Tag: நாங்குநேரி வாசஸ்ரீ

  • கதை வடிவில் பழமொழி நானூறு – 34

    கதை வடிவில் பழமொழி நானூறு – 34

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 69

    மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்
    கூடம் மரத்திற்குத் துப்பாகும் – அஃதேபோல்
    பீடிலாக் கண்ணும் பெரியோர் பெருந்தகையர்
    ‘ஈடில் லதற்கில்லை பாடு’.

    பழமொழி – ‘ஈடில் லதற்கில்லை பாடு’.

    எங்கடா கூட்டிண்டு போற. ஏதோ முக்கியமான இடத்த காண்பிக்கப் போறதா சொல்லிட்டு நிக்காம ஒரு மணிநேரம் கார ஓட்டிண்டே இருக்கியே. வழியில எவ்வளவு அழகான பூங்காக்களெல்லாம் இருந்தது. பச்சைப்பசேல்னு. அதவிடவா பெரிய இடம். அம்மா புலம்பிக்கொண்டே இருந்தாள்.

    பாட்டி டோன்ட் வொரி. இப்போ நாம உங்களுக்குப் பிடிச்ச பழைய கலாச்சாரத்து சாமான்கள் வைக்கப்பட்டிருக்கிற மியூசியத்துக்குத்தான் போய்க்கிட்டிருக்கிறோம். அங்க ஒவ்வொரு மாநிலத்திலையும் முன்னாடி காலத்துல என்ன பொருட்கள் உபயோகிச்சாங்களோ அவைகளையெல்லாம் பாக்க முடியும். ரொம்ப நல்லா இருக்கும்.  நானும் அப்பாவும் ஏற்கனவே பாத்துட்டோம். உங்களுக்காகத்தான் இப்போ போய்க்கிட்டிருக்கோம். இந்தாங்க இத காதுல மாட்டிக்கிட்டு பாட்டு கேட்டுக்கிட்டே வாங்க. அம்மாவின் தொணதொணப்பை நிறுத்தினான் என் பதினைந்து வயது மகன் சுஷாந்த்.

    இன்னும் பத்துநிமிசத்துல நாம போய்ச் சேந்துடலாம். அம்மாவை உற்சாகப்படுத்தினேன். இவ்வளவு கஷ்டப்பட்டு கூட்டிக்கிட்டு வரேன். அம்மா என்ஜாய் பண்ணலேன்னா சப்புனு ஆயிடும்.

    உள்ளே நுழைந்ததுதான் தாமதம். முதலில் இருந்த ஒரிசா சாமான்களை மந்தமான முகத்துடன் பார்த்துக் கொண்டே நடந்த அம்மா அடுத்த அறையின் தமிழ்நாடு என்ற பலகையைப் பார்த்தவுடனேயே உற்சாகமானாள். பாருடா பழங்காலத்து பித்தளை பொம்மைகள் வச்சிருக்காங்க.

    இங்க வா சுஷாந்த் இதுக்குப்பெயர் தான் வார்ப்பு. கல்யாணத்துக்கெல்லாம் மைசூர்பாகு, பால்கோவா எல்லாம் இதுலதான் கிண்டுவா. ஆமா பக்கத்துல பெயர் எழுதிருக்குபாரு படிச்சுச் சொல்லு.

    அம்மணி அம்மாள் என சுஷாந்த் பெயர் வாசித்தவுடன் சுற்றிலும் இருப்பவர்களை மறந்து அம்மா பேச ஆரம்பித்தாள். இது நம்ம ஊர்லேந்து எடுத்துண்டு வந்த பாத்திரம். அம்மணி மாமிய நாங்கெல்லாம் மைக் மாமினு தான் கூப்பிடுவோம். அவ்ளோ சத்தமா பேசுவா. எத்தன கல்யாணத்துக்கு மைசூர்பாகு கிண்டின பாத்திரம் இது.

    அடுத்த பெயர வாசிடாப்பா. எல்லாமே பாக்கறச்ச நம்ம ஊர்லேந்து கொண்டு வந்தது மாதிரி தான் இருக்கு. கொப்பரை, அன்ன விளக்கு என வரிசைகள் நீண்டன.

    அடுத்த அறைக்குச் சென்றவுடன் கல் உரல், அம்மி, எந்திரம் வரிசையாகப் பார்த்த பாட்டியின் கண்கள் கலங்கின. இதெல்லாம் நான் புழங்கினது. நீ பெயரே வாசிக்க வேண்டாம். அப்பெல்லாம் திருப்புளியிலேந்து (சமயலறையிலேந்து) கொல்லப்புறம் வரை கல்தொட்டிலதான் தண்ணி உட்டு வைப்போம். சைஸ் வாரியா இருக்கும்.

    உப்பு, புளி, ஊறுகாய்கள், பழைய சாதம்  போட்டுவைக்க எடை குறைஞ்ச கல் பாத்திரம். அப்பயெல்லாம் ஏது பிரிட்ஜ். வாங்கின காய்கறிகள ஆட்டு உரல்குள்ள போட்டு மூங்கில்தட்டால மூடிவைப்போம். மாவு அரைக்கிற நேரம் மட்டும் அது வெளிய இருக்கும். பாட்டி உற்சாகத்தில் தானே பேசிக்கொண்டிருக்கிறாள்.

    காஸ் அடுப்பு வந்து அரைவை மிஷின்களெல்லாம் வந்தவொடனே ஒவ்வொண்ணயா தூக்கி கொல்லப்புறத்துல வைக்க ஆரம்பிச்சோம். அப்பறம் நம்ம ஊர் ராமன்தான் எதுக்கு வீணா எடத்த அடைச்சிண்டிருக்குனு சொல்லி ஒரு லாரியில தெருவுல இருந்த எல்லா கல்தொட்டி, பழைய பாத்திரங்கள், மரச்சாமான் எல்லாத்துக்கும் ஒரு விலை போட்டு எடுத்துண்டு போய் எங்கியோ குடுத்தான். ஆனா அதெல்லாம் இத்தன தூரம் பிரயாணம் பண்ணி இங்கவந்து சேரும்னு நான் எதிர்பார்க்கல.

    நம்மாத்து தூணப் பாத்தியா. ஆத்த இடிச்சு மாத்திக் கட்டும்போது வெளிய வச்சது. நடுரேழியில பல வருசம் நின்ன தூண். அப்பயெல்லாம் இந்த வரி இடுக்குகள்ல மூட்டப்பூச்சி வரிசையா வந்து நின்னுடும். ஊக்கால அதக் கீழதள்ளி நசுக்குவோம். இப்ப அதுக்கு வந்த வாழ்வப் பாத்தியா. எல்லாமே இந்த இடத்துல பளபளனு கம்பீரமா நிக்கறதுகள்.

    இணையில்லாத சிறப்புடைய ஒன்றுக்கு என்னைக்கும் அழிவே கிடையாதுனு பழமொழியே இருக்கே. அந்தப்பழமொழிய நீ படிச்சிருக்க மாட்ட. இருந்தாலும் சொல்றேன் தெரிஞ்சிக்கோ என ‘ஈடில் லதற்கில்லை பாடு’ என்ற பழமொழியை என் மகனிடம் சொல்கிறாள் அம்மா. .

    பாடல் 70

    முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும்
    பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ? – இன்னிசை
    யாழின் வண்டார்க்கும் புனலூர! ‘ஈனுமோ
    வாழை இருகால் குலை?

    பழமொழி – ‘ஈனுமோ வாழை இருகால் குலை?’

    டேய். சீக்கிரம் வாடா. இவன் ஒருத்தன் இப்பதான் பொண்ணுமாதிரி மேக்கப் போட்டுக்கிட்டு நிக்கறான். அம்மா நிக்கறதால ஒண்ணும் சொல்லவும் முடியல.

    புலம்பினான் கோவிந்தன்.

    என்னடா..  என்னமோ குசுகுசுனு பேச ஆரம்பிச்ச. என்னயப் பாத்தவொடனே நிறுத்திட்ட. ஊர்சுத்தாம போய் படிக்கற வழியப் பாருங்க.  போலீஸ் தோரணையில் அதட்டுகிறாள் என் அம்மா.

    அட போங்கம்மா. நாங்க என்ன பெரிசா பேசிடப்போறோம். பக்கத்துவீட்டு ஆண்ட்டி ரொம்ப நேரமா காம்பவுண்ட் சுவர்லேந்து எட்டி எட்டி நம்ப வீட்டையே பாக்கறாங்க. ஏதோ வம்பு சொல்லணுமா இருக்கும். அம்மாவை விரட்டினேன்.

    உண்மைதான் இந்த ஆண்ட்டிக்கு காலங்காத்தால அப்டி என்ன வம்பு இருக்கும். நான் தலைசீவிக்கொண்டு நிற்கும் கண்ணாடி அருகேயிருக்கும் சன்னல்வழி பக்கத்துவீட்டு பக்கவாட்டுச் சுவர நல்லாப் பாக்க முடியும். அங்கதான் நிக்கறாங்க ஆண்ட்டி.

    டேய் எவ்ளோ நேரம்டா. சீக்கிரம் வாடா. அங்க பெரிய பிரச்சினையே போயிக்கிட்டிருக்கு. என்னமோ ரூம் போட்டு யோசிச்சுக்கிட்டு இருக்க. நண்பன் திரும்பவும் ஆரம்பிக்கிறான்.

    ஒருவழியா கிளம்பி அவனுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் வழியில்….  டேய் நம்ப சுரேஷ ஸ்கூல்லேந்து ரஸ்டிகேட் பண்ணிட்டாங்கடா.

    என்னடா சத்தமே காணோம். அதாண்டா ஸ்கூல விட்டு விலக்கிட்டாங்க.இனிமே அவனால படிக்கமுடியாது. அந்த வருத்தத்துல அவன் வீட்டுல யார்கிட்டயும் சொல்லாம காணாம போயிட்டானாம். காலையில எங்கப்பா சொன்னதிலேந்தே எனக்கு வயத்தக் கலக்கிருச்சு. அதான் உன்னயப் பாக்க வந்தா நீ என்னவோ சீவி சிங்காரிச்சு இவ்ளோ லேட் பண்ணி உட்டுட்ட.

    சரி இப்ப எங்கடா போய்கிட்டிருக்கோம். நான் கேட்கிறேன்.

    அதான் நம்ம தனபால் இருக்கான்ல அவன் வீட்டுக்குப்போயி அவனுக்கு ஏதும் தெரியுமானு கேக்கலாம். எப்படியும் நாம நாலுபேரும்தானே எப்பவும் ஒண்ணாச் சுத்தினோம். இப்ப சுரேஷுக்கு ஒரு பிரச்சினைனா நம்மளத் தேடி தானே வருவான். நம்ம ரெண்டுபேர் வீட்டுக்கும் வரல. அதான் தனபாலக் கேக்கலாம்.

    ஒருநிமிசம் நில்லுடா. பேசாம நாம ஸ்கூலுக்குப் போயி ஹெட்மாஸ்டர்கிட்ட உண்மயச் சொல்லிடலாம். எல்லாத்துக்கும் நிரந்தரமா தீர்வு கிடைச்சுரும். நான் கூறுகிறேன்.

    நல்லா உதை வாங்குவோம். அவ்ளோதான் நடக்கும். நம்மளையும் ஸ்கூலவிட்டு

    நிறுத்திடுவாங்க. ‘ஈனுமோ வாழை இருகால் குலை?’னு கேட்டதில்லையா. வாழை ரெண்டுதரம் குலை ஈனாது. அதுமாதிரிதான் நம்ம ஹெட்மாஸ்டர் எவ்வளவுதான் பொறுமசாலியா இருந்தாலும் முதல்தடவ தப்புசெஞ்சப்போ நம்ம எல்லாரையும் மன்னிச்சு விட்டாரு. ஆனா மேல மேல பெரிய தப்ப நாம செஞ்சிக்கிட்டேயிருந்தா அவர் மன்னிக்கணும்னு ஒரு அவசியம் இல்ல. இந்தமாதிரி தண்டனதான் கிடைக்கும். நண்பன் முடித்தவுடன் நான் ஆரம்பித்தேன்.

    பாவண்டா சுரேஷ். நம்ம அல்ப சந்தோஷத்துக்காக ஸ்கூல் கேண்டீன்காரர் போட்டு வச்சிருந்த டீயில கரப்பான் பூச்சியப் போட்டோம். விசயம் தெரிஞ்சு கண்டுபிடிச்சு நம்மள அவர் முன்ன நிறுத்தினப்போ எவ்ளோ பொறுமையா அறிவுரை சொன்னார். இப்ப ஒருபடி மேல போயி விளையாட்டுத்தனமா கிளாஸ்ரூம் சன்னல் கண்ணாடிகள உடைக்கறதுல பந்தயம் வச்சிக்கிட்டோம். அத நம்பிதானே சுரேஷ் வாட்டர் பாட்டில சன்னல்மேல எரிஞ்சான்.  நாம மூணுபேரும் ஒடிப்போயிட்டோம். அவன் மாட்டிக்கிட்டான். உடைஞ்ச கண்ணாடித்துண்டுகள் பாட்டிலோட கீழ்த்தளத்துல நின்னுக்கிட்டிருந்த ஒண்ணாம்கிளாஸ் பையன் தலையில பட்டுட்டதாலதான் இவ்ளோ பிரச்சினையும்.

    பேசாம நாம போய் ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேட்டுறலாம். அப்பறம் அம்மா அப்பாகிட்ட சொல்லி அடிஒத வாங்கிக்கிட்டு சுரேஷத் தேட உதவலாம்.

    நண்பன் ஒப்புக்கொண்டதால் பள்ளிக்கூடம் நோக்கி விரைகிறோம்.  .

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 33

    கதை வடிவில் பழமொழி நானூறு – 33

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 67

    ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு
    இருவரா வாரும் எதிர்மொழியல் பாலா
    பெருவரை நாட! சிறிதேனும் ‘இன்னாது
    இருவர் உடனாடல் நாய்’. 

    பழமொழி- ‘இன்னாது இருவர் உடனாடல் நாய்’.

    இன்னிக்கு நடந்த கூட்டத்துல ஏதாவது முடிவு எடுத்தாங்களா. அப்பொழுதுதான் தில்லியின் பெயர்பெற்ற  சரோஜினி நகர் மார்க்கெட்டிலிருந்து கொண்டு வந்த பைகளை வைத்துவிட்டு உட்காருகிறாள் என் தோழி. அவள் கேட்ட கேள்வியில் என் கவனம் செல்ல மறுக்கிறது. எப்போதுமே அழகா செலக்ட் பண்ற அவள் இன்னிக்கு என்னவெல்லாம் வாங்கிட்டு வந்திருக்காளோ? பேசாம நானும் கூடப் போயிருக்கணும். கிளம்பறதுக்கு சோம்பேறித்தனம். அதுக்காக சொசைட்டி ஜெனரல்பாடி மீட்டிங் அட்டெண்ட் பண்ணணும்னு ஒரு காரணத்த சொல்லிவச்சேன். அதனாலதான் திரும்பிவந்தப்புறம் ஞாபகமா கேக்கறா.

    மீட்டிங்ல பெரிசா ஒண்ணுமில்ல. அதே பிரச்சினைகள திரும்பத்திரும்ப பேசினாங்க. அதுக்கு பலபேர் எப்போதும் போல எதிர்ப்பு தெரிவிச்சாங்க. கடைசியில முழுசா எந்த முடிவும் எடுக்கல.

    பாபி ஆகயா….. ஹிந்தியில்  கேட்டுக்கொண்டே என் எதிர்வீட்டு அரசி வரவே பேச்சு திசை திரும்புகிறது. அவளின் விருப்பத்திற்கிணங்க தான் வாங்கி வந்த துணிமணிகளை விரித்துப் பரப்பி காண்பிக்க ஆரம்பிக்கிறாள் கோமளா. ஆங்காங்கே பட்டாம்பூச்சிகள் பறந்துகொண்டிருப்பதுபோல் வெள்ளை நூலினால் பின்னப்பட்ட சோபா கவர் அவளின் கவனத்தை ஈர்த்ததுபோல. அதன் விலையைக் கேட்கிறாள்.

    கோமளா அதனை வாங்கிய நிகழ்வை எங்கள் மனக்கண் முன் கொண்டு வர முயலுகிறாள். அந்தக் கடைக்காரன் காண்பித்த எதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லையாம். சற்றே தள்ளி அவன் பார்வைக்காக பரப்பி வைத்திருந்த இந்தக் கவர் அவளுக்குப் பிடித்ததால் விலை கேட்டாளாம். அதன் விலை இருநூறு ரூபாய் என்று சொன்னவுடன் வேறுபக்கம் நின்றிருந்த இரண்டு பெண்களில் ஒருத்தி இப்போதுதானே நூற்றைம்பது என்று சொன்னாய் அதற்குள் இவர்களுக்கு இருநூறு என்கிறாயே என ஆரபித்தாளாம். அவளுடன் வந்தவள் இதைப் பின்னுபவர்களுக்கு என்ன கூலி கொடுக்கிறாய் சொல். என்னை ஏமாற்ற முடியாது. எனக்கும் பின்னத்தெரியும் எனக் கூப்பாடு போட ஆரம்பித்தாளாம். கடைக்காரர் நீங்கள் பார்த்தது வேறு என ஏதோ சொல்ல ஆரம்பிப்பதற்குள் இதற்கெனவே காத்துக்கொண்டிருந்தது போல்அங்கு நின்று வேடிக்கை பார்த்த இருவர் இப்படி ஏமாற்றி வியாபாரம் செய்வது தவறு என ஆரம்பித்து மற்ற பொருட்களின் விலையைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

    பின் பக்கத்துக் கடைக்காரர்தான் என்ன பேசுவதென்றாலும் ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே மறுத்துப் பேசுங்கள். ஒரே நேரத்தில் பல பேர் அவர் சொல்வதை மறுத்தால் எப்படிச் சமாளிக்க முடியும் என அனைவரையும் சமாதானப்படுத்தி அந்தக் கடைக்காரரைக் காப்பாற்றினாராம். அந்த நபர் நெற்றியில் திருநீறு அணிந்திருந்ததால் ஆர்வத்தில் அவரிடம் தமிழ் பேசுவீங்களானு கேட்டாளாம்.

    ஆமாம்மா. எனக்கு ஊர் தமிழ் வளர்த்த மதுரைதான். பாவம் பக்கத்துக் கடைக்காரன். சுலபமா வந்து நின்னு விலைபேசி திட்டிட்டு நடந்து போயிடறீங்க. அவரப் பாருங்க. வெள்ளை நூலால பின்னின சோபா கவர், மேசை விரிப்பு, டி.வி கவர் இப்படி ஒண்ணொண்ணையா எடுத்துக் காட்டும்போதே அழுக்காகிடும். இருந்தாலும் அவருக்குப் பொறுமை அதிகம். வர பெண்களை வேடிக்கை பாத்துக்கிட்டே இருக்கறதால எனக்குத் தோணினத சொல்றேன். இந்தக் கடை வாசலில  ‘இன்னாது இருவர் உடனாடல் நாய்’ னு எழுதிவைக்கணும்னு தோணும். அப்டி எழுதி வச்சாலும் யாருக்கும் அதோட அர்த்தம் புரியப்போறது இல்லனு சொல்ல .

    எனக்கே தெரியாது என்பதை நான்தயங்கித் தயங்கிச் சொன்னேன்.  அவர் அந்தப் பழமொழியை விளக்கினார். ஒருத்தன் தான் சொல்லவறதச் சொல்லும்போது அதுக்கு மாறுப்பட்ட கருத்து உள்ள இருவர் ஒரே சமயத்தில அவனுக்கு எதிரா வாதிடத் தொடங்கறது ஒரு நாயை வச்சிக்கிட்டே இரண்டு பேர் வேட்டையாடினா  எவ்வளவு துன்பம் தருமோ அதுக்குச் சமானம்னு..

    பழமொழியைப் புரிஞ்சிக்கிட்ட நான் மன நிறைவோட திரும்ப அந்தக் கடைக்குப் போய் எனக்குப் பிடிச்ச இந்த விரிப்ப இருநூறு ரூபாய் குடுத்து வாங்கிட்டு அந்தக் கடைக்காரருக்கு நன்றி சொல்லிட்டு வந்தேன்.

    அவருக்கு ஒண்ணும் புரியல பாவம். இந்தச்சின்ன கைக்குட்டை மாதிரி உள்ள விரிப்ப போன் மேல போட உபயோகியுங்கனு இலவசமாக் கொடுத்தார்.

    அவள் பேசி முடித்தவுடன் நான் யோசித்தேன். காலையில நடந்த சொசைட்டி மீட்டிங்குக்கும் அந்தப் பழமொழி பொருந்தும். பாவம் பிரசிடெண்ட் வாக்கிங் போறதுக்காக புதுசா ஒரு பாதை போடலாம்னு சொன்னவொடனே எத்தனை பேர் ஒரே சமயத்தில கத்த ஆரம்பிச்சாங்க. பாவம் அவர் ஒவ்வொரு பிரச்சினையாச் சொல்லி அதுக்குப் பிறகு அனைவரையும் அமைதிப்படுத்தியே நேரம் கழிஞ்சிருச்சு. அப்படியும் விடாம குறித்த நேரத்தில மீட்டிங்க முடிக்கலனு பாதி படிச்ச மேதாவிங்க புலம்ப ஆரம்பிச்சதால ஒரு தீர்மானத்துக்கும் வரமுடியாம மீட்டிங்க முடிச்சார்.

    பரவாயில்ல. நம்ம பழமொழிகள் எல்லாக் காலத்திலயும் எல்லாருக்கும் பொருந்துது. பின்ன… தமிழ்னா சும்மாவா. மனதுள் பெருமிதப்பட்டுக்கொண்டே வந்தவர்களுக்கு பருகுவதற்கு பழச்சாறு எடுத்துவர எழுந்தேன். .

    பாடல் 68

    விலங்கேயும் தம்மோ(டு) உடனுறைதல் மேவும்
    கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா – இலங்கருவி
    தாஅய இழியும் மலைநாட! ‘இன்னாதே
    பேஎயோ டானும் பிரிவு’.

    பழமொழி – ‘இன்னாதே பேயோடானும் பிரிவு’

    என்னடா தூங்கி எழுந்திருச்சிட்டியா? வந்தவொடனே கேக்க வேண்டாம்னு பாத்தேன். யார் இந்தப் பொண்ணு? புது இடம்னு யோசிக்காம ஏதோ உரிமை இருக்குற மாதிரி சட்னு தூங்கிட்டா?

    பெங்களூரிலிருந்து ஊருக்கு வந்திருக்கும் பேரனிடம் விசாரணையைத் தொடக்கினாள் பாட்டி. உங்க தாத்தா வேற ஏதோ பீதியக் கிளப்பி விட்டுட்டாரு.

    எதையுமே கண்டுகொள்ளாமல் பேரன் சம்யுக்த் பாத்ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

    விடிகாலை நாலு மணிக்கு அவர்கள் உள்ளே நுழைந்ததிலிருந்தே சலசலப்புதான். வந்தவுடன் ஒப்புக்கு அவளை என் பிரண்ட் ஸ்வேதா என அறிமுகப்படுத்திவிட்டு இருவரும் களைப்பு நீங்க தூங்கப் போய்விட்டனர்.

    உடனேயே தாத்தா ஆரம்பித்தார். வந்திருக்கிறது யாரோ? எவளோ? தலையெழுத்து குலம் கோத்ரம் எல்லாம் விசாரிச்சு வை. இவன் அப்பன் அதுதான் நம்ம பிள்ளையாண்டானுக்கு புத்திமட்டு. சுதந்திரமா வளக்கறதாச் சொல்லி எப்டி செல்லம் குடுத்து கெடுத்து வச்சிருக்கான் பாரு. அதுவும் தைரியமா நம்ம வீட்டுக்கே கூட்டிண்டு வரான்.

    பக்கத்தாத்து பரமசிவம் சொன்னான். இப்பயெல்லாம் குழந்தைகள் வெளி நாட்டுக்கு படிக்க வேலைபாக்கப் போறதால கேர்ள்பிரண்ட் கல்ச்சர் ஜாஸ்தி ஆயிடுத்துன்னு. ஒண்ண வச்சிண்டா சரி. தினமும் ஒருத்திகூட நின்னு போட்டோ எடுத்து பேஸ் புக்லலன்னா போடறதுகள். உனக்கெங்க புரியப்போறது. கலிகாலம்.

    தாத்தா பேசியதிலிருந்தே பாட்டிக்கு அடிவயிறு கலங்கிக்கொண்டிருந்தது. பாக்கறதுக்கும் இந்தப்பொண்ணு வடக்கத்தி மாதிரி தெரியறது. தமிழ் தெரியுமோ என்னவோ?

    நேரமாச்சு. பூஜைசாமான்கள அலம்பி வச்சிருக்கியா. நைவேத்தியத்துக்கு ரெடி பண்ணு. தாத்தாவின் குரல்.

    ஆமா. இதுவொண்ணுதான் இந்தாத்துல குறைச்சல். பொலம்பிக்கொண்டே பூஜையறையை நோக்கி நடக்கலானாள் பாட்டி.

    பாட்ஸ் நானும் ரெடி. இன்னிக்கு என்ன டிபன். சூடா டிபனக் கொடு. வேற எதுவும் இப்போ கேக்காத. பசி வயத்தக் கிள்ளறது.

    ஆமாண்டா இந்தாத்துல நான் வாயில்லாப் பூச்சியா வளையவந்து எல்லாருக்கும் வேண்டிய சவுகரியம் மட்டும் பண்ணிக்குடுத்துடணும். ஆளாளுக்கு அதிகாரம் பண்ணுங்கோ. நான் அந்தப்பொண்ணப்பத்தி ஒண்ணும் கேக்கப்போறதில்லை. எக்கேடுகெட்டுப் போ. சொல்லிக்கொண்டே இட்லி சட்னியைப் பரிமாறி விட்டு சமயல் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள் பாட்டி. சம்யுக்த் தன் வேலையைப் பற்றின அனுபவங்களைப் பகிரத் தொடங்கினான்.

    டேய் அந்தப் பொண்ண எழுப்புடா. வெறும் வயித்தோட எவ்ளோ நேரம் தூங்குவா. சமயலே முடியப்போறது. சொல்லிவிட்டு எழுப்பச்சென்ற பாட்டிக்கு ஆச்சரியம். ஸ்வேதா அங்கில்லை. நடைவாசல் பெஞ்சில் உட்கார்ந்து தாத்தாவுக்கு பேப்பர் வாசித்துக் கொண்டிருக்கிறாள். ஓலை விசிறியை வீசிக்கொண்டே தாத்தா கேட்டுக்கொண்டிருக்கிறார்.

    பாருடா. இந்த மனுசன. அந்தப் பொண்ணு நுழஞ்சதிலேந்து என் உசிர வாங்கிட்டு இப்போ உறவு கொண்டாடிண்டிருக்கார்.

    பாட்டி தாத்தா மேல தப்பில்ல. ஸ்வேதா அந்த மாதிரி. அவ எனக்கு ப்ரெண்டோ வெல் விஷரோ இல்ல. காரியக்காரி. இப்போ என் பிராஜக்ட் நல்லா போயிட்டிருக்கறதால என் பின்னாலயே சுத்தறா. எப்டி கழட்டி விடறதுனுதான் தெரியல. கொஞ்ச நேரத்துல ஏதாவது செஞ்சு உங்ககிட்டயும் நல்லபேர் வாங்கிடுவா பாருங்க. அதுக்காக இவள முழுசா நம்பவே முடியாது. போன மாசம் வரை என்னோட எதிர் டீம் கூட சுத்திக்கிட்டிருந்தா.

    ‘இன்னாதே பேயோடானும் பிரிவுனு’ பழமொழியே இருக்கு. பேயா இருந்தாலும் பழகிருச்சின்னா பிரிஞ்சிபோகவைக்கறது கஷ்டம்னு சொல்லுவாங்க. அதனால முதலிலேயே தகுதியானவங்க யாருனு பாத்து தெரிஞ்சுக்கிட்டு பழகு.  இந்தமாதிரி ஆளுங்கள எப்டி தூரத்துல வைக்கணும்னும் கத்துக்கோ. நான் தாத்தாவக் கூப்பிட்டு மெதுவா சொல்றேன் இவளப்பத்தி. சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடந்தாள் பாட்டி.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 32

    கதை வடிவில் பழமொழி நானூறு – 32

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 65

    மனங்கொண்டக் கண்ணும் மருவில செய்யார்
    கனங்கொண்(டு) உரைத்தவை காக்கவே வேண்டும்
    சனங்கள் உவப்பன செய்யாவும் செய்க
    ‘இனங்கழு வேற்றினார் இல்’. 

    பழமொழி – ‘இனங்கழு வேற்றினார் இல்’

    பக்கத்துவீட்டிலிருந்து பலத்த சத்தம். எட்டிப் பார்த்தேன்.

    எல பொசகெட்ட பயலே. சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ உம்பாட்டுக்கு போய்க்கிட்டிருந்தா எப்டி? ஆளு மட்டும் பனமரம் கணக்கா வளந்து நிக்க. உங்க சித்தப்பந்தான் புத்திகெட்டு அலையுதாம்னா உனக்கெங்கல போச்சு புத்தி. அவன் பேச்சக்கேட்டு மண்டை கொளம்பி கிளம்பி போயிடுச்சோ. இங்ஙனகூடி அரிவாளத் தூக்கிட்டுத் திரிஞ்ச…. பொறவு உனக்கும் எனக்கும் ஒட்டுமில்ல ஒறவுமில்லனு சொல்லிப்புடுவேன். கஞ்சிகுடிக்க நாளமுன்னயும் வாசப்படி மிதிக்கவொட்டாம ஆகிப்போவும். நாதியத்து தெருவுல நிப்ப. மரியாத கெட்டுப்போவும். போலீஸ் கேசு ஆகிப்போச்சுதுன்னா குடும்பத்தோட நாண்டுகிட்டு நிக்க வேண்டியதுதான். வரமுறை தெரியாம சிலுப்பிக்கிட்டு அலையாத. ஆமாம்… சொல்லிப்புட்டேன். தலைமுடியை கொண்டையிட்டுக்கொண்டே கத்திக்கிட்டிருக்கா வெள்ளைச்சீல ஆச்சி.

    இந்தக் கிராமத்தில் பெரும்பாலும் இந்தச் சத்தங்கள் சாதாரணம்தான். ஒண்ணு வயல்வரப்பு பிரச்சினையா இருக்கும். இல்ல மாடு பயிர மேஞ்சிருக்கும். ஆனா இவங்க பிரச்சின வேற மாதிரியில்ல தோணுது. சரி பொடிநடையா போயி பெட்டிசன் சீனுகிட்ட விசாரிச்சா சேதி தெரிஞ்சுபோகும்.

    என்னய மாதிரி அரசாங்க வேலை பாத்துட்டு ரிடையர்மெண்ட் கு அப்பறம் கிராமத்துல குடியேறினவங்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்ல. மாசம் பொறந்தா பென்சன் வரும்.அத வச்சி காலத்த கழிச்சிர வேண்டியதுதான். பாவம் இந்த உழைப்பாளிகள்.

    மழை பெய்யலேன்னா பிரச்சினை. அதிகமா பெய்தா பிரச்சினை. பூச்சிகளால பிரச்சினை. இப்ப புதுசா வெட்டுக்கிளியாலயும் பிரச்சினையாம். நேத்துதான் பொலம்பிக்கிட்டிருந்தா இந்த ஆச்சி. இப்ப இந்தக் கத்து கத்திக்கிட்டு நிக்கறா. அவளோட செல்வத்திருமகனுக்கு சரியா படிப்பு வரல. அவனும் விவசாயந்தான் பாக்கறான். மூக்குக்கு மேல கோபம் மட்டும் வந்திரும். ஊர்ல இருக்குற எல்லாப் பிரச்சினையையும் தலைக்கு மேல போட்டுக்கிட்டு முன்னால போய் நிப்பான். இப்ப அப்டி என்னத்த இழுத்துண்டு வந்து நிக்கறானோ தெரியல. சீனு வாசத்திண்ணையிலதான் உக்காந்திருக்கான். மெதுவாக பேச்சுகுடுத்தேன். சீனு விஷயத்தைக் கக்க ஆரம்பிச்சான்.

    அது ஒண்ணுமில்ல. நம்ம சீனித்தேவர் பொண்ணு அதான் டவுண் காலேஜ்ல படிக்கறாளே அவ நம்மஊர் பஸ்டாண்டுல நின்னு யாரோ ஒரு பையன்கூட பேசிண்டிருந்தா போல. அதுக்குத்தான் ஊரே இந்தக் குதி குதிக்கிறது.

    சமஞ்ச பிள்ள இப்டிச் செய்யலாமா. குனிஞ்ச தலநிமிராம காலேஜுக்கு போனேம் வந்தேம்னு இருக்காம இப்டி எங்க குடும்ப மானத்த வாங்கிப்புட்டாளேன்னு அவர் சம்சாரம் வாசல்ல நின்னு புலம்பிக்கிட்டு இருந்தாங்க. உள்ள சொக்காரன், பங்காளினு ஒரு கூட்டமே அந்தப்பொண்ண சிபிஐ ரேஞ்சுல விசாரிச்சிண்டிருக்கா. அதுல உங்க பக்கத்து ஆத்துப் பிள்ளையாண்டான் அரிவாள வேற எடுத்துண்டு போறான். என்ன நடக்கப் போறதோ.

    அக்கம்பக்கத்துல கூடப்படிக்கிற ரெண்டு பொண்ணுகளும் போய் அந்தப்பையனும் நாங்களும் ஒரே பாடத்த எடுத்துப் படிக்கறதால பாட சம்பந்தமா ஏதோ கேட்டான். அவ்வளவுதான்னு சொல்லியும் யாரும் கேக்கறதா இல்ல.

    ஏண்டா சீனு ‘இனங்கழு வேற்றினார் இல்’ ங்கற பழமொழியக் கேள்விப் பட்டிருக்கியோ. இது பழமொழி நானூறுல முன்றுரை அரையனார் சொன்னது. அதுல அவர் அரசனா இருந்தாலும் பெரும்பாலான மக்கள் சொல்லறதக் கேக்காம என் சட்டம் இப்டித்தான் சொல்றது அதன்படிதான் நடப்பேன்னோ அல்லது எதுத்து நிக்கற எல்லாரையும் கழுவிலேற்றி கொன்னுடுவேன்னோ சொன்னதா யாருமில்லனு சொல்லியிருக்கார். சட்னு ஞாபகம் வந்ததால சொன்னேன்.

    இந்த மாதிரி சட்டத்தைக் கையில எடுத்துண்டு எடுத்தேன், கவிழ்த்தேன்னு நடந்துக்கிறவாகிட்ட என்னன்னு போய்ப் பேச. அதுக்காக சும்மா உக்காந்து பாத்துண்டும் இருக்க முடியாது. நான் பேசிக்கொண்டேபோக…

    சொந்தப்பொண்ண சந்தேகத்தின் பேர்ல கவுரக்கொலையெல்லாம் பண்றது தப்புனு தேவர்கிட்ட எடுத்துச் சொல்லற தைரியம் உங்க பக்கத்து ஆத்து ஆச்சிக்குத்தான் உண்டு. வாரும் சட்னு போய் ஆச்சியக் கூட்டிண்டு வரலாம். சீனு சொல்ல நானும் எழுந்து கிளம்பினேன்.

    பாடல் 66

    புன்சொல்லும் நன்சொல்லும் பொய்யின்(று) உணர்கிற்பார்
    வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?
    புன்சொல் இடர்ப்படுப்ப தல்லால் ஒருவனை
    ‘இன்சொல் இடர்ப்படுப்ப தில்’.

    பழமொழி- ‘இன்சொல் இடர்ப்படுப்ப தில்’

    உம் பொண்ணு ஜனனிக்காக இங்க வந்ததில நிறைய பேரோட நிறம் வெளுக்கறது தெரியுது. சொல்லிக்கொண்டே நடந்து கொண்டிருக்கிறார் என் கணவர்.

    அம்மா… அப்பாவ அங்கயெல்லாம் போகச் சொல்லாதீங்க. அந்த சிடுமூஞ்சி ஹெச் எம் பாத்தாங்கன்னா கேள்வி கேட்டே உண்டு இல்லனு பண்ணிடுவாங்க.

    மகளின் ஆதங்கத்துக்குப்பின் கவனிக்க ஆரம்பிச்சேன். இவர் எதுக்கு குட்டி போட்ட பூனை மாதிரி சுத்திக்கிட்டு இருக்காரு. போகிற போக்குல ஏதோ துணியில சாயம் வெளுத்தமாதிரி நிறம் வெளுக்குதுனு வேற சொல்றாரு. நாம இங்க வந்த வேலைய கவனிக்காம எதுக்கு இப்ப இந்த நடை. ,

    யோசித்துக்கொண்டிருக்கும்போதே கதவைத் திறந்து வெளியில் வந்த அந்த மஞ்சள் புடவைக்காரி. ..ஜனனி 10 ‘பி’ உள்ள வாம்மா. நாற்காலியிருந்து எழுந்த என்னை இப்ப ஸ்டூடன்ட் மட்டும்தான் உள்ள வரணும். நாங்க கூப்பிடும்போது நீங்க வந்தா போதும். ஜனனியோட அப்பா வந்திருக்கார் இல்ல. கன்பார்ம் செய்துகொண்டு உள்ளே சென்றுவிட்டாள். கதவும் அடைக்கப்பட்டுவிட்டது.

    சாவகாசமா ஜனனி அப்பா வந்து விசாரிக்கிறார். பொண்ண எங்க. நீ மட்டும் உக்காந்திருக்க.

    அவளை உள்ளே கூப்பிட்ட தகவலைச் சொன்னவுடன் சரி எழுந்திரு. ஒரு ரவுண்ட் இந்த ஸ்கூல சுத்திக்காட்டறேன். சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்துவிட்டார். பக்கத்து நாற்காலிகள் எல்லாம் விநோதமாக எங்களைப் பார்க்க ஆரம்பித்தன.

    தலையெழுத்து. இந்த மனுசன்கூட. ஜனனி இரண்டாம் வகுப்புலேந்து இங்கதான் படிக்கறா. பாதிக்குமேல கட்டிடங்கள் என் கண் முன்னாலதான் கட்டினாங்க. இந்த ஸ்கூலோட மூல முக்கு எல்லாம் எனக்கு நல்லாத் தெரியும். நீங்க தான் ஒருதடவ கூட வந்ததில்ல. சொல்லிக்கொண்டே அவரைத் திரும்ப அழைத்துவர பின்னாலேயே போகிறேன்.

    அனைவரின் கண்களும்எங்கள் பக்கம் என்பதால் இப்ப என்ன அவசரம். வந்த வேலய முடிச்சுட்டு குடும்பமா ஊர்வலம் போகலாம். இப்ப வந்து பேசாம இந்த நாற்காலில உக்காருங்க. எப்ப வேணும்னாலும் நம்ம ரெண்டு பேரையும் கூப்பிடுவாங்க. சொல்லிவிட்டு நான் அமர்ந்தேன்.

    அதெல்லாம் அரைமணிநேரம் ஆகும் விசாரிச்சிட்டேன். இப்ப ஜனனிக்கு ஒரு டெஸ்ட் குடுத்திருப்பாங்க. அத அவ எழுதி முடிச்சி அதோட ரிசல்ட வச்சிக்கிட்டுதான் நம்மகிட்ட பேசுவாங்க.

    பக்கத்து நாற்காலி பேச்சு குடுக்க ஆரம்பித்தது. ஹாய்.. நான் ஸ்வேதாவோட அம்மா.  வேற ஏதாவது ஸ்கூலுக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கீங்களா. என்ன குரூப் எடுக்கணும்னு டிசைட் பண்ணியிருப்பீங்கயில்ல அதனால கேட்டேன். கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் அந்த அம்மாள் தொடர்ந்தாள். எங்க ஸ்வேதாவோட ஸ்மார்ட்னஸ்கு அவள நாங்க சட்டப்படிப்புல சேர்க்கலாம்னு இருக்கோம். அந்த சப்ஜெக்ட் இந்த ஸ்கூல்ல இல்லாததால நாங்க வேற இடத்துல அப்ளை பண்ணிட்டோம். இப்ப சும்மா ஒரு பார்மாலிட்டிக்கு வந்திருக்கோம். இவங்க சொல்லப்போறத சீரியசா எடுத்துக்க மாட்டோம்.

    அவர்கள் பேசிக்கொண்டே போக என் மனம் மூடிய கதவுக்கு உட்புறம் என்ன நடக்கிறதோ என எண்ணத் தொடங்கியது. ஒவ்வொருத்தர் தங்கள் பிள்ளைகளைப் பத்தி எவ்வளவுதூரம் யோசிச்சு முடிவெடுக்கிறாங்க. நாமளும் இருக்கோமே என சலித்துக்கொண்டு அமர்ந்திருக்கும் என்னை நோக்கி …. ஆமா நான் பேசிக்கிட்டே இருக்கேன்.உங்க ஜனனி என்ன குரூப் எடுக்கப்போறா. மேற்படிப்பு என்ஜினியரிங் தானே. ஸ்வேதா அடிக்கடி சொல்லுவா ஜனனிக்கு கணிதம் புடிக்கும்னு. ஒப்புக்கு நானும் ஆமாம் எனத் தலையாட்டிவிட்டு எழுந்து விட்டேன்.

    சொல்லிவைத்தாற்போல் மூடிய கதவு திறக்கப்பட்டு முதலில் எங்களைத் தான் அழைக்கிறார்கள். இந்த மனுசன் எங்கதான் இருந்தாரோ நல்ல பிள்ளைபோல் முதலில் நுழைகிறார். எங்கள் இருவரையும் எதிரே அமரச் செய்து ஜனனியை வெளியில் அனுப்பிவிட்டார் அந்த உளவியலாளர்.

    அறையைச் சுற்றி நோட்டமிட்டேன். பள்ளி முதல்வரின் அறை அது. இன்றைய தினத்துக்காக மூன்று மேசைகளில் உளவியலாளர்கள் அமர்ந்திருக்கிறார்கள். ஒரே சமயத்தில் மூன்று பெற்றோர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அனைவரும் பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்குக் காத்திருக்கும் மாணவன் போல் அடக்கமாய் அமர்ந்திருக்கின்றனர்.

    எங்கள் முன்னே அமர்ந்திருக்கும் உளவியலாளர் ஜனனி எழுதிய தேர்வின் விடைத்தாளைக் காண்பித்து ஏதோ பேச எத்தனிக்கிறார். அவர் ஆரம்பிக்குமுன் என் கணவர் அதிக அளவு கெட்ட வார்த்தை பேசுகிற பசங்களை நீங்க எப்படி அறிவுரை சொல்லித் திருத்துவீங்க எனக் கேட்கிறார்.

    மீண்டும் அங்கிருந்த அனைவரின் கண்களும் எங்களின்மேல். அங்கு மாட்டப்பட்டிருந்த கடிகாரம், சார்ட்பேப்பர் இவைகளெல்லாம் கூட எங்களைப் பார்த்து முறைப்பதுபோல் உணர்கிறேன். அந்த மஞ்சள்புடவைக்காரி கையில் வைத்திருக்கும் லிஸ்டைக் காட்டி உளவியலாளர் காதில் ஏதோ சொல்கிறாள். அதற்குமேல் பொறுக்க முடியாமல் மெதுவான குரலில் கொஞ்சம் சும்மா உக்காந்திருக்கீங்களா. எந்த நேரத்துல எதப் பேசறதுனு தெரியாம. வந்த வேலையைப் பாக்கலாமே என்கிறேன்.

    என்னசார் பதிலே இல்ல என எதையுமே காதில் வாங்கிக்காம மீண்டும் கேட்கிறார் என் கணவர்.

    நீங்க ஜனனியப் பத்தி சொல்ல வந்ததச் சொல்லுங்க சார். மற்ற விசயத்தைப் பத்தி அப்பறம் பேசலாம். இடைமறிக்கிறேன் நான்.

    எங்கள் இருவரையும் பார்த்து நிதானமாக ஆரம்பிக்கிறார் அந்த உளவியலாளர்.

    எப்பவுமே நாங்க பசங்களுக்கு அனுபவபூர்வமாதான் உணர்த்துவோம். அறிவுரையாச் சொன்னா ஒரு காதுல வாங்கிட்டு இன்னொரு காது வழியா வெளிய தள்ளிடுவாங்க. அதிகமா வசவுச்சொல் பேசற பசங்க தங்களச் சுத்தி நடக்கறத நல்லா கவனிக்கிறாங்கனு அர்த்தம். அவங்க உபயோகிக்கிற சொற்கள் எல்லாம் வீட்டுக்குள்ள அப்பாவோ அம்மாவோ அல்லது வேறு ஒரு உறவினரோ உபயோகிக்கிற சொற்களாயிருக்கலாம் அல்லது குடியிருக்கிற பகுதியில பேசற பேச்சுக்களா இருக்கலாம். அத முதலில் கவனிப்போம். அப்படிப்பட்ட பசங்களுக்கு உற்ற நண்பர்கள்னு யாரும் அமைய மாட்டாங்க. அது எதனாலன்னு புரிஞ்சிக்காமயே தனித்து இருக்கோங்கிற வருத்தத்தில மேல மேல வகுப்பறையில அடாவடித்தனம் பண்ணுவாங்க.

    இந்தப் பசங்கள எங்ககிட்ட கூட்டிக்கிட்டு வரும்போது இனிமையா எப்படிப்பேசணும்னு பயிற்சி குடுப்போம். அதுக்குப்பிறகு இந்த மாதிரி வகுப்பறையில் பேசிப்பாருங்க. பதினைந்து நாள் போதும் உனக்கு ஒரு நல்ல நண்பன் கிடைச்சிடுவான்னு ஊக்குவிப்போம். முதலில் செஞ்சுதான் பார்ப்போமேன்னு தொடங்கற அவங்க ஒருத்தன  புன்மையான சொற்கள் துன்பத்திற் கொண்டு விடுமேயல்லாமல், இனிமையான சொற்கள் ஒரு போதும் துன்பத்திற் கொண்டு விடுவதில்லை அதன் பலன் நல்லதாகவே இருக்கும்னு உணர ஆரம்பிச்சிட்டாங்கன்னா வாழ்நாள் முழுக்க மத்தவங்க மனசுநோகாம இனிமையாகவேதான் பேசுவாங்க.

    புரியுது. புரியுது. ‘இன்சொல் இடர்ப்படுப்ப தில்’னு பழமொழியே இருக்கே. இவர் குறுக்கிட நான் தொடையைக் கிள்ளுகிறேன்.

    உளவியலாளர் தொடர்கிறார். சார் உங்க மகள் ஜனனி உங்களமாதிரியே புத்திசாலி. தனக்குப் பிடித்தது கணிதப் பாடம் அப்டிங்கறத தெளிவா தெரியப்படுத்தி இருக்காங்க இந்த டெஸ்ட்ல. அதனால அவங்களுக்குப் பிடித்த படிப்பைத் தொடர அனுமதியுங்க. வாழ்த்துக்கள்.

    அவர் முடித்துவிட்டார். இவ்வளவுதானா. எனக்கு ஒரே ஏமாற்றம். இரண்டு மணிநேரம் உட்கார்ந்தது இந்த இரண்டு வார்த்தை கேட்கத்தானா. வெளியே வந்தவொடனே இவர் மீண்டும் ஆரம்பிக்கிறார். நம்ம பக்கத்து வீட்டு ரமேஷும் அவர் மனைவியும் தம் பிள்ளையக் கூட்டிக்கிட்டு வந்து வகுப்பாசிரியர் கிட்ட பேசிக்கிட்டு இருந்தாங்க. ரமேஷ் ரொம்ப வருத்தமா சொல்லிக்கிட்டு இருந்தான். எம் பையன் நிறைய கெட்ட வார்த்தைகளை சரளமா உபயோகிக்கிறான். அவன் வகுப்புல இருக்கற பசங்கள கண்டிச்சு வைங்கன்னு. அதுக்கு அந்த ஆசிரியர் இந்த மாதிரி நடக்க வாய்ப்பே இல்ல. உங்க மகன்தான் மத்த பசங்களுக்குக் கத்துக் கொடுக்கிறான். அதப் பத்தி பேசதான் நான் உங்களக் கூப்பிட்டுவிட்டேன். ஒண்ணும் பெரிய பிரச்சினைஇல்ல. எங்க பள்ளியில உளவியலாளர் இருக்கார். அவர் கிட்ட தொடர்ந்து ஒருவாரம் அரைமணிநேரம் அனுப்பினா சரியாயிடும். அதுக்கு உங்க அனுமதி தேவை. அதுக்காகத்தான் கூப்பிட்டுவிட்டேன்னாங்க. நான் நிக்கறத கவனிச்சுட்டு அவங்க திரும்பிப் பாத்ததால வந்துட்டேன். அதனாலதான் இப்ப கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்.

    பாத்தியா அவன் சாயம் எப்டி வெளுத்திருச்சுனு. வீட்டுக்குள்ள இவன் சண்டபோடும் போது சொல்ற வார்த்தைகளத்தான் பிள்ளை பள்ளிக்கூடத்துல சொல்றானோ என்னவோ. என்னவரின் கற்பனைக் குதிரை சிறகடித்துப் பறக்க நான் ஜனனியுடன் மௌனமாய் நடந்தேன்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 31

    கதை வடிவில் பழமொழி நானூறு – 31

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 63

    மறந்தானும் தாமுடைய தாம்போற்றின் அல்லால்
    சிறந்தார் தமரென்று தோற்றார்கை வையார்
    கறங்குநீர்க் காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப!
    ‘இறந்தது பேர்தறிவார் இல்’.

    பழமொழி – ‘இறந்தது பேர்த்தறிவார் இல்’

    என்னிக்குமில்லாத படபடப்பு இன்னிக்கு. நிலவன் அந்த அறையின் குறுக்கும் நெடுக்குமா எதையோ யோசிச்சுக்கிட்டே நடந்துக்கிட்டு இருக்கார். அந்த அறை குளிரூட்டப்பட்டு இருந்தாலும் அவருக்கு வேர்க்குது. அவர் மனைவி வேலைக்காரிக்கு கட்டளையிடறாங்க.

    மேகலா… ஐயாவுக்கு சட்னு ஒரு ஜூஸ் எடுத்துட்டு வாம்மா.

    சொல்லிவிட்டு அந்த அறையில் போடப்பட்டிருக்கிற பெரிய சைஸ் குஷன் நாற்காலியில சாய்ந்து உட்கார்ந்து தன் ஆரணி பட்டுப் புடவைத் தலைப்பால முகத்தைத் துடைச்சிக்கிறாங்க. ஆரஞ்சு நிற புடவையிலிருக்கிற நீலநிற வண்ணத்துப்பூச்சிகள் அதிலேருந்து விடுதலையாகி அந்த அறை முழுக்க பறக்கற மாதிரி இருக்கு. அந்த வண்ணத்துப் பூச்சிகளப் பாத்தவொடனே நிலவனுக்கு மனதில் சந்தோசம். இருக்காதா பின்ன அவர் கவிஞர் இல்லயா. கவிதை எழுதி தான் சம்பாதிச்ச இருபது பவுன் நகைகளில் பிரச்சினைன்னுதானே இப்ப இவ்வளவு துக்கம் அவருக்கு.

    யோவ்…. நிறுத்துய்யா. வண்ணத்துப்பூச்சி புடவைத் தலைப்புலேந்து வெளிய வந்து பறக்குதுங்கறதே ஜாஸ்தி. அதுல ஒரு கவிஞர் கவிதை எழுதியே இவ்வளவு சம்பாதிச்சிட்டாருன்னு காட்டினா சீரியல யாரும் பாக்க மாட்டாங்க. நமக்கு நஷ்டம்தான்.

    யாருய்யா இந்த எழுத்தாளர இங்க கூட்டிக்கிட்டு வந்தது. இவர் ஏதோ குழந்தைகளுக்குக் கதை எழுதரவர் போல. நம்ம சீரியலோட ரேஞ்சுக்கு ஒருத்தரக் கூட்டிக்கிட்டு வாங்கன்னா ….. என்னய்யா நீங்கயெல்லாம். பேசாம நானே உக்காந்து எழுதித் தொலைச்சிரலாம் போல. இப்ப நேரம் வேற இல்ல.

    சரி. உன் கற்பனையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு நேரடியா கதையச் சொல்லு. அதுல ஏதாவது மாற்றம் செய்யணும்னா நான் சொல்றேன். டேரக்சன்லேந்து மேக்கப் வரை எல்லாம் பண்ணியாச்சு. என்ன…. எனக்குக் கற்பனை கொஞ்சம் கம்மினு நினைச்சு கதை எழுத முயற்சிக்கல. இனிமே அதையும் செஞ்சிட வேண்டியதுதான்.

    அந்த சிடுமூஞ்சி சீரியல் டேரக்டர் வசவுகளை நிறுத்தியவுடன் நான் சொல்ல ஆரம்பித்தேன். அந்த நிலவனுக்கு அன்னிக்கு வங்கியிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதுல அவர் அடகு வைத்த இருபது பவுன் நகைகளும் போலினு நிரூபிக்கப்பட்டதால இருபத்துநான்கு மணிநேரத்துக்குள்ள வங்கியிலேந்து வாங்கின பணத்தைத் திருப்பிக்கட்டணும்னு சொன்னாங்க. இல்லையினா சட்டப்படி நடவடிக்கை எடுப்பாங்களாம். இதைச் சொன்னது.வங்கி மேலாளரான அவரதுநெடுநாள் நண்பர்தான். அவராலதான் பணம் விரைவா கிடைச்சது. வாங்கின பணத்தை மகனோட பொறியியல் படிப்புக்காக கல்லூரியில கட்டியாச்சு. மிச்சப் பணத்த பெரியப்பா மகனுக்கு அனுப்பி ஒரு துண்டு நிலமும் வாங்கச் சொல்லியாச்சு. இப்ப போயி இப்படின்னா மானப் பிரச்சினையில்லயா.

    மனைவியோட நகை முழுக்க பெண் கல்யாணத்துக்கு செலவழிஞ்சுபோச்சு.

    நிலவனோட மனைவி அந்த நகை வாங்கிய கடையோட சீட்டத் தேடிக்கிட்டு இருக்காங்க. அவங்க போலி நகை வித்தாங்களானு கண்டுபிடிக்க. இது இப்படியிருக்க அவரோட பெரியப்பா மகன்னு ஒரு கேரக்டர் சொன்னேனே அவர் மனசுக்குள்ள சந்தோசப்பட்டுக்கிட்டு இருக்கார்.

    நிலவன் அண்ணன் பட்டணத்துல நல்லா சம்பாதிக்குது போல. நம்மகிட்ட குடுத்துவச்சிருந்த இருபது பவுன ஆட்டையப்போட்டு மக கல்யாணத்த சிறப்பா நடத்தியாச்சு. இருந்தாலும் எம் பொஞ்சாதி கெட்டிக்காரி. அண்ணன சமாளிச்சுக்கிடலாம்னு  அதுகணக்காவே கவரிங் நகை வாங்கி குடுத்து உட்டுட்டா.  அண்ணன் பேங்குல வைக்கப்போறேம்னு சொன்னப்போ கொஞ்சம் திக்குனு இருந்திச்சு. பெறகு அதைவச்சு வாங்கின பணத்தையும் எங்கிட்டல்லா அனுப்பி நிலம் வாங்கச்சொல்லுது. இனி ஒரு பிரச்சினையில்ல…. மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டே வரப்ப்புல நடந்துக்கிட்டு இருக்கார்.

    என்னய்யா இது. உன் கதையில எல்லாரும் நடந்துக்கிட்டே இருக்காங்க. தனக்குத்தானே பேசிக்கிறாங்க. இதுல ஒரு வசீகரமும் இல்லயே… சரி உன்னயத் திட்டி எனக்கு என்ன லாபம். நாளைக்கு வா பாக்கலாம்… என்னை அனுப்பி விட்டார் சிடுமூஞ்சி டேரக்டர். ஏதோ கதை சொல்லி கொஞ்சம்பணம் சம்பாதிக்கலாம்னு நினைச்ச எனக்கு ஏமாற்றம்தான். மொதல்ல வீட்டுக்குப்போய் உக்காந்து அம்மா கூட எல்லா சீரியலயும் பாக்கணும்.அப்பதான் இவர் என்ன எதிர்பார்க்கறார்னு தெரியும். நான் என்னமோ கருத்து சொல்லலாம்னு இந்தக் கதையச் சொன்னேன். முழுசா சொல்ல உட்டாதானே. ‘இறந்தது பேர்த்தறிவார் இல்’ங்கற பழமொழியச் சொல்லி தம்முடைய உடைமைகளைத் தாமே காத்துப் பேண வேண்டுமேயல்லாமல், நம்பிக்கையற்ற பிறர் பேணுவார் என விடுதல், அதனை இழத்தற்கே காரணமாகும் அப்டிங்கற அதன் பொருளக் கடைசியில சொல்லணும்னு இருந்தேன்.

    நல்லவேளை சொல்லல. சொல்லியிருந்தா நான் என்ன பொழுதுபோக்குக்காக சீரியல் எடுக்கறேனா அல்லது பாடம் நடத்தறேனான்னு அதுக்கும் கத்தியிருப்பார். நல்லதுக்குக் காலம் இல்ல.

    பாடல் 64

    இரப்பவர்க்(கு) ஈயக் குறைபடும் என்றெண்ணிக்
    கரப்பவர் கண்டறியார் கொல்லோ – பரப்பிற்
    துறைத்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!
    ‘இறைத்தோறும் ஊறும் கிணறு’.

    பழமொழி – ‘இறைத்தொறும் ஊறும் கிணறு’

    ஏ…..ஐயா…. கதவ ஒருக்களிச்சு வச்சுக்கிட்டு சாப்பிடக்கூடாதா. மட்ட மல்லாக்க திறந்து வச்சா யாரும் உள்ள வந்துற மாட்டாகளா… அப்பத்தா தன் பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போகிறாள். இன்னிக்கு எங்க வீட்ல ஸ்பெஷல் சமயல். அவியல், சாம்பார், வாழைக்கா பொடிமாஸ், வாழைப்பூ வடை, அப்பளம்….. இப்படி. எங்க அப்பத்தா சமைச்சது. நானும் என் மனைவியும் எல்லாத்தையும் மேசைமேல பரப்பி வச்சிக்கிட்டு நிதானமா ஒரு கட்டு கட்டிக்கிட்டு இருக்கோம்

    பாம்பேக்கு தனிக்குடித்தனம் வந்ததிலேந்து நம்ம ஊரு சமயல இப்படி சாப்பிடவே முடியல. வந்த முதல் நாளே வெள்ளக் காடா இருந்த பாம்பேயில தான் கால் வைச்சோம். கொரோனா ஊரடங்கால வொர்க் ப்ரம் ஹோம்னு சொல்லிட்டதால வெளியில போக வேண்டிய அவசியமே ஏற்படல. சாமான்களையும் வீட்டுக்கே வர வச்சிடறோம். திரும்பத் திரும்ப சமைச்சு சாப்பிட்டுட்டு வீட்டுக்குள்ளயே இருக்கறதால இங்க உள்ள பழக்கப்படி சப்பாத்திக்கு அதிகமா மாறிட்டோம். இரண்டு நாள் முன்ன அப்பாவும், அப்பத்தாவும் வந்ததிலேருந்துதான் தோசை,இட்லி எல்லாம் பாக்க முடியுது. சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போதே எதிர் ப்ளாக் அன்மோல் வருகிறார். அவர் கூட அவரோட பத்து வயசுபொண்ணும் நுழையறாங்க.

    என்ன பையா சௌத் இந்தியன் சாப்பாடு மணக்குது. பாட்டியோட கைப்பக்குவமானு கேட்டுக்கிட்டே டைனிங் டேபிள் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கிட்டு உட்காரறார். அங்க இருந்த தட்டை எடுத்துவச்சி என் மனைவி அவரை உபசரிக்கிறாள். பாப்பா இப்பதான் சாப்பிட்டான்னு சொல்லிட்டு தான் பாட்டுக்கு ரசிச்சுச் சாப்பிட ஆரம்பிச்சுட்டார். நாங்க இங்க குடி வந்ததிலேருந்து அவர் அப்படி வித்தியாசம் பாக்காம சொந்தக்காரன் மாதிரிதான் பழகிக்கிட்டு இருக்கார். ஆனா அப்பாக்கும் பாட்டிக்கும் இது புடிக்கலனு நல்லாவே தெரியுது.

    அப்பத்தா திரும்பவும் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்குதான் கதவ மூடி சாப்பிடுனு சொன்னேன். சொன்னா அப்பத்தா… கஞ்சம்னு நினைச்சுக்கிடுவீங்க.. நாங்களும் நாலுபேருக்கு தினமும் சோறுபோட்டுதான் வாழ்ந்தோம். உங்க தாத்தா தெனைக்கும் வரையிலேயே யாரையாச்சும் கூட்டிக்கிட்டு தான் சாப்பிட உட்காருவார். விறகு அடுப்புல சமைக்கறதால பொசுக்குனு பொங்கிப்போட முடியாதுனு மதியம் நாலுபேருக்குள்ள சாப்பாட்ட சேத்து பொங்கறது வழக்கந்தான். ஆனா அவுக கூட்டிக்கிட்டு வாரவுகயெல்லாம் சோத்துக்கு வீங்கி அலையுதவங்கயில்ல. வெறுங்கைய வீசிக்கிட்டு வரமாட்டாக. ஒரு குலை வாழைப்பழம், மாங்கா, என்னமும் விளைஞ்சத கையில குடுத்துட்டுதான் அடுத்த வீட்ல கைநனைப்பாக. என்னம்போ எம் மனசுல பட்டதச் சொல்லிப்போட்டேன். இந்த ஆளு சாப்புட உக்காந்தாலே வந்துருதார். சோத்துல கொதி போட்டுட்டாருன்னா  பொறவு சங்கடந்தான். அதுக்குத்தான் சொல்லுதேன்.

    அன்மோல் அப்பத்தாவப் பார்த்து சொல்றது எதுவும் அவங்களுக்குப் புரியல. அவர் அவங்கள தன்னோட குழந்தைகள் காப்பகத்துக்கு வரச்சொல்லி அழைக்கிறார். அவங்களுக்காக புது கட்டிடம் கட்டியிருக்காராம். இப்ப இருக்கற கட்டிடத்துல அடிக்கடி வெள்ள நீர் நுழைஞ்சிருதாம். அதோட தொடக்க பூசைக்குதான் அப்பத்தாவ வரச்சொல்றார். அங்க இருக்கற இருபது பிள்ளைகளுக்கும் ஏதாவது ஸ்வீட் பண்ணிக்குடுக்க முடியுமான்னு கேக்கறார். லட்டு பண்ண மிடாயிவாலாவ வரச்சொன்னாராம். அப்பத்தா சரின்னாங்கன்னா அவன வரவேண்டாம்னு சொல்லிடுவேங்கறார்.

    அவர் சொன்னதை முழுசும் சொல்லாம என் மனைவி, அப்பத்தா…..  உங்களுக்கு லட்டு பண்ணத் தெரியுமா இவர் கேக்கறார்னு சொன்னவுடனே கோவிச்சுக்கிட்டு எழுந்து போயிட்டாங்க. படுத்துக்கிட்டு இருந்த அப்பாவ எழுப்பி கூட்டிக்கிட்டு வராங்க.

    உம்மவன் செய்யுத நாயத்த நீயே கேளு அய்யா. நான் பேசுதது எதுவும் புரிஞ்சுக்கிடாம புருசனும் பொஞ்சாதியும் அந்த ஆளுக்கே பரிஞ்சுக்கிட்டு வாராக. இனி நான் இருக்க மாட்டேன். ரயிலுக்கு புக் பண்ணிப்போடு. அப்பத்தா கத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். அப்பா எல்லாத்தையும் பொறுமையா உக்காந்து கேட்டுட்டு அப்பத்தாவுக்கு வயசாகிப்போச்சு. திடீர்னு லட்டு பண்ணச்சொன்னா டென்சன் ஆயிடும்னு சொல்லிட்டார்.

    அடுத்த நாள் எல்லாரும் கிளம்பி அன்மோல் நடத்தற காப்பகத்துக்கு வந்துட்டோம். உள்ள நுழையும்போதே ஒரு ஒல்லியான பையன் ஓடி வந்து ஆச்சினு அப்பத்தாள கட்டிப்பிடிச்சிக்கிட்டான். அவன் அழுதுக்கிட்டே எங்க ஆச்சியும் உங்கள மாதிரிதான் இருப்பாங்க. எங்கம்மாவும் அப்பாவும் விபத்துல இறந்த பிறகு ஆச்சிதான் என்னய இட்லி வித்து காப்பாத்திக்கிட்டு வந்தாங்க. பெறகு போனவருசம் பெய்த மழையில குளிர்தாங்க முடியாம ஆச்சி இறந்துட்டாங்க. பக்கத்துல கடை வச்சிருந்த அண்ணாச்சி என்னய இங்க கொண்டு வந்து சேத்து விட்டாங்கனு சொல்றான்.

    அப்பத்தாளுக்கு கண்ணுலேந்து கண்ணீர் தாரதாரையா கொட்டுது. என்னப்பெத்த ஐயா இவ்வளவு நல்ல மனசுக்காரன புரிஞ்சுக்கிடாம என்னமெல்லாம் பேசிப்போட்டேன். அப்பன் ஆத்தா இல்லாம ரோட்டுல நிக்குத புள்ளைங்கள கூட்டியாந்து தம் பிள்ளை கணக்கா பாத்துக்கிடுதவருக்கு ஒரு வாய் சோறுபோடாம வாய் ஓயாம வஞ்சிக்கிட்டு இருந்தேனே….. இந்தப் பிள்ளைங்களுக்கு நாளைக்கு நானே என் கையால சோறு ஆக்கி பரிமாறுவேன். அதை அன்மோலுக்கு விளக்கியவுடன்… பேசிக்கிட்டே நிக்கற அப்பத்தாள அன்மோல் கட்டிக்கொள்கிறார். நீ ஒண்ணுத்துக்கும் கவலப்படாத. ‘இறைத்தொறும் ஊறும் கிணறு’னு பழமொழியே இருக்கு. உனக்கு மேல மேல நிறைய காசுபணம் வந்து சேரும். அப்பத்தா வாழ்த்த அதன் பொருளை அறிய என் முகத்தைப் பார்க்கிறார் அன்மோல்.

    அது ஒண்ணுமில்ல. கொடுக்க கொடுக்க செல்வம் பெருகும்னு சொல்றாங்கனு நான் அவருக்கு விளக்கறேன்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 30

    கதை வடிவில் பழமொழி நானூறு – 30

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 61

    கற்றதொன்(று) இன்றி விடினும் கருமத்தை
    அற்ற முடிப்போன் அறிவுடையான் – உற்றியம்பும்
    நீத்தநீர்ச் சேர்ப்ப! ‘இளையோனே ஆயினும்
    மூத்தோனே ஆடு மகன்’.

    பழமொழி –  ‘இளையோனே யாயினும் மூத்தானே ஆடு மகன்’

    கான்பால் பாபியின் பையன் ஷுப்கருக்கு இன்னிக்கு பாராட்டு விழா. நானே ஆட்டோ பிடிச்சு கிளம்பி வந்துட்டேன். உள்ளுக்குள்ள இருக்கற  நீ இன்னும் கிளம்பலையே. உனக்குத் தெரியாதா? கேட்டுக் கொண்டே வருகிறாள் என் தோழி வசுதா. நானூறு வீடுகள் கொண்ட எங்கள் சொசைட்டியில் முன்பு குடியிருந்தவள் அவள்.

    ஆமாம்.. நேற்றைக்கு துர்கா பூசையிலேயே எல்லாரும் இதைப்பற்றி அலசிட்டாங்க. உனக்குத்தான் தெரியுமே நம்ம சொசையிட்டியில ரெண்டு குரூப் இருக்குனு. அதில நம்ம கமலா ஆன்ட்டி குரூப் நேற்றைக்கு பயங்கரமா விமர்சனம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. என்னை அவசரப்படுத்தியவள் வம்பு கேட்க உள்ளே வந்து உட்கார்ந்து விட்டாள்.

    பூசை ஏற்பாடு அமக்களமா இருந்துச்சு. பத்துநாட்கள் நடக்கற பூசையில நேத்தைக்குத்தானே முதல் நாள். நம்ம சொசைட்டி பிரசிடெண்ட் ஏற்பாடாச்சே. என ஆரம்பித்து நான் அவளை அந்நிகழ்வுக்கே அழைத்துச் சென்றேன்.

    துர்கா மாதாவுக்கு இன்னிக்கு அணிவித்திருக்கிற உடை முதல் ஆபரணம் வரை எல்லாம் எங்க குடும்பச் செலவு. மாதா அருளால என் மனைவி போட்டிருக்கிறத விட அதிக விலையில அவளுக்கு வாங்கி அணிவிச்சிருக்கேன். பெருமையாக ஆரம்பித்தார். சொசைட்டி பிரசிடெண்ட் கௌரவ் தோபால்.

    இந்தத் தடவை துர்கா பூஜா பந்தலோட தீம் பசுமைங்கறதால பச்சைக்கலரிலேயே அலங்காரங்களப் பண்ணச் சொன்னேன்.  நம்ம சொசையிட்டி பொதுக்கூடமே உருமாறி இருக்கறத நீங்க கவனிச்சிருப்பீங்க. வெளியிலேந்து பார்த்தா ஏதோ ஒரு மர பொந்துக்குள்ள நுழையற மாதிரி  பெரிய ஆல மர வடிவத்தைச் செய்து வாயிலை மறைத்திருக்காங்க. உள்ள நுழைந்தவுடனே சுவர்கள் முழுக்க பறவை உருவங்களும் அவைகளோட கூடுகளையும் வச்சிருக்காங்க. தரையில் பல விலங்கு உருவங்கள். மொத்தத்துல ஒரு காட்டுக்குள்ள துர்கா நிக்கற மாதிரி இருக்கு.

    பூசை முடிஞ்சு ஷுப்கர் தீச்சட்டியப் புடிச்சு முதலில தனுசி நடனத்தை ஆரம்பிச்சான். அவன் ஆடி முடிச்சவொடனே அவன் நண்பன் பபுலு கிட்ட குடுத்துட்டான். அதுக்கப்புறம்தான் கமலா ஆன்ட்டி குரூப் வம்புபேச ஆரம்பிச்சிட்டாங்க. ஷுப்கர் ஆடி முடிச்சு தீச்சட்டிய என் பேத்தி கையிலதான் குடுத்திருக்கணும். அவளும் அவ தோழிகளும் ரொம்ப நேரமா துர்கா மாதா ஆசி வாங்க காத்திருக்காங்க. சின்ன பிள்ளைங்க போய் படிக்க வேணாமா. இவங்க எப்ப தனுசி ஆட உடுவாங்கனு காத்துக்கிட்டா நிக்க முடியும். சரி அதுதான் போகட்டும். குறைந்த பட்சம் சங்கு ஊதறதுக்காவது விட்டிருக்கணும்.அதையும் ஷுப்கர் அம்மா கான்பால் வாங்கி கையில வச்சிக்கிட்டாங்க. என்னவோ இந்த பூசையே இவங்களுக்காகப் பண்ணற மாதிரி குடும்பமே இப்படி முன்னால நின்னா எப்படி.

    பாரு பத்ராஜி குடும்பம் எவ்ளோ நேரம் காத்துக்கிட்டு நிக்கறாங்க. அவங்க பெங்காலி இல்லையா. அவங்களுக்குதானே இந்தப் பூசை முக்கியம். இதுலயும் பீஹாரி, பஞ்சாபி எல்லாரும் முன்னால வந்துட்டா நல்லாவா இருக்கு. அடுத்து வர சத் பூஜா இதுல எல்லாம் அவங்க செய்துக்க வேண்டியது தானேன்னு ஆரம்பிச்சதுதான் தாமதம். பிரசிடெண்ட் மைக் எடுத்து அமைதினு சொல்ற வரை எல்லாரும் கூடிப்பேச ஆரம்பிச்சிட்டாங்க.

    அப்பறமாதான் தோபால்ஜி ஒருவழியா எல்லாருக்கும் விளக்கிச் சொன்னார். கான்பால் அவர்களின் பையனான ஷுப்கர் தன் நண்பர்கள் உதவியோட உங்க எல்லார் பிளாக்கோட மொட்டைமாடிகளிலும், உங்க ஒவ்வொரு வீட்டு பால்கனியிலயும் செடிகள் வைக்க முயற்சி செஞ்சான். அப்ப எவ்வளவு பாடுபட்டிருப்பான். இப்ப பாக்கறதுக்கு நம்ம சொசைட்டியே நல்லா இருக்கு. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மையத்திலிருந்து அவனோட இந்தச் சேவையைப் பாராட்டி பரிசு கொடுத்தாங்க. அந்தப் பணம் பத்தாயிரத்தையும் அவன் சொசைட்டியின் நலத்துக்கே கொடுத்துட்டான். அதைப் பாராட்டிதான் நாளைக்குவிழா எடுக்கப்போறோம். எல்லாரும் அவசியம் கலந்துக்கணும்.

    அப்டின்னு அவர் உரையை முடிச்சவொடனே பாக்கணுமே கமலா ஆன்ட்டி குரூப்ல எல்லார் முகத்திலயும் எள்ளும் கொள்ளும் வெடிச்சுச்சு.

    இவங்களப் பத்தி தெரியாதா என்ன. நாளைக்கே இவங்க பேத்தி பன்னிரண்டாம் வகுப்பில் தொண்ணூறு சதவிகிதத்துக்கு மேல மதிப்பெண் எடுத்தான்னா சொசையிட்டி சார்புல பரிசுத்தொகை குடுப்பாங்கல்ல. அப்ப இந்த பிரசிடெண்ட்ட உட்டா வேற ஆள் இல்லனு முகஸ்துதி பாடுவாங்க.

    பாவம் அந்த ஷுப்கர் எத்தன வருசமா பாடுபட்டான். அவனுக்கு இந்த மரியாதை கம்மி தான். ‘இளையோனே யாயினும் மூத்தானே ஆடு மகன்’னு பழமொழியே இருக்கே. இறுதி வரையும் ஏற்றதை முடித்துக் காணும் தளராத முயற்சி உடைமையே அறிவுடைமையாகும் அப்டிங்கறதுதான் அதோட பொருள்.

    அம்மா மதுரை நகர் சங்கப் புலவியே… கிளம்பலாமா என வசுதாவைக் கலாய்த்துக்கொண்டே விழாவிற்குச் செல்ல வீட்டைப் பூட்டுகிறேன். .

    பாடல் 62

    நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலராயின்
    காட்டிக் களைதும் எனவேண்டா – ஓட்டி
    இடம்பட்ட கண்ணாய்! ‘இறக்கும்மை யாட்டை
    உடம்படுத்து வெளவுண்டார் இல்’.

    ‘இறக்குமையாட்டை உடம்படுத்து வௌவுண்டார் இல்’

    அவன் நம்ம சோலிக்கு சரிப்பட்டு வரமாட்டாம்னு சொல்லிக்கிட்டே கெடக்கேன். செவி குடுத்து கேக்கானான்னு பாரு. ஏல…. போக்கத்தவனே. நான் இங்ஙன கெடையா கெடந்து கத்திக்கிட்டு கெடக்கேன். நீ உம்பாட்டுக்கு போய்க்கிட்டே இருந்தா எப்டி. ஏல…..செத்த நில்லு… என் ராசாப்பய நான் சொன்னா கேளு அய்யா……  ஆத்தா எப்பமும் உன் நல்லதுக்குத் தான் சொல்லுவேனாம். கத்த ஆரம்பிச்ச ஆச்சி.. கோவத்த அடக்கிக்கிட்டு குழைந்து பேசறாங்க.

    கொஞ்ச நேரமா நான் என் எதிர்வீட்ட கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன். ஆச்சிக்கு வயல் வயக்காடு இதுதான் மொத்த வாழ்க்கையும். அவ மகன் சோலையப்பனும் விவசாயம் தான் பாக்கறான். நல்ல நாணயமான பையன். கல்லூரி வரைக்கும் படிச்சுட்டு திரும்பவும் விவசாயத்துக்கே வந்துட்டாம்னு ஆச்சிதான் அப்பப்ப பொலம்பும். அவங்களுக்கு என்ன பிரச்சினையோ. நாம நம்ம பொழைப்பப் பாப்போம். தீர்மானத்துடன் எழுந்து குளிக்கப் போனேன். குளிச்சிட்டு வந்த பெறகும் ஆச்சி தனக்குத்தானே பேசிக்கிட்டு என் வீட்டுப்பக்கத்துல இருக்கற வைக்கல்படைப்ப ஒழுங்கு படுத்திக்கிட்டு நிக்கறாங்க. பாவம்னு நினைச்சு என்ன ஆச்சினு கேக்கறேன்.

    ஒண்ணுமில்ல ராசா. இப்பம் கொரோனாவால பிள்ளைகளெல்லாம் பள்ளிக்கூடம் போகறதில்ல. எப்டி வெரட்டி உட்டாலும் கேக்காம வைக்கல்படைப்பு மேல ஏறி ஏறி குதிச்சு உருளுதுங்க. அதான் வைக்கல் பூராவும் சிதறிக்கிடக்கு. ஒழுங்கு படுத்துக்கிட்டு நிக்குதேம். அவள் முடித்துவிட்டாள். சரி. காலையில என்ன பிரச்சினைனு சொல்ல விருப்பமில்ல போலன்னு நினைச்சு திரும்பி நடக்க ஆரம்பிச்சேன்.

    யய்யா… . சோலிகெடக்கோ. ஆமா உனக்கு ஆயிரம் சோலி கெடக்கும். பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக்குடுக்கணுமா இல்லையா. நீ போய்வானு சொல்லறாங்க. நான் கிராமப்புற பள்ளியில் வேலைபாக்கறதால பாடங்களப் பதிவு பண்ணி வாட்ஸஅப்ல அனுப்பிக்கிட்டு இருக்கேன். ஏற்கனவே தொலைக்காட்சி வழி கல்வி கற்பிப்பதற்காக பதிவு செஞ்சு அனுப்பிட்டோமே. அதெல்லாம் சொன்னா இந்த ஆச்சிக்குப் புரியாது.இருந்தாலும் பள்ளிக்கூட வாத்தியார்னு எம்மேல இவங்களுக்கு ரொம்ப மரியாதை. அதுமட்டுமில்லாம தனியா சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்னு ஒரு பரிவும் தான். அப்பப்ப சொந்தத்துல பொண்ணுகிண்ணு இருக்கா. பாக்கட்டுமான்னு கேப்பாங்க.

    எனக்கு இப்ப வேற சோலி எதுவுமில்ல. உங்களுக்கு ஏதும் உதவி வேணுமா.., ஆரம்பித்தேன். ஒண்ணுமில்ல. கொழக்கட்ட அவிச்சேன். சூடா ரெண்டு வந்து சாப்பிடுனு அழைப்பு விடுக்கிறாங்க. சரினு சொல்லி வீட்டுக்குள்ள போனேன்.

    கருப்பட்டி, தேங்காய், பாசிபருப்பு எல்லாம் சேந்த பூரணம். நல்லாயிருக்கா. இந்த இன்னும் ரெண்டு போட்டுக்கோ. பனங்கிழங்கு அவிச்சு வச்சிருக்கேன் நாலு எடுத்துக்கிட்டு போ. எம்மவன்தான் புத்திகெட்டு விருட்டுனு சாப்புடாம போயிட்டான். நீயும் எம்புள்ளமாதிரிதான் சாப்புடு. உபசரிக்கிறாள்.

    சாப்பிட்டுக்கொண்டே என்ன பிரச்சினைனு கேக்கறேன். ஒண்ணுமில்ல. அவன்கூட கல்லூரியில படிச்ச புள்ள ஒருத்தனுக்கு வேலை வேணும்னு சொன்னான். நானும் நம்ம மில்லுல வேலை வாங்கித் தரப்போறாம்னு நினைச்சு சரின்னுட்டேன். இப்பந்தான் தெரியுது. இவன் அவன கூடமாட ஒத்தாசைக்கு வச்சிக்கிடப் போறானாம். அந்தப் பிள்ளை வயக்காட்டுச் சோலிக்கு ஒத்துவருவாம்னு எனக்குத் தோணல. மெல்லிசா உடம்புல கதியே இல்ல. ஏதும் உக்காந்து பாக்குத வேலைக்குதான் அவன் லாயக்கு படுவான். அதச் சொன்னா இவனுக்குக் கோவம் பொத்துக்கிட்டு வருது. இவன்தான் ஊருக்கு உபகாரியாச்சே. காலையில நீ பாத்துக்கிட்டு இருந்தயில்ல. எப்டி முறுக்கிக்கிட்டு போனான்.

    கவலைப்படாதீங்க ஆச்சி.  உங்க மவன்கிட்ட நான் பேசிப்பாக்கறேன். அப்போதைக்கு அவளைச் சமாதானப்படுத்தினேன். மதியம் பார்க்கும்போது சோலையப்பனுடன் அந்த நண்பனும் வந்திருந்தான். சன்னல் வழியா அவன் உருவத்தைப் பார்த்தபோது  காலையில ஆச்சி சொன்னது நினைவுக்கு வருது

    முறத்த உசத்தி புடிச்சிக்கிட்டு காத்து வீசுத திசையில போரடிச்ச நெல்லை தூத்துவிட்டோம்னா உமி எப்டி பறக்குமோ அப்டி அந்தப் பயலும் நல்ல காத்துல திசை தெரியாம பறந்துடுவாம். கதியத்த பய…  உண்மதான். எவ்வளவு ஒல்லியா இருக்கான் இந்தப் பையன். இதுதான் சந்தர்ப்பம். சோலையப்பன் சீக்கிரமா சாப்பிட்டு எழுந்தரிச்சிட்டான். அந்தப்பையன் இன்னும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கான். ஆச்சியோட குரல் கேக்குது.

    சோத்த அளஞ்சுக்கிட்டே இருக்காதப்பா நல்லா அள்ளி வாயில போடு. இளம்பிள்ளை. நாலு வகைய அள்ளிவச்சு வஞ்சகமில்லாம முழுங்கணும். அப்பந்தான் உடம்பு தேறும்.

    நான் சோலையப்பனை வெளியே அழைத்துப் பேச ஆரம்பித்தேன். நீங்க உங்க நண்பனுக்கு ஏற்ற ஏதாவது அலுவலக வேலைக்கு டிரை பண்ணச் சொல்லலாமே. எதுக்குத் தேவையில்லாம இங்க கூட்டிக்கிட்டு வந்து….. நான் முடிப்பதற்குள் அவன் ஆரம்பித்தான்.

    இல்ல அண்ணே. அவனுக்கு அப்பா கிடையாது. என்னய மாதிரிதான். சொத்து சொகமும் ரொம்ப இல்ல. சம்பாதிச்சே ஆகணும்னு நிலைமை. விவசாயம் பழகிக்கிட்டாம்னா சொந்தக்கால்ல நிக்கலாம்னு நினைச்சிருப்பான் போல. அதான் எங்கிட்ட உதவி கேட்டான். எனக்கும் தெரியும் அவனுக்கு உடல் உழைப்பு ஒத்துவராதுனு. ஆனா மொதல்ல சேத்துக்கிட்டு பிறகு மெதுமெதுவா புரிய வைக்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள என் ஆத்தா கத்தி ஊரைக்கூட்டுது.

    உங்க ஆத்தா சொல்றது நியாயம்தான். ‘இறக்குமையாட்டை உடம்படுத்து வௌவுண்டார் இல்’ னு பழமொழியே இருக்கே. நான் ஆரம்பிச்சேன். ஆட்டோட இரத்தத்த சமைக்கணும்னு நினைக்கறவங்க அதுகிட்ட பேசி சம்மதிக்க வச்ச பிறகா சாப்பிடுவாங்க. அதுமாதிரிதான் உன் நண்பனச் சேத்துக்கிட்டு அவனுக்கு தகுதியில்லைனு தெரியப்படுத்தி பிறகு விலக்கறத விட மொதலிலேயே நீக்கிடலாமே. சோலையப்பன் யோசிக்க ஆரம்பித்துவிட்டான். நல்ல முடிவு எடுப்பான்னு நம்பி நானும் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்குள் போனேன்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 29

    கதை வடிவில் பழமொழி நானூறு – 29

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல்- 59

    சீர்த்தகு மன்னர் சிறந்ததனைத்தும் கெட்டாலும்
    நேர்த்துரைத்(து) எள்ளார் நிலைநோக்கிச் – சீர்த்த
    கிளையின்றிப் போஒய்த் தனித்தாயக் கண்ணும்
    ‘இளைதென்று பாம்பிகழ்வார் இல்’  

    பழமொழி- ‘இளைதென்று பாம்பிகழ்வார் இல்’

    எழுத்தாளரான  நான் கதை எழுத வந்திருக்கிறேன். குக்கிராமத்து வாழ்வியலை எழுதணும்ங்கறது என் நீண்ட நாள் ஆசை. புளோரிடாவில் வசிக்கும் எனக்கு இந்திய குக்கிராமத்தைப் பற்றி என்ன தெரியும். பிறந்து படித்து வேலைக்குப் போகிற வரை தில்லி வாசம். அப்பப்போ தமிழ்நாட்டு சொந்தக்காரங்களைப் பாக்கறதுக்காக சென்னை வருவது வழக்கம். அவ்வளவுதான். கல்யாணத்துக்கப்பறம் புளோரிடா போயாச்சு.

    நல்லவேளை தஞ்சாவூர் கல்யாணத்துல கலந்துக்கறதுக்காக இந்தியா வந்த இடத்துல மாயனப் பாத்தது நல்லதாப் போச்சு. கல்யாணத்துல சுருசுருப்பா அவன்தான் ஓடியாடி வேலைசெஞ்சான். சரி அவனை ஊக்குவிப்போமேன்னு நினைச்சு பேச்சு குடுத்ததுல பக்கத்து கிராமத்தச் சேந்தவன்னு தெரிஞ்சது. அதோட விளைவு அவன் கூட இப்ப இங்க வந்து உட்கார்ந்து இருக்கேன்.

    பஸ் ஸ்டாண்டுலேந்து நடந்துவந்த களைப்பப் போக்க ஆல மரத்தடியில போடப்பட்டிருக்கிற கல்திண்ணையில நான் இப்ப உக்காந்து இருக்கேன். மேல நிமிர்ந்து பாத்தா இடைவெளியில்லாம இலைகள். விதவிதமான பறவைகளின் ஒலி  சுத்திலும் ஏதோ நீர்நிலை இருக்கு போல. குளிர்ச்சியான காற்றுவேற வீசுது. ஆனா இதையெல்லாம் யாரும் ரசிக்கறதாத் தெரியவே இல்ல. சொல்லப்போனா ஆள் நடமாட்டமே இல்ல.

    மாயன் உட்கார்ந்து ஓய்வு எடுக்காம குறுக்கும் நெடுக்குமா நடக்கறான். ஒரு பக்கத்துல கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல் வெளிகள். சரி அவனுக்கு என்ன அவசர வேலை இருக்கோன்னு நினைச்சு கிளம்பலாம்னு சொன்னேன். வரப்பு வழியா என்ன கூட்டிக்கிட்டு  போறான். இப்பதான் நாத்து நட்டுவச்சிருக்காங்க போல,  அந்த வயல் என்னயப்பாத்து நான் சொட்ட மண்டையா இருக்கேன்னு நினைக்காத. கொஞ்ச நாள் கழிச்சு வா என் தலையில அடர்த்தியா நெற்கதிர் விளைஞ்சு நிக்கும்னு சொல்லுது. அதுக்கு அடுத்த வயல இப்பதான் உழுதுகிட்டு இருக்காங்க.  அது  எனக்கு மொட்ட போடறாங்கனு சொல்லுமோ. இந்தக் கற்பனையும் நல்லாத்தான் இருக்கு. யோசிச்சுக்கிட்டே மாயனப் பின்தொடர்ந்து  நடக்கறேன். வரப்புக்குப் பக்கத்துல இருக்கற மரத்துலேந்து தூக்கணாங்குருவிக் கூடு விழுந்துகிடக்கு. இந்த வீடு பழசாயிடுச்சுன்னு நினைச்சு இப்ப அந்த குருவி புது வீடு கட்டிக்கிட்டு இருக்குமோ? எதுக்கும் இருக்கட்டும் காட்சிப்பொருளா அதை வைக்கலாம்னு கையில் எடுத்துப் பாக்கறேன்.

