Tag: நாங்குநேரி வாசஸ்ரீ

  • என் மனத்தோழி

    -நாங்குநேரி வாசஸ்ரீ 

    மருத்துவரின் குறுக்குக் கேள்விகள் முடிந்தவுடன் அவருக்கு கைபேசியில் முக்கிய அழைப்பு வந்ததால் எங்களை உட்காரச் சொல்லிவிட்டு எழுந்து சென்றிருக்கிறார்.

    இப்பொழுது யாராவது என்னிடம் பேச வேண்டும் எனத் தோன்றியது.

    “மதன், மருத்துவர் என்ன கேட்டார்னு கேளுங்களேன். நீங்க வெளில தானே இருந்தீங்க.”

    “என்ன கேக்கணும். சொல்ல வேண்டியதை நீயே சொல்லு.” இது மதன்.

    எரிச்சலாக வந்தது எனக்கு.

    “இப்போ சம்பந்தமில்லாமல் மதன் என்னய இங்க எதுக்கு கூட்டி வந்திருக்கார். அவருக்கு ஏதும் பிரச்சினையா?”

    அமைதியாக ஜானவியுடன் பேச ஆரம்பித்தேன். அவள் எப்போதும் மறுக்காமல் கலகலவென்று பேசுவாள். எல்லா விஷயங்களையும் கேட்டு வந்து எனக்காகச் சொல்லுவாள். பொறுமையாக மருத்துவரிடம் நடந்த உரையாடலைக் கேட்டாள். இப்போதான் எனக்கு திருப்தி.

    அவளுடன் இருப்பது தனி சந்தோசம் தான்.

    ஜானவி இருக்கும் வரை எனக்கு யாரும் தேவையில்லை.  அவள் தினமும் டி.வி.யில் செய்திகள் பார்ப்பதால் பெரும்பாலும் அவைகளைப் பற்றி விவாதிப்போம். பின் சிறிது நேரம் சமயற்கலை.

    சாயங்காலம் வாக்கிங் போகும்போது உடற்பயிற்சி பற்றி. பூங்காவில் அமர்ந்திருப்பவர்கள் பற்றி பேசுவோம். மற்றவர்களைப் பற்றி அதிகம் வம்பு பேச அவளுக்குப் பிடிக்காது. என்னைப் போலவே அவளுக்கும் பிடித்த கலர் மஞ்சள் தான். .

    நான் படித்த அத்தனை கதைப் புத்தகங்களையும் அவளும் படித்திருப்பதால் கதைகளை திரும்பவும் நினைவு கூர்வோம்.

    தமிழ் பேச ஆளில்லாத பஞ்சாபில் எனக்கு ஜானவி மட்டும் தான் உற்ற தோழி.

    “நீ பேசாவிட்டால் என்ன. எனக்கு ஜானவி இருக்கிறாள்!” என மதனிடம் சொன்னதற்குப் பின் தான் அவசரமாக விடுப்பு எடுத்தார் சென்னை வர. ஆனால் அவளைப் பற்றி அவர் ஒருகேள்வி கூட கேட்கவில்லை.

    ஜானவியும் எங்களுடன் சென்னை வந்துள்ளாள்.  நேற்று தொலைக்காட்சியில் பார்த்த சினிமா கதையை சொல்லிக் கொண்டிருக்கிறாள். முன்பெல்லாம் ரேடியோவில் ஒலிச்சித்திரம் என மூன்று மணிநேர சினிமா கதையச் சுருக்கி ஒரு மணி நேரம் ஒலிபரப்புவார்களே. அதுபோல அவளும் கதையைச் சுருக்கி சொல்கிறாள். கண்ணை மூடிக்கொண்டு நான் கேட்டுக் கொண்டிருகிறேன்.

    ஏனோ இந்த மதனுக்கு மட்டும் இருப்பு கொள்ளவில்லை. குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறார் மருத்துவரின் வருகைக்காக.

    மருத்துவர் வந்தவுடன் அவரை விசாரிப்பார் போல. எதற்காக இத்தனையும். புரியவில்லை.  கேட்டால் மட்டும் சொல்லிவிடவா போகிறார்.

    இங்கு வந்ததிலிருந்து திரும்பத் திரும்ப தான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

    “உனக்கு என்னைப் பற்றி குறை சொல்ல வேண்டும் எனத் தோன்றினால் தாரளமாக மருத்துவரிடம் சொல். நான் வேணும்னாலும் திரும்ப வெளில உக்காந்துக்கறேன்.”

    “மதனுக்கு என்ன ஆச்சு. நான் ஏன் குறை சொல்லணும்.  கொஞ்ச நேரம் முன்னால தானே மனநல மருத்துவர் முன்னால உக்காந்தேன்.  எங்கிட்ட  கேட்ட பல கேள்விகளையும் அதுக்கு நான் சொன்ன பதிலையும் இப்பதான் ஜானவி கிட்ட சொன்னேன்.”

    திரும்பவும் மனதுள் அசை போட்டேன் நேரம் போவதற்காக.

    “உங்கள் பெயர் …”

    “சரண்யா”

    “உங்களுக்கு பிடித்த விஷயங்களைப் பட்டியலிட்டுச் சொல்லுங்கள்.”

