Tag: vijay

  • டெலிபிராம்ப்டர் என்கிற உரைத்திரை

    டெலிபிராம்ப்டர் என்கிற உரைத்திரை

    அண்ணாகண்ணன்

    சட்டப் பேரவையில் நான் கவனித்த ஒன்று.

    பேரவைத் தலைவர், தற்காலிகப் பேரவைத் தலைவர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரும் எழுதி வைத்தே படித்தார்கள். பிரேமலதா உள்ளிட்ட சிலரே நேரடியாகப் பேசினார்கள். நேரடியாகப் பேசுவோரும் கையில் குறிப்புகள் வைத்திருப்பது வழக்கம்.

    திரைப்படப் படப்பிடிப்புகளில் கதை, திரைக்கதை, வசனம் அனைத்தும் முன்னரே எழுதிய பிறகே படப்பிடிப்புக்குச் செல்வார்கள். வெகு சிலர், அந்த இடத்தில் எழுதி அல்லது பேசி வசனத்தைச் சொல்வார்கள். கதையைக் கூடத் திடீரென மாற்றுவோர் உண்டு. இதனால் தேவையற்ற தாமதங்களும் விரயங்களும் ஏற்படும். எழுத்தாளர் முழுவதும் எழுதி முடித்துவிட்டால், திரைப்பட இயக்குநரின் பணி 90 சதம் முடிந்துவிட்டது என்ற ஹரால்டு ராமிஸின் கூற்று புகழ்பெற்றது.

    எழுதிப் படிப்பதன் பின்னுள்ள இன்னோர் உண்மை, இக்காலக் கல்விச் சூழலும் தொழில்நுட்பக் கருவிககளின் வளர்ச்சியும். முன்னர், அனைத்தையும் மனப்பாடம் செய்வது ஒன்றே வழியாக இருந்தது. கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், தேவாரம், திவ்யப் பிரபந்தம் போன்றவற்றை எழுத்தெண்ணிக் கற்றவர்கள் எனச் சிலரைப் பாராட்டுவார்கள். அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒவ்வோர் எழுத்தும் அவர்களின் நினைவில் இருக்கும். மடமடவென்று இவற்றைச் சொல்லியே பெரும் புலவர் என்ற பெயரைப் பெற்றார்கள். உண்மையில் இவை அனைத்தின் பின்னும் இருந்தது, அவர்களின் மனப்பாடத் திறனே. இப்படிக் கற்றதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வாய்மொழியாகவே கற்பித்தார்கள். இப்படித்தான் முற்றோதல், பஜனை, தொடர் சொற்பொழிவு உள்ளிட்டவை முகிழ்த்தன.

    அச்சுக் கருவிகளைக் கண்டுபிடித்த பிறகு, புத்தகங்கள் எளிதாகக் கிடைக்கத் தொடங்கின. நூலகங்கள் உருவாகின. ஒவ்வொரு வீட்டிலும் புத்தகங்களை வைத்துக்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. இவற்றை மனப்பாடம் செய்யாமல், புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலை உருவானது. எனவே, பெரும் புலவர்கள் கூட, நூறு, இருநூறு பாடல்களுடன் தங்கள் புலமையைச் சுருக்கிக்கொண்டார்கள்.

    கணக்கில் கால்குலேட்டர் வந்ததும் மனக்கணக்கு பெரும்பாலும் மறைந்துவிட்டது. சிறிய கணக்குகளையும் அதன் வழியாக போடத் தொடங்கினோம். ஒரு தொலைபேசி எண்ணைக் கூட நம்மால் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.

    கணிப்பொறி, செல்பேசி, இணையம் வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமானது. நூலகத்திற்குச் சென்று தேடி எடுக்கும் சிக்கலும் இல்லை. ஒரு சொடுக்கில் அனைத்தும் நம் விரல் நுனிக்கு வந்து சேர்ந்தது. இப்போது எழுதும் தேவையும் குறைந்து வருகிறது. நாம் பேசினாலே கணிப்பொறி தானாகவே எழுதிக்கொள்ளும். செயற்கை நுண்ணறிவு வந்த பிறகு, நாம் எழுதியதை அதுவே மேம்படுத்தித் தரும். இப்போது நாம் எழுதவும் பேசவும் தேவையில்லை. என்ன வேண்டும், எப்படி வேண்டும் என்று குறிப்பாகக் கட்டளை இட்டால் போதும். அதுவே இடத்துக்கு ஏற்ப எழுதிக் கொடுத்துவிடும். அதே எழுத்தைப் பேச்சாகவும் கொடுத்துவிடும்.

