புரிதல் (சிறுகதை)

0

முனைவர் த. ஆதித்தன்
இணைப் பேராசிரியர்
அரிய கையெழுத்துச் சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர்-613 010.

சந்திரன் தனது ஆசிரியரின் வீட்டின்முன் சாலையோரத்தில் தனது மிதிவண்டியை நிறுத்தினான்.  நுழைவாயில் கதவின் வழியே எட்டிப்பார்த்தான்.  வீட்டுத் திண்ணையில் முன் அறையைப் பார்த்தபடி தமது வகுப்பு மாணவர்கள் முருகனும், இராமனும் நின்றிருந்தனர்.  சந்திரன் சுற்றுச்சுவர் வாயிலைத் தாண்டி உள்ளே நுழைந்தான்.

“டேய் முருகா, இராமா ரெண்டுபேரும் ஏன் வெளியயே நிக்கிறீங்க…….. உள்ளே போவோம்”? என்றபடி வீட்டினுள் சந்திரன் நுழைந்தான்.  முன் அறையில் இருந்த மேஜையில் பரிசுப் பொருள்களும், சால்வைகளும் நிறைந்திருந்தன.  ஆசிரியர் பணியாற்றிய பள்ளியின் ஆறாம்வகுப்பு மாணவர்கள் அறையில் நிறைந்திருந்தனர்.  அன்று பணி ஓய்வு பெற்றிருந்த அவர்களின் வகுப்பாசிரியர் புண்ணியகோடி நாற்காலியில் அமர்ந்தபடி மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.  அப்பொழுது உள்ளே நுழைந்த சந்திரன் சுவரில் ஒரு கையை வைத்தபடி நின்றான்.  ஆசிரியர், “சந்திரா விலகி அந்தபக்கமா நில்லுடா     கையைக் கொண்டுபோய் சுவிட்ச் போர்டு மேல வச்சிருக்க…. கரண்ட் புடிச்சுக்கப் போகுது….” என்று அதட்டினார்.  வேகமாகக் கையை எடுத்தபடி சற்று தள்ளி நின்றான்.  ஆசிரியர் சுற்றிலும் பார்த்துவிட்டு, உன் கூட்டாளிங்க எங்க என்றார்.

சந்திரன் மெதுவாக வாசலைப் பார்த்து,  “உள்ள வரலியா? எல்லோரும் இங்கதான் இருக்கிறோம்” என்றான்.  இராமன் உள்ளே வந்தான்.  அனைவருக்கும் தேநீர் வழங்க தொடங்கினார்  ஆசிரியரின் மனைவி.  அனைவரும் தேநீர் அருந்தி கொண்டிருக்கும்போது சுவர்க்கடிகாரம் ஐந்துமுறை அடித்து ஓய்ந்தது.

“சார்  மணி ஐந்து ஆகிடிச்சு.. நாங்க கிளம்புறோம்.  உங்க ஓய்வுக்காலம் நல்லா இருக்கனும் சார்..”  என்று சந்திரன் சொன்னதை அனைத்து மாணவர்களும் ஆமோதித்ததோடு, அன்று ஓய்வு பெற்றிருந்த ஆசிரியரோடு பள்ளியில் இருந்து வீடுவரை வந்த மாணவர்கள் வீடுதிரும்பத்தொடங்கினார்கள்.  ஒருமாணவன் மனதுக்குள் இருந்து வந்த பிரிவுத்துன்பத்தில் கண்கலங்கி விம்மத் தொடங்கினான்.  பிற மாணவர்கள் கண்களும் கலங்கின.

“ஸ்கூலுக்கு எதுத்தாப்புல தான வீடு இருக்கு.  நினைக்கிற போது நீங்க வந்திடலாமே.  நானும் வருவேன், எல்லோரும் நல்லா படிக்கணும்.   நல்லா வரணும்”    என்றார் ஆசிரியர்.  தொடர்ந்து பேசினால் குரல் உடைந்து நா தழுதழுக்கும் போலிருந்தது.  அடக்கியபடி புன்னகையுடன் நின்றார்.

“வாரோம் சார்” என்றபடி செல்லத்தொடங்கிய மாணவர்களை நோக்கி கைகளை அசைத்து விடைகொடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்.   மாணவர்கள் அனைவரும் சென்றிவிட்டநிலையில் திண்ணையில் தூணில் சாய்ந்து ஒதுங்கி நின்றுகொண்டிருந்த இராமன் கண்ணில் பட்டான்.