    “பேசப் பிடிக்கும். முக்கியமா வம்பு கேட்கப் பிடிக்கும். அறிவுரை சொல்லப் பிடிக்கும். கூட்டமா உக்காந்து நேரம் போக்குவது பிடிக்கும். படம் பார்க்கப் பிடிக்கும்……”

    “எதெல்லாம் உங்களுக்குப் பிடிக்காது. எது எரிச்சலைக் கொடுக்கும்.”

    “பேசாம இருப்பது. தனியா இருப்பது. அவ்வளவு தான்.”

    இன்னும் அடுக்கடுக்கான கேள்விகள்.

    சிறிது நேரத்துக்குப்பின் மருத்துவர் கூறினார்.

    “சரண்யா உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சாதாரணமா எல்லாப் பெண்களுக்கும் உள்ள குணம் தான் உங்ககிட்டயும்  இருக்கு. பயப்படத்தேவையில்லை.”

    “மனச அமைதியாகவும் சந்தோஷமாகவும் வச்சுக்கோங்க. அவ்வளவு தான்.”

    “மதன் உங்கள் மனைவி தேவையில்லாமல் மனச குழப்பிக்கறாங்க. அவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. டேக் கேர்.”

    “இல்லை டாக்டர் உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்.”

    “நான் எங்க பயப்பட்டேன். எப்ப சொன்னேன் எனக்கு பிரச்சினைனு. என்ன இது. இங்கேந்து வெளில போனவுடனே மதன ஒரு பிடி பிடிக்கணும். அவர் என்ன லூசா.”

    யோசித்துக் கொண்டிருக்கும்போதே மருத்துவர் திரும்பி வந்தார்.

    அவர் மதனிடம்

    “நீங்க ஏதோ சொல்லணும்னு சொன்னீங்களே…” .என ஆரம்பித்தார்.

    “டாக்டர் நீங்க அவளோட தோழிகள் பத்தி கேட்டீங்களா.” இது மதன்

    மருத்துவர் சந்திராவுக்கு ஒரே ஆச்சரியம். இதெல்லாம் ஒரு விஷயமா என.

    “ஓ… இது தான் பிரச்சினையா மதன்?” எனக் கேட்டுவிட்டு டாக்டரை நோக்கி பேசத் தொடங்கினேன்.

    “எனக்கு இப்போ ஒரே ஒரு தோழி தான். அவ பேரு ஜானவி. அவள நீங்கல்லாம் பாக்க முடியாது. எனக்கு வேணும் னு நெனைக்கும்போது என் கூட மட்டும் பேசுவா.”

    மருத்துவர் இருக்கையை விட்டு எழுந்தே விட்டார். அப்படின்னா ஜானவி ஒரு……..

    “என் கற்பனைத் தோழி அவ்வளவு தான். எனக்கு பேச ஆளில்லாததால் நானே உருவாக்கி வளர்த்துவிட்ட கற்பனைப் பாத்திரம்.”

    “மதன் அதிகம் பேச மாட்டார். வேலைப் பளு வேறு. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பேச பாஷை தெரியாது. அதனால அப்டி செஞ்சேன்.”

    “இதுக்குத்தான் இவ்ளோ பயமா மதன். எங்கிட்ட கேட்டிருந்தா நானே சொல்லியிருப்பேனே. கவலைப்படாதீங்க.  எனக்கு ஒண்ணும் ஆகாது.”

    எழுந்து வெளியேறினேன் என் மனத் தோழி ஜானவியுடன்.

    புரிந்தும் புரியாமல் பின் தொடர்ந்தார் மதன்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 10

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 10 – இனியவை கூறல்

    குறள் 91:

    இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
    செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

    ஒருத்தங்க வாய்லேந்து வருத சொல்லு நேசத்தோடயும் வஞ்சகமில்லாததாவும், உண்மையாவும் இருந்துச்சுன்னா அதத் தான் இன்சொல் னு சொல்லுதோம்.

    குறள் 92:

    அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
    இன்சொலன் ஆகப் பெறின்

    சிரிச்ச மொகத்தோட இனிய சொல் பேசுதது மனசு குளிந்து மத்தவங்களுக்கு  ஒரு பொருள கொடுக்குதத விட ஒசந்தது.

    குறள் 93:

    முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம்
    இன்சொ லினதே அறம்

    சிரிச்ச மொகத்தோட பாத்து மனசார இனிமையா பேசுததே அறம் னு சொல்லுதோம்.

    குறள் 94:

    துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
    இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

    இனிய சொல்ல பேசி நயமா பழகுதவங்களுக்கு துன்பம் ங்குத வறும அண்டாது.

    குறள் 95:

    பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
    அணியல்ல மற்றுப் பிற

    தன்னையவிட குறச்சலான தகுதி உள்ளவங்ககிட்டயும் அடக்க ஒடுக்கமா இனிமையா பேசுதது தான் ஒருத்தனுக்கு நக நட்டு மாதிரி. மத்தது இல்ல.

    குறள் 96:

    அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின்

    பொறத்தியாருக்கு நல்லது செய்யுத இனிய சொல்ல மனசார சொன்னாம்னா அவனுக்குள்ளாரயும் நாட்டிலயும் தர்மம் வளந்து நிக்கும்.. பாவம் கொறைஞ்சு போவும்.

    குறள் 97:

    நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
    பண்பின் தலைப்பிரியாச் சொல்

    நல்ல பயனத் தருத நல்ல பண்புலேந்து நீங்காத சொல்ல சொல்லுதவனுக்கு அது மகிழ்ச்சியகொடுத்து நல்லது செய்யும்.

    குறள் 98:

    சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
    இம்மையும் இன்பம் தரும்

    பொறத்தியாருக்கு துன்பம் கொடுக்குததுங்குத கெட்ட கொணம் இல்லாத நல்ல இனிய சொல்லு அவன் வாழுத காலத்துலயும் , செத்த பெறகும் அவனுக்கு புகழ கொடுக்கும்.

    குறள் 99:

    இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
    வன்சொல் வழங்கு வது

    இனிய சொல்லு மகிழ்ச்சிய கொடுக்கும்னு தெரிஞ்சிக்கிட்ட ஒருத்தன் மத்தவங்க மனசு நோவ கடுமையா பேசுதது எத எதிர்பாத்து?

    குறள் 100:

    இனிய உளவாக இன்னாத கூறல்
    கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று

    இனியமையா பேசுததுக்கு சொல் இருக்கும் போது  அத விட்டுபோட்டு கடுமையா பேசுதது பழத்த ஒதுக்கி வச்சி காய பறிச்சு திங்குததுக்கு சமானம்.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 9

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 9 – விருந்தோம்பல்

    குறள் 81:

    இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு

    குடும்ப வாழ்க்கைல பொருளச் சேத்து காப்பாத்தி  குடித்தனம் நடத்துதது எல்லாம் வந்த விருந்தாளிய நல்ல படியா கவனிச்சி ஒதவியா இருக்கதுக்காகத்தான்.

    குறள் 82:

    விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

    விருந்தாளி வீட்டுக்கு வெளிய இருக்கும்போது உள்ள ஒக்காந்து தான் மட்டும் தனியா சாப்பிடுதது சாவாம இருக்கதுக்காக சாப்பிடுத அமிழ்தம் னாலும் அது நல்ல பழக்கமில்ல.

    குறள் 83:

    வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
    பருவந்து பாழ்படுதல் இன்று

    தெனைக்கும் வர விருந்தாளிய நல்ல கவனிச்சு பேணுததனால ஒருத்தன் வறுமைப்பட்டு வாழ்க்கைல அழிஞ்சி போயிடமாட்டான்.

    குறள் 84:

    அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந் தோம்புவான் இல்

    வர விருந்தாளிய சிரிச்ச மொகத்தோட வரவேத்து பேணுதவனோட வீட்ல சொத்து சொகத்த கொடுக்கும் மகாலச்சுமி வந்து குடியிருப்பா.

    குறள் 85:

    வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
    மிச்சில் மிசைவான் புலம்

    விருந்தாளிக்கு மொதல்ல சாப்பாடுபோட்டு பொறவு தான் சாப்பிடுதவனோட நெலத்துல விதைய விதைக்கவும் வேணுமா?

    குறள் 86:

    செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்விருந்து வானத் தவர்க்கு

    வர விருந்தாளிய நல்ல கவனிச்சி அவுங்க போன பெறகு அடுத்த விருந்தாளி எப்பம் வருவாரு னு காத்துகெடக்குத மனுசன வானத்துல இருக்க தேவர்ங்க எல்லாம் தங்களோட விருந்தாளியா நெனச்சி கவனிப்பாங்க.

    குறள் 87:

    இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
    துணைத்துணை வேள்விப் பயன்

    விருந்தாளியப் பேணுததும் யாகம் மாதிரிதான். அதனால கெடைக்க நன்மை இவ்வளவுனு அளந்து சொல்ல ஏலாது. அது வர விருந்தாளியோட தகுதிய பொறுத்து மாறிக்கிடும்.

    குறள் 88:

    பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
    வேள்வி தலைப்படா தார்

    விருந்தாளிய கவனிக்குத யாகத்த செய்யாதவங்க தங்ககிட்ட இருக்க செல்வத்த சிரமப்பட்டு காத்து அத இழக்குத நிலை வருதபோது எந்த தொணையும் இல்லாம ஆயிட்டோமே னு வெசனப்படுவாங்க.

    குறள் 89:

    உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
    மடமை மடவார்கண் உண்டு

    விருந்தாளிய உபசரிச்சி பேணாதவங்க முட்டாளுங்க. அவங்க கிட்ட எவ்ளோ பணம் இருந்தாலும் தரித்திரம் பிடிச்சவங்களாவே நெனைக்கப் படுவாங்க.

    குறள் 90:

    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து

    மோந்து பாத்த ஒடனே வாடுத பூ அனிச்சம். அதப் போல வாங்க னு கூப்பிடுத சமயம்  லேசா மூஞ்சிய காட்டினாலே விருந்தாளிங்க வாடிப் போயிருவாங்க.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 8

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 8 – அன்புடைமை

     

    குறள் 71:

    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
    புண்கணீர் பூசல் தரும்

    நேசத்த தாள் போட்டு அடைச்சு வைக்க முடியுமா.  தனக்கு வேண்டப்பட்டவங்களுக்கு துன்பம் வரும்போது அவுங்க கண்ணுலேந்து தானா வடியுத கண்ணீர வச்சு நேசஉள்ளத்த தெரிஞ்சுக்கிடலாம்.

