-கலாம் சேக் அப்துல்காதர்
தமிழாய்த் தமிழுக்காய்த் தாழா துழைத்தே
அமிழ்தாய்ப் பொழியும் அழகு வழியில்
விழியாய்த் தமிழும் விழிக்க முழுதாய்
மொழியாம் தமிழை மொழிந்து.
சூழவரும் சூழ்ச்சிகள் சூழாத் தமிழனாய்
வாழ விழைந்திடு; வாழ்த்தும் தமிழர்
வழிகள் பிறழாது வாழ்வாய்த் தமிழாய்
இழியும் பழியும் இழுக்கு.
ஒழுக்கம் தழுவி ஒழுகுதல் வாழ்க்கை
விழுப்புண் விழவே விழைவாய்த் தமிழுக்காய்
வாழும் தமிழென வாழ்த்தும் வழிவழி
சூழும் புகழ்ச்சிச் சுழல்.
மொழியை அழித்தல் முழியை மழித்தல்
விழியை இழந்து விழுவாய்க் குழியில்
மொழியைப் பழித்தால் முழுதாய் அழிந்தாய்
பிழையில் உழலும் பிழைப்பு.

Leave a Reply