டெலிபிராம்ப்டர் என்கிற உரைத்திரை
அண்ணாகண்ணன்
சட்டப் பேரவையில் நான் கவனித்த ஒன்று.
பேரவைத் தலைவர், தற்காலிகப் பேரவைத் தலைவர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலரும் எழுதி வைத்தே படித்தார்கள். பிரேமலதா உள்ளிட்ட சிலரே நேரடியாகப் பேசினார்கள். நேரடியாகப் பேசுவோரும் கையில் குறிப்புகள் வைத்திருப்பது வழக்கம்.
திரைப்படப் படப்பிடிப்புகளில் கதை, திரைக்கதை, வசனம் அனைத்தும் முன்னரே எழுதிய பிறகே படப்பிடிப்புக்குச் செல்வார்கள். வெகு சிலர், அந்த இடத்தில் எழுதி அல்லது பேசி வசனத்தைச் சொல்வார்கள். கதையைக் கூடத் திடீரென மாற்றுவோர் உண்டு. இதனால் தேவையற்ற தாமதங்களும் விரயங்களும் ஏற்படும். எழுத்தாளர் முழுவதும் எழுதி முடித்துவிட்டால், திரைப்பட இயக்குநரின் பணி 90 சதம் முடிந்துவிட்டது என்ற ஹரால்டு ராமிஸின் கூற்று புகழ்பெற்றது.
எழுதிப் படிப்பதன் பின்னுள்ள இன்னோர் உண்மை, இக்காலக் கல்விச் சூழலும் தொழில்நுட்பக் கருவிககளின் வளர்ச்சியும். முன்னர், அனைத்தையும் மனப்பாடம் செய்வது ஒன்றே வழியாக இருந்தது. கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம், தேவாரம், திவ்யப் பிரபந்தம் போன்றவற்றை எழுத்தெண்ணிக் கற்றவர்கள் எனச் சிலரைப் பாராட்டுவார்கள். அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒவ்வோர் எழுத்தும் அவர்களின் நினைவில் இருக்கும். மடமடவென்று இவற்றைச் சொல்லியே பெரும் புலவர் என்ற பெயரைப் பெற்றார்கள். உண்மையில் இவை அனைத்தின் பின்னும் இருந்தது, அவர்களின் மனப்பாடத் திறனே. இப்படிக் கற்றதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வாய்மொழியாகவே கற்பித்தார்கள். இப்படித்தான் முற்றோதல், பஜனை, தொடர் சொற்பொழிவு உள்ளிட்டவை முகிழ்த்தன.
அச்சுக் கருவிகளைக் கண்டுபிடித்த பிறகு, புத்தகங்கள் எளிதாகக் கிடைக்கத் தொடங்கின. நூலகங்கள் உருவாகின. ஒவ்வொரு வீட்டிலும் புத்தகங்களை வைத்துக்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. இவற்றை மனப்பாடம் செய்யாமல், புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலை உருவானது. எனவே, பெரும் புலவர்கள் கூட, நூறு, இருநூறு பாடல்களுடன் தங்கள் புலமையைச் சுருக்கிக்கொண்டார்கள்.
கணக்கில் கால்குலேட்டர் வந்ததும் மனக்கணக்கு பெரும்பாலும் மறைந்துவிட்டது. சிறிய கணக்குகளையும் அதன் வழியாக போடத் தொடங்கினோம். ஒரு தொலைபேசி எண்ணைக் கூட நம்மால் நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.
கணிப்பொறி, செல்பேசி, இணையம் வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமானது. நூலகத்திற்குச் சென்று தேடி எடுக்கும் சிக்கலும் இல்லை. ஒரு சொடுக்கில் அனைத்தும் நம் விரல் நுனிக்கு வந்து சேர்ந்தது. இப்போது எழுதும் தேவையும் குறைந்து வருகிறது. நாம் பேசினாலே கணிப்பொறி தானாகவே எழுதிக்கொள்ளும். செயற்கை நுண்ணறிவு வந்த பிறகு, நாம் எழுதியதை அதுவே மேம்படுத்தித் தரும். இப்போது நாம் எழுதவும் பேசவும் தேவையில்லை. என்ன வேண்டும், எப்படி வேண்டும் என்று குறிப்பாகக் கட்டளை இட்டால் போதும். அதுவே இடத்துக்கு ஏற்ப எழுதிக் கொடுத்துவிடும். அதே எழுத்தைப் பேச்சாகவும் கொடுத்துவிடும்.
இந்தச் சூழலில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களில் வெகுசிலர் மட்டுமே தானாகப் பேசுவதற்கும் வெகுநேரம் பேசுவதற்கும் உடனுக்குடன் பேசுவதற்கும் உரிய ஆற்றலைப் பெற்றவர்கள். இப்போது வெகுநேரம் பேசுவதற்கான தேவையும் குறைந்துவிட்டது. அப்படிப் பேசினால், கேட்பதற்கும் பலருக்குப் பொறுமை இல்லை. இந்த மனப்பாட மாற்றம் என்பது, ஒரு தலைமுறைக்கான இயல்பு. இதை நாம் புரிந்துகொண்டால், அதை வைத்து ஒருவரின் திறனை நாம் மதிப்பிட மாட்டோம்.
டெலிபிராம்ப்டர் என ஒரு கருவி உள்ளது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்கள், இதைப் பார்த்தே செய்தி வாசிக்கிறார்கள். உலகம் முழுவதும் பெரும் தலைவர்கள், இதைப் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் முன்னால் உள்ள திரையில், அவர்கள் தயாரித்த பேச்சின் எழுத்து வடிவம் தோன்றும். ஆனால், அந்தக் கருவி மக்களுக்குத் தெரியாது. அவர்கள் மக்களைப் பார்த்துப் பேசுவது போலவே இருக்கும். ஆனால், ஒவ்வொரு சொல்லையும் அதிலிருந்தே படிப்பார்கள்.
தமிழ்நாட்டு அரசியலில் டெலிபிராம்ப்டரை அறிமுகப்படுத்தினால், இந்தச் சிக்கல் தீரும். பேச்சாளர், அவையைப் பார்த்துப் பேசலாம். ஆனால், அவருடைய பேச்சு முழுவதும் திரையில் தோன்றும். இப்படி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். துண்டுச் சீட்டுக்கும் தேவையில்லை. என்ன, முன்னதாகவே பேச்சைத் தயாரிக்க வேண்டியது அவசியம்.
இதற்கும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் உதவும். அவையில் உறுப்பினர் ஒருவர் ஒரு தரவைச் சொல்கிறார் என்றால், உடனடியாக அதைச் சரிபார்க்க முடியும். அதில் ஏதும் பிழை இருந்தால் உடனடியாகச் சுட்டிக் காட்ட முடியும். நாம் சொல்லும் தகவலுக்கும் உடனடியாக ஆதாரங்களைத் தர முடியும்.
எனவே தமிழக அரசியலுக்கு இப்போது உடனடித் தேவை, டெலிபிராம்ப்டர் என்கிற உரைத்திரையும் செயற்கை நுண்ணறிவும்.