    குறள் 72:

    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு

    நேசம் இல்லாதவங்க எல்லாப் பொருளும் தனக்கு தான் சொந்தம்னு நெனைப்பாங்க. நேசம் உள்ளவங்களோ பொருள் மட்டுமில்லாம தங்களோட ஒடம்பும் மத்தவங்களுக்குதான் னு நெனைப்பாங்க.

    குறள் 73:

    அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
    என்போ டியைந்த தொடர்பு

    உயிரும் ஒடலும் போல நேசமும் செயலும் சேந்து இருக்குதது தான் ஒசந்த பொருத்தம்.

    குறள் 74:

    அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
    நண்பென்னும் நாடாச் சிறப்பு

    விரும்பி வாழுத தன்மைய கொடுக்குதது நேசம். அது பிறத்தியார் கிட்ட சேக்காளியா இருக்கவும் ஒதவும்.

    குறள் 75:

    அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
    இன்புற்றார் எய்தும் சிறப்பு

    ஒலகத்துல சந்தோசமா வாழுத ஒசத்தியான வாழ்க்கைதான்  நேசத்தோட வாழுத குடும்ப வாழ்க்கையினால வெளையுத லாபம்

    குறள் 76:

    அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
    மறத்திற்கும் அஃதே துணை

    நல்லதுசெய்யுததுக்கு மட்டுந் தான் நேசம் தொணையா நிக்கும் னு புரிஞ்சுகிடாதவங்க சொல்லுவாங்க. வீரத்துக்கும் அது தொணையா நிக்கும்.

    குறள் 77:

    என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்

    எலும்பு இல்லாத ஒடம்பு உள்ள புழுவ வெயில் எப்டி வாட்டி வதைக்குதோ அது மாதிரி நேசம் இல்லாத உயிர அறக்கடவுள் வாட்டி வதைப்பாரு.

     குறள் 78:

    அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
    வற்றல் மரந்தளிர்த் தற்று

    மனசுல நேசமே இல்லாம வாழுத குடும்ப வாழ்க்க பாலைவனத்துல இருக்க பட்டு போன மரம் மறுபடி துளித்து இலை விடுததுக்கு சமம்,.

    குறள் 79:

    புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
    அகத்துறுப் பன்பி லவர்க்கு

    ஒடம்புக்குள்ள இருக்க உறுப்பான நேசம் இல்லாதவங்களுக்கு வெளிய இருக்க அழகான உறுப்புக்களால என்ன பிரயோசனம்.

    குறள் 80:

    அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
    என்புதோல் போர்த்த உடம்பு

    நேசமான உள்ளத்தோட இயங்குதது தான் உயிரோட இருக்க இந்த ஒடம்பு.  நேசமில்லாதவங்களோட ஒடம்பு வெறும் எலும்புக்கு மேல தோல போத்தி வச்ச வெறும் ஒடம்பு தான்.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 7

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 7 – மக்கட் பேறு

    குறள் 61:

    பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
    மக்கட்பே றல்ல பிற

    பெத்து வளக்குத புத்திசாலி பிள்ளைங்களத் தவித்து மத்தபடி ஒருத்தன் பெறுத வேற எந்த நன்மையையும் நான் நல்லதா ஒத்துக்கிட மாட்டேன்.

    குறள் 62:

    எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
    பண்புடை மக்கட் பெறின்

    குறை இல்லாத நல்ல குணத்தோட உள்ள பிள்ளைய பெத்தவனுக்கு அவனோட ஏழேழு தலைமுறைங்குத காலத்துக்கு தீமை ங்குத தொயரம் அண்டாது.

    குறள் 63:

    தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
    தந்தம் வினையான் வரும்

    தங்கிட்ட இருக்குத செல்வம் னு சொல்லுதது பெத்த பிள்ளைங்க மட்டும் தான். அவங்க செய்யுத நல்லதுக்கு ஏத்தாப்போல அவங்க கிட்ட செல்வம் (பொருள்) வந்து சேந்துக்கிடும்.

    குறள் 64:

    அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
    சிறுகை அளாவிய கூழ்

    தாம்பெத்த பச்ச பிள்ளைங்க பிஞ்சு வெரலால அளையுத சாப்பாட்டத் தான் பெத்தவங்க அமிழ்தம் னு சொல்லுவாங்க.

    குறள் 65:

    மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
    சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

    பச்ச பிள்ளைங்கள தொட்டு கொஞ்சுதது ஒடம்புக்கு இன்பம். அவங்களோட மழலப் பேச்சு கேக்குதது காதுக்கு இன்பம்.

    குறள் 66:

    குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்

    தாம் பெத்த பச்ச பிள்ளைங்களோட மழல பேச்சு கேக்காதவங்க புல்லாங்குழலோட இசையையும் , யாழோட இசையையும் நல்லா இருக்குதுன்னு நெனைச்சிக்கிடுவாங்க. .

    குறள் 67:

    தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்

    தான் பெத்த பிள்ளைக்கு உதவி செய்யணும்னு ஒரு அப்பன் நெனைச்சாம்னா அவன நல்லா படிக்க வச்சி படிப்பாளிங்க மத்தியில நல்ல பெயர் வாங்க வைக்கிதது தான்.