    மாயன் கைய அசைச்சு என்னயக் கூப்பிடறான். அடுத்த வயலுக்கு நடுவுல அவன் இறங்கி நிக்கறதால நானும் வரப்ப உட்டு கீழ இறங்கறேன். கால் சேத்துல புதைஞ்சு செருப்பு உள்ள மாட்டிக்கிச்சு. வேற வழியில்லாம செருப்ப அங்கயே உட்டுட்டு கஷ்டப்பட்டு நடந்து அவன் இருக்கற இடத்த அடைஞ்சேன்.

    மாயன் என்னயப் பாத்து சிரிக்கறான். ஏன்சார் மண்ணுக்குள்ள முதல் தடவ கால வச்சிருப்பீங்க போல. எப்படி இருக்கு அனுபவம். இதையும் எழுதி வச்சிக்கோங்கங்கறான். நிசமாவே ஒரு கிலோமீட்டர் நடந்து மக்கள் வசிக்கும் அந்தக் குடிசைப் பகுதிக்குப் போகறதுக்குள்ள ரொம்ப கஷ்டமாயிடுச்சு.

    சுத்திவர ஐம்பது அறுபது மண் குடிசைவீடுகள். மண்ணால கட்டப்பட்ட நாலு சுவத்துக்கு மேல ஒலைக் கூரை வேய்ந்து இருப்பாங்கபோல.  குடிசைக்கு உள்ளேயும் வெளியிலயும் தரைய சாணியால மெழுகி சுத்தமா வச்சிருக்காங்க. மின்சார வசதி இல்லாத கிராமங்கறதால எல்லா வீட்லயும் விளக்கு வைக்க வெளிச் சுவத்துல மாடாக் குழி அமைச்சிருக்காங்க. குடிசையோட கூரை மேல இடைவெளி விட்டு ஓரளவு காய்ந்த எருமுட்டைனு சொல்லப்படற வறட்டிய பரப்பி வச்சிருக்காங்க. அடுப்பெரிக்க விறகுகூட சேர்த்து உபயோகிப்பாங்களோ என்னவோ?  அந்த குடிசைகளுக்கு  நடுவுல ஒரு கல் மண்டபம் தெரியுது. இவ்வளவுதான் அந்தக் கிராமத்தின் அமைப்பு. மத்தபடி உள்ள எல்லா இடத்திலயும் வயல்கள்தான் இருக்கு.  நடுவுல இருக்கற கல் மண்டபத்தப் பத்தி கதை எழுததான் நான் இவ்வளவு சிரமப்பட்டு இங்க வந்தேன். மாயனத்தவிர வேற யாரும் பேச்சு குடுக்க மாட்டேங்கறாங்க. அவங்கவங்க வேலையில கண்ணும் கருத்துமா இருக்காங்க. சின்னஞ்சிறுசுங்க மாடு,வயல் வேலையப் பாக்கறாங்க. வீட்டைவிட்டு இறங்கமுடியா வயசானவங்க தென்னங்கீத்து, பனை ஓலை இதையெல்லாம் சீவி துடைப்பம், விசிறி, கூடை  இந்தமாதிரி சாமான்கள் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.

    மாயன் ஆரம்பிக்கிறான். இந்த மண்டபம் சோழர் கால குறுநில மன்னரோட சமாதி. எங்க ஊரோட கடவுள் இவர்தான். உருவம் எதுவும் வைக்கல காலையில எழுந்து எல்லாரும் இந்த மண்டபத்தப் பாத்து கையெடுத்து கும்பிட்டுட்டுத் தான் வேலைக்குப் போவாங்க. இவர் இந்த மாதிரி ஆறு கிராமங்களுக்கு மன்னரா இருந்தார். தன்னோட ஆட்சிக்குட்பட்ட வயல் வெளிகள எல்லாக் குடும்பத்துக்கும் சரிசமமா பிரிச்சிக்குடுத்து விவசாயம் பாக்க வச்சாராம். அதனால ஏழை பணக்காரன்னு வித்தியாசம் இருக்கல. இப்பவரை அப்படித்தான். கடைசி வரை அவர் தனக்குனு எந்த நிலத்தையும் வச்சுக்கல. இராச பரம்பரை முடிவுக்கு வந்தபிறகு அவர் வம்சத்துல வாழறவங்க  பிழைப்புக்குனு வேறவேற வேலையப் பாக்க ஆரம்பிச்சுட்டோம்.

    அப்டின்னா நீங்களும் அந்த மன்னர் பரம்பரையச் சேர்ந்தவரா. ஆச்சரியம் எனக்கு. மாயன் ஆமாம் என்கிறான். ஊருக்குள்ள எனக்கு இப்பவும் நல்ல மரியாதைதான். இருந்தாலும் பரம்பரை கவுரவத்தக் காப்பத்தணும் இல்லயா. அதனாலதான் டவுணுக்கு வந்து எனக்குத் தெரிஞ்ச வேலையப் பாத்து சம்பாதிக்கிறேன். கொஞ்ச பணம் சேந்தவொடனே இதே ஊரிலயே ஒரு வயல விலைக்கு வாங்கணும். அதுதான் என் இலட்சியம். அவன் பேசிக்கொண்டே போக என் மனதுள் ‘இளைதென்று பாம்பிகழ்வார் இல்’ எனும் பழமொழி ஞாபகத்துக்கு வருது. தன் கூட்டத்த விட்டுட்டு தனியா வந்துநிக்குதுங்கறதுக்காக பாம்ப யாராவது குறைச்சு எடை போடுவாங்களா. அதுபோலத்தான் மன்னர்களும் தம் நிலமையில தாழ்ந்தாலும் அவங்க பெருமை கெடாது. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் தானே. என் கண்முன் மாயன் மணிமுடி தரித்த சோழமன்னனாகவே தெரிகிறான். அவனை முன்னால் நிற்கச் செய்து அந்த மண்டபத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.     .

    பாடல் – 60

    சிறியதாய கூழ்பெற்றுச் செல்வரைச் சேர்ந்தார்
    பெரிதாய கூழும் பெறுவர் – அரிதாம்
    ‘இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால்
    கிடப்புழியும் பெற்று விடும்’..

    பழமொழி – . ‘இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்று விடும்’

    ராம்லீலா மைதானம் நிரம்பி வழிகிறது. வீட்டுக்குப் பக்கத்துல இருந்தாலும் ஒவ்வொரு வருசமும் இந்தக் கூட்டத்தப் பாத்து பயந்து கிட்ட போகறதேயில்ல. இந்தத் தடவ கண்டிப்பா பாத்தேயாகணும்ங்கற மன உறுதியோட நான் பக்கத்துவீட்டு பாசுவதி முகர்ஜி குடும்பத்தோட கிளம்பி வந்துட்டேன். முன்னால நிக்கற வரிசை நகருகிற மாதிரியே தெரியல. அவளோட ஐந்து வயசு குழந்தை வேற குதிக்க ஆரம்பிச்சிட்டான். பக்கவாட்டுல தெரியற ராட்சச ராட்டினம் அவனுக்கு பயத்தக் குடுக்குது போல. தூக்கிக்கச் சொல்லி அழறான். இன்னிக்கு எப்டித்தான் சுத்திப்பாக்கப் போறோமோ. அந்த மைதானத்துக்குள்ள மேஜிக் ஷோ, மரணக்கிணறு, விதவிதமான ராட்டினங்கள், கடைகள் எல்லாம் இருக்காம். எதிர் வீட்டு ஆன்ட்டி சொன்னாங்க. எது எப்படியோ அவங்க வாங்கிட்டு வந்த ஊறுகாய்களும், அப்பள வகைகளும் நல்லா இருந்திச்சு. அத வாங்கதான் நான் கஷ்டப்பட்டு போய்க்கிட்டிருக்கேன். பாசுவதி வேற எள்ளுமிட்டாய், கடலை மிட்டாய் எல்லாம் விதவிதமா கிடைக்கும்ங்கறா. முதல்ல உள்ள போனாதானே.

    அதுக்குள்ள முன்னால கூச்சலும் குழப்பமும். வரிசைய ஒழுங்குபடுத்த நிறைய போலீஸ் நிக்கறாங்க. என்ன பிரயோசனம். நம்ம மக்கள ஒழுங்கு படுத்தறது பிரம்ம வித்தையாச்சே. ஐயோ பாவம். ஒரு போலீஸ்காரர் மைக்ல கத்திக்கிட்டு நிக்கறார். இங்க நடக்கறது இராமயண நாடகம்தான். இதில நடிக்கறவங்க

    யெல்லாம் மனுசங்க. அதனால யாரும் உணர்ச்சிவசப்படக் கூடாதுனு. எனக்கு முன்னால நிக்கற அம்மா விளக்கம் சொல்றாங்க. அது ஒண்ணுமில்ல பாபி. இராவணன் வேஷம் போட்டவன் சிகரெட் குடிக்கறதுக்காக பந்தல விட்டு வெளிய வந்தான் போல. யாரோ ஒரு இராம பக்தன் அவனப் போட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டான். அதப் போலீஸ் தடுக்கப் போனா எங்க சீதா மாதாவ இவன் அவமானப்படுத்திட்டு எப்டி உயிரோட இருக்கலாம்னு சண்டை போடறானாம். அந்த நேரம் பாத்து என்ன சண்டைனு பாக்கறதுக்காக இராமர் வேசம் போட்டவன் வெளிய வரதப் பாத்து மொத்தக் கூட்டமும் ஜெய் ஸ்ரீராம்னு கத்திக்கிட்டே கீழ உழுந்து கும்பிட்டிருக்கு. அதனால பந்தலில போட்ட மண்ணு பூராகிளம்பி இப்ப புழுதியா நிக்குது. இராவணனுக்கு அடிபட்டதுனால நடிக்க முடியாதாம். அதான் வேற ஒருத்தன ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்ப என்னடான்னா நாடகத்த ஏன் நிறுத்தினீங்க. இது அபசகுனம்னு இன்னொரு கூட்டம் கத்துது.

    ஓ அதுதானா. நாங்க இந்த வரிசையில வந்து நிக்கும்போது ஜெய்ஸ்ரீராம்னு சத்தம் கேட்டது. சரி. இந்தக் குழம்பமெல்லாம் தீர்ந்து எப்ப கேட்டத் திறப்பாங்களோ. யோச்சிச்சுக்கிட்டே நிக்கறேன். பின்னாலேந்து யாரோ கூப்பிடற மாதிரி இருக்கு. திரும்பிப்பார்த்தேன். ஒரே ஆச்சரியம். முன்னால என் வீட்டுப் பக்கத்துல குடியிருந்த கரிஷ்மா நிக்கறா. மெதுவா என்னய அவ பின்னால வரச் சொல்றா.

    பாசுவதிக்கு பொறுமை போயிடுச்சு. அவ வீட்டுக்குத் திரும்பிப்போறேன்னு சொல்லிட்டா. நான் மட்டும் வரிசையிலேந்து விலகி கரிஷ்மா பின்னால போறேன். அவ எனக்கு ஒரு ஸ்பெஷல் பாஸ் குடுத்து இன்னொரு கேட் வழியா உள்ள கூட்டிக்கிட்டுப் போயிட்டா. அந்தப் பகுதியில ஒரே கடைகளா இருக்கு. எல்லாமே இந்த ராம்லீலாவுக்காக போடப்பட்ட கடைகள். அதில ஒரு கடைக்கு என்னயக் கூட்டிக்கிட்டுப் போய் உட்காறச் சொல்றா. அது ஒரு உயர் ரக கையேந்தி பவன் மாதிரி இருக்கு. என்ன சாப்பிடறீங்கனு கேட்டுட்டுப் பதிலை எதிர்பார்க்காம உள்ள போய் கட்லெட் கொண்டு வந்து வைக்கறா.

    வேற வழியில்லாம அவ முகத்தையே பாக்கறேன். தீதீ(அக்கா)  என என்னை அன்பா அழைச்சுட்டு இந்த கட்லெட் ஞாபகம் இருக்கானு கேக்கறா. எனக்கு ஒண்ணும் புரியல. அவ பேசப் பேச எனக்கு எல்லாம் ஞாபகம் வருது.

    அவ எங்க சொசைடியில குடியிருக்கும்போது துர்கா பூசைக்காக அவங்கவங்க விருப்பப்படுகிற கடைகளைப் போடலாம்னு அறிவிச்சாங்க. அப்ப நான்தான் அவகிட்ட கட்லெட் பண்ணி எடுத்துக்கிட்டு வா. விக்கலாம்னு சொன்னேன். ரொம்ப தயங்கித் தயங்கி ஐம்பது கட்லெட் பண்ணி எடுத்துக்கிட்டு வந்தா. எல்லாப் பொருளின் விலையும் பத்து ரூபாய்தான் இருக்கணும்ங்கற நியதிப்படி இரண்டு கட்லெட்டை ஒரு தட்டில் வைத்து பத்து ரூபாய்னு வித்தோம். அன்னிக்கு இராத்திரி அவ என்ன புலம்பு புலம்பினா. நாம அநியாய விலைக்கு வித்துட்டோம்னு நினைக்கிறேன். செலவு செஞ்சதவிட மிக அதிகமா பணம்வந்திருச்சுனு.

    மெதுவா அவளுக்குப் புரியறமாதிரி எடுத்துச்சொன்னேன். நீ எப்பவும் ஸ்வெட்டர் போட்டு பணம் சம்பாதிக்கற இல்ல. அத வியாபாரம்னு நினைக்கறதால வர இலாபம் உனக்குத் தப்பாத் தோணல. இப்போ இதை நீ பொழுதுபோக்குக்கு செஞ்சதா நினைக்கிற. அதனாலதான் வருத்தப்படற. பேசாம இதையே நீ நிரந்தர வியாபாரமா பண்ணலாமே. உன் கைப்பக்குவம் நல்லா இருக்கு என ஹிந்தியில் அவளுக்கு உசுப்பு ஏத்தினேன்.

    அதோடவிளைவு வீடு மாத்தி போனப்புறம் வியாபாரத்த மாத்திட்டாளாம். முதலில சின்னதா ஆரம்பிச்சு விரிவுபடுத்தி இப்ப பல கிளைகள் உள்ள கட்லெட் ஸ்டாலுக்கு அவள் சொந்தக்காரியாம். என்னயப் பாத்து நீங்க எனக்கு இருக்கறதுக்கு இடம் சொன்னீங்க. நான் அதை உபயோகிச்சு படுக்க இடம் தயார் பண்ணிட்டேன்கிறா. நம்ம ஊர்ல இதத்தான் ‘இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்று விடும்னு பழமொழியாச் சொல்லுவாங்க. அது எங்க இவளுக்குப் புரியப் போகுது. இருந்தாலும் அவளை மனதார வாழ்த்திவிட்டு என் ஊறுகாய் மற்றும் அப்பளம் ஸ்டால்களுக்கு வழி கேட்டுக்கொண்டுஎழுந்தேன்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 28

    கதை வடிவில் பழமொழி நானூறு – 28

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 57

    கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர்
    பொல்லாத தில்லை ஒருவற்கு – நல்லாய்!
    ‘இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; இல்லை,
    ஒழுக்கத்தின் மிக்க உயர்வு’.

    பழமொழி -‘இழுக்கத்தின் மிக்க இழிவில்லை’, ‘இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு’

    அக்கம்பக்கத்து வீடுகள்ல எங்கயோ காலையிலிருந்தே சண்டை. காலங்காத்தால ரம்யமான சேவல் கூவற சத்தத்தக் கேட்டு கண்விழிச்சதுதான் தாமதம். வாசல்ல ஒரே சலசலப்பு. இந்த ஊர்ல இது சகசம்தானேன்னு விட்டுட்டேன்.

    தினமும் பொழப்பில்லாம ரெண்டு பேர் சண்ட போடறதப் பாக்கவே துண்ட கக்கத்துல இடுக்கிக்கிட்டு வந்து நின்னு பாக்கற வெத்துவேட்டுகளுக்கு நடுவுல நானும் ஒண்ணா நின்னு பாக்க விருப்பப்படல.  இது ஒரு விவசாயக் கிராமம்னு சொன்னா கேக்கறதுக்கு நல்லாதான் இருக்கு. ஆனா இந்தத் தெருவுல இருக்கறதுல பாதிபேர் முதலாளி வர்க்கம். அவங்க தன் சொந்த வயல்ல இறங்கி வேலை பாக்க மாட்டாங்க. வெறும் மேற்பார்வை மட்டுந்தான். சாப்பிட்டுட்டு சும்மா உக்காந்து இருக்குற இந்தக் கூட்டந்தான் தினமும் யாரை வம்புக்கு இழுக்கனு உறண்டிகிட்டு நிக்கும். நல்ல வேளை கல்லூரி படிப்புங்கற பெயர்ல வெளியூர் ஹாஸ்டல்ல தங்கி படிக்கறது நல்லதாப் போச்சு. அப்பப்ப இங்க வந்து பொழுதுபோக்க இவங்க நடவடிக்கையப் பாத்துட்டுப் போயிடலாம். இருந்தாலும் இந்த ஊருக்கு நாம ஏதாவது செய்யணும்….. யோசிச்சுக்கிட்டே வீட்டுக்குள்ள நடந்துக்கிட்டு இருந்தேன்.

    அம்மாகிட்ட வாசல்ல என்ன சத்தம்னு கேட்டுத் தெரிஞ்சுக்கலாமா மனசு சொல்லியது. வாசல் தெளிச்சு கோலம் போட்டுட்டு வர அம்மா நான் கேட்டதுக்கு ஒண்ணுமே சொல்லாம குளிக்கக் கிளம்பிட்டாங்க. அதுக்குமேல தொடர விருப்பமில்லாம மொட்டைமாடிக்கு ஏறிப்போனேன். காலைநேர சூரியன் அழகாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தான். பறவைகள் எல்லாம் பிரேக்பாஸ்ட் சேகரிக்க பறந்துக்கிட்டு இருக்கு. எங்க வீட்டு பப்பாளி மரத்துல அணில் கூட ஓட ஆரம்பிச்சிடுச்சு. பக்கத்துவீட்டு அத்தை வத்தல் போடறதுக்காக மேல வந்து பார்வையிடறாங்க. வேட்டித் துணிய விரிச்சு அது பறக்காம இருக்க கல்ல வச்சிட்டு என்னயக் கூப்பிடறாங்க. நானும் சுவர் ஏறிக்குதிச்சு அவங்க வீட்டுப்பக்கம் போறேன்.

    தம்பி திரும்பத் திரும்ப ஏறி இறங்க முடியல. என் கூட வந்து சாமான்கள் எடுத்துக் குடேன்னு சொன்னதால அவங்க கூட போய் காக்காய் விரட்ட கருப்புக் குடை, வத்தல் கூழ கிண்டிவுட ஒரு கரண்டி, தண்ணி மூணையும் நான் எடுத்துக்கிட்டேன். அத்தை சூடானகூழ துணியவச்சு லாவகமா எடுத்துட்டு  மேல ஏறறாங்க. நானும் அவங்க பின்னாலயே போய் சாமான வச்சுட்டு நிக்கறேன். கைய நீட்டச்சொல்லி ஒரு கரண்டி வத்தல் கூழ வாயால ஊதி என்கையில உடறாங்க.

    நான் நக்கி சாப்பிட்டுக்கிட்டே அவங்க வத்தல் போடற விதத்தப் பாத்துட்டு நிக்கறேன். பக்கத்து கம்பத்துல நிக்கற காக்கா பொறாமையோட என்னயப் பாத்துட்டு அவங்க சொந்தத்தையெல்லாம் கத்திக் கூப்பிடுது. இவங்ககிட்டயே கேக்கலாமேனு நினைச்சு கீழ என்ன சத்தம். யார் சண்டபோட்டுக்கிட்டாங்கனு கேட்டதுதான் தாமதம் அத்தை பொலம்ப ஆரம்பிச்சிட்டாங்க.

    அத ஏம்பா கேக்கற. நம்ம பக்கத்துவீட்டு அலமுவும் அவளுக்கு அடுத்தவீட்டு செல்லாவும் தான் கத்திக்கிட்டிருந்தாங்க. செல்லா வீட்ல நாலுநாள் முன்ன அவங்க மாமியார் செத்துட்டாங்கல்ல அப்ப பூவெல்லாம் தூவி அமக்களப் படுத்தி தூக்கிட்டுப் போனாங்க.  வாசல்ல பாடையில பிணத்தை வச்சி கட்டறதுக்காக வைக்கல் கயிறு திரிப்பாங்கயில்ல அப்பத்துலேந்து இவங்க வீட்டு வாசல்ல வைக்கல் விழுந்திரிச்சு, பூ விழுந்திரிச்சுனு ஒரே ஆர்ப்பாட்டமாம். பிணத்த தூக்கிட்டுப் போனவுடனே கழுவி உட்ட தண்ணி தன் வீட்டுக் கோலத்த அழிச்சிடுச்சுனு அழுதாளாம். அதுலேந்து அவளுக்கு மனசே சரியில்லயாம். அதனால தினமும் செல்லாவ வாசல் தெளிக்கவுடாம கத்திக்கிட்டே இருக்கா. நாங்களும் சொல்லிப்பாத்தோம்.

    காலையில நான்தான் எதிர்வீட்டு டீச்சரக் கூப்பிட்டு இதுங்களுக்கு அட்வைஸ் பண்ணலாம்னு ஆரம்பிச்சேன். என்ன பிரச்சினை அலமுனு டீச்சர் கேட்டவொடனயே ஆரம்பிச்சிட்டா.

    எழவு வீட்டுத்தண்ணி எங்க வீட்டு கோலத்துப்பக்கத்துல தினமும் வரதால எங்க வீட்ல பல பிரச்சினைகள் தொடங்கிருச்சு. வர வர ராத்திரி தூக்கமே வரமாட்டேங்குது. நல்லா சாப்பிட்டுட்டு இருந்த எம்பொண்ணு இப்பயெல்லாம் சரியா சாப்பிடறதேயில்ல. இதெல்லாம் அந்தத் தண்ணிய மிதிச்சதிலேந்துதான் நடக்குது. அதுக்குதான் செல்லாவ பரிகாரம் பண்ணிடுனு சொல்றேன். அவ வீட்டுத் தண்ணி எங்க வீட்டுக்கு வராதபடி நடுமத்தியில மேடுகட்டச்சொல்றேன். அவள் முடிச்சவொடனே செல்லா ஆரம்பிச்சா

    நான் ஏன் மேடுகட்டணும். வானம் பாத்த இந்த பூமியில மழை கொட்டோ கொட்டுனு கொட்டட்டும். எங்க வீட்டு மண்ணயெல்லாம் கரைச்சிக்கிட்டு அவ வீட்டுல கொண்டு சேக்கட்டும்னு சாபம் போட ஆரம்பிச்சா. சண்ட பெரிசா ஆயிடுச்சு. வீட்டு ஆம்பிளைகளும் ஒருத்தருகொருத்தர் திட்டிக்கிட ஆரம்பிச்சாங்க. நிறுத்தறதுக்குள்ள உம்பாடு எம்பாடு ஆகிப்போச்சு.

    பாவம் டீச்சர் ‘இழுக்கத்தின் மிக்க இழிவில்லை’, ‘இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு’னு பழமொழி சொல்லிட்டு இந்த மாதிரி ஆளுங்களுக்கு அறிவுரை சொல்லப்போனா நம்மளயும் அவமானப்படுத்தி உட்டுருவாங்கனு வருத்தப்பட்டுட்டுப் போயிட்டாங்க. படிக்காத ஜென்மங்ககிட்ட பேசப்போனது என் தப்புதான். இப்ப பாரு இந்தக் கூழ் முழுக்கயும் போட்டு முடிக்கறதுக்குள்ள வெய்யில் வந்துடும். புலம்பிக்கிட்டே தன் காரியத்தப் பாக்கறாங்க அத்தை.

    அங்க என்னடா பேச்சு. அம்மாவின் குரல் கேட்டுத் திரும்பினேன். அம்மா குளத்துக்குப்போய் துணி துவைச்சு குளிச்சிட்டே வந்துட்டாங்க. துணி காயப் போட மொட்டை மாடிக்கு வந்திருக்காங்க. இதுக்குமேல இங்க நின்னா வசவு விழும். என் வேலையைப்பார்க்க கீழே இறங்கிப்போறேன்.

    பாடல் 58

    முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று
    தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல்
    ‘இழுகினான் ஆகாப்ப தில்லையே முன்னம்
    எழுதினான் ஓலை பழுது’.

    பழமொழி – ‘இழுகினான் ஆ காப்பதில்லையே முன்னம் எழுதினான் ஓலை பழுது’

    பொழுது விடிஞ்சாச்சு. இன்னிக்கு எந்தக் கோயிலுக்கு கூட்டிக்கிட்டுப் போகப் போறாங்களோ? ஒருவேளை இன்னிக்கு ஜோசியம் பாக்கப் போகணுமோ?. கடந்த

    ஒரு வருசமா இதுதான் நடந்துக்கிட்டு இருக்கு. இன்னும் கொஞ்சநாள்ல நான் என்ன படிச்சேன்னே மறந்துருவேன் போல. திருச்சியில தங்கி என்ஜினியரிங் படிச்சேன்னு பேரு. அங்கேயும் அம்மா வந்து வீடு எடுத்து சமைத்து போட்டுக்கிட்டு இருந்தாங்க. இப்ப என்னடான்னா இந்த சுத்து வட்டாரத்துக்குள்ளயே வேலை தேடிக்கணுமாம். மெட்ராஸ் பக்கம் போகணும்னா அரசாங்க வேலை கிடைச்சாதான்னு சொல்லிட்டாங்க. இங்க கூடி எவ்வளவு முயற்சி பண்ணியும் எம் மனசுக்குப்பிடிச்ச மாதிரி வேலை அமைய மாட்டேங்குது.  ஓரிரண்டு இடத்துல வேலைக்குச் சேந்த பிறகு நான் உட்டுட்டு வந்துட்டேன்னுதான் இந்த ஆர்ப்பாட்டம். இப்ப என் கிரகம் சரியில்லயாம். அதுக்காக கோயில்கோயிலா கூட்டிக்கிட்டு சுத்தறாங்க. ஜோசியக்காரனுக்கு என்ன. அவன் வருமானத்துக்காகத் திரும்பத் திரும்ப வரச் சொல்லி பரிகாரம்னு பெயர்ல ஏதோ பூசை போட்டுட்டு அப்பப்ப ரெண்டு கோயில் பெயரச்சொல்லி இங்க போயிட்டுவந்து என்னயப் பாருங்கனு அனுப்பி உட்டுடறான்.

    யோசிச்சுக்கிட்டே எங்க வீட்டு வாசலில வந்து நிக்கறேன். ஸ்ரீரங்கம் வெள்ளைக் கோபுரம் பக்கத்துல இருக்குது எங்க வீடு. எவ்வளவு அழகான ஊர். ஒரு தடவ காலார நடந்துட்டு வரலாம். காலங்காத்தாலயே எங்கெங்கேயிருந்தோ மக்கள் வர ஆரம்பிச்சிடுவாங்க. ரங்கா ரங்கானு பக்திப் பரவசத்தோட கோயிலுக்குப் போவாங்க. வேடிக்கை பாத்துக்கிட்டே நடந்த என்னய யாரோ கூப்பிடறாங்க.

    என் வயதொத்த பையன்கூட ஒரு ஆண்ட்டி நின்னுக்கிட்டு இருக்காங்க. ரெண்டு பேரும் கழுத்துல துளசி மணிமால போட்டிருக்காங்க. அவங்களுக்குப் பின்னால நிக்கற பஸ்சப் பாத்தா இவங்க இஸ்கான் குரூப்னு தெரியுது. ஆனா இவங்களுக்கு எப்படி என் பெயர் தெரியும். யார் இவங்க. யோசிச்சிட்டு இருக்கும்போதே ஏய் சுதர்சனா… உங்க வீடு எங்க இருக்கு. பக்கத்திலதானா. நான் டூர்ல வந்ததால தனியா பிரிஞ்சு வரமுடியாது. உன் ப்ரெண்ட் சாவித்ரி வந்திருக்கானு சொல்லி ரொம்ப பக்கம்னா உங்கம்மாவ சீக்கிரம் கூட்டிக்கிட்டு வாயேன் என்கிறாள்.

    யோசனையோட வீட்டை நோக்கி விருவிருனு நடக்கிறேன். அம்மாக்கு ஆயிரத்தெட்டு பெரெண்ட். காலையிலேந்து ராத்திரி வரை யார் கூடயாவது போன்ல பேசி புலம்பிக்கிட்டேதான் இருப்பாங்க. இவங்க யாரோ.

    விசயத்தைச் சொன்னவொடனேயே அம்மா எல்லாத்தையும் அப்பப்படியே போட்டுட்டு எம் பின்னால வந்துட்டாங்க. எனக்கு எந்த அறிமுகமுமே இல்லாத அந்த ஆண்ட்டி என்னயப் பாத்து

    பாவம் உன் அம்மா. உன்னயப்பத்தி கவலைப் பட்டு எவ்வளவு இளைச்சுப் போயிட்டா. நாள் முழுக்க உன் நினைப்புதான். கொஞ்சம் அம்மாவுக்கு சப்போர்ட்டா இருக்க முயற்சி பண்ணுப்பா என அறிவுரையை உதிர்த்துவிட்டு தன் பையனைப் பார்த்து இவன் கூட கொஞ்சம் பேசி அட்வைஸ் பண்ணுடாங்கறாங்க.

