Month: October 2018

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181031 Vishwaroopa -10×14″ icam (brushpen-microtip pen) Arches 300 gsm lr

    ’’பசுவரும் முன்னே, விஸுவரூபர் பின்னே,
    கொசுவாகக் காண்டீபர் கெஞ்ச ,-’’அசுவரதம்
    ஏறு முதலில், அருச்சுனாபின் கீதையின்
    சாறுண்டு கொல்நூறு பேரு’’…. கிரேசி மோகன்….!

    பாலுக்(கு) அழும்பாலன் பாவை களின்லோலன்
    ஞாயலத் துயர்தீர்க்கும் நாயகன் -மாலுக்குள்
    எண்ணமாய்த் தோன்றி இடைசாதி வந்தவன்
    கண்ணனை நெஞ்சே கருது….!

    Share
  • அள்ளூர் நன்முல்லையார் பாடல்களில் மெய்ப்பாடு

    முனைவர் சு. இராமர்

    முதுமுனைவர்பட்ட ஆய்வாளர்

    தமிழியற்புலம்

    மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

    மதுரை – 21

     ————————————

    மெய் என்பதை உண்மை எனவும், உடல் எனவும் குறிப்பது வழக்கமாகும். மெய்யினால் உணர்த்தப்படுவது மெய்ப்பாடு எனக் கொள்வர். மெய்யில் தோன்றுவது எனவும் மெய்ப்பாடு குறிக்கப்படுகிறது. மெய்யினால் உணர்த்தப்படும் செய்திகள், கருத்துக்கள் சைகை மொழி எனப்படுவதுண்டு. மொழி தோன்றும் முன்னால் மனிதர்கள் தங்கள் உணர்வுகளை, கருத்துக்களை உடல் உறுப்புகளின் வழியே வெளிப்படுத்தினர். ஓசைகள், ஒலிகள் ஆகியவை திரட்சி பெற்று மொழியாவது போல் சைகை, முகத்து வெளிப்படும் உணர்வுகள் அனைத்தும் மெய்ப்பாடுகளாக திரட்சி கொண்டன. அவை மனிதர்களின் கலைகளில் வெளிப்படுவனவாகவும் அமைந்தன. அவ்வாறு மெய்ப்பாடுகள் குறித்து கூறும் கலையாகப் பரதநாட்டியம் காணப்படுகிறது. நாட்டிய சாஸ்திரம் பற்றிய நூலை இயற்றியவரான பரத முனிவர் மெய்யுணர்வுகளை ரசம் எனக் கொண்டார். ரசங்கள் எட்டு என்று குறிப்பிட்டாலும் நாடகவியல் நூல் எழுதிய சூரிய நாராயண சாஸ்திரி அவற்றை ஒன்பது எனக் கண்டார். ஒன்பான் சுவை எனக் கூறுவது வழக்காகும். ரசம் என்பதும், பாவம் என்பதும் தமிழில் சுவை, குறிப்பு என்று கூறப்படுகின்றன.

    மனித உணர்வுகள் மெய் வழி வெளிப்படுவது பாவம் என்று வட நூலார் குறிப்பிட அதுவே தமிழில் மெய்ப்பாடு என்றும் குறிப்பு என்றும் கூறப்படுகின்றன. மெய்ப்பாட்டினை விளக்கிக் கூறும் பல்வேறு அறிஞர்களின் கருத்துக்களை எளிதில் விளங்குமாறு “சுவை – காரணம், மெய்ப்பாடு – காரியம். இலக்கியத்தில் சொற்கள் சுவையையும் வருணனைகள் மெய்ப்பாட்டையும் விளக்குகின்றன” (ப.வேல்முருகன்.2012:3) என்று குறிப்பிடுகிறார் ப.வேல்முருகன். அடிப்படையில் சொற்களினால்தான் மொழியும் முழுமையடைகிறது. சொற்களின் வெளிப்பாடு உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தும் வகையில் சுவை கொண்டதாக மாறுகிறது. இலக்கியத்தில் சொற்களைப் பயன்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு படைப்பாளியும் மாறுபடுவது சுவையூட்டும் சொற்களைப் பயன்படுத்தும் திறனால்தான் எனலாம்.  சுவை காரணப் பொருளாக இலக்கியத்தில் வெளிப்படுகிறது. குறிப்பு உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

    “மெய்ப்பாடாவது உலகத்தாருள்ளு நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதொருவழியால் வெளிப்படுதல் என்றும் மெய்ப்பாடு பொருட்பாடு என்றுங் கூறுவர் பேராசிரியர். பொருள் – உள்ள நிகழ்ச்சி (சுவைக்குறிப்பு). பாடு – வெளிப்படுதல். படுதல் – தோன்றுதல் – வெளிப்படுதல். உலகத்தாருள்ளு நிகழ்ச்சி என்றது, உலகத்திலுள்ளனொருவன் ஒரு பொருள் தன் பொறியால் உணர்ந்தவிடத்து அப்பொருள் காரணமாக அவனுள்ளத்து நிகழும் நிகழ்ச்சி (சுவைக்குறிப்பு) என்றபடி. புலப்படுவதொரு வழி என்றது சத்துவத்தினை. ஒருவனிடத்தே நிகழ்வது உடம்பின் வேறுபாட்டால் தோன்றுமென்பது” (தொல்காப்பியம், பேராசிரியம், ப.1) என்று மெய்ப்பாட்டியலுக்கு தொல்காப்பியத்தில் விளக்கம் கூறப்படுகிறது. ஒருவன் உலகத்து நிகழ்ச்சி அல்லது பொருளைக் காணுமிடத்து அவனது உள்ளத்துத் தோன்றும் உணர்ச்சியே மெய்ப்பாடு. அது அவனது உடலின் மூலமே வெளிப்படும். உள்ளத்துத் தோன்றும் உணர்வினை முகம் வெளிப்படுத்தும் என்று கூறுவதைத்தான் அடுத்தது காட்டும் பளிங்கு என்று முகத்தினை விளிப்பர். அது போலவே அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற கூற்றும் இதனையே கூறுவதாக அமைகிறது. படைப்பாளியின் மனமானது உலகத்து நிகழ்ச்சிகளை தன் மனத்தில் இறுத்தி அகப்பாரிமாணமாக வெளிப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டது.

    படைப்பாளியின் உள்ளத்து உணர்வுகள் புறவெளியிலிருந்து பெறப்படுகின்ற ஒன்றாகவே இருக்கின்றன. புற நிகழ்வுகள் மனிதனுக்குள் ஏற்படுத்தும் அகப்பரிமாணமே படைப்பாக வெளிப்படுகிறது. படைப்பாளியின் மனம் புறச் செயல்பாடுகளிலிருந்தே படைப்புக்கான ஊக்கத்தைப் பெறுகின்றது. நா.வானமாமலை இலக்கியத்தில் உள்ளடக்கம் தோன்றும் வகையினைக் கூறும் போது “புறவய யதார்த்தத்தின் கலைப்படைப்பே இலக்கியத்தின் உள்ளடக்கம், இவ்வரையறையில் படைப்பாளியின் உள்ளத்திற்கு வெளியே உள்ள புறவய யதார்த்திற்கும் அவனுடைய உள்ளத்தில் அது பிரதிபலிக்கும் அகவயக் கருத்துகளுக்கும் (படிமம்) உள்ள உறவை நாம் சிந்திக்கிறோம். வேறு சொற்களில் கூறுவதானால் உண்மைக்கும் இலக்கியப் படைப்பிற்கும் உள்ள உறவை இது குறிப்பிடும்” (நா.வானமாமலை. இலக்கியத்தில் உருவமும் உள்ளடக்கமும், ப.11) என்ற கருத்தானது புறவய யதார்த்தம் என்னும் உண்மையைப் படம் பிடித்துக் கொள்ளும் மனதானது அவ்வுண்மையை கலைப்படைப்பாக மாற்றும் போது அகவயப் பரிமாணம் வெளிப்படுகிறது. கலைப்படைப்பில் உள்ளத்து உணர்வுகள் புறவயச் சூழலை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படுகின்றன. அதில் தோன்றும் மெய்ப்பாடுகள் அல்லது உணர்ச்சிக் குறிப்புகள்  இலக்கியத்திற்குச் சுவையூட்டும் வகையினவாக அமைகின்றன. சமூக சூழல்களிலிருந்தும் படைப்பாளியின் மனம் கட்டமைக்கப்படுகிறது. எனவே கலைப்படைப்பில் உருவாகும் மெய்ப்பாடுகள் அப்படைப்பின் மூலமாக சமுதாயத்தின் இயங்கு திசையை காட்டுகின்றன.

    தொல்காப்பியமானது ஒவ்வொரு மெய்ப்பாடும் தோன்று நிலையினை நான்கு காரணிகளைக் கொண்டு குறிப்பிடுகிறது. நகை என்றால், எள்ளல், இளமை, பேதமை, மடம் என்னும் நிலைகளில் தோன்றும் என்கிறது. எள்ளுதல் என்பது இகழ்தல் ஆகும். இகழ்தல் மூலம் நகைச்சுவை தோன்றும் அது போல சிறுபிள்ளைத்தனமாகப் பேசுவதில் நகை தோன்றும், அறிவற்ற செயல்கள், அறிந்தும் அறியாத நிலையில் குறிப்பிடும் செய்திகள் ஆகியன நகையைத் தோற்றுவிக்கும் என்று கூறுகின்றது. இவ்வாறு ஒவ்வொரு மெய்ப்பாட்டிற்கும் நான்கு காரணங்களைக் கூறுகிறது. மெய்ப்பாடுகள் உள்ளத்துணர்வினை வெளிக்காட்டும் எனப்படுவதால் சமூகச் சூழ்நிலைகளில் தோன்றும் நிகழ்வுகளும் காரணமாக அமைகின்றன.

    படைப்பாளிகள் தம் உள்ளத்து உணர்வுகளை வெளிக்காட்டுவதற்காகவும் இலக்கியம் படைக்கின்றனர். எனவே அவற்றில் மெய்ப்பாடுகள் அமைந்திருப்பது இயல்பாகும். சங்க காலப் புலவர்களுள் அள்ளூர் என்னும் ஊரைச் சார்ந்தவரான அள்ளூர் நன்முல்லையாரின் பாடல்கள் பெண்ணின் அகத்துணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் காணப்படுகின்றன. அவற்றில் வெளிப்படும் மெய்ப்பாடுகள் தலைவியின், தலைவனின் உள்ளத்துணர்வுகளை காட்சிப்படுத்துகின்றன. அள்ளூர் நன்முல்லையார் மொத்தம் பதினொரு பாடல்கள் பாடியுள்ளார். குறுந்தொகையில் மட்டும் 9 பாடல்கள் பாடியுள்ளார். புறப்பாடல் ஒன்றும், அகநானூற்றில் ஒன்றும் எனப் அகப்பாடல் பத்தும், புறப்பாடல் ஒன்றும் எனப் பாடியுள்ளார். குறுந்தொகைப்பாடல்களில் உள்ள பாடல்கள் அனைத்தும் காம வெளிப்பாட்டையும் ஏக்கத்தையும், அச்சத்தையும், தலைவன் மீதான கோபத்தையும் கொண்டுள்ளன. அக்காலச் சமூக நிலையில் பெண்கள் மீதான உடைமைச் சமூகக் கட்டுப்பாடுகள் அவர்களின் உள்ளத்துணர்வுகளை குமுறலுடன் வெளிப்படச்செய்திருக்கிறது என்பதை இவரது பாடல்கள் காட்டுகின்றன. பிரிவுத் துயரை பெரிதும் வெளிப்படுத்துவனவாக குறுந்தொகைப் பாடல்கள் காணப்படுகின்றன.

    “காலையும் பகலும் கையறு மாலையும்

    ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்றுஇப்

    பொழுதுஇடை தெரியின் பொய்யே காமம்

    மாஎன மடலொடு தூற்றலும் பழியே

    வாழ்தலும் பழியே பிவுதலை வரினே” (குறுந்.32)

    என்னும் பாடல் காமத்தினை வெளிப்படுத்தும் தலைவனது கூற்றாக அமைகிறது. தலைவியைச் சேர முடியாத தலைவன் காமத்தினை பொய்யாக்கும் காலப்பொழுதுகள் பற்றி தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்துவதாக அமைகிறது. உள்ளத் துணர்வுகளில் மகிழ்ச்சியை குறிப்பதாக காமம் காணப்படுகிறது. இக்காமச் சுவையை பெறுவதற்கு தலைவன் தலைவியின் மீதான காதலை வெளிப்படுத்த மடலேறினால் அது தலைவிக்குப் பழியையும் தருமென்று கருதுகின்ற தலைவனின் உள்ளமானது ஏக்கத்தையும், பரிதவிப்பையும், ஏமாற்றத்தையும், பழி நேருமோ என்னும் அச்சத்தையும் வெளிப்படுத்துகின்றது. பொய்யே காமம் என்று கூறுவதன் அறியாமையையும் தலைவனது கூற்று வெளிப்படுத்துகிறது. அறியாமை என்பது சிறுபிள்ளைத் தனத்தின் வெளிப்பாடாக நகையை வெளிப்படுத்துவதாகும். இங்கு மடலேறும் செயல் பேதமைத் தன்மையை வெளிப்படுத்தும் எனவே இதுவும் நகைக்கான மெய்ப்பாடு எனலாம். பழி நேருமோ என்னும் அச்சம் கொள்ளும் தலைவனின் உள்ளத்து உணர்வானது சமூக நிலையில் பெண்ணின் மீதான கட்டுப்பாடுகளையும் நிலவுடைமைச் சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் சமூக நிலையையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. தலைவன் பற்றிய தோழியின் கூற்றினை விளையாட்டுக்குக் கூறியதாகத் தலைவி எண்ணிக் கொள்வதை “நகை என உணரேன் ஆயின்” (குறுந்.96) எனக் கூறுகிறாள். அறியாப்பிள்ளை என்பதும் நகையை வரவழைக்கக் கூடிய மெய்ப்பாட்டிற்கான காரணியாகும். அச்சத்தை வெளிப்படுத்தும் தலைவியின் மனமானது விடியலை எண்ணி வாடுகிறது.

    “குக்கூ என்றது கோழி அதன்எதிர்

    துட்கென் றன்று என்தூஉ நெஞ்சம்

    தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்

    வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே” (குறுந்.157)

    என்னும் இப்பாடல் தலைவியின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது. தலைவனைப் பிரியும் வகையில் கோழி கூவும் காலை வந்தது என்று அஞ்சுகிறாள். கவலை கொள்ளும் தலைவியின் மனமானது தலைவனைப் பிரிவதை எண்ணி அஞ்சியதாக பாடல் குறிப்பிடுகிறது. இப்பாடலில் அச்சம் வெளிப்படுகிறது. இப்பாடலும் அக்காலத்துப் பெண்களின் நிலையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. ஊரார் அறிந்து விடக் கூடும் என்ற நிலையில் தலைவன் யாரும் அறியாமல் சென்று விட வேண்டும் என்ற அச்சமும் இதில் வெளிப்படுகிறது எனலாம். வருத்தம் அல்லது அழுகை என்னும் மெய்ப்பாட்டினை வெளிப்படுத்தும் ஒரு பாடல்,

    “நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே

    புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்

    கட்கு இன் புதுமலர் முட்பயந்தா அங்கு

    இனிய செய்தநம் காதலர்

    இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே” (குறுந்.202)

    என்னும் பாடலில் முல்லை நிலத்து சிற்றிலைகளைக் கொண்ட நெருஞ்சி முட்களை மிதித்து விட்டால் அது துன்பத்தைத் தரும் அது போல தலைவனும் தனக்குத் துன்பம் தருகின்றான் என்று வருந்துகிறாள். இப்பாடலானது தலைவியின் அழுகை என்னும் மெய்ப்பாட்டினை வெளிப்படுத்துகிறது. புலிகள் பாய்ந்து கொள்ளும் புலிகள் உள்ள காட்டினைக் குறித்து தலைவனது செயலை ஒப்பிடுகின்ற தலைவியின் கூற்றில் அச்சம் என்னும் மெய்ப்பாடு வெளிப்படுகிறது “கோட்புலி வழங்கும் சோலை, எனைத்துஎன்று எண்ணுகோ முயக்கிடை மலைவே” (குறுந்.237) என்ற பாடல் அச்சத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்துகின்ற வகையில் அமைந்துள்ளது. தலைவியைத் தலைவனுடன் இணைந்து வாழ்கவென்று வாழ்த்தும் பெருமித உணர்வை,

    “வதுவை அயர்ந்தனை என்ப அஃது யாம்

    கூறேம். வாழியர் எந்தை செறுநர்

    களிறிடை அருஞ்சமம் ததைய நூறும்

    ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்

    பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னஎன்

    ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க

    சென்றீ பெரும! நிற் தகைக்குநர் யாரோ” (அகம்.46)

    என்ற பாடல் கூறுகிறது. வாயில் மறுத்துத் தோழி தலைமகனுக்குச் சொன்னது. தலைவனின் செயல்களை சினந்து கூறும் வகையில் அமையால் அவன் நாணும்படி அவனது செயலைப் பாராட்டிப் பெருமிதம் கொள்வதாக பாடல் அமைகிறது. நான் ஊடுவதற்கு நீ எனக்கு என்ன உறவு இவ்வூரில் உள்ள நீண்ட கூந்தலைக் கொண்ட பெண்ணை மணந்துள்ளதாக அறிந்து கொண்டேன். அவளுடன் நீ வாழ்க என்று வாழ்த்துவது போல அவனை செயலை எள்ளுகிறாள். இது தலைவனுக்கு நாணத்தை அளிப்பதாக அமையும் என்று அவ்வாறு கூறுகிறாள். இதில் தலைவிக்காகத் தோழி பேசுகிறாள். வாயில் மறுத்தல் மூலம் தன் சினத்தைக் காட்டுகிறாள். தலைவனின் செயலை எள்ளுவதன் மூலம் நகைப்புக்குரியதாக தலைவனின் செயலை மாற்றுகிறாள். தலைவன் பிறிதொரு பெண்ணுடன் வாழ்வதால் அவனை வாழ்த்துவது போல வாழ்த்துகிறாள். அதில் அவள் பெருமித உணர்வை வெளிப்படுத்துகிறாள். இவ்வாறு பல்சுவையும் விளங்க பாடல் அமைந்துள்ளது.

    “உள்ளார்கொல்லோ தோழி கிள்ளை

    வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்

    புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப்

    பொலங்கல ஒரு காசு ஏய்க்கும்

    நிலம்கரி கள்ளி யங்காடு இறந்தோரே” (குறுந்.67)

    என்னும் பாடல் தலைவியின் கூற்றாக அமைகிறது. தோழியிடம் கூறுகிறாள். தலைவனின் பிரிவினை எண்ணி வருந்தும் தலைவி பறவையின் அலகில் உள்ள வேப்பம்பழம் அணிகலன் செய்பவரின் கையில் பிடித்திருக்கும் பொற்காசு போல காணப்படுகிறது என்கிறாள். தலைவன் தன்னை மணந்து கொள்ளும் ஆவலை இதில் வெளிப்படுத்துகிறாள். இதில் ஏக்கமும், தலைவனின் பிரிவால் வருத்தமும் கொண்டிருக்கும் சுவைகள் வெளிப்படுகின்றன. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், உவகை, வெகுளி, பெருமிதம் என்பன போன்ற சுவைகள் ஒவ்வொரு மனிதரிடத்தும் வெளிப்படும். அவற்றை படைப்புகளில் வெளிப்படுத்தும் போது சூழல் சார்ந்து ஒவ்வொரு சுவையும் வெளிப்படும். உணர்வுகளை தூண்டும் வகையிலான மெய்ப்பாடுகளை சங்கப் பாடல்கள் பரிதும் கொண்டிருக்கின்றன. தலைவன், தலைவி இருவரிடையே நிகழும் காதல் நிகழ்வுகளில் இம்மெய்ப்பாடுகள் வெளிப்படுவதைக் காணலாம். சங்க மாந்தர்களின் உள்ளத்துணர்வுகளைப் படம்பிடித்துக் காட்டுவனவாகவே இவை அமைகின்றன. அன்றைய சூழலில் பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளும் கடப்பாடுகளும் மெய்ப்பாட்டு உணர்தலில் வெளிப்படுகின்றன. ஆணுக்கு இருந்த சுதந்திரமான வாழ்வும். பெண்ணுக்கு இருந்த கட்டுப்பாடான வாழ்வும் உணர்வுகளையும் கட்டமைத்தன என்பதைக் காணலாம். அள்ளூர் நன்முல்லையார் பாடல்களில் பெண்ணின் தகவமைதல் சார்ந்த பல்வேறு உணர்வுகள் சுவைகளாக வெளிப்படுகின்றன. பெருமித உணர்வை தலைவனை இகழ்வதற்கு வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது. நகை, அழுகை அல்லது வருத்தம், தலைவனின் பேதமை போன்ற சுவைகள் பாடல்களில் வெளிப்படுகின்றன.

    துணைநூல்கள்

    1. தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல், கணேசையர் பதிப்பு,
    2. ந.முருகேசபாண்டியன், அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்,
    3. தாயம்மாள் அறவாணன், மகடூஉ முன்னிலை,
    4. ப.வேல்முருகன், தொல்காப்பிய மெய்ப்பாட்டியலும் சங்கச் செவ்வியல் குறுந்தொகையும் புள்ளியியல் ஆய்வு

    Share
  • உயிரின் விலை!

    -புனிதா

    குளிர்ந்த காடுகள், பல்வேறு மரங்கள், கண்ணுக்கெட்டிய தூரம்வரை  எங்கும் பச்சை அருவி அமுதம் போல் பாயும் என்றவுடன் எங்கள் சிவகாசியை மலைப் பிரதேசம் என்று நினைத்து விடாதீர்கள்.

    பலருக்கு வாழ்வு தரும் கற்பகத் தரு உள்ள நகரம். அதன் முக்கியத் தொழில்கள் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு, சுண்ணாம்புக் கல் எடுத்தல் போன்றவை. இங்கே ஆடம்பர வாழ்க்கை இல்லை. சாதாரண நிலையிலும் மக்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். பட்டாசுத் தொழில்தான் படிக்காதவர்களின் வாழ்வாதாரம்.

    அப்படிப்பட்டவர்தான் கருப்பசாமி. அவர் வயது 22. துடிப்பானவர். இள ரத்தம் அல்லவா? அழகான புத்திசாலியும் கூட. ஆனால் வறுமை அவர் வாழ்வில் பூகம்பத்தைக் கிளப்பியது. 17 வயதில் இருந்தே வேலைக்குச் செல்கிறார். கருப்பசாமியின் நண்பர் அய்யாசாமி. இரண்டு பேரும் சம வயது. அய்யாசாமிக்குத் திருமணம் முடிந்து சந்தோசமான வாழ்க்கை வாழ்கிறார்.

    இரண்டு பெரும் ஒன்றாகப் பட்டாசுக் கம்பனிக்கு வேலைக்குப் போவார்கள், வருவார்கள். இணை பிரியாத நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு நொடியும் உயிர் ஊசலாடும் வேலை தான். தினமும் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைமைதான்.

    படிக்க வேண்டிய காலத்தில் படிக்காததால் காலம் அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டது. ஆனால் அவர்கள் இரண்டு பேருக்கும் எப்போதும் சிரிப்பும் சந்தோசமான பேச்சும்தான். எதற்கும் வருத்தப் படவே மாட்டார்கள்.

    அப்படி ஒருநாள் வேலைக்குப் போகும்போது தான் கருப்பசாமி தனக்குப் பெண் பார்த்திருப்பதாகவும் இரண்டு மாதங்களில் திருமணம் என நிச்சயம் செய்திருப்பதாகவும் சொன்னார். அப்போது அய்யாசாமியின் மனைவி கர்ப்பமாக இருந்தார். இரண்டு மாதங்களில் குழந்தை பிறக்கும் சூழ்நிலை.

    நண்பர்கள் இருவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி. இன்னும் இரு மாதங்கள் தான். அதன் பின் அவர்கள் வாழ்வில் பெரிய சந்தோசம் வரப்போகிறது. மனம் ததும்பி வழிந்த மகிழ்ச்சியை முகம் நிறைந்த சிரிப்பைப் பார்த்து அவர்களது நண்பர்கள் செய்தியை கண்டு கொண்டு எல்லோருமாகக் கொண்டாடினார்கள். இந்த அத்தனை மகிழ்ச்சியும் சில மாதங்கள், சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

    இரண்டு நாட்கள் கழித்து கருப்பசாமியின் அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. திடீரென்று வந்த இந்த இடியால் நண்பர்கள் இருவரும் அனலில் விழுந்த புழுவைப் போல் துடித்தார்கள். அவர்கள் நெஞ்சில் மேலும் ஈட்டியைச் சொருகுவது போன்று மருத்துவ செலவுக்கு காப்பீடு போக 2 லட்சம் செலவாகும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.

    கந்து வட்டி, மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கினாலும் ஒரு லட்சம் தான் கிடைத்தது. மீதி ஒரு லட்சத்திற்கு அவன் பட்ட பாடு! அய்யோ!! இரு நாட்களாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை, பிச்சைக்காரனாக ரோடு ரோடாக கடன் கேட்டு ஓடினான். எந்தக்  கடவுளும் அவனுக்கு உதவவில்லை.

    மனம் சோர்ந்து திரும்பி வரும் வழியில் ரோட்டிலேயே மயங்கி விழுந்து விட்டான். அந்த வழியாகச் சென்ற அவன் முதலாளி அவனைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தி அவனைக் கூட்டி வந்தார்.

    “ஏன் இப்படி இருக்கிறாய்? என்ன நடந்தது” என விசாரித்தார்.

    நடந்த எல்லாம் கேட்ட அவர் இரக்கமுள்ள மனம் கொண்டவர். மருத்துவச் செலவுக்கான தொகையைக் கொடுத்து உதவினார். அவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லாமல் கையெடுத்துக் கும்பிட்ட கருப்பசாமி மனம் முழுவதும் நன்றி நிறைந்திருந்தது.

    அம்மா குணமாகி வீடு திரும்பியதும் கருப்பசாமியின் கல்யாண வேலைகள் ஆரம்பமாயின. பத்திரிகை அடித்து ஊருக்கெல்லாம் உறவுக்கெல்லாம் கொடுத்து மகிழ்ச்சியோடு கருப்பசாமி எல்லாரையும் அழைத்தார்.

    அய்யாசாமியும் அப்பாவாகப் போகிற மகிழ்ச்சியில் மிதந்தார். அய்யாசாமியின் மகனை தேவர்கள் பூப்போட்டு ஆசீர்வதித்து பூமிக்கு அனுப்பினார்கள். அதே சமயத்தில் அந்தக் குழந்தையின் அப்பாவின் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்டி விட்டார்கள். ஆம்!

    கல்யாணம் எனும் கனவும் குழந்தை என்ற ஆசைக் கனவும் பட்டாசின் வெடிச் சத்தத்தில் கலைந்து போயின. யாரோ செய்த சிறு தவறு பல குடும்பங்களின் நிம்மதியை, மகிழ்ச்சியை, குழந்தைகளின் படிப்பைத் தலைகீழாக மாற்றி விட்டது.

    எங்கும் கரிக்கட்டை போலப் பிணங்கள்.

    “அம்மா அப்பா”,

    “என்னால் தாங்க முடியலையே”

     என்று எங்கும் ஓலம் கேட்க அழுகையும் அவலக் குரல்களும் அந்தச் சுற்று வட்டாரம் முழுவதும் எதிரொலித்தது. ஒவ்வொருவருடைய கை எது? கால் எது? என்று பிரித்தறிய முடியாதவாறு மனித உறுப்புகள் சிதறிக் கிடந்தன.

    எல்லாரும் தங்கள் உறவுகளை, உறவுகளின் உறுப்புகளை தேடியபடி இருந்தனர். அந்தக் குவியலில் தான் கருப்பசாமியும் அய்யாசாமியும் கிடந்தார்கள். அய்யாசாமியின் மகன் பிறந்தவுடன் பெருங்குரலெடுத்து அழுதான். அதென்னவோ மற்றக் குழந்தைகளின் அழுகை போல சாதாரணமாக இருக்கவில்லை. தன் தந்தையின் மரணத்துக்கும் சேர்த்து அழுவது போல் இருந்தது. மகனின் முதல் சுவாசம் தந்தையின் கடைசி சுவாசம்.