    குறள் 68:

    தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது

    தன்னைய விட தாம்பெத்த பிள்ளைங்க புத்திசாலியா இருக்குதது தனக்கு மட்டிமில்லாம ஒலகத்துல இருக்க மத்த எல்லாருக்கும் நல்லத கொடுக்கும். .

    குறள் 69:

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்

    உம் மவன் நல்லவன் னு ஊர் உலகம் சொல்லும்போது அவன பெத்த காலத்துல கொண்ட மகிழ்ச்சிய விட அதிகமா மகிழ்ச்சி அடையுவா அவன் ஆத்தா.

    குறள் 70:

    மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்லெனும் சொல்

    இவன பெறுததுக்கு இவனோட அய்யன் என்ன நோன்பு நோத்தானோ என பிறத்தியார் சொல்லுத புகழ்ச்சி தான் அந்த மவன் தன்னோட அய்யனுக்கு செய்யுத கைம்மாறு.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 6

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம்

    குறள் 51:

    மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

    குடும்பத்துக்கு ஏத்த நல்ல குணவதியா புருசன் சம்பாத்தியத்துக்கு ஏத்தமாறி குடித்தனம் நடத்துதவ தான் நல்ல பொஞ்சாதி. (மனைவி).

    குறள் 52:

    மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
    எனைமாட்சித் தாயினும் இல்

    குடும்பத்துல நல்ல குணவதியா பொஞ்சாதி இல்லன்னா வாழ்க்கை எவ்வளவு சிறப்பா இருந்துச்சுன்னாலும் பிரயோசனம் இல்ல.

    குறள் 53:

    இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
    இல்லவள் மாணாக் கடை

    நல்ல குணவதியான பொஞ்சாதி அமைஞ்சா வாழ்க்கையில எல்லாம் இருக்கும். அப்டி அமையலன்னா எதுவுமே இருக்காது.

    குறள் 54:

    பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
    திண்மைஉண் டாகப் பெறின்

    பொஞ்சாதி கிட்ட கற்பு ங்குத மன திடம் இருந்துச்சுன்னா அவள விட ஒசந்தது வேற என்ன இருக்க முடியும்.

    குறள் 55:

    தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை

    மத்த எந்த கடவுளையும் கும்பிடாம புருசன மட்டுமே கடவுளா நெனக்க பொஞ்சாதி மழைய பெய் அப்டின்னு சொன்னா பெய்யும்.

    குறள் 56:

    தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண்

    தன்னைய நல்லபடியா பாத்துக்கிட்டு புருசன நல்ல அக்கறையோட கவனிச்சி குடும்பத்தோட புகழையும் காப்பாத்ததுல திண்ணமா இருக்குதவ தான் பொம்பள. (பெண்)

    குறள் 57:

    சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
    நிறைகாக்கும் காப்பே தலை

    பொம்பள பிள்ளைங்கள இப்படித்தான்இருக்கணும் னு காவல் காக்குததுல ஒரு பிரயோசனமுமில்ல. அவங்க தங்கள தாங்களே மனசார அடக்க ஒடுக்கமா காத்துக்கிடதது தான் ஒசத்தி.

    குறள் 58:

    பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
    புத்தேளிர் வாழும் உலகு

    பொம்பளப் பிள்ளைங்களுக்கு நல்ல குணத்தோட புருசன் அமைஞ்சா, குடும்ப வாழ்க்கைல கெடைக்குத சந்தோசம் மேலுலக வாழ்க்கையப் போல சிறப்பா இருக்கும்.

    குறள் 59:

    புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
    ஏறுபோல் பீடு நடை

    குடும்பத்தோட புகழக் காக்குத பொஞ்சாதி இல்லாத ஆம்பிளைக்கு தன்னைய இளக்காரம் செய்யுதவங்க முன்ன ஆம்பிள சிங்கம் போல நடக்க ஏலாது.

    குறள் 60:

    மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு

    குடும்ப வாழ்க்கையில மங்கலம் னு சொல்லுதது பொஞ்சாதியோட நல்ல குணத்த. நல்ல பிள்ளைகள பெத்து வளக்குதது அதுக்கு பூட்டுத நக நட்டுபோல.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 5

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 5 – இல் வாழ்க்கை

     

    குறள் 41:

    இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
    நல்லாற்றின் நின்ற துணை

    வாழ்க்கைல பெத்தவங்க, பிள்ளைங்க, பொஞ்சாதி எல்லாருக்கும் நல்லது செய்து தொணையா இருக்கவன் தான் நல்ல படியா குடும்பம்  நடத்துதவன் .

     

    குறள் 42:

    துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வான் என்பான் துணை

    எல்லாத்திலயும் ஆசைய விட்டவனுக்கும், தங்கிட்ட இல்லன்னு கேக்குதவனுக்கும், ஏழைக்கும் குடும்பத்தோட வாழுதவன் தொணையா இருக்கணும்.

     

    குறள் 43:

    தென்புலத்தார் தெய்வம் விரு ந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தா றோம்பல் தலை

    தனக்கு,, சொந்தக்காரங்களுக்கு, விருந்தாளிக்கு, தேவர்களுக்கு, இறந்தவங்களுக்கு செய்ய வேண்டியத சிறப்பா செய்யணும்.

     

    குறள் 44:

    பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல

    வாழ்க்கையோட ஒழுக்கங்கறது பழி பாவத்துக்கு அஞ்சி பொருள் சேக்குததும், சேத்தத பங்குபோட்டு குடுத்து வாழுததுலயும் இருக்கு.

     

    குறள் 45:

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது

    குடும்ப வாழ்க்க பண்பும் பயனும் உள்ளதா இருக்கதுக்கு அன்பான மனசோட நல்ல செயல செய்யணும்.

     

    குறள் 46:

    அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
    போஒய்ப் பெறுவ தெவன்

    நல்ல தனமா குடும்பம் நடத்துதவனுக்கு கெடக்குத பயன் வேறவழில கெடைக்குமா? கெடைக்காது.

    குறள் 47:

    இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
    முயல்வாருள் எல்லாம் தலை

    குடும்பத்தோட நல்ல வாழ்க்கை வாழுதவனால மட்டுந்தான் கடவுள பத்தி  அறிஞ்சிக்கிட்டு அவர அடைய முடியும்.

     

    குறள் 48:

    ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
    நோற்பாரின் நோன்மை உடைத்து

    பிறத்தியார நல்லா வாழ வச்சி தானும் நல்லபடியா குடும்பத்தோட வாழுதவனோட வாழ்க்க துறவிங்க கடைபிடிக்க நோன்ப விட ஒசந்தது.

     

    குறள் 49:

    அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
    பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

    குடும்பத்தோட வாழுத  வாழ்க்கையத் தான் ஒசந்த அறம் னு சொல்லுதாங்க. அதுவும் மத்தவங்க குத்தம் குறை சொல்ல முடியாததா இருந்துச்சுன்னா நல்லது.

     

    குறள் 50:

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்

     

    குடும்பத்தோட வாழுத ஒருத்தன் பூமியில இருந்தாலும் அவன மேலோகத்துல  வாழுத தேவர்கள் ல ஒருத்தனப் போல தான் மதிப்பாங்க.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 4

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்

    குறள் 31:

    சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
    ஆக்கம் எவனோ உயிர்க்கு!

    நாலு பேர் முன்னால நம்மள ஒசத்திய காட்டி நமக்கு சீரையும் சிறப்பையும் கொடுக்குத அறத்த விட ஆக்கமான பாத வேற ஏதும் இருக்கா என்ன?

    குறள் 32:

    அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
    மறத்தலின் ஊங்கில்லை கேடு

    அறம் செய்யுதத போல நல்லது வேற எதுவும் இல்ல. அத செய்ய ஓர்ம கெட்டு அலையுதத (மறப்பதப்) போல தீங்கும் வேற இல்ல.

    குறள் 33:

    ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
    செல்லும்வாய் எல்லாஞ் செயல்

    முடிஞ்ச மட்டும் சொணங்காம எல்லா இடத்திலயும் நல்லதையே (அறச்செயலயே) செய்யணும்.

    குறள் 34:

    மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீர பிற.

    மனச சுத்தபத்தமா வச்சிக்கிடணும். அறம் னு சொல்லுதது அம்புட்டுதான். அத உட்டுபோட்டு பேசுத பசப்பு வார்த்த நடிப்பு எல்லாம் வெறும் வெத்துவேட்டு ஆரவாரந்தான்.

    குறள் 35:

    அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்ற தறம்

    மத்தவங்கள பாத்து பொறாமல புழுங்குதது, அஞ்சு புலனால வெளையற ஆசை, ஆசைக்கு தட சொல்லுதபோது வர கோவம், கோவத்துல சொல்லுத கெட்ட வார்த்த இந்த நாலயும் நீக்கிட்டு தொடர்ச்சியா செய்யுத செயலத்தான் நல்ல செயல் (அறம்னு) சொல்லுவாங்க.

    குறள் 36:

    அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
    பொன்றுங்கால் பொன்றாத் துணை

    சின்ன வயசில பொறவு பாத்துக்கிடலாம் னு தள்ளிப்போடாம நல்ல விசயங்கள (அறம்) செய்யணும். அப்பந்தான் அது நாம செத்த பிறவு கூட நமக்கு தொணையா நிக்கும்.

    குறள் 37:

    அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோ டூர்ந்தான் இடை

    அற வழில நடக்கவனுக்கு துக்கம் சொகம் ரெண்டும் ஒண்ணு போலத்தோணும். பல்லக்குக்கு உள்ள ஒக்காந்து அலுங்காம போகுதது மாதிரி. கெட்ட செயல செய்தவன் பல்லக்கு தூக்கிட்டுப் போவுதவன மாதிரி சொகத்தயும் அறியமுடியாம துக்கத்தையும் தாள மாட்டாம அவதிப்படுவான்.

    குறள் 38:

    வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
    வாழ்நாள் வழியடைக்கும் கல்

    தெனக்கும் தவறாம நல்லது (அறம்) செய்யுதவனுக்கு அது அவன் மறு பிறப்பு எடுக்குத வழிய அடைக்குத கல்லா நின்னு துணை நிக்கும்.