    அவங்க பையன்னு அறிமுகப்படுத்தப்பட்ட நபர் விட்டேத்தியா பேச ஆரம்பிச்சார். கூல் மேன். எவ்ரிதிங் வில் பி ஆல்ரைட். ஏதோ இப்போதான் லண்டன்லேந்து வந்து இறங்கினமாதிரி அளப்பறை. எனக்கு ரோசம் பொத்துக்கொண்டு வந்தது. என்னயப் பாருங்க. நான் டில்லியில கால்சென்டர்ல வேலை பாக்கறேன். நல்ல எக்ஸ்போசர் கிடைக்குதுனு பெருமை வேற அடிச்சிக்கிறாரு.

    பூ  இவ்வளவுதானா. என அந்த நபரை எடை போட்டுவிட்டு அம்மாவப் பாத்துக்கிட்டு நின்னேன்.

    இவனுக்கு விதிச்சது இதுதான்னு இருந்துடவேண்டியதுதான் போல. ஒருவேலையில நிலைச்சு நிக்க மாட்டேங்கறான். நானும் வேண்டாத கடவுள் இல்ல. அவன் விதிய மாத்த இனி படைச்ச கடவுளால கூட முடியாது. . நீயாவது உன் பிள்ளைகூட சந்தோசமா இருனு புலம்பிக்கிட்டு நிக்கறாங்க. அதுக்குமேலயும் கேட்க விருப்பமில்லாம கிளம்பி வந்த நான் ஒரு முடிவோட லெட்டர் எழுதி மேசை மேல வச்சிட்டு என் சென்னை நண்பன் அறிவுரைப்படி அவன் வீட்டுக்குப் போயிட்டிருக்கேன்.

    நல்லவேளை எனக்கு அப்டி ஒரு நல்ல நண்பன். விசயத்தச் சொன்ன வொடனேயே  ‘இழுகினான் ஆ காப்பதில்லையே முன்னம் எழுதினான் ஓலை பழுதுனு பழமொழியே இருக்குடா. எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க. நம்ம தலையெழுத்துனு ஒத்துக்கிட்டு அதச் சரிபண்ண அத எழுதின கடவுளமட்டும் கும்பிட்டுக்கிட்டே உக்காந்து இருந்தா எதுவும் சரியாகாது நாமதான் முயற்சிபண்ணணும். நீ முதல்ல கிளம்பி வா. கொஞ்சநாள் உங்கம்மா அழுவாங்க. நல்ல வேலை கிடைச்சப்புறம் முயற்சியால விதியையும் மாத்திடலாம்னு அவங்களுக்குப் புரிஞ்சுடும். அப்டிங்கறான்.

    அவனின் பேச்சைக்கேட்டப்புறம் நான் யோசிச்சேன். நான் நல்லா முன்னேறி திரும்ப வந்தப்புறம் கூட அம்மா அதுக்கும் காரணம் கடவுளும் ஜோசியமும்னு சொல்லுவாங்களோ என்னவோ. சிலபேரைத் திருத்த முடியாது.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 27

    கதை வடிவில் பழமொழி நானூறு – 27

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 55

    வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும்
    செங்கோலன் அல்லாக்கால் செய்வதென் – பொங்கு
    படுதிரைச் சேர்ப்ப! மற்று, இல்லையே, யானை
    தொடுவுண்ணின் மூடுங் கலம்’

    பழமொழி -‘இல்லையே, யானை தொடு வுண்ணின் மூடுங்கலம்’

    சாய் சாய்… என தேநீர் விற்றுக்கொண்டு வரும் சிறுவனைப் பரிதாபமாகப் பார்த்தேன். அங்கிள் என என்னைச் சுரண்டி கூப்பிடும் அவனால் அந்தப் பாத்திரத்தைக் கூட சரியா புடிக்க முடியல. பேப்பர் கப்புகள கக்கத்துல இடுக்கிக்கிட்டு நிக்கறான். எங்கிட்ட வாங்கிக்கோ. அஞ்சு ரூபாதான். இஞ்சி டீ. இரயிலுக்குள்ள இதையே பத்து ரூபா சொல்லுவான். தூய ஹிந்தியில் வாதாடுகிறான்.

    சும்மா குடுத்த பத்துரூபா நோட்ட வாங்கிக்க மறுத்த அவன் நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உழைக்கணும்னு நினைக்கறான். அதனாலென்ன. இரண்டு டீ வாங்கிக்கொண்டு பத்துரூபாய்த் தாளை நீட்டினேன்.

    நியூடில்லி இரயில்நிலையம் முதல் பிளாட்பாரத்திலிருந்து சென்னை செல்லவிருக்கும்  தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இரயில் இன்னும் சிறிதுநேரத்தில் புறப்படும். அறிவிப்பைத் தொடர்ந்து பெட்டிக்குள் ஏறினேன். என்னுடையது சைட் பர்த் என்பதால் பெட்டியை இருக்கைக்கு அடியில் நுழைத்துவிட்டு சீட்டில் அமர்ந்தேன். எதிர்சீட்டில் ஆள் இல்லை. அக்கம்பக்கம் நோட்டம்விட ஆரம்பித்தேன்.

    இராணுவஉடையில் நான்கைந்து வீரர்கள் எனக்குப் பின்னாலிருந்த பகுதியில் அமர்ந்திருக்கிறார்கள். மற்றபடி எல்லாரும் குடும்பம் குடும்பமா வந்திருக்காங்க போல. எனக்கு முன்னால் இருந்த ஆறு பெர்த்தையும் வடஇந்தியக் குடும்பம் ஆக்கிரமித்திருந்தது. எந்த மாநிலமோ. இரண்டு ஜோடிகளும் பதினைந்து பதினாறு வயது மதிக்கத்தக்க இரு பெண்குழந்தைகளும் அமர்ந்திருக்கிறார்கள். எந்த குடும்பமா இருந்தா என்ன. எப்படியும் சென்னை போறதுக்குள்ள கண்டுபிடிச்சிடலாம்.

    நீண்ட தொலைவு இரயில் பயணங்களில் நாம கேக்கணும்னே  இல்ல. வந்து ஏறும்போது எல்லாரையும் சந்தேகத்தோடயே பாப்பாங்க. அப்பறம் நேரம் போகப்போக சாதாரணமா பேச ஆரம்பிப்பாங்க. ஒரு இரவு தூங்கி எழுந்தவொடனே ரொம்பவே சுமுகமா பழகிடுவாங்க. இதுதான் இந்த இருபது வருச இரயில் பயணத்துல நான் கத்துக்கிட்ட அனுபவம். ஆனா இப்பயெல்லாம் சின்னப் பசங்க மொபைல விட்டு முகத்த திருப்பறதேயில்ல.

    அந்த வட இந்திய ஜோடிகளை கவனிக்க ஆரம்பிச்சேன். இளஞ்சோடி மகனும் மருமகளும் போல. அந்தப்பொண்ணு புடவைத்தலைப்பால முகத்தை மூடிக்கிட்டே அமர்ந்திருக்காங்க. எதிரில இருப்பவர் மாமனாராத்தான் இருக்கணும். ஒருவேளை பீஹார்காரங்களோ.

    எதேச்சையாக அந்தப் பெரியவரும் என்னயப் பாக்கறார். ஒருசிறு புன்முறுவலுடன் தலையசைக்கிறார். நானும் பதிலுக்கு தலையசைத்து வணக்கம் சொல்கிறேன். இரயில் கிளம்பிவிட்டது. பிளாட்பாரத்தில் அவசரமா ஓடிவந்த ஒரு தமிழ்க்குடும்பம் இரயிலப் பிடிக்கமுடியாம நின்னுட்டாங்க. எந்த டிராபிக்ல மாட்டினாங்களோ. தமிழ்க்குடும்பங்கள் பொதுவா தெற்கு தில்லியில்தான் அதிகமா வசிப்பாங்க. உள்ளே நெய்மணம் தூக்குது. வீட்டில காய்ச்சின நெய் போல. அதுக்குள்ள யாரோ சாப்பாட்டுப்பொட்டலத்த திறந்துட்டாங்க. இதுவே சென்னையிலிருந்து கிளம்புற இரயிலா இருந்தா இலையோட சேர்ந்த இட்லிசட்னி வாசனை வரும். யோசனையுடன் கண்ணை மூடினேன். பழைய ஞாபகங்கள் அலைமோதின.

    சின்ன வயசில கும்பகோணத்துல இருந்தோம். எங்கப்பா அங்க ஒரு ஹோட்டல் நடத்திட்டிருந்தாரு. மொத்த குடும்பமும் அதுக்காக உழைக்கும். அம்மாவும் பாட்டியும் வீட்டிலயே ஆட்டு உரலில இட்லிமாவும் வடைமாவும் அரைச்சு எடுத்துட்டுப் போவாங்க. மணி அய்யர்தான் எங்க ஹோட்டல் சரக்கு மாஸ்டர். ஒத்த ஆளா நின்னு மளமளனு காரியம் பாப்பார். சுடச்சுட இட்லி வடை இலையில பார்சல் பண்ணி ஆபீஸ் போறவங்களுக்குக் குடுப்பாரு. உக்காந்து சாப்பிட நேரமில்லாதவங்க அதை வாங்கிட்டுப்போவாங்க. எனக்கு விவரம் தெரிஞ்சு பதினைந்து வயசு வரை நல்லா ஓடிட்டு இருந்துது. திடீர்னு அப்பாவுக்கு கெட்ட நண்பர்கள் சேர்க்கை அதிகமாயிடுச்சு. தண்ணி அடிக்க ஆரம்பிச்சார். அப்பறம் சீட்டுவிளையாடற பழக்கம் வேற வந்திருச்சு. தினமும் வியாபாரத்தக் கவனிக்காம ஊர்சுத்திட்டு தன்னோட நண்பர்களையும் கூட்டிக்கிட்டு வந்து காசுவாங்காம சாப்பாடு குடுக்க ஆரம்பிச்சார்.

    பாவம் மணி அய்யர். அம்மா, பாட்டி மேல இரக்கப்பட்டு சம்பளம் இல்லாமகூட பலமாசம் வேலை பாத்தாராம். அப்பறம் நகைகள அடகு வச்சு, பாத்திரங்கள வித்து கொஞ்சநாள் நடத்திட்டு வந்தாங்க. அதுவும் முடியாம ஹோட்டல வித்துட்டு துணி தச்சிக்குடுத்து சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாங்க அம்மா. நோய்வந்து அப்பாவும் போய்ச்சேந்துட்டார்.

    அரசுபள்ளியில பணம் கட்டவேண்டியதில்லங்கறதால என்னால படிக்க முடிஞ்சது. அப்பறமும் பலபேர் தயவால கல்லூரிப்படிப்ப முடிச்சிட்டு அரசு உத்தியோகத்துல சேந்தேன். ரிடையர்மென்ட்கு இன்னும் ரெண்டு வருசம்தான் இருக்கு.

    யாரோ என்னைத் தொட்டு எழுப்புகிறார்கள். எதிரில் அந்த வட இந்திய மனிதர் கையில் பூரியுடன் நிக்கறார். பாயி…என அழைத்து தாங்கள் மதுராவிலிருந்து வருவதாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அங்கே பெரிய ஓட்டல் வைத்து நடத்துபவராம். இப்போ சென்னையில் ஆரம்பிக்கறதுக்காக போய்க்கிட்டிருக்காராம். என்னயப் பாத்தவொடனே சொல்லணும்னு தோணிச்சாம். சுத்த பசு நெய்யால செஞ்ச பூரி சாப்பிட்டுப் பாருங்கனு என்கிட்ட குடுக்கறார். இது அவரோட ஹோட்டல்ல குடுக்கற ஸ்பெஷலாம். வாங்கிக்கொண்டு வாழ்த்துக்கள் சொன்னேன். என் அப்பா கூட முன்னால் ஹோட்டல் நடத்தியவர்தான் என அறிமுகப்படுத்தியவுடன் அவர் பார்த்தீர்களா அதனாலதான் உங்களப் பாத்தவொடனே சொல்லணும்னு தோணிச்சு என்று சந்தோஷப்படுகிறார். அவருடைய நோக்கில் என் அப்பா ஏதோ பெரும் சாதனை படைத்தது போலவும் தாமும் அவ்வாறே வெற்றிபெறுவோம் எனவும் நினைக்கிறார் போல.

    இருக்கட்டும். எனக்கு மட்டும்தானே தெரியும் ‘இல்லையே, யானை தொடு வுண்ணின் மூடுங்கலம்’ங்கற பழமொழி. யானையே தொட்டு உண்ணத் தொடங்கிட்டா அதற்கு மூடி மறைத்து வைக்க தகுதியான பாத்திரம்னு ஒண்ணு கிடையாதில்லையா. அதுமாதிரிதான் எங்கப்பா பண்ணின வேலையும்.

    அந்த மனிதர் தன் குடும்பத்தார் கிட்ட என்னயப் பத்திசொல்லிட்டார்போல. எல்லாரும் என்னயத் திரும்பிப்பாக்கறாங்க.

    உலகம் எவ்வளவு வித்தியாசமானது. எல்லா உண்மையையும் எப்பவும் சொல்லணும்னு இல்ல. இந்தக் குடும்பத்துக்கு இப்ப என்னால நம்பிக்கை கிடைச்சிருக்கு. அதனோட பிரதிபலிப்பா அவங்க எல்லார் முகத்திலயும் சந்தோசம். சென்னையில் கால்வைக்கும்போது அவங்க சந்தோசமா நம்பிக்கையோட இறங்குவாங்க. கண்டிப்பா நல்லா உழைச்சு முன்னுக்கு வருவாங்க. கைபேசியில் என் மகள் அழைக்கிறாள். அவளுடன் பேசத்தொடங்குகிறேன்.

    பாடல் 56

    உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக்
    கற்றானை நோக்கியே கைவிடுக்க – கற்றான்
    கிழவனுரை கேட்கும் கேளான் எனினும்
    ‘இழவன்று எருதுண்ட உப்பு’.

    பழமொழி – ‘இழவன்று எருதுண்ட உப்பு’

    வாங்க மாமா. உக்காருங்கோ. ஊர்ல எல்லாரும் சௌக்கியமா? காபி சாப்பிட்டேளா விசாரிக்கிறாள் விசாலம். ஆமாம். பின்ன நான் வராம எப்படி. இந்த ஆத்துல நடந்த ஒவ்வொரு விசேசத்துக்கும் மொதல்ல நான்தான் ஆஜராவேன். கல்யாணம், காதுகுத்து, பிறந்தநாள்னு எவ்வளவு விசேசம் எடுத்து நடத்தியிருப்பேன். இப்ப கொஞ்சம் வயசாயிடுத்து அதனால வேத்துமனுசனா முந்தினநாள் வந்து இறங்கறேன். இருந்தாலும் பழக்கதோசம். எல்லாத்தையும் ஒருதடவை பாத்துடறேன். நீ ஒண்ணும் கவலப்படாத. சொல்லிவிட்டு என் கேள்விகள ஆரம்பிச்சேன்.

    என்னம்மா வாத்தியக்காரன் நாதஸ்வரம் எல்லாத்துக்கும் சொல்லியாச்சா. சீர்வரிசை தட்டு தாம்பாளம் எல்லாம் ரெடிபண்ணியாச்சா. ஆட்கள் வர ஆரம்பிச்சாச்சு. சாயங்காலம் மாப்பிள்ளை அழைப்பு.  இன்னும் பன்னீர் சந்தனக்கிண்ணம் வெளியில வைக்கலயேமா.

    நான் சொல்லறத காதுலயே வாங்கிக்காம விசாலம் யாருக்கோ காபி உபசாரம் பண்ணிண்டிருக்கா. எம் முன்னால உக்காந்துண்டிருக்கற பொண்ணரசி என்னயவே பாக்கறா. மரகழண்ட கேசு தானே பேசிக்கறதுனு நினைப்பாளோ. இருக்கட்டும். ஸ்டூல் மேல இருந்த வெற்றிலை சீவலை வாயில போட்டுக்கறேன்.

    சாயங்கால டிபன் என்ன?. வாழக்காய் பஜ்ஜியும், கேசரியும் தானே. அதுல ஒண்ணும் மாறுதல் இல்லயே. நான் பாட்டுக்கு பேசிண்டே போறேன். யாரும் பதில் சொல்ல மாட்டேங்கறீளே. என்ன ஆயிடுத்து இங்க. அதுக்குமேல பொறுமையில்லாம…. வயசானதால யாரும் மதிக்கமாட்டேங்கறா. போல,  விசாலம் என் மூத்த அக்கா பொண்ணுதான்.  என்னயவிட ரெண்டு வயசு சின்னவள். அவள் பேத்திக்குதான் நாளைக்கு கல்யாணம். புலம்பிண்டே வாசப்பக்கம் வந்துட்டேன். விசாலம் பேச்சுக்கே மரியாத இருக்கோ என்னமோ அப்பறம்தானே என் பேச்சக் கேக்கறதுக்கு. இருந்தாலும் வாய் சும்மா இருக்கமாட்டேங்கறது.

    ஏண்டாப்பா. பந்தக்காலக் கண்ணுலயே காணலயேடா. வாசப்பக்கம் ஓலப்பந்தல் போடுவேளா மாட்டேளா. வாழ மரம் எங்கடா?. அதுக்குப்பதில சீரியல் பல்ப மாட்டறேளா. பேஷ் பேஷ்.

    வேல செஞ்சிண்டு நிக்கற நாலு பசங்களையும் யாரோ ஒருத்தன் திட்டிண்டு இருக்கான்.

    வெரசலா லைட் அலங்காரம் பண்ணுடே. ஒரு வீட்டுக்கே இத்தன நேரம் எடுத்தா பெறகு கம்பெனிய இழுத்துமூடிட்டு படுத்து ஒறங்க வேண்டியதுதான். கத்திவிட்டு தள்ளிநின்னு துணிய கொசுவம் மடிச்சிண்டு நிக்கற பிள்ளையாண்டான் கிட்டப் போறான்.

    ஏல துணிய சுருக்குமடிச்சு ஒரு ஆர்ச் போடத் தெரியல. உன்னயெல்லாம் வச்சி  நாளமுன்னயும்…..  என்னவேல செஞ்சு கிழிக்கப் போறேன். உங்க நாலு பேரையும் சொந்தக்காரம்னு நெனச்சி வேலைக்குச் சேத்தது என் தப்பு.

    சொல்லிட்டு என்னையே பாக்கறான்.

    சாமிக்கு எந்த ஊரு. உள்ளூர்ல பாத்ததில்லயே.

    அப்பாடா வந்ததுக்கு ஒருத்தனாவது பேசறானேன்னு நினைச்சு பேச்சு குடுத்தேன். எனக்கு இந்த ஊருதாம்பா. குழந்தேளுக்கெல்லாம் கல்யாணம் பண்ணிக்குடுக்கற வர இந்தக் கோவில்ல தான் வேல பாத்துண்டிருந்தேன்.  பதினஞ்சு வருசமா இந்தப் பக்கமே வரல. எம்புள்ள என்னய பாம்பே கூட்டிண்டு போயிட்டான். அங்கதான் இருக்கேன். இப்போ இந்தக் கல்யாணத்த சாக்கு வச்சுண்டு இங்க வந்தேன். எம்புள்ளயும் வந்திருக்கான். அவனுக்குக் கொஞ்சம் டவுண்ல வேலை இருக்குனு என்னய இறக்கி உட்டுட்டுப் போயிட்டான்.

    நீர்யாரு? பந்தல் போடறவரா? இன்னும் வேலயே ஆரம்பிக்கலயே அதான் கேக்கறேன்.

    சாமி. நீங்க பழைய காலத்திலயே இருக்கீங்க. இப்ப யாரும் பந்தல் போட மாட்டாக. தெருவுல பாத்தீரா. தார் ரோடு போட்டிருக்கு. அதனால குழி தோண்டக்கூடாது. இப்பயெல்லாம் கல்யாணம் நடத்திக்குடுக்கறதுக்குன்னு கம்பெனிகள் வந்திருச்சு. அந்தக் கம்பெனி அலங்காரத்துலேந்து சமயல், பூமாலை வரை எல்லாமே செஞ்சு குடுத்துடும். வாசல்ல பன்னீர் சந்தனம்னு சொன்னீகளே அது கூட அவங்களே செஞ்சி போடுவாங்க. இன்னும் ஒருமணிநேரத்துக்குள்ளார  எல்லாத்தையும் வண்டியில கொணாந்து இறக்கி வச்சிருவாக. ஆட்களயும் அவுகளே கூட்டியாந்துருவாக.. பொண்ணுவீட்டு, மாப்பிள்ள வீட்டு சாதிசனத்துக்கு ஒரு சோலியுமில்ல. டென்சன் ஆவாம சந்தோசமா கல்யாணம் அட்டெண்ட் பண்ணுங்க. சொல்லிட்டு ஆர்ச் போடறவன்கிட்ட திரும்பப் போய் கத்திண்டிருக்கான்.

    ஓய் இம்புட்டு நேரம் நீர் இவாள்கிட்ட பேசிண்டிருந்தத நான் கேட்டேன். அந்தப் பிள்ளையாண்டானுக்குதான் வேல சரியாத் தெரியலயே அப்பறம் எதுக்கு கட்டாயப் படுத்தறீர். சொந்தக்காரன்னு நினைச்சு நீர் வேலை குடுத்திருக்கீர். இப்ப உமக்கும் டென்சன். அவனாலயும் வேலை செய்யமுடியல. இதத்தான் முன்ன ‘இழவன்று எருதுண்ட உப்பு’னு பழமொழியா சொல்லுவா. ஒருவேலயப் படிச்சவனுக்கே அந்த வேலயக் குடுக்கணும். எருது உப்பைத் தின்னாலும், அதிக உரமுடையதா உரியவனுக்கு நல்லா உழைக்கும் அதுபோல படிச்சவனும் உழைப்பான் அப்டிங்கறது அதோட அர்த்தம். இனிமேலாவது உம்ம சொந்தக்காரன்னு பாக்காம வேலைய செய்யத் தெரிஞ்சவனுக்கே அந்த வேலையைப் போட்டுக்குடும். அவாளும் சந்தோசமா இருப்பா. நீரும் நிம்மதியா இருக்கலாம்னு சொல்லிட்டுத் திரும்பறச்சே பக்கத்தாத்து கிட்டு அதான் என் பால்ய சினேகிதனப் பாத்தேன். கம்பு ஊனிண்டு நிக்கறான். கொஞ்சநேரம் பழையகதைகளப் பேசலாம். ஆசையோட அவாத்துக்குப் போறேன்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 26

    கதை வடிவில் பழமொழி நானூறு – 26

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 53

    நன்றே ஒருவர்த் துணையுடைமைப் பாப்பிடுக்கண்
    நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் – விண்டோயும்
    குன்றகல் நன்னாட! கூறுங்கால் ‘இல்லையே
    ஒன்றுக்(கு) உதவாத ஒன்று’.

    பழமொழி-  ‘இல்லையே, ஒன்றுக்கும் உதவாத ஒன்று

    ஒருவாரமா மழை கொட்டிக்கிட்டே இருக்கு. கண்டிப்பா அக்கம்பக்கத்து ஊருகள்ல வெள்ளம் வீட்டுக்குள்ள வந்திருக்கும். நம்ம ஏரியாவுலதான் ஏரி, குளம், ஆறு ஒண்ணுமில்லையே. கொஞ்சமா நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கலாம்.  அப்பா சொல்லிக் கொண்டே நடக்கிறார்.

    யாரும் மறந்துகூட டி.வி ய போட்டுராதீங்க. பக்கத்து வீட்ல ஷார்ட்சர்க்யூட் ஆயிடுச்சாம். பொறியியல் பட்டதாரியான சுதன் எனும் என் அன்புச் சகோதரன் அவன் பங்குக்கு அறிவுரை சொல்றான்.

    என்ன வாழ்க்கை. வெளியில கால் வைக்க முடியாது. முழங்கால் அளவு தண்ணி ஓடிக்கிட்டிருக்கு. வீடு முதல் மாடியில இருக்கறதால பால்கனியிலேந்து வெளியில பாக்க முடியுது. அவ்ளோதான். அதுக்குமேல ஒண்ணும் பண்ண முடியல. முடிஞ்சாமட்டும் என்ன பண்ணி கிழிச்சிருக்கப் போறேன். முதுகலை இயற்பியல் படிச்சிருக்கேன்னு பேரு. சரியான வேல எதுவும் இன்னும் கிடைச்ச பாடில்ல. டியூஷன் எடுத்தே வாழ்க்கையைக் கழிச்சுட்டு இருக்கேன். இயற்பியல் எனக்கு விருப்பப்பாடம்னு தேர்ந்தெடுத்துப் படிச்சேன். எப்பவுமே புரிஞ்சு படிச்சாதான் எனக்குப் பிடிக்கும். மார்க் வாங்கறதுக்காக படிக்கற பழக்கம் இல்லாததால கல்லூரியில சீட் கிடைச்சதே பெரும்பாடா ஆயிடுச்சு. ஒருவழியா படிச்சு முடிச்சு வெளியில வந்தப்புறம்தான் உலகமே புரியுது. இங்க எல்லாமே மார்க்கையும் நுழைவுத்தேர்வையும் வைத்துதான் மதிப்பிடறாங்க. அரசாங்க வேலைக்கான நுழைவுத்தேர்வுல எந்தப் பாடத்த முதன்மைப் பாடமா எடுத்துப்படிச்சாதான்  என்ன.  அவங்களோட தேர்வுல வெற்றிபெற்றா போதும். இப்போ வேற வழியில்லாம கோச்சிங் சென்டர் போய் பயிற்சி எடுத்துக்கறேன்.  வர தேர்வுலயாவது வெற்றி பெறணும். தினமும் பக்கத்துல இருக்கற நூலகம் வரை போய் எல்லா செய்தித்தாள்களையும் படிச்சுட்டு வருவேன். இப்போ அதுவும் போச்சு.

    தம்பி தம்பினு பக்கத்து பால்கனி ஆன்ட்டி கூப்பிடறாங்க. கொட்டற மழையில அவங்க கைய அசைக்கறதுதான் தெரியுது. வேற என்ன சொல்லவராங்கனு புரியல. இப்பதான் அந்த ஆன்ட்டி வீட்டயே நல்லா கவனிக்கறேன். எங்க வீட்டுக்கு இடதுபக்கத்துல இருந்தாலும் கொஞ்சம் இடைவெளிவிட்டு அவங்க வீடு இருந்ததால பெரிசா கவனிச்சதில்ல. ஒரு சின்ன பொண்ணு வேற எட்டிப்பாக்குது.

    ஆமாம் என்கிட்டதான் ஏதோ சொல்ல ட்ரை பண்றாங்க. பாத்துக்கிட்டு இருக்கும்போதே ஒரு பெரிய கயிற்றை எடுக்கறாங்க. ஒரு நுனிய அவங்க வீட்டு பால்கனி அழியில கட்டிட்டு மீதமுள்ளதச் சுருட்டி வீசறாங்க. கீழ விழுந்து அது நனையுது. திரும்பவும் என்கிட்ட சைகை காட்டிட்டு சுருட்டி என்னய நோக்கி வீசறாங்க. ஒருவேளை நான் அடுத்த பக்கத்தப் புடிச்சு என் வீட்டு அழியில கட்டணும்னு எதிர்பாக்கறாங்களோ. திரும்பத் திரும்ப எரிந்ததில் மூணாவது தடவை நான் கயிற்றைப் பிடிச்சிட்டேன். அதை எங்க வீட்டு பால்கனி அழியில் கட்டியும் விட்டேன்.

    இப்போ அவங்க தன்வீட்டுப் பக்கத்துல கட்டிய கயிற்றின் நுனியை அவிழ்த்து அதில ஒரு பிளாஸ்டிக் கூடையை நுழைத்து, கயிற்றை மேலையும் கீழையும் அசைத்து அசைத்து அந்தக் கூடையை எங்க வீட்டுப்பக்கம் தள்ளி விடறாங்க.

    ஆர்வ மேலீட்டால் அந்தக் கூடையை கைஎட்டிப் பிடித்து விட்டேன். அதுக்குள்ள ஒரு துண்டுச்சீட்டும் சுடச்சுட கேசரி போட்ட டிபன்பாக்சும்  இருக்கு. அந்த சீட்டுல எங்க வீட்டுல கைக்குழந்தை இருக்கு ஒரு பால் பாக்கெட் இருந்தா போட்டு அனுப்புங்க. தேங்க்ஸ்னு எழுதியிருக்காங்க. நான் நிமிர்ந்து அவங்களப் பாக்கறேன். அதே சிரிச்ச முகத்தோட அந்த ஆன்ட்டி வெயிட் பண்றாங்க.

    அம்மாவிடம் சொல்லி பால்பாக்கெட் போட்டு அந்தக் கூடையை அவர்கள் செய்த முறைப்படியே அசைத்து அனுப்பி வச்சேன்.

    ‘இல்லையே, ஒன்றுக்கும் உதவாத ஒன்றுனு பழமொழிய கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இப்பதான் நேர்ல பாக்கறேன். சும்மா உக்காந்து புலம்பிக்கிட்டு இருக்காம எவ்வளவு அழகா கொடிக்கயிற உபயோகிச்சு வேலைய நடத்திக்கிட்டாங்க சொல்லிக்கொண்டே அம்மா உள்ளே செல்கிறாள்.

    ஆமாம். சரிதான் ஒன்றுக்கும் உதவாத பொருள்னு ஒண்ணு கிடையவே கிடையாது. எனக்குள்  நானே சொல்லிக் கொள்கிறேன். சொல்லிமுடித்தவுடன் எனக்குள் புதுஉற்சாகம் பிறக்கிறது. என்னாலயும் ஏதாவது செய்து சாதிக்க முடியும்னு தோணுது.

