சித்திரைத் திருமகளை வரவேற்போம் வாருங்கள்!

0
Screenshot

Screenshot

மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

வசந்தம் வீசிட மனமெலாம் மகிழ
சித்திரைத் திருமகள் சிறப்பாக வந்திடுவாள்
அவளை வரவேற்க ஆனவற்றைச் செய்திடுவோம்
அனைவருமே வாருங்கள் அகமகிழ வரவேற்போம்

தையினை அடுத்துச் சித்திரை வருகிறது
தைபிறந்தால் வழிபிறக்கும் தமிழரது நம்பிக்கை
உழவரை உயர்த்திடும் உன்னதத் திருநாளாய்
உயர்வாக மலருவதே தைப்பொங்கல் திருநாளே

உழவினை உயர்த்தும் உன்னதத் திருநாள்
தையோடு மட்டும் தடைபட்டு நிற்கவில்லை
சித்திரையும் இணைகிறது சிறப்பான உழவோடு
அத்தனையும் பண்பாட்டின் அடித்தளமாய் அமைகிறது

தையிலும் பொங்கல் சித்திரையிலும் பொங்கல்
பொங்கலைப் பொங்கினால் பூரிப்பே கிடைக்கும்
மாவிலை தோரணம் வாசலை அலங்கரிக்கும்
மனமகிழச் சித்திரையை வரவேற்று மகிழுவோம்

பங்குனி தன்பின்னே சித்திரையைக் கூட்டிவரும்
சித்திரை பிறந்தாலே கெட்டிமேளம் ஒலித்துவிடும்
திருமணங்கள் தொடங்கும் திருவிழாத் தொடங்கும்
சிறப்பாக வசந்தம் ஊஞ்சலாய் ஆடிநிற்கும்

புத்தாடை  உடுத்துவார் புத்துணர்வு பெறுவார்
மத்தாப்பு பட்டாசு மனமகிழச் செய்யும்
இல்லங்கள் தோறும் இனிப்பான பலகாரம்
எல்லோரும் சித்திரையை ஏந்தியே மகிழுவார்

ஆலயம் செல்லுவார் ஆண்டவனைப் பணிவார்
அறிவோடு தெளிவும் அமைந்திடவே வேண்டுவார்
உறவுகளை அழைப்பார் உபசாரம் செய்குவார்
மூத்தோரை வணங்கி முழுவாசி பெற்றிடுவார்

ஈழத்தில் இருவினத்தார் கொண்டாடி மகிழ்வார்
சிங்களமும் செந்தமிழும் சித்திரையைச் சிறப்பிக்கும்
தமிழகமும் கொண்டாடும் வடநாடும் கொண்டாடும்
தனிச்சிறப்பாய் சித்திரையும் சிறப்பாக மலர்ந்துவிடும்

அறிவியலும் கலந்திருக்கு ஆன்மீகம் நிறைந்திருக்கு
சமயமொடு சன்மார்க்கம் சமத்துவம் அமைந்திருக்கு
இல்லார்க்கும் இன்பந்தரும் இருப்பார்க்கும் இன்பந்தரும்
எல்லோர்க்கும் நல்லதையே நல்கவரும் சித்திரையே

பட்டிமன்றம் பாட்டரங்கம் பாங்காக நடக்கும்
பலவறிஞர் பாடகர்கள் விருந்தளித்து நிற்பார்
ஆண்டவனின் கோவில்களில் உற்சவங்கள் நடக்கும்
ஆனந்தம் பொங்கிடவே சித்திரையும் மலரும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.