“இராமா என்னடா இங்க நிக்குற….” என்றார் புண்ணியகோடி.

“இல்ல சார் முருகனும் இங்கதான் நின்னுகிட்டு இருந்தான்.  இப்பதான் போனான்”.

“அவன் உள்ள வந்தானா …. கண்ணுல படலயே….”

“இண்ணைக்குக் காலையில முருகன் பாக்கெட்ல இருந்து பான்மசாலா பாக்கெட் விழுந்தத பார்த்திட்டு நீங்க திட்டி தீர்த்ததோட அடிச்சிங்கல சார் … அதுதான் தயங்கி நின்னுட்டான். நீங்க அடிச்சது அவன்மேல உள்ள அக்கறையிலதான்கிறத சொல்லி  அவனைத் தேத்திக்கிட்டு இருந்தேன்.  நீங்க வெளியே வர்த பார்த்ததும் உங்ககிட்ட முகத்தக்காட்டக்கூட தயங்கி ஓடிப்போயிட்டாள்…. இத தெரியப்படுத்ததான் நிக்கிறேன் சார்…” என்றான் இராமன்.

இதனைக் கேட்டதும் ஆசிரியரின் மனம் வலித்தது.  “எனக்குத் தெரியாதா என்ன…. முருகனுக்கு அந்தப் பழக்கம் கிடையாதுன்னு     ஆனா  அந்த பாக்கெட்ட வெளியில தூய்மைப் பணியாளர்கள் குப்பைப்கு வைத்திருந்த நெருப்புல போட சொல்லியும் போடாம நின்னுகிட்டிருந்தானே  அதாண்டா கோபம்”  என்றார் குற்ற உணர்வோடு.

“அந்த பாக்கெட்ட அவன் நிக்கர்பாக்கெட்ல பின்பண்ணி விட்டதோட இன்றைக்கு முழுவதும் அப்படியே இருக்கணும்னு சொன்னதுல ரொம்பவே நொந்துட்டான் சார்….”

“அப்படியே தான் வைத்திருந்தானா”?

“ஆமா சார்.  இப்பதான் ஓடிப்போகும்போது பின்ன கழட்டிட்டு பாக்கெட்டுக்குள்ள வைத்தான்”.

“என்னடா சொல்ற….. ”

“முருகன் ரெம்ப நல்லபையன் சார்.  பத்தாம் வகுப்பு படிக்கிற கோகுல்தான் காலையில் பிரேயர் முடிஞ்சு வரும்போது அவன்கிட்ட இருந்தா மாட்டிகிடுவோம்னு இவன் பாக்கெட்ல போட்டுட்டான்.  பத்தாம் கிளாஸ் டீச்சர் அவங்க பசங்கள செக் பண்றதா சொல்லியிருந்தாகளாம் சார்…. அதனாலதான்…..”

“இந்த பையன் உண்மைய சொல்லியருக்கலாம்ல…”

“பயம் சார். கோகுல் அண்ணா சாயங்காலம் கேட்கும் போது கொடுக்கணும்னு மிரட்டிட்டுவேற போனான் சார்….”

“அட பாவமே….. நாளைக்குக் காலையிலயே முருகன அவன் வீட்ல போயி பார்க்கிறேன்.  அப்பதான் என் மனது ஆறும்.  நீ பத்திரமா போயிட்டு வாடா….” என்று சிரித்தபடி வழியனுப்பினார்.  ஆனால் அவர் மனம் கனத்திருந்தது.  தனது மொத்த பணிக்காலத்தில் எந்த ஒரு மாணவனையும் இப்படி தண்டிக்காதவர், தமது கடைசி பணிநாளில் தவறிழைத்துவிட்டோமே என கண் கலங்கினார்.

••••

மறுநாள் கலையில் மழைபெய்து கொண்டிருந்தது.  மழை நிற்பது போல் தெரியவில்லை. வீட்டுத்திண்ணையில் நின்றபடி எப்பொழுது மாணவன் முருகனைப் பார்க்கலாம் என துடித்துக் கொண்டிருந்த புண்ணியகோடி மனைவியிடம்   “ரெயின் கோட்ட எடுத்திட்டு வா…  பக்கத்து ஊருவர போயிட்டு வந்திடுறேன்”, என்றார்.

வீட்டினுள் இருந்து வெளியே வந்த அவர்  மனைவி,   “இன்னயில இருந்து ஓய்வா இருப்பீங்கணு பார்த்தா….. மழையில எங்கபோறீங்க….  உங்க மழைக்கால பொக்கிசம் ரெயின் கோட்ட பிடிங்க…” என்றபடி கொடுத்தார்.

அதனை மாட்டிக்கொண்டு,  “வந்து விசயத்தைச் சொல்கிறேன்…” என்றபடி இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டார்.

••••

வீட்டு மாடியில் இருந்து கொட்டிய மழை நீருக்கு அடியில் முருகன் மகிழ்ச்சியாகக் குளித்துக்கொண்டு இருந்தான்.  வாசலில் நின்று மகனைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது தந்தை கதிர்,  “இயற்கை கொடுத்த  ஃபீரீ ஷவர்ல  ஃபிரீயா குளியல்….. செருப்பு இல்ல, துணி இல்ல இயற்கையோட இயற்கையா நீ  ஃபிரீயா ஆட்டம் போடுறத பார்க்கும்போதுதான்  தெரியுது சந்தோசத்திற்கு எதுவுமே தேவையில்லைன்னு…”     என்றார்.

எந்த கவலையுமின்றி ஆட்டம் போட்டவனுக்குத் தந்தையின் கிண்டல் பேச்சைக் கேட்டதும் வெட்கம் மேலிட்டது.  உதடுகளின் ஓரத்தில்  அரும்பிய சிரிப்பை அடக்க முடியன்றான்.  கன்னத்தில் விழுந்த சிறுகுழி அவனின் வெட்கத்தை வெளிப்படுத்தியது.  உடம்பைக் கூச்சத்தால் குலுக்கிக் கொண்டு   “அப்பா ஒரு ஐஞ்சு நிமிசம்பா”  என்றான்.

கதிர் மகனின் மகிழிச்சியான முகத்தைப் பார்த்தார். அதை கெடுக்க மனமில்லாமல்  “சரி சரி சீக்கிரமா”? என்றபடி நிமிர்ந்தார்.  வெளியே தெருமுனையில் முருகனின் ஆசிரியர் வண்டியில் வருவதைக் கண்டதும், வாசலில் உட்புறமாக இருந்த குடையினை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார்.  மதில்சுவர் தாண்டி தெருவிற்கு வந்தார்.  ஆசிரியரை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

ஆசிரியர்  புண்ணியகோடி முருகனின் வீட்டருகில் வந்துவிட்டார்.  கதிரைக் கண்டதும் தெருவோரத்தில் வண்டியை வைத்துவிட்டு,   “வணக்கம் சார்”   என்றார்.

“வணக்கம் சார்    நேற்று பணி ஓய்வு பெற்றுவிட்டதா கேள்விப்பட்டேன்.  ஓய்வுக்காலம் சந்தோசமா அமையட்டும் சார் .  கொட்டுற மழையில இந்த பக்கமா….. ஏதாவது விசயமா சார்”?

“இல்ல முருகன பார்க்கணும்னுதான் வந்திட்டு இருந்தேன்.   நேற்று என்னோட கடைசி வேலைநாள்ல பார்த்து….. செய்யாத தப்புக்கு முருகனை தண்டிச்சிட்டேன்.  அதான்…”

வெளியே அப்பா யாருடனோ பேசுவதைக் கேட்டான் முருகன்.  அது புண்ணியகோடி சாருடைய குரல்.  வேகமாக நகர்ந்து சுவர் அருகே வந்தான்.  அப்பாவிடம் ஆசிரியர் பான்மசாலா கதையை விளக்கும் சம்பவம் தொடர்ந்தது.

“என்னாச்சு சார்… பெரிய அசம்பாவிதம் நடந்தமாதிரி முகத்த வச்சிருக்கீங்க…”

“நம்ம ஸ்கூல்ல பத்தாம் வகுப்பு படிக்குற ஒருத்தனுக்கு பான்மசாலா பயன்படுத்துற கெட்ட பழக்கம் இருக்கு சார்.  நேற்று கிளாஸ்ல திடீர் செக்கிங் நடக்கபோகுதுனு தெரிந்சதும, தான் மாட்டிக்கிடக்கூடாதுன்னு அவங்கிட்ட இருந்த பான்மசாலா பாக்கெட்ட முருகனோட நிக்கர் பாக்கெட்டுக்குள்ள நைசா சொருகிவெச்சிருக்கான்.  அது தெரியாம முருகன நாலு சாத்து சாத்திட்டேன்…” என்றார் ஆசிரியர் கவலையுடன்.

