நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல்- 59

சீர்த்தகு மன்னர் சிறந்ததனைத்தும் கெட்டாலும்
நேர்த்துரைத்(து) எள்ளார் நிலைநோக்கிச் – சீர்த்த
கிளையின்றிப் போஒய்த் தனித்தாயக் கண்ணும்
‘இளைதென்று பாம்பிகழ்வார் இல்’  

பழமொழி- ‘இளைதென்று பாம்பிகழ்வார் இல்’

எழுத்தாளரான  நான் கதை எழுத வந்திருக்கிறேன். குக்கிராமத்து வாழ்வியலை எழுதணும்ங்கறது என் நீண்ட நாள் ஆசை. புளோரிடாவில் வசிக்கும் எனக்கு இந்திய குக்கிராமத்தைப் பற்றி என்ன தெரியும். பிறந்து படித்து வேலைக்குப் போகிற வரை தில்லி வாசம். அப்பப்போ தமிழ்நாட்டு சொந்தக்காரங்களைப் பாக்கறதுக்காக சென்னை வருவது வழக்கம். அவ்வளவுதான். கல்யாணத்துக்கப்பறம் புளோரிடா போயாச்சு.

நல்லவேளை தஞ்சாவூர் கல்யாணத்துல கலந்துக்கறதுக்காக இந்தியா வந்த இடத்துல மாயனப் பாத்தது நல்லதாப் போச்சு. கல்யாணத்துல சுருசுருப்பா அவன்தான் ஓடியாடி வேலைசெஞ்சான். சரி அவனை ஊக்குவிப்போமேன்னு நினைச்சு பேச்சு குடுத்ததுல பக்கத்து கிராமத்தச் சேந்தவன்னு தெரிஞ்சது. அதோட விளைவு அவன் கூட இப்ப இங்க வந்து உட்கார்ந்து இருக்கேன்.

பஸ் ஸ்டாண்டுலேந்து நடந்துவந்த களைப்பப் போக்க ஆல மரத்தடியில போடப்பட்டிருக்கிற கல்திண்ணையில நான் இப்ப உக்காந்து இருக்கேன். மேல நிமிர்ந்து பாத்தா இடைவெளியில்லாம இலைகள். விதவிதமான பறவைகளின் ஒலி  சுத்திலும் ஏதோ நீர்நிலை இருக்கு போல. குளிர்ச்சியான காற்றுவேற வீசுது. ஆனா இதையெல்லாம் யாரும் ரசிக்கறதாத் தெரியவே இல்ல. சொல்லப்போனா ஆள் நடமாட்டமே இல்ல.

மாயன் உட்கார்ந்து ஓய்வு எடுக்காம குறுக்கும் நெடுக்குமா நடக்கறான். ஒரு பக்கத்துல கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல் வெளிகள். சரி அவனுக்கு என்ன அவசர வேலை இருக்கோன்னு நினைச்சு கிளம்பலாம்னு சொன்னேன். வரப்பு வழியா என்ன கூட்டிக்கிட்டு  போறான். இப்பதான் நாத்து நட்டுவச்சிருக்காங்க போல,  அந்த வயல் என்னயப்பாத்து நான் சொட்ட மண்டையா இருக்கேன்னு நினைக்காத. கொஞ்ச நாள் கழிச்சு வா என் தலையில அடர்த்தியா நெற்கதிர் விளைஞ்சு நிக்கும்னு சொல்லுது. அதுக்கு அடுத்த வயல இப்பதான் உழுதுகிட்டு இருக்காங்க.  அது  எனக்கு மொட்ட போடறாங்கனு சொல்லுமோ. இந்தக் கற்பனையும் நல்லாத்தான் இருக்கு. யோசிச்சுக்கிட்டே மாயனப் பின்தொடர்ந்து  நடக்கறேன். வரப்புக்குப் பக்கத்துல இருக்கற மரத்துலேந்து தூக்கணாங்குருவிக் கூடு விழுந்துகிடக்கு. இந்த வீடு பழசாயிடுச்சுன்னு நினைச்சு இப்ப அந்த குருவி புது வீடு கட்டிக்கிட்டு இருக்குமோ? எதுக்கும் இருக்கட்டும் காட்சிப்பொருளா அதை வைக்கலாம்னு கையில் எடுத்துப் பாக்கறேன்.

மாயன் கைய அசைச்சு என்னயக் கூப்பிடறான். அடுத்த வயலுக்கு நடுவுல அவன் இறங்கி நிக்கறதால நானும் வரப்ப உட்டு கீழ இறங்கறேன். கால் சேத்துல புதைஞ்சு செருப்பு உள்ள மாட்டிக்கிச்சு. வேற வழியில்லாம செருப்ப அங்கயே உட்டுட்டு கஷ்டப்பட்டு நடந்து அவன் இருக்கற இடத்த அடைஞ்சேன்.

மாயன் என்னயப் பாத்து சிரிக்கறான். ஏன்சார் மண்ணுக்குள்ள முதல் தடவ கால வச்சிருப்பீங்க போல. எப்படி இருக்கு அனுபவம். இதையும் எழுதி வச்சிக்கோங்கங்கறான். நிசமாவே ஒரு கிலோமீட்டர் நடந்து மக்கள் வசிக்கும் அந்தக் குடிசைப் பகுதிக்குப் போகறதுக்குள்ள ரொம்ப கஷ்டமாயிடுச்சு.

சுத்திவர ஐம்பது அறுபது மண் குடிசைவீடுகள். மண்ணால கட்டப்பட்ட நாலு சுவத்துக்கு மேல ஒலைக் கூரை வேய்ந்து இருப்பாங்கபோல.  குடிசைக்கு உள்ளேயும் வெளியிலயும் தரைய சாணியால மெழுகி சுத்தமா வச்சிருக்காங்க. மின்சார வசதி இல்லாத கிராமங்கறதால எல்லா வீட்லயும் விளக்கு வைக்க வெளிச் சுவத்துல மாடாக் குழி அமைச்சிருக்காங்க. குடிசையோட கூரை மேல இடைவெளி விட்டு ஓரளவு காய்ந்த எருமுட்டைனு சொல்லப்படற வறட்டிய பரப்பி வச்சிருக்காங்க. அடுப்பெரிக்க விறகுகூட சேர்த்து உபயோகிப்பாங்களோ என்னவோ?  அந்த குடிசைகளுக்கு  நடுவுல ஒரு கல் மண்டபம் தெரியுது. இவ்வளவுதான் அந்தக் கிராமத்தின் அமைப்பு. மத்தபடி உள்ள எல்லா இடத்திலயும் வயல்கள்தான் இருக்கு.  நடுவுல இருக்கற கல் மண்டபத்தப் பத்தி கதை எழுததான் நான் இவ்வளவு சிரமப்பட்டு இங்க வந்தேன். மாயனத்தவிர வேற யாரும் பேச்சு குடுக்க மாட்டேங்கறாங்க. அவங்கவங்க வேலையில கண்ணும் கருத்துமா இருக்காங்க. சின்னஞ்சிறுசுங்க மாடு,வயல் வேலையப் பாக்கறாங்க. வீட்டைவிட்டு இறங்கமுடியா வயசானவங்க தென்னங்கீத்து, பனை ஓலை இதையெல்லாம் சீவி துடைப்பம், விசிறி, கூடை  இந்தமாதிரி சாமான்கள் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.

மாயன் ஆரம்பிக்கிறான். இந்த மண்டபம் சோழர் கால குறுநில மன்னரோட சமாதி. எங்க ஊரோட கடவுள் இவர்தான். உருவம் எதுவும் வைக்கல காலையில எழுந்து எல்லாரும் இந்த மண்டபத்தப் பாத்து கையெடுத்து கும்பிட்டுட்டுத் தான் வேலைக்குப் போவாங்க. இவர் இந்த மாதிரி ஆறு கிராமங்களுக்கு மன்னரா இருந்தார். தன்னோட ஆட்சிக்குட்பட்ட வயல் வெளிகள எல்லாக் குடும்பத்துக்கும் சரிசமமா பிரிச்சிக்குடுத்து விவசாயம் பாக்க வச்சாராம். அதனால ஏழை பணக்காரன்னு வித்தியாசம் இருக்கல. இப்பவரை அப்படித்தான். கடைசி வரை அவர் தனக்குனு எந்த நிலத்தையும் வச்சுக்கல. இராச பரம்பரை முடிவுக்கு வந்தபிறகு அவர் வம்சத்துல வாழறவங்க  பிழைப்புக்குனு வேறவேற வேலையப் பாக்க ஆரம்பிச்சுட்டோம்.

அப்டின்னா நீங்களும் அந்த மன்னர் பரம்பரையச் சேர்ந்தவரா. ஆச்சரியம் எனக்கு. மாயன் ஆமாம் என்கிறான். ஊருக்குள்ள எனக்கு இப்பவும் நல்ல மரியாதைதான். இருந்தாலும் பரம்பரை கவுரவத்தக் காப்பத்தணும் இல்லயா. அதனாலதான் டவுணுக்கு வந்து எனக்குத் தெரிஞ்ச வேலையப் பாத்து சம்பாதிக்கிறேன். கொஞ்ச பணம் சேந்தவொடனே இதே ஊரிலயே ஒரு வயல விலைக்கு வாங்கணும். அதுதான் என் இலட்சியம். அவன் பேசிக்கொண்டே போக என் மனதுள் ‘இளைதென்று பாம்பிகழ்வார் இல்’ எனும் பழமொழி ஞாபகத்துக்கு வருது. தன் கூட்டத்த விட்டுட்டு தனியா வந்துநிக்குதுங்கறதுக்காக பாம்ப யாராவது குறைச்சு எடை போடுவாங்களா. அதுபோலத்தான் மன்னர்களும் தம் நிலமையில தாழ்ந்தாலும் அவங்க பெருமை கெடாது. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் தானே. என் கண்முன் மாயன் மணிமுடி தரித்த சோழமன்னனாகவே தெரிகிறான். அவனை முன்னால் நிற்கச் செய்து அந்த மண்டபத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.     .

பாடல் – 60

சிறியதாய கூழ்பெற்றுச் செல்வரைச் சேர்ந்தார்
பெரிதாய கூழும் பெறுவர் – அரிதாம்
‘இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால்
கிடப்புழியும் பெற்று விடும்’..

பழமொழி – . ‘இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்று விடும்’

ராம்லீலா மைதானம் நிரம்பி வழிகிறது. வீட்டுக்குப் பக்கத்துல இருந்தாலும் ஒவ்வொரு வருசமும் இந்தக் கூட்டத்தப் பாத்து பயந்து கிட்ட போகறதேயில்ல. இந்தத் தடவ கண்டிப்பா பாத்தேயாகணும்ங்கற மன உறுதியோட நான் பக்கத்துவீட்டு பாசுவதி முகர்ஜி குடும்பத்தோட கிளம்பி வந்துட்டேன். முன்னால நிக்கற வரிசை நகருகிற மாதிரியே தெரியல. அவளோட ஐந்து வயசு குழந்தை வேற குதிக்க ஆரம்பிச்சிட்டான். பக்கவாட்டுல தெரியற ராட்சச ராட்டினம் அவனுக்கு பயத்தக் குடுக்குது போல. தூக்கிக்கச் சொல்லி அழறான். இன்னிக்கு எப்டித்தான் சுத்திப்பாக்கப் போறோமோ. அந்த மைதானத்துக்குள்ள மேஜிக் ஷோ, மரணக்கிணறு, விதவிதமான ராட்டினங்கள், கடைகள் எல்லாம் இருக்காம். எதிர் வீட்டு ஆன்ட்டி சொன்னாங்க. எது எப்படியோ அவங்க வாங்கிட்டு வந்த ஊறுகாய்களும், அப்பள வகைகளும் நல்லா இருந்திச்சு. அத வாங்கதான் நான் கஷ்டப்பட்டு போய்க்கிட்டிருக்கேன். பாசுவதி வேற எள்ளுமிட்டாய், கடலை மிட்டாய் எல்லாம் விதவிதமா கிடைக்கும்ங்கறா. முதல்ல உள்ள போனாதானே.

அதுக்குள்ள முன்னால கூச்சலும் குழப்பமும். வரிசைய ஒழுங்குபடுத்த நிறைய போலீஸ் நிக்கறாங்க. என்ன பிரயோசனம். நம்ம மக்கள ஒழுங்கு படுத்தறது பிரம்ம வித்தையாச்சே. ஐயோ பாவம். ஒரு போலீஸ்காரர் மைக்ல கத்திக்கிட்டு நிக்கறார். இங்க நடக்கறது இராமயண நாடகம்தான். இதில நடிக்கறவங்க

யெல்லாம் மனுசங்க. அதனால யாரும் உணர்ச்சிவசப்படக் கூடாதுனு. எனக்கு முன்னால நிக்கற அம்மா விளக்கம் சொல்றாங்க. அது ஒண்ணுமில்ல பாபி. இராவணன் வேஷம் போட்டவன் சிகரெட் குடிக்கறதுக்காக பந்தல விட்டு வெளிய வந்தான் போல. யாரோ ஒரு இராம பக்தன் அவனப் போட்டு அடிக்க ஆரம்பிச்சிட்டான். அதப் போலீஸ் தடுக்கப் போனா எங்க சீதா மாதாவ இவன் அவமானப்படுத்திட்டு எப்டி உயிரோட இருக்கலாம்னு சண்டை போடறானாம். அந்த நேரம் பாத்து என்ன சண்டைனு பாக்கறதுக்காக இராமர் வேசம் போட்டவன் வெளிய வரதப் பாத்து மொத்தக் கூட்டமும் ஜெய் ஸ்ரீராம்னு கத்திக்கிட்டே கீழ உழுந்து கும்பிட்டிருக்கு. அதனால பந்தலில போட்ட மண்ணு பூராகிளம்பி இப்ப புழுதியா நிக்குது. இராவணனுக்கு அடிபட்டதுனால நடிக்க முடியாதாம். அதான் வேற ஒருத்தன ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்ப என்னடான்னா நாடகத்த ஏன் நிறுத்தினீங்க. இது அபசகுனம்னு இன்னொரு கூட்டம் கத்துது.

ஓ அதுதானா. நாங்க இந்த வரிசையில வந்து நிக்கும்போது ஜெய்ஸ்ரீராம்னு சத்தம் கேட்டது. சரி. இந்தக் குழம்பமெல்லாம் தீர்ந்து எப்ப கேட்டத் திறப்பாங்களோ. யோச்சிச்சுக்கிட்டே நிக்கறேன். பின்னாலேந்து யாரோ கூப்பிடற மாதிரி இருக்கு. திரும்பிப்பார்த்தேன். ஒரே ஆச்சரியம். முன்னால என் வீட்டுப் பக்கத்துல குடியிருந்த கரிஷ்மா நிக்கறா. மெதுவா என்னய அவ பின்னால வரச் சொல்றா.

