Tag: எஸ். பழனிச்சாமி

  • மனதில் நிறைந்த மக்கள்திலகம்

    —  எஸ். பழனிச்சாமி.

     

    லண்டனில் பி.பி.சி. தமிழோசை ரேடியோவிற்கு முதன் முதலாக அளித்த பேட்டியில் எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை, சுருக்கமாக இப்படிச் சொல்லி இருந்தார்.

    ‘இலங்கையிலே பிறந்து கேரளாவில் வளர்ந்தேன். என்னுடைய இரண்டரை வயதில் என் தந்தை இறந்து விட்டார். என்னுடைய தந்தையும், பாட்டனாரும் பெரும் லட்சாதிபதிகளாக இருந்தவர்கள். பெரும் பணக்காரர்கள். வசதியும் வாய்ப்பும் மிகுந்தவர்கள். ஆனால் கேரளத்தில் மருமக்கத்தாயம் என்ற ஒரு வழக்கம் இருந்த காரணத்தால் அதாவது குழந்தைகளுக்கு தன் தந்தையின் சொத்துக்கள் இல்லை என்ற காரணத்தால் நாங்கள் அனாதைகளாக்கப்பட்டோம். என் தாயினுடைய அரவணைப்பில்தான் நாங்கள் வளரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. என் தந்தை மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தார், பிரின்சிபாலாக இருந்தார். அவர் பிரின்சிபாலாக இலங்கையிலே பணியாற்றும்போது கண்டியில்தான் நான் பிறந்தேன். தந்தை இறந்தபிறகு ஐந்து வயதிற்குள்ளேயே தமிழகத்துக்கு வந்து விட்டேன். முதன்முதலாக நான் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்ட மொழி தமிழ். எனக்கு அறிவு தெரிந்த நாள் முதல் பார்த்துக்கொண்டும் பழகிக் கொண்டும் இருக்கின்ற மக்கள் தமிழ் மக்கள். என் உடம்பில் இத்தனை ஆண்டுகளாக குருதி வளர்ந்திருக்கிறது, என் உடலில் சூடு தணியாமல் இருக்கிறதென்றால், நான் வளர்ந்திருக்கிறேன், வாய்ப்புப் பெற்றிருக்கிறேன் என்றால் அது தமிழ் கூறும் நல்லுலகம் தந்த வாய்ப்பாகும். ஆகவே அந்த தமிழ் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் என்னை அறியாமலே என்னை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது. என் தாயின் அரவணைப்பில் வளர்ப்பில் வளர்ந்த காரணத்தால் எனக்கு அதிக கல்வி கற்றுக் கொள்ள முடியவில்லை. ஏழாவது வயதில் நாடகக் கம்பெனியில் சேர்ந்து விட்டேன். அதன் பிறகு 1935 ல் சினிமாவில் நடிக்கத் துவங்கினேன். 1929-30 என்ற கால கட்டத்திலேயே நான் காங்கிரஸ் கட்சியில் அங்கத்தினராக இல்லாவிட்டாலும், ஒரு ஊழியனாக இருந்தேன். 1933-34 காலகட்டத்தில் அதில் அங்கத்தினராக பதிவு செய்து கொண்டு விட்டேன். அதன் பிறகு சில நாட்கள் இருந்து, எனக்கு அங்கே செயல்பட்ட முறைகளிலே குறைபாடுகள் கண்டதாக எண்ணியதால், விருப்பு வெறுப்பற்ற நிலையில் நான் வளர வேண்டும் என்று நினைத்த காரணத்தால் அதிலிருந்து விலகி, அரசியலில் எந்தவித தொடர்பும், ஈடுபாடும் இல்லாமல் இருந்தேன். ஆனால் அன்று முதல் நான் ஒரு தேசியவாதியாக எப்பொழுதுமே இருந்து கொண்டிருப்பவன். அது மட்டுமல்ல மகாத்மாவின் கொள்கையிலே பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டவன். அவைகளையெல்லாம் ஒருங்குசேர நான் தமிழகத்திலே கண்ட தலைவன் பேரரறிஞர் அண்ணாதான். அவருடைய புத்தகங்களைப் படித்து விட்டு அவருடைய நியாயமான கோரிக்கைகள்தான் தமிழகத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதியதால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தேன். அண்மையில் 1972ம் ஆண்டு அக்டோபர் 10ந் தேதி அன்று குற்றமற்ற நான் வெளியேற்றப் பட்டேன். வெளியேற்றப்பட்ட பிறகு தொண்டர்களுடைய, மக்களுடைய விருப்பத்தின்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை நான் உருவாக்கினேன். இப்பொழுது அதில் நான் முதல் தொண்டனாக இருக்கின்றேன் என்று சொல்லுகின்றார்கள். நான் அதிலே பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன்.’

    அதே பேட்டியில் பிரிட்டனில் உள்ள மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் உங்களுடைய அனுபவம் என்ன என்ற கேள்விக்கு எம்.ஜி.ஆர் அவர்கள் இப்படி பதில் சொல்லியிருப்பார்.

    ‘1930ம் ஆண்டு மதுவிலக்குப் போராட்டத்தில் மறியல் செய்த நேரங்களில் எல்லாம் பிரிட்டிஷ் ஆதிக்கம் வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தோடு போராடியவன். அதே பிரிட்டனுக்கு வந்து இங்கு மக்களைக் காணும்போது, இன்று காமன்வெல்த் அமைப்பிலே அங்கத்தினரான இந்தியக் துணைக்கண்டத்துக்கும் பிரிட்டனுக்கும் உள்ள உறவையும், பிரிட்டிஷ் மக்கள் இந்தியர்களை மதிக்கின்றார்கள் என்பதையும் இங்கு நான் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டான் அடிமை என்பது நிலைமை மாறி, சுதந்திர பங்காளி என்ற நிலையிலே இந்தியரும் ஆங்கிலேயரும் இணையும் போது அதிலே மகிழ்ச்சியும் பெருமிதமும் இருக்கிறது என்பதை நான் இங்கு காணுகிறேன்.

    பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இந்திய மக்களுக்கு அவர்களது மொழியாலும், செயலாலும் இந்தியர்களின் சுதந்திர உணர்வைத் தூண்டி விட்டார்கள். அவர்கள் நமக்கு அரசியல் சிந்தனைக்கு ஆக்கம் அளிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியவர்கள் என்று நான் சொல்வேன். ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆங்கிலேயர்கள் மூலமாக ஆங்கிலம் கற்று உலக விஷயங்களையும், விஞ்ஞான உயர்வையும் அறிந்து பிறகு அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற ஆங்கிலம் பயன்பட்டது.’

    இந்தப் பேட்டியில் இருந்து எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இருந்த தமிழ் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும், நம் இந்திய நாட்டின் மீது அவருக்கு உள்ள பற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர் அரசியலில் வெற்றி பெற்றதற்கு அடிப்படையான விஷயங்கள் என்ன என்பது இப்போது தெரிகிறதல்லவா?

    எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை வரலாறும், அவருடைய திரைப்பட மற்றும் அரசியல் செயல்பாடுகளும் தமிழகத்தோடும், தமிழ் மக்களோடும் இரண்டறக் கலந்து விட்ட ஒன்றுதான். அனைவரும் அறிந்த விஷயங்கள்தான். இன்று வரை எம்.ஜி.ஆர் என்ற மந்திரச் சொல் தமிழர்களிடையே எத்தகைய மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருக்கிறது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

    சிறு வயதில் வறுமையில் வாடினாலும் பல நல்ல குணங்களை அவர் தன் தாயிடமிருந்து கற்றுக் கொண்டார். அந்தக் குணங்களே அவரை வாழ்க்கையில் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தன் தாயிடம் அவர் கொண்ட அன்புதான் பின்னாளில் அரசியலில் காலடி எடுத்து வைத்த போது தாய்க்குலத்தின் பேராதரவைப் பெற்றுத் தந்தது.

    ஆரம்ப காலத் திரைப் படங்களிலும் தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக்காத்த தனயன், தாய்க்குத் தலை வணங்கு, தாய்க்குப் பின் தாரம், தாய் மகளுக்கு கட்டிய தாலி, தெய்வத்தாய், தாயின் மடியில், கன்னித்தாய், குடியிருந்த கோயில், ஒரு தாய் மக்கள் என்று தாயை முன்னிலைப் படுத்தியே அவருடைய படங்களின் தலைப்புகள் அமைந்தன. மாபெரும் வெற்றியையும் பெற்றுத் தந்தன.

    சினிமாத்துறையைப் பொருத்தவரை நடிப்பு மட்டுமல்லாது, தயாரிப்பு, இயக்கம், வினியோகம் என்று பல துறைகளிலும் ஈடுபட்டு வெற்றி பெற்றார். சினிமாவைப் பற்றி அணுஅணுவாக அறிந்து வைத்திருந்தார். பொதுமக்களின் பார்வையிலிருந்து சினிமாவை அணுகினார். எந்த மாதிரி கதையம்சம் கொண்ட படங்கள் மக்களைக் கவரும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருந்தார். அந்த ஞானமே திரையுலகில் அவரது மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்தது. அவர் மொத்தம் 136 படங்கள் நடித்திருக்கிறார். அதில் 86 படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி வாகை சூடி இருக்கிறது.

    சிறு வயதில் பிழைப்புக்கான ஒரு தொழிலாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து, பின் சினிமாவில் நுழைந்த எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு கட்டத்தில் திரைப்படத் துறையில் வல்லுனர் ஆனார். தான் நடிக்கும் திரைப் படங்களில் கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என்று ஒவ்வொன்றிலும் அவரது தாக்கம் இருக்கும். அவர் சொல்வது போல் எல்லாம் அமைந்து படம் வெளியானால் நிச்சயம் அந்தப் படம் வெற்றிப் படமாக இருக்கும். அந்த அளவிற்கு அவரது அறிவாற்றலும், ஆளுமையும் வியாபித்து இருந்தது.

    அவருடைய திரைப்பட வெற்றி ஃபார்முலாவை பயன்படுத்தி இன்றும் ஒரு சில படங்கள் வெற்றி அடைகின்றன. இருந்தாலும் அவருடைய திறமைக்கும், ஈடுபாட்டிற்கும் சமமாகச் சொல்லக் கூடிய ஒருவரை காண்பது அரிது. திரைப்படங்களில் அவருடன் பணியாற்றிய யாருடைய பேட்டியை படித்தாலும், ‘எம்.ஜி.ஆர் அவர்கள் யாரைச் சந்தித்தாலும், சாப்பிட்டீர்களா என்றுதான் முதலில் கேட்பார்’ என்று சொல்லி இருப்பார்கள். அந்தளவுக்கு மனிதநேயத்தோடு வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

    இசையமைப்பாளர்கள், இசையமைக்கும் போது சரணத்துக்கும், பல்லவிக்கும் என பலப்பல மெட்டுக்களை எம்.ஜி.ஆரிடம் போட்டுக் காண்பிப்பார்களாம். ஆனால் அவரோ, இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று எடுத்து இதை சரணத்திலும், அதைப் பல்லவியிலும் போடுங்கள் என்பாராம். இசையமைப்பாளர்களுக்கு அது வினோதமாக இருந்தாலும் அதே போல் செய்து கொடுப்பார்களாம். அந்தப் பாடல் வெளியாகும்போது மிகப்பெரிய வரவேற்பைப் பெறுமாம். எம்.ஜி.ஆரின் படப்பாடல்கள் இன்றளவும் ரசிக்கத் தக்கதாக இருப்பதற்குக் காரணம் அவருடைய ஞானம்தான்.

    எம்.ஜி.ஆருக்காக பெரும்பாலான பாடல்களைப் பாடிய மறைந்த T.M. சௌந்திரராஜன் அவர்கள், எம்.ஜி.ஆருக்காகவே தன் குரலை சிறிது மாற்றிப் பாடியதாக ஒரு பேட்டியில் சொல்லி இருப்பார். தனக்குத் திருப்தி ஏற்படும் வரை பாடகர்களைப் பாட வைத்து, பிறகு அவர்களுக்கு வழக்கமான சம்பளத்துடன், மனமுவந்து சன்மானமும் கொடுப்பார் என்றும் அவர் சிலாகித்துச் சொல்லி இருப்பார்.

    தன்னுடைய படத்தின் கதைகளில் மனிதாபிமானமும், தர்மமே இறுதியில் வெல்லும் என்ற கருத்துடைய காட்சிகளும் அமையும்படி பார்த்துக் கொண்டார். தன்னுடைய பாடல்களில் தன் கொள்கைகளையும், லட்சியங்களையும் வெளிப்படுத்தினார். நேர்மறைச் சிந்தனைகளையும், உற்சாகம் கொடுக்கும் வார்த்தைகளையும் அவருடைய திரைப்படப் பாடல்களில் காணலாம்.

    mgr

     

    உன்னை யறிந்தால் நீ உன்னை யறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை
    வணங்காமல் நீ வாழலாம்
    மானம் பெரிதென்று வாழும் மனிதர்களை
    மானென்று சொல்வதில்லையா – தன்னைத்
    தானும் அறிந்துகொண்டு ஊருக்குச் சொல்பவர்கள்
    தலைவர்கள் ஆவதில்லையா
    மாபெரும் சபைதனில் நீ நடந்தால்
    உனக்கு மாலைகள் விழ வேண்டும் – ஒரு
    மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழ வேண்டும்

    என்று திரைப்படப் பாடலுக்கு வாயசைத்து நடித்தவர், அந்தப் பாடல் சொல்லும் அர்த்தத்துக்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டினார்.

    உழைப்பாளி வர்க்கத்தின் ஒரு அங்கமாக அவர் நடித்த பெரும்பாலான படங்களின் கதாபாத்திரங்கள், அவரை தத்தம் குடும்பத்திலும், சமூகத்திலும் ஒருவர் என்று மக்கள் கருதும்படி செய்தது. அதனால் மிக எளிதாக மக்கள் மனதைக் கவர்ந்தார் எம்.ஜி.ஆர் அவர்கள்.

    தேவை உள்ளவர்களுக்கு அவர் செய்த உதவிகள் வள்ளல் என்ற பட்டத்தை அவருக்குப் பெற்றுத் தந்தன. மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடும் வகையிலான அவரது கதாபாத்திரங்கள் அவரை மக்களின் தலைவராக முன்னிறுத்தி மக்கள்திலகம் என்ற பட்டத்தையும் பெற்றுத் தந்தது.

    இது போன்ற அவரின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அவரைப் பற்றி மிக உயர்ந்த பிம்பத்தை ஏற்படுத்தியது. அதுவே சினிமாவில் மட்டுமல்லாது, பின்னாளில் அவரது அரசியல் பிரவேசத்தின் போதும் மாபெரும் ஆதரவையும் வெற்றியையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.

    சிறுவயதில் பசியின் கொடுமையை அனுபவித்த காரணத்தினால், அவர் முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு, பள்ளியில் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்து, படிக்கும் குழந்தைகள் பசியால் வாடாது இருக்க ஏற்பாடு செய்தார். அது இன்றளவும் தொடர்கின்றது. மதிய உணவுத் திட்டம் பெருந்தலைவர் காமராஜர் உருவாக்கியது என்றாலும், எம்.ஜி.ஆர் அதை விரிவு படுத்தினார்.

    பாரத், டாக்டர் போன்று எத்தனையோ பட்டங்களையும் பதவிகளையும் பெற்றவர் எம்.ஜி.ஆர். இறுதியில் அவரது மறைவுக்குப் பின் இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது. ஒரு நடிகராகவும், மக்கள் தலைவராகவும் வாழும் போதும் மறைந்த பின்னும் மக்கள் மனத்தில் நிலைபெற்றிருப்பவர் எம்.ஜி.ஆர். இன்னும் பல காலம் அவருடைய புகழ் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.

    பொன்மனச் செம்மல் என்றும், புரட்சித் தலைவர் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆர் அவர்களின் வாழ்க்கை, போராட்டங்களை எதிர்கொண்டு வாழ்க்கையில் முன்னேறி சாதனை படைக்கத் துடிக்கும் எல்லோருக்கும் மிகச்சிறந்த பாடமாக இருக்கும் என்பது நிச்சயம்.

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    -எஸ். பழனிச்சாமி

    Kannadasanஎன் பார்வையில் கண்ணதாசன் என்ற தலைப்பைப் பார்த்ததுமே ஓராயிரம் பாடல்கள் மனதில் வந்து போனது.

    எழுபதுகளில் நான் பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே, எப்படி கண்ணதாசனால் ஈர்க்கப் பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை என்னைக் கவர்ந்த எல்லாச் சினிமாப் பாடல்களும் கண்ணதாசன் எழுதியவை என்று செய்தித்தாள்களில் படித்துத் தெரிந்து கொண்டதனால் இருக்கலாம்.

    அப்போது கிராமங்களில்கூடப் பிரபலமாக இருந்த இலங்கை வானொலி நிகழ்ச்சிகளும், அதில் தன்னுடைய குரல் வித்தையினால் பல்லாயிரம் மனிதர்களைக் கட்டிப் போட்டிருந்த கே. எஸ். ராஜா என்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் கண்ணதாசனின் பாடல் வரிகளை ரசனையோடு விவரித்ததைக் கேட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

    அதுமட்டும் இல்லாமல் என்னுடன் பழகிய நண்பர்கள் அனைவரும் கண்ணதாசனின் பாடல்களைச் சிலாகித்துப் பேசியதைக் கேட்க நேர்ந்ததாலும் இருக்கலாம். இவையே கண்ணதாசனிடத்திலும் அவருடைய பாடல்களிடத்திலும் எனக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று தோன்றுகிறது.

    அதனால்தான் பள்ளியில் மாதம் ஒருமுறை நடக்கும் இலக்கிய மன்றக்கூட்டத்தில் நான் ஒவ்வொரு முறையும் பாட்டு பாடுவதற்குப் பெயர் கொடுத்துப் பங்கெடுத்துக் கொள்வேன். அதிலும் ’சூரியகாந்தி’ படத்தில் வரும் ‘பரமசிவன் கழுத்திலிருந்து’ என்ற பாட்டையே மீண்டும் மீண்டும் பாடி இருக்கிறேன். இப்போதும் அந்தப் பாடல் நன்றாக ஞாபகம் இருக்கிறது.

    பரமசிவன் கழுத்திலிருந்து
    பாம்பு
    கேட்டது கருடா செளக்யமா?
    யாரும்
    இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம்
    செளக்யமே கருடன் சொன்னது
    அதில்
    அர்த்தம் உள்ளது

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
    உலகம்
    உன்னை மதிக்கும் உன்
    நிலைமை
    கொஞ்சம் இறங்கி வந்தால்
    நிழலும்
    கூட மிதிக்கும்!

    மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
    மானமுள்ள
    மனிதனுக்கு ஒளவை சொன்னது
    அது
    ஔவை சொன்னது
    அதில்
    அர்த்தம் உள்ளது

    ண்டி ஓடச் க்கங்கள்
    இர
    ண்டு ட்டும் வேண்டும் – அந்த
    இர
    ண்டில் ஒன்று சிறியதென்றால்
    எந்த
    ண்டி ஓடும்?

    உனைப்போலே அளவோடு உறவாட வேண்டும்
    உய
    ர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
    அது
    சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது!

    நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
    நில
    வும் வானும் போலே – நான்
    நில
    வு போலத் தேய்ந்து வந்தேன்
    நீ
    ளர்ந்ததாலே

    என் உள்ளம் எனைப் பார்த்துக்
    கேலி
    செய்யும் போது
    இல்லாதான்
    இல்வாழ்வில் நிம்மதி ஏது
    இது
    ன் சொன்னது
    இதில்
    அர்த்தம் உள்ளது”

    இந்த ஒரு பாடலில் எவ்வளவு கருத்துக்கள் புதைந்துள்ளன என்று நினைத்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

    இந்தப் பாடலுக்கு மற்றொரு விசேஷம் என்னவென்றால், அந்தப் படத்தில் இந்தப் பாடலைக் கவிஞர் கண்ணதாசனே பாடுவதுபோல் காட்சி அமைந்திருக்கும்.

    எத்தனையோ திரைப்படங்களின் வெற்றிக்குக் கவிஞரின் பாடல்களும் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன. எல்லா வகையான மனிதர்களின் மனதையும் கரைத்திருக்கின்றன.

    அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்வதென்றால் எனக்கும் அதை படிக்கும் உங்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படும் என்றாலும், இந்தக் கட்டுரையின் நீளமும், குறிக்கோளும் மாறி ஒருவித அலுப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இந்த ஒரு பாடலைப் பற்றி மட்டும் விவரித்து முடித்துவிடலாம் என்றுதான் நினைத்தேன்.

    ஆனால், என்னால் முடியவில்லை. அடுத்தடுத்துப் பல பாடல்களும் நினைவில் வந்து போனது. நமது கால கட்டத்தில் வாழ்ந்த அற்புதமான கவிஞர் அவர். அவருடைய அனுபவமும், சரஸ்வதியின் கடாட்சமும் நிறைந்து அற்புதமான பாடல்கள் அவர் மூலமாக வந்து கொட்டியது, தமிழுக்குக் கிடைத்த பெறும் பேறு.

    மனம் என்ற ஒன்று பாடாய்ப்படுத்துவதால் மனிதன் கவலைப்பட்டு, துக்கப்பட்டு எப்படியெல்லாம் நொந்து நூலாகிறான் என்று ஒரு பாடலில் சொல்லும் போது, விலங்கு மற்றும் பறவை இனங்கள் அப்படி இல்லை என்று உவமைப்படுத்துவார்.

    பெட்டைக் கோழிக்குக் கட்டுச் சேவலை
    கட்டி வைத்தவன் யாரடா…
    அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்
    சோறு போட்டவன் யாரடா…
    வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
    வருந்தவில்லையே தாயடா…
    மனித ஜாதியில் துயரம் யாவுமே
    மனதினால் வந்த நோயடா…

    மேலும் பணத்தைச் சுற்றிதான் உறவுகள் என்ற நிலைப்பாட்டினை இப்படிச் சொல்வார்…

    அண்ணன் என்னடா தம்பி என்னடா
    அவசரமான
    உலகத்திலே
    ஆசைகொள்வதில்
    அர்த்தம் என்னடா
    காசில்லாதவன்
    குடும்பத்திலே…
    தாயும்
    பிள்ளையும் ஆனபோதிலும் வாயும்
    வயிறும்
    வேறடா
    சந்தைக்
    கூட்டத்தில் வந்த மந்தையில்
    சொந்தம்
    என்பதும் ஏதடா…
    வாழும்
    நாளிலே கூட்டம் கூட்டமாய்
    வந்து
    சேர்கிறார் பாரடா
    கை
    வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
    மதித்து
    வந்தவர் யாரடா…
    பணத்தின்மீதுதான்
    பக்தி என்றபின்
    பந்தபாசமே
    ஏனடா…

    கவிஞரின் பாடல்கள் கடலைப் போன்றவை. அதில் நீங்கள் எத்தனையோ விதவிதமான முத்துக்களை த்தேடி எடுக்கலாம். அதில் மகிழ்ச்சியோடு நீந்தலாம்; வெகுதூரம் பயணிக்கலாம். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சரியான முடிவெடுக்கவும் அந்தப் பாடல்கள் உதவலாம்.

    அது மட்டுமல்லாமல், உற்சாகமான பாடலைப் பாடி மனதை நேர்மறையான சிந்தனைகளில் லயிக்க வைக்கலாம்.

