மாநிலங்களவை உறுப்பினர் உறுதிமொழி – தமிழாக்கத்தில் சில சிக்கல்கள்
அண்ணாகண்ணன்
மாநிலங்களவை உறுப்பினராகக் கமல் ஹாசன், ராஜாத்தி சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் பொறுப்பேற்ற காட்சியைக் கண்டேன். அவர்கள் வாசித்த உறுதிமொழி வாசகத்தையும் கவனித்தேன்.
ஆங்கில உறுதிமொழி வாசகம் இதுதான்
Form of oath or affirmation to be made by a member of Parliament:—
“I, A.B., having been elected (or nominated) a member of the Council of
States (or the House of the People) do swear in the name of God / solemnly affirm that I will
bear true faith and allegiance to the Constitution of India as by law established,
that I will uphold the sovereignty and integrity of India and that I will
faithfully discharge the duty upon which I am about to enter.”]
தமிழில் உறுதிமொழி ஏற்றவர்கள் அனைவரும் ஒரே வசனத்தையே கூறினார்கள். சட்டத்தினால் நிறுவப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தின் மீது எனக் கூறினார்கள். இது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது என இருக்க வேண்டும். I will bear true faith and allegiance என்பதை உண்மையான பற்றார்வமும் பற்றுறுதியும் என்றார்கள். முன்னர், இது நம்பிக்கையும் விசுவாசமும் என இருந்தது. கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, உண்மையான நம்பிக்கையும் மாறாப் பற்றும் கொண்டிருப்பேன் என உறுதிமொழி ஏற்றனர்.
பற்றார்வமும் பற்றுறுதியும் எனத் திருகலாகச் சொல்லாமல், உண்மையான பற்றும் உறுதியும் கொண்டிருப்பேன் என்றாலே எல்லோருக்கும் எளிமையாகப் புரியும். இங்கு இரண்டு முறைகள் பற்று வர வேண்டிய தேவையில்லை.
I will uphold என்பதையும் பற்றி நிற்பேன் என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள். காத்து நிற்பேன் என எழுதலாம்.
solemnly affirm என்பதற்கு formal and dignified manner என்றும் sincerity என்றும் பொருள் இருக்கிறது. கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர், உளமார உறுதி மொழிகிறேன் எனக் கூறியிருக்கிறார்கள். இன்று பொறுப்பேற்ற கமல் ஹாசன், ராஜாத்தி சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர், விழுமிய முறைமையுடன் உறுதி கூறுகிறேன் என்றார்கள். இது, சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தது போல் செயற்கையாக உள்ளது. உளமார என்பதே உயர்வானது.
இதை யார் இவ்வாறு மொழிபெயர்த்தார்கள் என்று தெரியவில்லை. எனினும் பாராளுமன்றத்தில் உரிய குழுவினர் இதைச் சரிபார்த்தே அங்கீகரித்திருப்பார்கள். அப்படியும் இதன் தரம் சிறப்பாக இல்லை.
எனினும், இன்று பொறுப்பேற்றுள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். அவர்களின் பணி சிறக்கட்டும். அவர்களின் முயற்சிகள் அர்த்தமுள்ளதாய் ஆகட்டும்.