    புயலுக்கு பின்வரும் அமைதி போல இந்த பேரிடருக்குப் பின் பெரும் அமைதி பிறந்தது. எல்லா முகங்களும் சோகத்தைச் சுமந்தபடி இருக்க உதடுகள் சொற்களற்ற மௌனத்தைத் தாங்கி வலம் வந்தன.

    எல்லாம் முடிந்த பின்னர் அரசு நிவாரணத்தொகை அறிவித்தது. மரணம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் என்று அறிவித்தது. ஓர் உயிரின் விலை 1 லட்சம் தானா??

    அரசாங்கம் கொடுக்கற 1 லட்சத்தை வைத்துக் கொண்டு மொத்தக் காலத்தையும் கடத்திவிட முடியாது. எல்லாரும் தங்கள் இழப்பைத் தாண்டி பிழைப்பைத் தேடிச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

    அய்யாசாமியின் மனைவி கைக்குழந்தையுடன் செய்வதறியாது திகைத்து நின்றாள். கடந்து வந்துதானே ஆக வேண்டும் எந்தச் சோகத்தையும்!!!

    பிழைப்பைத் தேடிச் செல்லத் தொடங்கினாள் அந்தத் தாய். அந்த நேரத்தில் கூட “ஏய்! இவ புருஷன் செத்து ஒரு வாரம் தான் ஆகுது. அதுக்குள்ளயும் வேலைக்கு கிளம்பிட்டா பாரு!” என்ற அங்கலாய்ப்புகள், ஏச்சுப் பேச்சுக்கள். தன்னுடைய சின்னஞ்சிறு பூங்குழந்தைக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டாள்.

    எங்கே வேலைக்குப் போவது?? ‘பட்டாசு தொழில்தான் ஆபத்துணு சொல்லிவிட முடியாது. எல்லாத் தொழில்லயும் ஆபத்து இருக்கத்தான் செய்யும்’ தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டவளாக பட்டாசு தொழிற்சாலைக்குள் நுழைந்தாள். வேறு எந்தத் தொழிலும் செய்யத் தெரியாத அவள். வேறு தொழிலுக்கு அங்கே வாய்ப்பும் தான் ஏது?

    ஆபத்து நிறைந்த இந்தத் தொழிலிலும் அரசு விதிக்கிற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் ஆபத்தைக் குறைத்து விடலாம் என்று தோன்றினாலும் அவள் அடி மனத்தில் எப்போதும் நிறைந்திருக்கும் வேண்டுதல் ஒன்று இருக்கிறது.

    ‘தந்தையை இழந்து விட்ட தன்னுடைய சின்னச் சிட்டுக்காகவாகிலும் தனக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது’ என்பது தான் அது!.

    எதிர்காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையில் ஊசலாடியபடி தான் அங்கே பல மனித உயிர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் வாழ்விலும் இந்தத் தீபாவளித் திருநாள் ஒளி வீசட்டும்!!

    *****

    கதாசிரியர் – மாணவி,
    ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை

     

     

    Share
  • சேக்கிழார் பா நயம் – 9

    புலவர் இராமமூர்த்தி

     

    திருவாரூரில் வாழ்ந்த வேளாண்  குடியினரைப் பற்றிச் சேக்கிழார்  இப்பாடலில் கூறுகிறார்!  அவர்கள்தம்  நிலத்தில் விளைந்த பயிர்களில் ஆறில் ஒரு பங்கினை உடனே அரசுக்குச்  செலுத்திவிடுவர். அதன் பின்னர் எஞ்சிய விளை பொருளைக் கொண்டு ஐவகைக் கடமைகளை செய்தனர். ஐவகைக் கடமைகள் யாவை? அவை முன்னரே திருவள்ளுவரால் கூறப்பெற்றன. அவை,

    ‘’தென்புலத்தார்,    தெய்வம்,   விருந்து, ஒக்கல்,   தான் என்றாங்கு

      ஐம்புலத்தார்   ஓம்பல்  கடன்!’’

    என்பனவாகும். இவ்வைந்தையும் பேணுதலே  அறம் ஆகும். இவற்றைப் ‘’பரவரும் கடவுள் போற்றிக், குறவரும், விருந்தும் , பண்பின் விரவிய கிளையும் ‘’ எனப் பாடிச்  சேக்கிழார் விளக்குகிறார்.இவற்றால் குடிகளே ஓங்குவர்  என்கிறார்.

    ‘’வரப்புயர நெல்லுயரும், நெல்லுயரப்  பயிர் உயரும், பயிர் உயரக்  குடியுயரும் , குடியுயரக் கோன் உயர்வான் ‘’ என்பது ஒளவை வாக்கு! பயிர் உயர்ந்தால் கோனுக்கு வரி செலுத்தலாம், தென்புலத்தாராகிய முன்னோர் வழிபாடு செய்யலாம், தெய்வ வழிபாடும் செய்யலாம் ,புதியவராகிய விருந்தினரை உபசரிக்கலாம், தம் சுற்றத்தாரையும் பேணலாம். இவ்வகையில் முழுமையான அறத்தைச் செய்தலே  இல்லறம் எனப்படும். இவற்றால் ஒருவனுடைய குடிமக்கள் அனைவருமே புகழ் பெறுவர்.  இதனைச் சேக்கிழார் சுவாமிகள்,

    ‘’ அரசுகொள்   கடன்கள் ஆற்றி , மிகுதி கொண்டு அறங்கள் பேணிப்

      பரவரும்    கடவுள்    போற்றிக்    குரவரும்  விருந்தும்,  பண்பின்

      விரவிய  கிளையுந்     தாங்கி  விரவிய  குடிக   ளோங்கி

      வரைபுரை  மாடநீடி  மலர்ந்துள  பதிக  ளெங்கும் ‘’

    என்று பாடுகிறார். இப்பாடலில்  வேளாண் குடியினர் தம் வயலில் விளைந்த நெல்லில் ஆறில் ஒரு பகுதியை , அறுத்தவுடனே , அப்போதே அரசாங்கத்துக்குச் செலுத்தி விடுகின்றனர். இன்றைய வரி விதிப்பை நோக்க , ஆறில் ஒருபங்கு வருமானம்  ஏறத்தாழ பதினாறு விழுக்காட்டுக்கு மேல் அமைகிறது. அவ்வாறு அதிக வரி பெற்ற அரசன், நிலத்துக்குத் தேவையான நீர், உரம், மற்றும் வேளாண் இடுபொருள்களை வழங்கி விடுவான். மேலும் எரிவாரியத்தின் மூலம் நீர்ப்பாசனத்துக்கு உதவுவான். பஞ்சவார  வாரியத்தின் மூலம், எதிர்பாராத இயற்கை நிகழ்வுகளால் உருவாகும் பஞ்சம் என்கின்ற வற்கடம் நேர்ந்தால் வேளாண் மக்களுக்கு வேண்டிய இடுபொருள்களையும்,  நிதி உதவிகளையும் அரசனே வழங்கி விடுவான் ஆதலால் விளைச்சலைப் பெற்றபோதே, ஆறில்  ஒருபங்கு வரியை மக்கள் மகிழ்ச்சியுடன் செலுத்தி விடுவர். அதன் பின்னரே மற்ற செலவுகளை செய்வர் . இதனைச் சேக்கிழார், ‘’அரசுகொள் கடன்கள் ஆற்றி, மிகுதி கொண்டு அறங்கள்பேணி ‘’ என்கிறார். அதாவது அடுத்த ஆறிலொரு பங்கு வருவாயை , வழிபாட்டுக்கு உரிய திருக்கோயில்களுக்கு  நிவந்தம் வழங்கி, மேலும்  திருவிழா, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றுக்காகப் பயன் படுத்திக்  குடும்ப நலம் பேணுவர். இதனைச் சேக்கிழார், ‘’ பரவரும் கடவுள் போற்றி ‘’  என்று    குறிக்கிறார்.   அடுத்த   ஆறிலொரு   பங்கை ,   வழிப்போக்கராகவும், கூத்தாடிகளாகவும் , இசை வாணர்களாகவும் தம் ஊர் நோக்கி வந்த புதியவர்களாகிய  விருந்தினரைப்  பேணப்  பயன்படுத்துவர். அதற்காக சத்திரம், சாவடி ஆகியவற்றை அமைத்து ஊர்நலம் பேணுவர். மேலும் அடுத்த ஆறிலொரு பங்கினை முன்னோர் வழிபாட்டுக்காகப் பயன் படுத்திப் பரம்பரை நலத்தை உறுதி செய்து கொள்வர். இனி எஞ்சிய ஆறிலொரு பங்கினை உற்றார், உறவினர் ஆகியோருக்கு ஆற்ற வேண்டிய இல்லறக் கடமைகளை நிறைவேற்றி இம்மை வாழ்வின் இன்பங்களை உறுதி செய்து கொள்வர். இவ்வகைகளில் செலவு செய்யும்போதே எஞ்சிய பொருள்களின் மூலம் தம் வாழ்விடமாகிய வீடுகளைக் கட்டிக்கொண்டும், மாடு, முதலான வீட்டு விலங்குகளை வளர்த்தும் இனிய வாழ்க்கையை மேற்கொள்வர். இதனைக் கவிஞர், ‘’குரவரும், விருந்தும் பண்பின் விரவிய  கிளையும் தாங்கி ‘’ என்று பாடுகிறார். ‘’ விரவிய குடிகள் ஓங்கி ‘’ என்ற தொடரால் குடிமக்களின் ஒற்றுமை , பழக்க வழக்கங்கள் இவற்றால் ஊர்மக்களின் இணைந்த வாழ்க்கை வளத்தைச் சேக்கிழார் புலப்படுத்துகிறார்.ஆதலால் தெருக்களும், ஊர்மன்றங்  களும், சாலைகளும், சாத்திரங்களும் , அமைந்து விளங்கின. இதனைப்  புலவர் பெருமான், ‘’வரை புரை மாடம் நீடி மலர்ந்துள பதிகள் எங்கும்!’’ என்று பாடுகிறார்.

    ஆகவே ஊரில் வாழும் ஒவ்வொருவரும் வேளாண்மையால், பக்திநெறியால், குடும்பவளத்தினால், துணைத்தொழில்களால், விருந்தோம்பலால் ஒருங்கி ணைந்து அரசனைப்  போற்றி அன்புடன் வாழ்ந்தனர், என்பதை இப்பாடலால் சேக்கிழார் கூறுகிறார். ‘’ மேழிச்செல்வம் கோழை படாது!’’ ‘’உழுதுண்டு வாழவாரே  வாழ்வர் ‘’ என்ற அனுபவ மொழிகளின்  ஆழமான நுட்பத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம்!

    =========================================================

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    தீபாவளி தோற்றம்….!
    ———————————————————-

    ஏனத்தால் ஈன்ற பொழுதில் பெரிதுவந்த
    மானத்தை வாங்கும் மகனபி -மானத்தால்
    தந்தை மகாவிஷ்ணு தாள்தொட்டு பூதேவி
    விந்தையாய் வேண்ட,வரம் விஷ்ணு….!

    நாரண அம்பை நரகனுக்கு தந்தபின்
    வேறென்ன வேண்டுமென்ற விஷ்ணுவிடம் -பூரணத்வம்
    தாவென்ற பிள்ளைக்கு ’’தாயன்றி யாராலும்
    சாவில்லை என்றார் சிரித்து’’….!

    தீபாவளி EVE பாமா துணை
    ———————————————–
    நமக்குள் இருக்கும் நரகா சுரனார்
    இமைக்கும் பொழுதில் இறக்க -சமர்த்தன்
    யதுகுலக் கண்ணன் இணைசகி பாமா(பூதேவி)
    உதவிக்கு உண்டு உனக்கு….!

    ’’கொம்பிலே குவலயத்தை கால்சிலம்பில் கோள்குலுங்க
    நெம்பிய வராகரே
    ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’…கிரேசி மோகன்….!

    Share
  • விமர்சனமா விருட்சமா நீ

    செல்வி. அ. இராஜபுஷ்பம்

    நதியின் நடுவில்
    நீந்தினாலும் குற்றம்
    மூழ்கினாலும் குற்றம்
    என விமர்சிக்கும்
    உலகிற்கு பயந்து
    மூழ்கிடாதே நீந்திடு

    விமர்சனங்களால் வீழ்வதைவிட
    வீழ்வாய் என்றவர்களின்முன்
    நீ யாரென்று
    உலகிற்கு காட்டிடு
    விருட்சமாய் உதித்திடு
    நிமிர்ந்தே வென்றிடு…….

    Share
  • மனம் ஒடிந்து போச்சு!


    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
    தமிழ்த் தழுவல் : சிஜெயபாரதன்கனடா

    நீ பொய் சொல்வது
    எனக்குத் தெரியா தென்றா
    நினைக்கிறாய் ?
    உன்னால் அழ முடியாது !
    காரணம் நீ
    என்னைப் பார்த்து நகைக்கிறாய் .
    மனம் உடைந்து போச்சு.

    மெய்யாக எனக்கு
    எப்படிச் சிரிக்க முடியு துனக்கு ?
    உன்னால் தான்
    குப்புற வீழ்ந்து கிடக்கிறேன்,
    தெளிவாய் நீ அதைத்
    தெரிந்து கொண்டுள்ளாய் !
    காதலன் வாங்கிப் போட்ட
    மோதி ரத்தை
    மாது நீ, தூக்கி எறிந்தாய் !
    நாளொரு பொழுதும்
    நடக்கும் வேடிக்கை இது !

    தனித்தனி
    யாய் வாழ்கிறோம்
    எவரும் இல்லை நமது
    அருகில் !
    தொடாதேஎன்று
    தடுக்கிறாய் முணுமுணுத்து !
    என் மனம் உடைந்து
    போச்சு மாதே !
    எப்படிச் சிரிப்பு வருது
    உனக்கு  ?

     

    Share
  • காதலுடன் கைதொழுவோம்!

    image1.JPG

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

    அன்னையும் தந்தையும் ஆற்றிய பெருந்தவத்தால்
    அகிலத்தில் நம்பிறப்பு அற்புதமாய் ஆகியது
    அரவணைத்துப் பாலூட்டி அன்புதனை காட்டியவர்
    அறிவுடனே வாழ்வதற்கு ஆசானைக் காட்டினரே
    ஆசானின் அரவணைப்பால் அசடெம்மை விட்டகன்று
    ஆண்டவனின் நினைப்புடனே அருங்கல்வி அமைந்ததுவே
    ஆண்டவனை நினைக்கும்படி அக்கல்வி அளித்துநின்ற
    ஆசானை வாழ்நாளில் அகமதிலே இருத்திவைப்போம்

    எல்லோர்க்கும் ஆசானே ஏணியாய் இருந்திடுவார்
    வல்லவராய் நல்லவராய் வளர்ப்பதும் ஆசானே
    பொல்லாத குணமதனை போக்குவதும் ஆசானே
    நல்லபல சேதிகளை நல்குவதும் ஆசானே
    நல்லாசன் வாய்த்துவிடல் நாம்செய்யும் பாக்கியமே
    நம்வாழ்வின் பெருங்கொடையே நல்லாசன் கிடைப்பதுவே
    ஆதலினால் ஆசானை அடிபரவி நின்றிடுவோம்
    அவராசி கிடைப்பதுவே அனைவருக்கும் பெருங்கொடையே

    அர்த்தமுடன் வாழ்வதற்கு ஆசானின் துணைவேண்டும்
    ஆணவத்தை அகற்றுதற்கு ஆசானின் துணைவேண்டும்
    அறம்பற்றி அறிவதற்கும் ஆசானின் துணைவேண்டும்
    அகம்பற்றி அறிவதற்கும் அவரின்துணை அவசியமே
    நிலமீது நாமிருந்து நிமிர்ந்தென்றும் வாழ்வதற்கும்
    நிலையான நீதியினை நெஞ்சமதில் நிறுத்துதற்கும்
    அறிவான ஆசானே அருந்துணையாய் அமைந்திடுவார்
    ஆதலால் ஆசானை காதலுடன் கைதொழுவோம் !

     

    Share
  • பிணர் (செந்தணக்கு, Sterculia urens), பிணறாயி ஊர்ப்பெயர்

    டாக்டர் நா. கணேசன்

    விக்கிப்பீடியாவில் பிணறாயி என்ற ஊர்ப்பெயருக்கு “பிணம்” என்ற சொல்லைவைத்து விளக்க முயன்றுள்ளனர். https://en.wikipedia.org/wiki/Pinarayi. அவ்வாறு அமங்கலமான பெயரை அவ்வூரில் வாழும் மக்கள் வைத்திருப்பார்களா என்பது ஐயமே. பிணறாயி வட கேரளத்தில் உள்ள ஊர். இவ்வூர்ப் பெயர் அகில இந்திய அளவில் செய்திகளில் காண்கிறோம். காரணம் கேரளத்தின் இன்றைய முதல்வர் பிரணாயி ஊர்க்காரர். சவரிமலை என்றி 1820-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் சபரிமலையைக் குறித்துள்ளனர். சபரிமலை போல வட இந்தியாவில் பல கார்த்திகேயன் (முருகன்), அனுமான் கோவில்களில் பிரமச்சாரி என்பதால் பெண்கள் சென்று வழிபடாத நிலை உள்ளது. பருவகால மகளிர் சவரிமலைக்கு வருதல் இல்லை என்றும் அந்த இரண்டு நூற்றாண்டு முந்தைய நூலில் பதிவாகியுள்ளது. அரசியல் கட்சிகளின் எதிரெதிர் நிலைப்பாடுகளைக் கேரளாவில் சபரிமலை விஷயமாகக் காண இயல்கிறது. நவம்பர் 13-ஆம் தேதி மீண்டும் சுப்ரீம் கோர்ட் இந்தப் பிரச்சினை பற்றிக் கூடுகிறது.

    பிணறாயி – பிணர் என்னும் சொல்லுடன் தொடர்புடையது. பிணர் என்றால் சொரசொரப்பு > சரசர. சர்ச்சரை (ஜர்ஜர jharjhara) என இந்த ஒலிக்குறிப்புச்சொல் வட இந்திய மொழிகளில் வழங்குகிறது.

    மாசறக் கழீஇய யானைபோலப்
    பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்
    பைதல் ஒருதலை சேக்கும்… (குறுந்தொகை 12)

    பிணராயி – நெய்தல் திணையின் ஊர் ஆனதால், சொரசொரப்பான மண்ணோ, கல்லோ இல்லை.

    பிணர் என்பது ஒரு மரம் என்கிறது சென்னைப் பேரகராதி. பிணர் = False tragacanth, (Botanical name: Sterculia urens).

    பிணர் செந்தணக்கு என்றும், சோங்கு/கோங்கு என்றும் பெயர்கள் உண்டு. கோங்கு பல மரங்களுக்குப் பெயராக உள்ளது: (1) Hopea wightiana (2) Cochlospermum gossypium
    பிணர்:
    https://en.wikipedia.org/wiki/Sterculia_urens
    http://yenforblue.blogspot.com/2015/12/the-white-ghost.html
    https://books.google.com/books?id=iaOUGsZZW_MC& (search Sterculia urens)

    ஆயி – அங்கிருந்த அம்மனோ, அல்லது ஆயம் (இடையர் குடியிருப்பு, சுங்கச் சாவடி) போன்றவற்றால் அடைந்த பெயரோ?

    பிணர் (Botanical name: Sterculia urens) – பூவும், காயும் சொரசொரப்பாக இருப்பது காண்க.

    நா. கணேசன்

    பிணறாயி விஜயன், கேரள முதல்வர், கம்யூனிஸ்ட் கட்சி:
    https://www.thenewsminute.com/article/meet-man-behind-iron-facade-pinarayi-vijayan-keralas-next-chief-minister-43563

    புஷ்கரம் தலத்தில் கார்த்திகேயஸ்வாமி திருக்கோவில்
    https://groups.google.com/forum/#!msg/vallamai/LZEettOi36I/WQ00Qk4MBwAJ

    Share
  • படக்கவிதைப் போட்டி 184-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பிக்சர்ஸ்க்யூஎல்எஃப்எஸ் எடுத்த இந்தப் படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நனிநன்றி!

    காற்றிலேறி விண்ணைச் சாடும் நோக்கமா? இல்லை… புகைப்படத்தில் புதியகோணத்தில் காட்சிதர வேண்டும் என்ற ஊக்கமா? மனிதா உன் தேடல்தான் என்ன?

    கவிஞர்கள் தம் எண்ணக்குதிரையில் பயணித்து இதற்கான விடையைக் கண்டறியட்டும்! நமக்குத் தொழில் கவிதைகளை வாசிப்பதும் அவற்றின் சிறப்பை சிலாகிப்பதுமே!

    ******
    ”ஆற்றல் மிகக்கொண்டு காற்றைக் கிழித்தெறிந்து பந்தென்று அடிப்பாயோ பரிதியை?” என்று இம்மனிதனை வியந்து வினவுகின்றார் திரு. சீனிவாசன் கிரிதரன்.

    பந்தென்று அடிப்பாயோ பரிதியை
    மாலைச் செங்கதிரின்
    மங்கும் இருள் சிவப்பில்
    களமாடும் வெறிகொள் வீரர்
    பறிபோகும் காலம்தன்னை
    வசப்படுத்தும் இறுதிப் போரில்
    காற்றை கிழித்தெறிந்து
    ஆற்றல் மிகக்கொண்டு
    ஏற்றம் மிகக்கொண்டு
    மாற்றம் பலகண்டு- இகத்
    தோற்றம் பல மாற
    பந்தென்று அடிப்பாயோ பரிதியை

    *****

    ”வாய்ச்சொல்லோடு முடங்கிவிடாமல் வருந்தி முயன்றால் பரிதியும் வசப்படுவது உறுதி” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    தொட்டிடலாம் சூரியனை…

    வந்திடும் வெற்றி யென்றேதான்
    வாய்ச்சொல் மட்டும் பேசிவிட்டு
    மந்தி ரித்த கோழிபோல
    முடங்கிக் கிடந்தால் மூலையிலே,
    வந்தி டாதே வெற்றியதனால்
    வருந்தி நீயும் முயன்றிடுவாய்,
    அந்த ரத்துச் சூரியனும்
    அண்மையில் வந்திடும் தொடும்படியே…!

    *****

    ”முயற்சியின் வெற்றியில் பூமியை இழந்த கால்களோடும் வானத்தை நோக்கிய கைகளோடும் தோற்றம் காட்டும் நீ, இந்தத் தலைமுறையின் தன்னம்பிக்கைச் சூரியன்” என்று தாவும் மனிதனைத் தன் பாவில் போற்றுகின்றார் முனைவா் ம. இராமச்சந்திரன்.

    எண்ணியது நடந்துவிட்ட துள்ளலில்
    வசப்பட வானமும்
    மகிழ்ச்சியின் பெருவெள்ளமும்

    இருள் சூழ்ந்துவிட்ட பூமியில்
    வெளிச்சத்தை வரவேற்க
    எண்ணில்லா உயிாினங்கள்
    சூரியனை எழுப்பும்
    ரகசியங்கள் பேசும்
    இயற்கையின் உள்ளொளியில்
    உன்னை உணரும் தருணம்
    இறை தரிசனம்

    உள்ளமது உணர்ந்துவிட்ட
    ஆனந்தக் கடலில்
    முத்தெடுக்க முயலும் உலகில்
    முயற்சியின் வெற்றியில்
    பூமியை இழந்த கால்களோடு
    வானத்தை நோக்கிய கைகளோடு
    தலைமுறையின் தன்னம்பிக்கை
    என்றும் எழும் சூாியனாய் நீ!

    *****

    விண்ணில் பாயும் ஏவுகணையாய்த் தாவுகின்ற இந்த மனிதனின் தன்னம்பிக்கையில் நன்னம்பிக்கை வைத்துப் போற்றிப் பாப்புனைந்திருக்கும் பாவலருக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது அடுத்து…

    காற்றில் ஏறி வானில் மிதப்போம்!

    நூல்கட்டிக் காற்றில்
    பறக்கப் பட்டம் விட்டோம்
    கால்கள் தவ்விக் காற்றில் ஏறிட
    இறக்கை தேடினோம்
    பறக்கும் பட்டத்தில் மலை மீது
    நின்று குதித்து யாம்
    பயணம் செய்தோம்
    விமானம் செய்து உலகம்
    சுற்றி வந்தோம்
    சூரிய சக்தியில் ஊர்தி ஓட்டி
    ஒருநாள் யாம்
    உலகளந்தோம்!

    ராக்கெட் வடித்து நிலாவுக்குச்
    சுற்றுலா போவோம்!
    செந்நிறக் கோளைச் சுற்றி
    வந்து யாம்
    சந்திரனில் களைப்பாறி
    புவிக்கு மீள்வோம்!
    நியூட்டன் காட்டும்
    ஈர்ப்பு விசைக்கு அஞ்சோம்
    அடிபணியோம்
    எதிர்த்துப் பறப்போம்
    பிரபஞ்சத் துக்கு
    சுற்றுலா போவோம்!

    ”நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்” என்று வீரமுழக்கம் எழுப்பிய அப்பர் பெருமானைப் போல, அச்சம்விட்டு உச்சம்தொட விழையும் இம்மனிதனும் செந்நிறக்கோள் சுற்றி வெண்ணிலவில் இளைப்பாறவும், ஈர்ப்பு விசைக்கு அஞ்சாது அதனை எதிர்த்துப் பறந்து வையத்தையும் வானத்தையும் அளக்கவும் விழைவதைப் பழகுதமிழில் அழகாய்ப் பாடியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. சி. ஜெயபாரதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181029 Prahlada Narasimha -A4 -Brushpen- lr

    கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
    உச்சரிக்க நாமம் உரத்தப்போ -உச்சி
    குளிர்ந்தவன் உச்சியைக் கோதிய சிங்கம்
    மெலிந்துகர் ஜிக்க மியாவ்….!

    ஏந்தி இலக்குமியை யோகநர சிம்மமாய்
    சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி
    திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய்
    களைத்தல் கதையின் கருத்து….கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (285)

    இந்த வார வல்லமையாளர் விருது!

    இந்த வார வல்லமையாளராக உலகின் மிக நீண்ட பாலத்தைக் கடலில் கட்டிய பொறியாளர் ’மெங் ஃபான்சாவ்’ (Meng Fanchao) என்னும் சீன சிவில் எஞ்சினீயரை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.


    14,000 கோடி ரூபாய் செலவில் சீன நகரம் ஃசுலாய், மக்காவ் தீவு, ஹாங் காங்கையும் இணைக்கும் பாலம் இது. 54 கிலோமீட்டர் நீளம் கொண்டது. கடலின் மீது வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய பொறியியற் சாதனை. இதன் தலைமைப் பொறியாளர் மெங் ஃபான்சாவ் அவர்களை வாழ்த்துகிறோம்.  ரிச்டர் ஸ்கேலில் 8 எண்ணலகு கொண்ட மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கூடத் தாங்கும் வலிமை கொண்டது. பல நூறு மைல் வேகம் கொண்ட சூறாவளிப்புயலோ, சுனாமிப் பேரலைகளோ வந்தாலும் தாங்கும் அளவிலும், 120 ஆண்டுகள் வரை இருக்கும் வரையிலும் இந்த எஞ்சினீரிங் சாதனை உருவமைக்கப்பட்டுள்ளது.

    ‘சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ என்றார் மகாகவி பாரதியார். ஒருநாள் ஈழத்துக்காரர்கள் ராமேசுவரத்தில் சினிமா, கலை நிகழ்ச்சிகள் பார்க்கவும், தமிழ்நாட்டில் இருந்து பேருந்துகளில், கார்களில் மக்கள் இலங்கைக்கு கடலின் மீது எழுப்பப்பட்ட பாலத்தின் வழியாகப் போய் சுற்றுலா, வணிகம் செய்யும் நாள் வரட்டும். சிங்கப்பூர், மலேசியாவுக்கு இடையில் கடல்வழியாக செல்ல வசதிகள் உள்ளதுதானே.

