Kottukkali

அண்ணாகண்ணன்

கொட்டுக்காளி – இந்த ஒன்றரை மணிநேரப் படத்தில் கடைசி 13 நிமிடங்கள் மட்டுமே கதை. இதற்கு முந்தைய 76 நிமிடங்களும் இந்த இடத்திற்கு வந்து சேருவதற்கான நீண்ட பயணத்தைச் சலிக்கச் சலிக்கக் காட்டியிருக்கிறார்கள்.

பெண் வேற்றார் ஒருவரைக் காதலிக்கிறார் என்றால், அந்த வேற்றார் ஏதோ மருந்து மாயம் செய்து பெண்ணை வசப்படுத்தியுள்ளனர். அதனால் தான் அவள் நம் பேச்சைக் கேட்கவில்லை என அவள் குடும்பத்தினர் நினைக்கின்றனர்.

மருந்து மாயத்தால் விளைந்த காதலைச் சாமியார் அழிக்கிறாராம். அந்த நினைவுகளே இல்லாமல் செய்துவிடுவாராம். அதன் பிறகு அவள் குடும்பத்தினர் சொல்லும் ஆணை விரும்பத் தொடங்கிவிடுவாளாம். இதற்காக வேறு ஒருவரை விரும்பும் அன்னா பென்னை இந்தச் சாமியாரிடம் அழைத்து வருகிறார்கள். அவளுக்குச் சூரியைத் திருமணம் முடிக்க வேண்டும் என்பது குடும்பத்தினர் விருப்பம்.

இதை அந்தச் சாமியார் எப்படிச் செய்கிறார் என்று காட்டுகிறார்கள். பெண்ணின் முன்கழுத்து, பின்கழுத்து, வயிறு, அடிவயிறு, பின்னிடுப்பு என உடல் முழுவதும் அழுத்திப் பிடிக்கிறார். திருநீறு பூசித் தடவுகிறார். எலுமிச்சம் பழத்தை உச்சந்தலையில், கழுத்தில், தொப்புளில் வைக்கிறார். வாயில் குழல் வைத்து ஊதுகிறார். உச்சந்தலையில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தேய்க்கிறார். கடைசியாக, சேவலைப் பலி கொடுக்கிறார். உங்கள் பெண்ணிடத்தில் இருந்த மருந்தை அகற்றிவிட்டேன். இனி நீங்கள் அடித்து விரட்டினாலும், இவள் உங்கள் காலடியில் கிடப்பாள் என்கிறார்.

இவர் செய்வதைப் பார்த்தாலே இவர் போலி சாமியார் என்று தெரிகிறது. இதைப் பார்க்கும் சூரி, அன்னா பென்னை இவரிடத்தில் காட்ட வேண்டுமா என யோசிக்கும் இடத்தில் படம் நிறைவடைகிறது.

போலி சாமியார் எனத் தலைப்பு வைத்து, இந்தப் படத்தை வேறு கோணத்தில் எடுத்திருக்கலாம். இவர் மருந்தை எடுத்த பெண்கள், உண்மையிலேயே தங்கள் காதலை மறந்துவிட்டார்களா என ஆராய்ந்திருக்கலாம். போலி சாமியாரின் தந்திரங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கலாம். காவல் துறையில் புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்கச் செய்திருக்கலாம். இப்படியெல்லாம் செய்திருந்தால், சமூகத்துக்கும் இவற்றை நம்பும் மக்களுக்கும் எத்தகைய பயன் விளைந்திருக்கும் என யோசித்துப் பார்க்கலாம்.

இவற்றையெல்லாம் செய்யாமல், முதல் 76 நிமிடங்கள் ஷேர் ஆட்டோவிலும் இருசக்கர வாகனங்களிலும் வளைந்து வளைந்து சென்றுகொண்டே இருப்பதைக் காட்டுகிறார்கள். இது சுவாரசியமாகவும் இல்லை. சமூகத்திற்குப் பயன் உள்ளதாகவும் இல்லை. வாழ்வியலைக் காட்டுகிறோம் என்றாலும் திரும்பத் திரும்ப ஒரே விதமான காட்சிகளை நீண்ட நேரம் காட்டுவது, நேயர்களுக்குச் சலிப்பையே தரும். இதன் மூலம் பல்லாயிரம் பேரின் நேரத்தை வீணடித்துவிட்டார், இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ். தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனும் இதற்கு உடந்தையாய் இருந்திருக்கிறார்.

கொட்டுக்காளி என்ற பெயர், நன்றாக இருக்கிறது. சேவல், இதில் ஒரு பாத்திரமாகவே உடன் வருகிறது. அன்னா பென், வெறித்த பார்வையோடு உணர்வுகளை அலட்டாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். சூரி இயல்பாக நடத்திருக்கிறார். ஆனால், காதல் பாடலை முணுமுணுத்த காரணத்துக்காக, அன்னா பென்னையும் உடன் வந்தவர்களையும் அவர் அடித்து வெளுப்பது, பலவீனமான காட்சி. அதற்கு உரிய காரண வலு, அதில் இல்லை.

இதைக் கலைப் படம் என்பதைவிட, ஆர்வக் கோளாறு எனலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.