    இந்தச் சூழலில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களில் வெகுசிலர் மட்டுமே தானாகப் பேசுவதற்கும் வெகுநேரம் பேசுவதற்கும் உடனுக்குடன் பேசுவதற்கும் உரிய ஆற்றலைப் பெற்றவர்கள். இப்போது வெகுநேரம் பேசுவதற்கான தேவையும் குறைந்துவிட்டது. அப்படிப் பேசினால், கேட்பதற்கும் பலருக்குப் பொறுமை இல்லை. இந்த மனப்பாட மாற்றம் என்பது, ஒரு தலைமுறைக்கான இயல்பு. இதை நாம் புரிந்துகொண்டால், அதை வைத்து ஒருவரின் திறனை நாம் மதிப்பிட மாட்டோம்.

    டெலிபிராம்ப்டர் என ஒரு கருவி உள்ளது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்கள், இதைப் பார்த்தே செய்தி வாசிக்கிறார்கள். உலகம் முழுவதும் பெரும் தலைவர்கள், இதைப் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் முன்னால் உள்ள திரையில், அவர்கள் தயாரித்த பேச்சின் எழுத்து வடிவம் தோன்றும். ஆனால், அந்தக் கருவி மக்களுக்குத் தெரியாது. அவர்கள் மக்களைப் பார்த்துப் பேசுவது போலவே இருக்கும். ஆனால், ஒவ்வொரு சொல்லையும் அதிலிருந்தே படிப்பார்கள்.

    தமிழ்நாட்டு அரசியலில் டெலிபிராம்ப்டரை அறிமுகப்படுத்தினால், இந்தச் சிக்கல் தீரும். பேச்சாளர், அவையைப் பார்த்துப் பேசலாம். ஆனால், அவருடைய பேச்சு முழுவதும் திரையில் தோன்றும். இப்படி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். துண்டுச் சீட்டுக்கும் தேவையில்லை. என்ன, முன்னதாகவே பேச்சைத் தயாரிக்க வேண்டியது அவசியம்.

    இதற்கும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் உதவும். அவையில் உறுப்பினர் ஒருவர் ஒரு தரவைச் சொல்கிறார் என்றால், உடனடியாக அதைச் சரிபார்க்க முடியும். அதில் ஏதும் பிழை இருந்தால் உடனடியாகச் சுட்டிக் காட்ட முடியும். நாம் சொல்லும் தகவலுக்கும் உடனடியாக ஆதாரங்களைத் தர முடியும்.

    எனவே தமிழக அரசியலுக்கு இப்போது உடனடித் தேவை, டெலிபிராம்ப்டர் என்கிற உரைத்திரையும் செயற்கை நுண்ணறிவும்.

    Share
  • ரகசியக் காப்பு உறுதிமொழியில் ஒரு பிழை

    ரகசியக் காப்பு உறுதிமொழியில் ஒரு பிழை

    அண்ணாகண்ணன்

    முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஏற்றுள்ள ரகசியக் காப்பு உறுதிமொழியில் ஒரு பிழை உள்ளது.

    இதன் ஆங்கில வடிவம்

    Form of oath of secrecy for the Chief Minister:

    “I, A.B., do swear in the name of God / solemnly affirm, that I will not directly or indirectly communicate or reveal to any person or persons any matter which shall be brought under my consideration or shall become known to me as the Chief Minister for the state of Tamil Nadu, except as may be required for the due discharge of my duties as the Chief Minister.”

    இப்போதுள்ள தமிழ் வடிவம்:

    நான், தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்கு வருவதும் அல்லது எனக்குத் தெரியவருவதுமான எந்த ஒரு பொருளையும், முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்றத் தேவையான அளவுக்கன்றி, ஒருவரிடமோ அல்லது பலரிடமோ நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ அறிவிக்கவோ அல்லது வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்.”

    ஆங்கிலத்தில் உள்ள matter என்பதைத் தமிழில் பொருள் எனப் பெயர்த்திருக்கிறார்கள்.

    பொருள் என்ற சொல்லுக்குத் தமிழில் பல பொருள்கள் உள்ளன. அர்த்தம், பணம், பொருண்மம், சடப் பொருள், பருப்பொருள், உட்பொருள், மறைபொருள்… என ஏராளமான அர்த்தங்கள் உள்ளன. இதில் எந்தப் பொருளை அவர்கள் சொல்கிறார்கள் என்பது இந்தச் சொல்லாட்சியில் கூர்மையாக இல்லை.

    ரகசியக் காப்பு உறுதிமொழியில் உள்ள matter என்பது, விஷயத்தைக் குறிக்கிறது. கூகுள் கூட இதை எவ்விஷயத்தையும் என்றே மொழிபெயர்க்கிறது. இதைச் செய்தி என்றும் சொல்லலாம். ஆனால், News என்ற பொருள் அதற்கு ஏற்கெனவே உள்ளது. தகவல், விவரம் என்று கூறலாம். ஆனால், விஷயம், விவரம் ஆகியவை தமிழ்ச் சொற்கள் இல்லை. தகவல் என்பது தமிழா என்று ஆராய வேண்டும். ஆனால், தரவு என்ற சொல், டேட்டாவைக் குறிக்கிறது. ரகசியக் காப்பில் உள்ள மேட்டர் என்பது ஒரு வகையான டேட்டா. எனவே இதைத் தரவு என்றே குறிப்பிடலாம்.

    விஜய்க்கு முன்னதாகப் பொறுப்பேற்ற முந்தைய முதலமைச்சர்களின் ரகசியக் காப்பு உறுதிமொழியையும் கவனித்தேன். அவர்களும் மேட்டரைப் பொருள் என்றே சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பொருளைத் தரவு என்று மாற்றுவது பொருத்தமாக இருக்கும்.

    இவ்வளவும் சொல்லிவிட்டு ரகசியக் காப்பில் ரகசியம் என்பது மட்டும் தமிழா என்றும் நீங்கள் கேட்கலாம். அது தமிழில்லை. அதைக் கமுக்கம் எனத் தமிழில் அழைக்கிறோம். கமுக்கக் காப்பு உறுதிமொழி அல்லது தரவுக் காப்பு உறுதிமொழி என இனி அழைக்கலாம். தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி என்பதை நிலைநாட்ட, இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தலாம்.

    #vijay #cmvijay #tvk #tamil #tamilnadu #swornin #oath #terminology

    Share
  • விஜய் எனும் சாதனையாளன்

    விஜய் எனும் சாதனையாளன்

    அண்ணாகண்ணன்

    ஏனெனில்
    ஓய்வுக்குப் பிறகு இல்லை, உச்சத்தில் இருக்கும்போதே நீ அரசியலுக்கு வந்தாய்

    ஏனெனில்
    கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் நீ ஆட்சியைப் பிடித்தாய்

    ஏனெனில்
    மாறி மாறி அமைந்த 59 ஆண்டுக்கால திராவிட ஆட்சியை நீ அகற்றினாய்

    ஏனெனில்
    தனித்து நின்று, ஒன்றே முக்கால் கோடி வாக்குகளை நீ பெற்றாய்

    ஏனெனில்
    வாக்குக்குப் பணம் கொடுத்து வெல்லும் பார்முலாக்களை நீ தூக்கி எறிந்தாய்

    ஏனெனில்
    த.வெ.க. வேட்பாளராகப் பல்வேறு சாதியினருக்கும் வாய்ப்பளித்து வெற்றி பெற வைத்தாய்

    ஏனெனில்
    பொதுத் தொகுதிகளில் தலித் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச் செய்தாய்

    ஏனெனில்
    இளைஞர்களை நீ முன்னிறுத்தினாய். த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களில் 23 பேர், 35 வயதுக்கு உட்பட்டவர்கள்

    ஏனெனில்
    அரசியல் பொதுக்கூட்டம், மாநாடு, பரப்புரை ஆகிய அனைத்தையும் குறுகிய நேரத்தில் நிகழ்த்தினாய். இதன் மூலம் புதியதொரு விதி செய்தாய்

    ஏனெனில்
    உன் மதத்தை நீ மறைக்கவில்லை. நான் ஜோசப் விஜய் என்று வெளிப்படையாகச் சொன்னாய்

    ஏனெனில்
    எளிய திரைப்பட ரசிகர்களை நீ அரசியல்மயப்படுத்தினாய்

    ஏனெனில்
    வாக்குரிமை இல்லாத குழந்தைகள் மனத்தையும் நீ வெற்றி கொண்டாய்

    ஏனெனில்
    மக்களின் நம்பிக்கையாக, மாற்றத்தின் அடையாளமாக நீயே இருக்கிறாய்

     

    Share