Tag: கலாம் சேக் அப்துல் காதிர்

  • தமிழாய்த் தமிழுக்காய்…

    -கலாம் சேக் அப்துல்காதர்

    தமிழாய்த் தமிழுக்காய்த் தாழா துழைத்தே
    அமிழ்தாய்ப் பொழியும் அழகு வழியில்
    விழியாய்த் தமிழும் விழிக்க முழுதாய்
    மொழியாம் தமிழை மொழிந்து.

    சூழவரும் சூழ்ச்சிகள் சூழாத் தமிழனாய்
    வாழ விழைந்திடு; வாழ்த்தும் தமிழர்
    வழிகள் பிறழாது வாழ்வாய்த் தமிழாய்
    இழியும் பழியும் இழுக்கு.

    ஒழுக்கம் தழுவி ஒழுகுதல் வாழ்க்கை
    விழுப்புண் விழவே விழைவாய்த் தமிழுக்காய்
    வாழும் தமிழென வாழ்த்தும் வழிவழி
    சூழும் புகழ்ச்சிச் சுழல்.

    மொழியை அழித்தல் முழியை மழித்தல்
    விழியை இழந்து விழுவாய்க் குழியில்
    மொழியைப் பழித்தால் முழுதாய் அழிந்தாய்
    பிழையில் உழலும் பிழைப்பு.

     

    Share
  • வாழும் வழி!

    -கலாம் சேக் அப்துல் காதிர்

    உண்ணுவதில் வேண்டுமய்யா கட்டுப் பாடு
    உணராதோர் உடல்நலத்தில் தட்டுப் பாடு
    எண்ணுவதில் தீமைகளை வெட்டிப் போடு
    இதயமதில் அன்பாலே கட்டிப் போடு
    கண்ணெனவே செயல்களையும் நோட்டம் போடு
    கண்டிப்பாய் நடைப்பயிற்சி எட்டுப் போடு
    பண்ணுகின்ற காசுகளில் திட்டம் போடு
    பக்குவமாய்ச் செலவுசெய்யக் கட்டம் போடு!

    Share