Tag: அண்ணாமலை

  • அண்ணாமலையின் புதிய இயக்கம்

    அண்ணாமலையின் புதிய இயக்கம்

    அண்ணாகண்ணன்

    அண்ணாமலையின் உரையைக் கேட்டேன். அவர் கூறியவை அனைத்தும் முற்றும் முழுதாகக் காந்தியக் கொள்கைகள். மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றால் முதலில் நாம் மாற வேண்டும் என்கிறார். மாறுவோம், மாற்றுவோம் என்பது கேட்க, நன்றாக இருக்கும். ஆனால், நடைமுறையில் மிகக் கடினமானது. அவரும் அவரைப் பின்பற்றும் அனைவரும் மகாத்மாக்களாக இருந்தால் / மாறினால் ஒழிய, இந்த மாற்றம் நிகழாது. எனவே இது அவரது முதல் தடை.

    நாயக வழிபாடு வேண்டாம் என்கிறார். தலைவர், பொறுப்பு, அதிகாரம் என்று வந்துவிட்டால், இத்தகைய நாயக வழிபாடு, இயல்பாகவே வந்துவிடும். அண்ணாமலையே இதற்கு முன்னால் பலரையும் நாயகராகக் கொண்டாடியவர். காலில் விழுந்து வணங்கியவர். பொதுவாக, அவரது உடல்மொழியே அதீதப் பணிவுடன் உள்ளது. இந்தியச் சமுதாயக் கட்டமைப்பும் நிறுவனக் கட்டமைப்பும் குடும்பக் கட்டமைப்பும் அதிகாரப் படிநிலைகளைக் கொண்டது. அனைவரையும் சமமாகப் பார்க்கின்ற வாய்ப்பு, இதில் மிகக் குறைவு. இந்த இயக்கத்தில் அண்ணாமலையை நாயகராகத்தான் கருதுவார்கள். We the leader என்ற தளத்தின் பெயரும் உறுப்பினராகச் சேரும் தன்னார்வலர்களை Active Leaders என்று அழைப்பதும் ஒவ்வொருவரையும் நாயகராகப் பார்க்கவே உதவும்.

    அறம் செய்ய விரும்பு என்ற வாசகம், அவரது இணையத்தளத்தில் உள்ளது. அப்துல் கலாம் பெயரில் அறத்தையும் அரசியலையும் கற்றுத் தரப் போவதாகக் கூறியுள்ளார். நம் பாடத் திட்டங்களில் திருக்குறளும் இன்னபிற அற நூல்களும் தொடர்ந்து இடம் பெறுகின்றன. இவற்றைக் கற்காமல், தமிழ்நாட்டுப் பள்ளிகளிலிருந்து யாரும் வெளியே செல்வது இல்லை. பிறகு ஏன், சமூகத்தில் அறம் ஓங்கி நிற்கவில்லை? இதற்கான காரணங்களைத் தேடினால், இவரது இந்த முயற்சி எவ்வளவு கடினமானது என்பதை அவர் அறிவார்.

    பொறுப்புகளுக்கும் பதவிகளுக்கும் கால வரையறை வைப்பது நல்ல திட்டம். செயல்படுத்தக் கூடியதே. இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதை நிறைவேற்ற, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். முக்கியமாக, இது தேசிய அளவிலான கொள்கை. தேசிய அளவில் அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டு, தேர்தல் ஆணையமும் ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும். பதவி சுகம் கண்டவர்கள், அவ்வளவு எளிதில் இதை நிகழ்த்த விடுவார்களா? அவரது கட்சித் தலைவர் பதவிக்கு வேண்டுமானால் இத்தகைய விதிகளை வைத்துக்கொள்ளலாம்.

    நாமெல்லாம் மிடில் கிளாஸ் என்று அவர் சொன்னது, பலருக்கும் நெருக்கமாக இருக்கலாம். நடுத்தர வர்க்கத்தினரின் குரலாக அவர் ஒலித்தால், உடனடியாக அவருக்கு ஒரு பெரும் எண்ணிக்கையிலான மக்களின் ஆதரவு கிடைக்கலாம்.

    அறத்துக்குப் பயிற்சி அளிப்பது பயன் அளிக்கிறதோ இல்லையோ. அரசியல் நடைமுறைகளுக்குப் பயிற்சி அளித்த பின் போட்டியிட வைப்பது, நல்ல முயற்சி. இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாதது. அடிப்படையிலிருந்து தொடங்க வேண்டும் என்ற எண்ணம் நன்று. இதை அரசியல் கல்லூரியாக நிறுவினால், இதர கட்சியினரும் அரசியல் ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

    இதை எழுதும் நேரத்தில் அவரது தளத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, பத்து லட்சத்தை நெருங்கியுள்ளது. என்னிடத்தில் ஆற்றல் மிக்க நூறு இளைஞர்களைக் கொடுங்கள். நான் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று விவேகானந்தர் கூறினார். இதோ அண்ணாமலையிடம் பத்து லட்சம் பேர் இருக்கிறார்கள். உலகையே மாற்றிக் காட்டலாம்.

    பெரிதினும் பெரிது கேட்கும் அண்ணாமலைக்கு வாழ்த்துகள்.

    Share
  • கவிப்பேரரசு வைரமுத்து இப்படி எழுதலாமா?

    கவிப்பேரரசு வைரமுத்து இப்படி எழுதலாமா?

    அண்ணாகண்ணன்

    அண்ணாமலை படத்தில், வைரமுத்து எழுதிய ‘வந்தேன்டா பால்காரன், பசு மாட்டைப் பத்திப் பாடப் போறேன்’ என்ற பாடலை நேற்று வானொலியில் ஒலிபரப்பினார்கள்.

    புல்லு கொடுத்தா
    பாலு கொடுக்கும் உன்னால
    முடியாது தம்பி

    இது என்ன வகையான ஒப்பீடு? பசு என்பது பெண். எனவே பால் கொடுக்கிறது. ஆனால், உன்னால முடியாது தம்பி என ஆணிடம் எதற்குச் சொல்கிறார்? காளை மாடு கூடத்தான் புல்லு சாப்பிட்டுப் பால் கொடுக்காது. மனிதரிலும் பிள்ளை பெற்ற பெண், பால் கொடுக்கக் கூடியவர்தான். புல் போன்று சில கீரைகளை, ஏன் அருகல்புல் சாற்றைக் குடித்துக்கூட அவரால் பால் கொடுக்க முடியும். எதற்காக ஏடாகூடமாக ஒப்பிட்டிருக்கிறார்?

    சாணம் விழுந்தா உரம் பாரு
    எருவை எரிச்சா திருநீறு
    உனக்கு என்ன வரலாறு
    உண்மை சொன்னா தகராறு

    சாணம் மட்டுமில்லை, மனித மலமும் உரம் தான். அதைக் கொண்டு மின்சாரமே தயாரிக்கிறார்கள். மாட்டைப் புகழ்வதற்காக, மனிதனைத் தாழ்த்தலாமா? மனிதனின் எழுச்சிமிகு முன்னேற்றத்தை அவனது வரலாற்றைப் படித்தாலே புரியுமே.

    அட மீன் செத்தா கருவாடு
    நீ செத்தா வெறும்கூடு
    கண்ணதாசன் சொன்னதுங்க
    பசு இருந்தாலும் பாலாகும்
    செத்தாலும் தோலாகும்
    நான் கண்டு சொன்னதுங்க

    மீன் செத்தா கருவாடு. ஆனால், மனிதன் செத்தால் வெறும்கூடு இல்லை. மனித உடலின் ஒவ்வொரு பகுதியும் உரம் தான். மேலும் மனிதன் இறந்தால் அவனது உறுப்புகள் பலவற்றைத் தானமாக அளிக்க முடியும். மேலும் மருத்துவ ஆராய்ச்சிக்காக, அவன் உடலையே தானமாக வழங்க முடியும். கண்ணதாசன் இதைப் புரிந்துகொண்டாரா தெரியவில்லை.

    பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும் என்பதில் என்ன பெருமை? மிகவும் பொருள்வயமான கண்ணோட்டம் இது. யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். ஆட்டுக்கும் இவ்வாறு பயன் இருக்கும். மனிதன் இறந்தாலும் வேறு வகையில் இத்தகைய பயன் உண்டு. அதனால் தான் அநாதைப் பிணங்களையும் திருடும் கூட்டம் இருக்கிறது.

    அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம்
    ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க
    அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம்
    அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க

    ஆட்டுப்பால் ஆயுள் வளர்க்கிறது, மாட்டுப்பால் அன்பு வளர்க்கிறது என்கிறார். ஏன், ஆட்டுப்பால் அன்பு வளர்க்காதா? மாட்டுப்பால் ஆயுள் வளர்க்காதா? இதே பாடலில், அட பாதி புள்ள பொறக்குதப்பா பசும்பால தாய் பாலா நம்பி என்று வருகிறது. பச்சிளங்குழந்தைக்குத் தாய்ப்பாலே முதன்மை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். தாய்ப்பால் சுரக்காத நிலையிலேயே செறிவூட்டிய பால்மாவும் பசும்பாலும் கொடுக்கிறார்கள். மிகக் குறைந்த அளவிலேயே இது நிகழ்கிறது. குழந்தை பிறந்து 6 மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகே பசும்பால். முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலே ஆதாரம். எனவே பாதி குழந்தைகள், பசும்பாலை நம்பிப் பிறப்பதாகச் சொல்வதும் சரியில்லை. ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகே பசும்பாலை நாடுகிறார்கள்.

    பசுவைத் தெய்வமாக வணங்குவது, தமிழர் வழக்கம். கோமாதா என்றே அழைப்பார்கள். பசுவின் உடலில் தெய்வங்களும் தேவர்களும் வாழ்வதாகக் கருதுவோர் உண்டு. இவற்றை எல்லாம் தவிர்த்தாலும் பசு தன் கன்றுக்காகச் சுரக்கும் பாலையே மனிதனும் கறந்து குடிக்கிறான். எனவே, பசுவும் நம் தாய், நாமெல்லாம் அதன் கன்றுகளே என்றாவது சொல்லியிருக்கலாம்.

    பால்காரர் தான் வளர்க்கும் மாடுகளைப் பற்றிப் பெருமையாகச் சொல்ல, வேறு ஏதும் இல்லையா? அதன் பால், சாணம், திருநீறு, செத்த பிறகு தோல் – இந்தப் பயன்களைத் தான் வைரமுத்து மீண்டும் மீண்டும் சொல்கிறார். இது வியாபாரியின் கண்ணோட்டம். கன்றுக்காக இரங்கி, தன் இரத்தத்தைப் பாலாக்கி அருளும் பசு, வெறும் வியாபாரப் பொருளாகி நிற்கிறது. வியாபாரிகள் இப்படி எழுதலாம். கவிப்பேரரசு வைரமுத்து இப்படி எழுதலாமா?

    Share