Month: October 2018

  • திருஞான சம்பந்தரின் வைதீகசைவ அடையாள மீட்டுருவாக்க அரசியல்

    ர.சுரேஷ்

    அடையாளம் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் Identity என்றுபெயர். அடையாளம் என்பதை பொதுவாக மொழி மதம், இனம்,சாதி, நிறம், பாலினம், நிலம் சார்ந்த கூட்டுணார்வின் இயைந்த தன்மை என வரையரைபடுத்தலாம். இவ்வடையாளங்கள் மனித ஓர்மைக்குள் நுழைந்துவிட்ட மிக வலுவான கருத்தாக்கமாகும். அடையாளமற்ற மனித இருப்பென்பது என்றுமே சாத்தியமானதாய் இருந்தததில்லை. அடையாளம் என்பது ஒரு கூட்டம் (அ) குழு தாமாக வரித்து கொள்வது மட்டுமேயன்றி பிறரால் திணிக்கப்பட்டதாகவும் இருக்கலாம். எப்படியாயினும் ஏதேனும் ஒரு அடையாளத்தின் கீழாகவே மனித இருப்பு என்பது நிலைகொண்டுள்ளது. இவ்வடையாளங்களின் ஒருங்கிணைவே அடையாள உருவாக்கங்கள் ஆகும்.

    அடையாள உருவாக்கங்கள் ஒரு கூட்டம் (அ) குழுவின் கோரிக்கைகள் தேவைகள் போன்றவற்றை நிறைவேற்றிக்கொள்ளவும் அதிகார தளத்தில் தமக்கான சமூக மதிப்பை ஈட்டிக் கொள்ளவும் ஒரு பொது அடையாளத்தின் கீழ் இணைவதைக்குறிக்கும். இவை ஒவ்வொன்றும் தமக்கான கொள்கைகள், கோட்பாடுகள் என்றளவில் சில கருத்தியல் தகவுகளை முன்நிபந்தனையாக ஏற்கின்றன. மேலும் இவை அரசியல் பொருளாதாரம் பண்பாடு போன்ற காரணிகளையும் தமக்குரிய பின்னணிகளாக கொண்டவை ஆகும். ஒரு சமூகத்தின் தவிர்க்கவியலாத பண்புகளாக இவ்வடையாள உருவாக்கங்களைக் குறிப்பிடலாம். ஒவ்வொரு அடையாள உருவாக்கங்களுக்கும் ஒருவித அரசியல் தேவை உள்ளது.

    இந்நிலையில் அடையாளங்கள் தம்மோடு வேறுபட்ட பிற அடையாளங்களோடு மோத வேண்டிய காலத் தேவையும் எழுகிறது. அடையாளம் வேறுபாடு குறித்து, ந. முத்துமோகன் கீழ்க்கண்டவாறு கருத்துரைப்பார். அடையாளம் என்ற கருத்தாக்கம் தோன்றும்போதே வேறுபாடு என்ற கருத்தாக்கமும் தோன்றிவிடுகிறது. இவ்வகை வேறுபடுத்தலில் வேறுபட்டவை அடையாளத்திற்கு வெளியே நிற்கின்றன. அதாவது தன்னைப் பிறிதொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுதலே முனைப்படைகிறது. அடையாள அரசியல் தீவிரபடும்போது ஒருவரது சொந்த அடையாளம் தவிர்த்த பிறவற்றில் குறிப்பிட்ட ஒன்று பகை அடையாளமாக உருவாக்கப்படுகின்றது”1 என்றுகூறுவார். ஒரு அடையாளம் தன்மைப் போலவே இயங்கும் பிறிதொரு அடையாளத்தை அங்கீகரிக்காததும், பரிசீலனை செய்யாததும் அவற்றின் இருத்தல் நியாயத்தை மறுதலிப்பதுமான அரசியற்செயற்பாட்டை நிகழ்த்துகின்றது. மேலும் அவற்றின் முன்னேற்றத்தை தடைபடுத்தி விடுகின்றன. இந்திய தத்துவங்களின் வளர்ச்சிப்போக்கையும் மேற்குறித்த கருத்திற்கு அனுசரணையாகக் கொள்ளாம். இவ்வாறு இந்தியச் சமூகங்களில் அடையாளங்களின் எல்லையானது பிறிதொரு வேறுபட்ட அடையாளங்களுக்கு இடந்தரா வகையில் மிக கறாராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அடையாளங்கள் பிற அடையாளங்களோடு மோதுவதைப் போலவே தமக்குள் எழுகின்ற முரண்பாடுகளையும்   எதிர்கொள்ளவேண்டியுள்ளது. பலதரப்பட்ட பன்மிய கூறுகளுக்கிடையே பொதுமைப்படுத்தப்பட்ட ஒன்றினை மட்டும் முதன்மைபடுத்தி அடையாளங்கள் உருவாகின்றன. இவ்வாறு உருவாகின்ற அடையாளங்கள் தம்மை போலவே இயங்கும் பிற அடையாளங்களை மறைத்து அவ்வடையாளங்களின் இருத்தலுக்கான நியாங்களை மறுதலிக்கின்றன. . இவை அடையாள இயக்கங்களின் வெகுசனத்தன்மைக்கு விரோதமானவையாகவும் அமைந்துவிடுகின்றன. இந்திய சூழலில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் பிராமண மேலாண்மை கட்டமைத்த இந்து தேசியம் எனும் பேரடையாளத்தை இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

    தமிழ் மரபில் அடையாள அரசியல்

    அடையாள அரசியல் எனும் சொல்லாடல் பின்னை நவீனத்துவ சிந்தனையாளார்களால் நமக்கு அறிமுகமான போதிலும் அடையாளம் என்பது அதன் அரசியல் உணர்வு வெளிப்பாடும், தமிழ்ச் சமூக இலக்கிய வரலாற்று நெடுங்கிலும் தொழிற்பட்டிருக்கின்றன. தமிழ்ப் பண்பாட்டு வெளியில் பல அந்நிய கலாச்சார ஊடுருவல்கள் அவற்றின் மேலாதிக்கச் சிந்தனைகள் விரவிக் காணப்படுகின்றன. குறிப்பாக வைதீக நெறி சார்ந்த பிராமண மேலாண்மை, வா்ணாசிரம கொள்கை போன்றவற்றின் தாக்கங்களைப் பரவலாகக் காணலாம். இச்சூழலில் தமிழரின் அடையாள அரசியலும் ஆங்காங்கே தொழிற்பட்டிருக்கின்றன.

    “துடியன், பாணன், பறையன், கடம்பனென்று

    இந்நான்கல்லது குடியும் இல்லை

    ஒன்னாத் தெவ்வா் முன்னின்று விலங்கி

    ஒளிறு….”2

    இப்பாடல் வைதீக நெறிக்கும் வா்ணாசிரம கொள்கைக்கும் எதிரான இனக்குழு சமூகத்தின் கலக மொழியாகவும் தமழிழரின் அடையாள அரசியல் வெளிப்பாடாகவும் விளங்குகின்றது.

    வைதீகத்தைப் போன்றே தமிழா் பண்பாட்டில் கலந்துவிட்ட ஒன்றாகச் சமண- பௌத்தக் கருத்துகளும் காணக்கிடைக்கின்றன. சமண – பௌத்தரின் தத்துவக் கொள்கையான வாழ்க்கை நிராகரிப்பு, காம நிராகரிப்பு போன்றவற்றிற்கு எதிரான பாடல்களும் தமிழிலக்கியத்தில் பதிவாகியுள்ளன.

    “காமம் காமமென்ப காமம்

    அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்

    கடுத்தலும் தணிதலும் இன்றே யானை

    குளகு மென்று ஆள்மதம் போலப்

    பாணியும் உடைத்து காணுநா்ப் பெறினே” 3

    காமம் காமம் என்று உலகினா் அதனைக் குறை கூறுவா் அக்காமமானது புதிதாகக் தோற்றும் துன்பமும், நோயும் அன்று. நுண்ணியதாகி  மிகுதலுதம் குறைதலும் இல்லை. குளகு என்னும் தழையுணவை உண்டதனால் யானைக்கு ஏற்படும் மதத்தைப் போலக் கண்டு மகிழ்வாரைப் பெற்றால் அக்காமம் வெளிப்படும். செவ்வியை உடையது என்று குறுந்.136 – ஆம் பாடல் விளக்குகிறது. சங்கப் பாடல்களில் காமத்தைப் பற்றிய ஏக்கமும் திளைப்பும் அதிகம் பேசப்பட்டுள்ளன. இவற்றை சமண பௌத்த அறங்களுக்கெதிரான எதிர்புணா்ச்சி விசும்பல்களாகவும் தமிழ் அடையாள எடுத்துரைப்புகளாகவும் கருத இடமுண்டு. மேலும் தமிழ் அறவிலக்கியங்களிலிருந்தும் காப்பியங்களின் சமய வாதங்களிலிருந்தும் பல்வேறு விதமான கலக எடுகோள்களைக் கண்டடைய முடியும். தமிழிலக்கியப் பதிவுகளிலிருந்து இன்னும் ஏராளமான கருத்துக்களைத்  திரட்டி எதிர் – முரணாக அடுக்கிச் செல்லலாம்.

    திருஞான சம்பந்தரின் வைதீக சைவ அடையாள அரசியல்:

    தமிழ் மரபு தொடா்ச்சியில் சமயம் சார்ந்து உருவான மிகப்பெரிய அடையாள இயக்கமாகப் பக்தியியக்கத்தைக் குறிப்பிடலாம். சைவம் வைணவம் என இருவேறு அடையாளங்களின் குவிமுனையாகப் பக்தியியக்கம் விளங்கியதை உணரமுடிகிறது. சைவப் பின்னணியோடு நாயன்மார்களும் வைணவப் பின்னணியோடு ஆழ்வார்களும் இயங்கினா். பிராமண   வேளாள கூட்டிணைவின் மைய அச்சாகவும் சமண-பௌத்திற்கெதிரான எதிர்ப்பியக்கமாகவும் பக்தி இயக்கம் என்கிற ஒரு மாபெரும் அடையாளம் அமைப்பு ரீதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அவற்றுள் திருஞானசம்பந்தரின் சைவ அடையாள மீட்டுருவாக்கம் என்பது குறிப்பிடத்தகுந்த  அளவில் அக்கால அரசியல், பொருளாதார, பண்பாட்டு நிலைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.

    பக்தி இயக்கத்தை வேளாள இயக்கம் என்று வரலாற்றியலாளா்கள் கருத்துரைப்பா். இவ்வாறு தமிழ் வேளாளா்களால் முன்னெடுக்கப்பட்ட பக்தி இயக்கம் பொதுவாக அதன் பொதுமைப்பட்ட குறியீடுகளாக, தமிழ் – பக்தி – சைவம் என்ற நிலையில் தமது அடையாளத்தைக் கட்டமைத்திருந்தாலும் அதற்குள்ளாக,  சமஸ்கிருதம் – பிராமணியம்  – வைதீகம் மறைமுகமாக மேலான்மை செலுத்தியிருப்பதை திருஞானசம்பந்தர் பாடல்களில் அறியமுடிகிறது. எனவே பக்தி இயக்க எழுச்சியினூடாக, திருஞானசம்பந்தர் தம்முடைய வைதீக அடையாள அரசியலைத் தொழிற்படுத்தியுள்ளதை அனுமானிக்கலாம்.

    தமிழ்ச் சமூகத்தைப் பொருத்த வரையில் சமண – பௌத்த ஊடுபரவல் வைதீகத்திற்கு எதிரான போக்கையுடையதாகவே இருந்து வந்துள்ளது. வர்ணப் பாகுபாட்டை எதிர்த்தல், வேதவேள்விகளை எதிர்த்தல், பிராமண வா்க்“கத்தின் வெகுஜன விரோதப் போக்கினைக் கண்டித்தல் போன்றவை அவற்றின் முதன்மைப் பணிகளாக இருந்தன. இச்சூழலை எதிர்கொள்ளவும் வைதீக சைவ மரபை மீட்டுருவாக்கவும் திருஞான சம்பந்தருக்கு பக்தி இயக்கம் பெருத்த ஆயுதமாக விளங்கியது. இந்நிலையில் தாம் வழிவழியொழுகும் வைதீக மரபையும் வேளாளர் தலைமையிலான  தமிழ் சைவ பக்தி இயக்கத்தையும் இணைத்து சமண –பௌத்த மதங்களுக்கெதிரான வைதீக சைவ பேரடையாளத்தை உருவாக்குதிறார். இவ் வைதீக சைவ அடையாளம் எனும் கருத்தாக்கத்தினுள் சமண – பௌத்த அடையாளங்கள் பகையடையாளங்களாகச் சித்திரிக்கப்படுகின்றன. திருஞானசம்பந்தா் பாடல்களில் பதிகம்தோறும் 10-ஆம் பாடல் சமண பௌத்தரைச் சாடுவதற்காகவே பயன்படுத்தியிருக்கிறார். அப்பாடல்களில் சமண-பௌத்தர்களுக்கெதிரான வன்சொற்களும், இழிப்புரையும் பழிப்புரையும் ஏராளமாகக் காணப்படுகின்றன.

    சமண-பௌத்தா்களுடைய மத அடையாளங்களையும் மத நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் கூறும் பாடல்கள் திருஞானசம்பந்தா் பாடல்களில் ஏராளமாகப் பயின்று வருகின்றது. திருஞானசம்பந்தா் சமணரைப் பற்றிக் கூறுவன.

    “கழுவார்…சமண்”4 “குற்றுடுக்கைச் சமணா்”5,“குற்றவிட்டுடுக்கையா்”6,அமண் உருவா்கள்7, அரைக் கூறையில்லார்,8 உடுக்கையின்றியே நின்று ஊர்நகவேத்திரிவார்,9 உடையிலா துழல்கின்ற குண்டா்,10 உரிஞ்சன் கூறைகள் உடம்பினராகி உழிதரு சமணா்,11

    இவ்வாறு சமண-பௌத்தா்களின் மத அடையாளங்களையும், நடைமுறை வழக்கங்களையும் இழித்தும், பழித்தும் பல இடங்களில் பேசுகின்றார் ஞானசம்பந்தா். மேலும்,

    அடையாதன சொல்லுவார் ஆதா்கள்12, அமண்ணொடு சீவரத்தாரவா் கொடிய வெவ்வுரை13, அல்லார் அலா் தூற்ற14 , அறிவதறிகிலார்15, ஆசியார மொழியார் அமண் சாக்கியா்16, உள்ளவா றறியார்17; , ஒன்று முணரா உளமா்18,

    எனப் பல வரிகளில் அவா்கள் குற்றமுடையவா்கள், குணமில்லாதவா்கள் பொய்யுரைப்பவா்கள், அல்லன பேசித் திரிபவா்கள், புறங்கூறுபவா்கள், அலா்தூற்றுபவா்கள், நல்வினை புரியாதவா்கள், பொல்லாதவா்கள், பொய்த் தவம் மேற்கொள்பவா்கள், பொய்களைக் கட்டியுரைப்பவா்கள் பொருளற்ற உரைகளைப் பேசுபவா்கள் எனப் பலவாறாகப் பேசுகிறார். மேலும்

    சமணா், புத்தா் முதலியோரது கொள்கைகளைப் பின்பற்ற வேண்டாமென மக்களுக்கு அறிவுறுத்தல்,“அமண்குண்டா் ஓதும் ஓத்தையுணரா தெழுநெஞ்சே”19 “அமண்குண்டா்…புறனுரையா தொன்றுங் கொள்ளேல்”20 “அமணா் அறிவில் சிறுதேரா் கோலும் மொழிகள் ஒழிய”21

    எனப் பல பாடல்களில் சமண பௌத்தர்களின் பொய்யுரைகளைக் கேட்காதீர்கள் என மக்களுக்கு அறிவுறுத்துகிறார். அதே சமயத்தில் சமண-பௌத்தா்களைக் குற்றங்குறையுடையவா்களாகக் காட்டுவது ஒருபுறமிருக்க வேதத்தின் வேள்வியின் மறையவரின் பெருமையைப் பல பாடல்களில் அதற்கு எதிரிடையாக முன்வைக்கிறார். சமண பௌத்தா்களைப் பொய்யா்கள் புறங்கூறுபவா்கள், வேடதாரிகள், பொய்தவத்தா், நெறி நில்லாதவா்கள், ஒழுக்கக் கேடுடையவா்கள் எனச் சாடிவிட்டு மறையவா்களைக் குறிப்பிடும்பொழுது,

    பொய்ம் மொழியா மறையோர்கள்22 மெய்மொழி நான் மறையோர்23; தளராத வாய்மைப் புந்தியின் நான்மறையோர்24 செய்தவ நால்மறையோர்25; நா மரு கேள்வியா்26

    மேலும் வேள்வியின் சிறப்பைக் கூறுமிடத்து,

    “கற்றாங்கு எரிஓம்பி, கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை சிற்றம்பலம்”27

    “பரப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டரியோம்பும் சிறப்பார் வாழ் தில்லை”28

    என்றும்,

    “தக்கார், மறைவேள்வித் தலைஆய உலகுக்கு

    மிக்கார் அவா் வாழும் வழிமிழலையே”29

    எனப் பாடுகின்றார். இப்பாடல்கள் இறைவனை முதன்மைப்படுத்தாமல் வேள்வியையும் மறையவா்களையும் மறையவா் வாழ்கின்ற இடங்களையும் முதன்மைப்படுத்துவதாக உள்ளன. இவ்வாறு சமண, பௌத்தா்களின் மதரிதியான ஒழுக்க வழக்கங்களைப் பண்பாட்டை, சாஸ்திர அணுட்டானங்களைக் கீழ்த்தரமாகவும், நாகரிகமற்றதாகவும் சித்திரித்துக் காட்டிவிட்டு மறையவா் ஒழுக்கங்களையும் அவா்களின் வைதீக நடைமுறைகளையும் உயா்த்திக் கூறுகிறார்.

    திருஞானசம்பந்தரின் இத்தகைய முயற்சியால் சமண-பௌத்தப் பண்பாடு தன் மேலாண்மையை இழந்து தமிழ்ப் பண்பாடும் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டதைப் பின்னால் வந்த சோழப் பேரரசுக்காலகட்டத்திய சமூக நடைமுறைகளைக் கொண்டு உறுதியாக அவதானிக்கமுடிகிறது. இவ்வாறு தமிழ்ப்பண்பாட்டின்மீது மேலாண்மையைக் கட்டமைத்தும் சமண-பௌத்தப் பண்பாடுகளை அழித்தும் வைதீக மேன்மைக்குரிய கருத்தியலை ஒவ்வொரு பதிகத்திலும் வலியுறுத்தியுள்ளார். திருஞானசம்பந்தரின் இத்தகைய அடையாக அரசியலின் நோக்கம் வைதீகம் தழைக்கப்பாடுபடுவதும் அதனை எதிர்க்கும் கொள்கையுடைய சமண-பௌத்த மதங்களைத் தமிழ் மக்களைக் கொண்டே புறக்கணிக்கச் செய்வதும் தான் என்பதை மேற்கண்ட பாடல்கள் உணா்த்துகின்றன. இதற்கு அவருக்கு சைவ-வைதீக அடையாளம் பெரிதும் பயன்பட்டிருக்கிறது. சமண பௌத்தத்தை எதிர்க்கும் இடங்களில் பெரும்பாலும் அவா்கள் வேதத்தை எதிர்ப்பவா்கள், வைதீகத்தின் வழி ஒழுகாதவா்கள், வேள்வியை மறுப்பவா்கள் என்றே பாடுகிறார். இதன்மூலம் சமண-பௌத்தத்திற்கெதிராகத் தமிழருடன் கூட்டணியை அமைத்துக் கொண்டு வைதீகத்தையே தமிழரின் அடையாளமாக முதன்மைப்படுத்துகிறார்.

    உதவிப்பேராசிரியர்

    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்

    கோயம்பத்தூர்

    *****************

    அடிக்குறிப்புகள்

    1.ந.முத்துமோகன் தமிழ் அடையாள அரசியலின் இயற்கியல் ப.29

    2.மாங்குடிக்கிழார்,புறம் – 335

    1. குறுந்தொகை ப.எண் – 136

    4.திருப்பூவனம், 64

    5.திருக்குரங்கணில் முட்டம், 31

    6திரு ஐயாறு, 130

    7..திருபாம்புரம், 41

    8.திருக்கழுமலம், 19

    9..கீழைத்திருக்காட்டுப்பள்ளி, 5

    10.திருச்செங்காட்டங்குடி, 61

    11.திருநன்றியூர், 18

    12.திருஇலம்பெயங்கோட்டூர், 76

    13.திருப்புகலி, 30

    14.திருக்கரவீரம், 58

    15.திருநாகைக்காரோணம், 84

    16.திருவீழிமிழலை, 92

    17.திருவலிதாயம், 3

    18.திருப்பாம்புரம், 41

    19.திருநறையூர்ச்சித்தீச்சுரம், 71

    20.திருசோற்றுத்துறை, 28

    21.திருவேட்களம், 39

    22.திருப்புறவம், 74

    23.திருப்புகலியும், திருவீழிமிழலையும், 4:1

    24.மேலது., 4:1

    25.மேலது., 4:4

    26.திருமருகலும் திருசெங்காட்டங்குடியும், 6:2

    27.மேலது., 6:4

    28.கோயில், 80:1

    29.மேலது., 80:2

    28.சீகாழி, 81:10

    Share
  • பார்சிறக்க வாழ்ந்திடுவோம் !

    (எம். ஜெயராமசர்மா ….. மெல்பேண் … அவுஸ்திரேலியா)

    கடவுள்   பக்தி    தனையின்று
    காசைக்  கொண்டு  பார்க்கின்றார்
    கடவுள்   பக்தி   என்றுசொல்லி
    கழுத்தை  அறுத்துக்  கொல்லுகின்றார்
    கடவுள்  பக்தி எனும்பெயரால்
    கற்பை  விலை  பேசுகிறார்
    கடவுள்  பக்தி  எனுமுணர்வை
    கருத்தில் கொள்ளா  இருக்கின்றார்  !

    குரு  பக்தி   நாட்டிலிப்போ
    குன்றிப்  போய்  இருக்கிறது
    குரு   கூட   இப்போது
    குறை  கொண்டே  உலவுகிறார்
    நல்ல   குரு   வாய்த்துவிடின்
    நம்  எண்ணம்  உயர்ந்துவிடும்
    நல்ல  குரு  ஆசிபெற்று
    நாம்  வாழ்வோம்  சிறப்புடனே  !

    அன்னை  தந்தை பக்தியின்று
    அருகி   வரப்   பார்க்கிறது
    அன்னை  தந்தை  வார்த்தைக்கே
    அர்த்தம்  இன்றிப்  போகிறது
    அன்னை தந்தை எமக்கெல்லாம்
    அதிக  சுமை  என்கின்றார்
    அக்கருத்தை துடைத்து  விட்டு
    அன்னை தந்தை தாழ்பணிவோம் !

    நாட்டுப்   பக்தி   இப்போது
    ஏட்டில்  மட்டும்  இருக்கிறது
    நாட்டு  நலம்  எனுமெண்ணம்
    நாவில் மட்டும்  இருக்கிறது
    நாட்டைப்  பற்றி  நினையாதார்
    வீட்டைப்  பற்றி  நினைக்காரே
    நாட்டை  என்றும் தாயெனவே
    நாம் பக்தி  செலித்திடுவோம் !

    பக்தி  எனும்   போதினிலே
    பக்குவம்தான்  முதன்மை பெறும்
    பக்தி   என்று   எண்ணுகையில்
    பரந்த  மனம்  எழவேண்டும்
    பக்தி  எனும்  பாதையிலே
    பண்பு  வந்து  நிற்கவேணும்
    பக்தி  செய்து  நாமென்றும்
    பார் சிறக்க  வாழ்ந்திடுவோம்  !

     

     

    Share
  • குருவிகுளம் அருள்மிகு மேல மாரியம்மன் திருக்கோயில் – ஓர் அறிமுகம்

    கிருஷ்ணமூர்த்தி. சோ.

    மனிதன் பண்டைக்காலந் தொடங்கி இன்றளவும் இறைவன் மீது கொண்ட பக்தியினால் வழிபாடு நடத்தி வருகின்றான். வழிபாடு மனத்திற்கு அமைதியும், வேண்டியன கிடைக்கவும் நிகழ்த்தப்படுகிறது. வழிபாட்டினைப் பெருந்தெய்வ வழிபாடு என்றும் சிறுதெய்வ வழிபாடு என்றும் இருவகைப் படுத்தலாம்.

    அம்மன் வழிபாடு

    நாட்டுப்புற மக்களிடையெ சிறுதெய்வ வழிபாடு மிகவும் போற்றப்பட்டு வருகிறது. அதிலும் அம்மன் வழிபாடு மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றது. அந்த அம்மன்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்பப் பல பெயர்களிட்டு அழைப்பர். அவ்வாறே குருவிகுளத்தில் அமைந்துள்ள அருள்மிகு மேல மாரியம்மன் திருக்கோயில் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

    கோயில் அமைவிடம்

    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் வட்டத்தில் குருவிகுளம் அமைந்துள்ளது. குருவி + குளம் = குருவிகுளம் என இயல்பாகப்  புணர்ந்துள்ளது. குருவிகள் அதிகமாக உள்ள ஊர் என்றும் ஊரைச் சுற்றிக் குளங்கள் அதிகமாக இருப்பதால் குருவிகுளம் என்று அழைக்கப்படுகிறது. அருள்மிகு மேல மாரியம்மன் திருக்கோயில் குருவிகுளத்தின் மேற்குத் திசையில் இருப்பதால் இப்பெயர் பெற்றது.

    ஊரின் பெயர்க்காரணம்

    குருவிகுளம் என்ற சிறப்புமிக்க ஊரானது பழங்காலந் தொட்டே அதன் வரலாறு சிறப்பிடம் பெறுகிறது. அதாவது, ‘பட்சி தடாகம்’ என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் காலச்சக்கரம் சுழல அவ்வூரானது ‘பட்சி’ என்றால் ‘பறவை’ என்று பொருள். ‘தடாகம்’ என்றால் ‘குளம்’ என்று பொருள். இவ்வாறே ‘பட்சி தடாகம்’ என்பது பறவைகளில் அதிகமாக இருக்கும் குருவியின் காரணத்தால் ‘குருவிகுளம்’ என்று வழங்கப்படலாயிற்று.

    கோயில்தோற்றம்

    சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாகக் குருவிகுளத்தில் கோயில் தோற்றுவிக்கப்பட்டது. இக்கோயிலானது குருவிகுளத்தில் தேவர் இன மக்களால் ஏற்படுத்தப்பட்டது. இக்கோயில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து உருவாக்கப்பட்டது.

    கோயிலின் உள்ளே மாரியம்மனின் வலப்பக்கத்தில் விநாயகரும் இடப்பக்கத்தில் முருகனும் உள்ளனர். கோயிலின் வெளிப்பிரகாரத்தில் வலப்புறம் கருப்பசாமி கோயிலும் இடப்புறம் வைரவரும் உள்ளனர்.

    கோயிலைச் சுற்றி வரும்பொழுது தென்புறத்தில் வடக்குமுகமாக முத்துமாரியம்மனும் காளியம்மனும் வீற்றிருக்கிறார்கள். வடப்புறத்தில் துர்க்கையம்மன் இருக்கிறார். அதற்கு அருகாமையில் நாகாத்தம்மனும் இருக்கிறார்.

    கோயிலின் உள்ளேயே என்றும் வற்றாத தீர்த்தக் கிணறு ஒன்றும் உள்ளது. அதன் அருகில் தேவர் இன மக்களின் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையும் உள்ளது. இவற்றை எல்லாம் அழகுபடுத்தும் விதமாகக் கோயிலைச் சுற்றிலும் பசுமையான பூச்செடிகள் வளர்ந்து கண்ணைக் கவரும் வண்ணம் விளங்குகின்றது.

    திருக்கோயில் வளர்ச்சி

    அருள்மிகு மேல மாரியம்மன் திருக்கோயில் தொடக்கக் காலத்தில் சிறு மண்பீடமாகவே அமைக்கப் பெற்றிருந்தது. அதன் பின்னர், தேவர் சமூகத்தினரால் கற்களாலான பீடம் அமைக்கப் பட்டிருந்தது.

    அன்னையின் அருள் பெற்ற பலர் அன்னைக்குச் சிறு கோயிலாவது இவ்விடத்தில் கட்ட வேண்டுமென்று முடிவெடுத்தனர். அதன்படி சிறுகோயில் எழுந்தது. அதன்பிறகு அது பெரிய கோயிலாக இன்று காண்போர் வியக்கும் வண்ணம் எழுந்தருளியுள்ளது.

    அம்மனின் திருவுருவம்

    “இறைவனுக்குள்ள இயல்பு நிலைக் குணங்களின் சின்னங்களாகத்தான் ஆலய விக்கிரகங்கள் விளங்குகின்றன”1 என்பர்.

    அவ்வகையில் அருள்மிகு மேல மாரியம்மன் கோயில் கிழக்கு பார்த்து அமைக்கப்பட்டுள்ளது.மேலும் அம்மனின் திருவுருவம் சிறுகுழந்தை வடிவில் நின்ற கோலத்தில் விளங்குகிறது. ‘குழந்தையும் தெய்வமும் ஒன்று’ என்பார்கள்.அதற்கேற்ப குருவிகுளம் மேல மாரியம்மன் பன்னிரெண்டு வயது குழந்தையைப் போலவே காட்சியளிக்கின்றது.அம்மன் இரண்டு கைகளை உடையவளாக வலக்கையில் உடுக்கையும் இடக்கையில் சூலாயுதமும் ஏந்தியவளாகச் சிங்க வாகனத்தில் எழுந்தருளியுள்ளாள்.

    விழாக்கள்  

    “விழா என்பது விழைவு என்ற சொல்லின் திரிபாகும்,”2 இவ்வுலகில் வாழ்கின்ற மக்கள் இப்பிறவியில் இன்பமுடன் வாழவே விரும்புவர்.அவ்வாறு வாழ இறைவனை நினைத்து இறைவனுக்காகத் திருவிழாக்கள் கொண்டாடுவர்.அதுபோல், குருவிகுளம் மேல மாரியம்மன் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களை மாத விழாக்கள், ஆண்டு விழாக்கள் என இரண்டாகப் பிரிக்கலாம்.

    மாத விழாக்கள் 

    மாத விழாக்கள் சிறப்பு வழிபாடு என்றும் கருதப்பெறும்.இங்கு மார்கழி மாதத் திருப்பள்ளியெழுச்சி, தைப்பொங்கல், சிவராத்திரி, திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சித்ரா பௌர்ணமி, தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப்பூசை, நவராத்திரி போன்ற நாட்களிலும், செவ்வாய் மற்றும் வெள்ளி போன்ற நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்த்தப்பெறுகின்றன.

    ஆண்டு விழா

    பங்குனி மாதம் அம்மனுக்கே உகந்த மாதமாகக் கருதப்படுகின்றது.இந்தப் பங்குனி மாதத்தில்தான் இங்கு பொங்கல் விழாக் கொண்டாடப்படுகின்றது.

    இக்கோயிலில் இன்றியமையாத திருவிழாவாகக் கருதப்படுவது, பங்குனிப் பொங்கல் திருவிழாவாகும்.இத்திருவிழா பங்குனி வளர்பிறையில் நடத்தப்படுகிறது.இத்திருவிழா கொண்டாடுவதற்குக் குருவிகுளம் தேவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் சிறப்புக்கூட்டத்தைக் கூட்டி விழாநாள் குறிப்பர்.விழா நாட்களுக்கு ஒருவாரம் முன்னதாகவே கொடி சாட்டப்படும்.

    கொடி சாட்டுதல்

    கொடி சாட்டுதல் நாள் அன்று காலை சுமார் ஐந்து மணியளவில் ஊர்மக்கள் அனைவரும் மஞ்சள் நீரை அம்மனுக்கு ஊற்றி அபிடேகம் செய்து ஊர்ப்பெரியவர்களுக்கும், விரதமிருப்பவர்களுக்கும் காப்புக் கட்டுவர்.பின்னர் ஒவ்வொரு தெருவாகச் சென்று காப்புக் கொடியைக் (வேப்பிலையால் கட்டப்பட்டது) கட்டும்பொழுது அத்தெருப் பெண்கள் குலவை இட்டு வணங்குவர்.அன்றிலிருந்து திருவிழா தொடங்குகின்றது.