    பாடல் 54

    ஆஅம் எனக்கெளி(து) என்றுலகம் ஆண்டவன்
    மேஎம் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
    தோஒம் உடைய தொடங்குவார்க்(கு) ‘இல்லையே
    தாஅம் தரவாரா நோய்’.

    பழமொழி – ‘இல்லையே தாம் தர வாரா நோய்’

    எதற்கெடுத்தாலும் கதை சொல்லும் என் நண்பன் செல்வாவுடன் அவன் சொந்த ஊருக்கு வந்திருக்கேன். இங்கே என்னென்ன கதை சொல்லப்போறானோ. எது எப்படியோ. அவன் சொல்லறதுல உண்மை இருக்கா இல்லயான்னு நாங்க ஆராய்ந்ததே இல்ல. கேக்க சுவாரசியமா இருக்கும். பொழுதும் போகும். ஆனா சில நேரங்கள்ல எப்படா இவன் முடிக்கப்போறான்னு எரிச்சலாவும் இருக்கும். ஆனாலும் இவனுக்குக் கொஞ்சம் கற்பனை அதிகம்தான்.

    நாங்க மொத்தம் ஐந்துபேர் தங்கி இருக்கற அந்த சென்னை வீடு கலகலப்பா இருக்குன்னா அது இவனாலதான். எல்லாரும் வெவ்வேற இடத்துலேந்து வந்திருந்தாலும் வேலபாக்கற தொழிற்சாலை ஒண்ணுங்கறதால சேந்து போக வர முடியுது.

    இப்ப இவன் வற்புறுத்திக் கூப்பிட்டதால நாங்க எல்லாரும் இவன் கிராமத்துக்கு வந்திருக்கோம். பஸ்லேந்து இறங்கினதுலேந்து ஒரே நிசப்தம். நடத்தியே கூட்டிக்கிட்டுப் போறான். இன்னும் எவ்ளோதூரம் நடக்கணுமோ. முன்னாடி காலத்துல இந்த இடமெல்லாம் ஏரியும், குளமுமா இருந்திருக்கும்போல.இப்போ ஒரே பாறையும் மண்ணுமா குண்டும் குழியுமா இருக்கு. பொறுக்க முடியாம செல்வா என்ன அமைதியாவே வறீங்க. என்ன பலத்த யோசனை கேட்டே விட்டேன். கால்வேற வலிக்குது. இன்னும் எவ்ளோதூரம் நடக்கணும்?

    கொஞ்ச தூரந்தான். ஒரு மொட்டக் கல் மண்டபம் தெரியுதுபாருங்க. அதுக்குப் பின்னால அரைகிலோ மீட்டர் தான். சர்வசாதாரணமாய்ச் சொல்லிவிட்டு வீறு நடை போடுகின்றான். எங்களுக்கோ சுத்தமா முடியல. சரி அவன் வாயக்கிளறி டைம்பாஸ் பண்ணலாம்னா அவனும் சத்தமில்லாம நடக்கறான்.

    சரி. அவன் சொன்னதவச்சே ஆரம்பிப்போம். அந்த மொட்ட மண்டபம்னு சொல்றீங்களே செல்வா அது முன்காலத்துல இருந்த அரண்மனை அல்லது கோயிலோட ஒரு பகுதியோ?

    இல்ல இல்ல. அது ஒரு தனி கதை ஆரம்பித்தான் அவன். எங்க ஊர்ல மாயி னு ஒரு நாட்டியக்காரி இருந்திருக்கா. அவ ரொம்ப பேச்சுத்திறமை மிக்கவளாம்.

    அவகூட உல்லாசமா பொழுதுப்போக்கறதுக்காக ஊருக்கு ஒதுக்குப்புறமா இந்த மண்டபத்த கட்டியிருந்திருக்காரு ஜமீன்தார்.

    நேர்லயே காட்டறேன். இங்க பாருங்க. கல் தரையில பல்லாங்குழி, தாயக்கட்டம் பாம்புக்கட்டம் எல்லாம் செதுக்கி வச்சிருக்கு. அவங்க ரெண்டு பேரும் விளையாடி பொழுது போக்குவாங்களாம். ஒவ்வொரு முறை தான் தோக்கும்போதும் தன் சொத்துல ஒருபகுதிய எழுதித்தரதா ஜமீன்தார் வாக்கு குடுத்திருந்திருக்கார். கடைசியில அந்தம்மா சாமர்த்தியமா எல்லாத்தையும் எழுதி வாங்கிருச்சு. ஜமீன்தார் பைத்தியமா இந்த மண்டபத்தச் சுத்தி சுத்தி வந்து செத்துட்டாராம். அதனாலதான் இதத் திரும்ப எடுத்துக்கட்டாம பாழடைய உட்டுட்டாங்க. இப்ப கூட ராத்திரி இந்தப் பக்கமா வந்தா ஜமீன்தார் சிரிக்கறமாதிரி சத்தம் கேக்கும்னு சொல்லுவாங்க. ராத்திரி பத்துமணிக்கு மேல யாரும் இந்தப்பக்கம் வரதில்ல.

    அவன்பாட்டுக்கு சொல்லிக்கொண்டே நடந்துக்கிட்டிருக்கான். எங்களுக்கு அடிவயிறு கலக்குது. இவ்ளோ நாள் இவன் சொன்னதையெல்லாம் கதையாத்தான் கேட்டிருக்கோம். ஆனா இந்த மண்டபத்தப் பாத்ததிலேந்து இது உண்மைக்கதையா இருக்குமோன்னு மனசு நம்புது. எப்டியோ இந்த ஜமீன்தார் ‘இல்லையே தாம் தர வாரா நோய்’னு சொல்லப்படற பழமொழி மாதிரி தப்பா வாக்கு குடுத்து துன்பத்த விலைக்கு வாங்கி இருக்கார்.

    வாங்க தம்பிகளா. செல்வாவின் அப்பா எதிரில் வந்து அழைக்கிறார். ஜமீன்தார் பற்றிய நினைவிலிருந்து மீண்டு அவர் பின்னாலேயே செல்கிறோம்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 25

    கதை வடிவில் பழமொழி நானூறு – 25

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 51

    கட்டுடைத் தாகக் கருமம் செயவைப்பின்
    பட்டுண்டாங்(கு) ஓடும் பரியாரை வையற்க
    தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை ‘இல்லையே
    அட்டாரை ஒட்டாக் கலம்’.

    பழமொழி – இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம்

    குடும்பத்தப் பத்தி சரியா விசாரிச்சிட்டுத்தான் முடிவச் சொல்லணும்னு இப்ப எதுக்கு தேவையில்லாம ஒத்தக்கால்ல நிக்கற. எனக்கென்னமோ பாக்க நல்ல குடும்பமாத்தான் தெரிஞ்சாங்க. அப்பா தொடர்ந்து கொண்டே போக இடையில் அம்மா .

    போதும் நிறுத்துங்க. ‘உங்களுக்கு வெளுத்ததெல்லாம் பால்’. என்னால அப்டி யோசிக்க முடியாது. எதையும் நான் நிதானமா யோசிச்சுதான் முடிவெடுப்பேன்.

    நிதானம் நிதானம்னு சொல்லிக்கிட்டு ‘நீ கண்ண மூடிக்கிட்டு உலகமே இருட்டா இருக்கும்னு’ பேசற. இது அப்பா.

    இங்க என்ன பழமொழிக்கு பழமொழி போட்டியா நடக்குது. சண்டபோடும்போதும் சரமாரியா பழமொழியா கொட்டறாங்க. நல்ல தமிழ்ப் பற்றுதான்.  இருக்கட்டும். ஆனா இப்ப பேசிக்கிட்டிருக்கறது என் கல்யாணத்தப் பத்தி. ரெண்டு நாள் முன்ன பொண்ணு பாக்கப் போனோம். எனக்கும் பாக்கறதுக்கு அவங்க நல்லகுடும்பமாத்தான் தெரிஞ்சாங்க. எப்டியிருந்தாலும் அரேஞ்ட் மேரேஜ். அதனால பொண்ணப் பத்தின விவரங்கள் அதிகமா தெரியாது. ஆனா இந்த அம்மா ஏன் அவங்க குடும்பத்தப் பத்தியே பேசிக்கிட்டு இருக்காங்கனு தெரியல. நான் என்ன மொத்த குடும்பத்தையா கல்யாணம் செஞ்சுக்கப் போறேன். இருந்தாலும் அம்மா காரணம் இல்லாம சொல்ல மாட்டங்க. என்னன்னு அவங்ககிட்டயே கேட்டுத் தெரிஞ்சிக்கலாம். போன எடத்துல யாராவது மரியாதைக்குறைவா பேசினாங்களோ என்னமோ? யோசித்துக்கொண்டே அவர்களின் சண்டையில் இடையில் நுழைந்தேன்.

    அம்மா ஆரம்பித்தாள். உனக்கு எம்மேல நம்பிக்கை இருக்குல்ல. கொஞ்சம் பொறு. நான் நாலுபேர்கிட்ட அந்தக் குடும்பத்தப் பத்தி , அவங்க முந்தின தலைமுறையப் பத்தி நல்லா விசாரிச்சுட்டு எம் முடிவச் சொல்றேன்.

    உட்டா அவங்களோட ஏழு தலைமுறையப் பத்தியும் கேள்வி கேட்ப போல. எரிச்சலுடன் கிளம்பிவிட்டார் அப்பா.

    அவர் கிடக்கிறார். நீ கேளு. அம்மா ஆரம்பித்தாள். இப்டித்தான் முன்னால எங்க ஊர்ல தாத்தாவோட ஒண்ணுவிட்ட தங்கச்சிக்கு ஒடம்பு முடியாமப் போச்சு. அவங்க மொத்த சொத்தையும் எங்க அம்மா பேர்ல எழுதிவைக்கறதாவும் அவங்களக் கடைசி காலம் வரை பாத்துக்கிடணும்னு சொல்லி தாத்தாகிட்ட வந்தாங்க. அப்ப எங்கம்மா படிச்சிக்கிட்டு இருந்தாங்க. எங்க ஊர்ல கோவிந்தன்னு ஒருத்தன் இருந்தான்.  அவனுக்கு குடும்பம்னு ஒண்ணும் இருக்கல. அப்ப தாத்தா இந்த கோவிந்தன அந்த ஆச்சிக்கு தொணையா இருக்கச் சொல்லி பேசி வச்சாரு. அதுக்குத் தகுந்த சம்பள நெல்லையும் அவனுக்கு கொடுத்துட்டு இருந்தாரு. இவனும் ஆச்சி கூடவே ஒத்தாச செஞ்சுக்கிட்டு இருந்தான். ஆச்சிக்கு நிறைய சொத்து. அவளுக்கு பிள்ள குட்டி எதுவும் இல்ல. இந்த கோவிந்தன் கொஞ்சம் படிச்சிருந்ததால அவன நம்பி காடு கழனி பொறுப்ப எல்லாம் ஒப்படைச்சாங்க ஆச்சி.. கொஞ்ச கொஞ்சமா அவங்க சொத்து விவரம் பூராத் தெரிஞ்சுக்கிட்ட அவன் ஆச்சி செத்தபிறகு எல்லாம் தனக்கு வர மாதிரி எழுதி வச்சிக்கிட்டான். தாத்தாகிட்டயும் நல்ல பயலாத்தான் நடிச்சிக்கிட்டிருந்தான். மொதல்ல தாத்தா இறந்துட்டாரு. அப்பறந்தான் அந்த ஆச்சி செத்துச்சு. அவங்க செத்தப்பறம்தான் தெரிஞ்சுச்சு. இவன் மொத்தத்தையும் தம் பேருக்கு மாத்திக்கிட்ட விசயம். எங்கம்மாவுக்கு ஒண்ணும் கிடைக்கல. இந்தக் கதைய எங்கம்மா எங்கிட்ட பலதடவை சொல்லியிருக்காங்க.

    ஓ கேக்க சினிமா கதை மாதிரி இருக்கே. நான் சொல்ல அம்மா கோபத்துடன்

    இது ஒண்ணும் கதையில்ல. நிசம். யாருக்குத்தெரியும் இந்த மாதிரி இன்னொருத்தர் காச ஏமாத்தி அந்தப் பரம்பரையில யாராவது பொழைச்சிருந்தாங்கன்னா அந்தப் பாவம் எல்லாருக்கும்தானே வந்து சேரும். அதனாலதான் நான் விசாரிக்கணுங்கறேன். அம்மா முடிக்க நான் தொடர்ந்தேன்.

    அம்மா இதத்தான் ‘இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம்னு’ பழமொழி நானூறு சொல்லுது. ஒருத்தன்கிட்ட காரியத்த ஒப்படைக்கும்போது அதோட பயனை அவனே எடுத்துக்குவான்னு தோணிச்சின்னா அவன்கிட்ட ஒப்படைக்கக் கூடாதுங்கறது அதோட பொருள். கோவிந்தன் மாதிரி ஆள விசாரிக்காம வேலைக்கு வச்சது தாத்தாவோட தப்பு. அதுக்குனு எல்லாரையும் அவனப்போலவே நினைச்சு சந்தேகப்படறது எனக்கு சரியாப் படல. அப்பறம் உன் இஷ்டம். சொல்லிவிட்டு அப்போதைக்கு அந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக நினைத்து கிளம்பினேன்.

    பாடல் 52

    குரைத்துக் கொளப்பட்டார் கோளிழுக்குப் பட்டுப்
    புரைத்தெழுந்து போகினும் போவர் – அரக்கில்லுள்
    பொய்யற்ற ஐவரும் போயினார் ‘இல்லையே
    உய்வதற்(கு) உய்யா இடம்’.

    ‘இல்லையே உய்வதற்கு உய்யா இடம்’

    வந்தே பாரத் விமானத்தில் எவ்வளவு முயற்சித்தும் பயணச்சீட்டு கிடைக்கவில்லை. மனம் முழுக்க கவலையுடன் துபாயிலிருந்து நான் இந்தியாவில் இருக்கும் என் குடும்பத்தாருடன் பேச முயல்கிறேன். பேச கேட்க எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும் மனம் ஒருநிலையில் இல்லாதபோது தலையில் இடிவிழுந்தமாதிரி ஒரு உணர்வு. இனிமே எப்போ கிடைச்சு நான் எப்போ போக.. என் தாய் மண்ணை மிதிக்க முடியுமோ என்னவோ. இயலாமை என்னை முழுமையாய் ஆக்கிரமிக்க, கைபேசியை கீழே வைத்துவிட்டு என் முயற்சியைக் கைவிட்டேன்.

    போனவாரம் பேசியபோது மனைவி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இன்னும் நம்ம வீட்டுப்பக்கத்துல கொரோனா தாக்கம் குறைந்த பாடில்லை.நானும் குழந்தைகளும் பத்திரமாதான் இருக்கோம். நம்ம விமல் அண்ணன் அடுத்த சனிக்கிழமை குடும்பத்தோட கிளம்பி வரப்போறதா கேள்விப்பட்டேன். அவங்ககூட சேந்து நீங்களும் புக் பண்ணியிருக்கலாமே. அதன்பிறகு அவள் பேசிய எதுவும் சரியாகக் காதில் விழவில்லை.  ஏதோ ஒப்புக்குப் பேசிவிட்டு கைபேசி இணைப்பைத் துண்டித்தேன்.

    விமல் கூடவா இப்படி. எத்தனைதடவ சொன்னேன். நீ ஊருக்குக் கிளம்பறதா இருந்தா எனக்கும் சேத்து புக் பண்ணுனு. நான் தொழிற்சாலைக்குள் வேலை செய்வதால் முழுநேரம் இணைய இணைப்பு கிடைக்காது. காலை அல்லது மாலை நேரங்களில் தொழிற்சாலைக்கு வெளியேதான் முயற்சிக்க வேண்டும். அதிலும் பல தடங்கல்கள். அதனால தான் விமல், ரவி, மதன் இவங்க மூணு பேர் கிட்டயும் சொல்லிவச்சிருந்தேன்.

    ரவியும் மதனும் போனவாரம் கூப்பிட்டு டேய் திடீர்னு புக் பண்ணிட்டோம். உனக்கும் சேத்து பண்ண டிக்கெட் இல்ல. கிளம்பறோம். பத்திரமா இருந்துக்கோ. சீக்கிரமா இங்கிருந்து கிளம்பிடு என அறிவுரை சொல்லிவிட்டுப் போய் விட்டார்கள்.

    இந்த விமல் புக் பண்ணினத என்கிட்ட சொல்லக்கூட இல்ல. மனைவி சொல்லி தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு. இவங்ககூடயெல்லாம் இவ்வளவு வருசம் நட்பு வச்சிருந்தத நினைச்சா வெட்கமா இருக்கு. இன்னிக்கு மனசுசரியில்ல. நாளைக்குதான் கூப்பிடணும்.

    இரவு உணவிற்குப் பின் களைப்பில் உறங்கிவிட்டேன்.  அடுத்தநாள் காலை கைபேசியில் மூன்று மிஸ்ட் கால்கள். அதுவும் நண்பன் விமலிடமிருந்து.

    என்ன ஆச்சரியம். ஊருக்குப் போய் சேந்தப்புறம் சாவகாசமா என் நினைப்பு வந்திருக்கு போல. இருந்தாலும் பரவாயில்ல. நான் நல்லவனாவே இருந்துட்டுப் போறேன். ஆனா கூப்பிட்டவுடனே நல்லா திட்டிட்டுதான் பேச ஆரம்பிக்கணும்.

    மனதுள் நினைத்துக்கொண்டே அழைத்தேன். அடுத்தமுனையில் வேறு ஒருவரின் குரல்.

    சார் நீங்க மிஸ்டர் ரகுதானே. என உறுதிப்படுத்திக்கொண்டு நான் பெங்களூரிலிருந்து மருத்துவர் சுதீப் பேசறேன். உங்க நண்பர் விமல் வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாயிடுச்சு. அவருக்கும்  அவருடைய குடும்பத்துக்கும் பலத்த அடிபட்டிருக்கு. அவரோட கைபேசியில உங்களின் எண்தான் எமெர்ஜென்சினு பதிவுசெய்யப்பட்டதால உங்களுக்குத் தகவல் குடுக்கறோம். அவர் முடித்தவுடன்

    பதட்டத்துடன் விமல் இப்போ எங்கே இருக்கிறான். பேசமுடியுமா.

    என் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஒரே பதில். இப்போ எந்த பேஷண்டையும் பேச அனுமதிக்கமுடியாது. மருத்துவமனை முகவரிய உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். பக்கத்தில யாராவது சொந்தக்காரங்க இருந்தாங்கன்னா சொல்லிருங்க. இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் பெருங்குரலெடுத்து அழவேண்டும்போல் தோன்றியது. நேற்றுவரை சுயநலவாதியாய்த் தெரிந்த என் நண்பன் உயிர்காப்பானாய் மாறிப்போயிருந்தான்.

    இதுக்குத்தான் எனக்கு டிக்கெட் புக் பண்ணாம விட்டானா. கடவுளே! அவனையும் குடும்பத்தாரையும் நல்லபடியாகக் காப்பாற்று வேண்டிக்கொண்டே  ரவி மற்றும் மதனின் எண்களை அழைக்க ஆரம்பித்தேன். விமலின் தாயார் ரொம்ப வயதானவர். அவரைத் தவிர அவனுக்கு யாரும் கிடையாது.

    ‘இல்லையே உய்வதற்கு உய்யா இடம்’ என்ற பழமொழி நானூற்றின் பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது. நண்பர்கள் கைவிட்டாலும் நல்ல ஊழ் இருந்தால் அவருக்கு எவ்விதமான ஆபத்தும் வராது என்பது இதோட பொருள். என் விஷயத்திலையும் அப்டிதான் நடந்திருக்கு.

    யோசித்துக்கொண்டே அடுத்து செய்ய வேண்டிய வேலைக்கு ஆயத்தமானேன்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 24

    கதை வடிவில் பழமொழி நானூறு – 24

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 49

    நல்லவை கண்டக்கால் நாச்சுருட்டி நன்றுணராப்
    புல்லவையுள் தம்மைப் புகழ்ந்துரைத்தல் – புல்லார்
    புடைத்தறுகண் அஞ்சுவான் ‘இல்லுள்வில் லேற்றி
    இடைக்கலத்து எய்து விடல்’.

     பழமொழி – இல்லுள்வில்லேற்றி இடைக்கலத்து எய்து விடல்‘.

    நேற்றுதான் நான் மும்பையிலிருந்து வந்தேன். ஆனா அதுக்குள்ள எனக்கு எத்தன நண்பர்கள் கிடைச்சிட்டாங்க. யோசித்துக்கொண்டே மாமா வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கிறேன்.

    இந்த ஊர்ல எல்லாரும் மனசுல வஞ்சகமில்லாம பழகறாங்க அப்போதுதான் வெளியில் வந்த அத்தையிடம் சொல்வதைக் கேட்டு என்னடா மருமகனே! எங்க ஊர் உனக்குப் பிடிச்சிருக்கா. சாயங்காலமா ஆத்துப்பக்கம் நடந்துட்டு வா. அந்த நல்ல காத்த சுவாசிச்சா உடம்புல ஒரு வியாதி அண்டாது. இதெல்லாம் சொன்னாப் புரியாது. அனுபவிச்சுப் பாக்கணும். மாமா செல்லமுத்து சொல்லிவிட்டு விறுவிறுவென்று எங்கோ போய்விட்டார்.

    சரி. கேட்டுத்தான் பார்ப்போமே எனக் காலார நடந்து ஆத்துப் பக்கம் வருவதற்குள் எத்தனை காட்சிகள். வழியில் சில சிறுவர்கள் தென்னை மரம் ஏற முயற்சிப்பதைப் பார்த்து நானும் ஆசைப் பட்டதில்முட்டி பேந்ததுதான் மிச்சம்.

    என்ன தம்பி பட்டணத்துக்காரரா. டவுசர் கிழிஞ்சுடும். இதப்போட்டுக்கிட்டு ஏற முடியாது. தலைப்பாகை கட்டிய பெரியவரின் வார்னிங்கையும் மீறி ஏறுவது போல் பாவனை செய்து போட்டோ எடுப்பதற்குள் கீழே விழுந்ததில் சின்ன சிராய்ப்பு.

    அண்ணே ஆத்துல போயி காலக் கழுவிக்கிடுங்க. எங்க ஆத்து மீன் நக்கினா புண்ணு வராது. என் குட்டி நண்பனின் வைத்திய அறிவுரையைச் செவிமடுத்து ஆத்தங்கரைக்குப் போனேன்.

    அங்கிருந்த இருவர் பேசிக்கொள்கிறார்கள். நம்ம வேலாயுதம் மகன் பேச்சக் கேக்க நீ ஏன் வரல. என்ன அருமையாப் பேசினாந்தெரியுமா. கூட்டத்துல ஒரே விசில், கைதட்டல் தான். மைக்க எடுத்தா வார்த்த அருவியா கொட்டுதே. நல்ல பய. பெரிய ஆளா வருவான். பேசிக்கொண்டே இருவரும் சென்றதால் முழுவதும் கேக்க முடியவில்லை.

    என்ன அண்ணே. கீழ விழுந்திட்டீங்க போல. கொஞ்சநேரம் இந்த மண்ணுல கிட்டிப்புல் விளையாண்டுட்டுப் போலாமா. என் குட்டி நண்பர்கள் குழு என்னை அழைக்கிறது.

    ஆமா. இந்த ஊர்ல வேலாயுதம் மகன்னு சொல்றாங்களே அவர் அரசியல் தலைவரோ?

    அட அத விடுங்கண்ணே. அந்தண்ணன் பேச்சப் பேசாதீங்க அவர வெத்து டப்பானு எங்கப்பா சொல்லுவாங்க. இப்ப வெளையாட வாங்கண்ணே நேரமாகுது.

    அவர்கள் கையைப் பிடித்து இழுத்தும் எனக்கு வேலாயுதம் மகனைப் பற்றியே நினைப்பு. வீட்டுக்குப் போனவுடன் முதல் வேலயா அத்தைகிட்ட கேட்டேன்.

    அட அவனா நாலுந்தெரிஞ்சவங்க முன்ன பொத்திக்கிட்டு நிப்பான். வெவரந்தெரியாத அப்பாவிங்களாப் பாத்து கூட்டங்கூட்டி எல்லாந்தெரிஞ்சாமாதிரி வீண் பேச்சு பேசுவான்.

    கேட்டுக்கொண்டே உள்ளே வந்த மாமா. இல்லுள்வில்லேற்றி இடைக்கலத்து எய்து விடல்‘.னு பழமொழி சொல்றார். பகைவரைப் பாத்து பயந்தவன் வீட்டுக்குள்ளயே உக்காந்துட்டு இருக்கற பானை, சட்டி மேலயெல்லாம் அம்பு உடுவானாம். அதுமாதிரிதான் இவன் கதையும்னு.

    பரவாயில்ல இங்க வந்த இரண்டு நாள்ல பல விசயங்களக் கத்துக்கிட்டேன். .

    பாடல் 50

    சுடப்பட்டு உயிருய்ந்த சோழன் மகனும்
    பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக் – கடைக்கால்
    செயிரறு செங்கோல் செலீஇயினான் ‘இல்லை
    உயிருடையார் எய்தா வினை.’

    பழமொழி- இல்லை உயிருடையார் எய்தா வினை.

    அன்னிக்கு நடந்தத நினைச்சா இப்ப சிரிப்புதான் வருது. ஆனா அது சிரிக்கக் கூடிய விசயமா. அந்த நிகழ்ச்சிதான் என்னோட வாழ்க்கைய முழுமையா மாத்திரிச்சு.

    இல்லாட்டி நான் இப்ப இங்க பேராசிரியா இந்தப் பசங்க முன்ன நின்னு சிரிச்சிட்டிருக்க முடியுமா. அங்க தெரியற புளிய மரத்துல பேயாத்தான் தொங்கிட்டிருப்பேன். மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

    சின்னப் பசங்க மனசுக்குள்ள என்ன இருக்குனு தெரிஞ்சிக்கவே முடியறதில்லனு  சொல்ற ஒவ்வொருத்தரும் தான் அந்தப் பருவத்தக் கடந்து வந்தப்போ ஏற்பட்ட அனுபவங்கள நினைச்சுப் பாக்கணும். பெரும்பாலும் அனுபவ முதிர்ச்சி பெற்றவுடனே ஏதோ தாங்க பொறந்ததுலேந்து ரொம்ப தெளிவா இருந்தா மாதிரியே பாதிபேர் நினைச்சிக்கிறாங்க. எல்லாரும் ஏதோ ஒருவிதத்துல அவமானப்பட்டிருப்போம், ஏமாற்றப் பட்டிருப்போம், வேதனைப் பட்டிருப்போம் இந்த மாதிரி நிறைய அனுபவங்கள்தான் நம்மள சமநிலைப் படுத்துது.

    பொத்தி பொத்தி வச்சு வளர்த்த பசங்க பிற்காலத்துல சமூகத்த எதிர்நோக்கத் தயங்குவாங்க. சின்னச்சின்னத் தடங்கல்கள் கூட அவங்களுக்கு வெறுப்பக் கொடுக்கும். எனக்கு மட்டும் ஏன் இப்படினு நினைச்சு கடைசியில கோழைகளா மூலையில தள்ளப்படுவாங்க.

    பதினெட்டு வயசு வரை இந்தப் பிரச்சினை இருக்கறது சகசம்தான். அதுக்குப்பறமும் நீடிச்சிதுன்னாதான் கஷ்டம். சரி நான் இப்போ என் முன்னால வந்து உட்காரப்போற மாணவனுக்கு அறிவுரை சொல்லணும். வரலாற்றுப் பேராசிரியரான என்னையும் நம்பி அவன் அம்மா அப்பா என்கிட்ட கூட்டிக்கிட்டு வராங்க. நான் என்ன சொல்லணும்னு யோசிக்கறத உட்டுட்டு இப்டி ஏன் குழம்பறேன். இருந்தாலும் என் மனசு என் அனுபவத்தையே அசை போடுது.

    அன்றைக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வந்த தினம். எல்லாரும் சந்தோசமா இருந்தாங்க. எனக்கு மட்டும் மனசுக்குள்ள பெரிய உறுத்தல். எல்லாப் பாடத்துலயும் தொண்ணூறு மதிப்பெண்களுக்குமேல எடுத்த நான் வரலாறு புவியியல் பாடத்துல மட்டும் அறுபத்தைந்து மதிப்பெண் எடுத்திருக்கேன். யாருமே எதுவுமேசொல்லாத போதும் அதெப்படி அவ்வளவு கேவலமாவா நான் எழுதினேன்னு மனசு உறுத்திக்கிட்டே இருந்துச்சு. நான் நல்லாத்தான் எழுதியிருந்தேன். மதிப்பெண் தான் சரியா வரலனு சொன்னா யாராவது நம்பப் போறாங்களா என்ன. பேசாம வயல் பக்கம் போயி கிணத்துல உழுந்துடலாம் அப்பறம் யாரையும் பாக்க வேண்டி வராதுபாருனு நினைச்ச மனதுக்குக் கட்டுப்பட்டு நடக்க ஆரம்பிச்சேன். வயக்காட்டுக்குள்ள இருக்கற மொட்டக்கிணறுக்குள்ள  குதிச்சிரணும். இருட்ட ஆரம்பிக்கும்போது போயிடணும். மனசுக்குள்ள தீர்மானித்துக்கொண்டே அந்திப்பொழுதில் நடக்க ஆரம்பிச்சவுடனே என் நண்பன் மாசிலாமணியும் சேர்ந்துகொண்டான்.

    டேய் இந்நேரத்துக்கு எங்கடா போற. எனக்கும் போரடிக்குது. நானும் வரேன். தனியாப் போகாதடா நாய் இருக்கும். அவன் தொடர்ந்து பேசிக்கொண்டே வர பொறுக்க முடியாம அவனை விரட்டுவதற்காக உண்மையச் சொல்லவேண்டியதாப்போச்சு..

    அவ்வளவுதான்.  டேய் லூசு.  இந்த மார்க்குக்கெல்லாம் கெணத்துல குதிப்பாங்களாடா. அப்பறம் பேயாத்தான் அலையுவ. பேசாம எங்கூட வா. நாம நேரா சோஷியல் டீச்சர் வீட்டுக்குப் போய் மார்க்கச் சொல்லலாம். அவர் திட்டினா நீ நேரா கிணத்துக்குப்போயிடு. நான் ஒண்ணும் சொல்லமாட்டேன். சொல்லிவிட்டு அவன் என் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றான்.

    ஏதோ மனசுக்குச் சரியெனப் படவே ரெண்டு பேரும் ஆசிரியர் வீட்டுக்குப் போனோம்.

    அவரிடம் மார்க் சொல்லுவதற்கு முன்பே முந்திரிக்கொட்டை மாதிரி என் நண்பன் உளறிவிட்டான். அவர் பதட்டத்தை வெளிக்காட்டாமல் அறிவுரையை ஆரம்பித்தார்.

    தம்பி இந்த மதிப்பெண் எல்லாம் நம்ம வாழ்க்கையை அளக்காது. இது இல்லன்னா அடுத்த தடவ முயற்சி செய்யலாம். ஆனா அதுக்கு நாம உயிரோட இருக்கணும். அப்டி இருந்தாத்தான் நினைச்சதச் சாதிக்க முடியும். ‘இல்லை உயிருடையார் எய்தா வினை.’னு பழமொழியே இருக்குல்ல. கரிகாற்பெருவளத்தானப் பத்தி படிச்சிருப்பீங்க. அவர உதாரணமா வச்சிக்கிட்டு உங்கள வாழ்க்கையில உயர்த்திக்குங்க. இன்னும் பல விசயங்கள படிச்சு தெரிஞ்சுக்கிங்க. இப்ப மனசப் போட்டுக் குழப்பிக்காம சந்தோசமா வீட்டுக்குப் போங்க. என அனுப்பி வைத்தார்.

    அப்புறம் மனதில் பதிந்த அந்த வடுதான் என்னை வரலாற்றுப் பேராசிரியர் ஆக்கி விட்டிருக்கு போல. சரிதான். இதையே வரப்போகும் பையனுக்குச் சொல்லிவிடலாம் தீர்மானித்துக்கொண்டேன்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 23

    கதை வடிவில் பழமொழி நானூறு – 23

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 47

    பெரியநட் டார்க்கும் பகைவர்க்கும் சென்று
    திரிவின்றித் தீர்ந்தார்போல் சொல்லி அவருள்
    ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே
    ‘இருதலைக் கொள்ளியென் பார்’.

    பழமொழி – இருதலைக் கொள்ளியென் பார்

    இன்னிக்கு இண்டர்வியூவுக்கு வந்த வந்தவங்கள்ல எனக்கு ரேஷம் குமார ரொம்பப் பிடிச்சிருந்தது.  நீங்க என்ன சொல்றீங்க என்னிடம் கேட்கிறார் மும்பையிலிருந்து வந்திருக்கும் என் மேலதிகாரி.

    தனியார் விமான நிறுவனத்தில் மானேஜர் பதவியில் இருக்கும் நான்யோசிக்கத் தொடங்கினேன். அன்றைக்கு வந்த ஐந்து பேரும் எப்படி கேள்விகளுக்குப் பதில் அளித்தார்கள் என்று. படிப்புத் தகுதியை வைத்துப் பார்த்தால் அனைவருக்கும் சமமே. அனுபவத்தை வைத்துதான் மதிப்பிட வேண்டும். முதலாமவர் பன்னாட்டு விமானசேவையில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். அதுவும் தில்லி விமான நிலையத்தில்.  அடுத்த இரண்டுபேருக்கும் எந்த அனுபவமும் இல்லை. நான்காமவர் டிராவல்சில் விமான டிக்கெட் கொடுக்கும் பணியில் இருந்தவர். ஐந்தாமவர்தான் ரேஷம்குமார் உள்நாட்டு விமானசேவையில் அனுபவம் உள்ளவர். அவருக்கு எல்லாவித தகுதியும் பயிற்சியும் அனுபவமும் இருப்பதாகத் தோன்றினாலும் ஏதோ ஒன்று மனதை உறுத்தியது.

    வந்திருக்கும் அதிகாரியோ முதலாமவரையும் ஐந்தாமவரையும் பரிந்துரைக்கிறேன். இருவரில் உங்களுக்கு ஏற்ற ஒருவரை நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள் என்றுவிட்டார்.

    எங்களது விமான நிறுவனம் இப்போது தான் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. திருச்சியிலிருந்து மும்பைக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான குறைந்த பட்ச ஆட்கள் எடுக்கும் நிகழ்வுதான் தற்போது நடைபெறுகிறது. இப்போதைக்கு என்னைத் தவிர ஒருவரை மட்டும் நியமிக்க வேண்டும். அதற்குத்தான் இத்தனை யோசனை.  அவர்கள் இருவரையும் இரண்டாம் முறை அழைத்து நேர்முகத்தேர்வு நடத்த முடிவு எடுத்தேன்.

    இம்முறை கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லும் விதத்தைக் கவனிக்க வேண்டும். தீர்மானத்துடன் அமர்ந்தேன்.  பன்னாட்டு விமான சேவையில் அனுபவம் மிக்க விஷால் தன் அனுபவங்களைச் சுருக்கமாகப் பகிரத் தொடங்கினார். முதல் நேர்முகத்தேர்வில் சொன்ன அதே தகவல்களைத் தான் மீண்டும் சொல்கிறார். கடைசியில் அவர் முடிக்கும்போது எந்தவித நெருக்கடியையும் என்னால் சமாளிக்க முடியும் என்றார். ஆனால் ரேஷம் குமாரோ சந்தர்ப்பவாதிபோல் பேசுவதாகப் படுகிறது. எங்களது  எதிரி விமான நிறுவனத்தில்தான் அவர் ஆறு வருடங்கள் வேலை பார்த்து இருக்கிறார். தொழில் முறையில் எதிரி என்றாலும் தேவையான பயிற்சியும், வேலையும் ஒரேமாதிரிதானே.  முந்தைய நிறுவனத்தை விட்டு ஏன் வந்தீர்கள் என்ற என் வினாவிற்கு விஷால் புதிய அனுபவத்தைத் தேடிஎன  சமயோசிதமாய் பதிலளித்தார். ஆனால் குமாரோ பழைய கம்பெனியில் பலவித தவறுகள் நடப்பதாகவும் அதில் கூட வேலை செய்பவர்கள் திறமையற்றவர்கள் எனவும் அதனால் தன்னால் முன்னேற முடியவில்லை என்றும் கூறுகிறார். இந்தப் பதில்தான் முன்பும் எனக்கு உறுத்தியது.

    தெளிவுபடுத்துவதற்காக எந்த மாதிரி தவறுகள் நடந்தன எனக் கேட்கிறேன். பயணிகளுக்கு போர்டிங் பாஸ் குடுப்பதற்காக ஒவ்வொரு கார்டிலும் இருக்கையின் எண் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டுவது வழக்கம். இது தினமும் நடக்கும் வாடிக்கையான நிகழ்வுதான்.  விமானத்தின் இருக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப கார்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தேதி பொறிக்கப்பட்ட சீல் குத்தப்பட்டு கவுண்டரில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும். ஒருவேளை பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பின் விமானம் வெளிக்கிளம்பியவுடன் கவுண்டரில் மீதமிருக்கும் கார்டுகளைக் கிழித்து எறிந்து விட வேண்டும். அப்படிச்செய்யாது விட்டதால் அடுத்த நாள் புது கார்டுகளுடன் அவை கலந்து இருநபர்கள் ஒரே இருக்கை எண்ணைப் பெற நேரிட்ட சம்பவங்கள் நிறைய நிகழ்ந்துள்ளன. அத்தகைய நாளில் விமான இருக்கைகள் ஏதேனும் காலியாக இருந்தால் பயணியை அங்கு அமரச்செய்து தப்பித்துக் கொண்டிருக்கிறோம். இருக்கை காலியாக இல்லாத நாட்களில் நிறுவனத்திற்கு பெரும் நட்டமும் பிரச்சினைகளும் ஏற்பட்டதுண்டு.

    மேலும் விமானம் வந்திறங்கியவுடன் வெளியே செல்லும் பயணிகளின் கார்டுகளின் பின்புறம்  ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரின் எண்ணும் அவருடைய உடைமையில் போடப்பட்டிருக்கும் பட்டியின் எண்ணும் ஒத்து உள்ளதா எனச் சரியாகப் பரிசோதித்து அனுப்பாததால் பல நாட்கள் பயணிகள் அவசரத்தில் ஒரே நிறம் கொண்ட வேறு ஒருவரின் பையை எடுத்துச்சென்று விடுவர்.  இப்படி கவனக்குறைவினால் ஏற்படும் தவறுகள் அந்த நிறுவனத்தில் மிக அதிகம்.

    அவர் பேசப்பேச நான் யோசித்தேன். எங்களை மகிழ்விக்கும் விதத்தில் தொழில்எதிரியின் திறமைக்குறைவை இவர் சுட்டிக்காட்டுகிறார்.  ஒருவேளை எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தபின் மீண்டும் பழைய நிறுவனத்தில் பெறும் பதவி தறுவதாக ஆசை காட்டினால் அங்கு அமர்ந்துகொண்டு நம்மைப் பற்றிப் பேச இவர் தயங்கமாட்டார் என மனதில் தோன்றியது.

    ஏனோ மனதில் ‘இருதலைக் கொள்ளி என்பார்’ எனும் பழமொழி நினைவுக்குவருகிறது. பகையுள்ள இருவரிடத்தும் நண்பர் போல் பழகி ஒருவருடனும் மனம் ஒருமைப்பட்டு விளங்காதவர் மிகவும் கெட்டவர்கள் என தீர்மானத்துடன் எழுந்தேன் விஷாலை நியமிப்பது எனும் முடிவுடன்..

    பாடல் 48

    இஞ்சி அடைத்துவைத்(து) ஏமாந்(து) இருப்பினும்
    அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார் – அஞ்சி
    இருள்புக் கிருப்பினும் மெய்யே வெரூஉம்புள்
    ‘இருளின் இருந்தும் வெளி’.

    பழமொழி – இருளின் இருந்தும் வெளி

    என்ன ஆகிவிட்டது பிரியான்ஷி ஆண்ட்டிக்கும் கரிமா ஆண்டிக்கும். ஒருத்தருக்கொருத்தர்  நாலு நாளா முறைச்சிட்டிருக்காங்க. என்னையப் பொறுத்தவரை ரெண்டுபேரும் நல்லவங்கதான். என்னை அவர்களின் பெண் மாதிரிதான் நடத்துவாங்க. தப்பு ஒண்ணுமில்ல. நேரம் பாத்து கேட்டுடணும்.

    டிசம்பர் மாதத்தில் குளிர்காய்வதற்காக வெயிலில் அமர்ந்த போது ரெண்டுபேரும்தான் வற்புறுத்தி எனக்கு ஸ்வெட்டர் பின்ன சொல்லிக்கொடுத்தாங்க. அப்போ எவ்ளொ நல்லா இருந்துச்சு. காலை பதினொரு மணிக்கே வேலையெல்லாம் முடிச்சிட்டு சொசைட்டி பார்க் புல்வெளியில உட்கார்ந்து கரிமா ஆண்டி கொண்டு வரும் வேர்க்கடலையத் தொலி உரிச்சு சாப்பிட்டுக்கிட்டே ஸ்வெட்டர் பின்னுவோம். சிலநாள் பச்சைப் பட்டாணி கொண்டு வந்து உரிச்சு எடுத்துட்டுப் போவாங்க.சில நாள் வெந்தயக் கீரை இலைகளைப் பிரிக்கும் பணி. இப்டி தினமும் பீகாரைச் சேர்ந்த கரிமா ஆண்டியும் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரியான்ஷி ஆண்டியும் இவ்ளோ வருசம் ஒற்றுமையாத்தான் இருந்தாங்க. இப்போ சமீபத்துல மே மாசத்திலேந்துனு நினைக்கறேன் என்ன ஆச்சோ. எதப் பேசினாலும் ரெண்டுபேரும் எதிரும்புதிரும் தான்,

    என்னவா இருக்கும் யோசித்துக்கொண்டே டில்லியில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நான் கீழே உலாத்திக்கொண்டு இருக்கிறேன். எதிரில் என் வயதொத்த மராட்டியப் பெண் நித்திகா வருகிறாள்.

    பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பின் அவளே ஆரம்பித்தாள் நக்கலாக . ஆமாம் உன் ரெண்டு வளர்ப்புத்தாய்களுக்கும் இடையில பிரச்சினை போல. சொசையிட்டியே பேசிக்குது. போனவாரம் எ பிளாக்ல நடந்த சத்திய நாராயண பூசையிலும் ரெண்டு பேரும் தனித்தனியே உக்காந்திருந்தாங்களாம்.

    இருக்கலாம் நான் போகல. இது என் பதில்.

    இன்னிக்கு சாயங்காலம் என் வீட்ல சுந்தரகாண்ட் வச்சிருக்கேன். என் பையன் பிறந்த நாளுக்காக. அவசியம் நீ கலந்துக்கோ. அதச் சொல்லத்தான் வந்தேன். அவங்க ரெண்டுபேரையும் சேத்து கூட்டிட்டு வா. உன்னால மட்டுந்தான் முடியும். அவங்களுக்கு நான் தனித்தனியா போன்ல சொல்லிட்டேன். மறந்துராத மூணு பேரும் சேந்து வரணும். அவங்க ரெண்டு பேரும் சேந்துதான் ஆரத்தி பாட்டு பாடணும். உன் பொறுப்பு புரிஞ்சுதா. அவள் போய்விட்டாள்.

    நல்ல சந்தர்ப்பம் என நினைத்து கீழ்த்தளத்தில் இருக்கும் கரீமா ஆண்டி வீட்டுக்குப் போனேன். முன்ன மாதிரியில்ல அவங்க முகம். ஏதோ குழப்ப ரேகை. ஆமா சுசீலா நீ போட்டிருக்கிற சிவப்பு வளையல் ராஜஸ்தானி குடுத்ததுதானே.

    என்ன ஆச்சரியம். கரிமா ஆண்ட்டிக்கு.  பெயரைச் சொல்லாமல் ராஜஸ்தானி என்கிறாள். அந்த வளையல்களை என் கையிலிருந்து கழற்றி வெளியிலிருந்த வாழை மரத்தடியில் வைத்து விட்டாள். அப்பறம்தான் அவளுக்கு நிம்மதி.

    இந்த பாரு சுசீலா உங்க தமிழ்நாட்ல எப்படியோ தெரியாது ராஜஸ்தான்காரங்க ரொம்ப வசியம் பண்ணுவாங்க. அவங்க குடுக்கற குங்குமம், வளையல் எதையும் இனிமே வாங்காத புரிஞ்சுதா. வீட்ல ஏதும் வாங்கி வச்சிருந்தன்னா வாழ மரத்தடியில வச்சிடு. தானம் குடுக்கறேன்னு அவங்க பாவத்தயெல்லாம் மத்தவங்கமேல ஏத்தி உட்டுருவாங்களாம்.

    நான் ஏன் பிரியான்ஷிகிட்ட பேசலைனு உனக்குத் தெரியாது. இப்போ சீதளா மாதாக்கு பண்டிகை வந்திச்சுல்ல அப்போ அந்த அம்மனுக்கு சாதம் படைச்சு அத அக்கம்பக்கத்து கன்னிப்பெண்களுக்கு சாப்பிடக்குடுத்தாங்க. இது எல்லா வருசமும் அந்த அம்மா செய்யறதுதான்.. ஆனா இந்த வருசம்தான் எனக்கு இந்த உண்ம தெரிஞ்சது. அவங்கவீட்டு வாசல் சுவத்துல குங்குமத்தால ஸ்வஸ்திக் வரைஞ்சு வச்சி பிரசாதத்த மத்த பிள்ளைகளுக்குக் கொடுத்துட்டா அவங்க வீட்ல யாருக்கும் அம்மை நோய் வராதாம். அத அந்த அம்மாவே பேச்சு வாக்ல சொல்லிச்சு. அப்பறம் தான் நான் நம்ம டாலி கிட்ட விசாரிச்சேன். அவதான் ராஜஸ்தான் மக்களப் பத்தி நிறையகதை சொன்னா.

    இவ்ளோ நாள் நான் அந்த அம்மாவ நம்பி நிறைய வாங்கி சாப்பிட்டிருக்கேன். எனக்கு என்னவெல்லாம் வசியம் வச்சுச்சோ.  இப்பயெல்லாம் என்னால பத்து சப்பாத்தி தொடர்ந்து இட முடியல தெரியுமா. மாவு பிசிஞ்சா விரல் எல்லாம் மடங்கி நிக்குது. முன்ன மாதிரி சக்தியேயில்ல.

    ஓ இவ்வளவுதானா. டாலி ஊர்வம்புக்காரினு கேள்விப்பட்டிருக்கேன். இவங்கசண்டையில அந்தஅம்மா டைம்பாஸ் பண்ணுது போல.

    நான் ஆரம்பித்தேன். ஆண்ட்டி எங்க ஊர்ல இருளின் இருந்தும் வெளி னு ஒரு பழமொழி சொல்லுவாங்க.  பயம் உள்ளவங்க நெசமான ராத்திரி நேரத்து இருட்டுல கோட்டைக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டு இருந்தாலும் பாதுகாப்பா இருக்கோம்னு நம்பாம எதிரி நம்மள அழிச்சிருவானோனு பயப்படுவாங்களாம்.

    உங்களுக்குதான் டாலி ஆண்ட்டி பத்தி தெரியுமில்ல. அப்பறம் எதுக்கு அவங்க பேச்ச நம்பறீங்க. இப்ப நீங்க ராஜஸ்தானப் பத்தி சொன்னதெல்லாம் அவங்களோட நம்பிக்கை.  அதுமாதிரி வேற யாரோ உங்க பீஹார்காரங்களப் பத்தியோ அல்லது எங்க தமிழ் நாட்டுக்காரங்களப் பத்தியோ தப்பா சொல்லிக்கிட்டு அலையலாம். அதுக்கெல்லாம் பயந்தா எப்படி. ஒவ்வொரு இடத்திலயும் ஒவ்வொரு வழிபாடு. அதுமாதிரி அவங்களுக்கு சீதளாதேவி வழிபாடு. உங்களுக்கு வயசானதால ரொட்டிமாவு பிசிய முடியல கை வலிக்குது.  எல்லாத்தையும் ஒண்ணா யோசிச்சு குழப்பிக்கிறீங்க. இன்னிக்கு சாயங்காலம் நித்திகா வீட்டு கீர்த்தன்ல ரெண்டுபேரும் ஒண்ணா உக்காந்து ஜய் ஜகதீசஹரே னு ஆரத்தி பாட்டு பாடுங்க. நான் டோலக் அடிக்கறேன். எல்லாம் சரியாயிடும். சொல்லிவிட்டு நடந்தேன்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 22

    கதை வடிவில் பழமொழி நானூறு – 22

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 45

    மறாஅ தவனும் பலரொன் றிரந்தால்
    பெறாஅஅன் பேதுறுதல் எண்ணிப் – பொறாஅன்
    கரந்துள்ள தூஉம் மறைக்கும் அதனால்
    ‘இரந்தூட்குப் பன்மையோ தீது’.

    பழமொழி 45 . இரந்து ஊட்குப் பன்மையோ தீது

    இந்தக் கோயில் வாசல்ல உக்காந்து பிச்சையெடுப்பேன்னு என்னிக்காவது கனவாது கண்டிருப்பேனா. அம்மா இருந்த வரை நல்லா பாத்துக்கிட்டாங்க. நானும் படிச்சவதான். அதனால அஞ்சு ரூபாசேத்து போடுங்க தட்டுலன்னா பிச்ச எடுக்கமுடியும். பசி காதை அடைக்குது. கண்ணை மூடி யோசிக்க ஆரம்பித்தாள் கோமு. கல்லூரியில இளங்கலை வேதியியல் படித்திட்டிருந்த காலம். அரசு கல்லூரிங்கறதால இலவச விடுதியில தங்க அனுமதி. ரெண்டு வாரத்துக்கு ஒருதடவை அம்மா வருவாங்க. எண்ணை சீயக்காய் எல்லாம் வாங்கித்தந்து குளிச்சிட்டு சாப்பிடும்போது தொட்டுக்க வச்சிக்கோன்னு மிக்சர் வாங்கித் தருவாங்க. இது மாசத்துக்குரெண்டு தடவ கண்டிப்பா நடக்கற ஒரு விசயமா இருந்திச்சு. நான் ஏதோ படிச்சு பெரிய கவுரவப் பதவியில உக்காந்து அவங்களக் காப்பத்தப் போறதா கனவு கண்டாங்களோ என்னவோ. அப்படித்தான் இருக்கணும். அவங்க பெத்த ரெண்டு பசங்களும் ஊருக்கு நோயா தண்ணியடிச்சுட்டு தொந்தரவு குடுத்துட்டு அலைஞ்சாங்களே.

    படிக்கிற காலம் நல்லாத்தான் இருந்திச்சு. அப்பறம் படிப்பு முடிஞ்சு வீட்டுக்கு வந்தவொடனே தான் உலகம் தெரிய ஆரம்பிச்சுச்சு. எங்க அண்ணன்களால பாதிக்கப்பட்ட எல்லாரும் என்னய எதிரியாப் பாக்க ஆரம்பிச்சாங்க. அது புரியாம எனக்கு படிச்ச கொழுப்புனு சொல்லி அண்ணனும் என் சர்டிபிகேட்ட எரிச்சுட்டான். அண்ணன் ரெண்டுபேருக்கும் பாதிநாள் ஜெயில்வாசந்தான். போலீஸ் வரதும் போரதுமா இருந்தாங்க வீட்டுக்கு.

    அம்மா வருத்தத்திலயே சீக்கிரம் செத்துட்டாங்க. தனியா அந்த வீட்ல நான் பட்டபாடு. என் சுயநம்பிக்கையே செத்துப்போச்சு. மானத்தோட வாழ முடியுமாங்கற கேள்விக்குறியோட கட்டின துணியோட வீட்டவிட்டு ஓடி வந்தேன். இதோ திருச்செந்தூர் கோவில் வாசல் பிச்சக்காரினு பட்டமும் கிடைச்சிருச்சி.

    கோவில் அய்யர் பாவம் பாத்து தினமும் பிரசாதம் கொஞ்சம் குடுப்பாரு. அவங்க வீட்டம்மாவும் உடுத்தறதுக்கு  துணி குடுக்குது. வாசப்பக்கம் பெருக்கி சுத்தப்படுத்தி வைப்பேன். அவ்வளவுதான்.

    இப்ப ஒருவாரத்துக்கு முன்னதான் இந்த ஆறு பசங்களும் வந்தாங்க. அதுல செம்பட்டனு ஒரு பையன் என்னயப் பாத்தவொடனேயே அக்கா அக்கானு ஒட்டிக்கிட்டான். எங்கேந்தோ தப்பிச்சு ஓடி வந்தாங்களாம். அவங்க முதலாளி சாப்பாடு ஒண்ணும் போடாம அடிச்சு அடிச்சு வேல வாங்கியிருக்கார் போல. ரெண்டு நாள் இங்க படுத்துக்கிடந்தாங்க. அப்பறம் இவன்மட்டும் என்கூட இருக்கப்போறேன்னு சொன்னதால உட்டுட்டுப் போயிட்டாங்க. பாவம் செம்பட்ட கை ரெண்டும் காச்சிக்கெடக்கு. இப்ப அவன அய்யர்கிட்ட ஏதாவது சாப்பிட வாங்கிட்டுவான்னு அனுப்பிச்சிருக்கேன். அவரு பிரசாதம் குடுக்கற நேரந்தான்.

    செம்பட்டையின் குரலால் யோசனை கலைந்தது.

    அக்கா இன்னிக்கு அய்யர் ஒண்ணுமே குடுக்கல. போ போன்னு விரட்டி உட்டுட்டார். ரொம்ப பசிக்குதுக்கா. வேற ஏதாவது யோசனை சொல்லேன். ஆமாங்கா. மத்த அஞ்சுபேரும் திரும்ப வந்துட்டீங்களா.

    நான் எங்கடா போவேன். அஞ்சு ரூபா இருக்கு. இதுக்கு ஏதும் கழிச்சுப்போட்ட பழம் கெடைக்குமானு கோவில் வாசல் கடைக்காரர்கிட்ட கேட்டுட்டு வாங்க. அனுப்பினேன்.

    ஏ கோமு. நோக்கு புத்தியிருக்கா. இவ்ளோ பேர அனுப்பி உடறியே பிரசாதம் வாங்க. பாவம் பாத்து உனக்குசாதம் குடுத்துண்டிருந்தேன். சரி போனா போறது ஒரு பிள்ளையாண்டான் தானேனு புதுசா சேந்தவனுக்கும் சேத்துக் குடுக்கறேன். இப்ப என்னடான்னா ஒரு படையையே அனுப்பறியே.

    நாங்களும் எங்காத்துல சாப்பட வேண்டாமா. முருகன் எனக்கு அந்த அளவு வசதியக் குடுக்கலம்மா. யாசகம் கேக்கப் போறச்சே கூட்டமா போகக் கூடாது. அப்டிப்போனா குடுக்கணும்னு மனசு இருக்கறவாக் கூட எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாதுனு பயந்து ஒளிச்சு வச்சுண்டு இல்லன்னு சொல்லிருவாளாம். இரந்து ஊட்குப் பன்மையோ தீது  னு பழமொழியே இருக்கு. இதையெல்லாம் படிக்காத உங்கிட்ட சொல்லிண்டிருக்கேனே உனக்கெப்படி புரியும். சொல்லிக்கொண்டே இருக்கும் தயிர்சாதத்தை என் பாத்திரத்தில் போட்டுவிட்டுப் போகிறார் அய்யர். அவருக்கு எப்படித்தெரியும் நான் படித்தவள் எனக்கும் இந்தப் பழமொழி தெரியும்னு.

    பாடல் 46

    இல்வாழ்க்கை யானும் இலதானும் மேற்கொள்ளார்
    நல்வாழ்க்கை போக நடுவுனின்(று) – எல்லாம்
    ஒருதலையாச் சென்று துணியா தவரே
    ‘இருதலையும் காக்கழித் தார்’.

    பழமொழி 46 – இருதலையும் காக் கழித்தார்

    இவ்வளவு வருசம் கழிச்சு என் அப்பானு சொல்லிக்கிட்டு உள்ள நுழைஞ்சிருக்கிற மனுசன மனசு ஒத்துக்க மாட்டேங்குது. அம்மா என்னடான்னா

    அப்பாக்கு தண்ணிகொண்டு குடு, காப்பி குடுனு என்னய உபசரிக்கச் சொல்லறாங்க. கல்லூரி மாணவியான எனக்கு மனதுக்குள் பல கேள்விகள்.

    எனக்கு விவரம் தெரிஞ்ச வயசிலேந்து இந்த ஆள் நம்ம கூட இருந்ததேயில்ல. உங்கப்பா எங்கனு எவ்ளோ பேர் கேட்டிருப்பாங்க. அப்பயெல்லாம் எனக்கு அவமானமா இருக்கும் தெரியுமா. எவ்ளோ அழுதிருப்பேன். என் ப்ரெண்ட்ஸ் என்ன உங்கப்பா வேற யார்கூடவாவது ஓடிப்போயிட்டாரான்னெல்லாம் கேட்டு அவமானப்படுத்தி இருக்காங்க.   அப்பயெல்லாம் அந்த மனுசன் இருக்காருனு சொல்லி என்ன பிரயோசனம். நீ வேணும்னா உங்கப்பா செத்துட்டாருனு சொல்லிடுனு சொல்லியிருக்க.

    திடீர்னு காவி வேட்டி கட்டிக்கிட்டு பண்டாரம் மாரி ஒரு ஆளு வராரு. நீ இவர்தான் உங்கப்பாங்கற. அவரும் என்னமோ பாசமா இருக்கற மாதிரி உருகிக்கிட்டிருக்காரு.

    என்ன கேட்டாலும் அம்மாவிடம் பதில் இல்லை.

    எல்லா விசயத்தையும் செல்லம் மாமாகிட்டதான் புலம்புவேன். அவர் நான்சின்னதா இருக்கும்போதுலேந்து பக்கத்துவீட்ல இருந்தவரு. அவரும் அவரோட மனைவியையும் தான் நான் மாமா அத்தைனு கூப்பிடறது. எனக்கும் நிறைய சொந்தக்காரங்க இருக்காங்களாம்.

    அப்பா அம்மா லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டதால யாரும் பேசமாட்டாங்களாம். அப்பா எங்கள விட்டுட்டுப்போனவொடனே எங்க தங்களுக்கு பொறுப்பு வந்துடுமோனு இன்னும் தூரமா விலகிட்டாங்க.  எனக்கு ஆறுவயசிருக்கும் போதுலேந்து அம்மாதான் கஷ்டப்பட்டு வளத்தாங்க.

    மொதல்ல லட்சுமி அக்கா கடையில கூடமாட உதவிக்கு நின்னாங்க. அப்பறம் இப்ப நாங்களே தனியா சிப்ஸ், முறுக்கு எல்லாம் போட்டு விக்கறோம். வியாபாரம் நல்லா போயிட்டிருக்கு. மனஓட்டத்துடன் காலும் நடந்ததால் செல்லம் மாமா வீட்டுக்குள் வந்துவிட்டேன்.

