Tag: சற்குணா பாக்கியராஜ்

  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) By லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) 3

    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    322978

    வீட்டில் சைமன் மனைவி, மெட்டீரினா, குழந்தைகளுக்கு ஆகாரம் கொடுத்துப் படுக்க வைத்து விட்டு, சைமன் அதிகமாக வெளியே உண்டிருப்பானென்று நினைத்துத் தானும் உண்ட பின் மீதியிருந்த ரொட்டியை மறு நாளுக்காகச் சேமித்து வைத்தாள். பின், சைமனின் பழைய கிழிந்த கோட்டை எடுத்துத் தைக்க ஆரம்பித்தாள். சைமன் அதிகாலையில் போனவன் இன்னும் திரும்பவில்லையே, அவன் புது கோட்டுத் தைக்கத் தோல் வாங்கியிருப்பானா? கடைக்காரன் அவனை ஏமாற்றி விடக்கூடாதே, எட்டு ரூபிள்கள் அதிகப் பணமல்லவா? என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

    மெட்ரீனா கதவைத் திறந்ததும், வெறுங்கையோடு சைமன் ஒரு புதிய மனிதனோடு நிற்பதையும், அந்த மனிதன் தலையில் தொப்பி இல்லாமலும் கம்பளியிலான செருப்புகள் அணிந்திருந்ததையும் கவனித்தாள். கணவனிடமிருந்து மதுவாடை வருவதை உணர்ந்ததும் அவன் தோல் வாங்காமல் அந்தப் பணத்தில் ஒன்றும் இல்லாதவனோடு சேர்ந்து குடித்துக் கொண்டு அவனையும் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறானென்று நினைத்தாள். அவள் மனம் ஏமாற்றத்தால் வெடித்து விடும் போலிருந்தது. அவர்கள் இரண்டு பேரும் வீட்டினுள் வந்த போது அந்த அன்னிய மனிதன் இளைஞனாகவும் கணவனுடைய கோட்டு மாத்திரம் அணிந்து கொண்டு வேறு ஆடைகள் ஒன்றும் இல்லாமலும் தலையில் தொப்பியில்லாமலும் ஒரே இடத்தில் தலை குனிந்த வண்ணம் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து இவன் நல்லவனல்ல என்ற தீர்மானத்திற்கு வந்தாள். சைமன் தலையிலிருந்த தொப்பியை எடுத்துக் கீழே வைத்து விட்டுப் பெஞ்சில் அமர்ந்து, ஒன்றும் நடக்காதது போல் அந்த மனிதனின் கைகளைப் பிடித்து அருகே அமரச் சொன்னான். மெடீனா எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு முகத்தைச் சுளித்தாள்.

    சைமன் அவளுடைய கோபத்தைக் கண்டு கொள்ளாதவன் போல், மெட்ரீனாவிடம் இருவருக்கும் உணவு பரிமாறச் சொன்னான். மெடீனாவின் கோபம் இரட்டித்தது. அவள், “நீ கோட்டுக்குத் தோல் வாங்கப் போனவன், அதை வாங்காமல் இருந்த கோட்டையும் கொடுத்து விட்டுக் குடித்திருப்பது மட்டுமல்லாமல், இன்னொரு ஆடையற்ற குடிகாரனையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாய், நான் சமைத்திருக்கிறேன், ஆனால் குடிகாரர்களுக்குச் சாப்பாடு கிடையாது” என்றாள்.

    “நிறுத்து மெட்ரீனா, நான் சொல்வதைக் கொஞ்சம் கேள், இந்த மனிதன் எப்படிப் பட்டவென்று——–“ மெடிடீனா அவனை மேலும் பேசவிடவில்லை.

    “நீ பணத்தை என்ன செய்தாயென்று சொல்லவில்லை”.

    சைமன் கோட்டுப் பையிலிருந்து மூன்று ரூபிள் நோட்டுகளையும் எடுத்தான். அவளுடைய கோபம் தீரவில்லை. பணத்தை வேகமாக எடுத்துக் கொண்டு, ”குடிகாரர்களுக்குச் சாப்பாடு கொடுக்க முடியாது” என்று அழுத்தமாகச் சொன்னாள்.
    “மெடீனா, அதிகம் பேசாதே. நான் சொல்வதைக் கேள்”.

    அதற்கு மெடீனா “நீ என்ன மகா புத்திசாலியா? உன் பேச்சைக் கேட்பதற்கு? நான் உன்னைத் திருமணம் செய்ய விரும்பவேவயில்லை. நீ ஒரு குடிகாரன். என் தாய் கொடுத்த லினன் துணியையும் விற்றுக் குடித்தாய்” இவ்வாறு பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களைத் திரும்பவும் சொல்லிச் சத்தமிட்டாள். சைமன் பலமுறைகள் தான் இருபது கோபெக்குகளுக்குத்தான் குடித்ததையும், எப்படி அந்த மனிதனைக் கண்டான் என்று சொல்ல முயற்சி செய்தும் பலனில்லை.

    மெடீனா பேசுவதை நிறுத்தாமல் சைமன் மீது பாய்ந்து “என் கோட்டைக் கழற்றிக் கொடு, இது ஒன்றுதான் எனக்கிருப்பது” என்று கத்திக் கோட்டைப் பிடித்து இழுத்தாள். சைமன் கோட்டைக் கழற்ற முயலும் போது அவள் இழுத்த வேகத்தில் கோட்டுக் கையின் தையல் பிரிந்து விட்டது.

    அவள் அவனைச் சபித்துக் கொண்டே கோட்டைத் தலையில் போட்டுக் கொண்டு தன் கோபத்தைத் தணிக்க வெளியே செல்லக் கதவருகே போனவள், வந்திருப்பவன் எப்படிப்பட்டவன் என்று அறிய ஆவல் தோன்றியதும் தயங்கி நின்றாள்.

    தொடரும்

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) – 2

    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)

    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    what men live by picture 2

    ஆகவே சைமன் திரும்பி அந்த உருவத்திடம் சென்றான். அருகில் சென்று பார்த்த போது ஒரு திடகாத்திரமான இளைஞன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் உடம்பில் ஒரு காயமும் இல்லை. சைமன் இன்னும் அருகில் சென்ற போது அவன் மெதுவாகத் தலையை உயர்த்திச் சைமனைப் பார்த்தான். அந்தப் பார்வை சைமனின் உள்ளத்தைத் தொட்டது. சைமன் அவன் முழங்கைகளைப் பிடித்து எழும்ப உதவி செய்தான். அவன் கைகளும் கால்களும் திடமாகவும், முகம் அமைதியாகவும் கருணை நிரம்பியிருப்பதையும் சைமன் கவனித்தான். பின் தன்னுடைய மேல் கோட்டையும், கையிலிருந்த பழைய செருப்புகளையும் அணிய உதவி செய்தான். *உன்னால் நடக்க முடியுமா?’ என்று சைமன் கேட்டதற்கு அவன் பதில் கொடுக்காமல் மெதுவாக எழும்பி சைமனைக் கனிவாகப் பார்த்தான். சைமன் தன் கையிலிருந்த ஊன்று கோலை அவன் கையில் கொடுத்து தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அந்த மனிதன் இலகுவாகவும் சைமனுக்கு இணையாகவும் நடந்தான். வழியில் அந்த மனிதன் ஒன்றும் பேசவில்லை.

    சைமன் அவனிடம் “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டதற்கு அவன் “ நான் இந்தப் பகுதியிலுள்ளவனல்ல” என்றான்.

    “எப்படி இந்த ஆலயத்திற்கு வந்தாய்?” “என்னால் சொல்ல முடியாது?”

    “உன்னை யாராவது துன்பப்படுத்தினார்களா”?

    “இல்லை. ஒருவரும் என்னைத் துன்பப்படுத்தவில்லை, இறைவன் எனக்குத் தண்டனை கொடுத்தார்”.

    “ஆம். இறைவன்தான் எல்லாவற்றையும் ஆட்சி செய்கிறார். சரி, உனக்கு உணவு, ஆடை, தங்க இடம் வேண்டும். நீ எங்கே போக வேண்டும்?”

    “எனக்கு எல்லாம் ஒரே இடம்தான்”.

    சைமனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பார்ப்பதற்கு நல்லவனாகத் தோன்றுகிறான். ஆனால் தன்னைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கு என்ன நடந்ததோ தெரியாது, என்று நினைத்துக் கொண்டு, அவனிடம் “சரி, அப்படியானால், என் வீட்டிற்கு வந்து குளிருக்கு ஒதுங்கிக் கொள்” எனறான்.

    சைமன் வேறு கேள்விகள் கேட்கவில்லை. குளிர் மிகவும் அதிகமாக இருந்தது. தன்னுடைய மனைவியை நினைத்தான். ஒரு புதிய மனிதனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போவதை அவள் விரும்பமாட்டாளென்று அவனுக்குத் தெரியும். அவளை நினைத்த போது அவன் மனம் வேதனைப் பட்டது. ஆனால் அந்த மனிதன் தன்னை முதல் தடவையாகக் கனிவுடன் பார்த்த பார்வை நினைவில் தோன்றியதும் மகிழ்ச்சியடைந்தான்.

    தொடரும்

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) (1)

    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)

    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    20170002697_20171011_002

     பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.  அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.  பரிசுத்த வேதாகமம், 1. யோவான் 4: 7-8

    சைமன் ஒரு செருப்புத் தைக்கும் பரம ஏழை. அவனுக்கு மனைவி, குழந்தைகள் தவிர வேறு ஒரு சொத்தும் கிடையாது. ஒரு குடிசையில் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். அன்றாடம் வேலை செய்து கிடைக்கும் கூலி ஆகாரத்திற்கே போதுமானதாக இருந்தது. குளிர்காலத்தில் போர்த்திக்கொள்ள ஆட்டுத் தோலில் தைக்கப்பட்ட ஒரு கோட்டை, கணவனும் மனைவியும் மாற்றி மாற்றி அணிந்து கொண்டனர். அதுவும் இப்போது கிழிந்து கந்தலாகி விட்டது. அடுத்த குளிர் காலம் தொடங்கும் முன் புது ஆட்டுத் தோல் வாங்கிக் கோட்டுத் தைக்கக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்க்கத் தொடங்கினான். இதுவரையிலும் மனைவியின் பெட்டியில் ரகசியமாக அவர்கள் சேமித்து வைத்திருந்த மூன்று ரூபிள்கள் இருந்தன. ஊரில் அவனுடைய வாடிக்கையாளர்கள் ஐந்து ரூபிள்களும், இருபது கோபெக்குகளும் கடன்பட்டிருந்தனர்.

    ஒரு நாள் காலை ஆகாரத்திற்குப் பின்பு, ஊருக்குள் சென்று கடன் பட்டவர்களிடமிருந்து பணத்தைச் சேகரித்து, ஆட்டுத்தோல் வாங்கப் புறப்பட்டான். தன்னுடைய கோட்டிற்கு மேல் மனைவியின் பழைய கோட்டும், அதற்கும் மேல் இன்னும் ஒரு கோட்டும் அணிந்து கொண்டு சட்டைப் பையில் மூன்று ரூபிள் நோட்டுகளைப் பத்திரமாக வைத்துக் கொண்டான். புதியதாக ஒரு கம்பை வெட்டி ஊன்று கோலாக வைத்துக் கொண்டு புறப்பட்டான்.

    முதல் வாடிக்கையாளன் வீட்டில் இல்லை.  அவன் மனைவி, சைமனை, அடுத்த வாரம் வந்தால் பணம் கிடைக்கும் என்று சொல்லி அனுப்பி விட்டாள். இரண்டாவது வாடிக்கையாளன் “என்னிடம் இப்போது பணம் கிடையாது, இருபது கோபெக்குகள்தான் இருக்கிறது, மீதியைப் பின்பு தருவேன்” என்றான். சைமன் ஆட்டுத்தோல் வியாபாரியிடமிருந்து தோலைக் கடனாக  வாங்க விரும்பி, தோல் விற்கும் கடைக்குச் சென்றான். சைமன் ஏழையானதால் கடைக்காரன் தோல் கொடுக்க மறுத்து விட்டான். அங்கும் ஏமாற்றம். சைமன் மிகவும் மனமுடைந்து கையிலிருந்த இருபது கோபெக்குகளுக்கும் மது வாங்கி அருந்தி விட்டு, ஒரு குடியானவன் பழுது செய்யக் கொடுத்த ஒரு சோடி பழைய செருப்புகளையும் கையில் ஏந்திக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

    கொஞ்சம் குடித்திருந்ததால் சைமனுக்கு குளிர் அதிமாகத் தெரியவில்லை. தன்னுடைய ஏழ்மை நிலையைப் பற்றித் தானாகப் பேசிக்கொண்டு நடந்தான். “வீட்டில் மனைவி, நான் கோட்டுத் தைக்கத் தோல் கொண்டு வருவேனென்று காத்துக் கொண்டிருப்பாள். நான் என்ன செய்ய முடியும்? ஒருவரும் பணம் கொடுக்கவில்லையே? உணவு வாங்குவதற்கே பணம் சரியாக இருக்கிறது”.

    சைமன் ஊர் எல்லையை நெருங்கிய போது, அங்கிருந்த ஆலயத்தின் பின் பக்கம் ஏதோ வெண்மையாக இருப்பதைப் பார்த்தான். மங்கிய மாலை ஒளியில் அது என்னதென்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. “இதற்கு முன்னால் இங்கு ஒரு வெள்ளைக் கல் கிடையாதே? ஏதோ மிருகமா?  ஆனால் இதற்கு வெண்மையான மனிதத் தலை இருக்கிறதே! இங்கே ஒரு மனிதன் என்ன செய்கிறான்?” என்று பலவாறு சிந்தித்துக்  கொண்டு அந்த உருவத்தின் அருகில் சென்று பார்த்தான். அங்கு ஒரு மனித  உருவம் ஆடைகளின்றி நிர்வாணமாகத் தலை குனிந்து கொண்டிருப்பதைப் பார்த்து சைமன் மிகவும் பயந்து “இவனை யாரோ கொன்று, நிர்வாணமாக்கி இங்கு விட்டுச் சென்று விட்டார்கள். இவனை நான் தொட்டால், ஆபத்தில் மாட்டிக் கொள்வேன்” என்று எண்ணி அந்த இடத்தை விட்டுக் கடந்து சென்றான்.

    சிறிது தூரம் சென்ற பின் திரும்பி அந்த உருவத்தை நோக்கினான். அதே சமயம் அந்த உருவமும் சுவரிலிருந்து விலகி தலையை உயர்த்தி சைமனைப் பார்த்தது. சைமன் அந்த உருவத்தின் அருகில் போகவா வேண்டாமா என்று யோசித்தான். அருகில் போனால், அந்த உருவம் தன்னைத் தாக்கினால் எப்படி தப்பித்துக் கொள்ள முடியும்? அவனுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வேறு ஆடை இல்லையே, இறைவன்தான் என்னை இங்கிருந்து காக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தன் வழியே  வேகமாக நடக்கத் துவக்கினான். ஆனால் அவனால் அதிகத் தூரம் செல்ல முடியவில்லை. “சைமன், என்ன செய்கிறாய்? அந்த மனிதனுக்கு என்ன தேவையோ? இறந்து விடுவானோ? கொள்ளைக்காரர்களைக் கண்டு பயப்பட உன்னிடம் என்ன இருக்கிறது? சைமன், உனக்கு வெட்கமாக இல்லையா?” என்று மனச்சான்று இடித்தது.

    தொடரும்

    Share
  • கணந்துள்–ஆள்காட்டி (Lapwing)

    சற்குணா பாக்கியராஜ்

    தமிழ் நாட்டில், இன்று கணந்துள் பறவையை எங்கே காணலாம்? என்று கேட்டால் என்ன பதில் வருமோ தெரியாது. ஆனால், “ஆள்காட்டிப் பறவை”  என்றால், பறவையைக் காட்டிக் கொடுக்கப் பெரும்பான்மையோர் முன் வரக்கூடும்.  ஏனென்றால்,  இந்தப் பறவைகளின் குரல், ஆளைக் காட்டிக் கொடுக்கும் இயல்புடையது. ஆள்காட்டிப் பறவைகள், இனப்பெருக்கக் காலத்தில், எதிரிகள் இரண்டு, மூன்று பர்லாங் தூரத்திலே வரும்போது இனம் கண்டு கொண்டு, கூட்டையும் குஞ்சுகளையும் காப்பதற்காக கடுங்குரல் எழுப்புகின்றன. இவைகளின் அபயக் குரலைக் கேட்டு அருகிலிருக்கும் பிற பறவைகளும் விலங்குகளும் அந்த இடத்திலிருந்து விலகி விடுகின்றன. இதனால், வேட்டையாடுபவர்களும் புகைப்படம் எடுக்க விரும்புவர்களும் இந்தப் பறவைகளை விரும்புவதில்லை.

    சங்க இலக்கியத்தில், கணந்துள் பறவையைப் பற்றிய வர்ணனைகள்,  முக்கியமாகப் பறவையின் கால்கள், குரலின் தன்மைப் பற்றி இரண்டு பாடல்களில் காணலாம். இந்தக் கணந்துள் பறவைதான், “ஆள்காட்டிப் பறவை” என்று P. L. சாமி, எழுதியுள்ள “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” (p.147-157) என்ற நூலில், பறவையியலின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்குகிறார்.

    இந்த இரண்டு சங்கப் பாடல்களிலும் கணந்துளின் நீண்ட கால்களை  “நெடுங் காற் கணந்துள்”, என்று புலவர்கள் குறிப்பிடுகின்றனர். பறவையியலில் ஆள்காட்டியின் கால்கள் நீண்டவையென்று விளக்கப்பட்டுள்ளது.

    IMG_9415 (2)

    மேலும் “கணந்துள் பறவை எதுவென்று அறியச் செய்யுளிலேயே “அகச்சான்று” (internal evidence) உள்ளதென்று கீழ்கண்டவாறு எடுத்துக்காட்டியுள்ளார்.

    “ஆற்று அயல் இருந்த இருங் கோட்டு அம் சிறை

    நெடுங் காற் கணந்துள் ஆள் அறிவுறீஇ,

    ஆறு செல் வம்பலர் படைதலை பெயர்க்கும்”

                                                    குருந்தொகை 350: 4-6, ஆலந்தூர் கிழார்

    விளக்கம்: “வழியின் அருகே செல்லும் வழிப்போக்கர்களுடைய கூட்டத்தை, அழகிய சிறகுகளையும், நீண்ட கால்களையும் உடைய கணந்துள் பறவை, அங்கே செல்லுபவரின் வருகையை அறிவித்து, அந்த இடத்தினின்று நீங்கச் செய்யும்”

    இந்தப் பாடலில், கணந்துள்ளின், ஆள் அறிவித்துக் காட்டும் குரலை,

    ஆள் அறிவுறீஇ” என்று  சங்கப் புலவர் குறிப்பிடுகிறார். “ஆள் இருப்பதை அறிவுறுத்துவதால்” கணந்துள் பறவை ஆள்காட்டிப் பறவைதான் என்பதற்கு, இது செய்யுளிலிலேயே உள்ள “அகச்சான்று” என்று, P. L. சாமி விவரிக்கிறார்.

    “பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,
    நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தெள் விளி
    சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்”

                               நற்றிணை 212: 1-3,  குடவாயிற் கீரத்தனார்

    விளக்கம்: “பறவைகளைப் பிடிக்கக் கருதிப், பார்வைப்புள்ளை(decoy) வைத்து, அமைத்த வலையைக் கண்டதும் நெடிய கால்களையுடைய கணந்துள் பறவை அச்சம் கொண்டு, தெளிவான குரலில் புலம்பும் குரல் காட்டின் வழியாகச் செல்லும் இசைக்கருவி முழங்குபவர் தம் வருத்தம் நீங்க இசைக்கும் யாழின் இசை போன்று ஒலிக்கும்”.

    .Redwattled Lapwing-1448 (2)

     இந்தப் பறவையின் குரலை, நற்றிணை 212-இல், புலவர், “புலம்பு கொள்” என்கிறார். பறவையியலாளர்கள் ஆள்காட்டியின் குரலை, ”loud and penetrating” என்று குறிப்பிடுகின்றனர். பறவைகளின் தந்தை என்று போற்றப்படும் முனைவர் சலீம் அலி, இந்தப் பறவைகளின் குரலை வர்ணிக்கும் போது,  “மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, இரட்டை அசையில்,

     “twit, twit” என்று இரண்டு வினாடிக்கொரு தடவையும், இடைஇடையே, மிகவும் உயர்ந்தகுரலில்                                                                                                                                                                             “twit-twit-twit-twit”,  என்று இரக்கமான குரலும் கொடுக்கும், சிவப்பு மூக்கு ஆள்காட்டி, சூழ்நிலைக்கேற்றவாறு, குரலை உயர்த்தியோ, தாழ்த்தியோ, “Did-he-do-it?” என்று வருத்தம் தோய்ந்த குரல் கொடுக்கும்” என்கிறார் (The Book of Indian Birds, Salim Ali.  p.139-140).

    1. L. சாமி, “கணந்துள் என்ற பெயர் ஆள்காட்டியின் அபாய அறிவிப்பு ஓசையின் காரணமாக வந்திருக்கலாம், “கணகணத்தல்” என்ற சொல் விட்டு விட்டு ஒலித்தலைக் குறிக்கும், இதனால் ஓசையின் அடிப்படையில், “கணந்துள்” என்ற பெயர் தோன்றியிருக்கலாம் என்றும் இந்தப் பறவை உள்ளானைப் போன்றிருப்பதால், கணந்துள் என்ற பெயரிலுள்ள “உள்” உள்ளானைக் குறிக்கலாம்”. ஆகவே “கணந்துள்” என்று சங்ககாலப் புலவர்கள் பாடியுள்ள பறவை, ஆள்காட்டிப் பறவைதான் என்று நம்முன் எடுத்துக்காட்டுகளோடு தன் கருத்தை விளக்குகிறார்.

     உலகத்தில், இருபத்திநான்கு வகை லேப்விங் பறவைகள் உள்ளன.  தமிழகத்தில் மூன்று வகையான லேப்விங் பறவைகள் காணப்படுகின்றன. இவை: சிவப்பு மூக்கு ஆள்காட்டி அல்லது செம்மீசை ஆள்காட்டி(Red Wattled Lapwing-Vanellus indicus), மஞ்சள் மூக்கு ஆள்காட்டி அல்லது மஞ்சள்மீசை ஆள்காட்டி ( Yellow Wattle Lapwing)- Vanellus malabaricus. சாம்பல் தலை ஆள்காட்டி (Grey Headed Lapwing -Vanellus cinerea)

     சிவப்பு மூக்கு ஆள்காட்டியும், மஞ்சள் மூக்கு ஆள்காட்டியும் தமிழகத்தில் எப்போதும் காணப்படும் பறவைகள். சாம்பல் தலை ஆள்காட்டி, குளிர் காலத்தில், தமிழகத்திற்கு வலசை வரும் பறவைகளில் ஒன்று. மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் வருகிறது { Wetland birds of Tamil Nadu. P. 91-92, Grubh, R. 2012).

    ஆள்காட்டிப் பறவைகள், ப்ளோவர் (Plover) குடும்பத்தைச் சார்ந்தவை. இந்தப் பறவைகளுக்குக் கால்கள் நீண்டதாய், பொய்க்கால்கள்(stilt) வைத்து நடப்பதுபோல் காணப்படும்.  இவை நீர்க் கரையோரம் காணப்படும் பறவைகள் என்று கருதப்பட்டாலும், மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, நீர் வறண்ட பகுதிகளில்தான் அதிகமாகக் காணப்படுகிறது.  சிவப்பு மூக்கு ஆள்காட்டியை நீர்க்கரையோரங்களில் காணலாம். சிறு புழுப்பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன. இந்தப் பறவைகள், தனித்தோ, இணையாகவோ அல்லது சிறு கூட்டமாகவோ காணப்படுகின்றன. இவை வலசை போவதில்லை.

    தோற்றம்:

    ஆண், பெண் ஆள்காட்டிப் பறவைகள், தோற்றத்தில் ஒன்று போல் காணப்படுகின்றன. சிவப்பு மூக்கு ஆள்காட்டியின் தலை, கழுத்து, மார்பகம் கருமையாகவும், முதுகு, சிறகுகள் செம்பழுப்பு நிறத்திலும் வயிற்றுப் பகுதி வெண்மையாகவும் காணப்படும். இதன் கண் பகுதியிலிருந்து மூக்குவரை சிவப்பு நிற சவ்வு வளர்ச்சி தோன்றி, மீசை போல் தோற்றமளிக்கிறது.

    சிவப்பு மூக்கு ஆள்காட்டி

     

    மஞ்சள் மூக்கு ஆள்காட்டியின் கண்ணிற்கும் மூக்கிற்கும் இடைப்பகுதியில், மஞ்சள் நிறத்தோல் வளர்ச்சி மீசை போல் தொங்கியுள்ளது. இரண்டு பறவைகளின் கால்களும் நீண்டு, மஞ்சள் நிறத்திலிருக்கின்றன.

    மஞ்சள் மூக்கு ஆள்காட்டி

    இந்தப் பறவைகள் இணை பிரியாதவை. இனப்பெருக்கக் காலத்தில், திறந்த வெளியில், ஆழமற்ற சிறு பள்ளம் தோண்டி, இலைகள், சிறு கற்கள், உலர்ந்த சாணத்துண்டுகள் கொண்டு நிரப்பி, மூன்று அல்லது நான்கு முட்டைகள் இடுகின்றன. (சிறு கற்கள், சாணத்துண்டுகள், முட்டைகள் இடம் பெயராமலிருக்க உதவுகின்றன). முட்டை ஓடுகளில் காணப்படும் தவிட்டு நிறப் புள்ளிகள், சுற்றுச் சூழலை ஒத்திருப்பதால் எதிரிகளால் முட்டைகளை எளிதில் கண்டு கொள்வது கடினம்.

    இரண்டு பறவைகளும், மாற்றி மாற்றி அடை காக்கின்றன. முட்டைகளை அடைகாக்கும் சமயத்திலோ அல்லது குஞ்சுகள் பொரித்திருக்கும் சமயத்திலோ, எதிரிகள் அருகில் வர நேர்ந்தால், மிகுந்த ஆரவாரத்தோடு அபயக் குரல் எழுப்பி, வட்டமிட்டுப் பறந்து எதிரிகளின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி அங்கிருந்து அகலச் செய்துவிடுகின்றன. தமிழகத்திலும், இலங்கையிலும், ஆள்காட்டிப் பறவையின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி, மாடு ஓட்டும் சிறுவர் பாடியதாக ஒரு அழகிய நாட்டுப் பாடலை P.L. சாமி சுட்டிக் காட்டுகிறார். இந்தப் பாடலில், மஞசள் மூக்கு ஆள்காட்டிப் பறவையைப்பற்றி சில உண்மைகளும்,  பல கற்பனைகளும் கலந்து காணப்படுகின்றன.

    untitled-9889

    “ஆக்காட்டி, ஆக்காட்டி, ஆவாரம்பூ ஆக்காட்டி

    எங்கே எங்கே முட்டையிட்டாய்

    கல்லு துளைத்து கடலோரம் முட்டையிட்டேன்

    இட்டது நாலு முட்டை பொரித்தது மூன்றுகுஞ்சு

    மூத்த குஞ்சுக் கிரைதேடி மூணுமலை சுற்றி வந்தேன்

    இளைய குஞ்சுக் கிரைதேடி ஏழுமலை சுற்றி வந்தேன்

    பார்த்திருந்த குஞ்சுக்குப் பவளமலை சுற்றி வந்தேன்

    புல்லறுத்தான் புலவிற்குக் காய்தின்னப் போகயிலே

    மாயக் குறத்திமகன் வழிமறித்துக் கண்ணி வைத்தான்

    காலிரண்டும் கண்ணியிலே சிறகிரண்டும் மாரடிக்க

    நானழுத கண்ணீரும் என்குஞ்சழுத கண்ணீரும்

    வாய்க்கால் நிறைந்து வழிப்போக்கர் கால்கழுவிக்

    குண்டு நிறைந்து குதிரைக் குளிப்பாட்டி

    இஞ்சிக்குப் பாய்ஞ்சு இலாமிச்சுக்கு வேரூண்டி

    மஞ்சளுக்குப் பாய்ஞ்சு மறித்ததாம் கண்ணீரே”

          “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்”, p.153

                                     ஆவாரம் பூ

                            மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, கன்யாகுமரி, 2017

    இந்தப் பாடலில், மஞ்சள்  ஆள்காட்டிப் பறவையின் கண்ணருகில் காணப்படும் மஞ்சள் நிறத் தோல், ஆவாரம் பூவின் இதழ்கள் போலவும், நான்கு முட்டைகள் இடுவதும், கல்லின் இடையில் முட்டை இடுவதால், கல்லைத் துளைத்து முட்டையிடுவதாகவும், முட்டைகள், சுற்றுச் சூழலை ஒத்திருப்பதால் இவைகளைக் கண்டு கொள்ள முடியாத நிலையில், சிறுவர், எங்கே முட்டையிட்டாய்? என்று பறவையைக் கேட்பதாகவும் காணலாம். பாடலிலுள்ள மேற்கண்ட தகவல்கள், பறவையியலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், நாட்டு மக்களின் இயற்கையறிவு குறையற்றதாக இருப்பதைக் காணலாம்.

    மேலும், “குறத்திமகன் வழிமறித்துக் கண்ணி வைத்தான்” என்ற செய்தி,

    நற்றிணை, 212 -இல் காணப்படும் “பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,” என்ற அடியை ஒத்துள்ளது.

    ஆனால் மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, வறண்ட நிலத்தில் முட்டையிடுகிறது. அடைகாக்கும் நேரத்திலும், குஞ்சுகள் பொரித்தப் பின்பும் இரை தேட அதிகதூரம் செல்வதில்லை. குஞ்சுகள், பொரித்த உடனேயே தானாக பெற்றோருடன் சேர்ந்து இரை தேடிக் கொள்கின்றன (precocial). ஆள்காட்டிப் பறவை, குஞ்சுகளைப் பாதுகாப்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பதைத்தான் அதன் அழுகையும் கண்ணீரும் என்று கற்பனையாகப் பாடலில் கூறப்பட்டுள்ளதென P.L. சாமி கருதுகிறார்.

     

    வட இந்தியாவில், ஆள்காட்டிப் பறவைகளைக் கவனித்து ஆராய்ச்சிகள் செய்து கொடுத்திருக்கும் தகவல்கள் நிறையக் காணலாம். முக்கியமாக, சிவப்பு மூக்கு ஆள்காட்டிகள், மொட்டை மாடிகளில், கான்கீரிட்டில் சிறு பள்ளம் தோண்டி, முட்டையிட்டு அடை காப்பதை பல ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர் (Mundkur, Taej 1985, Muralidhar, A., Barve, S., 2013).

    கி. பி பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்தியாவில் பிறந்து வளர்ந்து, கல்லூரியில் பட்டம் பெற்ற பின் அரசாங்க ஊழியராகப் பணிபுரிந்த ஆங்கிலேயர் திரு. ஏட்கின்ஸ் (E. H. Atkins), தன்னுடைய The Common Birds of Bombay” (p.160-163) என்ற புத்தகத்தில், சிவப்பு மூக்கு ஆள்காட்டிப் பறவையைப் பற்றி கீழ் கண்டவாறு நகைச்சுவையோடு வர்ணிக்கிறார். “எதற்கு நான் லேப்விங் பறவையைப் பற்றி விவரிக்க வேண்டும்? அதற்கு அறிமுகமோ அல்லது வர்ணனையோ தேவையில்லை, அதுவே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும். உங்களை ஈர்த்துக்கொள்ளும். அதன் குரல் உங்கள் மனதிலிருந்து அகலாதபடி திரும்பத் திரும்ப அழுத்தமாகக் குரல் கொடுக்கும். திடீரென, துணை பறவையும்,  எங்கிருந்தோ வந்து, வட்டமடித்து, சுற்றி சுற்றிப்                பறந்து, மேலும் கீழும் பாய்ந்து அருகே வருவது போலவும் தூரமாகப் போவது போலவும் போக்குக் காட்டி, அந்த இடத்தை விட்டு நகராமல், மனித அறிவுக்கு எட்டாத மர்மமான இரங்கல் குரலில் குற்றம் கூறுவது போல் “Did you do it? Did you do it?  Pity to do it” என்று குரல் கொடுக்கும். எதற்காக இந்தப் பறவை இப்படி நடந்து கொள்கிறது? நான் ஒரு தவறும் செய்யவில்லையே? என்னுடைய சந்தேகம் என்னவென்றால், இதனுடைய முட்டைகள் இங்கு எங்கேயோ இருக்கின்றன. நான் அதைத் தேடுவதினால் பயனில்லை. ஏனெனில், இந்த லேப்விங், ஒரு திறமைவாய்ந்த பொய்யன். ஒரு ஆங்கிலேயப் புலவர்  சொன்னபடி,

                         The Lapwing lies,

            Says here when it is there’

    மொத்தத்தில் இது ஒரு அதிசயப் பறவை” யென்று வியக்கிறார்.

    இந்த வர்ணனை, எத்தனை உண்மை என்பது  ஆள்காட்டிப் பறவையைப் பார்த்தவர்களின் அனுபவத்தில்தான் தெரியும். அடுத்த முறை, இந்த அழகிய பறவைகளைப் பார்க்கவும், குரலைக் கேட்கவும் நேர்ந்தால், Hope you can say, “ No my friend, l didn’t” if you protect nature.

    வட இந்தியாவில் ஆள்காட்டிப் பறவையைப் பற்றியுள்ள சிலதகவல்கள்:

    ராஜஸ்தானில் ஆள்காட்டிப் பறவைகள் முட்டையிடும் காலம் மழை வருவதைக் குறிக்கிறதென்று நம்புகின்றனர்.

    சில கிராமங்களில், ஆள்காட்டியின் குரல் அபசகுணமாகக் கருதப்படுகிறது..

    “வானத்திலிருந்து ஏதாவது விழுந்து முட்டைகளுக்கோ, குஞ்சுகளுக்கோ ஆபத்து நேரிடாதபடி, பிடித்துக்கொள்ள, இரவில் படுக்கும்போது,  இவைகளின் கால்கள், வானத்தை நோக்கியிருக்கும்”. இந்தி மொழியில், இதை, “Tithiri se Asian thama jayega” (“can the pee-wit support the heavens?”) என்கின்றனர்.

    ஆள் காட்டியின் முட்டைகளுக்கு தூக்கத்தைத் தடுக்கும் சக்தி உண்டு என்று நம்புவதால், இரவு வாகனம் ஓட்டுபவர்களுக்காக முட்டைகள் வேட்டையாடப்படுகின்றன (Chan Kumar, 2015).

    References:

     Aitken, Edward Hamilton, 1851-1909. The common birds of Bombay

    Charn Kumar, (2015). First record of a regularly occupied nesting ground of Yellow-wattled Lapwing, Vanellus malabaricus (Boddaert) in agricultural environs of Punjab with notes on its biology . Journal of entomology and Zoology Studies, JEZS 2015: 3 (1): 129-134

    Grubh, R, (2012).  The wetland Birds of Tamil Naddu

     Mundkur, Taej (1985). “Observations on the roof-nesting habit of the Redwattled Lapwing (Vanellus indicus) in Poona, Maharashtra”. Journal of the Bombay Natural History Society. 82 (1): 194–196.

    Mundkur, Taej (1985). Barve, S., 2013. Peculiar choice of nesting of Red-wattled Lapwing Vanellus indicus in an urban area in Mumbai, Maharashtra. Indian BIRDS 8 (1): 6–9

    Muralidhar, A., Barve, S., 2013. Peculiar choice of nesting of Red-wattled Lapwing Vanellus indicus in an urban area in Mumbai, Maharashtra. Indian BIRDS 8 (1): 6–9

    Naik, RM; George, PV; Dixit, Dhruv B (1961). “Some observations on the behaviour of the incubating Redwattled Lapwing, Vanellus indicus indicus (Bodd.)”Journal of the Bombay Natural History Society58 (1): 223–230.

    Share
  • ஒரு பறவையின் கால்களுக்கு இத்தனை பலமா??

    நடமாடி இரை தேடும் செக்கிரட்டரி பறவை (Secretary Bird)
    Sagittarius serpentarius

    சற்குணா பாக்கியராஜ்

    படம்: பாஸ்கல் பாக்கியராஜ், கென்யா, 2017

    35862171973_1e9cf5172d_o

    கடந்த மாதம், கென்யாவிலுள்ள மாசா மாரா தேசிய பூங்காவிற்குச் (Massa Mara National Park) சென்ற போது, செக்கிரட்டரி பறவையைக் காணச் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் மிடுக்கான நடை, அழகிய தோற்றம், பாம்பை விழுங்கின வேகம் மனதிலும், புகைப்படத்திலும் பதிந்து விட்டன. இந்தப் பறவையின் இரை தேடும் திறமையைக் கேட்ட போது மிகவும் வியப்பாக இருந்தது.

    ஆப்பிரிக்க நாடுகளில், புல் வெளிகளிலும், வறண்ட நிலப்பகுதிகளிலும் காணப்படும் செக்கிரட்டரி பறவை, பருந்துகள், கழுகுகள் இனத்தைச் சார்ந்த போதிலும், பருந்துகளைப் போல் வானில் பறந்து இரை தேடாமல், நிலத்தில் நடமாடி, இரையைப் பிடிக்கும் தன்மை வாய்ந்தது. உயரமாகப் பறக்கத் திறமையுடையதாக இருந்த போதிலும், பகல் முழுவதும் நடந்து இரை தேடிய பின், மாலை நேரத்தில் மர உச்சிகளில் அடைகிறது. வலசை போவதில்லை.

    DSCN9633 (2)

    செக்கிரட்டரி பறவையின், தலைப்பகுதி கழுகைப் போலவும், வளைந்த அலகையும் உடையது. உருவத்தில், பருந்து, கழுகு இனங்களை விட மிகவும் பெரியது. கால்கள் நீண்டு மெலிந்திருக்கும். நன்கு வளர்ச்சியடைந்த செக்கிரட்டரி பறவை, நான்கு அடி உயரமாகவும், ஐந்து முதல் ஒன்பது இராத்தல் எடை பருமனாகவும் இருக்கும். ஆண், பெண் பறவைகள் தோற்றத்தில் ஒன்று போலிருக்கும். இவை இணை பிரியாதவை. அக்கேசியா(Acacia) போன்ற உயர்ந்த மரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கிறது.

