தண்ணீரும் காவிரியே!

தண்ணீரும் காவிரியே! தார்வேந்தன் சோழனே!
மண்ணாவதும் சோழ மண்டலமே! – பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி அரவிந்தத் -தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு!
இது கம்பர் தொடங்கி, ஒளவையார் முடித்த பாடல். முதலிரண்டு அடிகளைக் கம்பரும் அடுத்த இரண்டு அடிகளை ஒளவையாரும் பாடினார்கள் எனக் குறிப்பு இருக்கிறது.
தண்ணீர் என்றால் அது காவிரிதான். வேந்தன் என்றால் சோழன்தான் எனப் போற்றும் பாடல். அடுத்த அடியில், மண்ணாவதும் சோழ மண்டலமே என்பதற்கு மண் என்றால் அது சோழ மண்டலம்தான் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால், இதன் இன்னொரு பொருளை எண்ணித் துணுக்குற்றேன். மண்ணோடு மண்ணாவது என்றால் அது சோழ மண்டலம் என்ற பொருளும் இருக்கிறது. சோழன் மீது இருக்கும் காழ்ப்பில், பாண்டியர், சேரர் யாரேனும் இப்படி வஞ்சப் புகழ்ச்சியாகப் பாடிவிட்டார்களா?