Tag: குறுங்கதை

  • அகதியும் அதிதியும்

    -கே.எஸ்.சுதாகர்

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    தேவன் ஒருவாறு கனடா வந்து சேர்ந்து விட்டான். அதற்கு அவன் கொடுத்த விலை மிகப் பெரியது.

    பல நாட்கள், நாடுகள். பட்ட கடனை அடைத்து, ஏழு வருடங்களில் தகப்பனாரைக் கூப்பிட்டான்.

    வந்த மறுவாரம் தகப்பனிற்கும் மகனுக்கும் சண்டை.

    “நான் என்ன உன்னைப் போல அகதியாகவா வந்தனான்? எயாப்போட்டிலை எனக்கு இருந்த வரவேற்பு. வெல்கம் ரு கனடா எண்டு சொல்லித்தானே உள்ளேயே விட்டவன்” என்றார் தந்தை.

    Share
  • நிறங்கள் – ஒரு பார்வை

    மாதவன் இளங்கோ

    nirangal

    அது நான் தினந்தோறும் சென்றமர்ந்து ஓய்வெடுக்கும் பூங்கா.

    காற்றோடு மரத்தின் இலைகள் உராயும் சத்தம், மழலைகள் உரக்கக் கூச்சலிட்டு விளையாடும் மகிழ்ச்சியின் சத்தம், காதலர்களின் உதடுகள் எழுப்பும் காதல் சத்தம், பறவைகள் சில என் வெகு அருகாமையில் எதையோ கொத்தித் தின்று பசிமுறிக்கும் சத்தம், அருகேயொரு விமான நிலையம் இருப்பதால் சில நிமிடங்களுக்கொருமுறை விமானங்கள் காற்றை ஊடுருவும் சத்தம் என அத்தனையும் கலந்து எனக்கு அன்றாடம் இலவச இசைக்கச்சேரி தான்!

    அன்றைக்கு சுரீரென அடித்த வெயிலோடு சேர்ந்துகொண்டது சிறுதூறல்! அதன் விழைவாய், இசைக் கச்சேரியில் இன்னொரு புதிய வாத்தியம் இணைந்திற்று! அழகான இசை, மிதமான வெயில், மிதமான மழை. ஆகா! இதுபோதும் எனக்கு இன்றைய மாலைக்கு! வெயிலும் மழையும் விட, இந்த ‘மிதம்’, அதுதான் சிறப்பு. கடும் வெயிலும், கடும் மழையும்  யாருக்குப் பிடிக்கும்? மிதம் தான் இதம்.

    வெயிலுக்கும் மழைக்கும் இடையே சிலமணித்துளிகள் நான் சிக்குண்டு   லயித்துக் கிடந்த போது, என் செவிகள் ‘சிறுவர்கூட்ட வாத்திய அமைப்பில்’ ஏற்பட்டதொரு பெருமாற்றத்தைக் கண்டுகொண்டு மேலும் கூர்மையானது.

    ‘வானவில்’ ‘வானவில்’ ‘வானவில்’ என்று அந்த மழலைகளின் ஆரவாரத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி?

    வானவில்! நான் அறிவேன். ஏழு நிறங்கள் அதற்கு. ஊதாவும், கருநீலமும், நீலமும், பச்சையும் மஞ்சளும், ஆரஞ்சும் சிவப்பும் என ஏழு நிறங்கள்!

    ஏழு வெள்ளைப் பிரம்புகளுக்கு வெவ்வேறு வண்ணந்தீட்டி ஒன்றன் மீதொன்றாய், அழகாய் அடுக்கி, வளைத்து வில்லாக்கினாற்போல் இருக்கும் இந்த வானவில்!

    எனக்கு நிறங்கள் தெரியாது. விளக்கினாலும் புரியாது. எனக்கு ஒளி தெரியாது. விளக்கினாலும் புரியாது. ஆனால் எனக்கு உணர்வுகள் தெரியும்! எனக்கு ஒலி புரியும்!

    நிறங்களும் உணர்வுகளுமா? என்ன தொடர்பு? தொடர்பில்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு இந்தத் தொடர்பு தேவைப்படுகிறது. ஏனென்றால் எனக்கு வேறு வழியில்லை. எனக்குப் புரிய வைக்க முயற்சித்து பல மேதைகளே தோற்றுப்போனதால், எனக்கு புரியவைக்க நானாகவே செய்துகொண்ட ஒரு ஏற்பாடுதான் இந்த நிறங்களும் உணர்வுகளும்.

    கோபம், சோகம், மகிழ்ச்சி, பயம், வெறுப்பு, வியப்பு, எரிச்சல் என்று ஒவ்வொரு உணர்வும் ஒவ்வொரு நிறம் எனக்கு.

    கோபம் வருகையில் எனக்குள் ஏற்படும் உணர்வின் நிறம் சிவப்பு. யாரேனும் சிவப்பு என்றால், என் மனம் உடனே  அதை கோபம் என்று குணப்படுத்திக் காட்டும் அதனால் எனக்கு சிவப்பு என்றாலே எப்போதும் சிறிது நடுக்கம் தான்!

    பச்சை தான் எனக்கு நிரம்பப் பிடித்த நிறம். உங்களுக்குப் பச்சை. எனக்கு மகிழ்ச்சி. மகிழ்ச்சியை யாருக்குத் தான் பிடிக்காது. யாரேனும் பச்சை புல்வெளிகள் என்றாலே, எனக்குள் மகிழ்ச்சி பிறக்கும். நகரங்களில் இப்போதெல்லாம் புல்வெளிகளை உணரமுடிவதில்லை. இதற்காகவே கிராமங்களுக்கு பலமுறை செல்வதுண்டு, உங்கள் பச்சையை உணர்வதற்கும், என்னுடைய மகிழ்ச்சியை காண்பதற்கும்.

    பல நேரங்களில் கோபத்திற்கும் மகிழ்ச்சிக்கும் இடையே இருந்து கொண்டு மஞ்சள் நிறத்தைக் காண்பதுண்டு. சூரியன் மஞ்சள் நிறம் என்று கூறுகிறார்கள். சில நேரங்களில் அது உக்கிரமாய் வாட்டுகையில் சிவப்பை உணர்வேன்.

    ஊதாவுக்கு  வெறுப்பு, கருநீலத்து சோகம் என்று இப்படி பல ஒப்பீடுகள். சில  சமயம் இருவேறு அல்லது பல்வேறு உணர்வுகளைக் கலந்து வேறு சில நிறங்களையும் காண்பதுண்டு. கோபமும் சோகமும் கலக்கும் போது எனக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பு தோன்றும்.

    இன்னும் எத்தனையோ உணர்வுகள். எத்தனையோ நிறங்கள்…

    அத்தனை நிறங்களையும் சரிவிகிதத்தில் கலந்தால் வெள்ளை பிறக்கிறது என்கிறார்கள். பச்சைக்கு அடுத்து எனக்கு வெள்ளை மிகவும் பிடிக்கும். வெள்ளை எனக்கு தூய்மை. யாரேனும் எனக்கு உதவும்போதெலாம் வெள்ளையை உணர்வேன்.

    வெள்ளை நிறமற்ற நிலை இல்லை என்றால் சிலரால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்கிறார்கள். வெள்ளை எல்லா நிறங்களும் உள்ளடக்கிய நிலை. ஆனால், எனக்கு இது நன்றாகப்  புரிகிறது. எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கிய நிலை வெள்ளை உணர்வு நிலை. அது ஒளியின் நிறம் என்று கூறுகிறார்கள். ஞானிகளைப் பற்றி எண்ணும்போதெல்லாம் நான் வெள்ளை நிறத்தை உணர்வேன். சில சமயங்களில் நானும் ஞானியாவதுண்டு!

    அது அனைத்தையும் உள்ளடக்கிய நிலை.

    இதெல்லாம் உங்களுக்குப் புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இது நிறங்களைப் பற்றிய என்னுடைய பார்வை. அதில் தவறு இருந்தால் மன்னிக்கவும். எத்தனையோ விஷயங்களைப் பற்றிய உங்களின் பார்வை எனக்கு விளங்கியதே இல்லை. ஆயினும் அதற்காக உங்கள் மீது நான் கோபம் கொண்டதே இல்லை.

    கருப்பு எனக்கு – தீவினை அல்லது தீங்கு! கருப்பு நிறமல்ல என்று கூறுகிறார்கள். அது நிறமற்ற நிலை. கருப்பை வெள்ளைக்கு எதிர் என்கிறார்கள்! எனவே அது மனத்தூய்மையற்றவர்களின் நிறமாகத்தான் இருக்கவேண்டும். அது துரோகிகளின் நிறம்; கொலைகாரர்களின் நிறம்! படுகொலைகளைப் பற்றி கேள்விப்படும்போதெல்லாம், நான் கருப்பை உணர்கிறேன்.

    உணர்வது மட்டுமல்ல, காணவும் செய்வேன்!

    ஆமாம், என்னைப் போன்ற பார்வையற்றவர்கள் காணமுடிந்தது அந்தக்  கருப்பு மட்டுமே! அது தீங்கின் நிறம்! இந்த இயற்கை எங்களுக்கு இழைத்த தீங்கின் நிறம்.

     

     

    Share
  • சுருட்டிக்கொள்ளாத வால்

    மாதவன் இளங்கோ

    அந்த உயர்ரக நாயை சமீபத்தில் ஒரு நாய் கண்காட்சியில் வாங்கினேன். நாக்கைத் தொங்கவைத்துக்கொண்டும், வாலை ஆட்டிக்கொண்டும், பாசத்துடன் என் அருகில் வந்து நின்ற அதன் கருப்புநிற கண் அழகிலும் அதன் சுறுசுறுப்பிலும் மயங்கி அதை வாங்கிவிட்டேன். இருப்பினும் அந்த வாலை ஒழுங்காக கவனிக்கத் தவறிவிட்டேன்.

    நல்ல நாய்தான். ஆனால், அந்த வால்?

    அந்த நாய்க்கு ‘ரேகோ’ என்ற பெயர் வைத்தேன். ரேகோ அதிபுத்திசாலித்தனமான நாய் என்றும், அதற்கு பிஸ்கட் மற்றும் மாமிசம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று நாயை விற்றவன் கூறினான். பிஸ்கட் தருகிறேன் என்றால் போதும் எதையும் செய்துவிடும். பந்தைத் தூக்கிப் போடுவேன், ஓடிச்சென்று கவ்விக்கொண்டு வரும். பிஸ்கட் தருவேன். அமைதியாய் உட்கார் என்பேன், உட்காரும். பிஸ்கட் தருவேன். நான் தேடிக்கொண்டிருந்த செருப்பை கூட ஒருமுறை கண்டுபிடித்துக் கொண்டு வந்தது. பிஸ்கட் தந்தேன். அதன் அறிவைப் பற்றி நண்பர்களிடம் பெருமையோடு பேசினேன்.

    ஆனால், அந்த வால்?

    அது ஏன் எப்போது பார்த்தாலும் சுருண்டுகொள்கிறது? ‘வாலை சுருட்டிக்கொள்ளாதே’ என்றேன். கேட்கவில்லை. ‘பிஸ்கட் stressதருகிறேன்’ என்றேன். கேட்கவில்லை. என் மீதான மரியாதையும், அன்பும் பிஸ்கட் தரும் வரையில் மட்டும் இல்லை, நான் இடும் கட்டளைகள் அதற்குப் பிடித்ததாகவும் இருக்கும் வரையில் தான் என்று புரிந்து கொண்டேன்.

    அன்பாக எடுத்துச் சொன்னேன். கேட்கவில்லை. கெஞ்சினேன். சாட்டை செய்யவில்லை. வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். அதன் நான்கு கால்களிலும் விழுந்து கதறினேன். ம்ஹும்! பயனில்லை. கோபம் கொண்டு அடித்தும் நிமிரவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

    வகைவகையான பிஸ்கட்டுகள் வாங்கித் தந்தேன். அத்தனையும் தின்றுவிட்டு வாலை சுருட்டிக்கொண்டு, வாயைத் திறந்து, நாக்கைத் தொங்கப்பொட்டுக்கொண்டு எப்போதும் போல் கர்வத்துடன் என்னை நிமிர்ந்து பார்த்தது.

    நான் ஒரு சைவி. இருப்பினும் சமரசம் செய்துகொண்டு அதற்கு மாமிசத்துண்டுகளை நானே சென்று வாங்கி வந்து கொடுத்தேன். மசியவில்லை. அந்த பாழாய்ப்போன வாலை நிமிர்த்த நேர்மையுடன் நான் எடுத்த அத்தனை பகீரத பிரயத்தனங்களும், என் தியாகங்களும் வீணாய்ப் போயின.

    ஒருநாள் வாலோடு ஒரு குச்சியை சேர்த்துக் கட்டி வைத்துவிட்டேன். வால் சுருண்டுகொள்ளவில்லை. அழகாக நீண்டிருந்தது. அது எனக்குப் பிடித்திருந்தது. ரசித்தேன். ‘பார், எவ்வளவு அழகாக இருக்கிறது!’ என்று அதற்கும் கண்ணாடியில் காண்பித்தேன். அது ஆமோதிப்பது போலும் இல்லாமல் மறுப்பது போலும் இல்லாமல் வித்தியாசமான பார்வை வீசியது. ஆனால், அந்தப் பார்வையில் கர்வம் மட்டும் மாறவில்லை.

    நிறைய மாமிசம் வாங்கித்தந்தேன். உயர்தர ‘சோப்பு’ போட்டு என்னுடைய பிரத்யேக குளியல் தொட்டியில் எல்லாம் வைத்து க் குளிப்பாட்டினேன். கடைக்கு அழைத்துச் சென்று வேண்டியதையெல்லாம் வாங்கித் தந்தேன். உண்மையில் ஒரு நாயை அப்படி இதுவரை யாருமே கவனித்திருக்க மாட்டார்கள். அந்த ஒரு வாரம் அவ்வளவு மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டேன். செய்ய வேண்டியதை எல்லாம் நேர்மையோடும் அன்போடும் செய்தேன்.
    இதற்கு மேல் ரேகோ வாலை சுருட்டிக்கொள்ளாது, வால் இனி நீண்டுதான் இருக்கும் என்று நம்பினேன். அது நன்றியுள்ள பிராணி ஆயிற்றே என்று எண்ணி, அன்போடு தடவிக்கொண்டே, அந்தக் குச்சியை மெதுவாகப் பிரித்து எடுத்தேன். அடுத்த நொடி சுருண்டுவிட்டது அந்த ‘திமிர்பிடித்த நாயின் திமிர்பிடித்த வால்’!

    வெறுத்துப்போய் அந்தக் குச்சியை அதன் மேலே வீசியெறிந்தேன்.dogtail2

    நண்பனிடம் என் கவலையைப் பகிர்ந்துகொண்டேன். “எல்லா நாய்களும் அப்படித்தான். ‘ நாய் வாலை நிமிர்த்த முடியாது’. அது சுருட்டிக்கொள்ளத்தான் செய்யும். அதை மாற்ற முயன்று நேரத்தை விரயம் செய்யாதே.” என்று அறிவுரை வழங்கினான். இது முன்னரே தெரியாமல் போய்விட்டதே என்று எண்ணி வருந்தினேன்.

    உயர் ரக நாய் என்று கூறி என்னிடம் விற்றவன் மேல் எனக்கு அத்தனை கோபம் வந்தது. மற்றவர்களை மதிக்காமல், தனக்குத் தான் மட்டும்தான் என்றும், தன்னை மாற்றிக்கொள்ளவே மாட்டேன் என்று கர்வம் பிடித்து சுருண்டு கிடக்கும் இந்த வாலைக் கொண்ட நாய் என்ன பெரிய உயர் ரகம்?

    இறுதியில் அந்த நாயைத் துரத்தி அடித்துவிடுவது என்று முடிவு கட்டினேன்.

    இதற்கு மேல் இந்த நன்றிகெட்ட நாய்களை வாங்கக்கூடாது, வாங்கினால் ஒரு பூனையைத் தான் வாங்க வேண்டும். ஆனால், பூனை வால் சுருட்டிக்கொள்ளும் இயல்புடையதா? நண்பனிடம் கேட்க வேண்டும்.

    இல்லை. இதோ, இது தான் என் இறுதியான முடிவு – வாலை சுருட்டிக்கொள்ளாத எந்த பிராணியானாலும் பரவாயில்லை, நான் வாங்கத் தயாராயிருக்கிறேன். அது, புலியாக இருந்தாலும் பரவாயில்லை. அதன் மீது எனக்குத் துளி பயமில்லை.

    எந்தப் பிராணி என்பது முக்கியமில்லை. ‘சுருட்டிக்கொள்ளாத வால்’ எனக்கு மிக முக்கியம்!

    Share
  • சிராய்ப்பு

    (குறுங்கதை)

    அது ஒரு குறுகிய தெரு. அந்தத் தெருவில் வசிக்கும் மழலைகள் சில அந்த இளம்பச்சை நிற வண்ணம் தீட்டப்பட்ட வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தன.

    அந்த வீட்டிற்குள் எப்போதும் போல் இணையவெளியில் உலவிக் கொண்டிருந்தான் கார்த்திகேயன் – வாசலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளில் ஒன்றின் தகப்பன். அந்தக் குழந்தைக்குக் கூட ஏதோ ‘ஷா’வில் முடியும் பெயர். சரியாக நினைவுக்கு வரவில்லை.

    வாசலில் வாகனசத்தம் கேட்கும்போதெல்லாம் வெளியே வந்து அவனது காரை அந்த வாகனங்கள் எப்படிக் கடந்து போகின்றன என்பதை பார்த்துவிட்டு, மீண்டும் உள்ளே சென்று வலைமேயத் தொடங்கிவிடுவான்.

    சமையலறையிலிருந்து திடீரென்று அவன் மனைவி சித்ரா பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடுவதை சலனமில்லாமல் திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் கணிப்பொறியில் மூழ்கினான்.

    வெளியே சென்ற மனைவி, குழந்தையைக் கொண்டுவந்து நாற்காலியில் கிடத்திவிட்டு, உள்ளே ஓடினாள்.

    அப்போதுதான் குழந்தை அழுதுகொண்டிருப்பதை கவனித்தான் கார்த்திக்.

    “என்ன ஆச்சுடி குட்டி” என்று கேட்டுக்கொண்டே குழந்தையிடம் சென்றான்.

    “இடி விழுந்தாகூட உங்க அப்பாவுக்கு அது கேக்காதுடீ குட்டி!” என்று உரக்கக் கத்திக்கொண்டே வந்து அடிபட்ட இடத்தில் மருந்திட்டாள் சித்ரா.

    “சின்ன ஸ்க்ராட்ச் தானே? அதுக்கு ஏன் இவ்வளவு பதைபதைப்பு? குழந்தைய நீதான் கெடுக்கற. நானெல்லாம் சின்ன வயசில்ல அடிபட்டா, மண்ணை எடுத்து அடிபட்ட எடத்துல போட்டுப்பேன். தானா சரியாயிடும். கூல்!” என்றவனை முறைத்துவிட்டு உள்ளே குழந்தையை அழைத்துச் சென்றுவிட்டாள். அவனும் வெளியே சென்று காரை ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் வலைமேயச் சென்றுவிட்டான்.

    அன்று மாலை ஏழு மணி இருக்கும்.

    “குழந்தைக்கு லேசா உடம்பு சுடுது. டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்” என்று கூறிவிட்டு டிரைவரை அழைத்துக் கொண்டு காரில் சென்று அமர்ந்தாள் சித்ரா.

    அதைக் கேட்ட அடுத்தகணம், பதைபதைத்துக்கொண்டு வெளியே வந்த கார்த்திக், “டாக்டர் வீடு இருக்கற தெருவுல ரெண்டு பக்கம் முள்ளுச்செடிங்க நிறைய இருக்கு. தெருமுனையிலேயே காரை விட்டுட்டு நடந்து போய்டுங்க, மகேந்திரன்” என்று டிரைவருக்கு அறிவுரை கூறி அனுப்பிவிட்டு, வாட்டத்துடன் அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தான் கார்த்திக்.

    கார் மருத்துவமனைக்குச் செல்வதற்குள் மகேந்திரனின் கைபேசிக்கு கார்த்திக்கிடமிருந்து மூன்றுமுறை அழைப்புகள் வந்தது.

    மருத்துவமனை இருந்த தெருமுனையில் காரை நிறுத்தினான் மகேந்திரன்.

    சித்ரா காரிலிருந்து இறங்கிவிட்டு, “இன்னொருமுறை அவர்கிட்டர்ந்து கால் வந்தா, கார் மேல ஸ்க்ராட்ச் ஆயிடும்னு கவலைபடாம இன்டர்நெட்ல எதையாச்சும் பண்ண சொல்லுங்க. ஸ்க்ராட்ச் தானே! மண்ணை அள்ளிப் பூசி  சரி பண்ணிக்கலாம்! ” என்று கூறிவிட்டு, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அந்த இருட்டில் தனியாக மருத்துவமனைக்கு நடந்து சென்றாள்.

    Share