-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 7 – மக்கட் பேறு

குறள் 61:

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற

பெத்து வளக்குத புத்திசாலி பிள்ளைங்களத் தவித்து மத்தபடி ஒருத்தன் பெறுத வேற எந்த நன்மையையும் நான் நல்லதா ஒத்துக்கிட மாட்டேன்.

குறள் 62:

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்

குறை இல்லாத நல்ல குணத்தோட உள்ள பிள்ளைய பெத்தவனுக்கு அவனோட ஏழேழு தலைமுறைங்குத காலத்துக்கு தீமை ங்குத தொயரம் அண்டாது.

குறள் 63:

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்

தங்கிட்ட இருக்குத செல்வம் னு சொல்லுதது பெத்த பிள்ளைங்க மட்டும் தான். அவங்க செய்யுத நல்லதுக்கு ஏத்தாப்போல அவங்க கிட்ட செல்வம் (பொருள்) வந்து சேந்துக்கிடும்.

குறள் 64:

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்

தாம்பெத்த பச்ச பிள்ளைங்க பிஞ்சு வெரலால அளையுத சாப்பாட்டத் தான் பெத்தவங்க அமிழ்தம் னு சொல்லுவாங்க.

குறள் 65:

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

பச்ச பிள்ளைங்கள தொட்டு கொஞ்சுதது ஒடம்புக்கு இன்பம். அவங்களோட மழலப் பேச்சு கேக்குதது காதுக்கு இன்பம்.

குறள் 66:

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

தாம் பெத்த பச்ச பிள்ளைங்களோட மழல பேச்சு கேக்காதவங்க புல்லாங்குழலோட இசையையும் , யாழோட இசையையும் நல்லா இருக்குதுன்னு நெனைச்சிக்கிடுவாங்க. .

குறள் 67:

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

தான் பெத்த பிள்ளைக்கு உதவி செய்யணும்னு ஒரு அப்பன் நெனைச்சாம்னா அவன நல்லா படிக்க வச்சி படிப்பாளிங்க மத்தியில நல்ல பெயர் வாங்க வைக்கிதது தான்.

குறள் 68:

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது

தன்னைய விட தாம்பெத்த பிள்ளைங்க புத்திசாலியா இருக்குதது தனக்கு மட்டிமில்லாம ஒலகத்துல இருக்க மத்த எல்லாருக்கும் நல்லத கொடுக்கும். .

குறள் 69:

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

உம் மவன் நல்லவன் னு ஊர் உலகம் சொல்லும்போது அவன பெத்த காலத்துல கொண்ட மகிழ்ச்சிய விட அதிகமா மகிழ்ச்சி அடையுவா அவன் ஆத்தா.

குறள் 70:

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்

இவன பெறுததுக்கு இவனோட அய்யன் என்ன நோன்பு நோத்தானோ என பிறத்தியார் சொல்லுத புகழ்ச்சி தான் அந்த மவன் தன்னோட அய்யனுக்கு செய்யுத கைம்மாறு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *