Author: அண்ணாமலை சுகுமாரன்

  • வரலாறுகளின் வேர் – 6

    அண்ணாமலை சுகுமாரன்

    ANS-1-1-1

    1898 ஆம் ஆண்டில் INDIAN ANTIQUITIES – BY THE LATE BISHOP CALDWELL என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதிய கால்டுவெல் அதை பரதகண்ட புராதனம் என்ற பெயரில் தானே வெளியிட்டார் .
    நான்கு பாகங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் ,

    இதன் முதல் பாகம் சதுர்வேதங்களைப்பற்றியது ,
    இரண்டாம் பாகம் இராமாயணத்தைப் பற்றியது ,
    மூன்றாம் பாகம் மகா பாரதத்தைப் பற்றியது ,
    நான்காம் பாகம் மற்றைய புராணங்களைப் பற்றியது ,
    அவ்வளவுதான்!
    இவைகளை ஆதாரமாக வைத்தே பாரதத்தின் புராதனம் எழுதப்பட்டது .

    நான்காம் பாகத்தின் இடையே 1841 ஆம் ஆண்டில் சென்னப் பட்டணத்திலிருந்து வெளிவந்த நான்கு காண்டம் கொண்ட ஓரு புத்தகம் குறிப்பிடப்படுகிறது .

    அது என்ன புத்தகம் தெரியுமா ?

    அதுவும் தக்ஷயாகம் எனும் புராணம் தான் . இத்தகைய நிலையே அந்த காலக்கட்டத்தில் நிலவி வந்தது. ஆதாரம் காட்ட நம்மிடம் புராணங்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை .

    ஆனால் உண்மை என்னவோ, இதனில் மாறுபட்டது , நமது முன்னோர் விட்டுச் சென்ற தொன்மை ஆதாரங்கள் ,தேடுவாரின்றி மதிப்பறியாமல் கொட்டிக் கிடந்தன என்பதே நிதர்சனம் ஆகும்

    இத்தகைய நிலையில் தான் இந்தியாவில் அப்போது Archaeological Survey of India (ASI ) எனும்ஒரு தொல்லியல் ஆய்வு அமைப்பை நிறுவ கடும் முயற்சி எடுத்து அது நிறுவப்பட்டதும் அதன் முதல் தலைவராக இருந்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் பற்றி இப்போது தெரிந்து கொள்ளப்போகிறோம் .

    அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் 1814 இல் பிறந்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் தனது 19வது வயதில் இராணுவ பொறியாளராகப் பணியாற்ற இந்தியா வந்தார். அவருக்கு அப்போது இந்திய வரலாற்று ஆய்வில் பிரகாசித்துக்கொண்ட பிரின்செப் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது . அவர் மூலம் கன்னிங்ஹாம்க்கு இந்திய வரலாற்று செய்திகள் மற்றும் ஆய்வுகள் பற்றி பல செய்திகள் தெரியவந்தன . இத்தகைய ஆய்வில் அவருக்கு ஆர்வமும் தோன்றியது

    அந்த காலகட்டத்தில் எகிப்த்தில் பிரமிடுகள் பற்றிய ஆய்வு தீவிரமாக இருந்து வந்தது .பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பலரும் அத்தகைய ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர் . அதன் மூலம்அவர்கள் பெரும் பொருளும் ஈட்டினர் . ஆய்வில் கிடைக்கும் தொல் பழம் பொருள்களுக்கு நல்ல ஒரு சந்தை மதிப்பு அப்போதைய உலகில் ஏற்பட்டிருந்தது .

    தொல்லியல் ஆய்வு என்பது புத்திசாலிகளுக்கு தங்களின் அறிவை வெளிப்படுத்தும் ஒரு மதிப்பூட்டும் செயலாக அப்போது ஆகியிருந்தது. செல்வந்தர்கள் அதிகாரத்தில் இருப்போர் தொல்லியல் ஆய்வுகள் பற்றி விருந்துகளில் கலந்து பேசுவது ஒரு நாகரிகமாக அப்போது ஆகியிருந்தது. தொல்லியல் ஆய்வுகள் பற்றிய ஆர்வம் ஒரு உயர் வர்க மக்களின் குறியீடாகவே பிறநாடுகளில் போலவே இந்தியாவிலும் அப்போது மாறியிருந்தது .

    எனவே இந்தியாவில் மதிப்பாரற்று கொட்டிக்கிடந்த தொல்லியல் பொருள்களை சேகரம் செய்வதிலும் ஆதாரங்களை வெளிப்படுத்துவதிலும் தொகுப்பதிலும் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் போன்ற பலரும் கவனம் செலுத்தலானர் .

    1834 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பிரின்செப் செய்திருந்த அசோகரின் மணிக்யாளா ஸ்தூபியைப் பற்றிய முந்தய ஆய்வின் தொடர்ச்சியான ஒரு கட்டுரையை பெங்கால் ஆசியாட்டிக் சொசைட்டியின் ஏட்டில் எழுதி கன்னிங்ஹாம் வரலாற்று அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தார் .

    அதே ஆண்டில் 1834 இல் சாராநாத் என்னும் இடத்தில் இருக்கும் அசோகரின் ஸ்தூபியை அகழ்வாய்வு செய்து உலகிற்கு அறிவித்தார் .

    தொடர்ந்து 1837 இல் கர்னல் எப் ஸீ மைசெய் உடன் சேர்ந்து சாஞ்சியில் ஒரு அகழ்வாய்வு தொடங்கி அதன் மூலம் பல ஆதாரங்களைத் தொகுத்தார் .1842 இல் சாங்கிசா எனும் இடத்தில் அகழ்வாய்வு தொடங்கப்பட்டது .

    இவ்வாறு அசோகரின் பிராமியில் இருந்த கல்வெட்டுகள் பல படித்தறியப்பட்டன . நெடுங்காலமாக புரியாத புதிராக இருந்த அந்த ஊசி முனை எழுத்துகளுக்கு அர்த்தம் வெளிப்பட்டது .

    அசோகரின் கல்வெட்டுகள் , ஸ்தூபிகளைப் பற்றி எத்தகைய இடங்களில் எங்கே அகழ்வாய்வு செய்வது என்பதற்கு அந்த காலகட்டத்தில் எந்த வித இலக்கிய ஆதாரங்களோ வழிகாட்டுதலோ இல்லாத அந்தச் சூழலில் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் பண்டைய சீன பயணியான ஹுவாங் சுவாங் எழுதிய பயணக் குறிப்புகளைக்கொண்டு அவர் சென்ற வழியில் அவர் விவரித்த பல இடங்களைக் கண்டறிந்தார். பின்பு அத்தகைய இடங்களில் அகழ்வாய்வு செய்யப்பட்டது .

    1851 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனிக்கு இந்திய தொல்லியல் ஆய்வின் மதிப்பையும் ,அத்தகைய ஆய்வுகளின் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தத் தொடங்கினார் .

    1854 இல் புத்த இயக்கத்தின் வரலாற்றை விவரிக்கும் பிளசா ஸ்தூபி (The Bhilsa Topes) எனும் புத்தகத்தை அப்போது கிடைத்திருந்த ஆதாரங்களின் அடிப்படையில் எழுதி வெளியிட்டார்

    1861 இல் அப்போது வைஸ்ராயாக இருந்த ஜான் கன்னிங் அவர்கள் கன்னிங்ஹாம்மை இந்திய அரசின் archaeological surveyor ஆக நியமித்தார் . அது அப்போதய நிலையில் புதிய பதவி அதில் முதல் நியமனம் கன்னிங்ஹாமுக்குத் தான் . அந்த பதவியில் அவர் 1861 முதல் 1865 வரை பணியாற்றி பல ஆய்வுகளிலும் சான்றுகளை சேகரம் செய்து பாதுகாப்பதிலும் ஈடுபட்டார் .

    ஆனால் அந்த பதவியும் 1865 இல் ரத்து செய்யப்பட்டது. காரணம் இப்போது போலவே அப்போதும் அதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லை . பின்பு லண்டன் திரும்பிய கன்னிங்ஹாம் Ancient Geography of India என்னும் புத்தகத்தின் முதல் பகுதியை 1871 இல் வெளியிட்டார் . இடையே அடுத்த வைஸ்ராயாக வந்த மாயோ இந்தியாவில் முதல் தொல்லியல் ஆய்வுக்கான அமைப்பான Archaeological Survey of India (ASI) தோற்றுவித்து அதன் முதல் director-general ஆக கன்னிங்ஹாம்மை நியமித்தார் . அது 1ஆம் தேதி , ஜனவரி 1871 ஆகும் .

    இன்றைக்கு சரியாக 147 வருடங்களுக்கு முன் இந்தியாவின் வரலாற்றை ஆய்வு செய்ய ஒரு மகத்தான அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் முதல் தலைவர் கன்னிங்ஹாம் ஆவார் .இந்த அமைப்பு உருவாகவும் பெருமுயற்சிகள் செய்ததும் அவரே ஆகும். இந்த பதிவி வகிக்க இந்தியா திரும்பினார் கன்னிங்ஹாம். தனது பதவிக்காலத்தில் 24 ஆய்வறிக்கைகளை விரிவாக்கத் தயாரித்தளித்தார் . இதில் 13 ஆய்வறிக்கைகள் இவரே நேரடியாக மேற்கொண்ட ஆய்வுகள் . மீதமுள்ளதை இவரது வழிகாட்டலில் பிறரால் மேற்கொண்ட ஆய்வுகள் .

    30 செப்டம்பர் 1885 வரை ஏ ஸ் ஐ இல் தலைவராக இருந்த கன்னிங்ஹாம். பின்பு இங்கிலாந்து திரும்பினார் .

    அவரது பதவிக்காலத்தில் தஷீலா முதல் கவுர் ( Taxila to Gaur.) வரை பல கள ஆய்வுகளும், அகழ்வாய்வும் செய்யப்பட்டன .

    இவரது பதவிக் காலத்தில் அசோகரின் கல்வெட்டுகளைக்கொண்ட முதல் பகுதியை வெளியிட்டார் . (Corpus inscriptionum Indicarum) (1877) இந்திய வரலாற்றின் காலங்களின் ஆய்வான ஒரு அரிய புத்தகத்தை 1883 இல் எழுதி வெளியிட்டார் ( Book of Indian Eras )

    தனிப்பட்ட முறையில் கன்னிங்ஹாம் ஒரு பெரிய அளவிலான தொன்மை நாணயங்களின் சேகரிப்பை செய்து வைத்திருந்தார் . ஆனால் துரதிர்ஷ்ட்டவசமாக அவர் ஒரு முறை 1884 இல் இலங்கையின் அருகில் படகில் பயணம் செய்தபோது விபத்துக்குள்ளாகி அவரின் சேகரத்தில் இருந்த பெரும்பான்மை நாணயங்களை இழந்து விட்டார் .

    மீதி இருந்த தொன்மை தங்க வெள்ளி நாணயங்களை பிரிட்டிஷ் அருங்காட்சியகம் அவரிடமிருந்து விலைக்கு வாங்கி பாதுகாத்து வருகிறது .

    இவரின் ஆலோசனைப்படி பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் இந்தியப் பகுதியின் வாயில் சாஞ்சி ஸ்தூபி வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது .

    தனது 19 வது வயதில் இந்தியா வந்த ராணுவ பொறியாளர் கன்னிங்ஹாம் 28 வருட பணிக்குப் பின் மேஜர் ஜெனரல் ஆக 1861 இல் பதவி ஒய்வு பெற்றார் . பிறகு இந்திய தொல்லியல் ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டார் .

    கன்னிங்ஹாம் அவர்கள் வட இந்தியாவின் பல பண்டைய தொன்மை சின்னங்களை கண்டுபிடிப்பதிலும் அவைகளை ஆவணப்படுத்தி பாதுகாப்பதிலும் பெரும் பங்காற்றினார் .

    அவற்றில் சாஞ்சி, சாரநாத் , கயாவில் உள்ள மகாபோதி ஆலயம் , தசாவதார ஆலயம் போன்ற பல குறிப்பிடத்தக்கவை .

    இத்தகைய பல இன்று உலக மரபுச் சின்னங்களாக UNESCO வால் அறிவிக்கப்பட்டு இந்தியாவிற்கு சுற்றுலா மூலம் பெரும் பொருள் குவிய வழிவகுத்துள்ளது .

    அவர் எழுதிய முக்கிய புத்தகங்களின் பட்டியல் பிரமிப்பு அளிப்பதாகும். எத்தனை அரிய ஆய்வுகள் , தலைப்புகள் அவர்தந்தது !

    Physical, Statistical, and Historical with Notices of the Surrounding Countries (1854).

    –Bhilsa Topes (1854), a history of Buddhism

    –The Ancient Geography of India (1871)

    –Corpus Inscriptionum Indicarum. Volume 1. (1877)

    –The Stupa of Bharhut: A Buddhist Monument Ornamented with Numerous Sculptures

    –Illustrative of Buddhist Legend and History in the Third Century B.C. (1879)

    –The Book of Indian Eras (1883)

    –Coins of Ancient India (1891)

    –Mahâbodhi, or the great Buddhist temple under the Bodhi tree at Buddha-Gaya (1892)

    1823 இல் சார்லஸ் மேசன் எனும் ஆங்கிலேயப்பயணி இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பயணம் மேற்கொண்டார் . அப்போது அவர் ஹரப்பா எனும் குக்கிராமம் வழியே சென்றார் . அங்கே ஒரு சிறிய குன்றில் இடிந்துபோன சிதைந்த கோட்டை ஒன்றை பார்த்திருக்கிறார் .

    அதுகுறித்து அங்கே வசித்த கிராமவாசிகளிடம் விசாரித்தபோது , அங்கே சபிக்கப்பட்ட ஒரு அரசரின் தீய ஆவி இருப்பதாகவும் , அந்த அரசர் செய்த தீய செயல்களின் காரணமாக கடவுள் விண்ணில் இருந்து நெருப்புக் கோளத்தை அனுப்பி அந்த கோட்டையை அழித்துவிட்டதாகவும் , அதுமுதல் அந்த கோட்டை பல நூறு ஆண்டுகளாக இடிந்தே கிடப்பதாகவும் கூறியிருக்கிறார்கள் .

    பல தீய சக்திகள் அங்கே இருப்பதாகவும் அங்கே யாரும் செல்வதில்லை என பலவேறு கதைகளை கூறியிருக்கிறார்கள் .

    அந்த இடிந்த கோட்டை உயர்ந்த மதில் சுவர்களும் இடிபாடுகளும் நிறைந்ததாகவே பலநூறு ஆண்டுகளாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்

    1823 இல் அங்கே சென்ற சார்லஸ் மேசன் தான் கண்டதையும் ,கேட்டதையும் பெருமையாக இங்கிலாந்து சென்றதும் பத்திரிகையில் எழுதினர் .

    சில ஆண்டுகளுக்குப் பின் இந்த செய்தியை தற்செயலாகப் பார்த்த கன்னிங்ஹாம் , ஆய்வுகளின்பால் கொண்ட ஆர்வத்தால் அங்கே தேடித் சென்றார் . அவர் சென்றது 1853 வருடம் அதாவது முப்பது ஆண்டுகள் கழித்து . ஆனால் ஹரப்பா எனும் குக்கிராமத்தில் அந்த குன்று இருந்தது. ஆனால் அந்த இடிந்த கோட்டை அந்தக் குன்றில் இல்லை .இத்தனை நூறு ஆண்டுகள் தாக்குப்பிடித்து நின்ற அந்த இடிந்த கோட்டை முப்பது ஆண்டுகளில் இடிந்து தரை மட்டம் ஆகிவிட்டது .

    வரலாற்றிற்கு எத்தனை துரதிஷ்டம் பாருங்கள் .சிந்துவெளி நாகரீகத்தின் ஹரப்பா தான் நான் குறிப்பிடும் இந்த ஹரப்பாவும் ஆகும் .

    மனம் தளராத கன்னிங்ஹாம் அந்த குன்றில் இருந்த இடிபாடுகள் அத்தனையும் சல்லடையாக சலித்துப் பார்த்திருக்கிறார் .

    அதில் சதுரமான கல்துண்டு ஒன்று ,பள பளவென்று மெருகேற்றப்பட்டது அவரது கண்ணில் பட்டது .
    அதை எடுத்து ஆராய்ந்த கன்னிங்ஹாம் அதில் மிருகங்கள் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டார் . அது என்னவென்று அப்போது அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை . அது ஒரு சிந்துவெளி நாகரீக முத்திரை. இன்னமும் சரிவர புரிந்துகொள்ள இயலாத ஒரு முத்திரை .இதைப்போல் இன்னமும் அந்த ஹரப்பாவில் இத்தகைய பலநூறு முத்திரைகள் அகழ்வாய்வில் இருந்து கிடைக்கும் என்பது அவருக்கு அப்போது எப்படித் தெரியும் ?

    ஒருவேளை அந்த இடிந்த கோட்டை அவர் முப்பது ஆண்டுகள் கழித்து வரும்வரை இருந்திருந்தால் இந்த சிந்துவெளி முத்திரைகளின் உபயோகம் என்னவென்று நமக்கு அப்போதே அவருக்கு ஏதாவது துப்பு கிடைத்திருக்கக்கூடும் .

    ஆனால் கன்னிங்ஹாம் வந்து சென்றபிறகு பலவித முயற்சிகளுக்குப் பிறகு அந்த ஹரப்பாவில் மீண்டும் அகழ்வாய்வு செய்ய சுமார் 90 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ ஆய்வுகள் 1920 இல் தான் துவங்கப்பட்டது .

    அரசாங்க வேலைகளில் அவசரம் பார்க்க இயலுமா ?

    இந்த கால இடைவெளியில் அழிந்துபோன ஆதாரங்கள் எத்தனையோ ?

    இவ்வாறு ஆய்வுகளை இடையில் நிறுத்தப்பட்ட அரிக்கமேடு , ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் எப்போது மீண்டும் ஆய்வு தொடங்கப்படும் ,? முடிவுகள் எப்போது மக்களுக்குத் தெரியவரும் ?.
    அது ஒரு “கோடி” கொடுத்தாலும் பதில் தெரியாத கேள்வி .!

    இவ்வாறுதான் இப்போது இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற அகழ்வாய்வு கீழடியில் மண்போட்டு மீண்டும் மூடப்பட்டது

    திரு பாலசுப்ரமணியம் என்பவர் கீழடியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 1970 முதல் வரலாற்று ஆசிரியராக வேலை செய்து வந்திருக்கிறார் . .

    1979 இல் அவர் கீழடியின் ஒரு பகுதியில் பள்ளிச் சந்தைத்திடல் என்னும் இடத்தில் ஒரு மண்மேடை கண்டார். அதில் சில டெராகோட்டா மண் சிலைகளை கண்டெடுத்தார் . அவைகளை தொல்லியல் துறையில் காட்டியபோது அவை 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றனர் .வைகை நதிக்கரை நாகரீகம் பற்றி ஆய்வு செய்ய தொல்லியல் துறை 293 இடங்களைத் தேர்ந்தெடுத்திருந்தனர். அப்போது பள்ளிச் சந்தைத் திடல் பற்றிய செய்தி அவர்களுக்கு ஆர்வம் கொடுத்தது . எனவே கீழடியில் அகழ்வாய்வு செய்ய தீர்மானித்தனர் .

    இதற்கு ஒரு பள்ளிக்கூடத்தின் வரலாற்று ஆசிரியரான பாலசுப்ரமணியம் காரணம் ஆக இருந்தார் . ஆனால் 1978 இல் தொடங்கிய முயற்சி 2015 இல் தான் ஆய்வாக மலர்ந்தது .

    இந்தத் தகவல் விரிவாக செய்திக் கட்டுரையாக Frontline, February 19, 2016 இல் வந்துள்ளது . ( திரு நா .கணேசன் அவர்கள் அவருக்கு வந்த கடிதத்தை மின் தமிழ் குழுவில் இட்டிருந்தார் -அதில் இந்தத் தகவல்கள் உள்ளன -அவருக்கு நன்றி )

    இத்தனை முயற்சிக்குப் பின் மலர்ந்த இந்த ஆய்வு இரண்டு ஆண்டுகளே நீடித்தது . 5600 தொல்லியல் சான்றுகள் சேகரிக்கப்பதில் இரண்டு மட்டுமே ரேடியோ கார்பன் சோதனைக்கு அனுப்பப்பட்டது .

    எத்தகைய காரணங்கள் கூறப்பட்டாலும் வரலாற்று உண்மைகள் தக்க காலத்தில் வெளிவராவிட்டால் அதற்கான ஆதாரங்கள் அழிந்துவிடக்கூடும் .இது வருத்தம் அளிக்கும் போக்கு ஆகும் . இத்தகைய போக்கு வரலாற்று ஆய்வுக்குத்தான் பெரும் இழப்பு !என்று தணியும் நமது இத்தகைய அறியாமையும் , அலட்சியமும் ,?

    அடுத்த வேறு முக்கிய செய்திகளுடன் சிந்திப்போம் .
    கருத்துக்களைப் பகிர்த்தால் மகிழ்வேன் .

    Share
  • வரலாறுகளின் வேர் -5

    -அண்ணாமலை சுகுமாரன்

    ANS-1-1 (1)

    கடந்து போன 19ம் நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டம் முழுமையும் (இந்தியா, நேபாளம் , பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை , அவை அத்தனையும் அப்போது ஆங்கிலேயர் ஆளுகையில் இருந்தன )அசோகரின் கல்வெட்டுகள் மிக அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அவைகள் பிரின்செப்பின் முன்னெடுப்பால் புரிந்து கொள்ளப்பட்டன .. இந்திய வரலாற்றின் மிகப் பழமையான, குறிப்பிடத்தக்க நீளமான, முழுதும் புரிந்து கொள்ளப்பட்ட கல்வெட்டுகள் அசோகர் காலத்தவை மட்டுமே எனலாம். இதற்கு வழி வகுத்தது பிரின்செப் தான் என அந்தக்காலத்தில் அறியப்பட்டது .

    அசோகரின் கல்வெட்டுகள் பெருவாரியாக தூண் மற்றும் பாறைக்கல்வெட்டு என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டன . பாறைக்கல்வெட்டுகள் மேலும் மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டன .அவை சிறு பாறை கல்வெட்டுகள் , கற்பாறை ஆணைகள் மற்றும் குகைக்கல்வெட்டுகள் ஆகும் .

    இவைகளைப் பற்றிய விரிவானத் தகவல்கள் ,இந்த கல்வெட்டுகள் தெரிவிக்கும் செய்திகள் மற்றும் கருத்துகள் சுவையானவை எனினும் நாம் பிரின்செப் பற்றிய தகவல்ளைத் தொகுப்பதாலும் , அவர் கண்டுபிடித்த கல்வெட்டுகளில் கிடைத்த தமிழ் நாட்டைப் பற்றிய தகவல்களில் மட்டுமே குறிப்பிட விரும்புவதால் , அதைப்பற்றிய செய்தியை மட்டும் இனி பார்க்கலாம் .இல்லையேல் இந்தத் தொடர் பாதை மாறிவிடும் .

    பொதுவாக அசோகர் தூண்களிலும் , கற்பாறைகளிலும், குகைச்சுவர்களிலும் பொறிக்கப்பட்ட அரசாணைகள், பிரகடனங்கள் எல்லாம் அசோகரின் சீர்திருத்தங்களையும் கொள்கைகளையும் குடிமக்களுக்கு வழங்கிய அறிவுரைகளையும் பறை சாற்றின. ஆயினும் அவற்றில் இரண்டாவது பாறைக்கல்வெட்டும் , 13 வது பாறைக்கல்வெட்டும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது .

    இரண்டாவது பாறைக்கல்வெட்டு இவ்வாறு கூறுகிறது ,

    1. ஸர்வத் விஜிதே(ம்)ஹி தேவாநாம்பிர்யஸ பிர்யதர்ஸினோ ராஞோ
    2. ஏவமபி ப்ர சந்தேஸீ யதா சோடா, பாடா ஸதியபுதோ கேதளபுதோ ஆ தம்ப
    3. பர்ணி அன்தியோகோ யோன ராஜா யே வாபி அன்தியகஸ் ஸாமிநோ
    4. ராஜானோ ஸவத தேவனாம் பியஸ ப்ரிய (பிய) தஸினோ ராஞோ த்வே சிகீச்சா கதா
    5. மனுஸ சிகிச்சா ச பஸீ சிகிச்சா ச ஔஸீதானி ச யாநி மனுசோபதானி ச
    6. பஸோ ப கானி ச யத் யத் நாஸ்தி ஸர்வத்ர ஹாரா பிதானி ச ரோபா பிதானிச
    7. முலானி ச ஃபலானிச யத் யத் நாஸ்தி ஸர்வத் ஹாரா பிதானி ச ரோபாபிதானி
    8. பந்தேஸீ கூபா ச கானாபிதா வ்ருச்சா ச ரோபா பிதா பரிபோக்ய பஸீ மனுஸாநம்

    தேவனுக்குப் பிரியமானவன் என குறிப்பிடப்பெறும் . அசோகர் தமது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டுமின்றி அண்டை நாடுகளான , சோழ, பாண்டிய, ஸத்தியபுத்திரர், கேரளபுத்திரர் மற்றும் அவருடைய அண்டைநாடுகளுக்கும் இரு வகை மருத்துவங்கள் அளிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது . அதாவது மனிதருக்கும் விலங்கினங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பெறுதல் வேண்டும். எங்கெல்லாம் மூலிகைச் செடிகளும் பழம் தரும் மரங்களும் இல்லையோ, அவைகள் கிடைக்கும் இடங்களிலிருந்து தருவித்து இல்லாத இடங்களில் நடப்படவேண்டும் என்றும், பசுக்கள் நீர் அருந்த கிணறு போன்ற நீர் நிலைகள் ஏற்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றது. இவ்விதமாகப் பசுக்களும், மனிதர்களும் , மகிழ்வுடன் வாழவேண்டும் என்று அந்தக் கல்வெட்டு கூறுகிறது.

    இக்கல்வெட்டில் தமிழகத்தில் சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்களின் வம்ச பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    இதனால் அசோகருக்கு இணையான காலத்தில் ( கி மு 3ஆம் நூற்றாண்டுகளில்) தமிழ் மன்னர்கள் தமிழ் நாட்டுப்பகுதியில் வாழ்ந்தது தெளிவாகிறது .நமது சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளுக்கு ஒரு வரலாற்று ஆதாரம் தமிழ் நாட்டுடன் சம்பந்தம் இல்லாத அசோகர் மூலம் வட இந்தியாவில் இருந்து கிடைக்கிறது .இது நமது தமிழக வரலாற்றிற்கு மிக முக்கிய சான்று ஆகும் . எனவேதான் இவைகளை சற்று விரிவாக எழுதினேன் .

    தமிழக வரலாற்றை குறிப்பாக சங்க காலத்தை கி பி .8ஆம் நூற்றாண்டு என மிகவும் பின்னோக்கி கொண்டு செல்லும் “டிக்கன்” போன்ற அறிஞர்களின் கருத்துகளைத் தவறானவை என இக்கல்வெட்டு மூலம் மெய்ப்பிக்க நமக்கு தக்க சான்றுகள் கிடைத்திருக்கிறது ..

    அசோகர் தனது அண்டை நாடாகக் குறிப்பிடுவதால் அசோகரின் ஆட்சியோ படையெடுப்போ தமிழகத்தில் நிகழவில்லை என்பது அவரது கல்வெட்டு மூலமே உறுதியாகிறது தமிழ் மன்னர்கள் இக்காலத்தில் ( கி மு 300)மிக வலிமைகொண்டு விளங்கியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது இவை வெளிவர உதவியவர் பிரின்செப் தான் என்பது நாம் அவரை நினைவு கூறுவது முக்கியமானதாகும் .

    தமிழ் மன்னர்கள் மட்டுமின்றி ஸத்தியபுத்திரர் என்ற ஒரு வம்சத்தின் பெயரோ அல்லது மன்னரின் பெயர் அந்தக் கல்வெட்டில் இடம்பெற்றிருந்தது ஸத்தியபுத்திரர் என்பது யாரைக் குறிப்பிடுகிறது என்பது நீண்ட காலம் ஒருபுரியாத, விடை தெரியாத கேள்வியாகவே இருந்துவந்தது .
    அந்த புதிரை திருக்கோவிலூர் அருகே ஜம்பை எனும் ஊரில் கிடைத்த ஒரு கல்வெட்டு புரியவைத்தது .இவ்வூரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குகை ஒன்றிலேயே இக் கல்வெட்டு அமைந்துள்ளது.

    கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு தமிழ்நாட்டு வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் கொண்ட ஒரு கல்வெட்டாகக் கருதப்படுகின்றது.

    சங்ககாலத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் பேசப்படுபவனும், தகடூர்த் தலைவனுமாகிய அதியமான் நெடுமானஞ்சி ஒரு குகை வாழிடத்தைத் தானமாகக் கொடுத்ததை இக் கல்வெட்டு அறிவிக்கின்றது.

    கல்வெட்டின் செய்தி: ஸத்திய புத்திரன் அதியன் நெடுமான் அஞ்சி என்பவர் தானமாகக் கொடுத்தே பாளி (சமணர் படுக்கை)

    சங்ககால அரசன் ஒருவனின் பெயர் கொண்ட கல்வெட்டுச் சான்று ஒன்று கிடைத்தது இந்தக் கல்வெட்டின் சிறப்பு. அத்துடன், அதியமான் இந்தக் கல்வெட்டில் “சதிய புத்தோ” என்னும் அடை மொழியுடன் குறிப்பிடப்பட்டுள்ளார் . இதன்மூலம் அசோகனின் கல்வெட்டொன்றில், சேர, சோழ, பாண்டியர்களுடன்”சதிய புத்தோ” எனக் குறிப்பிடப்பட்டுள்ள அரசகுலம் எது என்பது குறித்து நிலவிய விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது

    தமிழ் அரசர்களின் சிற்றரசர்காளாக விளங்கிய அதியமான் போன்றோரும் அசோகர் அறியும் வண்ணம் சிறப்புற்று விளங்கியுள்ளனர் என்பது தெளிவாகிறது. அசோகருக்கு அண்டை நாடாகக் குறிப்பிடப்படுவதால் அசோகரின் ஆட்சியோ படையெடுப்போ தமிழகத்தில் நிகழவில்லை என்பதை அறியலாம். தமிழ் மன்னர்கள் இக்காலத்தில் மிக வலிமைகொண்டு விளங்கியுள்ளனர் எனக் கூறலாம்.

    இனி 13 வது பாறைக்கல்வெட்டு கூறும் தகவல்களைப் பார்க்கலாம்.

    அவருடைய 13 வது பாறைக் கல்வெட்டில், தெற்கில் தம்பண்ணி அதாவது தாம்பரபரணி வரையான சோழ பாண்டிய நாடுகளில் தர்ம விஜயத்தில் வெற்றிகொண்டதாகக் கூறுகிறார் .

    இதில் சதிய புத்தோ அதியமான் நெடுமானஞ்சி பெயர் இடம் பெறவில்லை கேரளா புத்திர எனும் சேரர் பெயர் இடம் பெறவில்லை . இதற்குக்காரணம் முந்தய கல்வெட்டுக்கு சில ஆண்டுகள் சென்றபின் இந்தக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டதால் அப்போது அதியமான் இறந்து போயிருக்கலாம் என தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டியல் கூறுகள் எனற புத்தகத்தில் முனைவர் ஆ .ஜெகதீசன் கூறுகிறார் .
    சேரர்கள் பாண்டியர்களால் வெல்லப்பட்டிருக்கலாம் .

    மேலும் அசோகர் தாம்பரபரணி வரையான சோழ பாண்டிய நாடுகளில் தர்ம விஜயத்தில் வெற்றிகொண்டதாகக் கூறுகிறார் . போரில் வென்று இந்தப்பிரதேசங்களைக் கொண்டதாகக் கூற இயலாது . அவரது போதனைகள் அங்கே பரவியதாகத்தான் தர்ம விஜயம் என்று குறிப்பிடுகிறார் எனக் கொள்ளலாம் .

    அதியமானைப்பற்றியும் தமிழ் மூவேந்தர் பற்றியும் வேறு ஒரு கல்வெட்டு தமிழ் நாட்டுக்கு வெளியே ஒரிசாவில் ( கலிங்கம் ) கிடைத்துள்ளது .

    இதைக்கண்டுபிடித்ததில் நேரடியாக பிரின்செப் அவர்களுக்கு தொடர்பு இல்லை என்றாலும் ,இந்தத்தருணத்தில் இந்த கல்வெட்டுப்பற்றியும் தெரிந்துக் கொள்வதில் தவறில்லை எனலாம் .

    இந்தியக் கல்வெட்டுகளிலேயே வரலாற்று நிகழ்ச்சிகளை அவை நடந்த ஆண்டுகளைக் குறிப்பிடும் முதல் கல்வெட்டு ஹத்திக்கும்பா கல்வெட்டாகத்தான் இருக்கக்கூடும். காரவேலன் என்ற மன்னர் தென்னாட்டில் அப்போது நிலவிய ஒரு கூட்டணியைப் பற்றிக் கூறுகிறார் .

    அந்தக்கூட்டணி நிலவியதால் தமிழ் நாட்டை வெல்லவில்லை எனக் கூறுகிறார் .

    , தமிழ் மூவேந்தர் உடன்பாடு பற்றிய குறிப்பில் 113 அல்லது 1300 ஆண்டு நீடித்திருந்த கூட்டணி என்றும், இந்தக் கல்வெட்டு ஆண்டுகளைக் குறிப்பிடுகிறது. தனசூலியக் கால்வாய் கட்டிய ஆண்டைப் பற்றிக் குறிப்பிடும் “நந்த ₃ ராஜ திவஸ ஸத” (नंदराज तिवस सत) என்பதை நந்தராசன் ஒருவனில் தொடங்கிய ஆண்டுக்கணக்கில் கொள்வதா அல்லது சமண சமயத்தைச் சார்ந்த காரவேல மன்னனுக்கு சமணத்தின் முக்கியமான வர்த்தமான மகாவீரர் மறைந்த ஆண்டிலிருந்து தொடங்கிய மகாவீரர் ஆண்டுக்கணக்கில் கொள்வதா என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அதே போல “திவஸ ஸத” (மூன்று நூறு) என்பதை முந்நூறு என்று படிக்காமல் நூற்று மூன்று என்று ஏன் படிக்கிறார்கள் என்ற குழப்பம் இன்னமும் நிலவுகிறது . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இயற்கையின் தாக்கத்தால் விளைந்த சேதங்கள் மட்டுமின்றி, சில எழுத்துகளின் மாறுபட்ட வடிவம், உளிக்குறிகளையும் எழுத்துகளையும் வேறுபடுத்த முடியாத குழப்பம், இவ்வைகளாலும் மழைநீராலும் சிதைந்த எழுத்துகள் என்று பலவற்றால் பதினேழு வரிகளைப் படிப்பதிலேயே ,அறிஞர்களிடையே சச்சரவுகளும் பல கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வந்திருக்கின்றன

    இவ்வாறு பிரின்செப் அவர்களின் சீரிய முன்னெடுப்பால் அசோகரின் பிராமி எழுத்துகள் புரிதல் தொடங்கியது .

    அடுத்த வாரம் இன்னமும் சில முக்கிய நபர்களின் வரலாற்றுப் பங்களிப்பையும் , அதன் தாக்கம் என்ன என்பதையும் விபரமாகக்காணலாம்

    தொடருவோம்

    Share
  • வரலாறுகளின் வேர் -4

    அண்ணாமலை சுகுமாரன்

    ans-1-1

    இந்தத் தொடரின் சென்றபகுதியில் பிரின்செப் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒருவரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் எனக் குறிப்பிட்டிருந்தேன் .