    மானம் பெரிதென்று வாழும் மனிதர்களை
    மான்
    என்று சொல்வதில்லையா – தன்னைத்
    தானும்
    அறிந்து கொண்டு ஊருக்குச் சொல்பவர்கள்
    தலைவர்கள்
    ஆவதில்லையா’

    என்று உணர்த்தியவர் கவிஞர்.

    ‘உலகம் பிறந்தது எனக்காக’ என்று உணர்ந்து பாடினால் ஒரு நாள் உலகையே நீங்கள் சுற்றி வரலாம்.

    அதனால் கவியரசு கண்ணதாசனைப் போற்றுவோம். அவருடைய பாடல்களுக்காகப் பெருமைப்படுவோம்.

    ’கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’ என்று சொல்வார்கள். கவிஞரின் பாடல்கள் கடல் போன்றது என்று சிந்தித்ததாலோ என்னவோ, எனக்கும் ஒரு கவிதை தோன்றியது. அது ஒரு சிலேடைக் கவிதையாக உருவானது.

    கவிஞருக்கு ஒரு ரசிகனாக இந்தச் சிலேடைக் கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்.

    ”இசைக்கும் இன்பம் கொடுக்கும்; எட்டுத்
    திசைக்கும்
    விரிந்து கிடக்கும் – அதிசயம்
    அவிழ்க்கும்;
    அழியாது இருக்கும்; ஆழமிக்க
    கவியரசின்
    பாடல்கள் கடலுக்கு நேர்”

    சிலேடை என்பதால் அதன் விளக்கம் இங்கே:

    இசைக்கும் இன்பம் கொடுக்கும்.

    கடல் அலை அலையாக வந்து கரையில் மோதிச் சப்தமிட்டுக் கொண்டே இருக்கும். அதைப் பார்த்துக் கொண்டு இருப்பதே நமக்கு இன்பத்தைக் கொடுக்கும்.

    கவிஞரின் பாடல்களை வாசித்தாலே அதில் ஒரு இசைலயம் இருக்கும். அது இசையோடு சேர்ந்து வரும்போது அந்த இசைக்கே அது ஒருவித இன்பத்தைக் கொடுக்கிறது.

    எட்டுத் திசைக்கும் விரிந்து கிடக்கும்.

    இந்த உலகில் பெரும்பாலான பகுதியைக் கடல்தான் ஆக்கிரமித்திருக்கிறது. எல்லாத் திசைகளிலும் விரிந்து கிடக்கிறது.

    கவிஞரின் கவிதையில் எல்லா வகையான சுவைகளும் இருக்கும். எல்லாவிதமான கருத்துக்களும் அனுபவங்களும் இருக்கும். வாழ்வில் எந்த நிலையில் இருப்பவருக்கும் பொருந்தும்படி இருக்கும்.

    அதிசயம் அவிழ்க்கும்.

    கடலினுள்ளே இன்னும் மனிதர்கள் அறியாத பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. அது வெளிப்படும் போது ஒவ்வொன்றும் அதிசயிக்கத் தகுந்ததாக இருக்கும்.

    கவிஞரின் பாடல்கள் ஒவ்வொன்றும் எளிமையாகவும் அர்த்தம் பொதிந்ததாகவும் இருப்பது அதிசயிக்க வைக்கும். உண்மைகளை நிர்வாணமாக வெளிப்படுத்தும்.

    அழியாது இருக்கும்.

    கடல் என்றும் அழியாதது.

    அதுபோல கவிஞரின் பாடல்களும் காலத்தால் அழியாதது.

    ஆழமிக்க(து)

    கடல் ஆழம் அறிய முடியாதது.

    கவிஞரின் பாடல்களும் ஆழமான கருத்துக்களை உடையது.

     

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    எஸ். பழனிச்சாமி

    அன்புள்ள மணிமொழிக்கு,

    உன் அப்பா எழுதும் மடல். இந்த மடல் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இதை எழுத வேண்டிய அவசியம் என்ன என்றும் கேட்கத் தோன்றலாம். ஆனாலும் பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக உன்னைப் பார்க்காமலும், பார்க்க முடியாமலும் இருக்கின்ற ஏக்கம் என் மனதை அரித்துக் கொண்டிருப்பது உண்மை. அதன் வெளிப்பாடுதான் இந்த மடல்.

    இத்தனை நாட்களாக நீயும் உன் தம்பிகளும் ஃபேஸ்புக்கில் எழுதுவதை மட்டுமே படித்து வந்திருக்கிறேன். அது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான். இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதையும் அதில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். உன் தம்பிகள் படித்து முடித்து வேலையில் சேர்ந்திருப்பதையும், உனக்குத் திருமணம் ஆனதையும், குழந்தை பிறந்ததையும்கூட அதன் மூலம்தான் தெரிந்து கொண்டேன்.

    தாய்மை களை பொழியும் உன் அழகான முகத்தைப் பார்க்க வேண்டும், உன் மகனை என் மடியில் வைத்துக் கொஞ்ச வேண்டும் என்று மனது துடிக்கிறது. ஆனால் அதற்குத்தான் எந்த வழியும் இல்லாமல் போய் விட்டதே!

    அன்பு மகளே, உன்னுடனும், உன் தம்பிகளுடனும் நாம் எல்லோரும் ஒன்றாக இருந்த நாட்களை மட்டுமே நான் பொக்கிஷமாக நினைத்து இப்போதும் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு சந்தோஷமான, அற்புதமான நாட்கள் அவை.

    நீ நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாய். காலையில் எழுந்தவுடன் நான் உங்களுக்கு பாடங்களைச் சொல்லிக் கொடுப்பேன். அப்போது உன் தம்பி செய்யும் சேட்டைகளை நான் விளையாட்டாகக் கிண்டல் செய்யும் போது, எல்லோரும் சிரிப்பீர்களே, அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? எவ்வளவு சந்தோஷமான நாட்கள்!

    ஐந்தாம் வகுப்பில் நீ படிக்கும் போது, உன்னுடைய வகுப்புத் தோழி திவ்யாதான் எப்போதும் முதல் ரேங்க் வாங்குவாள் என்று நீ சொன்னாய்; நீ நினைத்தால் உன்னாலும் முடியும் என்று, உனக்கு மனதை ஒரு நிலைப்படுத்த கற்றுக் கொடுத்தேனே ஞாபகம் இருக்கிறதா? அந்த மாத பரீட்சையில் நீ முதல் ரேங்க் எடுத்தபோது எவ்வளவு சந்தோஷம் அடைந்தாய்? அன்றிலிருந்து எப்போதும் நீதான் முதல் ரேங்க் எடுத்தாய். அதனால் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது.

    அன்பு மகளே, அப்படியெல்லாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று உனக்கு சொல்லிக் கொடுத்த எனக்கு, இத்தனை நாட்களாக உன்னை நேரில் பார்க்கவும், பேசவும் ஒரு வழி தெரியாமல் போய் விட்டதே? என்னுடைய தலைவிதியை நினைத்து பரிதாபப் படுவதா, பச்சாதாபப் படுவதா என்று எனக்குத் தெரியவில்லை.

    இத்தனைக்கும் நீ உன்னுடைய தோழி திவ்யாவைப் போல் எங்கோ அமெரிக்காவிலா இருக்கிறாய்? இதே தமிழ்நாட்டில் எட்டு மணி நேரப் பயண தூரத்தில் தானே இருக்கிறாய். அப்படி இருந்தும்கூட நான் உன்னைப் பார்க்கவோ, நீ என்னைப் பார்க்கவோ முடியாமல் போய் விட்ட இந்த காலத்தின் கொடுமையை என்னவென்று சொல்வது?

    அதிர்ச்சி தரக்கூடிய அந்தப் பிரிவு, நீ ஆறாவது படிக்கும்போதுதான் ஏற்பட்டது. அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளும் வயது அப்போது உங்களுக்கு இல்லை. இப்போது நீ வளர்ந்து பெரியவளாகி விட்டதால் உலக அனுபவம் உனக்குக் கிடைத்திருக்கும். அதுவுமில்லாமல் டிவி சீரியல்களில் எத்தனையோ வில்லிகளைப் பார்த்திருப்பாய். மனிதர்களின் குணாதிசயங்களைப் புரிந்து கொண்டிருப்பாய்.

    அன்பு மகளே, மனிதர்களை விட பணத்தை மட்டுமே பெரிதாக நினைக்கும், நேர்மையில்லாத, திடீர் பணக்காரியாகி விட்ட ஒரு மாமியாரின் புதிய வீட்டில் மருமகன் வாடகைக்கு குடியேறும் ஒரு நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. அதுவும் என் போன்ற தன்மானம் மிக்கவர்களுக்கு அந்த நிலை வரவே கூடாது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். இல்லாவிட்டால் உங்களையெல்லாம் அன்றே பிரிந்து தனியே சென்றுவிட வேண்டும் என்றவகையில் மிரட்டப்பட்டேன்.

    வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்ட என்னைத் தரக்குறைவாக நடத்தி, தனிமைப் படுத்தி, அவமானப் படுத்தி என்னை வீட்டை விட்டு வெளியேற்ற அவர்கள் முடிவு செய்து விட்ட பிறகு, என்னால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. அதனால் உங்களையெல்லாம் பிரிவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

    எங்க ஊர் ராஜா படத்தில் வரும் யாரை நம்பி நான் பிறந்தேன் என்ற பாடலில்

    பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா

    சோதனையைப் பங்குவச்சா சொந்தமில்லே பந்தமில்லே

    என்றும்

    குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே

    பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்லே

    என்றும் கவியரசு கண்ணதாசன் என்னுடைய அப்போதைய நிலையை மிகப் பொருத்தமாக சொல்லியிருப்பார்.

    அம்மா, நான் கோழையல்ல. தன்னம்பிக்கையும், தன்மானமும் உள்ளவன். மகாத்மா காந்தியின் அஹிம்சை வழியில் நம்பிக்கை கொண்டவன். கடவுள் மீது பக்தி உள்ளவன். தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும் என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவன். அதனால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன்.

    நீங்கள் வீட்டில் இருக்கும்போது உங்களைப் பிரிந்துவர என்னால் முடியாது என்றுதான், நீங்கள் பள்ளிக்குச் சென்ற பிறகு வீட்டை விட்டு வெளியேறினேன். அதன் பிறகு உங்கள் நினைவால் நான் பட்ட அவஸ்தைகளை வார்த்தைகளில் சொல்ல முடியாது. எப்போது வேண்டுமானாலும் அழுகை வெடித்துக் கிளம்பி விடும் என்ற நிலையில்தான் நான் இருந்தேன். அப்போது என் முக பாவம் அப்படித்தான் இருக்கும்.

    எப்படியோ பன்னிரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. உள்ளத்தில் ஏதோ ஒரு சோகம் நிரந்தரமாகத் தங்கி விட்டது போல் தோன்றுகிறது. பலவீன மனம் கொண்டவனாக இருந்திருந்தால் உயிரையே மாய்த்துக் கொள்ளும் எண்ணம் தோன்றி இருக்கும். ஆனால் கடவுள் அருளால் என்றாவது ஒருநாள் உன்னையும், உன் தம்பிகளையும் மீண்டும் பார்ப்பேன் என்ற ஒரு நம்பிக்கை மட்டுமே எனக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பைக் கொடுத்திருக்கிறது.

    பதினாலு வருடங்கள் ஸ்ரீராமனைப் பிரிந்த தசரதனின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று என்னால் உணர முடிகிறது. தசரதனுக்கோ வேறு மனைவிகள் மூலம் மற்ற பல குழந்தைகள் இருந்தனர். ஆனால் எனக்கு குழந்தைகள் நீங்கள் மட்டும்தானே!

    இன்று என்னுடைய பொருளாதார நிலைமை அப்படி ஒன்றும் மோசமில்லை. நேர்மையான உழைப்பில் சம்பாதித்து, ஓரளவு வசதியான ஒரு நடுத்தர வாழ்க்கைக்கு தேவையான, குடியிருக்க ஒரு ஃப்ளாட், வாகனங்கள் என்று எல்லாமே இருக்கிறது, குழந்தைகளாகிய நீங்கள் என்னுடன் இல்லை என்பதைத் தவிர.

    நான்தான் முயற்சி செய்து உங்களைப் பார்க்க வழிவகை செய்ய வேண்டும் என்று என்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலர் சொல்கிறார்கள். ஃபேஸ்புக்கில் கூட ஃப்ரண்ட்ஸ் ரிக்வெஸ்ட் கொடுக்கலாம் என்று ஒரு நப்பாசை தோன்றும். ஆனால் என் மனம் வருந்தும்படி ஏதாவது ஆகிவிட்டால் என்னால் தாங்க முடியாது என்பதால் என்னைக் கட்டுப் படுத்திக் கொள்வேன்.

    சரி, இப்போது இந்த மடல் எதற்கு என்று கேட்கிறாயா? சென்ற வாரம் நான் ஊருக்குப் போய் இருந்தேன். அப்போது எனக்குத் தெரிந்தவர்கள் உன்னைப் பார்த்ததாகவும், பேசியதாகவும் சொன்னார்கள். வாழ்க்கையில் எல்லா செல்வங்களும் பெற்று, நீயும் உன் தம்பிகளும் வளமான வாழ்க்கை வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    நீங்கள் புத்திசாலி குழந்தைகள் என்பதை நானறிவேன். எனவே நீங்கள் என்னுடைய சூழ்நிலையைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப் படக்கூடாது. எல்லாம் விதித்தபடிதான் நடைபெறும் என்றால் பிறகு கவலைப்பட என்ன இருக்கிறது.

    இதன் மூலம் நான் தெரிவித்துக் கொள்வது இதுதான். உன்னையும், உன் தம்பிகளையும் பார்ப்பதற்கு மனத்தில் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னைப் பார்க்கத் தடையில்லாத சூழ்நிலை இப்போது அங்கு இல்லை என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

    ஆனால் காலம் கனியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் வாழ்நாள் முடிவதற்குள் என்றாவது ஒரு நாள் நாம் எல்லோரும் ஒன்றாகச் சேருவோம். அந்த நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பேன்.

    இப்படிக்கு

    உன் அப்பா

    Share