Chinmayi dhee arr

அண்ணாகண்ணன்

முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ என்ற பாடலைச் சின்மயி, தீ ஆகிய இருவரின் குரல்களிலும் கேட்டேன். சின்மயி பாடியதே சிறப்பு எனப் பலரும் எழுதியதையும் படித்தேன். இது ஒரு வகையில் கலை மதிப்பீடாக வடிவம் பெற்றதைக் கண்டு மகிழ்ந்தேன்.

இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிக இனிது. குழுவினரின் சேர்ந்திசையும் சிறப்பு. பின்னணி வாத்திய இசையும் மாறவில்லை. சின்மயி, தீ ஆகிய இருவருக்கும் இவை அனைத்தும் ஒன்றாகவே இருந்தன. ஆனால், சின்மயி வழங்கிய பாட்டனுபவம் தனி இனிமை உடையதாக இருக்கிறது. காரணம், அவர் பாத்திரத்தை மனத்தில் இருத்தி, சூழலுக்குள் தன்னை நிறுத்தி, வரிகளை உள்வாங்கி, அந்த உணர்வுடன் பொருந்தி, அனுபவித்து லயித்துப் பாடினார். அதுவே அனைவர் மனங்களையும் கொள்ளை கொண்டது.

இதில் வேறு ஒரு கோணமும் இருக்கிறது. தீ பாடியதை ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்றுப் படத்திலும் இதர இசை ஓடைகளிலும் அங்கீகரித்துவிட்டார். தீயின் வடிவத்தில் இன்னும் ஆழம் போதவில்லை, பாவம் சரியில்லை என்பதைச் சுட்டிக் காட்டி, அது சரியாக வரும் வரை ரஹ்மான் அவரை மீண்டும் பாடச் செய்திருக்க வேண்டும். ஆனால், இது போதும் என ஏற்றுக்கொண்டதால் பாடலின் அனுபவத்தில் குறை ஏற்பட்டது. இது, தீயின் பிழை இல்லை. ஏ.ஆர்.ரஹ்மானின் பிழை. இவர் மட்டுமில்லை, இதர இசையமைப்பாளர்களும் இந்த பாவத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஆனால், இங்கு ரஹ்மானின் நல்ல குணம் ஒன்றையும் பாராட்ட வேண்டும். இளையராஜா பங்கேற்ற சில மேடை நிகழ்ச்சிகளில் அவர் பாடகர்களையும் வாத்திய இசைக் கலைஞர்களையும் பாடலை இடையில் நிறுத்தி, திருத்துவதைக் கண்டேன். இது என் பாட்டு, இது இப்படித்தான் இருக்க வேண்டும் எனப் பாடல் முழுமை அடைவதற்குள் பற்பல குறுக்கீடுகள். பாடல் ஒரு கூட்டு முயற்சி என்ற உணர்வை விடுத்து, நானே பெரியவன் என்ற எண்ணம் அவருள் ததும்பி இருக்கக் கண்டிருக்கிறேன். முத்தமழைப் பாடலில் தீயின் வடிவத்தைச் சின்மயி அழகுற மேம்படுத்திப் பாடியிருக்கிறார். இதை ஏ.ஆர்.ரஹ்மான் கைத்தட்டிப் பாராட்டுவதைக் கண்டேன். இப்படி மனம் திறந்து சிறந்ததை ஏற்றுக்கொண்டால், அடுத்த பாடலில் இந்தப் பிழை நேராமல் ரஹ்மான் கவனமாக இருப்பார்.

சின்மயி அர்ப்பணிப்பு உள்ள பாடகர். தான் பாட வேண்டிய பாடலைப் பல முறைகள் பாடிப் பார்த்து, தொடர்ந்து மேம்படுத்துகிறார். அந்தப் பாத்திரத்துடன் மனம் ஒன்றிப் பாடுகிறார். அவரது ஆற்றலும் ஆளுமையும் ஒருசேர இந்த மேடையில் வெளிப்பட்டுள்ளன. இவரிடமிருந்து இந்த இயல்புகளைப் புதிய பாடகர்கள் கற்க வேண்டும்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு சிலிர்த்து எழுந்துள்ள சின்மயியின் உன்னதம், நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற பாரதியின் வரிகளை நினைவூட்டுகிறது. இதே எழுச்சியை ஓவியத்தில் ரோஹிணி மணியிடமும் நடனத்தில் ருக்மிணியிடமும் காண்கிறேன். வீறு மிகுந்த உங்களுக்குத் தோல்வி என்பதே கிடையாது. இன்னும் இன்னும் வெற்றிகள் பெறுக! புதிய நட்சத்திரங்களாய்ப் புவி மீது எழுக!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.