Category: நாளாம் நாளாம்

  • மங்கலம் ஆக விளங்குகிறாள் வரலக்ஷ்மி!

    மங்கலம் ஆக விளங்குகிறாள் வரலக்ஷ்மி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மங்கலம் என்பது எங்கும் தங்கிட
    வரமருள் என்றுமே வேண்டுவார் யாவரும்
    தந்திடும் தாயாய் இருப்பாள் வரலக்ஷ்மி
    வரலக்ஷ்மித் தாயைப் போற்றுவோம் வாரீர்

    காத்திடு தாயே என்றுமே வேண்டிக்
    காப்புக் கட்டி வேண்டுவார் பெண்கள்
    மங்கலம் நிறைந்திட மங்கல மாதர்
    வரமருள் என்றுமே வேண்டுவார் உருகி

    குடும்பம் சிறக்க கொண்டவர் சிறக்க
    வைத்திடு என்றுமே வேண்டுவார் மாதர்
    மாங்கல்யம் நிலைக்க வரமருள் என்று
    வேண்டுவார் யாவரும் வரலக்ஷ்மித் தாயை

    அஷ்ட செல்வங்களும் அருள்வாள் வரலக்ஷ்மி
    அவளின் பாதத்தை அனைவரும் பற்றுவோம்
    பற்றுவார் வாழ்வில் மங்கலம் நிறையும்
    மங்கலம் ஆக விளங்குகிறாள் வரலக்ஷ்மி !

    Share
  • சித்திரைத் திருமகளை வரவேற்போம் வாருங்கள்!

    சித்திரைத் திருமகளை வரவேற்போம் வாருங்கள்!

    மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    வசந்தம் வீசிட மனமெலாம் மகிழ
    சித்திரைத் திருமகள் சிறப்பாக வந்திடுவாள்
    அவளை வரவேற்க ஆனவற்றைச் செய்திடுவோம்
    அனைவருமே வாருங்கள் அகமகிழ வரவேற்போம்

    தையினை அடுத்துச் சித்திரை வருகிறது
    தைபிறந்தால் வழிபிறக்கும் தமிழரது நம்பிக்கை
    உழவரை உயர்த்திடும் உன்னதத் திருநாளாய்
    உயர்வாக மலருவதே தைப்பொங்கல் திருநாளே

    உழவினை உயர்த்தும் உன்னதத் திருநாள்
    தையோடு மட்டும் தடைபட்டு நிற்கவில்லை
    சித்திரையும் இணைகிறது சிறப்பான உழவோடு
    அத்தனையும் பண்பாட்டின் அடித்தளமாய் அமைகிறது

    தையிலும் பொங்கல் சித்திரையிலும் பொங்கல்
    பொங்கலைப் பொங்கினால் பூரிப்பே கிடைக்கும்
    மாவிலை தோரணம் வாசலை அலங்கரிக்கும்
    மனமகிழச் சித்திரையை வரவேற்று மகிழுவோம்

    பங்குனி தன்பின்னே சித்திரையைக் கூட்டிவரும்
    சித்திரை பிறந்தாலே கெட்டிமேளம் ஒலித்துவிடும்
    திருமணங்கள் தொடங்கும் திருவிழாத் தொடங்கும்
    சிறப்பாக வசந்தம் ஊஞ்சலாய் ஆடிநிற்கும்

    புத்தாடை  உடுத்துவார் புத்துணர்வு பெறுவார்
    மத்தாப்பு பட்டாசு மனமகிழச் செய்யும்
    இல்லங்கள் தோறும் இனிப்பான பலகாரம்
    எல்லோரும் சித்திரையை ஏந்தியே மகிழுவார்

    ஆலயம் செல்லுவார் ஆண்டவனைப் பணிவார்
    அறிவோடு தெளிவும் அமைந்திடவே வேண்டுவார்
    உறவுகளை அழைப்பார் உபசாரம் செய்குவார்
    மூத்தோரை வணங்கி முழுவாசி பெற்றிடுவார்

    ஈழத்தில் இருவினத்தார் கொண்டாடி மகிழ்வார்
    சிங்களமும் செந்தமிழும் சித்திரையைச் சிறப்பிக்கும்
    தமிழகமும் கொண்டாடும் வடநாடும் கொண்டாடும்
    தனிச்சிறப்பாய் சித்திரையும் சிறப்பாக மலர்ந்துவிடும்

    அறிவியலும் கலந்திருக்கு ஆன்மீகம் நிறைந்திருக்கு
    சமயமொடு சன்மார்க்கம் சமத்துவம் அமைந்திருக்கு
    இல்லார்க்கும் இன்பந்தரும் இருப்பார்க்கும் இன்பந்தரும்
    எல்லோர்க்கும் நல்லதையே நல்கவரும் சித்திரையே

    பட்டிமன்றம் பாட்டரங்கம் பாங்காக நடக்கும்
    பலவறிஞர் பாடகர்கள் விருந்தளித்து நிற்பார்
    ஆண்டவனின் கோவில்களில் உற்சவங்கள் நடக்கும்
    ஆனந்தம் பொங்கிடவே சித்திரையும் மலரும்!

    Share
  • உயர்வுடைக் கார்த்திகைத் தீபத் திருநாள்

    உயர்வுடைக் கார்த்திகைத் தீபத் திருநாள்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    கார்த்திகை தீபம் கதைகளைக் கொண்டது
    கதைகளைக் கதையாய் எடுத்திடல் வேண்டாம்
    கற்கண்டை மருந்தில் சேர்ப்பது போன்று
    தத்துவம் விளக்கிடக் கதைகளைப் பகிர்ந்தார்

    விளக்கு என்றால் விளக்கம் தருவது
    வெளிச்சம் வந்தால் விளங்கிடும் அனைத்தும்
    விளக்கை ஏற்றுதல் வெற்றியைக் கொடுக்கும்
    விளக்கை ஏற்றுவார் அனைத்தையும் காணுவார்

    கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டும்
    இரண்டும் இணைந்தால் இன்பமே ஆகும்
    இணையும் வேளை இறுமாப்பு வந்தால்
    இரண்டின் பயனும் இல்லாமற் போகும்

    சரஸ்வதி நாயகன் பிரம்மா ஆவான்
    லக்குமி நாயகன் திருமால் ஆவான்
    கல்வியை செல்வத்தை வழங்கும் வல்லமை
    பெற்றவர் இருவர் மோதினார் முறுகினார்

    ஆணவம் கொண்ட  மாலும் அயனும்
    ஆண்டவன் தாமென நின்றிடு வேளை
    அவர்களின் நடுவே பேரொளி ஒன்று
    ஜோதிப் பிளம்பாய் ஜொலித்துமே நின்றது

    ஜோதியைக் கண்டவர் பீதியில் நின்றனர்
    அசரீரி ஒலித்தது அடிமுடி காணுங்கள்
    கண்டால் கடவுள் கண்டவர் வென்றார்
    இருவரும் தேடினார் எதையுமே காணா

    ஆணவம் அவர்களை அடிதொழ வைத்தது
    ஒளி வடிவாக இறைவன் தோன்றினார்
    ஒளி வடிவாக வந்த நன்நாள்தான்
    உயர்வுடைக்  கார்த்திகைத் தீபத் திருநாள்

    கந்தனின் தோற்றமும் ஒளியுடன் இணைந்தது
    கனற் பொறியாகியே கந்தனும் தோன்றினான்
    எந்தையாம் இறைவன் ஜோதியாய் எழுந்தார்
    எழிலுடன் குமரனும் ஒளியென ஜொலித்தார்

    கந்தனின் கோவிலில்  கார்த்திகை தீபம்
    விஷ்ணு கோவிலில் விஷ்ணுக்குத் தீபம்
    சிவனார் கோவில் ஏனைய கோவில்
    அனைத்தும் ஒளிர்வது சர்வாலய  தீபம்

    வீட்டிலும் தீபம் வெளியிலும் தீபம்
    பார்க்கும் இடமெலாம் பரந்திடும் ஒளியே
    ஒளியெனும் வெள்ளம் பரவியே நிற்கும்
    உள்ளம் இறையின் எண்ணமே பரவும்

    ஒளியாய் இறையைக் கண்டிடும் தத்துவம்
    உயவுடைத் தத்துவம் உண்மைத் தத்துவம்
    ஆதலால் அனைவரும் அனுதினம் தீபத்தை
    வீட்டிலே ஏற்றி போற்றியே நிற்பார்

    விளக்கை ஏற்றியே அனைத்தும் தொடங்குவோம்
    விளக்கு ஏற்றினால் மங்கலம் என்போம்
    மங்கலம் வழங்கிடும் வரமே விளக்கு
    விளக்கின் ஒளியில் தெரிவான் இறைவன்

    ஒளிவளர் விளக்கு இறைவனே ஆவார்
    உயர்வுடை தத்துவம் இறைவனே ஆவார்
    கார்த்திகை விளக்கு கசடினை அகற்றும்
    கடவுளை நினைந்து ஏற்றுவோம் விளக்கை !

    Share
  • தீபாவளித் திருநாள்  சிறப்புடை நாளே!

    தீபாவளித் திருநாள் சிறப்புடை நாளே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்த்திரேலியா

    தீயவை அகன்றால் நல்லவை மலரும்
    தீபா வளியின் தத்துவம் ஆகும்
    ஆணவ அரக்கன் அழிந்த நன்னாளே
    ஆனந்தத் தீபா வளியாய் ஆனது

    அதிகாலை அனைவரும் எழுந்துமே விடுவார்
    அக மகிழ்வுடனே நீராடி மகிழ்வார்
    புத்தாடை அணிந்து புத்துணர் வடைவார்
    அத்தனை மகிழ்ச்சியும் வந்ததாய் நினைப்பார்

    தீபா வளியில் தித்திப்பு நிறையும்
    திரும்பிய திசையெலாம் மத்தாப்புச் சிதறும்
    பட்டாசு சத்தம் பரவியே நிற்கும்
    குடும்பங்கள் எல்லாம் குதூகலம் கொள்ளும்

    தீபாவளித் திருநாள்  சிறப்புடை நாளே
    இருப்பாரும் மகிழ்வர் இல்லாரும் மகிழ்வர்
    அவரவர் ஆனந்தம் அவரவர்க்கு உரியதே
    அகமகிழ் வுறுவுதே அனைவர்க்கும் பொதுவே

    பட்டி மன்றம் பாங்காய் நடக்கும்
    பற்பல இடங்களில் இசையும் ஒலிக்கும்
    நாட்டியம் இருக்கும் நல்லுரை இருக்கும்
    முத்தமிழ் யாவும் முத்தாய் ஒளிரும்

    ஆலயம் அனைத்தும் தீபத்தில் ஒளிரும்
    அனைவரும் ஆலயம் நோக்கியே செல்வர்
    அகத்தினில் இருக்கும் அனைத்தையும் கேட்பார்
    அமைதியாய் ஆண்டவன் அடியினைப் பரவுவார்

    அம்மா அப்பா உறவுகள் சேர்ந்து
    ஆலயம் சென்றால் ஆனந்தம் பெருகும்
    அன்பும் அறமும் அகத்தில் அமர்ந்திட
    வேண்டியே நிற்பது நல் வரமாகும்

    தீபா வளியில் தீமைகள் அகன்றிட
    யாவரும் இறையை வேண்டியே நிற்போம்
    கோபங்கள் தவிர்ப்போம் குணைத்தை இருத்துவோம்
    குவலயம் நலமுற வேண்டுவோம் இறையை!

    Share
  • பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்!

    பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா

    தையில் பொங்கல் மங்கலத் தொடக்கம்
    தையில் பூசம் பற்பல சிறப்பு
    கந்தனை நினைத்து வந்தனை செய்திட
    வந்ததே தைப் பூசத் திருநாள்

    அருவமாய் இருந்தது உருவம் ஆனது
    அரனின் கனற்பொறி அதினுள் இருந்தது
    ஆதியாம் சிவனின் மைந்தனாய் வந்தான்
    அவனே கந்தனாய் ஆகியே நின்றான்

    பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்
    தேசுடைக் கந்தனை சேவிக்கும் பெருநாள்
    மாசிலா வேலினை மாதுமை கொடுத்த
    மகத்தான திருநாள் தைப்பூசத் திருநாள்

    வேலின் மகத்துவம் மேவிடும் திருநாள்
    வேலவன் சன்னதி யாவரும் குவிவார்
    காவடி எடுப்பார் கந்தனைப் பரவுவார்
    சாதிகள் கடந்து சமத்துவம் ஆகுவார்

    புதிரும் எடுப்பார் புதிதும் தொடங்குவார்
    எழுத் தறிவிக்க ஏடும் தொடங்குவார்
    தொடங்கும் அனைத்தும் துலங்கும் என்று
    எண்ணியே ஏற்றுவார் பூசத் திருநாள்

    காது குத்துவார் காரியம் தொடங்குவார்
    கந்தனை எண்ணியே யாவும் ஆற்றுவார்
    தம்மை மறந்து அலகும் குந்துவார்
    தனிப்பெரும் கருணையாய் கந்தனைப் போற்றுவார்

    தமிழும் சைவமும் போற்றிடும் திருநாள்
    சம்பந்தம் பெருமான் காட்டிடும் திருநாள்
    ஒளியாய் இருக்கும் கந்தனை யாவரும்
    உவப்புடன் ஏற்றியே போற்றிடும் திருநாள்

    Share
  • பொங்கி மகிழ்வோம் போற்றுவோம் இறையை!

    பொங்கி மகிழ்வோம் போற்றுவோம் இறையை!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மார்கழி மாதம் மனமுறை மாதம்
    தேவர் விரும்பும் திருவுறை மாதம்
    சைவம் வைணவம் போற்றிடும் மாதம்
    மெய்யாம் இறையினைத் துதித்திடும் மாதம்

    இறையினைத் துதித்து எல்லோர் மனமும்
    புனிதம் ஆகியே நிற்பது தையிலே
    தையிலே வருவதோ தலைநிமிர் பெருவிழா
    அதுவே தமிழரின் ஆனந்தப் பெருவிழா

    உழவை மதிக்கும் உன்னதப் பெருவிழா
    உழைப்பை உவக்கும் உழைப்பவர் திருவிழா
    நன்றியை நவிலும் நயப்புடைப் பெருவிழா
    நல்லதை நல்கிடும் தைப்பொங்கல் நல்விழா

    சமயமும் கலக்கும் சமத்துவம் இருக்கும்
    தமிழர் யாவரும் பொங்கலைப் பொங்குவார்
    பொங்கிய பொங்கலைப் பங்கிட்டு மகிழ்வார்
    பொங்கல் என்பதே பூரிப்பைத் தந்திடும்

    நீராடி யாவரும் புத்துடை அணிவார்
    மாவிலை தோரணம் வாசலில் அமைப்பார்
    கோலம் போடுவார் கும்பம் வைப்பார்
    குத்து விளக்கினை ஒளிர்ந்திடச் செய்வார்

    அப்பா அம்மா தாத்தா பாட்டி
    அனைவரும் மகிழ்வாய் அங்கே வருவார்
    பொங்கற் பானையை அலங்காரம் செய்து
    மங்கலம் பொங்கென அடுப்பினில் வைப்பார்

    பாலினை யாவரும் பகிர்ந்துமே விடுவார்
    பொங்கும் பாலினை பொறுமையாய்ப் பார்ப்பார்
    வெண்ணுரை தள்ளிடப் பாலுமே பொங்கும்
    யாவரும் அரிசியைப் பானையில் இடுவார்

    சர்க்கரை தேனைப் பொங்கலில் சேர்ப்பார்
    சந்தோஷம் அங்கே நிறைந்துமே பொங்கும்
    அத்தனை பேரும் பொங்கலைப் படைத்து
    ஆதவன் நோக்கி அர்ப்பணம் செய்வர்

    ஆலயம் நோக்கி அனைவரும் செல்வார்
    ஆனந்தம் மகிழ்வு அமைந்திட வேண்டுவார்
    எண்ணிய காரியம் ஏற்றமாய் அமைந்திட
    இறையின் திருவடி வீழ்ந்தே வேண்டுவார்

    உறவுகள் வருவார் உவகை கொள்ளுவார்
    பெற்றும் கொடுத்தும் பெருமகிழ் வெய்துவார்
    பெரியவர் ஆசியைப் பெற்றிட யாவரும்
    அருகினில் சென்று ஆவலாய் நிற்பார்

    ஆசிகள் பெற்றவர் அனைத்தையும் பெற்றதாய்
    அக மகிழ்வுடனே ஆனந்தம் அடைவார்
    பெருநாள் திருநாள் பெறுமதி என்பதை
    உணரும் போது உள்ளம் உவக்கும்

    பொங்கற் பண்டிகை பூரிப்பை ஊட்டும்
    எங்கும் பட்டாசு மத்தாப்பும் இருக்கும்
    பாடலும் இருக்கும் பட்டிமன்றமும் இருக்கும்
    யாவரும் மகிழும் கோலமும் பெருகும்

    இல்லார் இருப்பார் யாவரும் பொங்குவார்
    இல்லம் அனைத்தும் பொங்கல் இருக்கும்
    பொங்கல் என்பது மங்கலம் ஆகும்
    பொங்கி மகிழ்வோம் போற்றுவோம் இறையை

    Share
  • உளமகிழத் தீபாவளி வரவெண்ணி நிற்போம்!

    உளமகிழத் தீபாவளி வரவெண்ணி நிற்போம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் … ஆஸ்திரேலியா

    மத்தாப்பும் பட்டாசும் மனமெல்லாம் மகிழ்வும்
    தித்திக்கும் இனிப்பும் சேர்ந்துமே நிறைய
    இத்தரையில் மலர்கின்ற ஏற்றமிகு நாளாய்
    தீபாவளித் திருநாள் சிறப்பாக வருகிறதே

    பெரியவரும் மகிழ்வார் சிறியவரும் மகிழ்வார்
    உரிமையுடன் உறவுகள் பரிசுகளும் தருவார்
    மூத்தோரை வணங்கி ஆசிகளும் பெறுவார்
    முதல்வனாம் இறையைப் பணிந்துமே நிற்பார்

    புத்தாடை அணிவார் புத்துணர்வு  பெறுவார்
    சித்தமதில் எத்தனையோ தேக்கியே வைப்பார்
    அத்தனையும் நிறைவேற ஆண்டவனை வேண்டி
    அனைவருமே ஆலயத்தை நோக்கியே செல்வார்

    இந்துக்கள் எல்லோரும் கொண்டாடி மகிழும்
    இனிமைத் திருநாளாய் இத்திருநாள் அமையும்
    இருப்பாரும் மகிழ்வார் இல்லாரும் மகிழ்வார்
    இல்லார்க்கும் இருப்பார்க்கும் இத்திருநாள் இனிக்கும்

    பட்டுடுத்தி மகிழ்வார் பலபேர் இருக்கின்றார்
    பட்டின்றி மகிழ்வாரும் பலபேர்  இருக்கின்றார்
    கஷ்டமுடன் உழைத்துக் களிப்புறுவார் களிப்பே
    காசினியில் நிறைவான களிப்பாக அமையும்

    ஏழை பணக்காரென எத்தினமும் பார்ப்பதில்லை
    இல்லார்க்கும் விடிகிறது இருப்பார்க்கும் விடிகிறது
    தீபாவளித் திருநாள் சிறப்பான திருநாளே
    யாவர்க்கும் நன்னாளாய் அதுவமைந்து நிற்கிறதே

    நரகாசுரன் மடிந்தான் எனவெண்ணி நிற்கின்றோம்
    நாளும் பொழுதுமாய்ப் பலவசுரர் வருகின்றார்
    அசுரன் மடிந்தநாள் அதுதானே தீபாவளி
    ஆனாலும் அசுரர்கள் எப்படித்தான் வருகின்றார்

    கோபமும் வெறுப்பும் கொள்ளையும் கொலையும்
    பகையும் பதற்றமும் பாரெல்லாம் நிறைகிறதே
    அன்பும் அரவணைப்பும் அறமும் ஆன்மீகமும்
    நின்று நிலைத்தாலே நித்தமுமே தீபாவளி

    இறையெண்ணி நிற்போம் இயலார்க்கு ஈவோம்
    மறைகூறும் அனைத்தும் மனமேற்றி வைப்போம்
    குறைகளைந்து நிற்போம் கோவிலுக்குச் செல்வோம்
    உளமகிழத் தீபாவளி வரவெண்ணி நிற்போம்

    Share
  • கழல்பணிந்தேன் துர்க்கா காத்திடுவாய் நீயே !

    கழல்பணிந்தேன் துர்க்கா காத்திடுவாய் நீயே !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஈரமொடு வீரம் எனக்கருள வேண்டும்
    இரக்கமொடு கருணை எனக்கீய வேண்டும்
    காதலொடு நாளும் கவிபாடி உந்தன்
    காலடியில் நிற்க கருணைபுரி தாயே

    மனமமரும் இருளைப் போக்கிடுவாய் தாயே
    மாயவலை சிக்கா காத்திடுவாய் தாயே
    சினமான தீயை ஒழித்திடுவாய் தாயே
    தினமுமுனைப் பாடிப் பரவுகிறேன் தாயே

    நோயணுகா வண்ணம் காத்திடுவாய் தாயே
    தாயாகி நிற்கும் தயைவுடைய துர்க்கா
    பேயாகி பித்தாகி மனமலையா வண்ணம்
    பேரொளியே துர்க்கையே காத்திடுவாய் தாயே

    மனநோயை நீக்கும் மருத்துவனும் நீயே
    மனவழுக்கைப் போக்கும் மருந்துமே நீயே
    கவலையிலா மனத்தைத் தந்திடுவாய் தாயே
    கழல்பணிந்தேன் துர்க்கா காத்திடுவாய் நீயே

    நோயற்ற வாழ்வைத் தந்திடுவாய் தாயே
    நுடங்காத உள்ளம் கொடுத்திடுவாய் தாயே
    தாயான உன்னை நானெண்ணி நிற்க
    தயைபுரிவாய் தாயே துர்க்கை அம்மாவே

    Share
  • உழைப்பவர் உழைப்பைப் போற்றிடும் உயர்தினம் !