    கொடி சாட்டிய நாளில் இருந்து தெருக்களையும், வீடுகளையும் மிகச் சுத்தமாக வைத்திருப்பர்.மேலும் புலால் உணவைத் தவிர்ப்பர்.அந்த வாரத்தில் வெளியூர்களுக்குச் செல்லமாட்டார்கள்.அப்படித் தவிர்க்க முடியாத காரணத்தினால் செல்ல நேரிட்டாலும் அன்றிரவே வந்துவிடுவர்.

    முதல் நாள் விழாவிலிருந்து ஏழு நாட்களும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்துவர்.எட்டாம் நாள் பொங்கல் விழா மிகச் சிறப்பாகவும் பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.ஒன்பதாம் நாள் விழாவில் அம்மனுக்கு வலப்புறம் இருக்கும் கருப்பசாமிக்குப் பலியிடுதல் விழாவும் நேர்த்திக்கடன் செலுத்தும் விழாவும் நடைபெறும்.பத்தாம் நாள் விழாவில் மஞ்சள் நீரைத் தெளித்து விழாக் கொண்டாடுவர்.

    தல விருட்சம்

    அம்மனுக்கு உகந்த மரமாக வேம்பு கருதப்படுகிறது.ஆகையால் தான் “செழியர் புகழ் விளைத்த”3 பகுதியான குருவிகுளம் மேல மாரியம்மன் திருக்கோயிலில் தல விருட்சமாக வேம்பு உள்ளது.

    கோயிலைச் சுற்றிலும் வேம்பு அதிகமாகக் காணப்படுகின்றது.‘வேப்பிலையில் குடியிருப்பவள் அன்னை’ என்று அவ்வூர் மக்களால் அம்மன் பெரிதும் போற்றப்படுகிறாள்.

    திருவிழாச் சிறப்பு நிகழ்ச்சிகள்

    திருவிழா நாள் அன்று மாலையில் மாவிளக்கு எடுத்தல், கரகம் கிளம்புதல், முளைப்பாரி எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல், தீர்த்தக்குடம் எடுத்தல், பொங்கலிடுதல், எண்ணெய்க்காப்புச் சாத்துதல், தீபம் ஏற்றுதல் ஆகியவை ஆண்டுவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாகக் கருதப்படுகின்றன.சில ஆண்டுகளுக்கு முன்னர் பூ மிதித்தல் விழாவும் நடைபெற்றது.ஏனோ, சில காரணங்களினால் இன்று கைவிடப்பட்டுள்ளது.

    நம்பிக்கைகள்

    “நம்பிக்கையானது மக்களுடைய உள்ளுணர்ச்சிகளின் வெளிப்பாடாகும்.நம்பிக்கை மனித வாழ்வின் உயிர் நாடி.உலகம், ஓர் அச்சில் சுழல்வதைப் போல, நம்பிக்கையை வைத்தே உலக மக்கள் இனம் இயங்குகிறது.”4 இவ்வாறு அனைத்துச் செயல்பாடுகளும் இறைவனின் அருளாலேயே நிகழ்கின்றன என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு.அதனால்தான் இப்பகுதி மக்கள் மேல மாரியம்மன் மீது தீராத நம்பிக்கை கொண்டுள்ளனர்.

    தொகுப்புரை

    அருள்மிகு மேல மாரியம்மன் கோயில் சிறு மண் பீடமாக இருந்து இன்று மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.இக்கோயிலில் மாத விழாக்கள், ஆண்டு விழா என்ற வகையில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.ஆண்டுவிழாவில் பல வகையான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.மேலும் குருவிகுளம் மேல மாரியம்மன் தீய சக்தியிலிருந்து தம்மைக் காக்கின்றாள் என்ற தீராத நம்பிக்கையை இப்பகுதி மக்கள் கொண்டுள்ளனர்.

    சான்றெண் விளக்கம்

    1.இரத்தின சண்முகனார். தெய்வ வழிச் சிந்தனைகள், பக்கம்.121

    2.சேதுபாண்டியன்.தூ, (ப,ஆ), பல்நோக்குக் கட்டுரைகள்,பக்கம்.38

    3.அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து, கழுகுமலை நகர் வளம்,பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடநூல்.

    4.பாலுச்சாமி.நா, (ப.ஆ) வாழ்வியற் களஞ்சியம், தொகுதி பதினொன்று,1991-பக்கம்.220–221.

    *********

    கட்டுரையாளர் – தமிழ்த்துறைத் தலைவர்,

    பிர்லா பொதுப் பள்ளி,

    தோகா, கத்தார்.

    கைப்பேசி எண் : +974-55294870

    மின்னஞ்சல் : krishnatamilbps@gmail.com

    —————–

    Share