கதிர் உண்மையான ஆனந்தத்தோடு, “நிஜமாவா சார். எனக்கு நின்றுபோன இதயத்துடிப்பே வந்தது போலிருக்கு”.

“என்ன சொல்றீங்க…”

“நேற்று ஆபீஸ்ல இருந்து லேட்டத்தான் வந்தேன்.  வந்ததும் முருகன பார்க்கலாம்னு போனேன்.  அவன் கும்பகர்ணன் மாதிரி தூங்கிட்டு இருந்தான்.  யூனிஃபாம்  சட்டய கூட கழட்டல.  ஆனா நிக்கர கழற்றி கையில் பிடித்தபடி தூங்கினான்.  ஒழுங்கா படுக்க வைக்கறதுக்காக நிக்கர பிடித்து இழுத்தேன்.  டொப்னு உள்ள இருந்து பான்மசாலா பாக்கெட் விழுந்தது.  எனக்கு என்னென்னமோ தோணுச்சி.  இந்தப்பழக்கம் எப்படி வந்திருக்கும்.  எப்படி திருத்தப்போறோம்னு யோசிச்சி யோசிச்சி இரத்த அழுத்தமே  ஏறிடுச்சி சார்.  அன்பாலதான் திருத்தணும்.  இத பெரிசாக்கிடக்கூடாதுங்குற பயத்துல அவங்க அம்மாகிட்டகூட சொல்லல சார்…. முருகனுக்கும் தெரியாது, இப்பதான் நிம்மதியா இருக்கு சார்.  ரொம்ப நன்றிங்க சார்…”

மழையின் வேகம் அதிகரித்தது.  முருகனின் அப்பா முகமெல்லாம் புன்னகையோடு ஆசிரியரை உள்ளே அழைத்தார்.

“வாங்க சார்… வீட்டுக்குள்ள வாங்க … சூடா ஒரு காஃபி சாப்பிடலாம்.  மழை நின்னுதுக்கப்புறம் போய்க்கலாம்”.

“பரவாயில்ல சார்.  நான் வந்த வேலையைச் சரியா முடிச்சிட்டு கிளம்புறேன்.  முதல்ல உங்க பையன் முருகன பார்க்கணும்”.

“வாங்க சார்…. கொட்டுற மழையில முருகன் குளிச்சிட்டு இருக்கான்…” இதனைக் கேட்டதும் மீண்டும் முருகன் மாடியில் இருந்து விழும் மழைநீரில் பெரும்வெட்கத்தோடு குளியலைத் தொடர்ந்தான்.

கதிரும், ஆசிரியரும் பேசிக்கொண்டே வீட்டின் முற்றத்திற்கு வந்தனர்.  முருகன் ஆசிரியரைப் பார்த்ததும் நாணினான்.  அவரிடம்,

“நீங்க அப்பாகிட்ட பேசுனதைக் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன் சார்…. என்னய புரிஞ்சுகிட்டதே போதும்சார்…” என்றபோது ஆசிரியர் புரிந்து கொண்டாரே என்ற நிம்மதியும், நன்றியும், சிறுவனுக்கே உரிய வெட்கமும் ததும்பி வழிந்தன.

கதிர் முருகனிடம், “இப்பதான் முழுமையா தெரிஞ்சுகிட்டார் சார்…” என்றபடி சிரித்தார்.

“உங்க அப்பா சொன்னது உன் நல்ல மனச மட்டும் இல்ல…. இந்த மழை குளியல்ல உன்னோட மொத்த லட்சணத்தையும் பார்த்ததுதான்”, என்ற ஆசிரியரின் கேலிப் பேச்சைக் கேட்டதும் அவன் இதழ்களில் அரும்பிய சிறுபிள்ளைத்தமான புன்னகை, சூழலை அழகாக மாற்றியது.

மேலிருந்து கொட்டும் மழைநீரின் குளிரும், ஆசிரியரின் கேலிப்பேச்சும் சேர்ந்து முருகனுக்கு உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு பரவியது. அவனது சிலிர்ப்பு குளிரால் வந்ததா, தம்மை முழுமையாகத் தெரிந்துகொண்டார்கள் என்ற மகிழ்வால் வந்ததா, அல்லது சட்டென ஏற்பட்ட வெட்கத்தால் வந்ததா என சொல்லமுடியாதபடி குறுநகையோடு நின்றான் முருகன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.