குழந்தையின் பெயர் (சிறுகதை)

நிர்மலா ராகவன்
“குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?”
“நீங்கதான் சொல்லுங்களேன்!” பிரசாத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள் பிரபா. முகத்தில் வெட்கமோ, புன்னகையோ இருக்கவில்லை. எதையோ யோசிப்பதுபோல் இருந்தாள் என்றுதான் பட்டது அவனுக்கு.
முதலிலேயே யோசித்துவைத்திருந்தது நல்லதாகப்போயிற்று என்ற மகிழ்வுடன், “விட்டல், இல்லாட்டி கோகுல்,” என்று சற்று உரக்கவே சொன்னான்.
“கிருஷ்ணர் பேரா,” என்று இழுத்தாள்.
“அதேதான்!”
“அவருக்கு நிறைய பெண்களோட சகவாசமில்ல?”
அவனுக்குப் பெருமையாக இருந்தது. பிறக்கப்போகிற மகன் உத்தமபுத்திரனாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். இதில் என்ன தவறு?
கிருஷ்ணன் இல்லாவிட்டால் ராமன். “ராமசந்திரன்,” என்றான் அழுத்தமாக.
“MGR வாத்தியாரா?”
“இல்லே. தசரதகுமாரன். ராமாயணத்திலே..”.
“எனக்கும் தெரியும்”. சற்று சூடாக வந்தது அவள் பதில்.
“ராமர்தான் ஏகபத்தினி விரதன்,” என்றான் சமாதானமாக.
“சுகமா அரண்மனையில இருக்கிறதை விட்டுட்டு, அப்பா சொல்றார்னு காட்டுக்குப்போய் கஷ்டப்பட்டாரே! அதைச் சொல்லமாட்டீங்களே!” என்று சாடினாள். “கொஞ்சம் சொந்த புத்தியை உபயோகிச்சிருக்கவேண்டாம்?”
மகாபாரதம், ராமாயணம் ஆகிய இரண்டின் நாயகர்களும் சரிப்படவில்லை. வேறு யாரைச் சொல்லலாம்?
“நடராஜன்?”
“சிவன் பேரு. ஒங்களுக்கு பஸ்மாசுரன் கதை தெரியுமில்ல?”
`இவள் எங்கே போகிறாள்?’ என்று சற்று அயர்ந்தான் பிரசாத்.
அவளே சொன்னாள்: “தன்னோட கையை யார் தலையில வெச்சாலும் அவங்க சாம்பலாகணும்னு வரம் கேட்டானாம் அந்த அசுரன். யார்கிட்டே? சிவன்கிட்டே”.
சுவாரசியமாக இருந்தது கதை.
“எவ்வளவு கெட்ட குணம்!” என்று அவளை ஊக்கினான்.
“ரொம்ப யோசிக்காம, சிவனும் அவன் கேட்டதைக் குடுத்துடரார். நைச்சியமா பேசறவங்களுக்கு ரொம்ப யோசிக்காம எதையாச்சும் குடுத்தா, குடுக்கறவங்களுக்குத்தான் கஷ்டம்”.
சிவன் அப்படி என்ன கஷ்டத்தை அனுபவித்தார் என்று கேட்கவேண்டும்போல இருந்தது அவனுக்கு. `இதுகூடத் தெரியாதா!’ என்று ஏளனம் செய்துவிடுவாள். வேண்டாம்.
“முருகன்? சிவகுமார்னு வெச்சா, நாகரிகமா இருக்கும்”. அவன் குரல் பலகீனமாக ஒலித்தது. இதற்கு என்ன ஆட்சேபம் தெரிவிக்கப்போகிறாளோ!
“சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபிச்சுக்கிட்டு, பெத்தவங்களை விட்டு எங்கேயாவது போயிடுவான். ரெண்டு பொண்டாட்டிவேற!”
அவன் மௌனமாக இருந்தான்.
“வேற ஏதாவது பேசலாமா?” என்றாள்.
அவன் வாயே திறக்கவில்லை.
அவளே கேட்டாள்: “பிறக்கிறது பெண்குழந்தையா இருந்தா?”
“சீதா,” என்று சொன்னவன், அவள் முகத்தைப் பார்த்துவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டான். பழங்காலப் பெயராக இருக்கிறது என்பாளோ?
“ஜானகின்னு பேர் வெச்சுட்டு, ஜானுன்னு செல்லமா..,” என்றவனை இடைமறித்தாள். “கட்டினவர் காட்டுக்குப் போனபோது, அவ எதுக்கு அவரோட கல்லிலேயும் முள்ளிலேயும் போய் திண்டாடினா? `நான் எங்கப்பா வீட்டுக்குப் போறேன்’னு போயிருக்க வேண்டியதுதானே?”
அதற்குமேல் அவனுடைய கற்பனை ஓடவில்லை.
மறுபடியும் அவளே கைகொடுத்தாள். ”பார்வதி புத்திசாலி. சிவனோட ஒடம்பிலே பாதி அவளுக்கு. சக்தி இல்லாட்டி சிவன். ஒரு பொண்ணு இப்படித்தான் இருக்கணும். துணை இல்லாம நான் இல்லேன்னு ஒவ்வொருத்தனும் தவிக்கணும்”.
“ஏண்டா பிரசாத்து? ரெண்டுபேரும் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தீங்களே! `ஒங்க பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’ அப்படின்னு தரகர்கிட்ட சொல்லிவிடவா?” தாய் கேட்டாள்.
“எனக்கு இந்தப் பொண்ணு வேண்டாம்மா”.
“அதான் ஏன்னு கேக்கறேன். `நான் நாகரிகமானவ. தமிழெல்லாம் படிக்கிறதில்லே’ன்னு சில அரைகுறைங்கமாதிரி அலட்டிக்காம, ஆன்மிகப் புத்தகங்களெல்லாத்தையும் கரைச்சுக் குடிச்சிருக்கா. ரொம்ப புத்திசாலிடா!”
“எனக்கு இவ்வளவு புத்திசாலியான பொண்ணு வேண்டாம்மா. பெண்ணியம் பேசறா. எல்லாத்தையும் அலசறா”.
“அதான் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கா”. அழுத்தமாகச் சொன்னாள் அம்மா.
“அவளோட ஆராய்ச்சியை வேலையோட வெச்சுக்கட்டும். கோயிலுக்குப் போனோமா, சாமி கும்பிட்டோமா, பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டோமான்னு இருக்கிற சராசரி பொண்ணுதான் எனக்குச் சரிப்படும்”.
மனதுக்குள் சொல்லிக்கொண்டான், `கல்யாணம் ஆகி, பிறக்கப்போகிற குழந்தைக்குப் பெயர் வைப்பதில்கூட எங்களுக்குள் ஒற்றுமை இல்லையே! இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் எதிரும் புதிருமாக இருந்தால் வாழ்க்கை நரகமாக இருக்காதா!’