    தமிழ்நாட்டு, இலங்கை (தமிழ், சிங்களம்) அரசியல் தலைவர்கள் முயன்றால் கடல்பாலம் வரும். தொழில்நுட்பம் இருக்கிறது, பாலம் கட்ட தமிழ்நாடு, இலங்கையில் பணமும் நிறைய உள்ளது. அரசியல் முயற்சிகளால் இது சாத்தியம் ஆகலாம். கப்பல் போக்குவரத்தும், கடற் பாலமும் ஆகி தமிழக, இலங்கை உறவுகள் அதிகமாகவேண்டும். இப்பொழுது இலங்கைத் தீவுக்கு தமிழ்நாட்டில் இருந்து பலர் சுற்றுலாச் சென்றுவருகின்றனர். அது நீர்வழி, பாலவழி, விண்வழி என்று மிகவேண்டும்.  இந்தியா, இலங்கை பாலத்திற்கு பூகம்பப் பிரச்சினை இருக்காது. புயல் காற்றும், ஆழிப்பேரலை என்னும் சுனாமியும் எப்போதாவது வரலாம். அதற்கான கட்டுமானப் பொறியியல் எளிது. வலிமையாக பாலம் எழுப்ப இயலும்.

    ”ராமேஸ்வரம் கொட்டகை தியேட்டரில் படம் பார்க்க யாழ்ப்பாணத்தில் இருந்தும் வருவார்கள்” ‘கதம்பம்’ ஆசிரியர் கே.வி.எஸ் மோகன் http://123tamizhamutham.blogspot.com/2009/12/re_7707.html

    டென்மார்க்கையும் சுவீடனையும் இணைக்கும் ஒர்சன் பாலம் (Øresundsbron)  http://vinaiooki.blogspot.com/2010/05/resundsbron.html

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • படக்கவிதைப் போட்டி – 185

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (03.11.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • கு.அழகிரிசாமியின் சிறுகதைகளில் உளவியல் சிக்கல்கள்

     

    -முனைவா் அரங்க. மணிமாறன்.

    ————–

    மனித மனம் வினோதமானது.பல்வேறு நேரங்களில் வெவ்வேறு விதமாகச் செயல்படக்கூடியது.ஒருவன் மற்றவா் மீது அன்பு, வெறுப்பு, பொறாமை, அதீதப்பற்று ஆகியவை கொள்வதற்கு அவனது மனவியலே அடிப்படையாக அமைகிறது.

    மனித மனத்தின் பரிமாணங்களை ஆராயும் உளவியல் இன்றைய ஆராய்ச்சிக் கூறுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது.

    உளவியலாளா்கள் மனித மனம் ஒரு பனிக்குன்றுப் போன்றது.அதன் ஒரு பகுதிதான் வெளிப்படையாகத் தோன்றி  வெளிமனமாக இருக்கிறதென்றும், மற்றொரு பகுதி மறைந்து நின்று மறைமனமாக இருக்கிறதென்றும் அவா்கள் விளக்கம் கூறுகிறார்கள் என்கிறார் பெ.துாரன்.1

    உளவியல் எனும் சொல் கிரேக்க மொழி சொற்களான ஸைக்கி என்ற உயிரையும் லோகஸ் எனும் அறிவியலையும் குறிக்கும் சொற்களின் கூட்டிணைவாகும்.ஆன்மா, மனம் பற்றி ஆராயும் இது நடத்தையியல்  தற்காலத்தில் வழங்கப்படுகிறது.

    உளவியல் என்பதனைத் தற்காலத்தில் நடத்தை மற்றும் அனுபவத்தை அறிவியல் முறையில் ஆராயும் ஒரு பிரிவாகக் கொள்கின்றனா்.உளவியல் மனித மூளை அதன் சிந்தனை, புறநிலை ஆகியவற்றோடு தொடர்படையதாக உள்ளது.

    மனிதனின் புறச்செயல்களை உற்றுநோக்கி முறையாக ஆராய்ந்து அதன்மூலம் அவை எங்ஙனம் அகத்தே நிகழும் சிந்தனை ஓட்டங்களுடன் தொடா்பு கொண்டுள்ளன என்றும் புறநிலைகளால் ஏற்படும்  நிகழ்வுகளால் எவ்வாறு பாதிப்படைகின்றன என்பதையும் விளக்குவதே உளவியலாகும் என்கிறார் கி.நாகராஜன். 2

    இத்தகைய உளவியல் சார்ந்த சிக்கல்களை கு.அழகிரிசாமியின் சிறுகதைகளின் வழி ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    இரவு நேரத்தின் குணம்:

    மனித மனம் தனிமையில் இருளில் எந்த தீமைகளையும் செய்ய துணிகிறது. அதற்குக் காரணம் இரவு இருள் நிறைந்தது.  கொலை, கொள்ளை, களவு, விபச்சாரம் போன்ற தீமைகள் இரவிலேயே தடையின்றி நடக்கின்றன.

    இரவு சிறுகதையில் இளம்வயது நண்பா்கள் கூடிபேசிக்கொள்கின்றனா். இரவுக்கென்று தனிப்பட்ட குணம் உள்ளதாகவும் பகலில் ஒரு பொருள் பற்றி தோன்றும் எண்ணத்திற்கும் இரவில் அதே பொருள் பற்றி தோன்றும் எண்ணத்திற்கும் வேறுபாடு உள்ளதாகவும் கூறுகின்றனர்.

    இரவு வந்ததும் தனிமையின் துணிவோடு மனம் கெட்ட எண்ணங்களை எண்ணுகிறது. உலகம் இருண்டதும் மனிதன் துணிந்துவிடுகிறான் . எந்த கெட்ட காரியத்திற்கும் இரவு ஆதரவாகத்தான் இருக்கிறது. 3 என்று இரவின் உளவியல் ஆற்றலை வெளிப்படுத்துகிறார் கு.அழகிரிசாமி.

    ஆண்பெண் நேசத்தில் வேறுபாடு:

    திருமண வயதில் ஓா் ஆண் தான் பார்க்கும் எந்தப் பெண்ணையும் அவள் தனக்கு மனைவியாக வருவாளா என எண்ணிப்பார்க்க முடியும். ஆனால் ஒரு பெண் அப்படி நினைக்க முடியாது. சமுதாயம், கட்டுப்பாடு, கற்பு, ஆகிய காரணிகள் அதற்குக் காரணம்.

    ஏமாற்றம் சிறுகதையில் நாயகன் கிருஷ்ணமூர்த்தி  திருமணத்திற்குப் பின் பழைய நினைவுகளை அசைபோடும்போது தான் அவளை  பால்ய வயதிலிருந்தே விரும்பி வருவதாகக் கூறுகிறான். ஆனால் அவன் மனைவி லஷ்மியோ  மூன்றாம் வருடம் சந்தித்தபோதுதான் விரும்பியதாகக் கூறுகிறாள். இது அவனுக்கு  பெருத்த அவமானமாகிவிடுகிறது.

    “வீட்டுக்கு அப்பாவையோ அண்ணணையோ தேடிக்கொண்டு வருபவர்களுக்கு நான் பதில் சொல்லநேரிடும்போது வரக்கூடியவர்களெல்லாம்  உங்களைப்போல மனப்பரவசத்துடன்தான் பேசுவார்கள்”. 4

    திருமணத்திற்கு முன் எல்லா வாலிபர்களுக்கும் ஏற்படும் பரவசமே கிருஷ்ணமூர்த்திக்கும் ஏற்படுகிறது.ஆனால் பெண்ணுக்கு ஆணின் மீது நம்பிக்கை உருவான பிறகுதான் பெற்றோரின் சம்மதத்திற்கு பிறகுதான் நம்பிக்கையும் காதலும் வரும். அதுவன்றி எல்லா ஆடவரையும் கண்டவுடன் தன் கணவனாக நினைத்து பரவசப்பட  முடியாது என்ற உளவியல் கருத்து இக்கதையில் வெளிப்படுகிறது.

    குழந்தை உளவியல்:

    பெரியவர்களைவிட குழந்தைகள் வேறுபாடு கருதாதவர்கள் மாசுமறுவற்றவர்கள். தன்மீது அன்புகொண்டவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்பவர்கள். கல்வி, பதவி, வயது, புகழ் ஆகியவற்றாலும் உயர்ந்தவர்களானாலும் குழந்தைகளுக்கு அது பெரிதில்லை.

    அன்பளிப்பு கதையில் பல குழந்தைகளோடு  நாயகன் நட்புக் கொள்கிறான். அக்குழந்தைகளுக்கு புத்தகங்களைப் பரிசளிக்கிறான். சாரங்கன் என்ற சிறுவன் மட்டும் வால்ட் விட்மனின் கவிதைத் தொகுப்பை கேட்கிறான். அவனால் இச்சிறு வயதில் புரிந்துகொள்ளமுடியாது எனக்கருதி நாயகன் தரமறுக்கிறான்.  அதனால் சிறுவன் கோபித்துக்கொள்கிறான். தன்தோழி ஒருத்திக்கு உடல்நலமிலாதபோது நாயகன் சென்று பார்த்துவந்ததைப்போல தன் வீட்டிற்கும் வரவேண்டும் என்கிறான்.

    நாயகன் தன் நட்பு குழந்தைகளுடன் மட்டுமே. அவர்களின் பெற்றோர்கள் என்ன நினைப்பார்களோ என எண்ணி மறுக்கிறான்.