    குறள் 39:

    அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
    புறத்த புகழும் இல

    நல்லத செஞ்சவனுக்கு கெடைக்குததே இன்பம். மத்த வழில வருதது எல்லாம் புகழ்ச்சி ஆவாது.

    குறள் 40:

    செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
    உயற்பால தோரும் பழி

    ஒருத்தன் புகழடயணும் னு நெனைச்சாம்னா அவன் பழி பாவம் செய்யாம நல்ல செயல (அறத்தை) மட்டுந்தான் செய்யணும்

    ******************************

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 3

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 3 – நீத்தார் பெருமை

    குறள் 21:

    ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு

    ஒசத்தி னு படிச்ச பெருமக்களோட நூல்கள் சொல்லுதது எல்லாம் ஒலகத்து ஆசையெல்லாம் தொறந்த துறவிங்கள பத்திய பெருமையத்தான்.

    குறள் 22:

    துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
    இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

    ஆசையெல்லாம் விட்டவங்களோட பெருமைய அளக்குதது ஒலகத்துல செத்தவங்க எத்தன பேரு னு எண்ணுததுக்கு சமானம்.

    குறள் 23:

    இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற் றுலகு

    நல்லது கெட்டத ஆஞ்சு அறிஞ்சு பொறவு நல்லதையே செய்யற மனுசங்க தான் ஒசத்தியானவங்க.

    குறள் 24:

    உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
    வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

    கண்ணு, காது, மூக்கு, வாய், ஒடம்பு இந்த அஞ்சு பொறியால விளையுத ஆசைய அதோட போக்குல உடாம மன திடங்குத அங்குசத்தால அடக்குதவன துறவறம் ங்குத நிலத்துக்குண்டான விதை மாதிரி நெனைச்சிக்கிடலாம்.

    குறள் 25:

    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி

    பாக்குதது, கேக்குதது, சுவைக்குதது, வாசம் பிடிக்குதது, தொடுத உணச்சி இந்த அஞ்சுபுலனால விளையுத ஆசைய அடக்கி இருக்கவனக்கு உதாரணம் சொல்லணும்னா அது வான லோகத்துல இருக்க தேவர்களோட ராசா இந்திரன் தான்.

    குறள் 26:

    செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்கரிய செய்கலா தார்

    மத்தவங்களால செய்ய முடியாதத ஒருத்தன் செய்தாம்னா அவந்தான் ஒசந்த ஆள். அப்டி செய்யாதவன் தாழ்த்திதான்.

    குறள் 27:

    சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு

    பாக்குதது, கேக்குதது, சுவைக்குதது, வாசம் பிடிக்குதது, தொடுத உணச்சி இந்த அஞ்சு புலனையும் அறிஞ்சு அத அடக்கி ஆளுதவன இந்த ஒலகம் ஒசத்தியா பேசும்.

    குறள் 28:

    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்

    ஒசந்த படிப்பாளி மக்களோட பெருமைய ஒலகத்துல அழியாம வெளங்குத அவங்களோட நூல்களே காட்டிக் கொடுத்துடும்.

    குறள் 29:

    குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
    கணமேயுங் காத்தல் அரிது

    நல்ல குணத்த மல போல கொண்டிருக்குத பெரிய மனுசங்க கோவப்பட்டாங்கன்னா அவங்க மனசுல அந்த கோவம் ஒரு கணம் கூட நெலைச்சு நிக்காது.

    குறள் 30:

    அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
    செந்தண்மை பூண்டொழுக லான்

    எல்லா உயிர்கிட்டயும் நேசத்தோட பாசங்காட்டுத நல்ல மனுசங்க (அறவோர்) யாரோ அவர தான் நாம அந்தணர் னு சொல்லுதோம்.

    ******************************

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 2

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 2 – வான் சிறப்பு

    குறள் 11:

    வானின் றுலகம் வழங்கி வருதலால்
    தானமிழ்தம் என்றுணரற் பாற்று

    நாம இருக்க இந்த ஒலகத்த வாழ வெக்கதால மழைய அமிழ்தம் னு சொல்லுதோம்.

    குறள் 12:

    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை

    வயக்காட்டுல வெளைச்சலுக்கு உதவுத மழைத் தண்ணி , பொறவு வெளஞ்சத வச்சி தின்னும்போதும் தாகத்துக்கு குடிக்கவும் ஒதவுது.

    குறள் 13:

    விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
    உள்நின் றுடற்றும் பசி

    ஒலகத்த சுத்தி கடல் தண்ணி இருந்துச்சினாலும், மழ பெய்யலேனா வெள்ளாம பாக்க முடியாம வயித்து பசி மனுசன வாட்டி வதைக்கும்.

    குறள் 14:

    ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
    வாரி வளங்குன்றிக் கால்

    மழை ங்குத வருமானம் இல்லைன்னா வெவசாயி வெள்ளாம பாக்க மாட்டான்.

    குறள் 15:

    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை

    பொழியாம சனத்த நோகடிக்குத மழை பொறவு பொழிஞ்சு அவுகளுக்கு ஆதரவா நல்லதும் செய்யும்.

    குறள் 16:

    விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
    பசும்புல் தலைகாண் பரிது

    வானம் பாத்த பூமியில மழத்துளி விழலேன்னா புல்லோட தலையக் கூட காங்க முடியாது.

