித்து இப்பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களைப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.
கல்வி சார்ந்த நிறைய நிகழ்வுகளைப் பள்ளியிலும், களப்பயணமாக புத்தக திருவிழா, அஞ்சலகம், வங்கி, நூலகம், அறிவியல் கல்லூரி ஆய்வகங்கள் என முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்று வெளியிலும் கற்றலின் அனுபவத்தைப் புதுமையாக்கி வருகின்றார்கள். திருக்குறள், அபிராமி அந்தாதி போன்ற இலக்கியங்கள் வகுப்பறைப் பாடங்களாக முடிந்துவிடாமல், இசையோடு கூடிய நடனம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மூலமும் பயிற்றுவிக்கப்படுகிறது.
தமிழக புள்ளியியல் துறையின் முதன்மை செயலர் இறையன்பு இ .ஆ.ப., தேவகோட்டை உதவி கலெக்டர் சிதம்பரம், கணேசன், தமிழ்நாடு மின்சார துறை பொறியாளர் சந்திரசேகர், பொம்மலாட்ட ஆசிரியர் தாமஸ் ஆண்டனி, திருக்குறள் நடனம் சொல்லும் சுந்தர மகாலிங்கம், தமிழ்நாடு அறிவியல் மையத்தின் திருச்சி அண்ணா கோளரங்க இயக்குநர் லெனின் தமிழ் கோவன் போன்ற பல்வேறு துறைகளின் வல்லுநர்களைப் பள்ளிக்கு அழைத்து மாணவர்களுடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்வதுடன், மாணவர்கள் அவர்களிடம் கேள்வி கேட்டு பதில் பெற்று தங்களது அறிவை விரிவாக்கிக் கொள்ளவும் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் மாணவர்களும் தயக்கமின்றி கலந்துரையாடல்களில் பங்கு பெறுகிறார்கள்.
மாதம் ஒரு தலைப்பின் கீழ், ஒவ்வொருவாரமும் மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, ஓவியம், மனக்கணக்கு, புதிர்கணக்கு, வாசிப்பு போன்று பல்வேறு தலைப்புகளில் போட்டிகளை நடத்தி பரிசு வழங்குவதுடன், ஒவ்வொரு மாதமும் பாடத்தில் வினாடி வினா போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கப்படுகின்றன. வெற்றி பெற்றோருக்கு வாய்ப்பு ஒருமுறை மட்டுமே என்ற திட்டத்தினால் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் மாணவர்களுக்கும் உணர்த்தப்படுகிறது.
இது போன்ற தொடர் போட்டிகளும் பயிற்சிகளும் மாணவர்களை மேலும் பல போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவிக்கிறது. இதனால், ஊடகங்கள் நடத்தும் போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் பலர் தன்னம்பிக்கையுடனும் ஊக்கத்துடனும் பங்கேற்று சான்றிதழ்களையும் பரிசுகளையும் பெற்று வருகிறார்கள். அன்றாடங்காய்ச்சியான நிலையில் வாழும் குடும்பங்களின் மாணவர்களுக்காக விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்களே தங்கள் மாணவர்களை மற்ற ஊர்களில் நடக்கும் போட்டிகளுக்கும் அழைத்துச் சென்று பங்கேற்க உதவி வருகிறார்கள்.
மத்திய அரசின் அஞ்சல் துறையின் ஓவியப் போட்டி, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் பேச்சுப் போட்டி, அறிவியல், பாடல் ஒப்புவித்தல், கலைநிகழ்ச்சி போட்டிகள், ஊடகங்கள் நடத்தும் கதை, கட்டுரை, ஓவியப் போட்டிகள் என இப்பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையைக் காட்டுவது பல ஊடகச் செய்திகளாகவும் வெளிவருகின்றன.
தங்கள் பள்ளியின் கற்பித்தல் முறையை விளக்கும் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்கள், “மாணவர்கள் வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால் கல்வி, வாழ்க்கையோடு தொடர்புடையது. வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியது. மாணவர்கள் ஏட்டுப் படிப்பிலேயே கூட்டுப் புழுக்களாய் சுருங்கிவிடாமல், முழுமையான அறிவு பெற்றவர்களாக வளர வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களை அதில் பங்கேற்கச் செய்கிறோம். இதனால் மாணவர்களின் அறிவு, திறமை வளர்கிறது. அதுமட்டுமல்ல, பிறரிடம் பழகுவதற்கு அவர்கள் கூச்சப்படுவதில்லை” என்று தனது செய்தி ஒன்றில் குறிப்பிடுகிறார்.
மாணவர்களின் கல்வியில் சிறந்த அக்கறை கொண்டு செயலாற்றும் திரு. லெ. சொக்கலிங்கம் அவர்களை வல்லமையாளர் எனப் பாராட்டுவதில் வல்லமை இதழ் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
For more Info:
Mr. Chokkalingam Lakshmanan
https://www.facebook.com/chokka.lingam.5815
https://plus.google.com/101382123602736134466/
http://kalviyeselvam.blogspot.com/