பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 16
63 நாயன்மார்கள் வரலாறு – 15 முருக நாயனார்



மன்னுதிருப் புகலூர்வாழ் முருகனாரா
மறையவர்கோ வர்த்தமா னீச்ச ரத்தார்
சென்னியினுக் கழகமரு மலர்கள் கொய்து
திருமாலை புகழ்மாலை திகழச் சாத்திக்
கன்னிமதிற் கழுமலநா டுடைய நாத
காதன்மிகு மணங்காணுங் களிப்பினாலே
யின்னல்கெட வுடன்சேவித் தருளான் மீளா
திலங்கு பெரு மணத்தரனை யெய்தி னாரே.
சோழநாட்டில் திருப்புகலூர் என்ற ஊர் எல்லையில்லாப் புகழ் கொண்ட ஊர். அப்பரடிகள் பன்னெடுநாட்கள் தங்கித் தொண்டு செய்து வந்த ஊர். சித்திரை சதயத் திருநாளில் பூம்புகளூர் புண்ணியன் திருவடி சார்ந்த இடம். நம்பி ஆரூரருக்கு, செங்கல் தங்கக் கட்டியாக மாறிய அற்புதம் நிகழ்ந்த இடம். இங்கிருந்த நாயனார் திருமடத்தில் சம்பந்தர், அப்பரடிகள், சிறுத்தொண்டர், திருநீலநக்க நாயனார் தங்கியிருந்ததாகச் சேக்கிழார் பெருமான் பாடியருளினார். இந்து சமய ஆய்வு மாநாடு நடைபெற்ற இடம் இது. இத்தகைய சீர்மிகு திருப்பதியில் தோன்றியவர் முருக நாயனார் எனும் பெரியார். மறையவர் குலத்தில் தோன்றியவர் இவர். முப்போதும் சிவத்திருமேனி தீண்டும் பேறு பெற்றவர். ஞான நெறியில் நின்ற இவர் சிவபெருமான்பால் உருகும் மனத்தால் வழிபாடு செய்யும் பேராளர். கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்கின்ற நான்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிலே இட்டுக்கொண்டு வந்து, தனியிடத்திலிருந்து, அறுவகையான திருமாலைகள் கட்டி, அத்தலத்திலுள்ள வர்த்தமானீச்சரம் என்னும் ஆலயத்தில் அருள்பாலிக்கின்ற பரமசிவனுக்குச் சாத்தி அருச்சனை செய்தும், பஞ்சாட்சர மந்திரத்தை ஓதியும் வழிபடுபவர்.
ஆன பெருமை வளஞ்சிறந்த அந்தண்
புகலூர் அது தன்னில்
மான மறையோர் குல மரபின்
வந்தார் முந்தை மறைமுதல்வர்
ஞான வரம்பின் தலை நின்றார்
நாகம் புனைவார் சேவடிக் கீழ்
ஊனம் இன்றி நிறை அன்பால்
உருகு மனத்தார் முருகனார்.
புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை யீசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே.
என்பது திருமந்திரம்.
பூவொடு நீர் சமந்தேத்தி என்பார் அப்பரடிகள்.
பூக்கை கொண்டு அரண் பொன்னடி போற்றிலார்
காக்கைக்கே இறையாகி கழிவாரே என்பார் அப்பர்
ஞானசம்பந்தப் பெருமானை தம் நண்பராகப் பெற்றவர் முருக நாயனார். இவர்தம் மலர்த் தொண்டை ஞானசம்பந்தர் தம் தேவரத்தில் போற்றினார். முருக நாயனார் பெருமான் அலங்கரித்து தூர நின்று பார்த்துப் பார்த்து மாற்றியமைத்து கண்கள் குளிரக் கண்டு களிப்பவராம் இந்நாயனார்.
இப்படி நாளும் நாளும் மலர் தொண்டு செய்து ஞானசம்பந்தப் பெருமான் திருமண நாளில் அப்பெருமானோடு சிவசோதியில் கலந்தார்.
முருக நாயனார் புராணம் சொல்லும் கருத்து
பூக் கொய்து மாலைதொடுத்துச் சிவனுக்குச் சாத்தல் என்பது பெரும் புண்ணியமாம். சிவபெருமானுக்கு உரியனவெனச் சிவாகமங்களில் விதிக்கப்பட்ட பூக்களை, மெய்யன்போடு விதிப்படி கொய்து, பலவகைப்பட்ட மாலைகள் செய்து, சிவனுக்குச் சாத்தி அருச்சனை செய்தலும், பஞ்சாட்சரம் செபித்தலும், மிகச்சிறந்த புண்ணியமாம்.
மரப்பூக்கள் – மந்தாரம், கொன்றை, சண்பகம்
செடிப்பூக்கள் – நந்தியாவட்டம், அலரி, மல்லி
கொடிப்பூ – சம்பங்கி, சாதிமுல்லை
அறுவகை மாலைகள்
கருக்கிக் கட்டுவது இண்டை
இணைத்துக் கட்டுவது மாலை
தண்டிற்கட்டுவது கண்ணி
தொகுத்துக் கட்டுவது தொடை
பிணைத்துக் கட்டுவது பிணையல்
கோர்ப்பது கோவை
என நால்வகைப் பூக்களையும் அறுவகையாகத் தொடுத்து ஆறு காலமும் அலங்கரித்து வழிபாடு செய்வார் முருக நாயனார். மலர் வழிபாட்டிற்கு இன்றியமையாதது.
நிலைபெறுமா றெண்ணுதியே னெஞ்சே நீவாநித்தலுமெம் பிரானுடைய கோயில்புக்குப்
புலர்வதன்மு னலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்று
மலைபுனல்சேர் செஞ்சடையெம்மாதீ யென்று மாரூரா வென்றென்றே யலறா நில்லே.
பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டர னாம நவில்கிலா
ராக்கைக் கேயிரை தேடி யலமந்து
காக்கைக் கேயிரையாகிக் கழிவரே.
என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களானும்,
முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ்
சித்தனே செல்வத் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீ
ரத்தனே யடியே னாதரித் தழைத்தா லதெந்துவே யென்றரு ளாயே.
என்னும் திருவாசகத்தானும்,
நிலத்திற் றிகழ்ந்த நறுமலரு நீருற் பவித்த போதெவையும்-
புலத்தி னழுந்தா வன்பினொடும் போதானந்தன் கழற்க ணிந்தோர்-
மலத்தி னநாதி முத்தன்மல வயிரி யுறையுஞ் சிவலோகத்-
தலத்திற் புகுந்து நலத்தகைய தலைவராகி நிலவுவரால்.
என்னும் சிவபுண்ணியத் தெளிவானும் உணரலாம்.
இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இம்முருக நாயனார். இவர் விதிவழுவாது சிவனிடத்து இடையறாத மெய்யன்போடும் இப்புண்ணியத்தைச் செய்தமையாலேயே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குத் தோழராகிய பெரும்பேற்றைப் பெற்றவரானார்.
ஏந்து முலகுறு வீரெழி னீலநக் கற்கு மின்பப்
பூந்தண் புகலூர் முருகற்குந் தோழனைப் போகமார்ப்பைக்
காந்துங் கனலிற் குளிர்ப்படுத் துக்கடற் கூடலின் வாய்
வேந்தின் றுயர்தவிர்த் தானையெப் போதும் விரும்பு மினே.
என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருவந்தாதியிற் போற்றுவதைக் காணலாம்.
திருச்சிற்றம்பலம்.