    அத்தை ஆரம்பிக்கிறாங்க. இங்க பாரும்மா நீ ஒண்ணும் சின்னக் குழந்தை இல்ல. உங்கம்மா என்னடான்னா எம் புருசன் பதினைந்து வருசத்துக்கு முன்ன இந்த ஊர உட்டுட்டுப் போனவுடனே திருவண்ணாமலையில போய் துறவி ஆயிட்டாரு. இவ்ளோ வருசத்துக்குப் பின்ன அவருக்கே மனசுல தோணிச்சாம் ஊருக்குப் போயி நல்லபடியா மனைவி குழந்தையோட வாழ்க்கை நடத்துனு. அதனால வந்துட்டாராம். அப்டிங்கறாங்க.

    இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு. இந்தமாதிரி குடும்பத்தையும் காப்பாத்தாம துறவறத்துக்குப் போறென்னு அதையும் ஒழுங்கா செய்யாம பாதியில திரும்பி வரவங்க காவடி எடுக்கறேன்னு சொல்லிட்டு அதோட ரெண்டுபக்கத்துப் பொருட்களையும் நீக்கிட்டு வெறும் தண்ட மட்டும் தூக்கிட்டுப் போறது மாதிரிதான். ஊர் சிரிப்பாச் சிரிக்கும். அதத்தான் ‘இருதலையும் காக் கழித்தார்’ னு பழமொழியாச் சொல்லுவாங்க.  ஆனா எனக்கென்னமோ இந்த மனுசனப் பாத்தா பொறுப்பில்லாம ஊதாரியா கெட்ட பழக்கங்களோட சுத்திட்டிருந்துட்டு இப்போ வயசானப்புறம் போக்கிடம் இல்லாம நூறு ரூபாய்க்கு காவித்துணி கட்டிக்கிட்டு பட்டையப் போட்டுக்கிட்டு வந்து கதை சொல்ற மாதிரிதான் தோணுது. இன்னும் கெட்ட பழக்கங்கள் இருக்கா இல்லையானு தெரிஞ்சுக்காம வீட்டுக்குள்ள சேக்காத. அவ்வளவுதான் சொல்லுவேன். என்னை உசுப்பேற்றிவிட்டாள் அத்தை. யோசனையுடன் எழுகின்றேன் வீட்டுக்குச் செல்ல.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 21

    கதை வடிவில் பழமொழி நானூறு – 21

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 43

    யானும்மற்(று) இவ்விருந்த எம்முனும் ஆயக்கால்
    வீரம் செயக்கிடந்த(து) இல்லென்று – கூடப்
    படைமாறு கொள்ளப் பகைதூண்டல் அஃதே
    ‘இடைநாயிற்(று) என்பிடு மாறு’.

    பழமொழி – இடை நாயிற்கு என்பு இடுமாறு

    துபாயிலிருந்து கிளம்பி ஒருவழியா இந்தியா வரப்போறோம். கொரோனா தொற்றுவியாதி பிரச்சினையால எங்க எல்லாருக்கும் தற்காலிகமா வேலை இல்ல. நல்ல வேளை. இந்தியன் மென்டாலிடி ஒருத்தருக்கொருத்தர் நல்லா உதவி செய்யறாங்க. ஒரு சர்தார்ஜீ பையா தான் இப்போ எங்க எல்லாரையும் தங்க வச்சி சாப்பாடு போட்டுக்கிட்டிருக்கார். விமானசேவை தொடங்கினவொடனே ஊரப்பாத்துப் போய்ச் சேரணும்.

    க்யா பாயி.. என் வங்காளச் சகோதரன் அழைக்கிறான். ஆமாம் அப்படித்தானே சொல்லணும். நம்ம நாட்ல நம்ம ஊர்ல பாதுகாப்பா இருக்கற வரதான் சாதி சொந்தம் பக்கத்துவீடு பக்கத்து ஊரு இந்தப் பிரச்சினையெல்லாம். நம்ம மாநிலம்விட்டு அயல் மாநிலம் போனாலே நம்ம தமிழ் பேசற எல்லாரும் சொந்தக்காரங்களாத் தெரியுவாங்க.

    அயல் நாட்டுல கேக்கவே வேணாம். எந்த மொழி பேசினாலும் நான் இந்தியர்னு சொன்னாப் போதும் கண்ணுக்கு பங்காளிமாதிரி தான் தெரியுவான். இப்ப இத எல்லாத்தையும் விட்டுட்டு திரும்ப ஊருக்குப் போகணும். அங்க போய் முன்ன மாதிரி இருக்க முடியுமா தெரியல.

    வங்காளச் சகோதரனிடம் புலம்ப ஆரம்பித்தேன்.

    என் ஊருக்குப்போகவே எரிச்சலா வருது. எனக்கு விவரம் தெரியற வர எங்க ஊர்க்கும் பக்கத்து ஊருக்கும் சண்டை. நாள் முழுக்க வேற வேலையே இல்லாத மாதிரி பக்கத்து ஊரப் பத்தி குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நம்ம சரவணன் அந்த ஊரச் சேந்தவன். உனக்கே தெரியும் நாங்க ரெண்டு பேரும் எவ்ளோ பாசமா இருக்கோம்னு. இப்போ ஊருக்குப் போனா பாத்துக்கக்கூட முடியாது. முடிந்த அளவு புலம்பிவிட்டேன். கொஞ்சம் மனசு லேசானது.

    அவன் அறிவுரை கூற ஆரம்பித்தான். வெளிநாட்டுக்குப் போய் வந்ததால உங்க கிராமத்துல தனி மரியாதை குடுப்பாங்க. அதுமாதிரி தான் அவனுக்கும் அத உபயோகிச்சு இளைஞர்களக்கூட்டி எடுத்துச் சொல்லுங்க. யோசிக்க செய்ய நிறைய விசயங்கள் இருக்கு.  இந்த மாதிரி வயல், வரப்பு கடவுள் இந்த சண்டையிலேயே உங்க காலத்தக் கழிச்சிடாதீங்கனு. நீங்க படிச்சு வந்த மாதிரி இந்த இரண்டு வருசத்துல கண்டிப்பா கொஞ்சம் பசங்க படிச்சு வெளிய வந்திருப்பாங்க இல்ல. உங்களுக்குத்தான் தெரிஞ்சிருக்குமே.

    இல்லை. நானும் அவனும் வந்ததிலேந்து ஊர்ப்பக்கம் போகவேயில்ல. என்னவோ மனசுக்குப் பிடிக்கல. அவங்களுக்கு ஒண்ணும் பணத்துக்கெல்லாம் பிரச்சினையில்ல. வயல், சொத்துநிறையவே இருக்கு. இப்ப வேற வழியே இல்ல. அங்கதான் போயாகணும்.

    அடப்பாவிகளா. ஆச்சரியம் விநய் போசுக்கு. உங்க குடும்பத்தார் வரச்சொல்லி வற்புறுத்தலியா. உனக்கு ஒரு சகோதரி இருக்கறதா வேற சொன்ன. இது ரொம்ப தப்பு. ரெண்டு பேரும் சுயநலமா இருந்திருக்கீங்க. இப்ப போனவுடனே உங்களால ஊருக்கு என்ன செய்ய முடியும்னு யோசனை பண்ணுங்க. பிரச்சினைக்கு தீர்வு காண நினைக்கணுமே தவித்து அதுலேந்து ஓடி ஒளிய நினைக்கக் கூடாது.

    என்னவோ நண்பனின் அறிவுரை சரியெனப்பட்டது. ஊருக்கு வந்ததிலேந்து எல்லாரும் ரொம்ப அமைதியா இருக்கற மாதிரி தோணுது. ரெண்டுநாளுக்குமேல பொறுக்க முடியல. அக்காவிடம் கேட்டேவிட்டேன். என்ன ஆச்சு நம்ம ஊர் மக்களுக்கு எப்ப பாத்தாலும் அங்க வெட்டு இங்க குத்துனு தகவல் சொல்லிக்கிட்டேயிருப்பாங்க. இப்ப யாரும் பேசறதேயில்ல. ஊரடங்கால எல்லாரும் மாறிட்டாங்களோ?

    ஓ அதுவா. அய்யா வேற வழியில்லாம ஊர்ப்பக்கம் காலடி எடுத்து வச்சிருக்கீங்க. இந்த ஊர் மாறி வருசம் ஆச்சு. எப்ப பாத்தாலும் சண்டையிழுத்துக்கிட்டு அலைஞ்ச கிழக்கு ஊர்ப்பண்ணையாரோட அடியாட்களுக்கு நம்ம ஊர் பேக்டரியில நிரந்தர வேலை போட்டுக்குடுத்தவொடனே அந்த ஆள் தனியாநின்னு வாலாட்ட முடியாம அடங்கிட்டாரு. எல்லாம் உன்கூட படிச்சானே நிரஞ்சன். அவனோட ஐடியாதான். நல்ல பையன். ஊருக்கு நல்லதுபண்ணிட்டான்.

    இடை நாயிற்கு என்பு இடுமாறுனு பழமொழி இருக்குல்ல. ஆடுகளத் திருட நினைக்கறவன் முதல்ல அந்த வீட்ல வளக்கற நாய்க்கு எலும்புத்துண்டு போட்டுப் பழக்குவானாம். அது கத்தாம இருக்கறதுக்காக. அதுமாதிரிதான் நிரஞ்சனும் அந்தப்பண்ணையாரோட ஆட்டத்த நிறுத்த அவரோட அடியாட்களுக்கு வேலை போட்டுக்குடுத்து நம்ம பக்கம் சேத்துக்கிட்டான். இப்பவாவது நல்லது பண்ணணும்னு நினைச்சீங்கன்னா அவன் கூட சேந்து ஏதாவது திட்டம் போடுங்க. சொல்லிவிட்டுச் சென்றாள் உள்ளூர்ப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாய்ப்பணிபுரியும் என் சகோதரி.

    பாடல் 44

    அடையப் பயின்றார்சொல் ஆற்றுவராக் கேட்டால்
    உடையதொன் றில்லாமை யொட்டின் – படைபெற்று
    அடைய அமர்த்தகண் பைந்தொடி! அஃதால்
    ‘இடையன் எறிந்த மரம்’.

    பழமொழி – ‘இடையன் எறிந்த மரம்’

    அமுதவல்லி எனும் நான் வேலைக்கான நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வந்திருக்கேன். சென்னை எனக்குப் புதுசுதான். ஆனா இந்தக் கம்பெனியில எப்படியும் வேல வாங்கிரணும். அப்பதான் மிச்சமிருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தக் காப்பாத்திக்க முடியும்.

    சரி. முதல்ல நம்மகிட்ட கேக்கப்போற கேள்விகள் என்னதா இருக்கும்னு யோசிப்போம்.

    பக்கத்திலிருந்த நபர் மெதுவா ஆரம்பிக்கிறார். மேடம் எத்தன வேகன்சி இருக்குனு தெரியுமா? உங்களுக்கு இந்தக் கம்பெனி பத்தின விவரத்த யார் சொன்னாங்க.

    நான் ஏதும் சிபாரிசுக்கடிதம் கொண்டு வந்திருக்கேனான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக நாசூக்கா கேக்கறாராமா.

    என் நிலைமை இப்படியா ஆகணும். எத்தன பேருக்கு அப்பா சிபாரிசுக்கடிதம் கொடுத்திருப்பார். எவ்வளவு பேர் அவரால பொழச்சிருப்பாங்க. பட்டியல் ரொம்ப நீளந்தான். ஆனா ஒருத்தருக்குக்கூட இப்ப கண்ணு தெரியலயே.

    அரைமணி நேரத்துக்கப்புறமும் யாரும் வரல. நாங்க ரெண்டுபேர் மட்டுந்தான் உக்காந்திருக்கோம். திரும்பவும் பக்கத்து நபர் பேச முயற்சிக்கிறார். அவருக்கு என்ன பிரச்சினையோ. நான் என் மவுனத்தைக் கலைத்தேன்.

    மொதல்ல உங்களப் பத்தி சொல்லுங்க சார். நீங்க உள்ளூரா. ஏதோ கேக்கறதுக்குன்னே காத்துக்கிட்டு இருந்தமாதிரி பேச ஆரம்பித்து தொடர்ந்து தன் நிலைமையப் புலம்பறார்.  அவரப் பொறுத்தமட்டிலும் உள்ள ஒரு வேகன்சிதான் இருந்திச்சுன்னா நான் விட்டுக்கொடுத்துடுவேன்னு நினைச்சு பொலம்பறார்.

    அப்டிப்பட்ட நிலமையிலா நான் இருக்கேன். அப்பா சேலத்துல பெரிய தொழிலதிபராத்தான் இருந்தாரு. ஆனா வரவன் போறவன்கிட்டயெல்லாம் வாக்கு குடுத்து அவுங்களுக்குத் தேவையானத செஞ்சிக்கிட்டே இருந்ததால தன் தொழில்ல கவனம் செலுத்தல.  பலவித ஏமாற்றங்கள். பொய்ப் புகழ்ச்சிக்கே மயங்கிக்கிட்டு இருந்த அவர கூட இருந்தவங்களே ஏமாத்திட்டாங்க. மொத்த சொத்தும் போச்சு. ஆனாலும் அவர் குணம் மட்டும் மாறவே இல்ல. அப்பறமும் யார் வந்து கேட்டாலும் கடன் வாங்கியாவது செஞ்சுகுடுத்து பெயரக் காப்பாத்திக்கிட்டு இருந்தாரு. கடைசியில கடன் அதிகமாகி மிச்சமிருந்த அம்மாவோட நகைகளையும் வித்து அடைச்சு நடுத்தெருவுக்குவந்துட்டோம். நல்லவேள நான் பிளஸ்2 முடிச்சிட்டதால அந்த தகுதிக்கு ஏத்த வேல தேடிக்கிட்டு பொழைக்கலாம்னு இங்க வந்திருக்கோம். இந்த ஜவுளிக்கடை சேல்ஸ் சூப்பர்வைசர் போஸ்ட் எனக்குக் கிடைச்சா நல்லா இருக்கும்.

    பொறுமையா கேட்டுக்கொண்டிருந்த அந்த பக்கத்து நபர் மனம் மாறிட்டார் போல. ஒருவேள ஒரு காலியிடம்தான் இருந்துதுன்னா நீங்களே சேந்துக்கோங்க. உங்க நிலைமை என்னய விட மோசம். ‘இடையன் எறிந்த மரம்’னு பழமொழி கேள்விப் பட்டிருக்கீங்களா.  அதுதான் உங்கப்பா நிலமையும். இடையன் கொஞ்சம் கொஞ்சமா கிளைய ஒடிச்சே ஒரு மரத்த அழிச்சுடுவானாம். பொருள் முழுக்க கையவிட்டு போனப்புறமும் அது இருக்கறமாதிரியே பந்தா பண்ணிக்கிட்டு எதுக்கு கடன்வாங்கி உதவி செய்யணும். இனிமேலயாவது உங்கப்பாவ கன்ட்ரோலா இருக்கச் சொல்லுங்க. தன் பங்கு அறிவுரையை உதிர்க்கிறார் அந்த நபர்.

    உள்ளேயிருந்து இன்னும் அழைப்பு வரவேயில்லை. இருவரும் காத்திருக்கிறோம்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 20

    கதை வடிவில் பழமொழி நானூறு – 20

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 41

    மாற்றத்தை மாற்றம் உடைத்தலால் மற்றவர்க்(கு)
    ஆற்றும் பகையால் அவர்களைய – வேண்டுமே
    வேற்றுமை யார்க்குமுண் டாகலான் ‘ஆற்றுவான்
    நூற்றுவரைக் கொன்று விடும்’.

    பழமொழி – ‘ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும்’

    என்ன சார். ரொம்பதான் உறவு கொண்ட்டாடுறீங்க. பெங்களூர்ல பத்து வருசம் ‘இருந்துட்டு வந்தவொடனே எங்களயெல்லாம் மறந்துட்டு போயும் போயும் இவன்கூட சுத்திக்கிட்டு திரியிறீங்க. இவன் யாருங்கற உண்ம தெரிஞ்சா கிட்ட கூட போக மாட்டீங்க. வரிசையாக வீடுகள் இருக்கும் எங்கள் பகுதியில் முன்பு என் வலது பக்கத்து வீட்டு மாடியில குடியிருந்தார் வேலு. இப்ப வேற தெருவுக்கு மாத்தி போயிட்டார். அவர்கூட நான் சுத்தரதப்பத்திதான் என் இடது பக்கத்து வீட்டு உரிமையாளர் நளின் குமுறிக் கொண்டிருக்கிறார்.

    அவர் சொல்வது எல்லாம் உண்மதான். இங்க வந்ததுலேந்து நான் வேலு கூடதான் சுத்திக்கிட்டு இருக்கேன். ஆனா நான் தெரியாம இதச் செய்யல. அவர் குணம் என்னனு தெரிஞ்சிக்கிட்டேதான் பழகறேன்.

    முந்தைய விசயங்களை யோசிக்க ஆரம்பித்தேன். வேலுவோட ஹவுஸ் ஓனர் அதான் என் வலது பக்கத்து வீட்டு உரிமையாளர் எவ்ளோ தொல்ல குடுத்திருப்பார் எனக்கு. வேற எந்த வேலையும் இல்லாதமாதிரி வேணுமினே மொட்டைமாடியில இருக்கற வாட்டர் டேங்க் மூடிய எடுத்துவிட்டுடறது, துணி காயப்போடற கொடிய அறுத்து விடரது. குப்பையப் பூரா எங்க வீட்டுப்பக்கமே தள்ளிவிடரது இந்த மாதிரி.  காலையிலேந்து சாயங்காலம் வரை சின்னச்சின்ன விசயத்துக்கும் சண்டை இழுத்துக்கிட்டே இருப்பாரு.

    உங்க வீட்டு தென்ன மரத்திலேந்து தேங்கா விழுந்து எங்க சன்னல் கண்ணாடி உடைய வாய்ப்பிருக்கு, நீங்க உங்க வீட்டு கேட்ட மதிய நேரத்துல சரியா சாத்தாம வைக்கறதால திருடன் உங்க காம்பவுண்ட் வழியா எங்க வீட்டுக்கு வர வாய்ப்பு இருக்கு. இப்டி பல கற்பனைப் புகார்கள். ஒருகட்டத்துல அவர் தொல்ல தாங்க முடியாம. அவர்கூட பாசமான நண்பராப்பழகிடலாம்னு நானும் மனைவியும் முயற்சித்தோம். ஆனா அந்த சிடுமூஞ்சி மனுசன் யார்கூடயும் பழகத் தயாரியில்ல. அடுத்தவங்கள தொல்ல குடுக்கறதுமட்டும் தான் அவருக்கு சந்தோசம் தரும் போல.

    இவர் தொல்ல தாங்க முடியாமதான் சென்னையிலிருக்கிற சொந்தவீட்ட விட்டுட்டு பெங்களூருக்கு மாத்தல் வாங்கிட்டுப்போனேன். இப்ப பத்துவருசம் கழிச்சும் இந்த மனுசன் மாறல.

    கீழ இவர் குடியிருந்துக்கிட்டு மாடி போர்சன வாடகைக்கு விட்டுட்டு  வாடகைக்கு வரவங்கள தொல்ல பண்ணியே கொல்லறார் போல. இப்ப நான் பழகிக்கிட்டு இருக்குற வேலுவும் இவர் வீட்டு மாடியில குடியிருந்தவர் தான். இவருக்கு சரியான ஜோடி.

    எங்கள மாதிரி வாயத் திறக்காம வசவு வாங்கிக்கிட்டு இருக்கல. நல்லா பதிலுக்கு பதில் குடுத்திருக்கார். அவர் காலி பண்ணிப்போனதிலேந்து இப்ப வரை வேற யாரையும் அந்த வீட்டுக்கு வர உடாம வதந்தி பரப்பிக்கிட்டு இருக்காராம்.

    பக்கத்து வீட்டுக்காரர் மூஞ்சியில இப்ப எள்ளும் கொள்ளும் வெடிக்கறதப் பாக்க சந்தோசமா இருக்கு. ஜன்ம சனியத் தூக்கி தலையில வச்சிக்கிட்ட மாதிரி உன்னய வாடகைக்கு வச்சேன்னு கத்துவாராம். இன்னும் அவர் மாடி போர்சன் காலியாவே கிடக்கு.

    எது எப்படியோ. இனிமே என்கிட்ட வாலாட்ட மாட்டார். முடிஞ்சா வேலுகிட்டேந்து தப்பிக்க சமரசமாத்தான் பேசுவார். நிலைமையை நளினிடம் விளக்கினேன். ‘ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும்’ ங்கற பழமொழி மாதிரி எதிரிக்கு எதிரியையே நண்பனா ஆக்கிக்கிட்டிருக்கேன். தம் பகைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அழிக்க வல்லவன்  தான் ஒருவனாகவே நூறு பேர்களைக் கொல்லும் பேராற்றல் உடையவன், அப்டினு பழமொழி நானூறே சொல்லுதே. சொல்லிவிட்டு சந்தோசமாக நடந்து சென்றேன். வேலுவைத் தேடி.

    பாடல் 42

    பட்ட வகையால் பலரும் வருந்தாமல்
    கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம்
    முட்டுடைத் தாகி ‘இடைதவிர்ந்து வீழ்தலின்
    நட்டறான் ஆதலே நன்று’.

    பழமொழி – இடை தவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று

    கோவை வ.ஊ.சி மைதானம் அன்று களை கட்டியிருந்தது. பத்து வருடங்களுக்குப் பிறகு சுகந்தனை சந்திக்கப்போகிறேன். பார்க்க எப்படியிருப்பானோ? யோசித்துக்கொண்டே கல்லில் உட்கார்ந்தேன்.

    எதிரில் ஊதினால் பறந்து போகிற மாதிரி ஒல்லியா ஒரு பையன் அவன் அம்மாவுக்குத் துணையா பேல்பூரி விற்றுக்கொண்டு நிற்கிறான். நல்லா எண்ண தேச்சி தலைவாரி பளீரென்ற முகத்துடன்.

    அக்கா பஞ்சு மிட்டாய் வேணுமா, பாப்கான் வேணுமா இன்னோரு சின்னப் பையன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து விற்கிறான். மெதுவா பக்கத்திலிருந்த ஐஸ்காரனிடம் பேச்சு குடுக்க ஆரம்பிச்சேன். இங்க எப்படி இவ்வளவு சின்ன பையங்க வித விதமா வியாபாரம் பண்றாங்க. பத்து வருசத்துக்கு முன்ன இப்டி இல்லயே. என் கேள்விக்கு பதில் சொல்லாமலேயே

    ஏம்மா இந்த ஊருக்குப் புதுசா. அதான் கேக்கற. ஒரு ஐஸ் வாங்கிக்கோயேன் அவன் தொடர்வதற்குள் நான் சுதாரித்துக்கொண்டேன் முன்பின் தெரியாத இவன்கூட நான் ஏன் பேசறேன். கொஞ்சம் தள்ளிப் போய் உட்கார்ந்தேன். அவன் இன்னும் என்னயே பாத்துக்கிட்டிருக்கான். சுகந்தனப் பாத்துட்டுக் கெளம்பிற வேண்டியதுதான். பத்துவருசம் முன்ன பக்கத்திலிருந்த ஹாஸ்டல்ல தங்கி தனியார் கம்பெனியில வேலை பாத்ததால தினமும் இந்த பார்க் வரது வழக்கம். அதனால இந்தச் சின்னச் சின்ன மாறுதல்கள் கூட கண்ணுக்குப் படுது.

    முன்னயெல்லாம் நானும் மாதவியும் கொஞ்சம் கூட யோசிக்காம சுகந்தன் கிட்டேந்து சேவ் பூரி வாங்கி ஒருநாளப் போல சாப்பிட்டிருக்கோம். இப்ப இவ்ளோ நேரம் உக்காந்திருக்கேன். ஒண்ணுமே சாப்பிடத்தோணல. யாரப் பாத்தாலும் சந்தேகம் வேற வருது. வயசாக ஆக மனசு குரங்காகிடும் போல. அல்லது சென்னைவாசி ஆயிட்டதால பிளாட்பார தள்ளுவண்டியிலேந்து வாங்கிச் சாப்பிடறது தப்புனு தோணுதோ. தெரியல.

    யோசித்துக்கொண்டிருக்கும்போதே பக்கத்தில்யாரோ கைகாட்டி அழைப்பது தெரிந்தது. ஆமாம் என்னயத் தான் கூப்பிடறான். சேட்டுக்கடையில வேலை பாக்கற மார்வாடிப் பையன். இந்த நேரத்துல இவன் எதுக்குக் கூப்பிடறானோ. யோசித்துக்கொண்டே போனவுடன் தீதீ சீக்கிரம் கடைக்கு வா. யாரோ வெய்ட் பண்றாங்க.

    கடைக்குள் ஜிப்பா, பைஜாமா அணிந்த ஒரு நபர் உட்கார்ந்திருக்கிறார். சேட்டு அந்த நபருக்கு தேநீர் உபசாரம் செய்து கொண்டிருக்கிறார்.

    வா பொண்ணு. ரொம்ப நேரம் வெயிட் செய்யுது இல்ல. இங்க பாத்தியா யாரு வந்திருக்கான்னு. தானே தொடர்கிறார். இது நிம்பிள் சுகந்தன். உன்னையப் பத்தி நிறைய சொல்லியிருக்கு.

    ஓ அந்த நபர்தான் சுகந்தனா. எழுந்து வணக்கம் சொல்கிறான். பார்க்க என்னைவிட பெரிய தோற்றம். அவன் வெளியே அழைக்கவே நாங்கள் இருவரும் வெளியே வந்தோம். அவன் இப்போ அரசாங்க அதிகாரியாம். அவன் நல்ல நிலைமையில இருக்கறதப் பார்த்தப்புறம்தான் அவங்க அம்மா இறந்தாங்களாம். இப்போ சேட்டின் உறவினர் பெண்ணைத்தான் இவன் கல்யாணம் பண்ணியிருக்கானாம். என்ன ஆச்சரியம். இவன் வாழ்க்கையில் எவ்வளவு மாறுதல்கள்.

    என்ன அக்கா. ரொம்ப யோசிச்சுட்டே நடக்கறீங்க போல. ரெண்டு தடவ கேட்டுட்டேன். இந்த இடத்த அடையாளம் தெரியுதான்னு. சரி பரவாயில்ல. இங்க நில்லுங்க செல்பி எடுத்துக்கலாம்.

    ஆமாம் இந்த இடத்தில்தான் அவன் அம்மா சேவ் பூரி கடை போட்டிருந்தாள். நானும் மாதவியும் தின வாடிக்கையாளர்கள். சுகந்தன் ஒல்லியான சின்னப் பையன். அவன்தான் கலந்துதருவான். ஒருதடவை நாங்கள் போனப்போ அவன் அழுதுகொண்டிருந்தான்.அவன் அம்மா தினமும் பேனாவக் குடு, நோட்டக்குடுனு தொல்ல பண்றாம்மா.சாப்பாட்டுக்கே வழியில்ல. இதுல இவனுக்கு படிப்பு எதுக்கு. சொன்னா அழறான். இவனுக்கு புத்திசொல்லுங்க என்றவுடன் நாங்கள் தீர்மானித்தோம்.

    ஒவ்வொரு வருசமும் பள்ளிக்கட்டணம் புத்தகங்கள் மற்றும் படிப்புக்கான இதர செலவுகளுக்கு நானும் மாதவியும் உதவினோம். அவன் பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சவொடனே நான் சென்னைக்கு போயிட்டேன். அப்பறம் ஒருவருசம் மாதவிக்கு பணம் அனுப்பி அவனுக்கு உதவி செய்யச் சொன்னேன்.  அவளும் அங்கேயிருந்து கிளம்பினப்புறம் இவன் என்ன ஆனான்னு நாங்க யோசிக்கவேயில்ல. இடை தவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று னு போனவாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில ஒரு பழமொழி கேட்டேன். அதுல ஒருத்தருக்கு உதவ ஆரம்பிச்சப்புறம் பாதியில நிறுத்தக் கூடாது.அப்டி நிறுத்தரத விட தொடக்கத்திலயே உதவ ஆரம்பிக்காம இருக்கறதே

    நல்லதுனு சொன்னார்.

    அப்பதான் எனக்கு சுருக்குனுச்சு. சுகந்தனுக்கு நானும் மாதவியும் ஆச காட்டி மோசம் பண்ணின மாதிரி செஞ்சுட்டோம். பாவம் அவன் படிச்சு முடிச்சானோ என்னவோ? ஒருவழியா அவனக்கண்டு பிடிச்சு பாத்தும் ஆச்சு. நல்லவேள இந்த சேட்டுக்கும் நாங்க இவனுக்கு உதவறது தெரிஞ்சதால நாங்க பாதியில நிறுத்தினப்பறம் அவர் தொடர்ந்து உதவி செஞ்சு அவனப் படிக்க வச்சிருக்கார்.

    அக்கா பேல்பூரி சாப்பிடலாமா. நான் முதலில் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ஒல்லி பையனருகில் நிற்கிறான் சுகந்தன்.

    அக்கா இப்ப இவன்தான் எனக்கு தத்துப்பிள்ளை. உங்கள மாதிரி நான் இவன் படிக்கறதுக்கு உதவிக்கிட்டிருக்கேன்.

    யோசிக்காமல் சட்டெனச் சொன்னேன். என்னய மாதிரி பாதியில நிறுத்திடாதே. கடைசி வர உதவி செய். சிரித்துக்கொண்டே தலையாட்டுகிறான் சுகந்தன்.

    Share