அண்ணாமலையின் புதிய இயக்கம்
அண்ணாகண்ணன்
அண்ணாமலையின் உரையைக் கேட்டேன். அவர் கூறியவை அனைத்தும் முற்றும் முழுதாகக் காந்தியக் கொள்கைகள். மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றால் முதலில் நாம் மாற வேண்டும் என்கிறார். மாறுவோம், மாற்றுவோம் என்பது கேட்க, நன்றாக இருக்கும். ஆனால், நடைமுறையில் மிகக் கடினமானது. அவரும் அவரைப் பின்பற்றும் அனைவரும் மகாத்மாக்களாக இருந்தால் / மாறினால் ஒழிய, இந்த மாற்றம் நிகழாது. எனவே இது அவரது முதல் தடை.
நாயக வழிபாடு வேண்டாம் என்கிறார். தலைவர், பொறுப்பு, அதிகாரம் என்று வந்துவிட்டால், இத்தகைய நாயக வழிபாடு, இயல்பாகவே வந்துவிடும். அண்ணாமலையே இதற்கு முன்னால் பலரையும் நாயகராகக் கொண்டாடியவர். காலில் விழுந்து வணங்கியவர். பொதுவாக, அவரது உடல்மொழியே அதீதப் பணிவுடன் உள்ளது. இந்தியச் சமுதாயக் கட்டமைப்பும் நிறுவனக் கட்டமைப்பும் குடும்பக் கட்டமைப்பும் அதிகாரப் படிநிலைகளைக் கொண்டது. அனைவரையும் சமமாகப் பார்க்கின்ற வாய்ப்பு, இதில் மிகக் குறைவு. இந்த இயக்கத்தில் அண்ணாமலையை நாயகராகத்தான் கருதுவார்கள். We the leader என்ற தளத்தின் பெயரும் உறுப்பினராகச் சேரும் தன்னார்வலர்களை Active Leaders என்று அழைப்பதும் ஒவ்வொருவரையும் நாயகராகப் பார்க்கவே உதவும்.
அறம் செய்ய விரும்பு என்ற வாசகம், அவரது இணையத்தளத்தில் உள்ளது. அப்துல் கலாம் பெயரில் அறத்தையும் அரசியலையும் கற்றுத் தரப் போவதாகக் கூறியுள்ளார். நம் பாடத் திட்டங்களில் திருக்குறளும் இன்னபிற அற நூல்களும் தொடர்ந்து இடம் பெறுகின்றன. இவற்றைக் கற்காமல், தமிழ்நாட்டுப் பள்ளிகளிலிருந்து யாரும் வெளியே செல்வது இல்லை. பிறகு ஏன், சமூகத்தில் அறம் ஓங்கி நிற்கவில்லை? இதற்கான காரணங்களைத் தேடினால், இவரது இந்த முயற்சி எவ்வளவு கடினமானது என்பதை அவர் அறிவார்.
பொறுப்புகளுக்கும் பதவிகளுக்கும் கால வரையறை வைப்பது நல்ல திட்டம். செயல்படுத்தக் கூடியதே. இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதை நிறைவேற்ற, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். முக்கியமாக, இது தேசிய அளவிலான கொள்கை. தேசிய அளவில் அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொண்டு, தேர்தல் ஆணையமும் ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும். பதவி சுகம் கண்டவர்கள், அவ்வளவு எளிதில் இதை நிகழ்த்த விடுவார்களா? அவரது கட்சித் தலைவர் பதவிக்கு வேண்டுமானால் இத்தகைய விதிகளை வைத்துக்கொள்ளலாம்.
நாமெல்லாம் மிடில் கிளாஸ் என்று அவர் சொன்னது, பலருக்கும் நெருக்கமாக இருக்கலாம். நடுத்தர வர்க்கத்தினரின் குரலாக அவர் ஒலித்தால், உடனடியாக அவருக்கு ஒரு பெரும் எண்ணிக்கையிலான மக்களின் ஆதரவு கிடைக்கலாம்.
அறத்துக்குப் பயிற்சி அளிப்பது பயன் அளிக்கிறதோ இல்லையோ. அரசியல் நடைமுறைகளுக்குப் பயிற்சி அளித்த பின் போட்டியிட வைப்பது, நல்ல முயற்சி. இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாதது. அடிப்படையிலிருந்து தொடங்க வேண்டும் என்ற எண்ணம் நன்று. இதை அரசியல் கல்லூரியாக நிறுவினால், இதர கட்சியினரும் அரசியல் ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
இதை எழுதும் நேரத்தில் அவரது தளத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, பத்து லட்சத்தை நெருங்கியுள்ளது. என்னிடத்தில் ஆற்றல் மிக்க நூறு இளைஞர்களைக் கொடுங்கள். நான் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று விவேகானந்தர் கூறினார். இதோ அண்ணாமலையிடம் பத்து லட்சம் பேர் இருக்கிறார்கள். உலகையே மாற்றிக் காட்டலாம்.
பெரிதினும் பெரிது கேட்கும் அண்ணாமலைக்கு வாழ்த்துகள்.