    குறள் 17:

    நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
    தான்நல்கா தாகி விடின்

    மேகம் கடல்லேந்து மோந்த தண்ணிய திரும்ப மழையா பொழியாம உட்டிச்சிதுன்னா கடல் தண்ணியும் வத்தி போவும்.

    குறள் 18:

    சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
    வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

    மழ பெய்யாம போச்சுன்னா சாமிக்கு தினமும் பூசையும் நடக்காது, வானவர்க்கு நடக்க திருவிழாவும் நடக்காது.

    குறள் 19:

    தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
    இனம் வழங்கா தெனின்

    மழை பெய்யாமப் போச்சுதுன்னா மத்தவனுக்கு தானமும் செய்ய இயலாம , தான் நோம்பு இருக்கவும் மாட்டாம மனுசனுக்கு தடங்கலா வந்து முடியும்.

    குறள் 20:

    நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
    வானின் றமையா தொழுக்கு

    எத்தாம்பெரிய மனுசனாலயும் தண்ணி இல்லாம இருக்க முடியாது. அந்த தண்ணிய கொடுக்குத மழை பெய்யாம போச்சுதுன்னா ஒலகம் ஒழுக்கங் கெட்டுச் சீரளியும் னு உணந்து நடக்கணும்.

    ******************************

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 1

    நாங்குநேரி வாசஸ்ரீ

    வாசகர்களுக்கு வணக்கம்,

    இதை நான் எழுதுவதற்கு, எங்கள் ஊரில் (நாங்குநேரி) கத்தரிக்காய் விற்று வந்த இசக்கித்தாய் என்ற பாம்பட ஆச்சி தான் காரணம்.  திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்காக நாங்கள் பயிலும்போது, ஒவ்வொரு முறையும் திருவள்ளுவரைக் காண்பித்து, இந்தச் சாமி யாரு? இவுங்க சொன்னத தமிழ்ல சொல்லு தாயி. நானும் கேட்டுக்கிடுவேன் இல்ல என்பாள்.  அவளைப் பொறுத்தவரை அவள் பேசுவதுதான் தமிழ்.  இறை எய்திவிட்ட அவள் எங்கிருந்தோ இருந்து கேட்டுக்கொண்டிருப்பாள் என நினைத்து, பல ஆண்டுகளுக்குப் பின் எழுதும் உரை இது. தனைச் சான்றோர்கள் வாசிக்க வேண்டும் என்ற  சிறிய அவாவுடன் வல்லமை இதழுக்கு அனுப்புகிறேன். பிழை இருந்தால் மன்னிக்கவும். – நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

    குறள் 1:

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.

    எல்லா எழுத்தும் ‘அ’ ல தான் தொடங்குது. (அது போல) நாம நிக்க, திங்குத, தூங்குத இந்த ஒலகத்தோட தொடக்கம் கடவுள்.

    குறள் 2:

    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்

    எல்லாத்தையும் அறிஞ்ச கடவுள கும்பிடலேன்னா நீ படிச்ச படிப்பால என்ன பிரயோசனம்..

    குறள் 3:

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்

    பூ போல உள்ள மனசுக்குள்ள குடியிருக்க கடவுள நெனக்கவன் சந்தோசமா இந்த உலகத்துல நெறைய நாள் வாழுவான்.

    குறள் 4:

    வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல

    வேணும் வேண்டாம் னு நெனப்பே இல்லாத கடவுளோட திருவடிய கும்பிடுதவனுக்கு ஒருநாளும் தொயரம் அண்டாது.

    குறள் 5:

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

    கடவுளோட உண்மையான புகழ விரும்பி அறிஞ்சவனோட புத்திக்கு நல்லதும் கெட்டதும் ஒண்ணு போலத் தோணும்.

    குறள் 6:

    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்

    கண்ணு, காது, மூக்கு, வாய், ஒடம்பு ங்கற அஞ்சு பொறி லேந்தும் பிறக்குத கெட்ட ஆசைய அவிச்சு ஒழிச்சு இருக்க கடவுளோட பொய்யில்லாத ஒழுக்கத்த கடைபிடிச்சாம்னா அவன் நெறைய நாள் வாழுவான்.

    குறள் 7:

    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது

    தனக்கு ஒப்பும சொல்ல ஏலாத கடவுளோட காலப் புடிச்சவன தவிர மத்தவனோட மனத் தொயரத்த மாத்துதது சுளுவான காரியம் இல்ல.

    குறள் 8:

    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது

    அறக்கடலா இருக்க கடவுள நெனயாதவன் மாறி மாறி பொறந்தும் செத்தும் பல சென்மம் எடுத்து பெறவி கடல்ல நீந்த முடியாம கெடந்து சீரளியுவான்.

    குறள் 9:

    கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை

    சோலி பாக்காத கண்ணு, காது, மூக்கு, வாய், ஒடம்பால எவ்ளோ செரையோ அது போல தான் கடவுள வணங்காதவனோட தலயும்.

    குறள் 10:

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்

    கடவுள கும்பிடுதவனால மட்டுந்தான் பிறப்புங்குத கடலுக்குள்ள நீந்தி கரைய கடக்க முடியும். மத்தவனுக்கு சிரமந்தான்.

    ******************************

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share