    அந்த மிக முக்கிய ஒருவர் வேறு யாரும் இல்லை. அசோகர் தி கிரேட் தான் அவர் . அசோகர் என்று ஒரு அரசர் இருந்தார் என்பதை பண்டைய இலக்கியங்கள் மட்டுமே கூறிவந்தன. ஆயினும் எந்த ஒரு அறிவியல் ஆதாரங்கள் கொண்டும் அந்த வரலாறு அப்போது நிறுவப்படவில்லை .

    அசோகர் என்ற ஒருவர் இருந்தாரா அல்லது வெறும் தொன்மக்கதைகளில் சித்தரிக்கப்படும் கற்பனைப் பாத்திரமா என்ற ஐயம் அந்தக்கால வரலாற்றறிஞர்களிடையே இருந்து வந்தது. அசோகாவதானம் எனும் இரண்டாம் நூற்றாண்டு சம்ஸ்கிருத நூலொன்றும், இலங்கையின் பண்டைய தீபவம்சம், மகாவம்சம் போன்றவை இரண்டும் புராணக்கதைகளின் மிகைப்படுத்தல்களோடு அசோகரின் வாழ்க்கை சம்பவங்கள் பலவற்றை சித்தரிக்கின்றன.

    ஒரு நாடக கதாப்பாத்திரம் போன்று கலிங்கப் பெரும் போரை நிகழ்த்தி பின்னர் போரை வெறுத்து பௌத்த நெறிமுறையின்படி தேசத்தை ஆண்டு வந்தவர் என்று விவரிக்கப்பட்டிருந்தது . ஆயினும் இத்தகைய செய்திகள் வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு அந்தக் காலக்கட்டத்தில் நிறுவப்படவில்லை .

    இந்திய வரலாற்றின் கடந்துபோன இந்த இருபது நூற்றாண்டில் ,குறைந்தது பாதி கால அளவில் இந்தியா அடுத்தவர்களின் ஆளுமையிலோ அல்லது ஆக்கிரமிப்பிலோதான் இருந்திருக்கிறது .

    தமிழ் நாட்டை எடுத்துக்கொண்டால் கி. பி. 14ஆம் நூற்றாண்டுக்குப் பின் தொடர்ந்து மாறி மாறி தமிழர் அல்லாத பிறரால் ஆளப்பட்டு வந்திருக்கிறது . 6ஆம் நூற்றாண்டுக்கு முன் சுமார் 300 வருடங்கள் களப்பிரர்கள் ஆளுகையில் இருண்டகாலமாக இருந்தது எனக் கூறப்படுகிறது .இத்தகைய சூழலில் ,இந்தியா எங்கும் தொல்லியல் எச்சங்கள் அந்தக்காலக்கட்டத்தில் மிகுந்து தொகுப்பாரின்றி கிடந்தன ..
    அவ்வாறே அசோகரால் அமைக்கப்பட்ட ஸ்தூபிகளும் ,பாறை கல்வெட்டுகளும் இந்தியாவெங்கும் , தமிழ் நாட்டைத்தவிர இலங்கையிலும் பல இடங்களில் கிடைத்தன. ஆயினும் அந்தக்காலக்கட்டத்தில் அவைகள் அசோகரால் அமைக்கப்பட்டது என யாருக்கும் தெரியாது ,அதில் எழுதப்பட்டிருக்கும் விநோதமான எழுத்துக்கள் அடங்கிய வாசகங்கள் என்பது அப்போது யாருக்கும் புரியவும் இல்லை .

    கி. மு. 273-முதல் 236 வரை ஆட்சி புரிந்த அசோகர் , அவரின் ஆட்சியின் கடைசிப் பகுதியில் புத்த மதத்திற்கு மாறியபின் இந்தியாவில் தமிழ் நாட்டைத் தவிர,மேலும் இலங்கையிலும் புத்த மத கொள்கைகளையும் , இதர தர்ம நீதிகளையும், அசோகர் செய்த மக்கள் தொண்டு விவரங்களையும் கல்லில், தூண்களிலும் , பாறைகளிலும் பொறித்து வைத்திருந்தார் . அசோகரின் கலைபடைப்புகளில் முதன்மையானவை மௌரியப் பேரரசு முழுமையும் அவர் நிறுவிய தூண் சாசனங்கள். 40 முதல் 50 அடி உயரத்தினதாய் வான் நோக்கிய தூண்கள். அவைகள் இரண்டு விதமான கற்களினால் செய்யப்பட்டிருந்தன. தூணின் நடுக்கம்பத்திற்கு ஒன்று ; தூண் சிகரத்திற்கு இன்னொன்று. நடுக்கம்பம் ஒற்றைக் கல்லிலிருந்து வெட்டப்பட்டதாக இருக்கும்.

    பௌத்த சமயக் கொள்கைகளைப் பரப்பும்பொருட்டு நிறுவப்பட்ட தூண்களின் சிகரத்தில் விலங்குகளின் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன . பௌத்த சமயத்தின் பரவலான சின்னமாக இருக்கும் தாமரை மலரை தலைகீழாக்கி அதன் மேல் விலங்குகளின் சிலை அமைக்கப்பட்டிருக்கும் ; சிங்கம் அல்லது நின்ற நிலை அல்லது உட்கார்ந்த நிலையில் மாடு ஆகிவையாகும் .

    நான் பள்ளி இறுதி வகுப்பு படித்த போது (1965), எங்களுக்கு சமூகம் என்று ஒரு பாடம் இருந்தது. அதில் இரண்டு பிரிவுகள் உண்டு . ஒன்று சரித்திரம் மற்றது பூகோளம் , ஒவ்வொன்றுக்கும் 50 மதிப்பெண்கள் .
    இதில் சரித்திரம் என்பது மதிப்பெண் எடுக்க எளிதானது என்பது எங்கள் எண்ணம் .ஏனெனில் எப்படியும் அசோகரின் ஆட்சிக்காலம் அல்லது அக்பரின் ஆட்சிக்காலம் அல்லது வேறு ஒரு மன்னரின் ஆட்சிக்காலம் ஏன் பொற்காலம் என்று ஒன்று அல்லது இரு கேள்வி நிச்சயம் அந்தப்பாடத்தில் வரும் என்பது தெரியும் ..

    அதற்கு பதில் என்னவோ ஒரே மாதிரிதான் , நாடு முழுவதும் சாலைகள் அமைத்தார் ,நிழல் தரும் மரங்கள் நட்டார், கிணறுகள் அமைத்தார் ,மனிதர்களுக்கும் ,மிருகங்களுக்கும் மருத்துவ மனைகள் அமைத்தார், இத்தியாதி ,இத்தியாதிகள் .

    இதில் ஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால் இத்தனை மக்கள் பணிகளை தான் செய்ததாக அசோகர் தனது சாசனங்களில் பொறித்து வைத்திருந்தார் . இவைகள் அத்தனையும் சுமார் 2500 ஆண்டுகளாக கல்லில் பொறிக்கப்பட்டு ,படிக்க ஆளில்லாமல் காத்துக்கிடந்தது .அசோகரின் சீர்திருத்தங்களையும் கொள்கைகளையும் குடிமக்களுக்கு வழங்கிய அறிவுரைகளையும் நவீன உலகிற்கு பறை சாற்றின. நன்னெறிகளின் அடிப்படையில் ஒரு பேரரசை நிறுவிய ஆற்றல் மிகு பேரரசரின் நல்ல எண்ணத்தை இக்கல்வெட்டுகள் மூலம் நமக்கு அறியவருகிறது .

    அசோகர் ஸ்தம்பங்கள் பிற்காலத்தில் வந்த சில பேரரசர்களின் கவனத்தைக் கவர்ந்தன. அவைகளில் பொறிக்கப்பட்டிருந்தது என்ன என்று அப்போது புரியாவிட்டாலும் அதன் வனப்பு பலரையும் கவர்ந்தது .எனவே அவைகளைப் பெயர்த்தெடுத்து வந்து தாங்கள் விரும்பிய இடங்களில் அமைத்துக் கொண்டனர் . அந்த சமயத்தில் இந்தியா வந்த சீன யாத்திரீகர்கள் பாஹியான் மற்றும் யுவான்சுவாங் அசோகர் ஸ்தூபிகளைப் பார்த்தார்களே தவிர அதில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகளை படிக்கவோ அல்லது படிக்காத தெரிந்த உள்ளூர் வாசிகளையோ பெற இயலவில்லை .எனவே யூகத்தின் அடிப்படையில் தவறான விளக்கங்களைத் தந்து சென்றனர் .

    அலகாபாதின் அசோகா ஸ்தம்பம் போல், தில்லியில் இருக்கும் இரண்டு அசோக ஸ்தம்பங்களும் மீரட் மற்றும் அம்பாலாவில் இருந்து எடுத்து வரப்பட்டவை . 14ஆம் நூற்றாண்டில் தில்லியை ஆண்ட பெரோஸ் ஷா துக்ளக் என்கிற மன்னரால் அவை எடுத்துவரப்பட்டன . . இவ்விரண்டு ஸ்தம்பங்களிலும் சிகரம் இல்லை. புராதன கௌஷம்பி நகரத்தில் நிறுவப்பட்ட ஸ்தம்பம் இன்று அலஹாபாத்தில் திரிவேணி சங்கமத்துக்கு அருகில் முகலாயப் பேரரசர் அக்பர் கட்டிய கோட்டைக்குள் காணப்படுகிறது.

    இவ்வாறு காட்சியளித்த ஸ்தூபிகளை ஒரு முறை குதிரையில் உலா போகும்போது இரண்டு பெரிய உயரமான தூண்களை பிரிசெப் பார்த்திருக்கிறார். அதில் இருந்த விநோதமான எழுத்துகள் அடங்கிய வாசகங்கள் அவரை ஈர்க்கின்றன. இது என்ன மொழி என்று அங்குள்ள மக்களிடமும் அறிஞர்களிடமும் கேட்கிறார். யாருக்கும் சரிவரத் தெரியவில்லை. அவைகள் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு படைஎடுத்து வென்ற பிறகு எழுதி வைத்த கல்வெட்டு என சில புத்திசாலிகள் பிரின்செப்பீடம் கூறினார்கள் அலெக்சாண்டர் எங்கே டில்லி வந்தார்? அவர் பஞ்சாப் பாதி கூட வரவில்லையே என்று அவைகளை நிராகரித்தார் பிரின்செப்.

    பிரின்செப் “ஏஸியாட்டிக் சொசைட்டி” என்று ஆராய்ச்சி சங்கத்தில் இருந்ததாலும் ஆங்கிலேயே அரசில் உயர் பதவியில் இருந்ததாலும் , இது மாதிரி எழுத்துகள் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கிறது என்று தேடச் சொல்கிறார்.

    அவரே ஒரு முறை ஒரு ஸ்தூபியின் சிறிய உடைந்த பகுதியை பார்க்கிறார். அதில் மூன்று வாக்கியத்தில் மூன்று இடத்திலும் ஒரே வார்த்தைகள் இருக்கின்றன. அதைப்பார்த்த பிரின்செப்சுக்கு ஒரு வித்தியாசமான எண்ணம் , ஐசக் நியூட்டனுக்கு வந்ததுபோல் இவருக்கும் வந்தது .

    பொதுவாக யாராவது ஒரு தர்மம் ,கொடை இவைகளைக் கொடுத்தால் அதை வாக்கியத்தின் முதலிலோ அல்லது இறுதியிலோ தானம் தந்தது இன்னார் என்று எழுதிவைக்கும் வழக்கம் அன்றே இருந்திருக்கிறது. சமஸ்கிருதத்திலும் “தா,ன,ம்” என்றுதான் அது வரும். அதுமாதிரி இந்த வினோதமான வித்தியாச எழுத்து மொழியில் ஏன் இந்த மூன்று எழுத்துகளும் “தா அல்லது த” , “ன” “ம்” என்பதை குறிப்பதாக இருக்கக்கூடாது என பிடித்து விட்டார். இவ்வாறு தில்லியில் இருக்கும் ஒரு ஸ்தம்பத்தில் பொறிக்கப்பட்டிருந்த வித்தியாசமான பொறிப்பில் மூன்று எழுத்துகளைப் புரிந்துகொண்டது ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது “தேவனாம்பிய” (தெய்வங்களுக்கு பிரியமானவன்) “பியதஸ்சி” (மக்களை அன்புடன் கருதுபவன்) போன்ற பட்டப் பெயர்கள் தில்லி ஸ்தம்பத்தில் மட்டுமில்லாமல் வேறு பல ஸ்தம்பங்களிலும் பொறிக்கப்பட்டிருப்பது மெல்ல மெல்லத் தெரிய வந்தது.

    அந்த எழுத்து எதோ காரணத்தால் பிராமி எழுத்து எனப்பட்டது. பிரம்மன் உண்டாக்கியதால் பிராமி எனப்பெயர் பெற்றது என்பவர்களும் உண்டு. இந்தியாவில் இருந்து எல்லா பிராமி எழுத்துகள் கல்வெட்டையும் பிரதி எடுத்து ஒவ்வொன்றாய் கண்டுபிடித்தார். அந்த பிராமி எழுத்துகளுக்கும் “பாலி” மொழிக்கும் சம்பந்தம் இருப்பதைச் சொன்னார்.

    எல்லா வாக்கியங்களிலும் “தேவாம்சி பியதாசி” என்று ராஜா பேர் சொல்லப்பட்டதால் பிரின்ஸ்செப்புக்கு குழப்பம் வந்தது. ராஜாவின் பேர் “பியதாசி” என்பதா இன்னும்வேறு ஏதாவது இருக்கிறதா என்ற குழப்பம் வந்தது.

    இதற்கிடையே தரவுகளைத் தேடச் சொன்ன ஆணைக்கு பலன்கள் வரத் தொடங்கின . இலங்கையிலிருந்து தகவல் ஒன்று வருகிறது. அங்கே கிடைத்த இலங்கை மன்னன் பற்றிய கல்வெட்டிலும் இலங்கை மன்னன் பேர்” தேவநாம்சி பியதாசி” என்றே போட்டிருக்கிறது. என்பதே அது .

    இன்னொரு தகவல் கர்நாடகம் மைசூரில் மாஸ்கி என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் மன்னன் பெயர்” தேவநாம்சி பியதாசி அசோகன்” என்று இருக்கிறது.

    எனவே அந்த தேவநாம்சி பியதாசி எனும் சக்கரவர்த்தியின் பெயர் அசோகர் என்பது உறுதியானது. இந்திய வரலாற்றில் இந்த கண்டுபிடிப்பு எத்தனை முக்கியம் வாய்ந்தது என்பது இப்போது நம் அனைவருக்கும் தெரியும். அசோக சக்கரவர்த்தியின் புரிதலுக்குப் பிறகு இந்திய வரலாறு படிப்படியாக உருப்பெற ஆரம்பித்தது .பிராமி எனும் எழுத்து படிக்கக் கூடியதாயிற்று .பல கல்வெட்டுகள் பாதிக்கப்பட்டன .

    சாரநாத்தின் அசோக ஸ்தூபியை அலங்கரித்த நான்கு சிங்கங்களின் சிகரம் அதிக முக்கியமானது. அதுவே நமது இந்திய அரசின் தேசியச் சின்னம் ஆனது . . நான்கு சிங்கங்கள் பின்னுக்குப் பின்னாக நிற்பதை சித்தரிக்கிறது. அந்த சிங்கச் சிலைகள் ஒரு வட்ட சட்டத்தின் மேல் பொருத்தப்பட்டிருக்கின்றன. அந்த வட்ட சட்டத்தைச் சுற்றி செதுக்கப்பட்ட யானை, ஓடும் குதிரை, மாடு, சிங்கம் – இவற்றுக்கிடையிடையே 24 ஆரங்களையுடைய சக்கரங்கள் மணி வடிவ தலைகீழ்த் தாமரையின் மேல் வைக்கப்பட்டுள்ளன.

    அந்த 24 ஆரங்கள் உள்ள தர்ம சக்கரம்தான் நமது தேசியக் கொடியில் நடுவில் இடம்பெற்று பட்டொளி வீசிப் பறக்கிறது. அசோகரின் அத்தனை பாறைக்கல்வெட்டுகளும் ,ஸ்தூபிகளும் சொன்ன கருத்துகள் அத்தனையும் மக்களுக்குத் தெரிய வந்தன .இந்த வகையில் பிரின்செப் செய்த தொண்டு, அவரின் ஆர்வம் இந்திய வரலாற்றின் ஒரு மிக முக்கிய தொடக்கத்தை ஆதாரப்பூர்வமாக அறிவித்தது .

    அசோகர் தி கிரேட் என அசோகர் பெயர் பெற்றார் .தென்னாட்டில் பிரின்செப் மாதிரி ஒரு ஆய்வாளர் நமது ராஜராஜன் போன்றோரை அறிவியல் உலகத்திற்கு ஆதாரங்களுடன் தக்க முறையில் அறிமுகம் செய்யாததால் நமது பேரரசர் ராஜராஜன் , ராஜராஜன் தி கிரேட் என அழைக்கப்படவில்லை .

    சந்திர குப்த மவுரியரின் பேரனான அசோகர் பற்றி அதுவரை வரலாறு கவனிக்கவில்லை. அவரை ஒரு அடையாளம் தெரியாத மன்னர் என்றே நினைத்து வந்துள்ளனர். ஆனால் பிரின்செப்ஸ் என்ற ஆங்கிலேயர்தான் அசோகரை வரலாற்றுக்கு அறிமுகம் செய்துவைத்தார் .

    பிறகு அசோகரின் எல்லா கல்வெட்டுகளையும் படித்து முடித்தார். அவர் படித்து புரிந்து கொண்டதில் சில இவை. எல்லா மன்னர்கள் போல இந்திரன் சந்திரன் என்று மட்டும் அசோகர் தன்னை பற்றி எழுதிவைக்கவில்லை. தன்னை ஒரு அவதாரமாக முன்னிருத்தவே செய்யவில்லை. தான் செய்த பாவங்களையும் கல்வெட்டிலே செதுக்கியுள்ளார். பல இடங்களில் வெட்கத்தை விட்டு மன்னிப்பும் கேட்டிருக்கிறார். அசோகர் காலத்தில் மிருகவதை கடுமையாக தடுக்கப்பட்டுள்ளது.

    தம்மா என்ற தர்ம சக்கரத்தை அடிப்படையாகக் கொண்டு மிகப்பெரிய தர்மம் பற்றிய சிந்தனையுடன் வாழ்ந்திருக்கிறார் அசோகர்.

    இதுபோன்று இன்னமும் நிறைய உள்ளன. ஆயினும் இந்த கட்டுரை அசோகர் பற்றிய கட்டுரை அல்ல. இது வரலாற்றின் வேர்களாக இருந்த பிரின்செப்போன்றவர்களின் வரலாற்றுத் தொடர் .எனவே இந்த கல்வெட்டு கூறும் விபரங்களை இத்துடன் நிறுத்திக்கொள்வோம்.

    அதே சமயம் இது எந்த வகையிலும் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் நமக்கு செய்து விட்டுப்போன அநியாயங்களை மறந்து விட்டு அவர்களை நியாயப்படுத்தும் முயற்சியும் அல்ல .

    அவர்கள் அந்தக்காலகட்டத்தில் கிடைத்த ஆதாரங்களைத் தொகுத்து அவர்கள் புரிந்து கொண்ட வகையில் அல்லது அவர்களுக்கு அருகாமையில் இருந்தவர்களால் சொல்லப்பட்ட நமது வரலாற்றை இவர்கள் உலகுக்கு அறிமுகம் செய்தனர் .

    அவர்கள் கூறிய வரலாறு அத்தனையும் உண்மையானவை என்று நாம் எடுத்துக்கொள்வது தேவையில்லை . ஆயினும் அதை உறுதியாக மறுக்கும் வகையில் அடுத்த புதிய ஆதாரம் நமக்கு கிடைக்கும்வரை நம்மால் அதை மறுக்கவும் முடியாது .

    இந்தத் தொடர் இந்திய வரலாறு எழும்ப பல ஆதாரங்களைத் தொகுக்க உதவியவர்களை அறிமுகம் செய்யும் முயற்சி மட்டுமே . வரலாறு என்றுமே மாறுதலுக்கு உட்பட்டது . அசோகரின் பல பாறைக் கல்வெட்டுகளை படித்த பிரின்செப் தமிழ் நாட்டின் சங்க காலத்தை உறுதி செய்யும் சில சான்றுகளையும் கண்டெடுத்தார் . அவைகளை அடுத்த வாரம் காணலாம் .

    நன்றி

    Share
  • வரலாறுகளின் வேர்- 3

    அண்ணாமலை சுகுமாரன்

    ans-1
    வரலாற்றின் வேர்கள் பகுதி ஒன்றில் வரலாற்று சான்றுகளையும் ,ஆய்வுகளையும் தொகுக்க சர் வில்லியம் ஜோன்ஸ் , 1784 இல் ஏசியாட்டிக் சொசைட்டியைத் தொடங்கியதைக் காட்டியிருந்தேன் . இதுவே வரலாற்று சான்றுகளை சர்வதேச நோக்கில் ஆவணப்படுத்தும் முதல் முயற்சியாக இந்தியாவில் அமைந்தது .

    இந்திய தொல்லியல் வரலாறு அறிவியல்பூர்வமாக , உலகம் ஒப்புக்கொள்ளும் வகையில் ஆவணப்படுத்தும் போக்கு அப்போது முதலே துவங்கியது .

    அதற்குமுன்வரை நம்மிடையே பலவிதமான கதைகள் இருந்தன ,காப்பியங்கள் இருந்தன ,இலக்கியங்களிலும் வரலாற்று செய்திகள் இருந்தன .

    ஆயினும் அவைகளின் உண்மைத்தன்மைக்கு உத்திரவாதம் இல்லாமல் இருந்தது .அவைகளைப்பற்றிய பல செய்திகளை போகப்போக இந்தத் தொடரில் பார்க்கப்போகிறோம் .
    அப்போதைய நிலையில் கி. பி 1750 களில்

    முகலாயர் ஆக்கிரமிப்பு மட்டுமே வரலாற்று ரீதியில் அறியப்பட்டிருந்தது .

    ஏனெனில் ஆங்கிலேயர் வருகைக்கு முன் முகலாயர் ஆட்சியில் இருந்தனர் .ஏனைய வரலாற்று சான்றுகள் கூடிய, ஆய்வுகள் தொகுப்பு வில்லியம் ஜோன்ஸ் போன்ற மனச்சாட்சியுள்ள , நேர்மையான , உண்மையை நாடிய பல கிழக்கிந்திய ஆங்கில அதிகாரிகள் தனிப்பட்ட ஆர்வம் எடுத்துக்கொண்டு, கிடைத்த அத்தகைய செய்திகளை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றனர்.

    வரலாற்றின் வேர்கள் பகுதி இரண்டில் ராபர்ட் புரூஸ்புட் பற்றிய செய்திகளும் அவரின் ஆய்வுகளும் விவரிக்கப்பட்டிருந்தன .

    உண்மையில் காலவரிசைப்படிக்கொண்டால் இவருக்கு முன்பே வேறு சில ஆங்கில ஆய்வாளர்கள் குறிப்பிடக்கூடியவர்கள் இருக்கின்றனர். எனினும் ஏன் இவரைப்பற்றி எழுத எடுத்துக்கொண்டேன் என்றால் அவரின் ஆய்வு இந்திய வரலாற்றில் அதுவும் தமிழக வரலாற்றில் மிக முக்கிய சான்றுகளை அளித்தன .

    பல்லாவரத்தில் கிடைத்த ஒரு சிறிய கல் துண்டை, அது பல இலட்சம் ஆண்டுகளுக்கும் முந்தய தொல் மனிதனின் கல் ஆயுதம் என்று இந்திய ஆய்வாளர்கள் யாராவது நிறுவ முடிந்திருக்குமா என்பது ஒரு கேள்விக்குறிதான் .