    “எங்கள் வீட்டுக்கும் வாருங்கள் என்று கையைப்பிடித்து இழுத்தான்.

    உங்கள் வீட்டிற்கு எதற்கு?

    பிருந்தா வீட்டிற்கு மட்டும்?

    பிருந்தாவிற்கு ஜீரம் அதனால் போய்ப்பார்த்து வந்தேன்.

    ஊஹீம்.. எங்கள் வீட்டுக்கும் வரவேண்டும். ஆமாம்.5

    பணக்கார குழந்தையின் வீட்டிற்குச்சென்றவன் ஏன் தன் வீட்டிற்கு வரவில்லை? அனைவருக்கும் புத்தகம் தந்தவன் தனக்கு ஏன் தரவில்லை? என்பது சாரங்கன் வாதம்.

    நட்பு குழந்தைகளோடு மட்டுமே.  அவர்களின் குடும்பத்தாரோடு இல்லை என்பது நாயகனின் பார்வை.

    குழந்தைகள் அன்பு வைத்துவிட்டால் பேதம் பார்க்கமாட்டார்கள் என்ற உளவியல் சிக்கல் இக்கதையில் விடுவிக்கப்பட்டுள்ளது

    மனம் எனும் புதிர்:

    மனித மனம் எப்போதும் தன்னுள் ஏதோ ஒரு பாதிப்பையோ நிகழ்வையோ மனதில் வைத்துக்கொண்டு சமயம் வாய்க்கும்போதெல்லாம் அதன் பாதிப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.

    அழகம்மாள் சிறுகதையில் வாழ்ந்து கெட்டவரான கிருஷ்ணகோனாருக்கு உறவுமுறைப்பெண்ணான அழகம்மாளை திருமணம் செய்து வைக்கின்றனர். மகன் வளர்ந்து மதுரையில் கல்லூரியில்  படிக்கிறான். விடுமுறைக்காக அவன் வரும்போதெல்லாம் தாயும் தந்தையும் ஒருவரோடு ஒருவா் சண்டையிடுகின்றனர். மற்ற நேரங்களில் இயல்பாக இருப்பவர்கள் தான் ஊருக்கு வரும்போதுமட்டும் ஏன் சண்டையிடுகின்றனர் என வேதனைக் கொள்கிறான்.

    கறிச்சோறு போடும் போது அவனிடம்  கொஞ்சம் கறிவிட்டுச் சாப்பிடேன் எனக்கூற இதைக்கேட்ட அழகம்மாள் நான் செய்ததும் செய்யாததும் அந்த அவிஞ்ச கண்ணுக்குத் தெரியப் போகிறதா? 6 (ப.466) என்றுச் சொல்லி மனதை நோகடிக்கிறாள்.

    தற்போது தன் மகனின்  மோகன வடிவையும் அவனது வளர்ச்சியையும் ஊரார் அவனை மதிப்பதையும் கண்டு தன்வாழ்வு இந்த ஊதாரியிடம் பறிபோனதை எண்ணி வேதனைக் கொள்கிறாள். அதன்வெளிப்பாடே எரிந்து விழுவதும் கண்டையிடுவதும் என்று உளவியல் சிக்கலை விடுவிக்கிறார்.

    கௌரவ சண்டை:

    நல்லவள் சிறுகதையில் வித்வான் வீட்டில் குடியிருக்கிறாள் ஜெயா. வித்வானின் மனைவி ராஜேசுவரி தன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஜெயாவிடம் சிறுசிறு கடன் வாங்குகிறாள். சில நேரங்களில் அவர்களோடு  காரணமின்றிச் சண்டையிடுகிறாள். கோபமாக பேசுவதும் தன் மகளை அவர்கள் வீட்டிற்கு போகாதே என்று திட்டி அடிப்பதும் தொடர்கிறது.

    “ராஜேசுவரி அப்பறம் எனக்கு ஆராய்ச்சிக்குரிய விஷயமாவே மாறிவிட்டாள்.கடன்கொடுத்த தினத்தில் சண்டைக்கு வருவாள். கையில் பணம் இருக்கும்போது அன்பில் உயிரையே கொடுக்கச் சித்தமாக இருப்பாள்.இவளை நல்லவள் என்று எப்படி சொல்லாமல் இருப்பது?”7

    தன்வீட்டில் குடியிருப்பவளிடம் தான் கடன்வாங்குவதால் தன்னை அவள் ஏளனமாக நினைத்துவிடக்கூடாது என மான உணர்ச்சியினால் கோபமும் சண்டையும் போட்டுத் தன் கௌரவத்தை நிலைநாட்ட நினைக்கும் உளவியல் சிந்தனை இக்கதையில் வெளிப்படுகிறது.

    அழகின் மீது நாட்டம்:

    அழகற்ற தேவகியை யாரும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில் ஆறாம் வகுப்பு பெயிலாகி ஒரு மளிகைக் கடையில் கணக்குப் பிள்ளை வேலைப்பார்க்கும் பாண்டுரங்கன் திருமணம் செய்துகொண்டு  பெண் பிள்ளைப் பெற்று வாழ்கிறான். தேவகி வந்த நேரம் குடும்பம் தழைக்கிறது. அவள் அழகில்லாதவள் என்பதை மறந்து மனைவிப் பித்தனாகி குடும்பம் நடத்துகிறான். வீட்டின் மேல்மாடியில் சில இளைஞர்களை குடிவைக்கின்றனர்.

    தேவகி அலங்கார பிரியையாகி முப்பொழுதும் தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டே இருக்கிறாள். தாம் அழகற்றவள், வயதானவள் என்பதை மறந்து இளைஞர்களிடம் வளைய வந்து நட்பையும் பாராட்டையும் பெற விழைகிறாள்.

    தன்னை அழகி என்று அவர் தொடர்ந்து கருதுகிறாரா என்பதை தெரிந்துகொள்வதற்காக அவள் சிறுநடை பயில்வாள்; கொஞ்சுவாள்; கோபிப்பாள்; கூப்பிட்டால் வரமாட்டாள். 8

    இறுதியில் தன்மகளோடு வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர்களில் ஒருவன்  பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு பதறிப்போய் அவனை வசைபாடுகிறாள்.

    இதனை அறிந்த பாண்டுரங்கன் தன்  பிள்ளைகளை கவனிக்காமல் அலங்கார மயக்கத்திலேயே காலம் கழித்து இளசுகளிடம்  சிரித்துப்பேசி குதித்து கும்மாளமிட்டதைக் கண்டித்தும் வசைமாரி பொழிகிறான்.

    இதனால் அவள்,

    “அலங்காரத்தையும் கைவிட்டாள். உலகத்தையே வெறுத்தவளாக வீட்டிற்கும் வாசலுக்கும் நடமாடிக் கொண்டிருந்தாள்” 9

    இவ்வாறு அழகின்மை எனும் தாழ்வுணர்ச்சியினால் அலங்காரப் பைத்தியமாகி தவிக்கும் பெண்ணின் உளவியல் நிலையை வெளிப்படுத்துகிறார்.

     முடிவுரை:

    மனிதர்களின் ஒவ்வொரு நடத்தையிலும் உளவியல் உட்கூறு வெளிப்படுகிறது. கணவன்- மனைவியிடத்தும், மாமியார் மருமகளிடத்தும், பணக்காரன் ஏழைகளிடத்தும் உளவியல் காரணமாகவே மோதல்களும் சிக்கல்களும் உருவாகின்றன. ஒருவர் மனதை ஒருவர் புரிந்துகொண்டாலே சிக்கல்களுக்கான தீர்வுகள் கிடைக்கும். உளவியல் சிக்கல்கள் அற்ற சமுதாயமே பிரச்சனைகள் நீங்கி மேம்பட்ட சமுதாயமாக மலரும் என்பது கு.அழகிரிசாமியின் சிறுகதைகளின் வழி தெளியமுடிகிறது.

    ————————–

    முதன்மை ஆதாரம்:

    கு.அழகிரிசாமியின் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)

    பதிப்பாசிரியர் பழ.அதியமான்.

    காலச்சுவடு பதிப்பகம்

    669 கே.பி.சாலை நாகர்கோவில்-1

    முதல் பதிப்பு ஏப்ரல் 2011.

    ———————————

    அடிக்குறிப்புகள்:

    1. பெ.தூரன் -மனமும் அதன் விளக்கமும்-ப.165
    2. கி.நாகராஜன்-கற்றல் மனித வளர்ச்சி தொடர்பான உளவியல் ப.1.-ஸ்ரீராம் பதிப்பகம் சென்னை-2009.
    3. இரவு-சிறுகதை பக்.73-74. கு.அழகிரிசாமி சிறுகதைகள் காலச்சுவடு பதிப்பகம் நாகர்கோவில். முதற்பதிப்பு ஏப்ரல் 2011.
    4. மேற்குறித்த நூல் ஏமாற்றம் சிறுகதை ப.186.
    5. மேற்குறித்த நூல் அன்பளிப்பு சிறுகதை ப.375
    6. மேற்குறித்த நூல் அழகம்மாள் சிறுகதை ப.466
    7. மேற்குறித்த நூல் நல்லவள் சிறுகதை ப.703
    8. மேற்குறித்த நூல் முகக்களை சிறுகதை ப.1186
    9. மேற்குறித்த நூல் முகக்களை சிறுகதை ப.1194

    —————————-

    கட்டுரையாளர்:

    முதுகலை தமிழாசிரியர்

    அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி

    செங்கம்-606701.

    திருவண்ணாமலை மாவட்டம்.

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share