பாசுவதிக்கு பொறுமை போயிடுச்சு. அவ வீட்டுக்குத் திரும்பிப்போறேன்னு சொல்லிட்டா. நான் மட்டும் வரிசையிலேந்து விலகி கரிஷ்மா பின்னால போறேன். அவ எனக்கு ஒரு ஸ்பெஷல் பாஸ் குடுத்து இன்னொரு கேட் வழியா உள்ள கூட்டிக்கிட்டுப் போயிட்டா. அந்தப் பகுதியில ஒரே கடைகளா இருக்கு. எல்லாமே இந்த ராம்லீலாவுக்காக போடப்பட்ட கடைகள். அதில ஒரு கடைக்கு என்னயக் கூட்டிக்கிட்டுப் போய் உட்காறச் சொல்றா. அது ஒரு உயர் ரக கையேந்தி பவன் மாதிரி இருக்கு. என்ன சாப்பிடறீங்கனு கேட்டுட்டுப் பதிலை எதிர்பார்க்காம உள்ள போய் கட்லெட் கொண்டு வந்து வைக்கறா.

வேற வழியில்லாம அவ முகத்தையே பாக்கறேன். தீதீ(அக்கா)  என என்னை அன்பா அழைச்சுட்டு இந்த கட்லெட் ஞாபகம் இருக்கானு கேக்கறா. எனக்கு ஒண்ணும் புரியல. அவ பேசப் பேச எனக்கு எல்லாம் ஞாபகம் வருது.

அவ எங்க சொசைடியில குடியிருக்கும்போது துர்கா பூசைக்காக அவங்கவங்க விருப்பப்படுகிற கடைகளைப் போடலாம்னு அறிவிச்சாங்க. அப்ப நான்தான் அவகிட்ட கட்லெட் பண்ணி எடுத்துக்கிட்டு வா. விக்கலாம்னு சொன்னேன். ரொம்ப தயங்கித் தயங்கி ஐம்பது கட்லெட் பண்ணி எடுத்துக்கிட்டு வந்தா. எல்லாப் பொருளின் விலையும் பத்து ரூபாய்தான் இருக்கணும்ங்கற நியதிப்படி இரண்டு கட்லெட்டை ஒரு தட்டில் வைத்து பத்து ரூபாய்னு வித்தோம். அன்னிக்கு இராத்திரி அவ என்ன புலம்பு புலம்பினா. நாம அநியாய விலைக்கு வித்துட்டோம்னு நினைக்கிறேன். செலவு செஞ்சதவிட மிக அதிகமா பணம்வந்திருச்சுனு.

மெதுவா அவளுக்குப் புரியறமாதிரி எடுத்துச்சொன்னேன். நீ எப்பவும் ஸ்வெட்டர் போட்டு பணம் சம்பாதிக்கற இல்ல. அத வியாபாரம்னு நினைக்கறதால வர இலாபம் உனக்குத் தப்பாத் தோணல. இப்போ இதை நீ பொழுதுபோக்குக்கு செஞ்சதா நினைக்கிற. அதனாலதான் வருத்தப்படற. பேசாம இதையே நீ நிரந்தர வியாபாரமா பண்ணலாமே. உன் கைப்பக்குவம் நல்லா இருக்கு என ஹிந்தியில் அவளுக்கு உசுப்பு ஏத்தினேன்.

அதோடவிளைவு வீடு மாத்தி போனப்புறம் வியாபாரத்த மாத்திட்டாளாம். முதலில சின்னதா ஆரம்பிச்சு விரிவுபடுத்தி இப்ப பல கிளைகள் உள்ள கட்லெட் ஸ்டாலுக்கு அவள் சொந்தக்காரியாம். என்னயப் பாத்து நீங்க எனக்கு இருக்கறதுக்கு இடம் சொன்னீங்க. நான் அதை உபயோகிச்சு படுக்க இடம் தயார் பண்ணிட்டேன்கிறா. நம்ம ஊர்ல இதத்தான் ‘இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்று விடும்னு பழமொழியாச் சொல்லுவாங்க. அது எங்க இவளுக்குப் புரியப் போகுது. இருந்தாலும் அவளை மனதார வாழ்த்திவிட்டு என் ஊறுகாய் மற்றும் அப்பளம் ஸ்டால்களுக்கு வழி கேட்டுக்கொண்டுஎழுந்தேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *