நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 53

நன்றே ஒருவர்த் துணையுடைமைப் பாப்பிடுக்கண்
நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் – விண்டோயும்
குன்றகல் நன்னாட! கூறுங்கால் ‘இல்லையே
ஒன்றுக்(கு) உதவாத ஒன்று’.

பழமொழி-  ‘இல்லையே, ஒன்றுக்கும் உதவாத ஒன்று

ஒருவாரமா மழை கொட்டிக்கிட்டே இருக்கு. கண்டிப்பா அக்கம்பக்கத்து ஊருகள்ல வெள்ளம் வீட்டுக்குள்ள வந்திருக்கும். நம்ம ஏரியாவுலதான் ஏரி, குளம், ஆறு ஒண்ணுமில்லையே. கொஞ்சமா நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கலாம்.  அப்பா சொல்லிக் கொண்டே நடக்கிறார்.

யாரும் மறந்துகூட டி.வி ய போட்டுராதீங்க. பக்கத்து வீட்ல ஷார்ட்சர்க்யூட் ஆயிடுச்சாம். பொறியியல் பட்டதாரியான சுதன் எனும் என் அன்புச் சகோதரன் அவன் பங்குக்கு அறிவுரை சொல்றான்.

என்ன வாழ்க்கை. வெளியில கால் வைக்க முடியாது. முழங்கால் அளவு தண்ணி ஓடிக்கிட்டிருக்கு. வீடு முதல் மாடியில இருக்கறதால பால்கனியிலேந்து வெளியில பாக்க முடியுது. அவ்ளோதான். அதுக்குமேல ஒண்ணும் பண்ண முடியல. முடிஞ்சாமட்டும் என்ன பண்ணி கிழிச்சிருக்கப் போறேன். முதுகலை இயற்பியல் படிச்சிருக்கேன்னு பேரு. சரியான வேல எதுவும் இன்னும் கிடைச்ச பாடில்ல. டியூஷன் எடுத்தே வாழ்க்கையைக் கழிச்சுட்டு இருக்கேன். இயற்பியல் எனக்கு விருப்பப்பாடம்னு தேர்ந்தெடுத்துப் படிச்சேன். எப்பவுமே புரிஞ்சு படிச்சாதான் எனக்குப் பிடிக்கும். மார்க் வாங்கறதுக்காக படிக்கற பழக்கம் இல்லாததால கல்லூரியில சீட் கிடைச்சதே பெரும்பாடா ஆயிடுச்சு. ஒருவழியா படிச்சு முடிச்சு வெளியில வந்தப்புறம்தான் உலகமே புரியுது. இங்க எல்லாமே மார்க்கையும் நுழைவுத்தேர்வையும் வைத்துதான் மதிப்பிடறாங்க. அரசாங்க வேலைக்கான நுழைவுத்தேர்வுல எந்தப் பாடத்த முதன்மைப் பாடமா எடுத்துப்படிச்சாதான்  என்ன.  அவங்களோட தேர்வுல வெற்றிபெற்றா போதும். இப்போ வேற வழியில்லாம கோச்சிங் சென்டர் போய் பயிற்சி எடுத்துக்கறேன்.  வர தேர்வுலயாவது வெற்றி பெறணும். தினமும் பக்கத்துல இருக்கற நூலகம் வரை போய் எல்லா செய்தித்தாள்களையும் படிச்சுட்டு வருவேன். இப்போ அதுவும் போச்சு.

தம்பி தம்பினு பக்கத்து பால்கனி ஆன்ட்டி கூப்பிடறாங்க. கொட்டற மழையில அவங்க கைய அசைக்கறதுதான் தெரியுது. வேற என்ன சொல்லவராங்கனு புரியல. இப்பதான் அந்த ஆன்ட்டி வீட்டயே நல்லா கவனிக்கறேன். எங்க வீட்டுக்கு இடதுபக்கத்துல இருந்தாலும் கொஞ்சம் இடைவெளிவிட்டு அவங்க வீடு இருந்ததால பெரிசா கவனிச்சதில்ல. ஒரு சின்ன பொண்ணு வேற எட்டிப்பாக்குது.

ஆமாம் என்கிட்டதான் ஏதோ சொல்ல ட்ரை பண்றாங்க. பாத்துக்கிட்டு இருக்கும்போதே ஒரு பெரிய கயிற்றை எடுக்கறாங்க. ஒரு நுனிய அவங்க வீட்டு பால்கனி அழியில கட்டிட்டு மீதமுள்ளதச் சுருட்டி வீசறாங்க. கீழ விழுந்து அது நனையுது. திரும்பவும் என்கிட்ட சைகை காட்டிட்டு சுருட்டி என்னய நோக்கி வீசறாங்க. ஒருவேளை நான் அடுத்த பக்கத்தப் புடிச்சு என் வீட்டு அழியில கட்டணும்னு எதிர்பாக்கறாங்களோ. திரும்பத் திரும்ப எரிந்ததில் மூணாவது தடவை நான் கயிற்றைப் பிடிச்சிட்டேன். அதை எங்க வீட்டு பால்கனி அழியில் கட்டியும் விட்டேன்.

இப்போ அவங்க தன்வீட்டுப் பக்கத்துல கட்டிய கயிற்றின் நுனியை அவிழ்த்து அதில ஒரு பிளாஸ்டிக் கூடையை நுழைத்து, கயிற்றை மேலையும் கீழையும் அசைத்து அசைத்து அந்தக் கூடையை எங்க வீட்டுப்பக்கம் தள்ளி விடறாங்க.

ஆர்வ மேலீட்டால் அந்தக் கூடையை கைஎட்டிப் பிடித்து விட்டேன். அதுக்குள்ள ஒரு துண்டுச்சீட்டும் சுடச்சுட கேசரி போட்ட டிபன்பாக்சும்  இருக்கு. அந்த சீட்டுல எங்க வீட்டுல கைக்குழந்தை இருக்கு ஒரு பால் பாக்கெட் இருந்தா போட்டு அனுப்புங்க. தேங்க்ஸ்னு எழுதியிருக்காங்க. நான் நிமிர்ந்து அவங்களப் பாக்கறேன். அதே சிரிச்ச முகத்தோட அந்த ஆன்ட்டி வெயிட் பண்றாங்க.

அம்மாவிடம் சொல்லி பால்பாக்கெட் போட்டு அந்தக் கூடையை அவர்கள் செய்த முறைப்படியே அசைத்து அனுப்பி வச்சேன்.

‘இல்லையே, ஒன்றுக்கும் உதவாத ஒன்றுனு பழமொழிய கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இப்பதான் நேர்ல பாக்கறேன். சும்மா உக்காந்து புலம்பிக்கிட்டு இருக்காம எவ்வளவு அழகா கொடிக்கயிற உபயோகிச்சு வேலைய நடத்திக்கிட்டாங்க சொல்லிக்கொண்டே அம்மா உள்ளே செல்கிறாள்.

ஆமாம். சரிதான் ஒன்றுக்கும் உதவாத பொருள்னு ஒண்ணு கிடையவே கிடையாது. எனக்குள்  நானே சொல்லிக் கொள்கிறேன். சொல்லிமுடித்தவுடன் எனக்குள் புதுஉற்சாகம் பிறக்கிறது. என்னாலயும் ஏதாவது செய்து சாதிக்க முடியும்னு தோணுது.

பாடல் 54

ஆஅம் எனக்கெளி(து) என்றுலகம் ஆண்டவன்
மேஎம் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
தோஒம் உடைய தொடங்குவார்க்(கு) ‘இல்லையே
தாஅம் தரவாரா நோய்’.

பழமொழி – ‘இல்லையே தாம் தர வாரா நோய்’

எதற்கெடுத்தாலும் கதை சொல்லும் என் நண்பன் செல்வாவுடன் அவன் சொந்த ஊருக்கு வந்திருக்கேன். இங்கே என்னென்ன கதை சொல்லப்போறானோ. எது எப்படியோ. அவன் சொல்லறதுல உண்மை இருக்கா இல்லயான்னு நாங்க ஆராய்ந்ததே இல்ல. கேக்க சுவாரசியமா இருக்கும். பொழுதும் போகும். ஆனா சில நேரங்கள்ல எப்படா இவன் முடிக்கப்போறான்னு எரிச்சலாவும் இருக்கும். ஆனாலும் இவனுக்குக் கொஞ்சம் கற்பனை அதிகம்தான்.

நாங்க மொத்தம் ஐந்துபேர் தங்கி இருக்கற அந்த சென்னை வீடு கலகலப்பா இருக்குன்னா அது இவனாலதான். எல்லாரும் வெவ்வேற இடத்துலேந்து வந்திருந்தாலும் வேலபாக்கற தொழிற்சாலை ஒண்ணுங்கறதால சேந்து போக வர முடியுது.

இப்ப இவன் வற்புறுத்திக் கூப்பிட்டதால நாங்க எல்லாரும் இவன் கிராமத்துக்கு வந்திருக்கோம். பஸ்லேந்து இறங்கினதுலேந்து ஒரே நிசப்தம். நடத்தியே கூட்டிக்கிட்டுப் போறான். இன்னும் எவ்ளோதூரம் நடக்கணுமோ. முன்னாடி காலத்துல இந்த இடமெல்லாம் ஏரியும், குளமுமா இருந்திருக்கும்போல.இப்போ ஒரே பாறையும் மண்ணுமா குண்டும் குழியுமா இருக்கு. பொறுக்க முடியாம செல்வா என்ன அமைதியாவே வறீங்க. என்ன பலத்த யோசனை கேட்டே விட்டேன். கால்வேற வலிக்குது. இன்னும் எவ்ளோதூரம் நடக்கணும்?

கொஞ்ச தூரந்தான். ஒரு மொட்டக் கல் மண்டபம் தெரியுதுபாருங்க. அதுக்குப் பின்னால அரைகிலோ மீட்டர் தான். சர்வசாதாரணமாய்ச் சொல்லிவிட்டு வீறு நடை போடுகின்றான். எங்களுக்கோ சுத்தமா முடியல. சரி அவன் வாயக்கிளறி டைம்பாஸ் பண்ணலாம்னா அவனும் சத்தமில்லாம நடக்கறான்.

சரி. அவன் சொன்னதவச்சே ஆரம்பிப்போம். அந்த மொட்ட மண்டபம்னு சொல்றீங்களே செல்வா அது முன்காலத்துல இருந்த அரண்மனை அல்லது கோயிலோட ஒரு பகுதியோ?

இல்ல இல்ல. அது ஒரு தனி கதை ஆரம்பித்தான் அவன். எங்க ஊர்ல மாயி னு ஒரு நாட்டியக்காரி இருந்திருக்கா. அவ ரொம்ப பேச்சுத்திறமை மிக்கவளாம்.

அவகூட உல்லாசமா பொழுதுப்போக்கறதுக்காக ஊருக்கு ஒதுக்குப்புறமா இந்த மண்டபத்த கட்டியிருந்திருக்காரு ஜமீன்தார்.

நேர்லயே காட்டறேன். இங்க பாருங்க. கல் தரையில பல்லாங்குழி, தாயக்கட்டம் பாம்புக்கட்டம் எல்லாம் செதுக்கி வச்சிருக்கு. அவங்க ரெண்டு பேரும் விளையாடி பொழுது போக்குவாங்களாம். ஒவ்வொரு முறை தான் தோக்கும்போதும் தன் சொத்துல ஒருபகுதிய எழுதித்தரதா ஜமீன்தார் வாக்கு குடுத்திருந்திருக்கார். கடைசியில அந்தம்மா சாமர்த்தியமா எல்லாத்தையும் எழுதி வாங்கிருச்சு. ஜமீன்தார் பைத்தியமா இந்த மண்டபத்தச் சுத்தி சுத்தி வந்து செத்துட்டாராம். அதனாலதான் இதத் திரும்ப எடுத்துக்கட்டாம பாழடைய உட்டுட்டாங்க. இப்ப கூட ராத்திரி இந்தப் பக்கமா வந்தா ஜமீன்தார் சிரிக்கறமாதிரி சத்தம் கேக்கும்னு சொல்லுவாங்க. ராத்திரி பத்துமணிக்கு மேல யாரும் இந்தப்பக்கம் வரதில்ல.

அவன்பாட்டுக்கு சொல்லிக்கொண்டே நடந்துக்கிட்டிருக்கான். எங்களுக்கு அடிவயிறு கலக்குது. இவ்ளோ நாள் இவன் சொன்னதையெல்லாம் கதையாத்தான் கேட்டிருக்கோம். ஆனா இந்த மண்டபத்தப் பாத்ததிலேந்து இது உண்மைக்கதையா இருக்குமோன்னு மனசு நம்புது. எப்டியோ இந்த ஜமீன்தார் ‘இல்லையே தாம் தர வாரா நோய்’னு சொல்லப்படற பழமொழி மாதிரி தப்பா வாக்கு குடுத்து துன்பத்த விலைக்கு வாங்கி இருக்கார்.

வாங்க தம்பிகளா. செல்வாவின் அப்பா எதிரில் வந்து அழைக்கிறார். ஜமீன்தார் பற்றிய நினைவிலிருந்து மீண்டு அவர் பின்னாலேயே செல்கிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *