Author: பாண்டியன்.ஜீ

  • மேடையில் மலர்ந்த காதற் பொதுமறை !

    — வில்லவன்கோதை.

    downloadமேடைப்பேச்சைக் கேட்பதில் இருந்த ஆர்வம் எப்போதுமே மேடையேறுவதில் இருந்ததில்லை. அதற்கான மனநிலையையும் இதுவரை நான் ஏற்படுத்திக்கொண்டதேயில்லை. எனது கடந்து போன வாழ்க்கையில் வெறும் ஐந்தாறுமுறை பல்வேறு நிர்பந்தங்களால் மேடையேறியபோது அல்லது ஏற்றப்பட்டபோது வெறும் கடமையைச் செய்து இருக்கைக்கு வந்தவன். அந்தச் சாதுரியமான வித்தையை வசப்படுத்திக்கொள்ள முயலாதவன்.

    இத்தனைக்கும் பள்ளி நாட்களில் எப்போதாவது நடந்தேறும் இலக்கியக் கூட்டங்களுக்காக ஆவலோடு காத்திருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய மாணவர்களில் நான் ஒருவன்.

    ஐம்பதுகளில் இருந்து ஏறத்தாழ எழுபதுவரை மேடைப்பேச்சே வாழ்க்கையின் சுவாரஸ்யம் என்று கருதிய காலம். அப்போதெல்லாம் சென்னை நகர வீதிகளில் தினந்தோறும் அரசியல் சொற்பொழிவுகள் கனல்கக்க பொழிந்து கொண்டிருக்கும். மேடைப்பேச்சுகளின் பொற்காலம் என்று சொல்லலாம். மேடைப்பேச்சுகளில் முக்கியமாக எனது விருப்பம் திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு சிந்தனைகள் தாம் என்றாலும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பேருரைகளையும் விரும்பிக்கேட்டவன். அதுமட்டுமல்லாமல் வாழ்வியல், இலக்கியம் சார்ந்த கூட்டங்களையும் நான் விட்டு வைக்கவில்லை. பள்ளிநாட்களில் தேனாம்பேட்டை எல்டாமஸ் சாலை பாலசுப்ரமணியர் திருக்கோயிலில் நிகழ்ந்த கி வா ஜெகனாதனுடைய தொடர் சொற்பொழிவுகள் இன்றும் நினைவில் நிற்கிறது.

    இவையெல்லாம் இன்று நான் பெற்றிருக்கிற விரிந்த பார்வைக்கு ஏற்பட்டுவிட்ட அடித்தளம் என்று நம்புகிறவன்.

    கடந்த மாதம் ஒரு வெள்ளிக்கிழமை 22- 01- 2016 மாலை நேரத்தில் சென்னை பாம் குரோவ் நட்சத்திர விடுதியில் நேர்த்தியான குளிரூட்டப்பட்ட அரங்கொன்றில் நண்பர் காவிரி மைந்தனின் காதல்பொதுமறை என்ற நூல் வெளியிடப்பெற்றது. பல்வேறு அறிஞர் பெருமக்களும் புலம் பெயர்ந்த தமிழார்வலர்களும் திரண்டிருந்த அந்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன்.

    நூல் வெளியீட்டு விழாக்களிலே ஒரு புதுமையாக காவிரிமைந்தனின் காதல்பொதுமறை வெளியிடப்பெற அதன் பெருமைபேசும் பேராசிரியை வைகைமலர் எழுதிய இரண்டு ஆய்வு நூல்களும் அந்த அரங்கத்தில் கைகோத்துக்கொண்டன.

    நெடுந்தொலைவில் இருந்து வந்திருந்த தமிழார்வலர்கள் அறிஞர் பெருமக்கள் காவிரி மைந்தனையும் அவர் நூலைப்பற்றியும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். பெரும்பாலான வல்லமை இணைய ஆஸ்தான எழுத்தாளர்கள் மேடையேறி தங்கள் சகாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்கள். என் நண்பர் பழனிசாமிகூட மேடையேறி இயல்பாகப் பேசி இறங்கினார்.

    அன்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நானும் கலந்துகொண்டு ஒரு நூலுக்கு மதிப்புரை தரவேண்டுமென்று நண்பர் காவிரி மைந்தன் சொன்னபோது அதிர்வுற்றேன். பக்கம்பக்கமாக எழுதத்தெரிந்த எனக்குப் பத்து நிமிடம் பதற்றம் தவிர்த்துப் பேசமுடியும் என்ற நம்பிக்கையின்மைதான்.

    உங்களால் முடியும் என்ற காவிரிமைந்தனின் குரலுக்கு பணிகிறேன்.

    வேறுவழியின்றி பேச்சுக்கு ஆதாரமாக நிரம்பக் குறிப்புகள் கைவசம் இருந்தாலும் தொடர்ந்து பேசமுடியும் என்ற நம்பிக்கையின்மையால் பேச்சை வெகுவாக சுருக்கிக்கொண்டு இருக்கையில் அமர்ந்தேன்.

    வெகு சிறப்பாக நிகழ்ந்த அந்த விழா நிறைவான நேர்த்தியான சிற்றுண்டியுடன் முடிவுக்கு வந்தது.

    இன்னொன்றையும் நான் குறிப்பிடவேண்டும்.

    நான் எண்ணுகிற பேசுகிற எழுதுகிற அத்தனையுமே சமூக அவலங்களை மையமிட்டே இருக்கும் அதில் காதலுக்கு என்றும் இடமளித்ததாக நினைவில்லை. காதலை மனிதவாழ்க்கையின் ஒரு அங்கமாகக் கருதுகிறேன்… அதுதான் வாழ்க்கையென்றோ அதுமட்டும்தான் இலக்கியம் என்றோ நான் கருதியதில்லை.

    எப்படியோ மேடையில் மலர்ந்த நண்பர் காவிரி மைந்தனின் காதற் பொதுமறை என் நினைவுகளைக் கிளறியது.

    Share
  • “தமிழர்தம் கம்பீரம்” – கர்மவீரர் காமராசர்!

    — வில்லவன்கோதை.

    தமிழகத்தின் தென்பகுதி …
    வணிகச்சந்தைக்குப் பெயர் பெற்ற விருதுநகர்…
    ஆயிரத்து தொள்ளாயிரத்து மூன்று, ஜூலை பதினைந்து …

    மிகமிகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சார்ந்த ஒரு சாமான்ய குடும்பத்தில் பிறக்கிறது ஓர் அபூர்வக்குழந்தை. பிற்காலத்தில் காங்கிரஸ் பேரியக்கத்துக்கும் இந்தத் தமிழ் மண்ணுக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, வரலாற்று ஏடுகளில் தன்னை எழுதிக்கொள்ளப்போகிறது என்ற தகவலை அன்று எந்தச்சோதிடனும் கணித்திருக்க முடியாது.

    குலதெய்வம் காமாட்சியின் திருப்பெயரை குழந்தைக்குச் சூட்டுகிறது அந்தக்குடும்பம். தாயார் சிவகாமிஅம்மாளோ மகனை ராசா ராசா என்று செல்லமாக அழைக்கிறார். காலப்போக்கில் காமாட்சி என்ற திருப்பெயர் காமராசாவாகிறது.

    விருதுநகர் சத்திரிய வித்யாலயாவில் சேர்க்கப்பட்ட காமராஜ் ஆறாம் வகுப்புக்குமேல் வாசிக்க முடியாமற் போயிற்று. இளம்வயதிலேயே தந்தையை இழக்கிறார். பள்ளிப்படிப்பில்லாதபோது வியாபாரம் பழக தாய்மாமன் நடத்திய துணிக்கடைக்கு அனுப்பப்படுகிறார். அதையும் கடந்து அடுத்தடுத்து குறுக்கிட்ட எந்தவேலைகளும் அவருக்கு நிலைக்காமற் போயிற்று.

    தேசமே வெள்ளையர் ஆதிக்கத்தில் அடிமையுற்றிருந்த காலம். நாடெங்கும் விடுதலைவேட்கை புயலாக வீசிற்று. தேசப்பிதா காந்தியின் தென்னிந்திய வருகை காமராஜரின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திற்று. அண்ணலின் விருப்பத்திற்கிணங்க கதராடைகளை அணியத் துவங்குகிறார் காமராஜர்.தமிழகக் காங்கிரஸ் தலைவர்களின் சூறாவளிப்பிரச்சாரம் காமராஜரின் அரசியல் வாழ்வுக்கு அடிகோலுகிறது. தீரர் திருமயம் சத்தியமூர்த்தியின் எழுச்சிமிக்க உரைகள் காமராஜரை அவர்காலடியில் கொண்டுசேர்க்கிறது.

    பதினாறு பதினேழு வயதிலேயே அவரது முழுநேர அரசியல்வாழ்வு தொடங்கிவிட்டது. தொடர்ந்து போராட்டங்கள் சத்யாகிரகங்கள். தொள்ளாயிரத்து முப்பதிலிருந்து நாற்பத்தியேழுவரை மாறிமாறி சிறைவாசம். விருதுநகரில் காமராஜர் ஒரு தவிர்க்கஇயலாத அடையாளமாகிறார்.

    நாற்பத்தியேழில் தேசம் விடுதலையுற்றபோது அந்த ஆனந்தத்தைக் கொண்டாட அவரது தலைவர் சத்யமூர்த்தி இல்லை. ஓடோடிச்சென்று அவர்வீட்டு வாயிலில் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரத்தைக் கொண்டாடுகிறார்.

    மூதறிஞர் ராஜாஜி முதல்வராகிறார். ஐம்பத்துமூன்றில் ராஜாஜியின் குலக்கல்வித்திட்டத்திற்கேற்பட்ட பேரெதிர்ப்பு காமராஜரை தமிழ்நாட்டின் முதல்வராக்குகிறது.

    எட்டே எட்டு அமைச்சர்கள்!
    தன்னையெதிர்த்து ராஜாஜியின் நல்லாசியுடன் போட்டியிட்ட சி. சுப்ரமணியம் அவர்களையும் அவரது சகாவான பக்தவசலம் அவர்களையும் தன் அமைச்சரவையில் அரவணைத்துக்கொள்கிறார்.

    அதுமட்டுமல்ல. தேர்தலில் காங்கிரசையே எதிர்த்துப் போட்டிட்டு திமுகவின் ஆதரவோடு வெற்றிபெற்ற காங்கிரஸ்கார்களான ராமசாமிப்படையாச்சி , மாணிக்கவேலு இருவரையும்கூட அமைச்சர்களாக்கி அரசுக்கும் கட்சிக்குமான இடர்களைக் களைகிறார். பரமேஸ்வரன் என்ற தாழ்த்தப்பட்டவருக்கு அறநிலையத்துறையைக் கொடுத்து தனக்கிருந்த பகுத்தறிவையும் ராஜதந்திரத்தை வெளிப்படுத்துகிறார்.

    தமிழ் ஆங்கிலம் இந்தி மட்டுமின்றி வேறு சில மொழிகளையும் அவர் அறிந்திருந்தார். பள்ளிக்கல்வி அவருக்கு கிட்டாமற் போனாலும் படிக்கவேண்டிய நூல்களை படிக்கத்தவறியதில்லை. எப்போதும் கற்றவர்களை தன்னோடு சோர்த்துக்கொண்டது அவரது வெற்றியின் ரகசியம் என்றே கருதுகிறேன்.

    புதிய ஐந்தாட்டுக்கான திட்டங்கள் வரையப்பட்டன .
    காமராஜர் தமிழக காங்கிரஸ் இயக்கத்தில் தன்னிகரற்ற தலைவராக விளங்கினார். மத்தியிலும் அவர் கட்சியே ஆட்சியில் இருந்ததால் ஐந்தாண்டுத்திட்டங்களில் தமிழகத்தின் பங்கு கணிசமாக அதிகரித்தது.

    விவசாயத்துக்குப் பெரிதும் முக்கியத்துவம் அளித்த மத்தியஆட்சியில் தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட நீர்ப்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தொழில்துறையில் இன்றும் சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நீர்மின்திட்டங்கள் பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் அவர் காலத்தில் ஏற்பட்டவை.

    ஆட்சி அதிகாரங்கள் கட்சிக்குக்கிடைத்தபோது அரசு எந்திரங்களை முடிக்கிவிடக் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்கள் எல்லாம் அரசில் பங்கேற்கிறார்கள். அதேசமயம் தேசவிடுதலைக்குக் காரணமாய் இருந்த காங்கிரஸ் இயக்கம் தனிமைப்படுகிறது. ஆட்சிக்கட்டிலில் இளைஞர்களுக்கு வழிவிட்டு முதியவர்கள் கட்சியைக்காக்க தயாராகவேண்டுமென்ற திட்டத்தை முன்வைக்கிறார் காமராஜர்.

    காமராஜர் எல்லாருக்கும் முன்மாதிரியாக முதன்மந்திரி பொறுப்பில் இருந்து விலகி வழிகாட்டுகிறார். அறுபத்திமூன்றில் ஏற்பட்ட அத்தகைய சிந்தனை கே – ப்ளான் என்று அரசியல் நோக்கர்களால் பெரிதும் பேசப்பட்டது.

    அறுபத்திநான்கில் பண்டிதநேரு மரணமுற்றபோதும் அறுபத்தியாறில் லால்பகதூர் மறைந்தபோதும் சரியான காய்களை நகர்த்திக் காங்கிரசின் சிக்கலைத் தவிர்த்தவர் பெருந்தலைவரே.

    தமிழகம் முழுதும் வீசத்தொடங்கிய திராவிடக்காற்று காமராஜரையும் விட்டுவைக்கவில்லை. அறுபத்தியேழு சட்டமன்றத்தேர்தலில் திமுகவின் மேடைப்பேச்சும் சாதீயக்கட்டமைப்புகளும் பெருந்தலைவரைத் தோற்கடிக்கிறது

    அடுத்து நேருவின் மகளோடு ஏற்பட்ட மனக்கசப்பு சிண்டிகேட் காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தோன்றுதர்க்குக் காரணமாகிறது. எழுபத்தைந்தில் இந்திராகாந்திக்கு நெருக்கடி ஏற்பட்டபோது அவர் பிகடனப்படுத்திய நெருக்கடி நிலை தேசத்தையே அதிர்வுக்குள்ளாக்குகிறது. தேசியத்தலைவர்கள் அத்தனைபேரும் இரவோடுஇரவாகச் சிறைப்படுத்தப் படுகின்றனர். காமராஜர் மனமுறிந்து போகிறார்

    வரப்போகும் விடுதலை நாளில் எல்லாம் சரியாகுமென்று நம்பிய அவர் ஆச்சாரிய க்ருபளானியும் கைதானபோது அதிர்ச்சிக்குள்ளானார்

    அதே ஆண்டு அக்டோபர் இரண்டில் காந்தி பிறந்தநாளன்று இந்தக் கருப்பு காந்தி விடைபெறுகிறார்.

    காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் திராவிடக்கட்சிகளிடம் ஆட்சியைப் பறிகொடுத்து ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்குமேல் கடந்து விட்டது. அந்தக் கட்சியின் தலைவர் காமராஜரோ இந்த மண்ணில் மறைந்து நாற்பது வருடங்கள் ஓடிவிட்டது. இந்த நிலையிலும் காமராஜரின் பொற்காகல ஆட்சியை மீண்டும் கொண்டுவருவோம் என்ற சிந்தனையை இன்றையக்கட்சிகள் வாக்குறுதியாகச் பேசுவதும் அதையும் இன்றையதலைமுறை கனவுகளாக எதிர்நோக்குவதும் அத்தனை இயல்பாக நிகழக்கூடியதல்ல. அதற்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும்.

    தென்னிந்தியாவைப் பொறுத்தவரை காலங்காலமாக மாறிமாறி ஆண்டு வந்தவர்கள் குறுநிலமன்னர்கள். அவர்கள் காலங்களில் எப்போதோ சிலசமயம் பொற்கால ஆட்சி நிகழ்ந்ததாக வரலாறு பேசுகிறது. தம்மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்துகொடுத்த எந்தக்குறுநிலமன்னனும் தம்குடிமக்களுக்குக் கல்வியைப் போதித்ததாக வரலாறு இல்லை.

    அவர்களுக்குப்பிறகு வந்த ஆங்கிலேயர் இந்தநாட்டின் சகல வளங்களையும் மாறிமாறிச் சுரண்டினர். இருந்தபோதும் அவர்களுடைய தேவைக்காக அவர்களுடைய நிர்வாக வசதிக்காக இந்தத்தேசத்தில் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் நவீன திட்டங்கள் நமக்கு முதன்முதலாக அறிமுகமாயிற்று. அவற்றில் அவர்கள் அறிமுகப்படுத்திய கல்வி முதன்மையானது.

    வெள்ளையரின் கொள்ளையில் சிதறிக்கிடந்த இந்த மண்ணைச்சீரமைத்துத் தான் பயிலாத கல்வியின் ருசியை எப்பாடு பட்டாயினும் எம்மக்களுக்குக் காட்டிவிட்டால் இந்தத்தேசம் எப்படியும் முன்னுக்கு வந்துவிடக்கூடுமென்று காமராஜர் நம்பினார். முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் ராஜாஜியின் கல்விக்கொள்கையால் மூடப்பெற்ற ஏழாயிரம் பள்ளிகளைத் திறந்து மேலும் இருபத்தேழாயிரம் பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டார்.

    தமிழகமெங்கும் பள்ளிகள் பரவலாகத் திறக்கப்பட்டு விட்டாலும் மாணவர் சேர்க்கை உயர்ந்துவிடவில்லை. அறுபதுகளில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு இந்தச் சிக்கலை எளிதில் விடுவிக்கிறது.

    ஒருமுறை பொதுநிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு தன் சகாவான தொழிலமைச்சர் வெங்கட்ராமனுடன் திரும்பிக்கொண்டிருந்தார். இடையே குறுக்கிட்ட ரயில்வே க்ராசிங்கில் அவர்கள் காத்திருக்க நேரிட்டது. அப்போது ஒரு சிறுவன் கையில்குச்சியுடன் நின்றிருந்தான்.

    ‘’ தம்பி நீ பள்ளிகொடம் போவலியா…ஓங்க ஊர்லதான் சர்க்கார் பள்ளிக்கொடம் தொறந்திருக்காங்களே ‘’

    அவன் தோளைப்பிடித்து அன்பாக வினவுகிறார் காமராஜ்.

    ‘’ நான் பள்ளிக்கொடம் போனா சோத்துக்கு என்னய்யா பண்ணுவன்? ரெண்டு மாடுமேச்சா ஒருவேள சோறாவது கெடைக்கும்,‘’ என்றவாறே மெல்ல நகர்கிறான் அந்தச் சிறுவன்.

    காமராஜரின் முகம் மாறுகிறது.

    ‘’ அவன் சொல்றதும் ஞாயந்தாண்ணே… இந்தப் பிள்ளைகளுக்கு ஒருவேளை சோறுபோட்டா எப்படியும் படிப்போட ருசியை காட்டில்லாம். வெங்கட்ராமன் அதுக்கு ஒரு திட்டம் வேணுமிண்ணே. ‘’

    வெங்கட்ராமன் மெல்லிதாகப் புன்னகைக்கிறார். முதலமைச்சரின் இந்தச் சிந்தனை சிறுபிள்ளைத்தனமானது என்று அவர் கருதியிருக்கக்கூடும். சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் இதுபோன்றதொரு திட்டம் நீதிக்கட்சிகாலத்தில் தொடங்கி நடத்தப்பட்டது அவர் நினைவுக்கு வந்தது

    ஆனால் தமிழ்நாடு முழுதுமா?

    அவருக்குச் சாத்தியம் என்று தோன்றவில்லை.

    ‘’ ஸ்ட்டேட் முழுதுமா நாட் பாசிபிள். சட்டத்ல எட்டமில்ல சார் ‘’

    அவசரம் அவசரமாகக் குறுக்கிட்டார் உடன்வந்த ஒர்உயரதிகாரி.

    ‘’ என்னண்ணே. நான் புள்ளைங்களுக்குச் சோறுபோடனுமிண்ணு சொல்றேன். நீ சட்டம் பேசிறியே. சட்டத்த யாருபோட்டா. யாருக்காகப் போட்டீங்க. செய்யரத்துக்கான வழிய பாருண்ணேன். ’’

    கண்கள் சிவக்க பொரிந்து தள்ளுகிறார் காமராஜர்.

    அடுத்தச் சில வாரங்களில் ஒருசில பள்ளிகளில் அவசரம் அவசரமாகத் துவக்கப்பெற்ற மதிய உணவுத்திட்டம் மெல்லமெல்ல விரிவாக்கப்பட்டுப் பரவலாகத் தமிழகம் முழுதும் நிறைவேற்றப்படுகிறது. அடுத்தடுத்து வந்த ஆட்சிகளும் இந்தத் திட்டத்தைப் பல்வேறு வடிவங்களில் விரிவாக்கி சத்துணவு திட்டமென்று செயல்படுத்திவருகிறது. தமிழ்நாட்டு குழந்தைகளின் கல்விக்கு இருந்த இடையூறை நீக்கி படிப்பில் ருசி காட்டியவர் காமராஜரே.

    வெறும் ஏழு விழுக்காடாக இருந்த மாணவர் வருகை அவர் காலத்தில்தான் முப்பத்தேழு விழுக்காடாயிற்று. பள்ளிகளின் வேலைநாட்கள் நூற்றுயெண்பதிலிருந்து இருநூறாக உயர்த்தப்பட்டதும் அவருடைய காலத்தில்தான். அனைத்து தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்க்கு ஓய்வூதியம் கிடைக்க வழிசெய்தவர் காமராஜரே.

    அவர் முதல்வரான பிறகு அரசு விருந்தினராக அயல்தேசத்திலிருந்து வந்த பெண்மணி ஒருவர் காமராஜரிடம் எழுப்பிய வினா இப்போது நினைவுக்கு வருகிறது.

    ‘’நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை? ‘’

    ‘’ மேடம் எங்கதேசத்தில் திருமண வயதுக்குவந்த பெருவாரியான சகோதரிகளுகளுக்கே இன்னமும் திருமணம் ஆகாமலிருக்கு. ‘’

    பெருந்தலைவரின் பதில் அந்த அம்மையார் சற்றும் எதிர்பாராதது. இந்த மண்ணின் மக்களோடு இந்தமனிதர் எத்தனை கலந்து நிற்கிறார் என்றுணர்ந்து நெகிழ்ந்து போகிறார்.

    அண்ணல் காந்தியின் வாழ்வியலை முழுமையாக கடைபிடித்தவர் காமராஜ். அதேசமயம் பண்டித நேருவின் உலகளாவிய விருப்பங்கள் இந்ததேசத்து மக்களுக்கு கிடைக்கவேண்டுமென கருதியவர் .

    காமராஜரின் கால்த்தடங்கள் படாத சிற்றூர்கள் தமிழகத்தில் இல்லையென்றே சொல்லலாம்.
    வெயில் புயல் மழை …..
    வேட்டியைத் தூக்கிப்பிடித்து நடை நடை நடைதான்.

    ஒவ்வொன்றையும் நேரில் ஆய்வுசெய்து காரியத்தை முடித்த தலைவர் காமராஜ். அவரைப்பொறுத்தவரைச் சட்டங்கள் மக்களுக்காகவே. சட்டத்தின் வரைவுகளை வெறுமனே சொல்லி அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய நலன்களை எவரும் தடுத்துவிடக்கூடாதென்பதில் உறுதியாக நின்றார். அவரது வாழ்வில் ஒவ்வொரு தருணங்களிலும் நிகழ்ந்த நிகழ்வுகள் இதைத்தான் பறைசாற்றுகின்றன.

    இன்னொருமுறை அவருடைய சகோதரிபேரன் கனகவேல் மருத்துவக் கல்லூரி ஒன்றில் சேருவதற்குத் தாத்தாவின் பரிந்துரைக்கு வந்திருந்தார்.

    ‘’கனகவேலு ! மெடிக்கல் காலேஜில சேர சர்க்கார் கமிட்டில்லாம் வெச்சிருக்கு. அத அவுங்கதாண்ணே முடிவு பண்ணணும். ஒனக்கு தகுதி இருந்தா நிச்சியம் கெடைக்கும். இல்லேண்ணா கோயமுத்தூர்ல அக்ரில சேந்துக்க ‘’

    தங்கள் தலைவரின் இந்தப்பதில் சூழ்ந்திருந்தோர்க்குப் பெருவியப்பைத் தந்தது. இதே தலைவரின் இன்னொரு செயல் …

    தஞ்சை மாவட்டத்திலோ கோவையிலோ சுற்றுப்பயணம் மேற் கொண்டபோது மருத்துவக்கல்லூரி பரிந்துரைக்கான விண்ணப்பம் ஒன்று அவர் பார்வைக்கு வருகிறது.

    மருத்துவக்கல்லூரியில் சேருவதென்பது அன்று பிராமணர்களுக்கே உரியதாயிருந்தது. முன்னதாக நீதிக்கட்சி ஆட்சியில்தான் விண்ணப்பத்தில் அந்தப்பகுதி நீக்கப்பட்டதைப் படித்திருக்கிறேன். விண்ணப்பத்தைப் புரட்டிப்பார்த்த காமராஜர் கையெழுத்திட்டு கொடுக்கிறார்

    இதுபற்றி வினவியபோது, ‘’ கீழ பாத்தில்ல… அவுங்கப்பன் கைநாட்டு வச்சிருக்காண்ணே. அது போதாதா” என்றவாறே நடக்கிறார் தலைவர்.

    உறவுகளில் இருந்து எத்தனை விலகி மக்களை நெருங்கியவர் காமராஜ். தன்னுடைய நெடும் பயணத்தில் உற்றார் உறவினருக்கு ஒருபோதும் இடமில்லை என்பதில் உறுதியாயிருந்தவர். வயது முதிர்ந்த பெற்றதாயைக் கூடத் தன்னோடு இணைத்துக்கொள்ளாமல் ஒர் எளிமையான வாழ்க்கைக்குப் பழக்கியவர் காமராஜ்.

    தமிழர்தம் கம்பீரத்துக்கு அடையாளமாக திகழ்ந்த காமராஜரின் கடைசிக்காலம் அத்தனை சுவாரஸ்யமானாக இல்லை. கப்பலோட்டிய தமிழன், வா உ சியின் கடைசி நாட்கள்தாம் என் நினைவுக்கு வருகிறது.

    பத்தாண்டுகளுக்குக்குமேலாக காங்கிரஸ்கட்சிக்கு தலைவரகவும் பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராகவும் இருந்த காமராஜ் உயிர் பிரிந்தபோது அவர் கையில் இருந்ததென்னவோ நூற்று அறுபது ரூபாய்தானாம். அசையும் சொத்துக்களையோ அசையா சொத்துக்களையோ அவர் விட்டுச்செல்லவில்லை. தனக்கென நேரடியான எந்த உறவுகளையும் அவர் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. நம்புங்கள்.

    இப்படியொரு தன்னலமற்ற அரசியல் தலைவர் இனி காண்பதற்கு கிடைப்பாரா? அரசியல்வாதிக்கான அர்த்தம் அவரோடு போய்விட்டதாகவே கருதுகிறேன்.

    காந்திக்கப்பறம் காமராஜ் என்றுதானே இன்னமும் தமிழ்நாட்டில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

     

    Share
  • மனதில் நிறைந்த மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்.

    — வில்லவன் கோதை.

    அது ஒரு இனிமையான மாலைப் பொழுது.

    தமிழன் என்றொரு இனமுண்டு அவர்க்கு தனியே ஒரு குணமுண்டு !

    என்ற எழுச்சி மிக்க இசையொலி அந்த ஊருக்கு வெளியேயிருந்த டூரிங் தியேட்டரின் உச்சியிலிருந்து வெளியேறி நாற்புறமும் சூழ்ந்திருந்த கிராம மக்களை ஒருவித பரபரப்புக்குள்ளாக்குகிறது.

    இன்னும் சற்று நேரத்தில் அன்றைய முதற்காட்சியாக திரையிடப்பட இருக்கின்ற சாகாவரம் பெற்ற கலைஞன் எம்ஜி ராமச்சந்ரன் நடித்த மலைக்கள்ளன் திரைப்படத்துக்கான முன்னோட்டம்தான் அது.

    அன்று அந்த திரைப்படத்துக்கு நான் அழைத்துச் செல்லப் பட்டிருந்தேன்.தொள்ளாயிரத்து ஐம்பத்தி நாலு என்று நினைக்கிறேன். அப்போது எனக்கு ஏறகுறைய எட்டு வயதிருக்கும். அதற்கு முன்னதாகவே அவர் நடித்த வேறு சில படங்களை பார்த்திருந்தாலும் என் நினைவுத்திரையில் எம்ஜியார் என்ற வடிவம் முழுமையாக பதிந்து போனது அன்றுதான்.

    அன்று என் மனதைக் கவர்ந்துபோன அந்த கள்ளன் கடைசிவரையில் திருப்பித்தந்ததாக எனக்கு நினைவில்லை. என்னைப்போலவே களவாடப்பட்டவர்கள் அந்த தலைமுறையில் பெரும்பாலோர் இருக்கக்கூடும்.

    தொள்ளாயிரத்து எழுபத்தைந்தில் திரைக்கு வந்த அதே எம்ஜி ராமச்சந்ரனின் இதயக்கனி என்றொரு திரைப்படத்தில் முகப்பிசையாக கவிஞர் வாலியின் பாடல் ஒன்று ஒலிக்கும்.

    தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
    கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
    தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
    ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
    நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்

    வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
    கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
    அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
    கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
    தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
    தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
    செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
    கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
    பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
    வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
    எங்கள் இதயக் கனி இதயக் கனி

    மக்கள் திலகம் எம்ஜியாரின் வாழ்வைப்பேச இப்படியொரு பாடலைத் தவிற வேறொரு சரியான உவமை இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை. மக்கள் திலகத்தின் வாழ்வை காவிரித்தாயின் நெடும்பயணத்தோடு ஒப்பிட்டு அந்தப்பாடலில் வாலி பேசுவார்.

    தொள்ளாயிரத்து பதிநேழில் ஸ்ரீலங்காவின் கண்டியில் பிறந்து கேரளத்தில் தவழ்ந்து , தமிழகத்தில் வேர்பரப்பி விருட்சமாக பெரும்பாலான மக்கள் மனதில் இன்றும் நிற்பவர் எம் ஜி ராமச்சந்திரன்..

    சரியாக எழுபதாண்டுகள் வாழ்ந்த ராமச்சந்திரனின் முற்பகுதி வாழ்க்கை அவருக்கு அத்தனை எளிதாக இருந்திடவில்லை. அன்றைக்கு அவர் அனுபவித்த பசியின் கோரச்சுவை இன்றைய தலைமுறைக்கு தெரியாத ஒன்று.

    mgrஅவர் தந்தை மருதூர் கோபால மேனன் மறைவுற்றபோது எம்ஜி ராமச்சந்திரனும் அவர் மூத்த சகோதரர் எம் ஜி சக்ரபாணியும் பச்சிளம் குழந்தைகள். ஈழத்தீவில் வாழ வழியின்றி இரண்டு குழந்தைகளுடன் இந்தியாவின் கேரளத்துக்கு குடிபெயர்ந்தார் அன்னை சத்யபாமா.

    அடுத்து தமிழ்நாட்டின் கும்பகோணம் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. வறுமையின் பிடியில் இறுகிய அந்த குடும்பம் பிழைப்பிற்கு வேறுவழியின்றி அன்னாளில் தாழ்வான தொழிலாக கருதப்பட்ட நாடகத்தொழிலை ஏற்கிறது.

    ஈழத்து சகோதரர்கள் ஏழு எட்டு வயதிலேயே நாடக சபாக்களில் வேஷம் கட்டத் தொடங்குகிறார்கள். பல்வேறு நாடகங்களில் சின்னச்சின்ன வேஷங்களை ஏற்ற ராமச்சந்திரன் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சதி லீலாவதி என்ற திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாய் ஒரு துணைப்பாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

    அடுத்த பதினைந்து ஆண்டுகள் திரையுலகில் அவருக்கு கிடைத்ததொல்லாம் வெரும் துணைப்பாத்திரங்களே.

    தொள்ளாயிரத்து நாற்பத்தேழில் முதன்முதலாக அவர் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி திரைக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து வருடத்துக்கு இரண்டிரண்டு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ராமச்சந்திரன் பெருவாரியான மக்களைச் சென்றடையவில்லை.

    நாற்பத்தேழில் இந்ததேசம் நள்ளிரவில் விடுதலை பெறுகிறது. விடிந்தபின்னும்கூட இந்த தேசத்தின் பெருவாரியான மக்களுக்கு விடுதலை கிடைத்துவிடவில்லை. இனம் மதம் சாதி போன்ற பெரும் சுவர்கள் அவர்கள் வளர்ச்சிக்கு இடையூராய் நிற்கிறது. தமிழகத்தில் தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்த இயக்கமும் பேறறிஞர் அண்ணாவின் அரசியல் சார்ந்த திமுகாவும் வலுவாக காலூன்றுகின்றன. கல்வியிலும் கலையிலும் ஈடுபாடு மிக்க திராவிட இயக்கத்தினர் தங்கள் கருத்துக்களை அடித்தளத்து மக்களிடையே கொண்டு சேர்க்க கலைத்துறையை கையில் எடுக்கின்றனர்.

    அண்ணா, கலைஞர், ஆசைத்தம்பி, சிற்றரசு, மாறன் போன்ற திமுகாவின் முன்னணித்தலைவர்கள் எல்லாம் திரைக்கதை தீட்டிய திரைப்படங்கள் ஒவ்வொன்றாக திரைக்குவந்து நாடெங்கும் பேசப்படுகிறது. பேறறிஞர் அண்ணாவின் பேச்சாலும் எழுத்தாலும் கவரபட்ட தமிழ்த் திரையுல கலைஞர்கள் தங்கள் இயல்பான ஆத்தீக மரபுகளை மாற்றிக்கொண்டு சீர்திருத்தம் பேசிய இயக்கத்தில் இணைகின்றனர். அதுவரை காந்தியார்மீதும் காங்கிரஸ் பேரியக்கத்தின்மீதும் நேசம் செலுத்திய ராமச்சந்திரன் ஐம்பத்தி மூன்றில் திமுகாவில் இணைகிறார்.

    தொள்ளாயிரத்து ஐம்பத்தி நான்கில் நாமக்கல் கவிஞரின் மலைக்கள்ளன் கலைஞரின் திரைக்கதையில் வெளிவந்து எம்ஜியாரை எட்டாத உயரத்துக்கு கொண்டு செல்கிறது. தமிழ்த்திரையுலகுக்கு முதன் முதலாக தேசிய விருதை மலைக்கள்ளன் திரைப்படம் பெற்றுத்தருகிறது. ஏறத்தாழ ஆறு தேசிய மொழிகளில் மலைக்கள்ளன் திரைப்படம் வெளியாகி திரையுலகம் அதுவரை காணாத வசூலை வாரிகொட்டுகிறது.

    அதைத்தொடர்ந்து அவர் நடித்து திரைக்கு வந்த ஒவ்வொரு படமும் ஒரு சரவெடி என்றே சொல்லவேண்டும்.

    அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா . என்ற எம்ஜியாருக்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் அன்றைய தலைமுறையையே பித்தர்களாக்கிற்று என்று சொல்லலாம்.

    கலைஞர்தான் முதன் முதலாக எம்ஜியாரை புரட்சி நடிகர் என்ற அடைமொழி இட்டு அழைக்கிறார். அடுத்தடுத்து புரட்சி நடிகர் நடித்த திரைப்படங்கள் மகத்தான வெற்றி பெற்று வசூலில் சாதனை படைக்கிறது.

    mgr2இயல்பாகவே இறையுணர்வு மிக்க ராமச்சந்திரன் அண்ணாவின் கருத்துக்களுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு கடவுள் சார்ந்த திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்க்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காவும் நலிந்த பிரிவினருக்காகவும் திரைப்படங்களில் உயர்ந்த குரலெழுப்புகிறார். நடைபாதையில் குடியிருப்பவர் நலனுக்காக போராடுகிறார். திரைப்படங்களில் கூட புகைபிடிப்பதை நிறுத்துகிறார். மது அருந்தும் காட்சிகளை தவிர்க்கிறார். தான் நடித்த எல்லா திரைப்படங்களிலும் தருமத்துக்கும் நியாயத்திற்கும் குரல் எழுப்புகிறார். பெண்களைக் காக்க சண்டைபோடுகிறார்.

    அவருக்காக திரைக்கதைகளும் பாடல்களும் பிரத்யோகமாக உருவாக்கப்படுகின்றன. பாற்க பரவசமூட்டும் எம்ஜியாரின் கவர்ச்சியான தேகம் அதற்கெல்லாம் ஈடு கொடுக்கிறது. அவருடைய திரைப்படங்கள் அத்தனையும் அவரது ரசிகர்களை ஏமாற்றியதில்லை. எந்த படமும் அவருடைய தயாரிப்பாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்திவிட்டதாக நினைவில்லை.

    தமிழகத்தின் வறண்ட பூமிகளிலும் நலிந்த மக்களிடையேயும் அவர் ஏற்படுத்திய ஒப்பனைப்பிம்பம் ஆழப்பதிகிறது. சென்னை ரசிகர்களுக்கு அவர் வாத்தியார் ஆகிறார்.

    அவருக்கான ரசிகர் மன்றங்கள் திமுகாவின் சார்புமன்றங்களாக பெருமளவில் துவக்கப்படுகிறது. அவருடைய ஒவ்வொரு திரைப்படத்துக்கும் தோரணங்கள் கட்டி திரைஅரங்கத்தை அலங்கரிக்கிறது அந்நாளைய திமுக பட்டாளம்.

    இன்றைக்குத் தொடரும் ரசிகர்களின் கட்டவுட் பாலாபிஷேக கலாச்சாரத்துக்கு அதுவே முன்னோடி என்று கருதுகிறேன். அன்று அவர் வளர்ச்சிக்கு திராவிட இயக்கத்தின் எழுத்தும் பேச்சும் ஒரு மாபெரும் ஏணியாக நின்றன.

    அப்போதுதான் தனக்குத்தானே அடைமொழியிட்டு அழைத்துக் கொள்ளும் தன்னம்பிக்கை மிக்க எழுத்தாளர் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் எம்ஜியாரை மக்கள் திலகமென்று முதன்முதலாக அழைக்கிறார் அதுவே அவர் பெற்ற இரண்டாவது இயல்பான அடைமொழி.

    ஏறதாழ நூற்றுமுப்பது படங்களுக்கு மேல் நடித்திருந்த எம்ஜியார் நடிப்புத்துறை மட்டுமின்றி கலைத்துறையின் சகல நுணுக்கங்களையும் பெற்றிருந்தார். படத்தொகுப்பிலும் இயக்குதலிலும் அவர் தேர்ந்திருந்தார். சுயமாக திரைப்படம் தயாரிப்பதிலும் அரங்குகளுக்கு வினியோகிப்பதிலும் கூட அவருக்கு பயிர்ச்சியிருந்தது. நாடோடிமன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகிய மூன்று வெற்றிப்படங்களும் அவர் இயக்கத்தில் வந்து வரலாறு படைத்தவை.

    அறுபத்தொன்பதில் அடிமைப்பெண் படப்பிடிப்புக்கு ராஜஸ்தான் சென்றபோது தொப்பியணியும் வழக்கத்தை மேற்கொண்டார். அப்போதிலிருந்து தொப்பியும் கருப்புக்கண்ணாடியுமின்றி அவர் வெளியுலகிற்கு தோன்றியதில்லை. தன் தோற்றத்தை எப்போதும் ஒரே மாதிரியும் ஒப்பனையோடும் அமைத்துக்கொள்ள அவர் என்றைக்குமே தவறியதில்லை.

    ஏறத்தாழ அகவை அறுபதைக்கடந்த போதும் இளம் கதாநாயகிகளோடு காதற் காட்சிகளில் தொடர்ந்து நடித்து தமிழ்த்திரையுலகை பழிதீர்த்துக்கொண்டவர் மக்கள்திலகம். மக்களிடையே ஏற்படுத்தியிருந்த இந்த ஒப்பனைப் பிம்பத்தை மண்ணில் மறையும்வரை காத்தவர் மக்கள் திலகம் மட்டுமே.

    இளம் வயதில் அவரை திரும்பிப்பாற்காத இந்த தமிழ்த் திரையுலகம் அவருடைய கிழவயதில் அவர் கால்களில் மண்டியிட்டு கிடந்தது மிகப்பெரிய வினோதம்.

    வாடிய முகத்தை கண்டபோதெல்லாம் வாடியதோடல்லாமல் வாட்டத்தை போக்குகின்றவராகவும் எம்ஜியார் திகழ்ந்தார். இயல்பிலேயே மிகுந்த இரக்கசிந்தனை அவருக்கிருந்தது. வருமையிலும் பகிர்ந்துண்ணும் பாங்கை அவர் பெற்றிருந்தார்.

    தொள்ளாயிரத்து அறுபத்து இரண்டில் இந்தியாவுக்கெதிராக சீனா போர் தொடுத்தபோது பாரதப்பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க அந்நாளிலேயே தன் உழைப்பிலிருந்து 75,000 ரூபாயை அள்ளிக்கொடுத்தவர் எம்ஜியார். குழந்தைகளையும் முதியோர்களையும் பெரிதும் நேசித்தவர் எம்ஜியார். அந்நாளில் சுயமாக இயங்கி வந்த கல்விக் கூடங்களுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் அவர் அளித்த நன்கொடைகள் கணக்கில் அடங்கா.

    நான் படித்த சென்னை மேற்கு மாம்பலம் உயர்நிலைப்பள்ளி ( இன்று அஞ்சுகம் மேல் நிலைப்பள்ளி என்ற பெயராம் ) கட்டிட நிதிக்காக அட்வகேட் அமரன் என்ற நாடகத்தை நடத்தி பெருநிதி அளித்தவர் எம்ஜியார். இருந்தபோதும் அந்த பள்ளி இன்றும் பழைய தோற்றத்திலேயே கீற்றுக்கொட்டக்கையில் நீடிப்பதை சமீபத்தில் பாற்கநேர்ந்தது.

    எம்ஜியாருடைய வாழ்வில் முதல் இரண்டு மனைவிகள் அடுத்தடுத்து மரணமுற்றபோது மூன்றாவதாக அவரோடு இணைந்து நடித்த விஎன் ஜானகியை அறுபதுகளில் மணந்து அவர் ஜானகி ராமச்சந்திரனானார்.

    திரையில் எனக்கொருமகன் பிறப்பான் அவன் என்னைப்போலவே இருப்பான் என்று குதூகுலத்தோடு குதித்துப் பாடிய எம்ஜியாரின் விருப்பம் கடைசிவரை பொய்யாயிற்று.

    தொள்ளாயிரத்து அறுபத்தேழில் ஏறத்தாழ இருபது படங்களுக்கு மேலாக அவரோடு இணைந்து நடித்த நடிகவேள் எம் ஆர் ராதாவால் தனிப்பட்ட காரணங்களுக்காக சுடப்பட்டு தனிப்பிறவியாக அவர் பிழைத்ததை பார்த்தவன் நான்.

    தன்வாழ்வுக்கு ஏணியாய் நின்ற திமுகாவின் அந்நாளைய அசுர வளர்ச்சிக்கு எம்ஜியார் திருப்பிச் செலுத்திய பங்கு மகத்தானது.

    எம்ஜியாரும் கருணாநிதியும் தொள்ளாயிரத்து ஐம்பதிலேயே நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இணைந்து வெளியான மந்திரி குமாரி திரைப்படம் தமிழ்த்திரையுலகிற்கு ஒரு திருப்பம் தந்தது.

    அண்ணாவின் மறைவிற்குப்பிறகு கருணாநிதி முதல்வர் பொறுப்பேற்க எம்ஜியாரே துணை நின்றார். இருப்பினும் காலப்போக்கில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கசப்பில் 1972 ல் எம்ஜியாரின் அண்ணாதிமுக உருவெடுக்கிறது. திமுகாவில் கருணாநிதிக்கெதிராக நின்றிருந்தவர்கள் எம்ஜியாரோடு அணிசேர்ந்தனர். மாற்றுக் கட்சிகளில் இருந்த கருணாநிதிக் கெதிரானவர்களும் அதிமுகாவை ஆதரித்தனர். பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளால் பின்தங்கியவர்கள் கருணாநிதிக்கெதிராக எம்ஜியாரோடு சேர்ந்தனர்.

    ஒருதனிமனித எதிர்ப்பே அந்தக்கட்சியின் தலையாய கொள்கையாயிற்று. முன்னதாக நலிந்தமக்களிடையே எம்ஜியார் ஏற்படுத்தியிருந்த பிம்பம் அவரது அரசியலுக்கு பெரும்துணையாயிற்று. அண்ணாகாலத்தில் திமுக கலைத்துறையை ஊறுகாயாய் பயன்படுத்திற்று. ஆனால் அதிமுகாவோ அதையே முக்கிய விருந்தாக்கிற்று. மத்திய அரசின் மிட்டலுக்கு பயந்து அதிமுகவை அஇஅதிமுக வாக அவர் மாற்றியது நல்ல வேடிக்கை.

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும் என்று பாடிய அந்த திரைக்கலைஞன் அடுத்தடுத்து காலப்போக்கில் நான்கெழுத்துக்கும் ஆறெழுத்துக்கும் தாவியது துரதிஷ்டம்.

    இயக்கத்தின் வளர்ச்சிக்காக திமுகவினர் தொடர்ச்சியாக அரசுக்கெதிரான போராட்டங்களை நடத்தி சிறைப்பட்ட காலம். அத்தனை போராட்டங்களிலும் கலந்து கொள்ளாமலிருக்க கலைத்துறையினருக்கு அண்ணா விதிவிலக்களித்திருந்தார். அவர்களை திமுகாவின் செல்லப் பிளைகளாகவே அண்ணா பாவித்தார். அவர்களை இயக்க வளர்ச்சிக்கு பிரச்சாரக்கருவியாக மட்டுமே கையாண்டார். கழக நிர்வாக செயல்பாடுகளில் அவர்களுக்கெல்லாம் பெரிதாக இடமளிக்க வில்லை.

    திமுகாவின் எந்தப்போராட்டங்களிலும் எம்ஜியார் கலந்து கொண்டதில்லை. சிறைபுகுகின்ற வாய்ப்பும் அவருக்கு கிட்டியதில்லை.

    திராவிட இயக்கத்தில் இவர்களுக்கெல்லாம் ஒரு இறுக்கமான பிடிப்பு இல்லாமற் போனதற்கு இதுவும் ஒருகாரணம் என்று கருதுகிறேன்.

    எழுபத்திரெண்டில் திமுகவைவிட்டு எம்ஜியார் வெளியேறிய போது கட்டியவேட்டியோடு வெளியேறினார் என்று சொல்லவேண்டும். திமுக பெரியாரிடம் சமரசம் செய்துகொண்ட கடவுள் மறுப்பு கொள்கையை முழுதுமாக எம்ஜியார் கைவிட்டதைத்தான் இப்படி குறிப்பிடுகிறேன். பெரும்பாலான ஆத்தீகர்கள் கூட எம்ஜியாரோடு அணிவகுக்க இப்போது சங்கடமில்லாமற் போயிற்று.

    பக்திப்பழம் திருமுருக கிருபானந்த வாரியார் சாமிகள் மக்கள் திலகத்துக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வழங்குகிறார். அதேசமயம் அவரது அபிமானிகளோ அவரை புரட்சித்தலைவராக்கி மகிழ்ந்தனர்.

    தொள்ளாயிரத்து எழுபத்தி இரண்டுக்குப்பிறகு எம்ஜியார் பிக்சர்ஸ் முகப்புக்கொடி அண்ணா திமுக அடையாளமாயிற்று.அவர் நண்பர் கருணாநிதிக்கெதிராக மக்களிடையே அவர் விதைத்த வெறுப்பு விதைகள் அவர் மறைந்து இரண்டு தலைமுறை கடந்த பிறகும் கூட அகன்றதாக தெரியவில்லை.

    பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டுமுறை திமுகாவிலும் மூன்று முறை அதிமுகாவிலும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மக்கள்திலகம். பெரம்பலூர் மதுரை மாவட்டங்களின் நலிந்த பிரிவினர் அவரை கண்களால் கண்ட தெய்வமாக இன்றும் நேசிக்கின்றனர்.

    பெருவாரியான மக்களின் பேராதரவுடன் தமிழ்நாடு முதல்வராக ஏறதாழ பதினோரு ஆண்டுகள் பதவியில் இருந்தவர். அவரது திரைப்படங்களுக்கு பிலிம்பேர் பத்திரிக்கையின் மதிப்புமிக்க விருதும் மத்திய அரசின் தேசிய விருதுகளும் கிடைத்திருக்கின்றன. சென்னை பல்கலைக்கழகம் கௌரமிக்க டாக்டர் பட்டம் வழங்கி அவருக்கு பெருமை சேர்க்கிறது.

    மந்திரிகுமாரி, மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்களும், எங்கவீட்டுப்பிள்ளை, நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், மகாதேவி, உலகம் சுற்றும்வாலிபன், ரிக்ஷாக்காரன் . . . அவரது வெற்றிப் படங்களின் எண்ணிக்கை இப்படி நீள்கிறது.

    அவரது கடைசிகாலங்களில் வெளியான நான் ஏன் பிறந்தேன் திரைப்படத்தை நான் விரும்பி ரசித்தேன் என்று சொல்லவேண்டும். அவருடைய உலகம் சுற்றும் வாலிபன் அவருடைய முந்தைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்து புதிய வரலாறு படைத்ததை மறக்க இயலாதது.

    அவருடைய திரைப்படங்களைப்பற்றியோ அவரது நற்குணங்களைப் பற்றியோ அவர் அளித்த நன்கொடைகள் பற்றியோ வரையறுக்கப் பெற்ற சொற்களில் இந்த பதிவில் ஒருபோதும் விளக்கிட முடியாது.

    தொள்ளாயிரத்து எண்பத்தியேழு டிசம்பர் இருபத்திநாலில் அந்த மகத்தான கலைஞன் உயிர் நீத்த போது தமிழகமே ஸ்தம்பித்தது. சோகம் என்ற சொல்லின் வலிமையை தமிழகம் அன்று முழுமையாக உணர்ந்தது.

    ஏறத்தாழ முப்பதுக்குமேற்பட்ட மதிப்புமிக்க உயிர்கள் அவருக்காக உதிர்ந்து போயின. அவரை அரசியலில் எதிர்த்து நின்றவர்களும் அன்று கண்ணீர் உகுத்தனர்.

    மத்திய அரசு எண்பத்தியெட்டில் அந்த பெருமகனுக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கி கௌரவிக்கிறது.

    பதினைந்து வருடங்களுக்கு மேலாக நேரடியான அரசியல் அநுபவம் இருந்தாலும் மக்கள் திலகத்தின் ஆட்சி அத்தனை திருப்திகரமானதாக இருந்திடவில்லை என்பதை இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும். அவர் திமுகாவை விட்டு வெளியேறியபோது அவரோடு அவசரம் அவசரமாக இணைந்து கொண்டவர்கள் பெரும்பாலும் திமுகாவில் பல காரணங்களால் ஒதுக்கப்பட்ட அதிருப்தியாளர்களும், அரசியல் சந்தர்ப்பவாதிகளுமாகவே இருந்தார்கள்.

    கருணாநிதியை ஊழல்வாதியாக குற்றம்சாட்டி கட்சி ஆரம்பித்த எம்ஜியார் தனது அரசின் சகல துறைகளிலும் ஊடுருவிய ஊழலை தடுக்க முடியாமற் போயிற்று. திரைப்படங்களில் சாமானிய மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பியிருந்தாலும் அவர் ஆட்சியின் பயன்கள் அவர்களுக்கு எட்டமுடியாமல் போயிற்று. அவரது ஆட்சிகாலங்களில் தமிழகத்திற்கான தொலைநோக்கு திட்டங்கள் எதுவுமே சிந்திக்கபடாமற் போயிற்று.

    நிர்வாகத்திறன் போதாமை, நேர்மையான ஆலோசகர்கள் இன்மை, இவையெல்லாம் அவருக்கெதிராக நின்றது. ஆளும் கட்சியினரின் அபரிதமான தலையீடு அரசு எந்திரத்தை கடித்துக் குதறியது.

    அதேசமயம் குழந்தைகளுக்கான காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை சீரமைத்து மதிப்புமிக்க சத்துணவுத்திட்டமாக்கியது மக்கள் திலகமே. அரசின் நியாயவிலைக்கடைகளை பெருமளவு விரிவாக்கியதும் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வியில் அறுபத்தொன்பது விழுக்காடு இடஒதுக்கீடு ஏற்படுத்தியதும் அவர் ஆட்சி காலத்தில்தான்.

    தமிழ் ஈழ விடுதலைக்காக உயிர்துறந்த மாவீரன் பிரபாகரன் கரங்களை அன்நாளில் வலுப்படுத்த மக்கள்திலகம் துணையாக நின்றதை மறக்கமுடியாது.

    காலம் காலமாக கலைத்துறையில் அவர் ஏற்படுத்திக்கொண்ட மாயபிம்பம், ஒரு ஒப்பனை வடிவம், தலைமுறைகளைத் தாண்டி இன்றும் அவரை பேசிக்கொண்டிருக்கிறது. திரையுலகில் அவர் வாயசைத்த பாடல்கள் தமிழ்நாடெங்கும் இன்னும் அவரது நினைவை ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

    தனிமனித எதிர்ப்பில் தோன்றிய அவருடைய இயக்கம் இன்றும் ஒரு பெருங்கூட்டத்துக்கு அரசியல்வாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

    இருந்தபோதும் அவரது எதிராளிகளுக்கும் அவர் இன்னும் மனங்கவர்ந்த மக்கள் திலகம்தான்.

    என் நினைவுகளில் மக்கள் திலகத்துக்கு நீங்காத ஒரு இடமுண்டு. அதில் ஒன்றும் இரு கருத்தில்லை.

    Share
  • சுமையென்று நினைத்து . . .

    வில்லவன் கோதை

    நாட்டு ஓடு வேயப்பட்ட அந்த வீடு அழுக்கேறிக் கிடந்தது.

    மரச்சட்டங்களால் தடுக்கப்பட்டிருந்த அதன் கதவுகளில் பழமையான பூட்டு ஒன்று  தொங்கிக்கொண்டிருந்தது.

    தயங்கித் தயங்கி அந்த வீட்டின் முன் நிற்கிறான் கார்த்தி.. இத்தனைக்கும் அவன் பிறந்து வளர்ந்த வீடுதான். இன்று அவனுக்கே அன்னியமாக தோன்றுகிறது.

    நடுத்தர வயதைக்கடந்த  மெலிந்த  பெரியவர் ஒருவர் குறுக்கிடுகிறார்.

    “வாத்தியார்  வைரமுத்து …”

    கார்த்தி வாக்கியத்தை முடிக்கவில்லை.

    “ஆமா தம்பி. .இப்ப அவுரு இல்லீங்க .கொஞ்ச நாளைக்கு முன்னால தவறிட்டாருங்க.“

    பெரியவரின் பதில் கார்த்தியின் உடலிலும் உள்ளத்திலும் மெல்லிய அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

    அப்ப  அவுரு பொண்ணு.

    “பாப்பாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சிங்க. மாப்பிள்ள கும்மோணம் பேங்ல செக்குரிட்டியா இருக்கிறதா கேள்வி.  வாத்தியாரு கல்யாணம் முடிஞ்சி  கொஞ்ச நாள் இங்கதான் இருந்தாருங்க.அப்ரம் பாப்பாவே கூட்டிகிட்டு போயிடுச்சிங்க..  நீங்க. தம்பி …“

    முதன் முறையாக வாத்தியாரின் மூத்த பிள்ளை என்று சொல்லிக்கொள்ள அவன் நா  தடுமாறுகிறது.  அப்படி ஒன்றும் கார்த்தி தப்பானவன் இல்லை.

    “தெரிஞ்சவுங்க..”

    “ வடக்குத்தெருவுல சீனுவாசன் டாக்டர் வீட்டுக்கு நேர் எதிர்வீடு. போனா பாப்பாவ பாக்கலாமுங்க. “

    கார்த்திக்கு தெரியாமல் நிகழந்துபோன தகவல்களை தொட்டுக்காட்டிய பெரியவர் நகர்கிறார்.

    நெஞ்சில் ஒரு இனம் புரியாத படபடப்பு. அவன் நினைவுகள் பின்னோக்கி அலசுகிறது.

    கடைசியாக அப்பாவையும் இழந்துவிட்டேன். அன்று நான் செய்த முடிவு என்னைப்பொறுத்தவரை தவறென்று தோன்றவில்லை. இருந்தும் இன்று இந்த மஞ்சுவைக்கூட  எதிர் கொள்ள போதுமான துணிவு எனக்கு ஏன் ஏற்படாமற்போயிற்று.

    இருபது வருஷம் கழிந்தபின்னும்  ஏன் இந்த குற்ற உணர்வு   !  மன உருத்தல். !

    சொற்ப வருமானத்தில் போராடிக்கொண்டிருந்த அப்பாவை உதறி நான் ஓடியிருக்கக்கூடாது.

    கனவுகளோடு கல்யாணத்தை உறுதி செய்து கொண்டிருந்த அந்த புதுப்பெண் , தீராத நோயுற்ற அம்மா  , அடுத்த பத்து வருஷத்தில் கரைசேற்க வேண்டிய தங்கை…

    நான் பொறுபற்று திரிந்தபோதும்  ஓய்வின்றி உழைத்து எங்களைச்சுமந்தவர் அப்பா. அம்மாவின் முடிவற்ற மருத்துவச்சுமைக்கிடையே என்னை முதுகலை பட்டாதாரி ஆக்கி மகிழ்ந்தவர்.

    தான் சுமக்கும் சுமைக்கு காலப்போக்கில் இவன் ஒரு சுமைதாங்கியாக இருப்பான் என்று நினைத்திருப்பாரோ என்னவோ.

    அவரை தெரிந்தோ தெரியாமலோ ஏமாற்றிவிட்டேன்.

    அவர் தேடித்தந்த பலவேறு வேலைகள் அன்று என் கவுரவத்துக்கு இழுக்காக தோன்றிற்று.

    ச்சே ! என்ன காரியம் செய்தேன்.

    கார்த்திக்கு நினைவெல்லாம் கசந்தது.

    அன்று மனைவி உடல் மோசமடைய கார்த்திக்கு  கால்கட்டு போட நினைத்தார் வைரமுத்து வாத்தியார்.

    பெண்ணுக்கொன்றும் குறையில்லை. கார்த்திக்குகூட சம்மதம்தான். ஆனால் பெண்ணின் வயது முதிர்ந்த பெற்றோர் அவன் நினைவுகளில் இடறினர். அவர்களையும் சுமக்கக்கூடிய சூழல் ஏற்பட்டால்     என்ன செய்வதென்ற ஒரு அதீத கற்பனை.  கிடைத்திருக்கிற வாழ்க்கையில் சுமையின்றி சுதந்திரமாக பறக்கவிரும்பியவன். அதுதான் அவனுக்கு முக்கியம்.இந்த உறவுக்கு அவன்  தயாராயில்லை. .

    “ நம்ம குடும்பத்துக்கேத்த நல்ல பொண்ணுடா. ஒன்ன நம்பி நிச்சியம்கூட  பண்ணிட்டேன்..இதில ஒனக்கு இஷ்டமில்லேண்ணா அத்தோட உட்டுடு. அப்ரம் என் மொகத்தலயே விழிக்காதே. “

    தன் கனவுகள் தன் கண்ணெதிரே நொறுங்கிவிடக்கூடாதென்ற எச்சரிக்கையில்  விருட்டென்று எழுந்து கொல்லைபுறம் போகிறார் அப்பா.

    கல்யாணம் என்பதையே கால்கட்டு என்றுதானே சொல்கிறார்கள். அந்த கட்டை தானே போட்டுக்கொள்ள விரும்பாமல் வீட்டைவிட்டு வெளியேறி அன்று இரவில் சென்னைக்கு ரெயிலேறுகிறான் கார்த்தி

    பையன் யாரையோ லவ் பண்ணியிருக்கான். அதான் விட்டுட்டான் சவாரி !

    ஊரே கூடிக்கூடி பேசியிருக்கும். அப்பா முகம் எப்படி இருந்திருக்கும்.

