பொரணி

உடுமலை கி. ராம்கணேஷ்
என்றாவது ஒருநாள்
அதைச் செய்யத்தான் போகிறேன்
யாருமற்ற பொழுதொன்றில்
நிகழத்தான் போகிறது
கெக்கலி கொட்டிச் சிரிக்கும்
கையும் வாயும் மௌனியாகும்
என்னவென்று சொல்லித் தொலைக்க
காலம் காத்துக் கொண்டுதான் இருக்கிறது
முன்னதையும் பின்னதையும் ஒன்றாக்கி
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப் போடத்தான் செய்கிறீர்கள்
வெறும் வாயில் ஊரையே மென்று
காறிக் காறித் துப்புகிறீர்கள்
சாறில்லாமல் சோறு உண்டாலும்
சண்டையில்லாமல் உண்ண மறுக்கிறீர்கள்
ஒருநாள்
நாவில் கூட ஈரமில்லாமல்
சாகத்தான் போகிறீர்கள்
அப்பொழுதுதான் புரியும் பொரணி