    இந்திய வரலாற்றைப் புரட்டிப்போடும் ஆய்வுகளைத் தொடங்கிவைத்தது. இந்தியாவின் பழங்கால வரலாறுகள் பலவற்றை ஆய்வு உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய பெருமை ராபர்ட் புரூஸ்புட்யே சாரும்.

    ஆங்கிலேய நாட்டின் வரலாற்று அறிஞர் மைக்கேல் வுட் தனது “இந்தியாவின் கதை” (“ The Story Of India ”) (http://www.pbs.org/thestoryofindia) எனும் வலைத்தளத்தில் 70,000 – 50,000 ஆண்டுகட்கு முன்னர் இந்தியாவில் முதல் மனிதன் குடியேறினான் என்று பதிவு செய்தார் !

    இத்தகைய பொய், புரட்டல் செய்திகளை மறுக்க நம்மிடையேயுள்ள உலகம் ஒப்புக்கொண்ட ஆதாரப்பூர்வமான தகவல்கள் ராபர்ட் புரூஸ்புட் அவர்களால் கண்டெடுக்கப்பட்ட பல்லாவரம் கற்கோடாரியும், அத்திரம், பாக்கம் மற்றும் குடியம் மலைப்பகுதிகளிலும் கிடைத்த பழங்கற்கால கல், ஆயுதக்குவியல்கள் , சுமார் 150000-2,00,000 – ஆண்டுகள் பழமையானவை என அவர் ஆவணப்படுத்தியதுமே ஆகும் .

    சமீபத்தில் இந்த இடங்களை மீண்டும் ஆய்வு செய்த சாந்தி பப்பு என்னும் ஆய்வாளர் ‘Early Pleistocene presence of Acheulian hominins in South India’ என்ற ஆய்வு அறிக்கையில் இவைகள் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என ரேடியோ கார்பன் முறையில் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார் .
    இத்தகைய உண்மைகள் வெளிவர உதவியவர் .. ராபர்ட் புரூஸ்புட் எனும் பெருமகனார் தான் இன்னமும் அவரைப்பற்றிக் கூற பல தகவல்கள் உள்ளன . அவைகளை பிறகு காணலாம்.

    இப்போது வேறு பல வரலாற்றுத்தரவுகளை நிறுவ உதவிய வேறு சில கிழக்கிந்திய அலுவலர்களைப் பற்றி பார்க்கலாம் .

    ஜேம்ஸ் பிரின்சப்

    1799 ஆகஸ்ட் 20 இல் அவரது குடுபத்தின் ஏழாவது குழந்தையாக , அவரது தந்தை ஜான் பிரின்சப் ஏழையாக இருந்த போது பிறந்தார் . ஜான் பிரின்சப் பிழைப்பிற்காக இந்தியா சென்றார் ,செல்வந்தனானார் . அவரைத்தொடர்ந்து ஜேம்ஸ் பிரின்சப் 15 செப் 1819இல் இந்தியாவில் கல்கத்தாவில் இருந்த நாணய ஆலையில் நாணய உதவி அதிகாரியாகப் பதவி ஏற்றார் (deputy assay master Calcutta mint, ) பின் ஓர் ஆண்டுக்குப்பின் வாரணாசியில் இருந்த நாணய ஆலையில் நாணய உதவி அதிகாரியாக பதவி ஏற்றார் . வாரணாசியில் எங்கு காணினும் குவிந்து கிடந்த ஆலயங்களும் , தூபிகளும் , இடிபாடுகளும் முன்னமே சிறந்த கலை உணர்வு கொண்ட பிரின்சப் அவர்களின் கவனத்தை சுண்டி இழுத்தன .

    அந்த காலத்து காசியின் காட்சிகளை அழகிய ஓவியங்களாகத் தீட்டினார் அவர். காசியின் துல்லியமான அந்த காலத்து வரைபடத்தைத் தயாரித்தார் .இன்னமும் அவைகள் இலண்டனில் உள்ளன .

    பல வரலாற்று செய்திகளையும் ,சான்றுகளையும் தொகுக்கத் துவங்கினார். காசியில் இருந்த அவுரங்கசீபு கட்டிய அழியும் நிலைமையில் இருந்த தூபிகளை புணரமைத்தார் .

    மீண்டும் கல்கத்தாவிற்கு மாறுதல் பெற்ற பிரின்சப் அங்கு வில்லியம் ஜோன்ஸ் ஆரம்பித்த ஏசியாட்டிக் சொசைட்டிக்கு துணைச் செயலராகவும் , அதன் வெளியீடுகளுக்கு ஆசிரியராகவும் பணியாற்றும் வாய்ப்பைப்பெற்றார் .

    முதலில் அவரின் கவனத்தை ஈர்த்தது இந்தியா முழுவதிலுமிருந்து கிடைத்த மிகப் பழமையான நாணயங்கள் தான் .300 வருடங்களுக்கு முன் அத்தகைய தொல் நாணயங்கள் அதிகம் பொது மக்களிடையே கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இருந்தது .

    அப்போது பிரிட்டிசின் ஆளுகையில் இலங்கை ,பர்மா ஆகியவையும் இருந்தமையால் ஏராளமாக அப்பகுதிகளில் மக்களால் கண்டெடுக்கப்பட்ட இந்திய தொடர்புடைய பண்டைய தங்க, வெள்ளி, ஈய நாணயங்களை நாணய அதிகாரியாகப் பணிபுரிந்த பிரின்சப் ஆய்வு செய்யும் வாய்ப்பைப்பெற்றார் .
    அக்காலத்தில் கிடைத்த தொன்மையான நாணயங்களில் வரிவரியாக பொறிக்கப்பட்டிருந்தவைகள் ஒரு வித எழுத்துக்கள். அவைகள் ஒரு மொழியை சார்ந்தவை என்பதைக்கூட அறியப்படாத காலத்தில், அவைகளை அறிவியல் உலகம் ஒப்புக்கொள்ளும் வகையில் புரிந்துகொள்ளச் செய்தவர் பிரின்சப் ஆகும் . இவரின் இந்த நாணயத்தில் இருந்த நாணயங்களின் லிபியை புரிதல் குஷானர்கள் என்று ஒரு வம்சம் இந்தியாவை ஆண்டது என்பதை இந்திய வரலாற்றில் நிறுவியது .

    மேலும் அவரின் இந்த கண்டுபிடிப்பு இந்திய வரலாற்றின் மிக முக்கியமான ஒருவரை கண்டுபிடிக்க உதவியது .

    நம்மிடையே மட்டும் ஹெச் ஜி வேல்ஸ் (H.G Wells) எழுதிய கால இயந்திரம் மாதிரி ஒரு இயந்திரம் மட்டும் இருந்திருந்தால், நாமும் 300 வருடங்கள் முன்னே சென்று இந்தியா அப்போது எப்படி இருந்தது என்பதை எளிதாக அறிந்திருக்கலாம் . 5000 வருடங்கள் முன்னே சென்று சித்து வெளி நாகரீகம், பூம்புகார் நகரம் எப்படி அழிந்தது என்பதை எளிதில் அறியலாம் . ஆனால் உண்மையில் கிடைக்கும் சான்றுகளை வைத்து வரலாற்றை நிர்ணயிப்பதில், சான்றுகளைத் தொகுத்து சான்றுகளைப் பாதுகாப்பதில் பங்களித்த பலரைப் பற்றி நன்றியுடன் நினைத்துப் பார்ப்பது அவசியமே .

    அடுத்த வாரம் ஜேம்ஸ் பிரின்சப் பற்றிய சுவையான பல செய்திகளைக் காணலாம்.

    தொடருவோம்

    Share
  • வரலாறுகளின் வேர் – 2

    அண்ணாமலை சுகுமாரன்

    ans-1

    மனித இனம் இப்பூவுலகில் தோன்றி பல இலட்சம் ஆண்டுகள் கடந்துவிட்டன என மானிடவியலார்கள் கூறிவருகின்றனர். தமிழர்களைப் பற்றி நமது இலக்கியவாதிகள் கூறும்பொழுது, ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி’ என்று குறிப்பிடுகின்றனர் இதை வெறும் கற்பனைக்கூற்று என்றே பலரும் எண்ணிவந்தனர். இதற்கு வலு சேர்த்தவர்கள் ஐரோப்பியர்களே என்பதுதான் உண்மை . தமிழ் வரலாறு ஆய்வுகளில் இடம்பெறும் தமிழர் மானிடவியல் துறையின் முன்னோடியாக விளங்கியவர் ஐரோப்பியர்களே ஆவர். 1910 ஆம் ஆண்டிற்கு முன்புவரை ஐரோப்பியர்கள் இந்தியாவில் எங்குபார்த்தாலும் கேட்பாரற்று கிடைத்த பழம் கலைப்பொருள்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டினர். ஆரம்பத்தில் இந்த ஆய்வு, பொழுது போக்காகவே அமைந்தது. இந்தியாவிலோ பாழடைந்த பழமைப் பொருள்களை வீட்டில் வைத்துக்கொள்வது சாபம் என்று எண்ணி அத்தகைய பொருள்களில் இருந்து ஒதுங்கியே இருந்தனர். எனவே நமது வரலாற்றை விவரிக்கும் சான்றுகள் அப்போதும் ஏன் இப்போதும் உதாசீனம் செய்யப்பட்டு வந்தது, வருகிறது .

    மனிதன் தோன்றிய காலம் முதலாக அவர்கள் பெற்ற பரிணாம வளர்ச்சிகளையும், அவர்களது ஆரம்பக் காலத்தில் முதன்முதலாக தங்களது உணவைத்தேடி விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய கல் ஆயுதங்கள் அவர்களால் தயாரிக்கப்பட்டன என்பதையும், அவர்கள் அவற்றை எவ்வாறு தயாரித்தார்கள் , எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதுவே மனித குலத்தின் ஆரம்ப நாகரீக வளர்ச்சியாகக் கருதப்பட்டது .

    உலகின் மானுடவியல் ஆய்வில் நியாண்டதால் போன்ற மனித இனங்கள் கிடைத்த ஆதாரங்களினால் அப்போது வெகுவாக பேசப்பட்டு வந்தது . இத்தகைய நிலையில் இந்தியாவில் அதிலும் தமிழ் நாட்டில் அதுவும் சென்னைக்கருகில் பல்லாவரத்தில் கிடைத்த ஒரு கல் ஆயுதம் இந்திய சரித்திரத்தையே புரட்டிப்போட்டது .

    ராபர்ட் புரூஸ்புட்

    மண்ணூல் வல்லுநரான ராபர்ட் புரூஸ்புட் இந்திய மண்ணியல் அளவாய்வுத் துறையில் ( GEOLOGICAL SURVEY OF INDIA) 1858 முதல் 1891 வரை பணிபுரிந்தார் அவர் சென்னைக்கு அருகில் இருக்கும் பல்லாவரம் வந்து தங்கி அங்கே தனது ஆய்வைத் தொடங்கினார். அங்கே கல்லாலான ஒரு கருவியைக் கண்டெடுத்தார் அந்த கண்டுபிடிப்பு வரலாற்றைப் புரட்டிப்போடும் ஆய்வுகளை தொடங்கி வைத்தது பல புதிய முடிவுகளை எடுக்க வைத்தது.

    ராபர்ட் புரூஸ் புட்டின் கண்டுபிடிப்பின் மூலம், தமிழகத்தின் வரலாறு, பல்லாண்டு கால தொன்மை வாய்ந்தது என்ற உண்மை நிரூபிக்கப்பட்டது, வரலாற்றுக்கு முன்காலத்திலேயே ஆதிமனிதர்கள் சுமார் 1,50,000 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்து வந்தனர் என உறுதி செய்யப்பட்டது .
    ஆதி மனிதர்கள் தென்னகத்தின் இப்பகுதியில் வாழ்ந்து வந்திருந்தார்கள் என்பது ஒரு ஆங்கிலேயர் மூலமே உறுதி செய்யப்பட்டது . கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடிஎன்ற வரிகள் ஒன்றும் வெற்றுகோஷம் இல்லை.

