1

சுருளி காந்திதுரை
suruligandhidurai@gmail.com

பால்ராசுக்கு மனசு என்னவோ போல் இருந்தது. இரவு ஒன்பது மணிக்கு பகல்போல் ஜொலிக்கும் வண்ணவண்ண டியூப்லைட், சீரியல் பல்புகள், விண்ணை முட்டும் அளவுக்கு ப்ரியா ஒலி ஒளி அமைப்பாளர்கள், மின் அலங்காரங்கள் செய்து இருந்தார்கள். மூன்றாம்நாள் நிகழ்வின் நிறைவுப் பகுதியாக அம்மன் மலையேறப்போறான்னு ஊர் மக்கள் எல்லாம் பேசிக் கொள்கிறார்கள்.

ஊரே மகிழ்ச்சி வெள்ளம். எல்லா வீட்டுலயும் சத்துக்குத்தக்கனக் கறிக்கொழம்பு வச்சு நாளை ஊரே கறிவிருந்து நடக்கிது.

ஊர் உறவு எல்லாம் அம்மனுக்கு நேர்ந்து விட்டக் கிடாய்கள் வெட்டப்பட்டு அவை டபராக்களில் கொதித்துக் கொண்டு இருக்கு.

எல்லா வயிறும் கறிச்சோறுக்காகக் காத்துக்கிடக்கு எப்படாச் சோத்தப் போடுவீங்கன்னு. ஆனால், ஊரே கறிச்சோறும், திருவிழாவின் நிறைவுப் பகுதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுதல் நிகழ்வுக்கான ஏற்பாடு, குமரிகள் அத்தை மக்க, மாமா மக்க மேல் மஞ்சள் நீர்ஊற்றி உரிமையை உறுதி செய்யப் போகிறார்கள்.

கழனியில் உருவான கல்கட்டங்களில் நகராகத் தெருவாக உருமாறிய நிலையில் இங்கே இதுக்கு வேறுபாடு அதிகமாக இருக்காது. இருந்தாலும்… சாமி கும்பிடவா, பொங்கல் வைக்கவோ, கிடா வெட்டவோ யாருக்கும் மறுப்பது கிடையாது.

அங்கு உள்ளூர்க்காரர்களுக்கு சிலக் கட்டுப்பாடும், பலத்தட்டுப்பாடும் இருக்கும். கிராமங்கள் தோறும் திருவிழா வேதனை ஏராளம். ஆனால் வெளியூரில் இருந்து பொழப்புத்தேடிப் புதிதா வந்து நாச்சியாபுரத்தில் குடியேறியவர்களுக்குக் கிடையாது. அவன் பொழைக்க வந்தவன். இங்கு வந்தவுடன் சாதியை அறிவித்து விடுவான். அதன் பின்னணியில் இயங்குவான். அதையே முன்னொட்டாகக் கொண்டு அடைமொழியால் அடையாளப்படுத்துவது வழக்கமாக்கிக் கொள்வான். அலுவல் நிமித்தமாகக் குடியேறியவர்கள் அதிகமாக அலுவல் சார்ந்தப் புழங்குப் பெயர் பயன்பாட்டில் இருக்கும்.

வக்கீல், வாத்தியார், பேங்குகாரர், டிரைவர், கண்டக்டர், டீச்சர் இப்படி அவரவர் வேலைக்குத் தகுந்தார்போல் அழைக்கப்பட்டார்கள். சாதிப்பெயரைக் கடந்து அலுவல் பெயர் நிற்க ஆரம்பித்துவிட்டது. அதுவே நிலைபெற்றது.

பால்ராசு செல்லாயி அம்மன் மீது பக்தியும் ஈடுபாடும் கொண்டவர். அவருடைய பொஞ்சாதி சங்கீதா இன்னும் கூடுதல் பக்தி கொண்டவர்.

இருவருமே பள்ளி ஆசிரியர்கள் என்பதால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், நாச்சியாப்புரத்துப் பிள்ளைகளை டவுனில் சேர்த்துப் படிக்கவைக்க ஊரோடு அனுக்கமானார்கள். இவ் அணுக்கம் கிராமத் தெய்வமான செல்லாயி அம்மன் மீதும் ஒட்டிக் கொண்டது.

ஆக அவர்களும் குடியேறி பத்துப் பதினைந்து வருடம் ஆகிப்போனது.

கிராமத்து மக்களோடு மக்களாக ஒன்றிப்போனார்கள். அவர்களின் பூர்வீகம் சின்னமனூர்ப் பக்கம் ஏதோ ஒரு கிராமம்.

செல்லாயி அம்மனின் சக்தி ஊரே அறிந்தது. அதிலும் பால்கார முனியாண்டி எப்பப்பாரு வாத்தியார் வீட்டுக்கு ஒன்னுன்னா மொத ஆளா வந்து நிப்பான்.

பழக்கவழக்கம், பிள்ளைக ரெண்டு பேத்தையும் வாத்தியார், டீச்சர் புண்ணியத்தில படிக்க வச்சு ரெண்டும் காலேஜ்ல பெரிய படிப்புப் படிக்கிறாங்க.

பால்கார முனியாண்டி, மூச்சு முன்னூறு தடவை செல்லாயி அம்மனைச் சொல்லிக் கொண்டே இருப்பான்.

ஊரே கறிவிருந்து செமத்தியச் சாப்பிட ரெடியாகிட்டேயிருக்கு. கறிவாசம் ஊர் முழுவதும் உலாவந்து கொண்டிருக்கு. ஒவ்வொருவர் நாசியிலும் கொழம்பின் சுவையை உணரத் தொடங்கியது. கறிக்கொழம்பு வாசனைதான். செல்லாயி அம்மன் இரவு சாத்தப்பட்டு காலையில் திறக்கவேண்டும். ஆட்டுககிடாய் வெட்டுவது நடந்துகொண்டு இருக்கும்.

சாவுக்குச் சங்கு ஊதுறான். இவன் சாகிறதுக்கே சங்கு ஊதுறான்.

இதுவரைக்கும் சாதிக்கொன்னு, தெருவுக்கு ஒன்னு, சங்கம் வாரியா, உழவர் சங்கம், டிரைவர் சங்கம், கடைக்காரர்கள் சங்கம். இப்படியாகக் கிடாய்கள் வெட்டப்பட்டு பின்பு தனித்தனியாக நேர்த்திக்கடன் கிடாய்கள் வரிசையாக வெட்டி அம்மனுக்கான நேர்த்திக்கடனை ஊரே செலுத்திய மகிழ்ச்சியில் இருந்தார்கள்.

எல்லாக் கிடாய் மூனுக்கொடம் ஏழு எட்டுக்கொடம் வரைத் தண்ணிய வாங்கிக்கிட்டு தலையைக் குழுக்கும். தலையைக் குழுக்கிட்டா கிடாய வெட்ட அம்மன் உத்தரவு கொடுத்துட்டாக… நம்பிக்கை. ஒவ்வொருவரும் சத்துக்குத் தக்கன வெள்ளாட்டம் கிடாய், செம்மறிக் கிடாய், இளம் குட்டி, ரெண்டு மூனு வருஷம் வளர்த்ததாவும் இருக்கும்.

இதில் எழைக்கடன் ஏழு வருஷம்… இப்படித்தான் வாத்தியார் வாராத சம்பளப்பாக்கி அரசாங்கத்திடம் இருந்து வேகமாக கிடைக்கனும், கிடைச்சா அது எப்படியும் புருஷன் பொஞ்சாதி இருவருக்கும் சேத்து அஞ்சு ஆறு இலட்சம் வரும்.

சங்கீதா என்னங்க ஆச்சுப் போயிப்பாருங்க, ஏங்க போயிப் பாருங்க…

அரியர் பணம் வந்தா பொன்னுப்பொருள் வாங்கலாம்ன்னு சங்கீதாவின் தொல்லைத் தாங்க மாட்டாம மெல்ல மெல்ல பால்ராசு பைல் நகர்ந்தது. சில நேரம் கடவுளிடம் வைக்கும் கோரிக்கை வேண்டுதல் போலப் பல தடைகளைக் கடந்து வரும் போகும்.

சாமானியன் அலுவலக சிப்பந்திகள் ஆசையும் தேவையும் நிறைந்தவர்கள்.

அவர்களுக்கு ஆயிரம் வேலை. இதில் பால்ராசின் சம்பள பாக்கி பைல் முதன்மையாகத் தெரிய வாய்ப்பில்லை.

வெள்ளிக்கிழமை நிறைஞ்ச பௌர்ணமி, ஏங்க வாங்கக் கோயிலுக்குப் போயிட்டு வருவோம்ன்னு கூப்பிட்டாள் சங்கீதா.

பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் குளிச்சு முடிச்சுட்டு பால்ராசு, சங்கீதாப் பிள்ளைக பாலச்சந்திரன், புனிதா ஆக நால்வரும் செல்லாயி அம்மன் கோயிலுக்கு தேங்காப்பழம், மாலை எல்லாம் எடுத்துட்டுப் போயி, தட்டுல வைச்சுக் கொடுத்தார்கள்.

அன்னைக்கின்னு… பாத்து ரெட்டைக்கிடா வெட்ட கூட்டம். யாரோ ஊருக்குள் மோட்டார் பைக்கில போயி விழுந்துட்டு வந்தவன் பொழைச்சதாலா… பையனுக்கு மொட்டைப் போட்டுப் பொங்கல் வைச்சிட்டு இருந்தாங்க.

பால்கார முனியாண்டி, பால்ராசு, சங்கீதா இருவரைப் பார்த்ததும், சார் வாங்க, என்ன சாமி கும்பிட வந்தீங்களா?

பேச்சுவாக்கில, துடியான தெய்வம். இன்னைக்கு மொட்டைப் போடுறவன் கிடந்தக் கிடைக்கு இவன் கிடந்த கிடைக்கு ஊரேப் பொழைக்கமாட்டேன்னு சொல்லுச்சு. ஆத்தாப் புண்ணியத்துல ஆயுசுக் கெட்டியா எழுதியிருக்கு. எனக்கு ஒரு வகையில தங்கச்சி மகன். மருமகன் மொறை வரும்…

டீச்சருக்கு இருப்புக்கொள்ள நமக்கு வேற சம்பளப்பாக்கி வரவேண்டியப் பணம் ஏழு எட்டு வருசமா கிடக்கு. தங்கம் கிராம் ரெண்டாயிரத்துல இருந்து நாலாயிரம் விஷம் ஏறிக்கிட்டே இருக்குன்னு…

சங்கீதா டீச்சர் கணக்குல புலி. சம்பளக் கணக்கும், தங்க வெலைக்கும் உள்ள ஏத்த இறக்கத்த உள்மனசு எதையோ சொல்லிட்டே இருந்துச்சு சங்கீதா டீச்சருக்கு.

அம்மனுக்குக் கிடாய் வெட்டியாச்சுன்னா கிடா வெட்டி மறுப்பொழுது வரை கதவுத் திறக்கமாட்டாங்க போங்கச் சார்ன்னு.. முனியாண்டி சொல்ல சொல்ல வேகமாக சாமி கும்பிட முன்னே வந்தார்கள்.

யோவ் பூசாரி, மொதல்ல வாத்தியார் வீட்டுக்குப் பூசைய முடிச்சு அனுப்பிவிடுன்னு… பால்கார முனியாண்டி வேகம் பண்ணாரு.

பால்ராசு அவசரமில்ல முனியாட்டி குறுகிக்கிட்டா…

சார், கிடா வெட்ட முன்ன, நம்ம பூசைய முடிக்கனும். சும்மா இருங்க சார்.

பூசாரி வந்து சங்கீதாவிடம் இருந்த தாம்பாளத்தட்டை வாங்கிட்டுப் போனார். இப்படியாக பத்துப்பேர் மேல வரிசையாக சூடம் பத்தி, பூ மாலை எல்லாம் வாங்கிட்டுப் போயிப் பூசையை ஆரம்பித்தார்.

கோயில்ல கட்டியிருந்த மணியைக் குழந்தைகள் போட்டிப் போட்டு அடிக்க…

திடீர்னு ஒரு அம்மாவுக்கு சாமி வந்திடுச்சு. பல்லக் கடிப்பதும், கையையும் உடம்பையும் முறுக்கிட்டு குலுக்கிட்டு ரெண்டு சத்தம், இருந்த ஆளுக மிலிட்டிரிலே நிக்கிற மாதிரி வெறப்பா இல்லாம பவ்வியமாக நின்றார்கள்.

சாமி வந்த அம்மாட்ட அங்ஙண இருந்த ரெண்டு மூணு பேர் கால்ல விழுந்து எழுந்தார்கள்… போடாக் காப்பாத்தித்தாரேன்னுச்சு.

யாரோ போய் சாம்பல் நீட்டவும், போடா ஆத்தாக் காத்துக் கொடுக்கிறேன். இப்படியாக மருளாடிப் பேச.

ரெண்டு மூனு பேருக்கு சாம்பலப் போட்டுப் பூசிவிட்டு, போ நினைச்சக் காரியம் கைகூடும். அதுவே, சங்கீதா பக்கம் திரும்பியது. ஏத்தாக் கவலைப்படுற? ஆத்தாக்கிட்ட வந்துட்டேளே… நான் பாத்துக்கிறேன். உம் கோரிக்கையை எம் காலடியில போட்டுட்டுப் போ. போடா, எங்களாங்கன்னு ரெண்டு மூணு தடவப் போயிட்டு வரச் சொல்லு. முடிச்சுத் தாறேன். முடிச்சுத் தர்றேன். சத்தியம் சத்தியம்…

பால்ராசுக்கு எதுவுமே புரியல.

சங்கீதா தலையை ஆட்டினாள். மொகத்தில ஆயிரம் டியூப் லைட் வெளிச்சம் மின்னியது. அந்த அம்மா சாம்பலப் போட, அதுக்குள்ள பூசாரி பூசையை ஆரம்பிச்சுட்டார்.

சங்கீதா நினைச்சு வந்த காரியம் “அரியர் பணம் வாங்கியது” போன்ற மகிழ்ச்சி.

பூசாரி சங்கர் தேங்காப் பழத்தட்டோட நீட்ட வாங்கிட்டு, முனியாண்டியையும் சாமியாடுன அம்மாட்டையும் சொல்லிட்டு செல்லாயி அம்மன் கோயில இருந்து வீட்டுக்கு நகர்ந்தார்கள் நால்வரும்.

பால்ராசும் சங்கீதாவும் வீடு வரைக்கும் பேசிக்கிட்டே போனார்கள்.

சங்கீதா நல்ல கலர்னு சொல்ல முடியாது. இருவரும் ஜாடிக்கு  ஏத்த மூடி. ரெண்டு பேரும் உயரம் வளர்த்தியும் நிறமும் “சோதையானப் பூர்ணிக்காளைகள் போல் இருந்தார்கள்.”

அரியர் பணம் கிடைச்சதும், சங்கீதாவுக்குத் தாங்க முடியல. ஏங்க… ஏங்க… ஏங்க… மெல்ல மெல்ல வாய் திறந்தாள் சங்கீதா.

செல்லாயி அம்மனுக்கு ஆட்டுக்கிடாய் வெட்டுவதாக நேர்த்திருக்கேன்னு இழுத்தார்.

பால்ராசு நான் நினைச்சேன். சொல்லியிருந்தா ரெண்டு மூனு மாசத்துக்கு முன்னே எங்க அண்ணகிட்ட ஆட்டுக் குட்டி வாங்கி விடச் சொல்லியிருப்பேன்ல… செலவு குறையுமில்ல..

பங்குனி மாசம் சாமிகும்பிடும்போது நேர்த்திக்கடன நிறைவேத்திடலாங்க.

உம் உம்ன்னு பால்ராசுத் தலையை ஆட்டினான். பங்குனித் திருவிழா வந்திடுச்சு. அம்மனுக்கு ஊர் சாட்டிக் கொடிக் கட்டியாச்சு. பால்ராசுவின் அண்ணன் திருமங்கலம் வெள்ளிக்கிழம சந்தையில மொரட்ட வெள்ளாட்டம் கிடாய வாங்கியாந்து கட்டியாச்சு.

நாச்சியாபுரம் செல்லாயி அம்மன் திருவிழா கோலாகலமா நடந்தது. அம்மன் மஞ்சள் நீராட்டுக்கு தயாராகி விட்டாள். மூன்றாம் நாள் இரவு கிடா வெட்டுதல் நடைபெறும். பால்ராசுவின் அண்ணன் நல்லா உருமாக்கட்டிக் கிடாயப் பிடிச்சிட்டு நடக்க, பால்ராசு பிள்ளைக பெஞ்சாதிக் குடத்தில மஞ்சள் நீர் கலந்து எடுத்து வந்தாள்.