    இந்த தேசத்தின் வரைபடங்களில் மட்டுமே அறிந்திருந்த  பல்வேறு பிரதேசங்களில்  நாயாக அலைந்து  இறுதியில் கொல்கத்தா நகரில் ஒரு ட்ராவல்ஸ் நிறுவனத்தில் அடைக்கலமாகிறான்.. அதுவரை அவன் சந்தித்த துயரங்கள் கேட்க சகிக்காதவை.

    இருபது  வருடம்கள் முடிந்து போனது.

    நாடெங்கும் சுற்றிய கார்த்தி இந்தமுறை ஒரு சுற்றுலா குழுவினரோடு தமிழகம் வந்தபோது அவன் நெஞ்சில் புதைக்கப்பட்டிருந்த நினைவுகள் அவனை இங்கே இறக்கிற்று.

    வெளி வராண்டாவில்  இந்து யாரிடமோ பேசும் குரல் கேட்டு வெளியே வந்தாள் மஞ்சுளா.

    “மஞ்சுளா அம்மா வீடு இதுதானேண்ணு இந்த மாமா கேட்டார். மஞ்சுளா வீடுதான் இது. அவுங்க அம்மா வீடுல்லண்ணு சொன்னேன். “

    வீட்டுப்பாடங்களை செய்துகொண்டே பதிலளித்தாள் இந்து. பத்து வயது இருக்கக்கூடும். மீண்டுமொருமுறை காணவிரும்பும் வசீகரமான சிவந்த முகம். துருதுருவென்ற பார்வை.

    தோளில் கருப்புப்பையொன்றை மாட்டியவாறு  கலைந்த முடியோடு நின்றிருந்த அந்த இளைஞனைப்பார்த்தும் இனம் புரியாத குழப்பமும் அதைத்தொடர்ந்து எதிர்பாராத வியப்பும் அடைந்தாள் மஞ்சுளா.ஏறத்தாழ தன்னையொத்த சாயலில் அவன் இருப்பதை உணர்ந்து அவள் அறியாமல் உடலெங்கும் மகிழ்ச்சி அலைகள் பரவின.

    அவனுக்கும் அதே மாதிரியான மனநிலைகள் ஏற்பட்டிருக்கக்கூடும்.

    “வா ண்ணா ! “

    அடுத்த சில நிமிடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பிய மஞ்சுளா அண்ணனை வரவேற்றாள். உள்ளே  நுழைந்த கார்த்தி  கைப்பையை கீழே வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தான்.

    இந்துவுக்கு நடப்பது வித்தியாசமாய் தெரிந்தாலும் அவள் வீட்டுப்பாடத்தில் லயித்திருந்தாள்.

    “நல்லாருக்கியா அண்ணா  “

    எதிர் இருக்கையில் அமர்ந்த மஞ்சு பேச்சைத்துவக்கினாள்.

    கார்த்தி நா வரண்டுபோனதை உணர்ந்தான் .எந்த சொற்களும் அவனிடமிருந்து வெளியேறவில்லை. குளிர்ந்த நீரை ஒரு டம்ளர் நிறைய கொண்டுவந்து வைத்தாள் மஞ்சுளா.

    “இருபது வருஷத்ல ஒனக்கு எங்க நெனைப்பு ஒருதடவகூட வரல. அப்பா அன்னிக்கு அவரது இக்கட்டான சூழல்ல சொன்ன ஒரு வார்த்த ஒனக்கு பெரிசா போயிடுச்சி. அவர் கடைசிவரைக்கும் நீ வருவே வருவேண்ணு ..  போ . . ண்ணா ! “

    ஆத்திரமும் அழுகையும் பீரிட்டு வெளியேறுகிறது. நெஞ்சுக்குழியில் ஏதோ அடைப்பதை உணர்ந்தாள் மஞ்சுளா.

    துக்கத்தை மறைத்து அடுக்களைக்குள் நுழைந்த மஞ்சுளா .. .

    “அன்னிக்கு நிச்சியம் பண்ண  பொண்ணு நெலய நீ நெனச்சி பாத்தியா. ஊரே அப்பா மொகத்ல காரி துப்புச்சி. “

    அடுப்பிலிருந்த பாலை இறக்கி பில்டரில் இருந்த  டிகாஷத்தை சர்க்கரையோடு அளவாக கலந்து அண்ணனுக்கு முன்னாலிருந்த  மோடாவில் வைக்கிறாள்.

    காபியின் மணம் அந்த அறையை நிறைக்கிறது. கார்த்தியின் குற்ற உணர்வு அந்த மணத்தை விழுங்குகிறது.

    வலதுகையால் முகத்தைத் தாங்கியவாறு  பதில் ஏதும் பேசாமல் இருக்கையில் இருந்தான்  …

    “நீ போயி பத்து நாளைக்கெல்லாம் அம்மா போயிட்டாங்க. பெத்த பெண்ண எப்டி கரைசேர்க்கபோறோம்ங்ற பயம் அப்பாவுக்கு. அப்பாவோட ப்ரண்ட் மூலமா வந்த இவர்தான் எங்கள இக்கட்டான சூழல்லேயிருந்து விடுவிச்சார்.

    “அதுமட்டுமல்ல.  அப்பா படுத்த படுக்கையா போனப்ப ஒண்டரை வருஷத்துக்கு மேல அவர் செஞ்ச பணிவிடைகள்  கொஞ்ச நஞ்சமல்ல.அந்த விஷயத்ல அப்பா குடுத்து வெச்சவர்தான். அவருக்கு எந்த கஷ்டமும் தெரியாம  கடைசிவரைக்கும் அவருக்கு தொணையா இருந்தார்.

    இப்படியொரு புருஷன் எனக்கு கெடக்கிறதுக்கு நான் பாக்கியசாலிதான். இந்த குடும்பத்ல மூத்தவனா பொறந்த நீ பெத்து வளர்த்த  அப்பா ஏதோசொல்லிட்டாருண்ணு ஓடிப்போயிட்ட.

    எல்லாம் முடிஞ்சிபோனபிறகு இப்ப ஏண்ணா வந்த..யாராவது உசிரோடு இருக்காங்களாண்ணு பாக்கவா .இல்ல நீ உசிரோட இருக்கிறத காம்பிக்க வா.  “

    கண்களில் நீர் கொப்புளிக்க  எதிர் இருக்கையில் அமர்கிறாள்  மஞ்சுளா.

    “அப்பா சாகிற வரைக்கும் ஆபீசுலயும் வேல பாத்துகிட்டு ராப்பகலா கண்விழிச்சி . . . . அவர் ரொம்ப பாவம்ண்ணா. போன ஜன்மத்ல அவருக்கு புள்ளையா பொறந்து ஒன்னாட்டம் ஓடிட்டாரோ என்னவோ . “

    கார்த்தியின் கண்கள் கலக்கமுற்று கண்ணீரீரை வெளியேற்ற முயன்றது. முகத்தை தாழ்த்தி கட்டுப்படுத்த முயன்றான்.

    “சரி! காப்பிய குடிச்சிட்டு வா.  வென்நீர் போட்ருக்கேன்.குளிக்கலாம் “

    கலங்கிய கண்களை புடவைத்தலைப்பால் அழுந்த துடைத்துக்கொண்டே உள்ளே போனாள் மஞ்சுளா.

    தங்கையின் பேச்சைக்கேட்கக்கேட்க  கார்த்திக்கு ஓருபக்கம் தன்மீதே வெருப்பாகவும் இன்னொருபக்கம் மஞ்சுவை பார்க்க பார்க்க  வியப்பாகவும் இருந்தது

    மஞ்சுவா இப்படி பேசுகிறாள். காலம்தான்  மனிதர்களை  உடலாலும் உள்ளத்தாலும் எத்தனை எளிதாக பக்குவப்படுத்துகிறது.

    குளியலறைக்குள்  நுழைந்த கார்த்தி உடல் அசதி தீர குளித்தான். உள்ளத்தில் ஊறிக்கிடந்த நெடுநாள் குழப்பங்கள்  ஓரளவுக்கு வெளியேறியதை உணர்ந்தான்.

    தன்னுடைய பொறுப்பற்ற தன்மையும் எங்கிருந்தோ வந்த ஒருவனின் அசாத்திய பண்புகளையும் எண்ணிப்பார்த்தான். தான் கற்றிருந்த உயர்கல்வி தனக்கு இதை எள்ளளவும் போதிக்கவில்லை  என்ற எண்ணமே ஓங்கிற்று.

    “இந்து ! மாமாவுக்கு டவல் கொண்ட குடு. “

    அடுக்களையிலிருந்து குரலெழுப்பினாள் மஞ்சு.

    “ஒனக்கு இப்பிடியொரு அண்ணன் இருக்கிறதை இதுவரை சொல்லவே இல்லியே“

    என்றவாறே புதிய டவல் ஒன்றை கொண்டுபோனாள் இந்து.

    “சொல்ற மாதிரியா அவன் நடந்துகிட்டான்  ! “

    மெல்ல முணுமுணுத்த படியே  கார்த்திக்கு சுடசுட உணவு பரிமாரினாள் மஞ்சு.

    “ஒன் பொண்ணு ஒன்னாட்டம் ரொம்ப சமத்தா இருக்காளே !  இன்னிக்கு சண்டேதானே. அத்தான் எங்க போயிருக்கார். “

    முதன் முறையாக சாப்பிடுவதற்குமுன் வாயைத்திறந்தான் கார்த்தி.

    “அவுரு  மேனேஜரோட ஹெட் ஆபீசுக்கு கேம் போயிருக்கார். நாளை காலேலதான் திரும்புறார். “

    “எங்க ட்ராவல்ஸ் கோச் ஈவினிங் கும்பகோணம் வருது.அதுக்குள்ள நான் போயிடணும். “

    “நாளைக்கு இருந்து அவர பாத்துட்டு போ அண்ணா. அவரு ரொம்ப சந்தோஷப்படுவார். “

    ‘’இல்ல மஞ்சு .இன்னும் மூணுமாசத்துக்குள்ள  நான் சென்னைக்கு மறுபடி வருவேன்..  அத்தான் கிட்ட சொல்லு. அவர் மொகத்ல விழிக்கக்கூடிய தெம்பு எனக்கு மொதல்ல வரணும்.”

    அவனுக்கு பிடித்தமான வத்த கொழம்பையும்  கத்தரிக்காய் வருவலையும் நெடு நாட்களுக்குப்பிறகு தங்கை கையால் சாப்பிட நேர்ந்ததை எண்ணி மகிழ்ந்தான்.

    மஞ்சுவால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. அவனை பார்த்த இந்த தருணங்களே அவளுக்கு பெரிதாயிருந்தது.

    “மஞ்சு ஒன் கல்யாணத்துக்காக நான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பணம். இது .இந்துவுக்காவது ஒபயோகமா இருக்கட்டும். “

    அய்ந்து லட்சத்துக்கான ஒருகாசோலையை மஞ்சுவின் பெயரெழுதி இந்துவிடம் கொடுத்தான் கார்த்தி.

    “மாமா ஒரு நாள் இருங்க மாமா. “

    “நிச்சியமா இன்னொருமுறை வர்றம்மா. “

    கண்கலங்க விடை கொடுத்தாள் மஞ்சு.

    சந்தோஷம் என்பது  பொறுப்பற்று திரிவதில் இல்லை. சகமனிதர்களிடம்  அன்பை பகிர்ந்து கொள்வதில்தான் இருக்கிறதென்பதை கார்த்தி உணர்ந்து கொண்டான்.

    உறவுகளும் நட்புகளும் ஏற்பட்டிருப்பது அதற்காகத்தான்.

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    –வில்லவன் கோதை.

     

    கவிஞர் கண்ணதாசன்! என் பார்வை வேறு . . .!
    மரணத்தை வென்ற மகன் !

     

    Kannadasanதொள்ளாயிரத்து ஐம்பத்தியேழு என்று கருதுகிறேன். அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். தஞ்சை மாவட்டத்தின் ஒரு மூலையிலிருந்து தற்காலிகமாக சென்னைநகர பள்ளியொன்றுக்கு இடம் மாறுகிறேன்.

    நகருக்குள் நுழையும்போதே பரந்துவிரிந்து கிடந்த மதராஸ் பட்டணம் (அப்போது அதுதான் பெயர் ) என் இமைகளை உயர்த்துகிறது. நகரின் நெருக்கமான வீதிகளில் நவீன வாழ்க்கை நான் அதுவரை பார்த்திராதது

    ஒருசமயம் மதராஸ் நகரின் கெல்லீஸ் பகுதியிலிருந்த உமா திரையரங்கு என்வழியில் குறுக்கிடுகிறது. அதன் முகப்பில் வைக்கப் பெற்றிருந்த கவிஞர் கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை திரைப்படத்தின் வானுயர கட்டவுட் எனக்குள் ஒருவித பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அது இப்போது போலல்லாமல் முழுவதும் ஓவியர்களால் எழுதப்பெற்றிருந்தது. அதுபோன்ற கட்டவுட்களை அப்போதெல்லாம் நான் பார்த்ததில்லை.

    ஏறத்தாழ முப்பத்திமூன்று வருடங்களுக்கு முன்னால் மறைந்து இன்றும் பேசப்படுகிற கவிஞர் கண்ணதாசனை முதன்முதலாக அன்றுதான் கேள்விப்படுகிறேன்.

    நான் நிரந்தரமானவன் எனக்கு மரணமில்லை !
    என்று பாடிய அந்த கவிஞனது கூற்று இன்று உண்மையாகியிருக்கிறது.

    கவிஞர் அப்போதே திரையுலகின் பல்வேறு சரிவுகளைக்கடந்து சொந்தமாக திரைப்படம் எடுக்கும் நிலையை எட்டியிருந்தார் .அடுத்த சில நாட்களில் மயிலாப்பூர் மாங்கொல்லையில் திராவிடஇயக்க திரளான கூட்டமொன்றில் கவிஞர் பேசுகிறார். அப்போது திமுகாவின் முக்கியத் தலைவர்களுள் அவர் ஒருவராயிருந்தார்

    “இன்று சொல்கிறேன். எழுதிவைத்துக்கொள்ளுங்கள். இந்த கண்ணதாசன் மாண்டுபோனால் அவனுடைய உடல் கழகத்தின் கருப்பு சிகப்பு துணிகளால் போர்த்தப்பட்டு இறுதி பயணத்தை மேற்கொள்ளும்.. அது நிச்சயம் ! ’’

    மூன்று மணி நேரத்துக்கு மேலாக நகைச்சுவை ததும்ப பேசுகிறார் கவிஞர் .நான் கேட்ட முதல் அரசியல் சொற்பொழிவும் அதுதான். அதன் பெரும்பகுதி அப்போது எனக்கு அவ்ளவாக விளங்காமற் போனாலும் அவருடைய நகைச்சுவையான பேச்சு என்னைப்பெரிதும் கவர்ந்தது. அவரது குரலும் பேச்சு நடையும் திராவிட இயக்க பேச்சாளர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்ததை பின்னால் உணர்ந்தேன்.

    அந்த ஆவேசமான சூளுரை அடுத்த ஐந்தாண்டுகளில் அவசியமற்றுப்போயிற்று. கவிஞரும் அன்று பேசப்பட்ட கண்ணதாசனை மறந்து போனார். தமிழகமக்களுக்கும் அந்த சூளுரை அவ்ளவாக நினைவில்லாமற் போயிற்று.

    அவர் திமுகாவை விட்டு வெளியேறியிருந்தார்!!!

    இருந்தாலும் பின்நாளில் புரட்சி நடிகரின் பேரன்பால் தமிழக அரசின் உயரிய அரசவைக்கவிஞராகி மரணத்தின்போது அவரது பூதஉடல் தேசியக்கொடியால் போர்த்தப்பட்டு அரசு மரியாதை பெற்றது.

    செட்டிநாட்டு மண்ணில் தொள்ளாயிரத்து இருபத்தேழில் பிறந்த முத்தையா எட்டாம்வகுப்பு வரை மட்டுமே படித்தவர். நெற்றியிலே பட்டையோடும் கழுத்திலே கொட்டையோடும் உலா வந்த இளைஞர் முத்தையா படித்தது போதுமென்று பட்டணத்துக்கு புறப்படுகிறார். இளமையிலேயே கலைத்துறையில் ஈடுபாடு கொண்ட முத்தையா விரும்பியது போலவே பத்திரிக்கைத்துறை அவருக்கு அடைக்கலமளிக்கிறது.

    அன்நாளில் பேச்சையும் எழுத்தையுமே பேராயுதமாக கொண்டு தமிழகத்தில் எழுச்சியுற்ற திராவிட இயக்கம் இளைஞர் முத்தையாவை ஈர்க்கிறது.தொள்ளாயிரத்து நாற்பத்தொன்பதில் அண்ணா தலைமையில் திராவிடமுன்னேற்ற கழகம் உருவெடுத்தபோது இளைஞர் முத்தையா தன்னையும் இணைத்துக்கொள்கிறார்.

    மொழிமீது ஈர்ப்புகொண்டு தலைவர்களும் தொண்டர்களும் சீனிவாசன் , சுப்ரமணியன் என்ற தங்கள் பெயர்களையெல்லாம் தனித்தமிழ்படுத்திக்கொண்ட காலம். ஆன்மீகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இளைஞர் முத்தையாவும் கண்ணதாசனாகிறார். பகவான் கண்ணனைப்போல முத்தையாவும் அவர் குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாக பிறந்ததாலோ என்னவோ அவர் கண்ணனுக்கு தாசனாகியிருக்கக்கூடும்.

    ஆரம்ப காலங்களில் மதராஸ் பட்டணத்தில் அவர் பட்ட துயரங்கள் இந்தத் தலைமுறைக்கு கிட்டாதவை. கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் சொல்லொண்ணா துயரங்களிலும் வாழ்க்கையின் வெவ்வேறு ரசனைகளை விடாது அனுபவித்தவர் கவிஞர். அவருக்கிருந்த அசாத்திய கவித்திறன் தமிழ்த்திரையுலகுக்கு அன்று விளங்காமற் போயிற்று.

    “நீ பாட்டெழுதியது போதும் . கதைவசனத்தை எழுதி பொளப்ப பாரு ! “

    தமிழ்த்திரையுலகம் அவர்க்கு இப்படித்தான் வழிகாட்டிற்று. பாடல் எழுத படிபடியாய் ஏறிய கவிஞருக்கு திரையுலகம் தந்த வாய்ப்பு வசனம் எழுதத்தான். அவர் வசனம் எழுதிய இல்லறஜோதி , மதுரைவீரன் போன்ற பல்வேறுபடங்கள் தொடர்ந்து வெற்றியை ஈட்டுகிறது. இருந்தாலும் கவிஞருக்கு பாடல்கள்தான் லட்சியமாக இருந்தது.

    அப்போதெல்லாம் வெற்றி பெற்றவன் பின்னாலேயே தமிழ்த்திரையுலகம் ஓடிக்கொண்டிருந்தது . “பா” என்ற எழுத்தில் ஒரு படம் வெற்றி பெற்றபோது அடுத்த பலமான அடிகள் வாங்கும்வரை அந்த ‘ பா ’ தான் அடுத்தடுத்த தமிழ்ப்படங்களின் முதலெழுத்து.திறமைக்கு குறைவில்லையென்றாலும் அடுத்தவன் எவனும் அத்தனை எளிதாக கோடம்பாக்கத்தில் காலடி வைக்கமுடியாது.

    இத்தனைக்கும் கவிஞர் தளர்ந்து போய்விடவில்லை . தானே ஒரு படத்தை தயாரித்து அத்தனை பாட்டையும் தானே எழுதி தன் கவித்திறனை இந்த திரையுலகுக்கு எப்படியாவது பரைசாற்ற விரும்பினார் கவிஞர்.

    தொள்ளாயிரத்து ஐம்பத்தியேழில் பாட்டுக்கொருபடம் என்ற பெயரைப்பெற்ற அந்த திரைப்படம் மாலையிட்ட மங்கை என்ற பெயரில் வெளியாயிற்று. மறக்கமுடியாத ஐந்து பாடல்களையும் கவிஞரே எழுதியிருந்தார். அப்போதுதான் கவிஞரின் கவித்திறன் இந்த தமிழ்த்திரையுலகிற்கு புரிந்தது. அன்று அவரை வியப்போடு திரும்பிப்பார்த்த கோடம்பாக்கம் கடைசிவரை அவர் காலடியில் இருந்து எழவில்லை.அடுத்த கவிஞர் அந்த படியேற வெகு காலமாயிற்று. அப்படி வேறொருவர் எழுத நேர்ந்த பாடல்களும் கண்ணதாசன் பாடல்கள் என்றே பேசப்பட்டன.

    அந்த திரைப்படத்தில் ஒலித்த டி . ஆர் . மகாலிங்கத்தின்
    திராவிடப் பொன்னாடே . . .
    என்ற பாடல் திமுகாவினரை இன்றும் உறக்கத்தில் தட்டி எழுப்பத்தக்கது.

    அச்சம் என்பது மடமையடா . . . .
    என்ற கவிஞரின் இன்னொருபாடல் இன்றும் தமிழின மேடைகளில் ஒலிப்பதைக் கேட்டிடமுடியும்.

    அன்நாளைய திமுகாவில் முன்னணியிலிருந்த தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராயிருந்தனர். கட்சியின் கருத்துகளை மக்களிடையே கொண்டு செல்ல இரவு நேரங்களில் அரசியல் மேடைகளையும் பகற்பொழுதுகளில் பத்திரிக்கைகளையுமே திமுகா நம்பியிருந்தது. கவிஞரும் தம் அரசியல் கருத்துகளை இளைஞர்களிடையே கொண்டு சேர்க்க தமது தென்றல் , சண்டமாருதம் இதழ்களை பயன்படுத்தினார். பொறிபறக்கும் அரசியல் கட்டுரைகளும் நெஞ்சில் நிற்கும் கவிதைகளும் தென்றலில் தொடர்ந்து இடம் பெற்றன.

    புலம் பெயர்ந்த தமிழர்கள்பற்றி அவர் எழுதிய
    பெற்றதாய் நாட்டைவிட்டு பிற நாட்டுக்கேன் போனாய் தமிழா
    என்ற நெடுங்கவிதை இன்றும் மறக்கத்தகுந்ததல்ல.

    தன்னுடைய இலக்கியதாகத்துக்கு கலைஞரின் முத்தாரத்தைப்போல முல்லை என்ற திங்களிதழையும் கவிஞர் வெளியிட்டார். அந்த காலகட்டத்தில்தான் கவிஞரின் …
    சிவகங்கைச்சீமை
    கவலையில்லாத மனிதன்
    திரைப்படங்கள் வெளியாகி கவிஞரின் வரலாற்றில் முத்திரை பதித்தன.

    மேலும் மேலும் உயரே பறக்கநினைக்கும் கவிஞருக்கு திமுகா அத்தனை சாத்தியப்படவில்லை. அவர் எதிர்பார்த்த முக்கியத்துவம் திமுகாவில் கிடைக்காமற்போயிற்று. அன்று திமுகாவில் சொல்லின் செல்வர் என்று பேசப்பட்ட ஈ.வெ கி சம்பத் ஏற்படுத்திய பிளவு கவிஞர் கழகத்தைவிட்டு வெளியேற உதவுகிறது.

    “பகுத்தறிவு பேசும் இயக்கத்தில் ஒரு யோக்கியனைக்கூட இதுவரை நான் பார்தத்தில்லை”
    கழகத்தில் இருந்து வெளியேறிய கவிஞரின் சலிப்பான வார்த்தைகள் இவை.

    காலப்போக்கில் பத்தாண்டுகளுக்குமேலாக கடுமையாக விமர்சித்து வந்த காங்கிரஸ் பேரியக்கத்திலேயே ஈவெகி சம்பத்தோடு சேர்ந்து கரைகிறார் கவிஞர். சாகித்யாகாதமி விருது இப்போது அவரது சேரமான் காதலி என்ற நூலுக்காக தேடிவருகிறது.தேசிய சிந்தனைகளை விதைத்த இரத்த திலகம் ,கருப்புப்பணம் திரைப்படங்களை தருகிறார் கவிஞர்.

    புரட்சி நடிகர் எம்ஜியார் ஆட்சியில் அரசவைக்கவிஞராகிறார். எண்பத்திஒன்றில் சிகாகோ நகரில் நிகழ்ந்த தமிழர் மாநாட்டில் கவிஞரின் உயிர் பிரிகிறது.

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் மரபுக்கவிதைகளை சாமான்னிய மக்களுக்கும் கொண்டு சேர்த்ததில் மகாகவி பாரதிக்கு முக்கிய இடமுண்டு. அவரது படைப்புகளின் பெரும்பகுதி தேசவிடுதலையை முன்னிறுத்தியே பாடப்பட்டவை. அவரைத்தொடர்ந்து எழுதிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் படைப்புகளில் சமூகசிந்தனையும் மொழியின் சிறப்புமே மையம் கொண்டிருந்தன. பாரதிதாசனுக்கிருந்த கவித்திறன் அவரைத் தொடர்ந்து தமிழ்க்கவியுலகில் ஒரு கவிப்பரம்பரையே உருவாகக் காரணமாயிற்று..அந்த பரம்பரையில் காலடிவைத்து பல்வேறு பரம்பரைகளுக்கு பயணித்தவர் கவிஞர் கண்ணதாசன். எந்த குறிக்கோளிலும் நிலையின்றி மனம்போன போக்கில் சிறகடித்துப் பறந்த வானம்பாடி ..

    “போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாறி தூற்றுவோர் தூற்றட்டும் . .” என்று தன் விரிந்த பயணத்துக்கு பின்னாளில் விளக்கம் சொன்னவர் கவிஞர்

    ஒரு மனிதன் எப்படி வாழவேண்டுமென்பதற்கு தன் தந்தையும் எப்படியெல்லாம் வாழக்கூடதென்பதற்கு தானும் ஒரு சிறந்த உதாரணமென்கிறார் கவிஞர்.

    ஏறத்தாழ பத்துவருடங்களுக்கு மேலாகபகுத்தறிவு வாதியாக வலம் வந்த கவிஞர் அவர் வளர்த்த இயக்கம் ஆட்சிக்கு வந்தபோது அவர் அங்கே இல்லாமற் போனார்.. அதன்பிறகு கவிஞரின் பிற்பகுதி வாழ்க்கை அத்தனை சுவாரசியமற்று போயிற்று. மனக்கிளர்ச்சிகளுக்கேற்ப தவறுகளும் தடுமாற்றங்களும் இயல்பாக நிறைந்த கவிஞரை இன்றளவும் தூக்கி நிறுத்துவது அவரது திரையிசைபாடல்கள்தாம்..

    ஐம்பத்தி நான்கு ஆண்டுகளே வாழ்ந்த கண்ணதாசன் எழுதிக்குவித்த கதை கவிதை கட்டுரைகள் ஏராளம். பத்தாயிரத்துக்கு அதிகமான கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுதியவர் .முன்னூறுக்கு அதிகமான நூல்கள் விற்பனையில் வலம் வருகின்றன. கண்ணதாசன் தொடாத அரசியல் வாழ்வியல் துறைகள் அரிது .அவைகளையெல்லாம் இன்றைய வாசகர் தொட்டுணராத பொக்கிஷங்கள்.கவிஞர் பேசிய ஆத்தீகமும் நாத்திகமும் ஒதுக்கமுடியாதவை. பத்தாண்டு பகுத்தறிவு வாசத்துக்குப்பிறகு அவர் படைத்த மதம் சார்ந்த நூல்கள் இன்றும் விற்பனையில் முன்நிற்கின்றன.

    வாசிப்பு திறன் மங்கிப்போன இன்நாளில் கவிஞரை நிரந்தரமாக வாழவைப்பது இசைக்கேற்ப அவர் எழுதிய திரைப்படபாடல்களே.

    மிகமிக எளிமையாக சொல்லப்பட்ட ஒரு கருத்து மக்களிடையே முக்கித்துவம் பெற்று இன்றும் பேசப்படுவது அவரது பாடல்கள் மூலமே. இந்தப்பாடல்கள் அனைத்தும் இந்த தலைமுறையிலும் உலாவர அதற்கு தரப்பட்ட இசை வடிவமும் ஒரு தலையாய காரணம்.

    பல்வேறு வாழ்வியலின் தத்துவங்களை உள்ளடக்கிய இந்த பாடல்கள் அவரது மரபுக்கவிதைகளைப்போல திட்டமிட்டு எழுதப்பட்டவை அல்ல. இசையொலிக்காக அவ்வப்போது கவிஞர் மனதில் தோன்றி கொடுக்கின்ற காசுக்கு பிறந்த பாடல்கள். கவிஞரின் திரைப்பாடல்களில் அவர் சொன்ன உவமைகள் பல பாடல்களில் ஒட்டாமற் போனதுண்டு. அவையெல்லாம் இசைக்கேற்ப எழுதப்பட்டதே தலையாய காரணம்.

    அவர் பாடல்களுக்கான பல்லவிகள் மனதிற் தோன்றுதற்கு அவரது புறச்சூழல்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. ஈவெகி சம்பத் கட்சியைவிட்டு வெளியேறியபோது எங்கிருந்தாலும் வாழ்க என்ற அண்ணாவின் வரிகள் நெஞ்சில் ஒரு ஆலயம் திரைப்படத்தில் எங்கிருந்தாலும் வாழ்க என்ற பல்லவியை தருகிறது.

    அதைப்போலவே மனிதன் மாறிவிட்டான் என்ற பாடலும் ஏனோ மனிதன் மாறவில்லை என்ற பாடலும் கவிஞரின் அரசியலில் அவருக்கேற்பட்ட தடுமாற்றங்கள் தந்தவை.

    பழந்தமிழ் இலக்கியங்களின் வரிகளையும் புராண இதிகாசங்களின் புகழ் மிக்க சொற்களையும் தன் பாடல்களில் சேர்த்துக்கொண்டவர் கவிஞர். இதை பெரும் குறையாக பேசியவர்கள் உண்டு

    போனால் போகட்டும் போடா. . . .என்று தொடர்ந்து போனவர் கவிஞர்..

    கவிஞரைப்போல் ஒருவரை போற்றி கொண்டாடியவர் இல்லை. அவரையே இழித்துப்பேசியவர் அவரைத்தவிற வேறொருவர் இருந்திருக்கமுடியாது. கவிஞரின் கலம்பகத்தில் காமராஜரும் கலைஞரும் முக்கியமானவர்கள். அந்த வரிசையில் பண்டித நேருவிற்கும் இடமுண்டு.
    அவர்தான் கவிஞர் கண்ணதாசன்.

