Tag: உறுதிமொழி

  • ஹிட்லர் பாணியில் உறுதிமொழியா?

    ஹிட்லர் பாணியில் உறுதிமொழியா?

    அண்ணாகண்ணன்

    வலது கையை முன்னே நீட்டி உறுதிமொழி எடுப்பது, ஹிட்லரின் பாணி. நாஜிக்கள், வாழ்க ஹிட்லர் என்று கூறியபடி, இதே போல் வலது கையை நீட்டி வணங்கினார்கள். ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவேகியா போன்ற நாடுகளில் இவ்வாறு வணங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளில் இது வெறுப்புணர்வைத் தூண்டும் செயலாகக் கருதப்படுகிறது.

    தமிழ்கூறு நல்லுலகில் ஹிட்லரின் தாக்கம் ஆழமானது. துரை வைகோவின் முட்டிப் பட்டை, மிக அண்மைக் காலச் சான்று. ஹிட்லர் பாணியில் சீமானும் நாம் தமிழர்களும் உறுதிமொழி எடுப்பது, ஹிட்லரின் தாக்கத்தை உறுதிப்படுத்துகிறது. ஹிட்லர் பேசுவது போலவே வீராவேசமாகச் சீமான் பேசுவதும் தற்செயலானது இல்லை. வைகோவும் இவ்வாறு உறுதிமொழி ஏற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட எல்லா நிலைகளிலும் இவ்வாறு உறுதிமொழி எடுக்கின்றனர். பள்ளி நிகழ்ச்சிகளிலும் இதைச் சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது.

    இவ்வாறு கைநீட்டி உறுதி ஏற்பதன் வரலாற்றுப் பின்னணி, பலருக்கும் தெரியாது. இலட்சக்கணக்கான நாஜிக்கள், இவ்வாறு ஹிட்லரை வணங்கினார்கள். தங்கள் பகைவர்களை ஈவு இரக்கமின்றிக் கொன்றார்கள். 60 லட்சம் யூதர்களையும் யூதர் அல்லாத மேலும் 60 லட்சம் பேரையும் நாஜிக்கள் கொன்றுள்ளார்கள். சுமார் ஒன்றே கால் கோடிப் பேரைக் கொன்ற கொடுங்கோல் ஆட்சித் தலைவரைப் போற்றும் ஒரு குறியீடு இது.

    இந்தப் பின்னணி குறித்து இன்று பலரும் மறந்துவிட்டார்கள். உறுதிமொழி என்றாலே இப்படித்தான் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு இது வந்துவிட்டது. நமது மரபுக்கு ஏற்ற வகையிலான சைகையை, உடல்மொழியை நாம் பின்பற்ற வேண்டும். நாம் சத்தியம் செய்யும்போது, கையடித்துச் சத்தியம் செய்வோம். ஆனால், இவ்வாறு கைநீட்டிச் செய்வதில்லை. ஒரு கையை நெஞ்சருகில் வைத்து, இன்னொரு கையை அதன் மேல் வைத்து, சத்தியம் செய்வது போன்று உறுதிமொழி ஏற்பது நம் மரபுக்கு, வழக்கத்திற்கும் ஏற்றது. அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் கல்வியாளர்களும் இதைப் பரிசீலித்துத் தகுந்த வழிகாட்ட வேண்டும்.

    Share
  • மாநிலங்களவை உறுப்பினர் உறுதிமொழி – தமிழாக்கத்தில் சில சிக்கல்கள்

    மாநிலங்களவை உறுப்பினர் உறுதிமொழி – தமிழாக்கத்தில் சில சிக்கல்கள்

    அண்ணாகண்ணன்

    மாநிலங்களவை உறுப்பினராகக் கமல் ஹாசன், ராஜாத்தி சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் பொறுப்பேற்ற காட்சியைக் கண்டேன். அவர்கள் வாசித்த உறுதிமொழி வாசகத்தையும் கவனித்தேன்.

    ஆங்கில உறுதிமொழி வாசகம் இதுதான்

    Form of oath or affirmation to be made by a member of Parliament:—

    “I, A.B., having been elected (or nominated) a member of the Council of
    States (or the House of the People) do swear in the name of God / solemnly affirm that I will
    bear true faith and allegiance to the Constitution of India as by law established,
    that I will uphold the sovereignty and integrity of India and that I will
    faithfully discharge the duty upon which I am about to enter.”]

    தமிழில் உறுதிமொழி ஏற்றவர்கள் அனைவரும் ஒரே வசனத்தையே கூறினார்கள். சட்டத்தினால் நிறுவப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தின் மீது எனக் கூறினார்கள். இது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது என இருக்க வேண்டும். I will bear true faith and allegiance என்பதை உண்மையான பற்றார்வமும் பற்றுறுதியும் என்றார்கள். முன்னர், இது நம்பிக்கையும் விசுவாசமும் என இருந்தது. கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, உண்மையான நம்பிக்கையும் மாறாப் பற்றும் கொண்டிருப்பேன் என உறுதிமொழி ஏற்றனர்.

    பற்றார்வமும் பற்றுறுதியும் எனத் திருகலாகச் சொல்லாமல், உண்மையான பற்றும் உறுதியும் கொண்டிருப்பேன் என்றாலே எல்லோருக்கும் எளிமையாகப் புரியும். இங்கு இரண்டு முறைகள் பற்று வர வேண்டிய தேவையில்லை.

    I will uphold என்பதையும் பற்றி நிற்பேன் என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள். காத்து நிற்பேன் என எழுதலாம்.

    solemnly affirm என்பதற்கு formal and dignified manner என்றும் sincerity என்றும் பொருள் இருக்கிறது. கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர், உளமார உறுதி மொழிகிறேன் எனக் கூறியிருக்கிறார்கள். இன்று பொறுப்பேற்ற கமல் ஹாசன், ராஜாத்தி சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர், விழுமிய முறைமையுடன் உறுதி கூறுகிறேன் என்றார்கள். இது, சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தது போல் செயற்கையாக உள்ளது. உளமார என்பதே உயர்வானது.

    இதை யார் இவ்வாறு மொழிபெயர்த்தார்கள் என்று தெரியவில்லை. எனினும் பாராளுமன்றத்தில் உரிய குழுவினர் இதைச் சரிபார்த்தே அங்கீகரித்திருப்பார்கள். அப்படியும் இதன் தரம் சிறப்பாக இல்லை.

    எனினும், இன்று பொறுப்பேற்றுள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். அவர்களின் பணி சிறக்கட்டும். அவர்களின் முயற்சிகள் அர்த்தமுள்ளதாய் ஆகட்டும்.

    Share