கோயில் முகாமைத்தாரர்கள் கிடாய் வெட்டிய பின்னர், உள்ளூர் ஆட்கள் அடுத்து பால்ராசுக் கிடாய் கம்பீரமாய் வரிசையில் நின்றது.

வரவேண்டிய சம்பளபாக்கி (அரியர்) நேர்த்திகடன் நிறைவேற்ற மகிழ்ச்சியில் புருஷனும் பெஞ்சாதியும் வெள்ளாட்டுக் கிடா முன்னே போக பின்னே போனார்கள்.

ரேடியோச் சத்தம் காதை கிழித்தது. தெரு எங்கும் டியூப் லைட், சீரியல் பல்பு அலங்காரம், ஊர் மின்வெளிச்சத்தில் ஒளிர்ந்தது.

கோயில் முன்பு கிடாய் நிறுத்தப்பட்டது. எங்கிட்டோக் கிடந்து பால்கார முனியாண்டி வந்துவிட்டான்.

கிடா வெட்டா, தேங்காய் பழம் தட்டு எல்லாம் கோயிலுக்குள் பூசைமுடிந்து வெளியே வந்தது.

சங்கீதா பெருமகிழ்ச்சி, ஊர்ல இருந்து உறவுகளை அழைத்திருந்தார். அவர்களும் வேன் பிடிச்சு வந்துவிட்டார்கள்.

பொழைக்கப்போன இடத்தில் வீடுவாசக் கட்டி மகளும் மருமகனும் நல்லாயிருக்கிறாங்கன்னு ஊர்த் திருவிழாவுலக் கிடா வெட்டிக் கறிச்சோறு போடுறதுன்னாச் சும்மாவா?

உறவுகள் வந்து சேர்ந்தார்கள். மந்தையிலக் கூட்டம் செமத்தியானக் கூட்டம். கிடாவெட்டும் இடமே ரத்தமும் சகதியுமாக கிடக்கு..

வேட்டி சட்டைக் கரைப்பட்டுப் போகும். யாராச்சும் ஒரு ஆளு கயிறப்பிடிங்கன்னு மஞ்சத்தண்ணிய ஊத்துனதும். அங்ஙன இருந்த பெருசுகக் குலவப்போட கிடாய் முன்னை விடக்கிடாய்

“நீட்டி விரப்பாய் நின்னது”. மார்நாடு கருப்பச்சாமி அருவா மாதிரி.

தலையிலத் தண்ணிய ஊத்தியதுமே ஆட்டுக்கிடாய் தலையைக் குலுக்கனும்.

பால்ராசுவின் வெள்ளாட்டம் கிடாய் நீட்டிய கழுத்தும் உடம்பும் வாளிப்பாக நின்னது. அந்தா இந்தான்னு பத்து குடங்களுக்கு மேல் தண்ணி ஊற்றிக்கிடாய் குலுக்கல…

செய்தி மெல்ல மெல்ல காதுகளைக் கடந்து ஊருக்குள் பயணப்பட்டது.

விளம்பரப்படுத்த பால்கார முனியாண்டி வாத்தியார் வீட்டுக்கிடான்னு…

இன்னும் தலையக் குலுக்கல.. மார்நாடு கருப்பசாமி சாமியாடி ஆலமரத்துப்பட்டிப் பழனியாண்டிக் குடும்பன் வகையறா ஆட்கள் வந்து விபூதி போட்டா கிடாய் தலைக் குழுக்கிட்டுப் போகுது. கிடாய் காட்சிப் பொருளாய் நின்னது. கொட்டகை பூராவும் தலைகள்.

பால்ராசுவுக்கும் சங்கீதாவுக்கும் மானப்பிரச்சனை. யாரு இன்னாரு வாத்தியார் வீட்டுக்கிடாவா? என்று பேச்சு. இதில ரெண்டு பெருசுக.

நம் ஆத்தா பத்தி என்ன தெரியும். சுத்தபத்தமா இருக்கனும். சாமியாடியக் கூப்பிட்டு விபூதி போடச்சொல்ல வேண்டியது தானே? அவர் வந்து ஆடி ஆங்காரம் காட்டிப் பாவம் ஆட்டுக்காரவுக புருசனும் பொஞ்சாதியும் காலுல விழுந்து… எதுவுமே நடக்கல. கிடாய் ஊத்துற தண்ணிய வாங்கிட்டு சும்ம நிக்கிது.

எப்பா, நம்ம ஊருக்குள்ள இதுவரைக்கு இப்படி நடந்ததுன்னு நான் கேள்விப்படலன்னு இருவரும் பேசிக்கொண்டார்கள்.

என்னடி கொடுமையா இருக்கு. நானும் வாக்கப்பட்டு வந்து இருபத்து அஞ்சு வருசம் ஆகுது. இதுநா வரைக்கும் இப்படிக் கேள்விப்படல… சின்னாளு, பெரியாளு, மாத்தி, மாத்தி செல்லாயியிடம் மண்டியிட்டு வேண்டினார்கள். அன்னைக்கு சாமியாடி அம்மா காதுக்குப் போய்ச்சேர அது உயிர வெறுத்துட்டு வந்து…

எத்தா, எம் பிள்ளைகப் பொளைக்க வந்த இடத்துள ஆசைப்பட்டு உம் இடத்துல இருக்கிதுக.

சின்னஞ்சிறுசு. அறிஞ்சும் அறியாமலும் தெரிஞ்சம் தெரியாமலும் நடைமுறை தெரியாதுன்னு… நீ தான் பொறுத்துக்கன்னும்.. மங்குமங்குன்னு ஆடா,

போடா எங்க அண்ணே வீட்டுக்குள்ள இருக்கான். அவன்தான் எங்களப் பாதுகாக்கிறவன். குமராண்டி மகன் குமராண்டி அவன்கிட்டப் போத்தா மகளே…

உம் கவல  தீரும்…

கெடா வெட்ட நின்னவுக வாயில இருந்துப் போப்பா, போயிப் பெரியவர் வீட்ல விபூதி வாங்கிட்டு… இங்க நடந்ததச் சொல்லு… பத்து அம்பது கொடம் தண்ணி ஊத்தியும் எல்லாம் காணிக்கையும் போட்டாச்சு… என்னான்னு தெரியில.

அவுல கால்ல விழுங்க…

ஊரின் கிழக்கே போனாப் பழையக்கார வீடு இருள் மண்டிப்போனநிலையில்ல, செல்வாக்கியமா இருந்த வீடு இப்பப் பராமரிப்பு இல்லாமல் கிடந்தது.

பால்ராசு முகத்தில கவலை ரேகை, என்னவோ ஏதோ… என்னத் தப்பு எதுவும் புரியாமல் “பல்வலி வந்தவன் பேசாமல் இருப்பதைப் போல போயி நின்னான்.”

உள்ளூர் ஆட்கள் கூட வந்தவர்கள் விலக்கிச் சொன்னார்கள். சூடம் பத்தி வாங்கியாறப்பட்டது.

ஏய் ஏலா முத்துராக்கு எந்திரிச்சு அம்மில இம்புட்டு முனைமுறியாத மஞ்சள் அரைக்கனு முத்துராக்கு எதுவும் பேசல.

அஞ்சறைப்பட்டியில் இருந்து மஞ்சளை நீட்டினாள். அங்ஙன இருந்த அடுப்பில் இருந்த சம்பல எடுக்கும் முன்ன பளுப்பேரிப்போன வேட்டிய இருக்கிக்கட்டி மேலே துண்டைக் கட்டிக் கொண்டார்.

மஞ்சள முகத்துக்கு நேர கொண்டு போனார். எச்சிலைத் துப்பினார். கவுள் அடிக்கிதே. சீசீன்னு துப்பினார்… யார்டா இங்கியா… ன்ன பேசிக்கிட்டே,

டேய், எங்கடா சூடம் வாங்கப் போனவன், வேகமா வந்து சூடத்த நீட்ட,

வலது கையில் மஞ்சள் அதுக்கு மேல சாம்பல், அதுக்கு மேல சூடம்..

ஊம்… பத்த வையிடா, எல்லாம் கட்டளை தான்.

கிழக்கப் பார்த்து நின்னு சூடம் உள்ளங் கையில எறியுது, எறியுது. எறிஞ்சுட்டே இருக்கு.

போடா இந்த மஞ்சள அரைச்சு வைச்சுட்டு பதினொருப் பணம் தண்டனைக் கட்டிட்டு, உம் வீட்டுப்போய்…

எம் தம்பி தங்கை அதுதாண்டா உன் குலத் தெய்வத்துக்கு இருப்பத்தோரு பணம் முடிச்சு வச்சுட்டு. டேய்ன்னு குமராண்டிப் போட்டச் சத்தம், தெருவே அங்கதான் நிக்கிது.

மஞ்சள அரைச்சு உம் சாமிக்கு வச்சுட்டு வீட்டுல தெளிச்சு விட்டுட்டு குளிச்சி ஈரத்துணிமணியோட நிறைக்கொடத் தண்ணியோட வாடா… பாக்கலாம்.

நான் அங்க இருந்துக் காத்துக் கொடுக்கிறேன். போடு இருப்பத்தொரு உக்கி… உம் வீட்ல இருபத்தோரு உக்கி போடனும்.

சொல்லவும் பால்ராசு எதுவும் பேசாமல் சாவிக் கொடுக்கப் பொம்மை மாதிரியே ஆகிட்டார்.

பால்ராசும் சங்கீதாவும் போனாப் பிறவியில செய்த பாவமா என எண்ணும் அளவுக்கு மனம் சோர்ந்து விட்டார்கள்.

ஊர்ல இருந்து வந்த உறவுகள் கஞ்சித் தண்ணியில்லாமக் கிடக்கு.

ஏன்டாக்கிடா வெட்ட நேந்துக்கிட்டது குத்தமாடா கடவுளே! நாங்க ரெண்டு பேரும் ஒரு மாசமா சுத்தமா இருக்கோம்.

பால்ராசும், சங்கீதாவும் மனத்துக்குள் பேசிக் கொண்டார்கள்.

எப்படி என்னதாண்டா, தப்புப் பண்ணுனோம். வீட்டுக்குப் போன வேகத்தில கூடுதலா ரெண்டு மஞ்ச சேத்து…

சங்கீதா அரைச்சுட்டு வீட்டுல குலத் தெய்வத்த வேண்டிட்டுக் குடத்துல மஞ்சளக் கறைச்சுக் குடத்தில தண்ணி கொண்டு வந்தார்கள் இருவரும்.

ரெண்டு பேரும் எதுவும் பேசல.

நடந்து கோயிலுக்கு வராக. ஊரே அவுக ரெண்டு பேத்தையும் வேடிக்கை பாக்கிது. அவுக கிடா தான். அவுக கிடா தான். “கிடாக் குலுக்காம நிக்கிது”. அவுக கிடாதான்.. கேட்காதக் காதுகளும் இல்ல, சொல்லாத வாயும் இல்ல… ஒரே நாள்ல ஊர் பூராவும் பேசுப்பொருள் ஆகிப்போனார்கள்.

வெட்கம் புடுங்கித் தின்னுது. பால்ராசுவுக்கும் சங்கீதாவுக்கும்…

இதுவுக்கு மேல வேற என்ன வேணும். இருவர் இதயமும் ஒரே மாதிரி துடித்தன. லப்டப்… லப்டப்… லப்டப்… லப்டப்… நிதாமான யோசித்தார்கள்.

பால்ராசுக்கு மனதில் உதயமானது. இந்த சரவணன் சார் வம்பக் கருவட்டை வச்சு நம்மள வம்புள மாட்டி விட்டான்… மனுசன்?

சங்கீதா டீச்சருக்கு மனதில் ஓடி ஓடி மோதி வெளியே வந்தது. செல்வி டீச்சர் பெண்ணு பெரிய மனுசியாகிருக்கு… முட்டைக் கொண்டாந்து வேணாம் வேணாம்ன்னு சொல்ல சோத்துல வச்சுட்டுப் போயிருச்சு…

நான் சாப்பிடக் கூடாதுல்ல.. அப்படியே கொட்டிட்டேன்.. அவருக்குத் தெரிஞ்சாக் கொண்டே போட்டுடுவார். அவளுக்குத் தெரிஞ்சுச்சு… கொட்டு இல்லாம குலவ இல்லாம ஆடுமா? எல்லாம் கிரகம்…

இரவு நடுசாமத்துக்கு முன்னக் கிடாய் வெட்டப் பூசாரி பறந்து கொண்டிருந்தார். குமராண்டி கோயில் நின்னார். பூசாரி சூடாம் காண்பித்தார்.

டேய், சின்னஞ் சிறுசு… என்னக் கொறை இருந்தாலும் நீ ஏத்துக்கிடனும் மேலைக்கு… நல்லாச் செய்யுறோம்… உனக்கு ரெட்டைக்கிடா வெட்டுறேன்… பால்ராசும் சங்கீதாவும் வேண்டிக் கொண்டார்கள் ஒரே மாதிரியாக?

டேய், குலுக்குடாத் தாயின்னு… அருள்வந்து ஆடியமேனிக்கு தண்ணியைக் குமராண்டி ஊத்தவும்..

டேய், குலுக்குடா, குலுக்குடா இன்னு என்னவேனும் கிடாயா வெட்டுவதற்கு…

அயோத்தி சேர்வை அரிவாளோடு நிக்கிறார். சாமியாடி சொன்ன மாத்திரத்தில் ஆட்டுக்கிடாய் தலைய குலுக்கியது. மீண்டும் தண்ணி ஊத்த மூனு முறை தலையைக் குலுக்கியது. இதுவரை ஊத்தியக் குடத்துக்கு அளவே இல்லை. பால்சாமியும் சங்கீதாவும்

இருவரும் குமராண்டிக் காலில் கிடந்த கோபத்தில் விழுந்தது. அழுதமேனிக்கு எழுந்தார்கள்.

மடியில் இருந்த சாம்பலைப் பூசிவிட்டார். மேலைக்கு நல்லா செய்யுங்க. சாமிக்குப் பயப்படுங்க.

அதுக்குள் வெள்ளாட்டம் கிடாய் தலைவேறு உடம்பு வேறாக துண்டாகக் கிடந்தது மண்ணில்…

பின்னத்தங்கால் சப்பை சாமியாடி வீட்டைத் தேடிப்போனது.

தலையும் முன்னத்தங்காலும் காவக் கொடுக்கப்பட்டது. காவக்காரக வீட்டுக்கு. இரவு பனிரெண்டு மணி ஆயிருச்சுன்னு பூசாரி கோயில் திரையை இழுத்துவிட்டு கதவை அடைத்தார்.

ஊரே வாத்தியார் வீட்டுக்கிடா குலுக்கிறுச்சு. யாரோ அடுத்த ஆண்டு ரெட்டைக்கிடா வெட்டுறேன்னு வேண்டிய பின்னாடி தான் ஆத்தா செல்லாயி அம்மான் ஏத்துக்கிருச்சாம்…


சு. காந்திதுரை சுயவிபரக் குறிப்பு:

சைவத்தைத் தமிழாகவும், தமிழைச் சைவமாகவும் ஆராதனை செய்கின்ற மதுரை தியாகராசர் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுபவர் முனைவர் சு. காந்திதுரை அவர்கள். அறுபது வயதினை நெருங்கும் வேளையில் பதினாறு வயது இளைஞனாய்ச் சுறுசுறுப்பாய் இயங்குகிறார். தனது குழவிப்பருவம் தொடங்கி இன்னாள் வரையிலான நினைவுகளைத் தோண்டுகிறார். சமூகத்தினை நுண்மையாய் கவனிக்கிறார். படைப்பாக்குகிறார். இலக்கியக் கூட்டங்களில் தொடர்ச்சியாய் பங்கெடுக்கிறார். எவ்விதச் சமரசமும் இன்றி தனது கருத்தினை முன் வைக்கிறார். வட்டார வழக்கினை உயர்த்திப் பிடிக்கிறார். புதிய படைப்பாளர்களுக்குப் பாடமாகிறார். விதைகள், பூஞ்சிரிப்பு, புதுவாழ்க்கை, ஒற்றைவாளி, கருவறை, சாமி போன்ற சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்.


 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.