    உழைப்பவர் உழைப்பைப் போற்றிடும் உயர்தினம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் …. ஆஸ்திரேலியா

    மேதினம் என்பது விடி வெள்ளியாகும்
    வியர்வையைச் சிந்துவார் உயர்வினைக் காட்டும்
    சாதனை நாயகர் தம்மையே போற்றிட
    பூதலம் மீதிலே பூத்தநல் நாளாகும்

    உழைப்பினை நல்குவார் உழன்றுமே இருந்தனர்
    உழைப்பினை உறுஞ்சுவார் உயர்ந்துமே நின்றனர்
    உழைப்பினை நல்குவார் உணர்வுடன் எழுந்தனர்
    உழைப்பினை உறுஞ்சுவார் ஓரமாய் ஒதுங்கினர்

    முதலைக் கொடுத்தவர் முதலையாய் நின்றனர்
    முயற்சியைக் கொடுத்தவர் முடங்கியே கிடந்தனர்
    முயற்சியைக் கொடுத்தவர் எழுந்தனர் கனலாய்
    முதலைகள் அனைத்தும் சுருண்டுமே போயின

    உண்ணும் உணவும் உடுக்கும் உடையும்
    உறையும் வீடும் உழைப்பின் வரமே
    மண்ணைப் பொன்னாய் மாற்றிடும் உழைப்பை
    மாநிலம் நினைக்கவே மேதினம் வந்தது

    எத்தனை பேர்கள் இரத்தம் சிந்தினர்
    அத்தனை பேரும் உழைக்கும் மைந்தர்கள்
    உழைப்புக் கூதியம் உயர்வாய் கேட்டால்
    கேட்டவர் வாழ்வை கிழித்துமே போட்டனர்

    களைப்பே இன்றி உழைப்பைக் கொடுத்தார்
    கண்ணீர் கடலில் மூழ்கியே நின்றார்
    காசினைக் கருத்தில் கொண்டுமே இருந்தார்
    கடும் உழைப்பதனை காணா நின்றார்

    முதலை ஆண்டவர் முதலாளி ஆகினார்
    தொழிலில் இருந்தவர் துவண்டே கிடந்தார்
    வளமும் உரமும் வழங்கிய மக்கள்
    உளமும் மடிந்து உழன்றே கிடந்தார்

    எத்தனை பொருட்கள் எத்தனை உழைப்பு
    எத்தனை வேதனை இடருடன் வாழ்க்கை
    இத்தரை உழைப்பவர் சித்தத்தில் வைப்போம்
    இடரினைப் போக்கிட எல்லோரும் இணைவோம்

    ஓடப்பராய் இருந்தார் உழைத்திடு மக்கள்
    உயரப்பராய் வந்தால் உயர்ந்திடும் உழைப்பு
    வாடப்பராய் இருப்பார் மனவுறுதி கொண்டால்
    வையகமே வாகைசூடி வரவேற்ற நிற்கும்

    வையகமே வியந்து பார்த்திட்ட நாளாய்
    வருடத்தில் மேதினமே மலர்ந்துமே இருக்கு
    மேதினத்தில் வியர்வையெலாம் வெற்றியையே காட்டும்
    மேதினத்தில் உழைப்பாரை அரவணைத்து மகிழ்வோம்

    உழைப்பவர் கரங்கள் ஓங்கிட வேண்டும்
    உழைப்பவர் வாழ்வும் உயர்ந்திட வேண்டும்
    உழைப்பவர் உழைப்பை மதித்திடு நாளாய்
    உலகமே போற்றுது மேதின நாளை

    Share
  • சித்திரைத் திருநாள்!

    சித்திரைத் திருநாள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தைமகள் வந்தாள் தழுவியே நின்றாள்
    கைநிறைய அள்ளித் தந்துமே நின்றாள்
    தெய்வீகம் நிறைந்தது தெளிவுமே தந்தாள்
    தித்திப்பாய் பொங்கலை ஆக்கியே நின்றாள்

    என்பின்னே சித்திரை வருகிறாள் என்றாள்
    ஏற்றபல உங்களுக்கு அளித்திடுவாள் என்றாள்
    தைமகளின் வார்த்தை தடவியே கொடுத்தது
    தளர்வகன்று சித்திரயை  வரவேற்க நின்றோம்

    சித்திரை என்றதும் நித்திரையே ஓடிவிடும்
    புத்துடுப்பு மத்தாப்பு புதுநினைப்பே எழுந்துவிடும்
    கொண்டாட்டம் குதூகலம் கூடவே சேர்ந்துவிடும்
    அத்தனையும் சித்திரைதான் அளிப்பதற்கு வந்துநிற்கும்

    தைமகளே வருடத்தில் முதல்வந்து நின்றாலும்
    சமயமது சித்திரையை முதல்மகளாய் ஆக்கிருக்கு
    சித்திரையை முன்னிறுத்திப் பஞ்சாங்கம் அமைகிறது
    அத்தனையும் சித்திரையை அடியொற்றித் தொடர்கிறது

    பஞ்சாங்கம் பார்ப்பதும் பலன்களை அறிவதும்
    பலருக்கும் பெருவிருப்பாய் சித்திரையில் அமைந்திடுமே
    பலன்பார்த்துப் பலன்பார்த்து  பரவசத்தில் மிதப்பாரும்
    பலன்சிறக்கா முழிப்பாரும் சித்திரையில் இணைந்திடுவார்

    மருத்துநீர் என்பது சித்திரையின் சிறப்பாகும்
    தலைக்கோர் இலையும் கால்களுக்கோர் இலையும்
    வைத்ததன் மேல்நின்று மருத்துநீர் தலைவைத்து
    நீராடும் வழக்கம் சித்திரையின் முக்கியமே

    மூடப் பழக்கமென்று முகஞ்சுழிக்க வேண்டாம்
    முன்னோர்கள் சிந்தனையைப் பின்தள்ள வேண்டாம்
    இயற்கை மருத்துவத்தை இணைக்கின்ற வண்ணம்
    எல்லாமே அமைவதுதான் எம்முன்னோர் எண்ணம்

    பருவ காலங்களைப் பண்டிகையோடு இணைத்து
    வருகின்ற வகையிலே வழிவகுத்தார் முன்னோர்கள்
    கருத்தூன்றிக் கவனித்தால் கருத்தாக அமையும்
    கண்மூடிப் பார்த்திட்டால் கருத்தெல்லாம் சிதறும்

    சீனிப்பலகாரம் தித்திக்கும் சோகிப் பலகாரம்
    அச்சுமுறுக்கு அமர்க்களமாய் அருமைச் சுவையோடு
    இல்லாரும் செய்வார் இருப்பார் கூடச்செய்வார்
    எல்லாமே சித்திரையை இன்பமாய் ஆக்கிடுமே

    கோவில்கள் எங்கும் கோலாகலமாய் இருக்கும்
    வாயில்கள் தோறும் மக்களாய் நிரம்பிடுவர்
    அபி‌ஷேகம் அலங்காரம் ஆண்டவனைக் குளிர்விக்கும்
    அடிபரவும் அடியாரை ஆண்டவனும் மகிழ்விப்பார்

    சித்திரையில் தேரோட்டம் நடக்கின்ற கோவிலெல்லாம்
    திரண்டடியார் சென்றுமே தேர்வடத்தைப் பிடித்திழுப்பார்
    தேர்வடத்தைப் பிடித்திட்டால் செய்தவினை அகலுமென்று
    நம்பிக்கை மனத்திலெழ வடம்பிடித்து மனம்நிறைவார்

    சித்திரையைச் சிறப்பிக்க முத்தமிழே முன்னிற்கும்
    பட்டிமன்றம் பாட்டுமன்றம் பலவுரைகள் நிகழ்ந்திடுமே
    ஆடலொடு பாடலும் ஆனந்தம் அளித்திடுமே
    அங்குமே சித்திரையும் முத்திரையாய் ஜொலித்திடுமே

    ஆன்மீகம் இருக்கும் அழகுக்கலை இருக்கும்
    அறிவியலும் இருக்கும் ஆசாரமும் இருக்கும்
    அனைத்தையும் உள்ளடக்கி அமைகின்ற திருநாளாய்
    சித்திரைத் திருநாள் சிறப்பாக மலர்கிறதே

    கருத்துடைய சித்திரையைக் களிப்புடனே பார்ப்போம்
    கைகோத்து அனைவருமே களிப்புற்று நிற்போம்
    கையணைத்து உறவுகளைக் களிப்படைச் செய்வோம்
    கற்கண்டாய், சர்க்கரையாய்க் களிசொற்கள் பகிர்வோம்

    Share
  • காரைக்கால் அம்மையை கருத்தினிலே வைப்போம் !

    காரைக்கால் அம்மையை கருத்தினிலே வைப்போம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண் ….. ஆஸ்திரேலியா

    மாநிலத்தில் மொழிவளமோ வகைவகையாய் இருக்கிறது
    அவற்றுக்குள் தமிழொன்றே தனித்துவமாய் மிளிர்கிறது
    காதலை, வீரத்தைக் கண்ணியமாய்ச் சொன்னாலும்
    கடவுளையும் பக்தியையும் கருவாக்கி உயர்கிறதே

    எம்மொழியும் பக்தியினை எட்டியும் பார்க்கவில்லை
    பக்தியெனும் பெருவெளியில் பயணிக்க நினைக்கவில்லை
    எம்மொழியாம் தமிழொன்றே பக்தியினைப் பற்றியது
    இதனாலே எங்கள்மொழி தனித்துவமாய் ஒளிர்கிறது

    பக்தியை இலக்கியமாய் பாருமே பார்ப்பதற்கு
    படைத்திட எங்கள்மொழி பாருக்குள் உயர்வாகும்
    பக்திக்குள் மூழ்கிவிட்டால் பரவசமே உருவாகும்
    பரவசத்தை அளிக்குமொழி பாங்குடைய தமிழாகும்

    பக்தி இலக்கியத்தைத் தொடக்கிய முன்னோடி
    காரைக்கால் ஈன்றெடுத்த கனிவான பெண்ணாவார்
    மாதரில் மாணிக்கமாய் மாசில்லா மங்கையாய்
    மாதவத்தின் உருவமாய் வந்துமே பிறந்திட்டார்

    நல்லறமாம் இல்லறத்தில் நங்கையும் இணைந்திட்டாள்
    நற்கணவன் கைப்பிடித்து நலமுடனே வாழ்ந்திட்டாள்
    தெய்வமது சித்தத்தால் சீரான குடும்பமதில்
    தித்திக்கும் மாங்கனி திசைமாறச் செய்ததுவே

    கைப்பிடித்த கணவன் கண்ணான மனைவியைச்
    சந்தேக மனத்துடனே சஞ்சலத்துள் ஆழ்த்தினான்
    மாங்கனியின் மாயத்தை மனமேற்க மறுத்ததால்
    மாதரசி மங்கையினை மனமொதுக்கி அகன்றிட்டான்

    பதறித் துடித்தாள்  பரமனையே பற்றினாள்
    அழகுடைக் கோலத்தை அருவருப்பாய் எண்ணினாள்
    யாருமே விரும்பாத கோலத்தை மனங்கொண்டாள்
    பேயுருவைப் பெருவிருப்பாய்ப்  பெற்றிட்டாள் இறைவனிடம்

    காரைக்கால் அம்மை பேயுருவாய் மாறினார்
    கணக்கில்லாப் பேரன்பை கடவுளிடம் காட்டினார்
    பக்திப் பெருவெளியில் பயணிக்கத் தொடங்கினார்
    பரமனைப் பாடினார் பக்திக்கும் வித்திட்டார்

    அன்னைத் தமிழுக்கு அம்மையார் பெருஞ்சொத்தே
    முன்னவராய் இருந்து இணைத்திட்டார் பக்தியினை
    பக்தி இலக்கியமாய் மலர்வதற்கு வித்திட்டார்
    பசுந்தமிழும் அதையேற்றுப் பார்போற்ற எழுந்ததுவே

    இசையாலே தமிழ்பாடி இறைதுதிக்க வழிசெய்த
    எங்கள்தமிழ் முன்னோடி காரைக்கால் அம்மையே
    அவர்வகுத்த அடியொற்றி அவர்பின்னே வந்தடியார்
    ஆண்டவனைப் பண்ணோடு அன்புருகப் பாடினரே

    அந்தாதி தந்தார் பதிகமும் தந்தார்
    திருவிரட்டை மணிமாலை சிறப்பாகத் தந்தார்
    பதிகத்தைத் தொடக்கிப் பக்தியைக் காட்டி
    அந்தாதிக் கன்னையாய் ஆண்டவனைப் பாடினார்

    பக்திப் பாமரபில் முன்னோடி  அம்மையார்
    பதிகத்தைத் தொடக்கியவரும் காரைக்கால் அம்மையார்
    வெண்பாவைத் தொட்டார் விருத்தத்தை காட்டினார்
    பண்பாடிப் பக்தியிலே பலர்தொடர வழிவகுத்தார்

    இசைத் தமிழால் பாடுதற்கு இவரே வித்தாவார்
    பண்பாடிப் பக்தியினைப் பரப்புதற்கும் முன்னோடி
    நாயன்மார்  பண்ணோடு  நற்றமிழில் பாட
    காரைக் காலம்மையே தனிப்பாதை வகுத்தார்

    சைவத்தை மேலாகத் தன்னகத்தில் கொண்டார்
    தமிழ்ப் பக்தியியக்கத்தின் முன்னோடி ஆனார்
    பேயுருவை உவந்தேற்ற பெரும்பெண்ணும் ஆனார்
    பெம்மானே அம்மையென அழைத்த பெண்ணுமாவர்

    இறையுணர்வை இலக்கியத்தில் இணைத்த பெண்ணாவார்
    இறையடியில் இருப்பதை இன்பமாய் ஏற்றார்
    பேயுருவில் கயிலாயம் சென்ற பெண்ணாவார்
    பெம்மானின் கோவிலில் இருப்பிடமும் பெற்றார்

    காரைக்கால் அம்மையைக் கருத்தினிலே வைப்போம்
    காலத்தால் அழியாத கவிமரபை அளித்தார்
    திருமுறைகள் வருவதற்குத் திறவுகோல் அவரே
    அவர்தினத்தைப் புனிதமாய் அனைவருமே நினைப்போம்

    Share
  • சிவனைக் குறிக்கும் சிறந்திடு விரதம்!

    சிவனைக் குறிக்கும் சிறந்திடு விரதம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    ஆடும் அரவும் அழகுடை நிலவும்
    ஓடும் நதியும் உயர்சடை வைத்தான்
    காடுடை சுடலைப் பொடியினை எடுத்து
    தோடுடை செவியன் சுந்தரம் ஆக்கினான்

    அடியார் அழைத்தால் அங்கே நிற்பான்
    அன்பே அவனின் அகமா யிருக்கும்
    ஆசை யடங்கினால் அருகே அணைவான்
    மாசை அகற்றும் மாணிக்கம் ஆவான்

    ஆலம் வந்தால் அதையும் ஏற்பான்
    ஆழ அன்பை அணைத்தே நிற்பான்
    சீலம் உடையார் சிந்தை வருவான்
    சிவனே என்றால் சிறப்பும் தருவான்

    கால காலனைக் காலால் உதைத்தான்
    கருத்துடைப் பக்தனை மீட்டான் கருணையால்
    பாலன் அழுதான் பாலும் கொடுத்தான்
    பக்தர் துடித்தால் பதறுவான் பரமன்

    ஆதியும் இல்லான் அந்தமும் இல்லான்
    அவனின் முன்னே ஆணவமும் எழுந்தது
    பிரமன் தானே பெரியவன் என்றான்
    திருமால் மறுத்துத் தானே என்றான்

    ஆணவம் அடக்க அரனும் எண்ணினான்
    அவர்களின் முன்னே ஜோதியைக் காட்டினான்
    ஜோதியின் முடியை ஜோதியின் அடியைக்
    காணுவார் பெரியர் ஒலித்தது பேரொலி

    ஒலியைக் கேட்டவர் ஒளியைத் தேடினார்
    அடியையும் காணா முடியையும் காணா
    அவரவர் தேடியே அலைந்துமே நிற்க
    ஆனந்த ஜோதி அரனாய் ஒளிர்ந்தது

    பிரமன் திருமால் பெம்மானைப் போற்றினர்
    மருளுடை எண்ணம் மறைந்தே போனது
    அருளுடன் சிவனும் அணைத்தே நின்றான்
    ஆணவம் பொடிப்பொடி ஆகியே நின்றது

    பெருமான் சிவனைப் பேணியே நிற்க
    உருகியே அடியார் விரதம் இருப்பார்
    சிவனைக் குறிக்கச் சிறந்திடு விரதமாய்
    அமையும் விரதம் சிவராத்திரி ஆகும்

    அடியை முடியைத் தேடிய சம்பவம்
    சிவனின் ராத்திரி செப்பியே நிற்கும்
    ஆணவம் போக்கிடும் அற்புத விரமாய்
    சினார் ராத்திரி சிறப்புடன் திகழும்

    விஞ்ஞான உண்மைகள் நிறைந்ததே விரதம்
    மெய்ப்பொருள் அதனுடன் இணைவதே தத்துவம்
    ஆன்மீகம் அறிவியல் அமைவதே சமயம்
    அனைவரும் அகத்தில் இருத்துதல் அவசியம்

    பசித்தும் விழித்தும் இருப்பது விரதம்
    பசித்து விழித்து இருப்பது பக்குவம்
    பசித்தும் விழித்தும் பக்குவம் மிகுந்தால்
    பரமனைப் பார்க்கும் பதவியும் கிடைக்கும்

    உண்மைகள் என்றும் உயிர்ப்புடன் இருக்கும்
    உண்மைகள் என்றுமே உறங்கிட மாட்டா
    உயர்வுடை உண்மைகள் இறைவனே ஆகும்
    உணர்வெலாம் இறையினை இருத்தியே வைப்போம்

    Share
  • பொங்கலோ பொங்கல் !

    பொங்கலோ பொங்கல் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தைபிறந்து விட்டாலே தங்கமே தங்கம்
    தளர்வகன்று போயிடும் தங்கமே தங்கம்
    பொங்லென்று சொன்னாலே தங்கமே தங்கம்
    புத்துணர்வு பிறந்திடுதே தங்கமே தங்கம்

    நன்றி சொல்லும் பெருவிழாதான்  பொங்கலாகுமே
    நாளுதிக்கும் சூரியயனே நமக்கு ஆதாரம்
    உழவதனை உளமிருத்தும் உயர்ந்த விழாவே
    உயர்வான எங்களது பொங்கல் விழாவே

    வாசலிலே கோலமிட்டு வாழை கட்டியே
    மஞ்சளிஞ்சி கரும்புமதில் சேர்த்துக் கட்டியே
    தோரணமாய் அலங்கரித்து வீட்டு வாசலில்
    தொடங்கிடுவோம் பொங்கிவிட விளக்கு ஏற்றியே

    வீட்டிலுள்ள அனைவரு மதிகாலை எழும்பியே
    விரைவாக நீராடி புத்தாடை அணிந்துமே
    பொங்கல் பொங்க புறப்படுவோம் பூரிப்பாகவே
    மங்கலமாய் பெற்றவர்கள் மகிழ்ந்து நிற்பார்கள்

    பொங்கற்பானை அடுப்பினிலே ஏற்றி வைத்ததும்
    அக்கினையை மூட்டிவிடப் பாட்டி வந்திடுவா
    அரிசி பருப்பு சர்க்கரை அனைத்தையையுமே
    அம்மாயங்கே ஒழுங்காய்க் கொண்டு வந்திடுவா

    பானையிலே பாலையூற்ற தாத்தா வந்திடுவார்
    பாட்டியோடு அம்மாவோடு நாமும் ஊற்றுவோம்
    பொங்கிவரும் வேளைக்காக காத்து நின்றுமே
    அரிசியுள்ளே போடுதற்கு ஆவல் கொள்ளுவோம்

    பொங்கிவரும் பாலைப்பார்க்க பூரிப் பெய்துவோம்
    அரிசியினை கையெடுத்து அனைவரும் போடுவோம்
    பொங்கிலினை பெருவிருப்பாய் மனதில் எண்ணியே
    பொங்கலோ பொங்கலென்று சொல்லி மகிழுவோம்

    அரிசிவெந்த பின்னரம்மா சர்க்கரை போடுவார்
    அக்கம்பக்கம் பொங்கல்மணம் காற்றில் கலந்திடும்
    பானைநிறைய பொங்கலெம்மை பார்த்துச் சிரித்திடும்
    அம்மாவுடனே  பொங்கலினை இறக்கி வைத்திடுவார்

    கோலமிடை வாழையிலை அம்மா வைத்துமே
    பொங்கலினை பக்குவமாய் படைத்து மகிழுவார்
    அந்தவேளை ஆதித்யன் ஆசி வழங்குவான்
    அனைவருமே அவனை வணங்கி ஆசிவேண்டுவோம்

    தம்பிதங்கை பட்டாசை வெடித்து மகிழுவார்
    தாத்தாபாட்டி  தூரநின்று கேட்டு மகிழுவார்
    அப்பாவம்மா அனைத்தையுமே பார்த்து மகிழுவார்
    ஆனந்தமாய் பொங்கலங்கே பொங்கி ஒளிருமே

    தாத்தாபாட்டி கால்களிலே விழுந்து வணங்குவோம்
    ஆசிகூறி காசுதந்து வாழ்த்தி மகிழுவார்
    அப்பாவம்மா ஆசிதந்து அணைத்து நிற்கையில்
    ஆனந்தமே எங்களுக்குள் பெருகி நின்றிடும்

    பொங்கலன்று அனைவருமே கோவில் செல்குவோம்
    எல்லோர்வாழ்வும் சிறப்புறவே இறையை வேண்டுவோம்
    ஆலயத்தில் பக்குவாய் அனைத்தும் நடந்திடும்
    ஆண்டவனின் நினைப்புடனே வீடு திரும்புவோம்

    பொங்கலினை மற்றவர்க்கும் கொடுத்து மகிழுவோம்
    தருகின்ற பொங்கலினை ஏற்றும் மகிழுவோம்
    உறவுகளைப் பார்ப்பதற்கு உவப்பாய்ச் செல்குவோம்
    உடனிருந்து பொங்கலினை உண்டு மகிழுவோம்

    பொங்கலெனும் வார்த்தையது பொருள் பொதிந்தது
    மங்கலத்தை மாநிலத்தில் பதித்து நிற்பது
    எங்கணுமே இன்பமதைப் பெருக்கி நிற்பது
    இனிப்போடு உறவுகளை இணைக்கச் செய்வது

    Share
  • பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்!

    பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    “தைபிறந்தால் வழிபிறக்கும்” என்று தமிழர்கள் சொல்லுவது வழக்கமாகும். அந்த வழக்கம் மனத்தில் புத்துணர்வையும் , உத்வேகத்தையும் , உவந்தளிக்கும்.

    “தை பொறந்தால் (பிறந்தால்) வழி பிறக்கும் தங்கமே தங்கம்
    தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்
    முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
    முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
    குத்து விளக்கேத்தி வச்சு (வைத்து) தங்கமே தங்கம்

    கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்”  – என்னும் இந்தப் பாடல் மனமகிழ்ந்த பொங்கலை, மலர்ந்த பொங்கலை, மண்வாசனை தரும் பொங்கலை, உயிர்த்துடிப்பான பொங்கலை, கலாசாரம் பண்பாடு கலந்த பொங்கலை நினைவூட்டிகிறதல்லவா?  இப்படி ஒரு காலம் இருந்தது. ஆனால் அப்படி ஒரு காலம் வரவேண்டும் என்பதுதான் எல்லோரினதும்  பேராவலும் ஆகும்.

    “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்
    உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”

    “உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பில்லைக் கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு”

    “சேற்றில் கால் வைக்காவிட்டால் சோற்றில் கைவைக்க முடியாது” இவையெல்லாம் பொங்கலை மன மிருத்தும் அமுத வாக்குகள்.

    பொங்கல் என்றாலே உற்சாகம் பிறந்துவிடும். புத்தாடை வாங்குவது! புதுப்பானை வாங்குவது! சர்க்க ரையும், தேனும், நெய்யும், பருப்பும், பாலுந்தான் முன்னால் வந்து நிற்கும். கூடவே பழங்களும், கரும்பும் சேர்ந்து விடும்! இவை அனைத்தும் ஒன்றாய் இணையும் விழாவினைப் பற்றி அறிவது அவசியம் அல்லவா? அந்த விழாவின் உட்கருத்தை அறிவோமா ? வாருங்கள் !

    தைமாதத்தின் தொடக்கத்தில் இந்த விழா ஏன் கொண்டாடப்படுகிறது ? இந்த விழாவினை யாரை மையப்படுத்திக் கொண்டாடுகிறோம் ? இந்த விழாவின் அடிப்படை எதனை உணர்த்துகிறது ? இந்த விழாவில் தமிழரின் எத்தகைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன?  பொங்கல் என்றால் புது உடைகள் வாங்குவோம். பொங்குவோம். தொலைக்காட்சியில் நடக்கும் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம். அத்துடன் பொங்கல் விழா நின்றுவிடும். இதுவல்ல பொங்கல் !

    உழைப்பு என்பதுதான் சமுதாயத்தின் அடிப்படை. அந்த உழைப்பில் பங்கு கொள்ளும் அனைவரும் வாழ்த்தப்பட வேண்டியவர்களே. உழைப்புக்கு உதவும் மனிதர்கள், உழைப்புக்கு உதவிடும் விலங்குகள்,உழைப்புக்கு உதவிடும் கரு விகள் கவனத்தில் கொள்ளப்படுவதுதான் சமூதாய அறமாகும். அப்படியான ஒரு அறத்தினை வலியுறுத்தத்தான்  தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் என்பதை மனமிருத்தல் வேண்டும்

    உலகிலே  உயிர்வாழ்வதற்கு வெப்பம் முக்கியமானது. காற்று முக்கியமானது நீர் முக்கியமானது. உணவு  முக்கியமானது. இவற்றுக்கெல்லாம் இறை அம்சம் கொடுத்து அவற்றை சமூகத்தின் உயர் நிலையில் வைக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. இவையாவும் தைப்பொங்கலுடன் இணைவதால்த்தான் பொங்கல் சிறப்பான விழாவாக அமைகிறது எனலாம்.

    விவசாயம் என்பதுதான் சமூக வாழ்வுக்கு முதுகெலும்பாகும். விவசாயம்  கொண்டு வருகின்ற பொருட் களால்த்தான் சமூகத்தில் மக்களின் அன்றாட வாழ்வே சிறப்பாகிறது. அந்த விவசாயத்தைச் செய்பவன் இந்தப் பொங்கலில் போற்றப்படுகின்றான். அந்த விவசாயிக்கு உதவும் மாடுகள் பூசிக்கப் படுகின்றன. விவசாயத்தை செழிப்பாக்கும் சூரியன் வணங்கப்படுகிறது. விவசாயத்துக்கு உதவும் கருவிகள் மதிக்கப்படுகின்றன. இதனால் தைப்பொங்கல் என்பது நன்றியினை நவில்கின்ற பெருவிழா அமைகிறது என்பது முக்கிய கருப்பொருள் எனலாம்.

    தையில் அறுவடை செய்த புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பாலும் சர்க்கரையும் சேர்த்து மண்பானையில் பொங்கி மகிழும்பொழுது பொங்கி வரும் பாலினைப் பார்த்து குடும்பத்தில் உள்ளார்கள் “பொங்கலோ பொங்கல்”  என்று மகிழ்ந்து நிற்கும் நிலையினை எங்கள் பிள்ளைகளின் உள்ளத்தில் இருக்கச் செய்வது மிக இன்றியமையாததாகும்.

    கலப்படம் இல்லாமல்யாவுமே உழைப்பின் பயனாக வந்த அரிசி, பால், சர்கரை, கரும்பு, இஞ்சி, மஞ்சள், வாழை, மாவிலை, இவையெல்லாம் மகிழ்ச்சியின் அடையாளங்கள். மனித சமூகத்தின் மாண்பின் அடையாளங்கள் எங்களின் பண்பாட்டின் அடையாளங்கள். இவைகள் தைப்பொங்கலில் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு இல்லை எனலாம்.

    கூட்டுறவின் மகத்துவம் தைப்பொங்கலின் சிறப்பாகும். மனிதனும் விலங்குகளும் கூடி உழைத்து அதன் பயனாக வெளிப்படும் ஒரு கூட்டுறவுத் திருநாள் என்றுகூட தைப்பொங்கலை எடுத்துக் கொள்ளலாம். வருடத்தின் தொடக்க மாய்வரும் தையினை மங்களகரமாக வரவேற்க வேண்டு மென்று எண்ணி பொங்கல் திருநாளினை ஏற்படுத்திய எங்களின் முன்னோர்களை நாங்கள் வாழ்த்தாமல் இருந்திட முடியுமா? வருடத் தொடக்கத்தில் மனதில் ஏற்படும் எண்ணங்கள்தான் அந்த வருடம் முழுவதையும் மகிழ்வுடன் வாழவைக்கும் என்று எண்ணிய உளவியல் சிந்தனையை உவந்தேற்ற வேண்டாமா ?

    பொங்கலின் முதலில் மார்கழியின் நிறைவில் போகி என்றொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி என்றால் பழைய விஷயங்களை பழைய பொருட்களைக் களைந்து விடுவதாகும். அடுத்து பொங்கல் வருகிறது. பழைய பொருட்களை எரித்து விடுவதைத்தான் போகியில் காண்கிறோம், உண்மையில் இதன் அர்த்தம் அதுவன்று. எங்கள் மனதிலுள்ள பொறாமை வஞ்சகம். பொய், கபடு, சூது, வாது, இவற்றை யெல்லாம் ஞானம் என்னு. தீயில் பொசுக்கி மனதைத் தூய்மை ஆக்கி புத்தாடை உடுத்து புதுப்பொங்கலை சுவையாக உண்டு புத்துணர்வு பெற்று நிற்கவேண்டும் என்பதுதான் இதன் தாற்பரியம் எனலாம்.

    பொங்கலுக்கு அடுத்து மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கும், பால் தந்து எம்மை வாழ்வித்த பசுக்களுக்கும் நன்றி நவிலும் நாளாக இது அமைகிறது. அடுத்த நாள் காணும் பொங்கல் அமைகிறது. உற்றார் உறவினரை, பெரியவர்களைக் கண்டு அவர்களின் வாழ்த்தினை ஆசியினைப் பெற்றுக் கொள்ளும் நாளாக இந்த நாளை அமைத்து மகிழ்கின்றார்கள்.

    மாட்டுப்பொங்கல், போகித்திருநாள், காணும்பொங்கல் இவைபற்றி எல்லாம் நகரித்தில் வாழ்கின்றவர்களுக்கோ.  புலம்பெயர் பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கோ தெரியவருவது குறைவாகும். பொங்கலைக் கூட குக்கரில் பொங்கி தாங்கள் இருக்கும் வீட்டின் அடுப்படியில் வைத்து கரண்டியால் இரண்டு கரண்டி அவசர அவசரமாக வாயில் போட்டுவிட்டு வேலைக்கு ஓடும் நிலையினைதான் பொங்கல் நன்னாளில் காண்கின்றோம். மாடிக் குடி இருப்புகளில் வாழ்கின்றவர்களின் பொங்கலை நினைத்துப் பார்க்கவே பரி தாபமாகவே இருக்கும்.

    சமயம் கடந்த விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் விளங்குகிறது என்பதுதான் இந்த விழாவின் மிகச் சிறப்பு எனலாம். உலகில் வாழுகின்ற தமிழர்கள் – கிறீஸ்தவராயினும், இந்துக்களாயினும் , தைப் பொங்கலை மகிழ்வுடன் “பொங்கலோ பொங்கல்” என்று பொங்கும் மனத்துடன் கொண்டாடி மகிழ்கி றார்கள். சமயச்சாயம் பூசப்படாத தமிழர் திருநாளாய்  தைப்பொங்கல் திகழ்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமையான விஷயம் அல்லவா !  நன்றி நவிலும் விழா ! உழைப்பாளரின் உன்னத விழா ! கூட்டுறவின் விழா ! மதபேதமற்ற மகோன்னத விழா ! எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் நிறை என்னும் விழா ! எனவே பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் கொண்டாடி அகமகிழ்வோம் வாருங்கள்.

    Share
  • புது வெளிச்சம் காட்டப் புதுவருடம் வரட்டும்

    புது வெளிச்சம் காட்டப் புதுவருடம் வரட்டும்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நல்லன நடக்க வேண்டும்
    நாடெலாம் சிறக்க வேண்டும்
    வல்லமை பெருக வேண்டும்
    வாழ்வது உயர வேண்டும்

    தொல்லைகள் தொலைய வேண்டும்
    தோல்விகள் அகல வேண்டும்
    இல்லது என்னும் வார்த்தை
    இன்மையாய் ஆதல் வேண்டும்

    போரெனும் வார்த்தை மண்ணில்
    பொசுங்கியே போதல் வேண்டும்
    மாசுடை  ஆட்சி மண்ணில்
    மடிந்துமே ஆக வேண்டும்

    ஊழலும் ஒழிய வேண்டும்
    உண்மையே நிலைக்க வேண்டும்
    வாய்மையின் வழியில் மக்கள்
    மண்ணிலே நடக்க வேண்டும்

    உழைபவர் உயர வேண்டும்
    நல்லூதியம் கிடைக்க வேண்டும்
    கொடுப்பவர் பெருக வேண்டும்
    குவலயம் சிறக்க வேண்டும்

    கல்வியில் உயர்வு வேண்டும்
    கசடுகள் அகல வேண்டும்
    கண்ணியம் என்றும் வாழ்வில்
    கட்டாயம் அமர வேண்டும்

    அறவழி என்னும் எண்ணம்
    அகத்தினில் அமர வேண்டும்
    அன்புதான் உயர்வு என்று
    அனைவரும் உணர வேண்டும்

    இரப்பது அகல வேண்டும்
    கொடுப்பது உயர வேண்டும்
    பொறுப்பது சிறப்பு என்று
    விருப்புடன் ஏற்க வேண்டும்

    வேற்றுமை அகல வேண்டும்
    வெறுப்புகள் ஒழிய வேண்டும்
    சமத்துவம் நிலைக்க வேண்டும்
    சன்மார்க்கம் தளைக்க வேண்டும்

    பண்பது உயரவேண்டும்
    பக்குவம் நிறைதல் வேண்டும்
    அன்பினைப் பகிர்ந்து மாந்தர்
    அனைவரும் இணைதல் வேண்டும்

    புது வருடம் அத்தனையும்
    சுமந்து கொண்டே வரட்டும்
    வரும் அனைத்தும் எங்களுக்கு
    வளங் கொடுக்க வரட்டும்

    புது வெளிச்சம் காட்டப்
    புது வருடம் வரட்டும்
    வரு வருடம் நமக்கு
    வரங் கொண்டு வரட்டும்

    Share