    இப்போது தமிழகம் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் வாழ்ந்த முந்தைய மூத்த தமிழர்கள் சுமார் 1,50,000 பேர், முன்பே இந்தப்பிராந்தியத்தில் வாழ்ந்தனர் என்பது ஒரு வரலாற்றை புரட்டிப்போட்ட செய்தியாகும்.

    இந்தியத் தொல்லியல் ஆய்வில் முதல்முறையாக வேறு எங்கும் கிடைக்காத சான்று ஒன்றை இந்தியாவிலேயே சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில்தான், பழைய கற்காலக் கருவியை, 1863-ஆம் ஆண்டு மே மாதத்தில், இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை என போற்றப்படும் இராபர்ட் புரூஸ்புட் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார். இந்தியாவின் பழங்கால வரலாறுகள் பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமை இவரையே சாரும்.

    அதன்பின், அதே ஆண்டு, செப்., 28இல், ராபர்ட் புரூஸ் புட் மற்றும் டபிள்யூ கிங் ஆகியோர் மீண்டும் ஒரு கல் கைக்கோடாரியை, திருவள்ளூருக்கு அருகில் உள்ள, அதிரம்பாக்கத்தில் கண்டு பிடித்தனர். இவை, “மதராசியன் கற்கருவிகள்”, என அழைக்கப்படுகின்றன. இவை, பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன், கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் ஆகும். இதனால், தமிழகத்தின் தொல் பழங்கால வரலாறு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னோக்கிச் சென்றது.

    ராபர்ட் புரூஸ் புட், கண்டுபிடித்ததன் மூலம், தமிழகத்தின் வரலாறு, பல்லாண்டு கால தொன்மை வாய்ந்தது என்ற உண்மை நிரூபிக்கப்பட்டது. வரலாற்றுக்கு முன்காலத்திலேயே ஆதிமனிதர்கள் சுமார் 1,50,000 ஆண்டுகளுக்கு முன் இந்தப்பகுதியில் வாழ்ந்து வந்தனர் என உறுதி செய்தார்

    இதனைத் தொடர்ந்து, அவரும் அவரது அலுவலர் வில்லியம் கிங் என்பவரும் சேர்ந்து,கொற்றலை ஆற்றுப் பள்ளத்தாக்கில் தீவிரமான கள ஆய்வில் ஈடுபட்டனர். கொசத்தலை ஆறு என்று இப்போது அறியப்படும் அந்த ஆறு இன்றைய வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகில் பாலாற்றில் இருந்து கிளை பிரிந்து செல்லும் ஒரு நதியே கொற்றலையாக உருமாறி அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி வழியாகச் சென்று எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது.

    இந்த ஆற்றங்கரை ஆதி மனிதர்களின் முந்தைய வாழ்விடமாக இருந்தது என்பது அங்கே கிடைத்த கல் ஆயுதக் குவியல்கள் ராபர்ட் புரூஸ்புட் மூலம் நிரூபிக்கப்பட்டது. இத்தகைய கல் ஆயுதங்கள் தமிழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்கவில்லை என்பதும் ஒரு முக்கிய செய்தியாகும் .

    தற்போது அத்திரம்பாக்கம் என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கற்கால கருவிகளை ஆய்வு செய்ததில் இவை சுமார் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ஆண்டுகளுக்குக் குறையாத தொன்மை வாய்ந்தவை என்பது தெரிய வந்தது. மேலும் இவ்வளவு தொன்மை வாய்ந்த கண்டுபிடிப்புகள் இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஆய்வு செய்த சாந்தி பப்பு என்னும் ஆய்வாளர் ‘Early Pleistocene presence of Acheulian hominins in South India’ என்ற ஆய்வு அறிக்கையில் இதை வெளியிட்டார். ஆயினும் இந்த ஆய்வு இதுவரை எதோ காரணங்களால் தொடர்ந்து அரசினரால் மறைக்கப்பட்டே வருகிறது .

    பூண்டி அருகே அமைந்திருந்த ஒரு அருங்காட்சியகம் இப்போது செயல்படவில்லை .நான் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஓலைச் சுவடிகளைத் தேடிச் சென்றபோது அந்த அருங்காட்சியகம் இயங்காததைக்கண்டேன் . இவ்வாறே பாண்டியரின் பழைய துறைமுகமான கொற்கையில் இருந்த காட்சியகம் மூடப்பட்டு பண்டைய தொல் பொருள்கள் வீதியிலே கிடக்கக்கண்டேன் .
    அங்கிருந்து நான் கூட சுமார் 5000 வருட தொன்மை வாய்ந்த ஒரு பண்டைய சங்கை அதை கழிவு நீர் கால்வாய்க்கு கரையாக போட்டு வைத்திருந்த ஒரு பெரியவரிடம் இருந்து பெற்று வந்தேன் . இன்றும் அது என்னிடம் உள்ளது . தமிழர் வரலாறு ஏன் இவ்வாறு மதிப்பிழந்துக்கிடக்கிறது ?

    மேலும் பார்ப்போம் அடுத்த வாரம்

    ஆதாரம்
    http://www.antiquity.ac.uk/projgall/pappu297/

    Share
  • வரலாறுகளின் வேர்! (1)

    அண்ணாமலை சுகுமாரன்

    ans

    கடந்த காலத்தின் இரத்தக்கறை படிந்த அடிச்சுவடுகளைப் பற்றியும் , அவ்வப்போது நடைபெற்ற போர்கள், அதில் அடைந்த வெற்றிகள் ,ஆக்கிரமித்த நாடுகள் இவைகளைப்பற்றி விவரிப்பதும் , வெற்றிபெற்ற மன்னர்களின் கீர்த்தியை சொல்வதும்தான் வரலாறு என்ற பொதுவான புரிதல் இருந்தாலும், வரலாறு (History) என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் விவரிப்பது என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது.

    ஆயினும் வரலாறு என்பது மன்னர்களைப்பற்றி மட்டும் இல்லாமல், அது அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த சாமான்ய மக்களைப்பற்றியும், அவர்களின் பொருளாதாரம், வாழ்வியல் முறைமைகள், கல்வி, இலக்கியம், பண்பாடு, மொழி என அனைத்தையும் விளக்குவதாக இருக்கவேண்டும். இந்த வரலாற்றை கணிக்க தக்க சான்றுகள் வேண்டும் .

    ஆதாரங்கள் எனும் உறுதியான கற்களால் கட்டமைக்கப்பட்டதே வரலாறு .

    வரலாறு தற்போது தொல்லியல் என அறிவுப்பூர்வமானதொரு விஞஞானம் போல் ஆகிவிட்டது . அதன் ஆய்வுக்கு இப்போது பல்வேறு துறைசார்ந்த அறிவும் அவசியமாகிவிட்டது .

    தொல்லியல் என்பது, வரலாறு ,மானிடவியல், கலாச்சாரம் , பொருளாதாரம் இனவரலாறு, நீரடி தொல்லியல்,என பல்வேறு துறைகளின் அறிவு தேவைப்படுகிறது .

    தொல்லியல் எதிர்கால மனித வாழ்க்கைக்கு ஒரு செய்தியை எப்போதும் கூறிவருகிறது. கடந்த காலத்தைப் பொறுத்தே வருங்காலம் அமைகிறது .

    இப்போது வாழும் வாழ்க்கையின் விதை கடந்த காலத்தில்தான் இருக்கிறது .வரலாற்றை நிர்ணயிக்க சான்றுகள் மிக அவசியம் .

    நமது நாட்டைப்பொறுத்தவரை சான்றுகளை போற்றிப்பாதுக்காக்க நாம் எப்போதும் கவனம் செலுத்தியதில்லை .

    மேலும் இந்தியாவின் வரலாறு என்பது முகமதியர்களின் படையெடுப்பிலிருந்துதான் அறியப்பட்டிருந்தது. அதற்கு முன் இந்தப் பகுதியில் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஒரு தகவலும் இல்லை.

    அலெக்சாண்டர், 326 BCயில் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தார் என்ற ஒரு குறிப்பு மட்டுமே இருந்தது. அதற்கு முன்னும் பின்னும் ஒன்றும் தெரியாது. தமிழ் நாட்டிலோ இன்னமும் மோசம் தஞ்சை பெரியக்கோயிலே கரிகால் சோழன் கட்டியது என்று ஒரு கதை நிலவிவந்ததாக பொன்னியின் செல்வன் எனும் ஒரு குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்தி விவாதத்தில் இருந்தது நினைவிருக்கிறது .

    ஒவ்வொரு கோவிலுக்கும் பின்புலத்தில் ஒரு புராணக் கதை நம்ப முடியாதபடி இருக்கும் . வரலாற்று செய்தி அதில் மறைந்து கிடக்கும் .நெல் மணியை சேர்க்க ஆரபித்த குதிரில் நெல்லை விட பதர்கள் அதிகம் ஆனது போல் புராண கற்பனையில் வரலாற்று உண்மைகள் மறைந்து போயின .நெல் மணிகள் காணாமல் மறைந்து போயின .

    திருப்பணி என்றபெயரில் நமது கோவில்களில் இடம்பெற்றிருந்த வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டு வீசியெறியப்பட்டன .இன்னமும் தமிழ் நாட்டில் இதே நிலைதான் தொடருவது தான் வேதனைக்குரியது. மற்றொரு புறம் வேறு பலர் அறியாமையால் அவற்றை அழித்துக்கொண்டும் இருந்திருக்கிறார்கள். இந்த அழிப்பு, ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன்பாகவே தொடங்கிவிட்டது. இந்தியாவிற்குள் நுழைந்த முகமதியர்கள், நிறைய சேதங்கள் ஏற்படுத்தினார்கள். குதூப் மினார் இருந்த இடத்தில் 27 கோயில்கள் இருந்தனவாம். மதுராவில் நிறைய சிற்பங்கள் இருந்ததாகச் சீனப் பயணி சொல்லியிருக்கிறார். 1857இன் சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் தங்கள் பங்கை அழிவில் செய்திருக்கிறார்கள். பல பழைய கோட்டைகள் ராணுவக் கிடங்காகவும், சில ராணுவ மருத்துவமனையாகவும், ராணுவ பேக்கரியாகவும், பயன்பட்டிருக்கின்றன. தாஜ் மஹால் விருந்து நடத்தும் இடமாக இருந்திருக்கிறது . தாஜ் மஹாலின் ஒரு பகுதி, தேன்நிலவுக்கு வந்தவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றுவரை இந்த சேதப்படுத்துதல்கள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றன?

    இன்றும் பல கோட்டைகள் சுற்றுலா விடுதிகளாக சுதந்திர இந்தியாவிலும் இருக்கின்றன. (உதயகிரி) தரங்கம்பாடியில் இருக்கும் டேனிஷ் கோட்டை 30 ஆண்டுகளுக்கு முன் அரசாங்க ஒய்வு விடுதியாகப் பயன்பட்டதை நானே பார்த்திருக்கிறேன். பல அரண்மனைகள் தமிழ் நாட்டில் இன்னமும் அரசு அலுவலகங்களாக இருந்து வருகிறது .

    இந்த நிலையில்தான் இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்ற வந்த வெள்ளையர்களில் சிலர், இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்வதில் தீவிரம் காட்டினர். அவர்கள் வந்தது என்னவோ வேறு வேலைக்கு ஆயினும் கம்பெனியின் ஆதரவு என்பதெல்லாம் இத்தகைய ஆய்வுகளுக்கு இல்லை; என்றபோதிலும் , இவர்கள் தங்களுடைய சொந்த ஆர்வத்தின் பேரில் இந்திய வரலாற்று சான்றுகளைப் பற்றிய ஆராய்ச்சியைச் தொடர்ந்திருக்கிறார்கள்.

    அப்போது இருந்த காலகட்டத்தில் இந்தியர்களுக்கு நாகரீகம் எதுவும் கிடையாது. பிரிட்டிஷ் வருகைக்குப் பிறகுதான் எல்லாமே என்று எழுதிவைத்ததோடு , இந்தியர்கள் மனதில் ஒருவகை தாழ்வு மனப்பான்மையை குடி கொள்ளச் செய்தார்கள்.

    அந்த நிலையில் சில கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்ற வந்த வெள்ளையர்களில் உள்ள மனசாட்சியுள்ள சிலர் தொல்லியல் சான்றுகளை மேலும் அழிவிலிருந்து காத்து இந்தியாவின் வரலாறு எனும் கட்டிடம் எழ உதவி செய்தனர் .

    அத்தகையோரை பரவலாக அறியச் செய்வது வரலாற்றை அறிவதில் மிக முக்கியமானதாகும்.
    முதலில் வரலாறு உருவாக உதவி செய்த அயல் நாட்டினரைப் பற்றியும், அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற முக்கிய தொல்லியல் நிகழ்வுகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த இந்தியா முழுவதும் இருந்த வரலாற்று ஆர்வலர்களைப் பற்றியும் அறிஞர்களையும் அறிமுகம் செய்யும் விதமாகவும் முக்கியமாக தமிழ் நாட்டில் வாழ்ந்த திருவாளர்கள் நீலகண்ட சாஸ்திரி அவர்கள் ,க. அப்பாதுரை அவர்கள் சதாசிவ பண்டாரத்தார் முதல் ஐராவதம் மகாதேவன் அவர்கள் ,நாகசாமிஅவர்கள், ராஜமாணிக்கனார்அவர்கள், புலவர் ராசு அவர்கள் ,நடன காசிநாதன் அவர்கள் ,தியாக சத்தியமூர்த்தி அவர்கள் குடவாசல் பாலசுப்ரமணியன் அவர்கள் , குடந்தை காசிநாதன் அவர்கள், பத்மாவதி அவர்கள் போன்ற இன்னுமும் உழைத்துக் கொண்டிருக்கும் பலரையும், சொல்லாமல் விடுபட்ட இன்னமும் பலரை அறிமுகப்படுத்தும் தொடர் இது .

    வாசகர்களாகிய உங்கள் ஆதரவு இருக்கும்வரை இத்தொடர் தொடர்ந்து வரும் .

    பகுதி 1- அயல் நாட்டு அறிஞர்கள்

    சர் வில்லியம் ஜோன்ஸ்

    1746 இல் பிறந்த சர் வில்லியம் ஜோன்ஸ் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் சட்டம் பயின்று வக்கீலானார். வாரன் ஹேஸ்டிங் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது 1783இல் கல்கத்தா உச்சநீதிமனறத்திற்கு நீதிபதியாக இந்தியா வந்தார், அவர் கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், ஹீப்ரு அரேபிய மொழிகளை சிறிய வயதிலேயே கற்றறிந்தார். இந்தியாவிற்கு வந்தபின் இந்தியாவின் பழம் மொழிகளில் ஒன்றான சம்ஸ்கிருதத்தைப் பற்றி அறிந்த பின்பு அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது.

    தனக்கு சம்ஸ்கிருதம் போதிக்க ஓர் வங்காள பிராமண சம்ஸ்கிருத ஆசிரியர் ராம் லக்‌ஷ்ன் கவிபூசன் என்பவரை தேர்ந்தெடுத்தார். அந்த கவிபூசன் கல்கத்தாவில் நெருக்கடியான மக்கள் குடியிருப்பில் வசித்துவந்தார். அங்கே சென்று சர்.வில்லியம் ஜோன்ஸ் சம்ஸ்கிருதம் கற்றுவந்தார் . தினமும் வகுப்பு முடிந்ததும் ‘மிலேச்சன்’ உட்கார்ந்த இடத்தை தண்ணீர்விட்டு சுத்தம் செய்வாரம் அந்த ஆசிரியர். இதைப் பார்த்த வில்லியம் ஜோன்ஸ்க்கு அது பெரிய விஷயமாகப்படவில்லையாம் ஆசிரியர்கள் செய்யும் ஒரு சடங்கு என்று நினைத்துக்கொண்டாராம்.

    பின்னர் சம்ஸ்கிருதத்தில் அவர் தேர்ச்சி பெற்றபின்பு பல நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அதில் அபிக்ஞான சாகுந்தலம் என்பது முக்கியமானது. அவருக்கு ஏற்கனவே கிரேக்கம் இலத்தீன் மொழி ஞானம் இருப்பதால் சம்ஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன் மொழிகளுக்குள்ள ஒற்றுமையை ஆராய்ச்சி செய்தார். இலத்தீன் மொழியைவிட சம்ஸ்கிருதம் கிரேக்க மொழியுடன் நிறைய ஒற்றுமையிருக்கிறது, இந்த மூன்று மொழிகளிலும் ஒன்றிலிருந்து பிரிந்தவை என்று ஆய்வின் முடிவில் கண்டறிந்தார்.

    வங்காளத்திற்கு நீதிபதியாக வந்த ஜோன்ஸ், அங்கே வந்த பதினாராவது வாரத்தில் 1784இல் ஏசியாட்டிக் சொசைட்டியைத் தொடங்குகிறார். சொசைட்டியின் நோக்கம், இந்தியாவில் இருக்கும் சகல விஷயங்களைப் பற்றியும் பதிவு செய்வது. மொழி, வானவியல் சாஸ்திரம், அறிவியல், மருத்துவம், நீதி, வரலாறு, புவியியல், விவசாயம், வணிகம், இசை, கட்டிடக்கலை, கவிதை இப்படி பல விஷயங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை திரட்டுவதே அவர்களுடைய எண்ணம். மனிதனின் கால் பதியாத நாகரீகம் இல்லாத வனம் போன்ற ஒரு அடர்த்தியான இருட்டில் இருந்த பிரதேசமாக அவர்கள் இந்தியாவை நினைத்திருந்தார்கள் . எனவே கிடைத்த அத்தனையையும் ஆவணப்படுத்த – இந்தியாவெங்கும் அங்கங்கே இருந்த வெள்ளையர்கள் தாங்கள் கண்டதை ஏசியாட்டிக் சொசைட்டிக்கு கட்டுரைகளாக அனுப்பினார்கள். ஜோன்ஸ் இதையெல்லாம் தொகுத்து, முதல் தொகுப்பை 1789இல் வெளியிட்டார்.

    ஜோன்ஸின் தனிப்பட்ட ஆர்வம் சமஸ்கிருத மொழியில் இருந்தது. அவர் சமஸ்கிருதத்தை இலத்தீன் கிரேக்க மொழிகளோடு ஒப்பிட்டார். சமஸ்கிருதக் கடவுளர்களையும் அவர் கிரேக்க கடவுளர்களுக்கு ஒப்பிட்டார். சமஸ்கிருத காப்பியங்களை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்தார். காளிதாஸரின் சாகுந்தலத்தை 1788இல் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்தியாவுக்கு அவர் கொடுத்த கொடை, மெகஸ்தனிஸின் இந்தியாவைப் பற்றிய குறிப்பை ஆராய்ந்து இந்தியாவின் நீண்ட வரலாற்றை எழுதத் துவங்குவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியைக் கொடுத்தது.

    அலெக்ஸாண்டரின் படையெடுப்புக்குப்பின் மெகஸ்தனிஸ் இந்தப் பக்கம் வந்திருக்கிறார். அவர் தன்னுடைய குறிப்பில், கங்கையை எர்ரானாபொஸ் (Erranaboas) சந்திக்கும் இடமான பாலிபொத்ராவில் சாண்ட்ராகோட்டஸ் என்ற அரசன் இருந்தான் என்று எழுதியிருக்கிறார். இதில் உடனடியாகத் தெரிந்த விஷயம் கங்கை மட்டுமே. ஆனால், அதில் கலக்கும் எர்ரானாபொஸ் என்ற நதி பற்றி எந்தக் குறிப்பும் இந்தியாவில் இல்லை. வேறு ஏதோ ஒரு நதியை அப்படிக் குறிப்பிடுகிறார்.

    ஒருவேளை அது சரஸ்வதி போல் தடம் இல்லாமல் போன ஒரு நதியாக இருக்கலாமோ ?

    அடுத்தது, பாலிபொத்ரா: அந்தப் பெயருக்கு நெருக்கமான பெயராக இருப்பது பாடலிபுத்திரா என்ற தற்போதைய பாட்னா. ஒருவழியாக அந்தப் பக்கம் முன்பொரு காலத்தில் ஓடிய நதியைத்தான் கிரேக்க மொழியில் எர்ரானாபொஸ் என்று சொல்கிறார் என்று கண்டுபிடித்தாயிற்று. ஆனால், சாண்ட்ராகோட்டஸ்? சமஸ்கிருத மொழியிலிருந்து எடுக்கப்பட்ட அரசர்கள் பட்டியலில் அப்படி ஒரு பெயர் இல்லை. ஆனால் சந்திரகுப்தர் என்ற பெயர் நெருக்கமாக இருப்பதைக் கண்டு, கிரேக்க பயணி சந்திரகுப்தரின் பாடலிபுத்திரத்திற்குத்தான் வந்திருக்க வேண்டும் என்று முடிவாகிறது. ஆசியாவில் அலெக்சாண்டருக்கு பின்னால் வந்த செலூக்கஸின் அரசவையில் இருந்தவர் மெகஸ்தனிஸ். செலூக்கஸ் 312BCயில் பாபிலோன் திரும்பிச் சென்றதாக குறிப்பிருக்கிறது. ஆகவே, சந்திர குப்தரின் காலம் அலெக்சாண்டரின் இந்தியப் படையெடுப்புக்கும் (326 BC), 312 BCக்கும் இடைப்பட்டதாகும் என்று முடிவாகிறது. வரலாறே தெரியாத இடத்தில் இதுவொரு பெரிய முன்னேற்றம்.

    இவ்வாறு இந்திய வரலாறுக்கு சர் வில்லியம் ஜோன்ஸ் ஒரு நல்ல துவக்கத்தையும் , உலகின் கவனத்தை இந்திய வரலாற்றின்மேல் திருப்ப ஒரு முக்கிய காரணமாகவும் இருந்தார் .
    அவரைத்தொடர்ந்து பல ஐரோப்பியர்களுக்கு இந்திய வரலாற்றின் மேல் ஒரு ஆர்வம் தோன்றியது வரலாற்றின் ஆய்வில் பலருக்கு ஆர்வம் எழ சர் வில்லியம் ஜோன்ஸ் முக்கிய காரணமாக விளங்குகிறார்

    2) சார்லஸ் வில்கின்ஸ்

    சார்லஸ் வில்கின்ஸ் ஒரு சிறந்த சம்ஸ்கிருத அறிஞர் இவர் வில்லியம் ஜோன்ஸ்அவர்களின் நண்பர் இவர் கல்கத்தாவுக்கு 1770 ஆம் ஆண்டு இந்தியா வந்தார் .

    சமஸ்கிருதம் பற்றிய ஆழமான புலமை பெற்ற ஆங்கிலேயர்களின் இவரே முதன்மையானவர் எனலாம். குப்தர்களின் கால எழுத்தைக் கண்டுபிடித்ததில் இவரது பணி முக்கியமானது . இது இந்தியாவின் கல்வெட்டு இயலில் மிக முக்கியமானதாக அமைந்தது .

    அந்தக்காலகட்டத்தில் உலகில் ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் ஆழமாக இருந்தது அது உலகின் அனைத்து மொழிகளும் ஹீப்ரு மொழியில் இருந்து தோன்றியது என்பதே .

    இந்தியாவில் வந்து இவர் செய்த ஆய்வுகளுக்குப்பின் பாரசீகமும் ஐரோப்பிய மொழிகளும் ஒரே மூதாதையரிடம் இருந்து தோன்றியது என நிறுவினார் .

    அடுத்து சென்னையில் பல்லாவரத்தில் கிடைத்த மிகப்பழைய தடயத்தைப் பற்றிய செய்திகளைக் காணலாம் .

    தொடர்ச்சியாக இன்னமும் பல தகவல்களை அறியலாம் – அடுத்த வாரத்தில்.

    Share