மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண், ஆஸ்திரேலியா
வண்ண வண்ண மத்தாப்பு
வகை வகையாய்ப் பட்டாசு
எண்ண வெண்ண நாவூறும்
இனிப்பு நிறை பட்சணங்கள்
கண் எதிரே உறவினர்கள்
கலகலப்பைக் கொண்டுவர
மண்மகிழ மனம் மகிழ
மலர்ந்து வா தீபாவளி !
பெருநோயின் தாக்கத்தால்
பெருந்தாக்கம் விளைந்திருக்கு
தெருவெல்லாம் களையிழந்து
உருவுடைந்து நிற்கிறது
வருங்காலம் தனையெண்ணி
மக்கள் மனம் தவிக்கிறது
வாடும் நிலை போயகல
வந்து நிற்பாய் தீபாவளி !
புத்தாடை மனம் இருக்கு
புதுத்தெம்பு வரவேண்டும்
சொத்தான சுற்றமெலாம்
சுகங்காணும் நிலை வேண்டும்
நித்தியமாய் வாழ்நாளில்
நிம்மதியும் வர வேண்டும்
நீள் சுகத்தைச் சுமந்தபடி
நீ வருவாய் தீபாவளி !
மனக் கலக்கம் போக்குதற்கு
வழிகொண்டு வந்துவிடு
மாசகன்று மருள் அகல
வரங்கொண்டு வந்துவிடு
மனை எல்லாம் மங்கலங்கள்
மீண்டும் வர வந்துவிடு
மனமகிழ விருந்து தர
வந்து நிற்பாய் தீபாவளி !
உளமுடைந்து நிற்போர்க்கு
உயிர்ப்பூட்ட வந்துவிடு
வளமிழந்து நிற்பாரை
நிலையுயர்த்த வந்துவிடு
நிலமெங்கும் நிம்மதியே
நிலவிவிட வந்துவிடு
நலன்மிக்க செய்தியுடன்
வந்துநிற்பாய் தீபாவளி !


Leave a Reply