    அவர் வாழ்ந்த காலத்தில் பிறந்து வளர்ந்தவன் நான்.அவரது ஆயிரம் கருத்துக்களுக்கு மாறுபட்டாலும் அவரை மறக்கமுடியாத ரசிகன். அவரது பாடல்களில் சிறந்த பத்துபாடல்களை தேர்தெடுக்க முயன்றால் எத்தனையோ பாடல்களுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும்.

    கவிஞரது வாழ்க்கை ஒருசுவாரசியமான எவருக்கும் கிட்டாத அநுபவம். ஆனால் அது இன்னொருவர் வாழத்தக்கதல்ல.

    கவிஞரது எழுத்து எவருக்கும் கிடைக்காத வரம். அது காலமெல்லாம் மெய்சிலிர்க்கவைக்கும் ஒரு அதிசயம்.

     
    [பாண்டியன் ஜி ( வில்லவன் கோதை ) ]

    Share
  • அன்புள்ள மணிமொழி!…

     

    மணிமொழி ! நீ என்னை மறந்து விடு ! (விலகிப்போனவனின் ஒரு கடிதம் )

    அன்புள்ள மணிமொழிக்கு

    நீ நிரம்ப நேசிக்கிற ராஜாதான் எழுதுகிறேன்.

    ஆமாம் ! ராசியில்லா ராஜாவேதான்.

    கைபேசிகளின் சாம்ராஜியத்தில் பூஜ்யமாகிப்போன கடிதமா என்று யோசிக்கிறாயா. நேருக்கு நேராக போசுகிற திறனும் பேசுதற்கான சொற்களும் சிக்காத போது இன்னும் நமக்கு மிச்சமிருப்பது இந்த கடிதங்கள்தாம். கடிதங்களுக்கிருக்கும் மகத்தான சக்தி இன்னும் அழிந்து போய் விட்டதாக நான் கருதவில்லை.

    மணிமொழி ..
    இந்த கடிதம் உன் கைகளுக்கு கிடைக்கிறபோது இந்ததேசத்தின் இன்னொரு மூலைக்கு நான் நகர்ந்திருப்பேன். அதிர்ச்சியுற வேண்டாம். ஆழ்ந்து ஆய்ந்தெடுத்த முடிவுதான். கடந்த காலங்களைப்போல அவசரப்பட்டு விடவில்லை .ஒருவேளை என்னை கண்டறிய நீயோ வேறு எவரோ முயற்சித்தால் . . . வேண்டாம் ! அது தோல்வியில்தான் முடியக்கூடும்.

    மணிமொழி !
    நான் வாழ்ந்த வளர்ந்த வடச்சேரி வலிவலம் கிராமத்தை ஒட்டிய ஒரு பகுதிதான். வலிவலமும் வடச்சேரியும் அரசு நிர்வாக வரைபடத்தில் இன்றும் ஒன்றாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் இரண்டும் எப்போதுமே இரு வேறு துருவங்கள் என்பதை மறந்துவிடமுடியாது.வலிவலம் கிராமத்தின் கிழக்கு எல்லையோரம் உதிர்ந்து கிடப்பது வடச்சேரி. இரண்டுக்கும் இடையே பௌதீக அளவில் அப்படியொன்றும் வெகுதூரமில்லை. ஆனால் இந்த மண்ணின் மறபு வழியில் ஏற்பட்டுவிட்ட மேற் சாதி கீழ்சாதி என்ற சூத்திரத்தில் சிக்குண்டு தீண்டத்தகாத தூரத்தில் அமைந்து விட்டது. காலங்காலமாக மேற்சாதி கீழ்ச்சாதி என்று பழகிப்போன கட்டமைப்பில் ஒருவருக்கொருவர் எப்போதும் விலகியே நின்றனர். குடிப்பதற்கும் குளிப்பதற்கும்கூட இவர்களுக்கு இருவேறு நீர்நிலைகள் தனித்தனியாகத்தான் இருந்தது. இருந்தபோதும் அவர்கள் தங்கள் தங்கள் உயரங்களை வெகு நன்றாகவே உணர்ந்திருந்தனர். பெரும்பாலும் அவரவர் வாழ்க்கை அவரவர் போக்கில்தான் போனது. மேலத்தெரு ஈஸ்வரன் கோயிலில் வடச்சேரி மக்கள் நுழைய அரசு ஒத்துக்கொண்டாலும் இவர்கள் அந்த ஈஸ்வரனை நேருக்கு நேர் காண என்றைக்குமே முயர்ச்சித்ததில்லை.. மேலத்தெரு வாசிகள் வரிந்துகட்டிக்கொண்டு இவர்களை தடுக்க நேர்ந்ததுமில்லை..

    அதனால் வலிவலத்தின் சட்டம் ஒழுங்குக்கு இதுவரை எந்த பங்கமும் ஏற்பட்டு விடவில்லை.

    ஆனால் என்ன ஆயிற்று இந்த வலிவலத்துக்கு..
    இந்த இரண்டு மாதத்தில் நடக்கக்கூடாத எத்தனையோ காரியங்கள் நடந்து விட்டது.
    எண்ணிப்பார்க்கவே நெஞ்சம் பதருகிறது.
    இத்தனைக்கும் நீயும் நானும்தான் காரணமா. என்ன வேடிக்கை. வயதுக்கு வந்த ஒரு ஆணும் வயதுக்கு வந்த ஒரு பெண்ணும் இந்த மண்ணில் காதல் புரிதல் ஆண்டுக்கு ஆண்டு காதல் தினங்கள் கொண்டாடப்படும் இன்றைய சூழலில் ஒரு மாபாதகச் செயலா.
    ஆனால் அப்படியல்லவா எடுத்துக்கொண்டார்கள்.
    இந்த நாடு விடுதலையுற்று அறுபது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஐந்துக்குமேற்பட்ட ஐந்தாண்டுத்திட்டங்களை கண்ணை மூடிக்கொண்டு நிறைவேற்றிவிட்டோம். கல்வியிலும் பொருளாதாரத்திலும்கூட கணிசமாக முன்னேறிவிட்டதாக சொல்கிறார்கள். பின் எப்படி இந்த வெறியாட்டம்.. நாம் பெற்ற கல்வி ஒரு நல்ல சமூகத்துக்கு வேண்டிய பண்புகளை போதிக்கத்தவறிற்றா.
    இந்த கொலைவெறிக்கு இரண்டு இளம் கன்றுகள் வேலிதாண்டி வாழ முயற்சித்தது மட்டுமே காரணமா..
    ச்சே ! மனுஷனாக பிறந்ததற்கு ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டாமா.

    மணிமொழி ..
    ரெண்டு வருஷத்துக்கு முன்னால் கல்லூரி இலக்கியவிழா கூட்டமொன்றில் உன்னை நான் சந்தித்தபோது நீ வலிவலம் மேலத்தெரு பாபுத்தேவர் மகளென்று அறிந்திருக்கவில்லை. பின்னால் நாமிருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிய நேர்ந்தபோது நம்மிடையே எதார்த்தமாக துளிர் விட்ட நேசம் அடுத்த கட்டத்தை எட்டியிருந்தது.
    வடச்சேரியைச் சேர்ந்த மிகமிக தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த என்மேல் உனக்கேற்பட்டுவிட்ட நேசம் நமது கிராமத்தைப் பொறுத்தவரை பொருத்தமற்ற உறவு என்பதை நான் நன்கு அறிவேன். இதன் விளைவுகள் பெரும் விபரீதமாகக்கூடும் என்பதையும் அப்போதே உணர்ந்திருந்தேன்.
    இருந்தபோதும் நம்மிடையே ஏற்பட்டுவிட்ட இந்த காதலுணர்வு அதுமட்டுமல்லாமல் என் இளம்வயது அறியாமை இவையெல்லாம் என் கண்களை மறைத்துவிட்டது. தனிப்பட்ட இருவருக்கிடையே ஏற்பட்ட ஒரு காதலுக்கு இந்த ஜாதீய பிசாசுகள் ஒரு வளர்ந்து வரும் நல்ல கிராமத்தையே கசக்கி சின்னா பின்னமாக்கி விட்டனவே ..
    நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது..
    நாளுக்கு நாள் நம்மிடையே மலர்ந்த நேசம் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்தபோது வலிவலம் விழித்துக்கொண்டது.
    இத்தனை நாளாக நீருபூத்த நெருப்பாக மூடிக்கிடந்த வர்கவேறுபாடு , ஜாதீய வெறி தலைதூக்கித்தாண்டவமாட நாம் காரணமாகி விட்டோம்.
    நடந்தது என்ன.
    சம்பிரதாயங்களின் வார்ப்படங்களாக இறுகிப்போயிருந்த இந்த மக்களின் ஆழ்மனங்கள் சீண்டப்பட்டபோது வலிவலம் எத்தனை கொலை வெறிக்கு உள்ளாயிற்று. இந்த மக்களிடையே உள்ளுக்குள் எத்தனை குரோதம். எத்தனை வன்மம்.
    அடுத்தடுத்த கணமே அருவாளும் கடப்பாறையும் அல்லவா அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டன .பொழுது சாய்ந்தால் சாராயக்கடையில் சங்கமம் ஆகும் மேலத்தெரு தங்கப்ப நாய்க்கரும் வடச்சேரி காத்தானும் இன்று கோடாலியும் கடப்பாரையுமாக எதிர் கொள்ளவேண்டிய ஒரு சூழல்.
    குடிக்கும் நீரிலேயே விஷத்தை கலந்தார்கள் என்றால் எப்படியொரு அகங்காரம். .
    மேலத்தெருவிலும் வடச்சேரியிலும் பத்துக்குமேற்பட்ட பலிகள் நடந்ததே. முப்பதுக்கு மேற்பட்டோர் இருக்கும் இடம் இல்லாமல் போயிற்றே..ஒரு மாதத்துக்கு மேலாக வலிவலம் கிராமமே இரவு பகலாக போலீசாரின் பிடியில் அல்லவா முடங்கிக்கிடக்கிறது. குழந்தை குட்டிகள் கசங்கிபோயிற்றே.ஆடு மாடுகள் சிதைந்து எம் மக்களுக்கு எத்தனை நஷ்டம்.
    . ஒன்றை நினைத்துப்பார்க்கிறேன்.
    சமூக நீதி பேசுகின்ற அரசியல் இயக்கங்கள் அத்தனையுமே இன்னும் சாதிகளை மையமாக கொண்டே இயங்குகிறது. வர்க பேதம் களைய வேறு வழியில்லாமல் அரசு கூட இன்னும் ஜாதீய விபரங்களை பதிவு செய்வதை தவிர்த்துவிடவில்லை. அலுவலகங்களிலும் தொழிற்கூடங்களிலும் இணைந்து இயங்கும் நாம் சுயவாழ்வென்று வரும்போது தத்தம் சாதிகளைத்தானே தேடி ஓடுகிறோம்.
    .
    இலக்கியம் பேசுபவர்களும் சமூக நெறியாளர்களும் ஏன் ஆளுகிற போலீசும்கூட நம் காதலுக்கு துணையாக நிற்கலாம். ஊடகங்கள் நாலுபேரை வைத்து நமக்கு ஆதரவாக நான்கு நாட்களுக்கு தொடர் விவாதங்கள் நிகழ்த்தலாம்.புது கவிஞர்கள் அச்சு ஊடகங்களில் மெய்யுருக கவி புனையலாம்.நவீன ஓவியர்கள் நம் அவலங்களை வண்ணத்தில் வடித்து காட்சிகளில் வைக்கலாம்.
    ஆனால் இவையெல்லாம் போதுமா. .
    ஒரு முறை பாவேந்தரிடம் பாரதி சொன்னானாம்
    ‘ சுப்பு ! எனக்கொரு ஆசை. எனக்குத்தெரியாமல் என்மகள் ஒரு அரிஜன இளைஞனை இழுத்துக்கொண்டு ஓடி ரகசியதிருமணம் செய்து கொண்ட தகவல் எனக்கு வரவேண்டும். நான் சந்தோஷமாக உயர்ந்து கர்ஜிக்கவேண்டும். ஐயரு மகளே அரிஜனனோட சம்பந்தம் வைச்சிட்டாரேண்ணு எல்லா சாதியினரும் மாறமாட்டாங்களா.. ’
    ஐயா பாரதி உன் ஆசை நிறைவேற நாங்கள் இன்னும் எத்தனை தலைமுறைகளை கடந்தாக வேண்டும்..இந்த இனம் எத்தனை பலிகளை கொடுத்தாகவேண்டும்.
    தாங்காதய்யா . . தாங்காது !
    உன் ரத்தம் என் ரெத்தம் எல்லாம் ஒன்றுதான் என்று இந்த சமூகம் உணர்வதர்க்கு கல்வி உதவும் என்றிருந்தோம்.ஆனால் சாதி மதங்களுக்கு சாமரம் வீசுகிற பணியைத்தான் இன்றைய கல்வி செய்திருக்கிறது.
    காலம் தொடர்ந்து மாறும்போது மட்டுமே காதல் ஜெயிக்கும்.

    மணிமொழி !
    ஒருவேளை நீயும் நானும் பொருநகரங்களில் இருந்திருப்போமேயானால் நம்முடைய காதல் நம் குடும்பங்களின் தனிப்பட்ட பிரச்சனையாகியிருக்கக்கூடும். இப்படியொரு தேசிய முக்கியத்துவத்தை இன்று வலிவலம் கிராமம் பெற்றிருக்க முடியாது.
    காலங்காலமாக சாதீய கட்டமைப்புகளை சுமந்து வளைந்து கொடுக்காமல் உடையக்கூடிய வார்ப்புகளாக வாழ்ந்த உன் தந்தையை நீ இழந்திருக்க வேண்டாம்.. தான் பெற்ற மகள் தன்கண்ணெதிறே நெடுங்காலமாக அனைத்திலும் காலடியில் கிடந்த ஒரு சமூகத்தில் சம்பந்தம் கொள்வதா..
    . .என்று எல்லாருக்கும் இயல்பாக ஏற்படுகிற மனப்பான்மைதானே அந்த உயர்ந்த மனிதரை தற்கொலைக்கு தூண்டியது .அவருக்கேற்பட்ட அந்த வலி அவரவர்க்கு வரும்போதுதான் உணர்வர். அது கடந்தகாலங்களில் ஊட்டி வளர்த்த சிந்தனை. காலஓட்டங்கள் மட்டுமே அழிக்ககூடியது.
    பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து தன் உதிரத்தை உணவாக ஊட்டி வளர்த்த ஒரு தாயின் கனவுகளை உதறிவிட்டு ஒரு நொடியில் வெகுதூரம் ஒடுவது எத்தனை துரோகம்.
    மரபுகளின் குழிகளில் வார்ப்பாக வார்கப்பட்ட உன் தந்தை வெட்கமுற்று கூனிக்குறுகி தற்கொலை செய்து கொண்ட அவலம்
    தலைவிரி கோலமாக கையறு நிலையில் நின்ற உன்தாயின் தோற்றம்
    இவை இரண்டுமே என்னை இன்று வெகுதூரம் விரட்டிற்று.. அவர்களை நினைத்த ஒவ்வொரு கணமும் என் முகங்களில் யாரோ மாறிமாறி அறைவதை உணர்கிறேன்.
    இத்தனையையும் இழந்து விட்டு இந்த காதலில் நாம் எதை சாதிக்கப்போகிறோம்.

    மை டியர் பிரண்ட்
    நான் என்ன செய்யவேண்டுமென்பதை முடிவெடுத்து விட்டேன். இப்போது நீ செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.
    கடந்து போனவற்றை கனவென்று கருதி மறந்துவிடு.
    நாம் பெற்றிருக்கும் மனிதப்பிறவி பல்வேறு பக்கங்களை உள்ளடக்கியது. அதில் கல்வி ஒரு முழுமையான வாழ்க்கைக்கு தேவையான பயிற்சி ! காதல் ஒரு நல்ல குடும்பத்துக்கான முயற்சி.!
    இவை எல்லாமே மனிதவாழ்வில் ஒரு சில அத்தியாயங்கள்தான்.. அவை வாழும் நிலைகளை பெரும்பாலும் வசீகரமாக்கக்கூடும். ஆனால் அவையே வழ்க்கையின் ஆதார சூத்திரமல்ல. அவை இல்லாமலும் பயனுள்ள வாழ்வை வாழலாம். காதலையும் கல்வியையும் கடந்து நீதி நேர்மை அன்பு பண்பு பாசம் பரிவு என்று இன்னும் எத்தனையோ உண்டு. இந்த இளம் வயதில் அவைகளெல்லாம் நம் கண்களுக்குப்புலப்படுவதேயில்லை. ஏன் நீ நேசிக்கும் ராஜாவே அதில் ஒரு அங்கம்தான்.. எல்லாமே நமக்கு நாமே சீராக வாழ ஏற்படுத்திக்கொண்ட வழிமுறைகள்தாம்.. ஒன்றுக்காக நேசித்த இன்னொன்றை பிடிவாதமாக பலியிடுவது பண்பல்ல.

    மணிமொழி ! நீ அடிக்கடி சொல்லுவாயே
    இந்த கிராமத்தின் சீரழிவுக்கு இனி அரசை நம்பி பயனில்லை.நான் டாக்டராகி இந்த வலிவலம் கிராமத்தை சீரழிக்கும் நோய் நொடிகளை அடியோடு ஒழிப்பதுதான் எனக்குள்ள ஆசை

    அந்த நோக்கம் மட்டுமே இப்போது உனக்காக காத்திருக்கிறது. அதுதான் மணிமொழி. . . கண்களை மட்டுமல்ல.. மனதையும் துடைத்துக்கொண்டு காத்திருக்கும் காரியங்களை கவனி. தடைபட்ட கல்வியில் முயன்று மருத்துவராகும் உன் அறிய கனவை நிஜமாக்கு.எஞ்சியிருக்கும் உன் தாயை காப்பாற்று.
    உன் மருத்துவத்தில் இந்த வர்கபேதம் ஒருபோதும் குறுக்கே வராது. சாதிபேதம் எந்த சங்கடத்தையும் தராது. வலிவலத்தோடு வடச்சேரி மக்களும் விலகி வாழட்டும்.
    உன் மருத்துவத்தின் நெடி என் நாசிகளுக்கு எட்டும்போது நான் வருவேன்.
    இப்போது நீ செய்யவேண்டியதெல்லாம் இதுதான்.

    மணிமொழி நீ என்னை மறந்துவிடு !

    அவ்ளவுதான் . . .
    ராஜா
    நெடுந்தொலைவிலிருந்து . . .

    பாண்டியன் ஜி     ( வில்லவன் கோதை )

    Share
  • சிங்கப்பூர் மலேசியத்தந்தை தமிழவேள் கோ .சாரங்கபாணி

    நூலாய்வு !

    சிங்கப்பூர் மலேசியத்தந்தை தமிழவேள் கோ .சாரங்கபாணி

    வில்லவன் கோதை

    நூலாசிரியன் ஜே மு சாலி

    வெளியீடு
    இலக்கியவீதி
    52 சௌந்தர்யா குடியிருப்பு- அண்ணா நகர் மேற்கு சென்னை 600101
    விலை ரூ 200

    sali 02

    சிங்கப்பூர் – மலேசியத் தந்தை தமிழவேள் கோ சாரங்கபாணி என்றொரு நூலை சென்னை இலக்கியவீதி சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. ஐம்பதுகளில் பிரபலமான சிறுவர் இதழ் கண்ணன் கண்டெடுத்த ஜெ மு சாலியை அறுபதுகளில் சாரங்கபாணியின் சிங்கப்பூர் தமிழ் முரசு தத்தெடுத்துக்கொண்டது.எவர்க்கும் கிடைப்பதற்கறிய எழுத்துலக வாய்ப்பு சாலிக்கு கிடைத்தது .தொள்ளாயிரத்து முப்பத்தைந்தில் துவங்கப்பட்ட தமிழ் முரசில் முப்பது வருடங்களுக்குப்பிறகு இணைந்த ஜே மு சாலியை தமிழ்முரசு ஒரு பத்திரிக்கையாளனாக்கிற்று.

    அவர் எழுதிய இந்த நூல் நாடுகடந்து சிதறிக்கிடந்த ஒரு இனத்தை கோ .சாரங்கபாணி என்ற தனிமனிதன் செப்பனிட்ட சீர்திருத்த வரலாற்றை விரிவாக பேசுகிறது.

    தமிழவேள் கோ சாரங்கபாணி என்ற இந்த மனிதர் யார்

    தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கிழவர்களைக்கேட்டால் ஜெமினிகணேசனுடன் மிசியம்மாவில் நடித்த நகைச்சுவை நடிகர் சாரங்கபாணியை சுட்டிக்காட்டுவர். இன்றைய இளைய தலைமுறையோ அனேகமாக தோளை உயர்த்தி உதட்டைப்பிதுக்கக்கூடும்.

    ஊடகங்களின் எழுச்சிக்குபிறகு நிலவரம் சற்றே மாறியிருக்கிறது. தமிழர்கள் இந்தியாவைத்தாண்டி பல்வேறு தகவல்களை இப்போ தெல்லாம் அறிந்திருக்கிறார்கள் இதற்கு இந்தியாவின் கதவுகள் இப்போது திறந்திருப்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும். .அதேசமயம் இங்கிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் கோட்டையிலிருந்து கோடம்பாக்கம்வரை ஒவ்வொருகணமும் நம்மை கூர்ந்து கவனித்துத்தான் வந்திருக்கிறார்கள் அதற்கு பெற்றதாய் நாட்டின் பெரும்பிணைப்பாய்கூட இருக்கலாம்.

    சிங்கப்பூரும் மலேசியாவும் ஒன்றுபட்டு ஆங்கில ஆதிக்கத்துக்கு அடிபணிந்திருந்த நேரம். வெள்ளையர் மலாய்காரர் சீனர் யூரேஷியர் ஆகிய கலப்பினத்தாரிடையே தமிழர்கள் சிக்குண்டிருந்த சமயம்.

    தமிழ் நாட்டில் திருவாரூரில் பிறந்த விஜயபுரம் கோ சாரங்கபாணி தனது இருபத்தியோராவது வயதில் பிழைப்பைத்தேடி சிங்கப்பூர் வருகிறார் அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையோரம் இருந்தவர்களுக்கு அக்கரை புல்வெளிகளாக காணப்பட்டது சிங்கப்பூரும் மலேசியாவுந்தான்.

    கூலிக்கு ஒரு கடையில் கணக்கு எழுத ஆரம்பித்த சாரங்கபாணி எழுத்துலகில் ஈர்க்கப்பட்டு காலப்போக்கில் முன்னேற்றம் வார இதழில் இணைகிறார்.

    அடுத்தடுத்து தமிழ் ஆங்கில ஏடுகளை துவக்கி துவண்டுகிடக்கும் தமிழற்காக தமிழ் முரசொலிக்கிறார்.

    ‘’ பத்திரிக்கை துவங்கி பெரும் பணம் திரட்டுவது எம் நோக்கமல்ல. உலகச்செய்திகளை உடனுக்குடன் தமிழர்கள் அறிந்து கொள்ளச்செய்வது முதல் நோக்கம். வேலையற்று இருக்கும் ஒருசில தமிழற்காவது வேலை கொடுப்பது இரண்டாவது நோக்கம். ஒருவர் வெளியீடு ஒன்றுக்கு 200 தமிழ் முரசு பிரதிகள் விற்றால் அவருக்கு மாதம் 12 வெள்ளி லாபம் கிடைக்கும் ஏறக்குறைய இவ்வளவுதான்ஒரு முனிசிபல் தொழிலாளின் சம்பளமும் ‘’ என்று தமிழ்முரசின் தோற்றத்தை மாதம் மும்முறையாக வந்த முதல் ஏட்டில் சாரங்கபாணி பேசுகிறார்

    சாரங்கபாணியின் சமூக சீர்திருத்தம் அன்னியமண்ணில் சொந்த மக்களிடையே உருவெடுக்கிறது..

    இந்திய தேச விடுதலை வேள்வியை தூண்டிவிட பாரதியாரின் எழுத்து பயன்பட்டது. உறக்கத்திலிருந்த தமிழினத்தை தட்டி எழுப்பிட தந்தை பெரியாரின் குடியரசு துணைநின்றது..

    சிங்கப்பூர் மலேசியத்தீவுகளில் சொல்லொண்ணா துயருடன் சிதறிக்கிடந்த தமிழ் சமுதாயத்தை உசுப்பிவிட சாரங்கபாணியின் தமிழ் முரசு துணைநின்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தன் எழுத்தாலும் பேச்சாலும் தமிழர்களை திரட்டி மொழிக்கும் மக்களுக்கும் அன்னியமண்ணில் கிடைப்பதற்கறிய அங்கீகாரம் பெற்றுத்தருகிறார் சாரங்கபாணி.

    இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்து இங்கேயே வாழ்ந்துவரும் முஸ்லீம் பெருமக்களிற் ஒருசிலர் இன்றும் பாக்கிஸ்தான் கனவுகளில் மிதப்பதை கண்டிருக்கலாம்.

    அதற்கு மாறாக சிங்கப்பூர் எனது தேசம் சிங்கப்பூர் அரசு எங்கள் அரசு புலம் பெயர்ந்தவர்களானாலும் நாங்கள் சிங்கப்பூர்கள் எங்களுக்கான உரிமைகளை எங்கள் அரசிடமிருந்தே பெருவோம் என்ற வழியில் செயல்பட்டவர் சாரங்கபாணி. சாதியற்ற தமிழற்கு ஆண்டுதோரும் தைத்திருநாளை ஏற்படுத்தி தமிழர்களை தலை நிமிரச் செய்தவர் தமிழவேள் சாரங்கபாணி. இவர் நடத்திய ஒவ்வொரு தமிழ் இன விழாக்களிலும் பிரதமரையும் மந்திரிகளையும் இழுத்துக்கொண்டது இவரது வெற்றிக்கான யுக்தி. தந்தை பெரியாரின் அடியொற்றி அண்ணாவைப்போல் ஆட்சியாளரை அரவணைத்து மக்களுக்கும் மொழிக்குமான காரியங்களை சாதித்துக்கொண்டவர் இந்த தமிழவேள்

    256 பக்கங்களில் அரிய நிழற்படங்களுடன் எழுதப்பட்ட இந்த நூல் ஒரு தகவல் களஞ்சியம் என்று சொல்லாம். சாலியால் எழுதப்பட்டது என்பதைக்காட்டிலும் சாலியால் பல்வேறுதகவல்களை மாலையாக தொடுக்கப்பட்டது என்பதே பொறுத்தமாக இருக்கும்

    இது சாரங்கபாணி என்ற தனிமனிதரின் சுய வரலாறல்ல.

    சாரங்கபாணி கப்பலேறி சிங்கப்பூர் வந்தார். கடையில் சம்பளத்துக்கு கணக்கெழுதிய சாரங்கபாணி காலப்போக்கில் பத்திரிக்கை தொழிலில் நுழைந்தார். ஒரு சீன மாதை காதலித்து மணந்தார்.ஆறுமக்களைப் பெற்ற.சாரங்கபாணிக்குப்பிறகு அவர் துவக்கிய தமிழ் முரசை அவர் துணைவியார் தொடர்கிறார்

    இந்த நூலில் சாரங்கபாணியின் சுய வரலாறு இவ்ளவுதான்

    மூடப்பழக்க வழக்கங்களில் சிக்கி தீவு முழுதும் சிதறிக்கிடந்த தமிழினத்தை மற்ற இனத்தவர்களுக்கிணையாக மாற்றியமைக்க தினம் தினம் அவர் எடுத்த சிரத்தை இந்த புத்தகத்தின் பெரும்பகுதியில் இடம் பிடித்திருக்கிறது. வெள்ளையர் ,மலாய்காரர் ,சீனர் ,யூரேஷியர் என்ற நான்கு வகை இனமக்களைக்கொண்ட ஒரு சமூகத்தில் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் உரிய அங்கீகாரத்தை ஆட்சியாளர்களோடு இணக்கமாக பயணித்து பெற்றுத்தந்த்தை இந்த நூல் பெருமளவில் விவரிக்கிறது.

    சாரங்கபாணி ஒரு நாத்தீகர் இல்லையென்றாலும் கோவில் குளங்களை சுற்றுபவரும் அல்ல. மொழி இனம் பண்பாடு இவையனைத்திலும் தந்தை பெரியாரின் கருத்துகளையே எதிரொலித்தார்..புலம் பெயர்ந்த தமிழற்கு ஆட்சியாளருடன் இணக்கமாக இருந்து குடியுரிமை பெற்றது, தமிழுக்கு கல்விக்கூடங்களிலும் ஆட்சியிலும் சமமான அங்கீகாரத்தை பெற்றது இவரது சாதனைகள்.தந்தை பெரியாரைப்போல் சரங்கபாணி தமிழர் வாழ்வில் நுழையாத இடமே இல்லை.சாரங்கபாணியின் சாதனைகளையும் பெற்ற வெற்றிகளையும் பேசுகிற இந்த புத்தகம் அதற்கான ஆவணங்களாக நாற்பதாண்டு தமிழ்முரசு தலையங்க எழுத்துகளையே சாட்சியாக்கியிருக்கிறது. இந்த சாதனை சரித்திரத்தில் அவருக்கு தோள்கொடுத்த பல்வேறு பிமுகர்களின் வாக்குமூலங்கள் கூட ஆவணமாகியிருக்கிறது.சாரங்கபாணியின் தமிழ்முரசு தலையங்கங்கள் பிரமிக்கத்தக்கவை. இன்றைய கல்விக்கூடங்களில் இடம் பெறவேண்டியவை. எளிய நடையில் ஏரளமான தகவல்களுடன் எழுதப்பட்ட இந்தநூல் முக்கியமாக படிப்பதற்கு நாவலைப்போன்று சுவாரஸ்யமானது.

    உலகளாவிய பொருளாதாரத்துக்கும் கலாச்சாரத்துக்கும் வழியேற்பட்டிருக்கும் இந்த காலங்களில் நம் பக்கத்து தேசங்களான சிங்கப்பூர் மலேசியாவின் கடந்த கால நிகழ்வுகளை நாம் அறிந்திருப்பது நல்லது. அதற்கு சாலியின் நூல் துணை நிற்கும்.

    Share