    சுமார் 1800 நூற்றாண்டில், இந்தப் பறவையை முதல் முதலாகப் பார்த்த ஆங்கிலேயர்கள் இதனை, செக்கிரட்டரி பறவையென்று அழைத்ததின் காரணம், இதன் தலையிலுள்ள நீண்ட கருப்பு இறகுகளும், சாம்பல் நிற இறக்கைகளும், கருப்பான நீண்ட வால் இறகுகளும், கருப்பு இறகுகளினால் மூடப்பட்ட தொடைப் பகுதிகளும், இங்கிலாந்தில், அந்த சமயத்தில் குமஸ்தா(clerk)பதவியில் பணிபுரிந்த ஆண்கள், முழங்கால் வரையுள்ள கருப்புக் கால் சட்டையும், சாம்பல் நிறக் கோட்டும்(tailcoat), அணிந்து, இறகுப் பேனாவை[quill pen) காதில் சொருகியிருப்பதைப் போன்று தோற்றமளித்ததால்தான். ஆனால், இந்தப் பறவையின் உண்மைப் பெயர், “வேட்டையாடும் பறவை” (Hunter bird).

    செக்கிரட்டரி பறவை, புழு, பூச்சி, ஓணான், பாம்பு போன்ற பிராணிகளை வேட்டையாடி உண்ணும். ஆகையால் இந்தப் பறவையை, “உழவனின் நண்பன்” என்று அழைக்கின்றனர். சில விவசாயிகள், இதனைப் பயிர்களைப் பாதுகாக்கவும், நச்சுப் பாம்புகளைக் கொல்லவும், வளர்க்கின்றனர்.

    DSCN9634 (3)

    இந்தப் பறவையின் கால்கள், பருந்து இனங்களின் கால்களை விட மிக நீண்டதாகவும், நகங்கள் கூர்மையற்றதாகவும் இருப்பதால், வேகமாக நடக்க முடியும். ஒரு நாளில், சுமார் இருபது மைல்கள் தூரம் நடந்து இரை தேடும். நகங்கள் கூர்மையற்றதால், ஒடி, இரையைப் பாதங்களால் ஓங்கி மிதித்து, கொன்று அல்லது செயலிழக்க வைத்து, விழுங்கி விடும். அலகினால் கொத்தி, இரையைத் தூக்கிச் செல்லவும் முடியும்.

    இந்தப் பறவை, பாம்புகளை வேட்டையாடும் திறமை மிகவும் அதிசயத்தக்கது! பாம்பை விரட்டி, அதன் தலையைக் குறி வைத்து, உயர எழும்பி, தலையின் மேல் பல முறை குதித்து, அதன் கழுத்தெலும்பை முறித்து, கொன்று பாம்பை விழுங்கி விடும். நச்சுப் பாம்புகளையும் விட்டு வைப்பதில்லை.

    அமெரிக்காவில், சான்டியாகோ மிருகச் சாலையில், இந்தப் பறவையை வளர்க்கிறார்கள். இதனை வெகு எளிதில் பழக்க(domesticate) முடியும்.

    கடந்த ஆண்டு, லண்டன் பல்கலைக்கழத்தைச் சார்ந்த சில ஆராய்ச்சியாளர்கள், செக்கிரட்டரி பறவையின் கால்கள், மெலிந்து, நீண்டு(lanky) காணப்பட்ட போதிலும், எவ்வாறு இவ்வளவு வேகத்தில், பாம்பை மிதிக்க முடிகிறதென்று அறிய ஆராய்ச்சி நடத்தினர். அதற்காக, பருந்துகளைப் பாதுகாக்கும் இடத்தில் (Hawk Conservancy Trust in Hampshire) “மெடலின்” என்ற பழக்கப்பட்ட(domesticated)செக்கிரட்டரி பறவையின் முன் ரப்பர் பாம்பை ஓட விட்டு, அந்தப் பறவை, ரப்பர் பாம்பைக் கொல்ல முயல்வதை ஆராய்ந்தனர். அவர்களுடைய முடிவென்னவெனில், “செக்கிரட்டரி பறவை, இரையை, ஒவ்வொரு தடவையும் மிதிக்கும் போது, அதனுடைய எடையை விட ஐந்து மடங்கு அதிக எடையளவு பலத்தோடு, 15 மில்லி செகன்டிற்குள் மிதிக்கிறது. பொதுவாக, கண்ணிமை (blinking) எடுக்கும் நேரம் 150 மில்லி செகன்டுகள். ஆனால், இந்தப் பறவை, அதற்கும் குறைவான நேரத்தை எடுப்பது மிகவும் வியக்கத்தக்கது. மேலும், அதனுடைய கூர்மையான பார்வை, இரையைக் குறி தப்பாது துல்லியமாகத் தலையில் அடித்துக் கொல்ல உதவுகிறது”.

    (http://www.dailymail.co.uk/sciencetech/article-3416090/Snake-hunting-birds-stamp-prey-force-five-times-weight-says-study.html#ixzz4tNB3sXnx))

    செக்கிரட்டரி பறவை, இத்தனை வேகத்தோடும், பலத்தோடும் நச்சுப் பாம்புகளை பிடிக்கும் போது, பாம்புகளுக்கு, எதிர்த்துப் போராட நேரம் கிடைப்பதில்லை. இது இயற்கையின் விளையாட்டு!
    புகைப் படங்கள்: பாஸ்கல் பாக்கியராஜ், வயது 14

    Share
  • ஒரு ஊர்+ கொக்குகள்( Kokokan-Herons)= மறு பிறப்பு???

    சர்குணா பாக்கியராஜ்

    1_235

    “பெட்டுலு” (Petulu), என்னும் ஒரு சிறு கிராமம். இது பாலி( Bali) தீவிலுள்ள “உபுட்” (Ubud) என்ற நகரிலிருந்து, மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இந்தக் கிராமத்திலுள்ள சிறப்பான அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் மாலை ஐந்து மணி முதல் ஆறு மணியளவில், சுமார் இருபதாயிரம் வெண் கொக்குகள் முக்கியமாக மாட்டுக் கொக்குகள் (Cattle Egrets) சின்னக் கொக்குகள் (Little Egrets Egrets), ஜாவன் குளக் கொக்குகள் (Javan pond herons)வந்து, கிராமத்திலுள்ள மரங்களில் அடைகின்றன.

    நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பாலிக்குச் சென்றிருந்த போது, ஒரு நண்பரின் மூலம் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, பறவைகளைக் காணச் சென்றோம். மாலை ஐந்து மணியளவில் பெட்டுலுவை நெருங்கிய போது, இள நீலமும், பொன்னிற மஞ்சளும் கலந்த அந்தி வானம், ஏதோ கோபம் கொண்டது போல், திடீரென சாம்பல் நிற மேகங்களால் மூடப்பட்டு, பன்னீர் தெளிப்பதைப் போல், சிறு, சிறு மழைத் துளிகளால் எங்களை வரவேற்றது.

    வண்டி ௐட்டி வந்தவர், “ மழை பலமாக வரப்போகிறது, ஆகவே ஊருக்குள் போக முடியாது, சாலைகளில் வெள்ளப் பெருக்கு வர வாய்ப்புள்ளது, ஊருக்கு வெளியே இருந்து பறவைகளைப் பார்க்கலாம்” என்று கூறி, ஊரைத் தொட்டுக் கொண்டிருந்த வயல் கரையோரம் வணடியை நிறுத்திவிட்டு, வயலின் மையத்திலிருந்த ஒரு சிறு தேநீர்க் கடைக்கு அழைத்துச் சென்றார். சற்று நேரத்தில், நெடுந்தொலைவில், அடிவானத்திலிருந்து, வெள்ளைப் புள்ளிகளாக, “V’ வடிவில் சிறு, சிறு கூட்டமாகப் பறவைகள், ஊரை நோக்கி வந்து அடைய ஆரம்பித்தன. அவை பறந்து வரும் அழகைப் பார்த்த போது,

    “நெடு வேள் மார்பின் ஆரம் போல,
    செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும்
    பைங் காற் கொக்கினம்——–

    “நக்கீரர், (அகநானூறு: பாடல், 120: 1-3) என்ற சங்க காலப் பாடல் நினைவில் வந்தது.

    சிறு தூரலில் ஆரம்பித்த மழை, பெருந்துளிகளாக மாறின. கடைக்காரர் கொடுத்த சூடான தேநீரைப் பருகிக் கொண்டிருந்த போது, அவர்,

    “1965-ஆம் ஆண்டு வரையிலும், இந்தக் கிராமத்தில் கொக்குகளை (Kokocan) எவரும் கண்டதில்லை. இந்தப் பறவைகளின் வரவைக் குறித்து, எங்கள் கிராமத்தில் ஒரு சரித்திரமே அடங்கியுள்ளதென்று” உடைந்த ஆங்கிலத்தில், கீழ்க்கண்ட விவரங்களைக் கொடுத்தார்.

    “1965-ஆம் ஆண்டு, இந்தோனேசியா நாட்டில், ஜனாதிபதி சுகர்ணோவை எதிர்த்து நடந்த ராணுவ எழுச்சியின் பின், லட்சக்கணக்கான பொதுவுடமைக் கட்சியைச் சார்ந்தவர்களும் (PKI), அவர்களை ஆதரிப்பர்வகள் என்று கருதப்பட்டவர்களும் கொல்லப்பட்டனர். பெட்டுலு கிராமத்திலும், ஊர் மக்களைக் கொண்டு தோண்டப்பட்ட குழிகளில், பெருந்திரளானவர்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டனர்.

    1965-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், கடைசி வாரத்தில், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, கிராமத்திலுள்ள தீய சக்தியை அகற்ற விழா நடத்தினர், விழா முடிந்து ஒரே வாரத்தில், ஊருக்குள், கொக்குகள் தோன்றின. சில கிராம மக்கள், உணவுக்காகவும், வளர்ப்பதற்காகவும், இவைகளைப் பிடித்து வைத்திருந்தனர். ஆனால், பறவைகளைப் பிடித்து வைத்திருந்த கிராமத்தினர் பலர் பயங்கரமான ஆவிகளைக் கனவுகளில் கண்டு, பயந்து பறவைகளை விடுவித்து விட்டு கொக்குகளை வரவேற்க விழா நடத்தினர். அப்போது, பூசாரி மௌன நிலைவ்(trance) எய்தினார். அவர் விழித்த போது “கொலை செய்யப்பட்டு இறந்தவர்களுக்கு இறுதிக் கடன்கள் செய்யப்படவில்லை. ஆகவே, இவர்களின் ஆன்மாக்கள்தான், கொக்குகள் வடிவில் ஊரைக் காக்க வந்துள்ளன” என்று கூறினார். ஆகையால் கிராமத்தவர்கள் கொக்குகளை மதித்து வருடந்தோறும், கொக்குகளுக்காக விழா நடத்துகின்றனர். மேலும், இந்தப் பறவைகள் ஊருக்கு நன்மையும், செழிப்பும் கொண்டு வருகின்றன என்று நம்புகிறோம்”  என்று சொல்லி முடித்தார்.

    கடைக்காரர் கொடுத்த தகவலைக் கேட்டு ஆச்சரியத்தோடே பறவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, மழை வலுத்துப் பார்வையை மறைத்து விட்டதால், அங்கிருந்து கிளம்ப வேண்டியதாயிற்று. சுமார் ஐநூறு அல்லது அறுநூறு பறவைகள்தான் பார்க்க முடிந்தது.

    விடுமுறை கழிந்து, கலிபோர்னியா வந்து சேர்ந்த போதும், கடைக்காரர் கொடுத்த தகவலை மறக்க முடியவில்லை.

    அவர் கொடுத்த செய்தியைப்பற்றி, ஆராய்ந்த போது, 1965ஆம் ஆண்டு, ராணுவத்தினர் நடத்திய எழுச்சியும், அதைத் தொடர்ந்து, பொதுவுடைமைக் கட்சியினரும், அவர்களை ஆதரித்தவர்களும் கொல்லப்பட்டனர் என்பது உண்மையான நிகழ்ச்சியென்றும், ஆனால், இந்தச் சம்பவம் இந்தோனேசியா வரலாற்றில் எழுதப்படவில்லையாதலால், எத்தனைப் பேர் கொல்லப்பட்டனர் என்ற உண்மை தெரிய வாய்ப்பில்லை என்பதும் தெரிய வந்தது. இப்போதைய இந்தோனேசியா ஜனாதிபதி ஜோகோ விடுடோவும் (Joke Widodo), மக்களும், இந்தக் கொடூரமான நிகழ்ச்சியின் விளைவை அறியப் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

    (Source: “The Indonesian Massacre: What Did the US Know? Margaret Scott)

    கொக்குகள், இன்றும், மாலைதோறும், பெட்டுலு கிராமத்தில் மரங்களில் வந்தடைந்து, உல்லாசப் பயணிகளையும், பறவை ஆர்வலர்களையும் மகிழ்விக்கின்றன. மறு பிறவி என்பது, ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கையாதலால், இந்த பெட்டுலு கொக்குகள், மறு பிறவிகளா? இல்லையா?, என்பதை வாசகர்களின் கருத்துக்கு விட்டு விடுகிறேன்.

    Share