வாழ்க்கை முழுவதும் பணம், பதவி, செல்வாக்கு என்று நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த ஒருவருக்கு ஒரு தருணத்தில் சற்று நின்று மூச்சுவிட நேரம் கிடைத்தபோது அவர் மனதில் மிகப்பெரிய வினா ஒன்று எழுந்தது. என்னதான் நேர்மையாகத் தன் வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும் தம் இறுதிக்காலம் எப்படியிருக்குமோ என்ற அச்சம் எவருக்கும் இருப்பது இயல்புதானே? அப்படித்தான் அவருக்கும் அப்படியொரு ஐயம் எழுந்துவிட்டது. அதாவது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ள ஒருவருக்கு எதிலெல்லாம் அதிகம் ஈடுபாடு இருக்கும்? சொத்து, குடும்பம், ஆரோக்கியம் அல்லது சமுதாயம் – இவற்றில் எதன் மீது அதிக நேசம் ஏற்படும் என்ற ஐயம் ஏற்பட்டுவிடுகிறது. யாரிடம் போய் இதைத் தெளிவுபடுத்திக்கொள்வது என்று வெகு நாட்களாக சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அன்று தம் ஊருக்கு ஒரு மகான் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைச் சென்று சந்திக்கிறார். தன்னுடைய ஐயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ள அந்த மகானிடம் சென்று தன்னுடைய வினாவை முன்வைக்கிறார்.

அந்த மகானும் புன்னகையுடன், “உனக்கு குழந்தை இருக்கிறதல்லவா? அந்தக் குழந்தைக்கு என்னென்ன தேவைன்னு சொல் பார்க்கலாம் ” என்று அவரையே திருப்பிக் கேள்வி கேட்டார்.

சற்று யோசித்தவர், வயிற்றுக்கு உணவு, பாதுகாப்பான தாயின் மடி அல்லது தந்தையின் தோள், அன்பு, பாசம், விளையாட்டு போன்றவையைத் தவிர பெரிதாக வேறு ஒன்றுமிருக்காதே என்றார்.

உடனே அந்த மகான், வாழ்க்கை என்ற இந்த வட்டத்தில் முதலும், முடிவும் ஒன்றுதான். வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலும் அந்த ஆரம்பக்கட்டத் தேவைகளைத் தவிர வேறு தேவைகள் ஏதுமிருக்காது. உணவு, தண்ணீர், மருந்துகள், வசதி, அன்பானவர்களின் பாசமும் அவர்களின் அருகாமையும் மட்டும்தான் அவர்களின் தேவையாக இருக்கும். ஆடம்பரம், பகட்டு, செல்வம், சொத்துபத்துகள், வங்கி இருப்பு, நகைகள், ஈகோ, ஆசைகள், சமூகம் போன்ற வெறும் மாயையாக இருந்த அனைத்தும் எண்ணங்களிலிருந்து மறைந்துவிடும் என்றார்.

அப்படியானால் பிறந்த குழந்தைக்கும் இறுதிக்கட்டத்தில் இருக்கும் அவருக்கும் எந்த வேறுபாடுமே இல்லையா சாமி’ என்று மீண்டும் கேட்டதற்கு அவர்,

‘புதிதாகப் பிறந்த குழந்தைக்கும், தனது வாழ்க்கையை நிறைவு செய்யப்போகும் ஒருவருக்கும் உள்ள ஒரே வேறுபாடு என்ன தெரியுமா?

அதுவரை தாம் வாழ்ந்த வாழ்க்கையில் தாம் பெற்ற அமைதியும், மன நிறைவும் தரும் ஒரு சில நேசத்துக்குரிய நினைவுகள் மட்டுமே பிறந்த குழந்தைக்கும் இறுதிக்கட்டத்தில் உள்ளவருக்குமான வேறுபாடு’ என்றார்.

அந்த மகான் சொன்னதைக் கேட்டவரின் மனதில் ஏதோ பொறிதட்ட ஊர், உலகம் ஆயிரம் சொல்லலாம், பெற்ற மனம் பித்தானாலும், பிள்ளை மனம் கல்லாகாது. தெளிவுபடுத்திய மகானுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பியவர், தன் வாழ்க்கை வட்டத்தின் அடுத்த கட்டத்தை எண்ணியபடியே நகர்ந்தார்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.