Tag: உடுமலை கி. ராம்கணேஷ்

  • முக்தி

    முக்தி

    உடுமலை கி. ராம்கணேஷ்

    சற்று நேரம் பொறுத்திருங்கள்
    அதற்குள் என்ன அவசரம்
    வாரிச் சுருட்டிக் கொண்டு
    எங்கேயும் ஓட முடியாது
    உங்கள் பேச்சுகளுக்குள் சிக்கி
    மூச்சு விட சிரமமாயிருக்கிறது
    அசைபோட இருக்கின்றன
    ஆயிரமாயிரம் விசயங்கள்
    எல்லாவற்றையும்
    மென்று ஜீரணிக்கும் வரை
    காத்திருந்தால் தான் என்ன?
    அதற்குள் நீங்கள் பேசுவதை
    எப்படி ஜீரணிப்பது?
    இன்னும் சற்று நேரத்தில்
    எல்லாம் என்னென்னமோ
    ஆகப்போகிறது.
    முடித்து விட்டேன்
    இப்போதாவது பேசுங்கள்
    என்னைப் பற்றி
    ஏதாவது நல்லதாக…
    நான் விடை பெறப்போகிறேன்
    அப்போது …
    நல்ல மவராசன்
    உயிர் போக இத்தனை பாடா?
    என்ற குரல் காதில் விழ
    இப்போது தன்யனானேன்…
    முக்தியடைந்து விட்டேன்.

    Share
  • பொரணி

    பொரணி

    உடுமலை கி. ராம்கணேஷ்

    என்றாவது ஒருநாள்
    அதைச் செய்யத்தான் போகிறேன்
    யாருமற்ற பொழுதொன்றில்
    நிகழத்தான் போகிறது
    கெக்கலி கொட்டிச் சிரிக்கும்
    கையும் வாயும் மௌனியாகும்
    என்னவென்று சொல்லித் தொலைக்க
    காலம் காத்துக் கொண்டுதான் இருக்கிறது
    முன்னதையும் பின்னதையும் ஒன்றாக்கி
    மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
    முடிச்சுப் போடத்தான் செய்கிறீர்கள்
    வெறும் வாயில் ஊரையே மென்று
    காறிக் காறித் துப்புகிறீர்கள்
    சாறில்லாமல் சோறு உண்டாலும்
    சண்டையில்லாமல் உண்ண மறுக்கிறீர்கள்
    ஒருநாள்
    நாவில் கூட ஈரமில்லாமல்
    சாகத்தான் போகிறீர்கள்
    அப்பொழுதுதான் புரியும் பொரணி

    Share