கழல்பணிந்தேன் துர்க்கா காத்திடுவாய் நீயே !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

ஈரமொடு வீரம் எனக்கருள வேண்டும்
இரக்கமொடு கருணை எனக்கீய வேண்டும்
காதலொடு நாளும் கவிபாடி உந்தன்
காலடியில் நிற்க கருணைபுரி தாயே

மனமமரும் இருளைப் போக்கிடுவாய் தாயே
மாயவலை சிக்கா காத்திடுவாய் தாயே
சினமான தீயை ஒழித்திடுவாய் தாயே
தினமுமுனைப் பாடிப் பரவுகிறேன் தாயே

நோயணுகா வண்ணம் காத்திடுவாய் தாயே
தாயாகி நிற்கும் தயைவுடைய துர்க்கா
பேயாகி பித்தாகி மனமலையா வண்ணம்
பேரொளியே துர்க்கையே காத்திடுவாய் தாயே

மனநோயை நீக்கும் மருத்துவனும் நீயே
மனவழுக்கைப் போக்கும் மருந்துமே நீயே
கவலையிலா மனத்தைத் தந்திடுவாய் தாயே
கழல்பணிந்தேன் துர்க்கா காத்திடுவாய் நீயே

நோயற்ற வாழ்வைத் தந்திடுவாய் தாயே
நுடங்காத உள்ளம் கொடுத்திடுவாய் தாயே
தாயான உன்னை நானெண்ணி நிற்க
தயைபுரிவாய் தாயே துர்க்கை அம்மாவே

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *