Tag: சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

  • பொங்கல் வாழ்த்து

    -சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

    https://www.vikatan.com/news/album/festival/4035-97897-.album

    மாதவனை வணங்கிய
    மார்கழி முடிந்ததும்
    ஆதவனை வணங்கிட
    தைப் பொங்கல் வருகுது .

    போகட்டும் துன்பமென
    போகியோடு துவங்குது
    பொங்கட்டும் இன்பமென
    பொங்கல் தொடருது .
    உழவுக்கு உதவி செய்யும்
    மாட்டுக்கு நன்றி சொல்ல
    மாட்டுப்பொங்கல்
    மறுநாள் வருகுது .
    உறவுகளைப் புதுப்பித்து
    உற்சாகம் கண்டிடவே
    காணும் பொங்கல்
    மூன்றாம்நாள் வருகுது ..

    உணவுத்தரும் தொழிலுக்கும்
    உணர்வில் கலந்த தமிழுக்கும்
    ஒருசேர விழா எடுக்கும்
    உயரியவிழா பொங்கலன்றோ .

    வியர்வை சிந்தி உழைக்கும்
    விவசாயி பிழைத்திடவும்
    விவசாயம் தழைத்திடவும்
    விலை நன்கு கிடைத்திடவும்
    வேண்டிடுவோம் இந்நாளில் .

    தமிழர் திருநாளாய் -இந்தத்
    தரணி போற்றும் நன்னாளில்
    தமிழன்னை புகழ் பாடி
    தமிழினத்தை உயர்த்திடுவோம்.

    திருவள்ளுவர் தினத்தில்
    திருக்குறளை முற்றோதி
    குறள் வழி வாழ்ந்து இந்தக்
    குவலயத்தில் உயர்ந்திடுவோம் .

    உழவன் வாழ்க , உயிரினங்கள் வாழ்க ,வாழ்க
    தமிழ் வாழ்க , தமிழினம் வாழ்க .,வாழ்க
    வள்ளுவம் வாழ்க ,இவ்வையகம் வாழ்க, வாழ்க .
    பொங்கலோ பொங்கலென பொங்குக இன்பமெங்கும் .

     

    Share
  • புத்தாண்டு வாழ்த்துக்கள்

    – சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

    புத்தாண்டு வருகின்றது .
    புத்துணர்வு வருகின்றது.
    புது வாழ்வு மலருமென்று
    புது நம்பிக்கை தருகின்றது .

    இவ்வாண்டு கவலைகள்
    இத்தோடு முடியட்டும்
    வருமாண்டு நம்வாழ்க்கை
    வளமாக இருக்கட்டும் .

    விழுகின்ற மழைநீரால்
    விவசாயம் செழிக்கட்டும் .
    அழுகின்ற நிலைமாறி
    ஆனந்தம் கொழிக்கட்டும்..

    அரசியல்வாதிகள் இனி
    அறவழிக்குத் திரும்பட்டும்.
    அவர்களைத் தேர்ந்தெடுப்போர்
    அறிவோடு நடக்கட்டும் .

    தூய சக்திகள் நம்மைத்
    துடிப்போடு ஆளட்டும்
    தீய சக்திகள் இனிமேல்
    தீயில் பொசுங்கட்டும் .

    மக்களிடையே பிரிவினைகள்
    மண்ணோடு போகட்டும்
    ஒற்றுமை மனநிலை
    ஓங்கி வளரட்டும் .

    பாமரர் நிலைமாறி
    படிப்பறிவில் சிறக்கட்டும்
    பாரதம் வல்லரசாய்
    பார்போற்ற வளரட்டும் ..

     

    Share
  • கலைஞர் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி

    முத்துவேலர் பெற்ற முத்தே – நீர்
    முத்தமிழ்க் காவலர் ,
    முத்தமிழ்க் கலைஞர்,
    முத்தமிழ் அறிஞர் ,
    முத்தமிழ்க் களஞ்சியம்

    எத்தனை பட்டங்கள் ,
    எத்தனை பதவிகள் ,
    எத்தனை பொறுப்புகள்
    எத்தனை படைப்புகள்
    அத்தனையும் முடித்து
    நித்திரை கொண்டாயோ ?

    பெரியார் , அண்ணா வழியினிலே
    பகுத்தறிவாளராய் உருவெடுத்தாய்
    மூட நம்பிக்கைகள் ஒழித்திடவே
    முழுமூச்சாகக் குரல் கொடுத்தாய் .

    இந்திய அரசியல் வரலாற்றில்
    இந்தியத் தலைமைகள் உருவாக்க
    இன்றியமையாத தலைவனாய்
    இருந்தது உன்போல் யாருமிலர் .

    சட்ட மன்ற உறுப்பினராய்
    தோல்வியே காணாது
    சாதனை படைத்தாய் -இன்று
    சரித்திரமானாய்

    தமிழன் பெருமையும் ,
    தமிழின் பெருமையும்
    தரணியெல்லாம் பரவ
    தமிழ் வளர்க்கத் துறைகள் அமைத்தாய்
    தமிழ் மாநாடுகள் நடத்தி வைத்தாய் .
    தமிழறிஞர்களை கௌரவித்தாய் .
    தமிழே எந்தன் மூச்சென உரைத்தாய் – தன்
    தலை மகனை இழந்தாள் தமிழ்த்தாய் .

    அண்ணாவின் இதயத்தில் இடம்பிடித்தாய் – இன்று
    அண்ணாவின் அருகினில் இடம் பிடித்தாய்.
    தங்கத் தலைவா நீ உறங்கு – உன்னை
    வங்கக்கடலலை தாலாட்டும்.

    உன்னிடம் இருந்த திறமையினால்
    உன்னதத் தலைவனாய் உருவெடுத்தாய் .
    உன் இடம் இனிமேல் வெற்றிடமே .
    உன்னை மறவாது தமிழினமே .

    கண்ணீருடன் ,
    சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
    07.08.2018

    Share
  • அன்னையர் தினம்

    உன்னை ஈன்ற அன்னையைப் போற்று
    தன்னுயிர் போகும் ஆபத்து எனினும்
    உன்னுயிர் காத்தல் முக்கியமென்றெண்ணி
    எண்ணற்ற வேண்டுதல்கள் ,எத்தனை பத்தியங்கள்
    கண்மூடித் தூங்குகையிலும் கருத்தினிலே கருவிருக்கும்
    உண்ணும் உணவினிலும் உன்மேலதான் கவனமெல்லாம்.
    புரண்டு படுக்கையிலும் , பொறுப்பெல்லாம் கருவின்மேல்.
    வறண்ட மனதினிலே ,வண்ண மலர்ச்சோலையாக
    திரண்ட குழந்தைதான் திகட்டாத இன்பமன்றோ.
    மனைவி எனும் நிலைமாறி , அன்னையெனும் நிலைபெறுதல்
    நினைவினிலே சுகமளிக்கும்,நெஞ்சமெலாம் நிறைந்திருக்கும்.
    உதிரத்தைப் பாலாக்கி உனக்குக் கொடுக்கையிலும்
    உதிர்க்கும் வார்த்தைகளின் உன்னத மழலையிலும்
    தொட்டிலிலிட்டு தாலாட்டு இசைப் பதிலும்
    வட்டிலில் சோறுவைத்து வான் நிலா காட்டுவதிலும் ,
    மடியினில் சுமந்த பிள்ளை ,மண்மீது தவழ்கையிலும்
    அடிமேல் அடியெடுத்து ஆடி ஆடி நடக்கையிலும்
    பள்ளிப் பருவத்தில் பாடம் சொல்லிக்கொடுப்பதிலும்
    துள்ளி விளையாடுகையில் அள்ளி அணைப்பதிலும்,
    ஒவ்வொரு கட்டத்திலும் , உன் ஒவ்வொரு அசைவினிலும்
    ஒவ்வொரு முன்னேற்றத்தையும் , உவகையுடன் ரசிப்பதிலும்
    உற்றாரும் ,மற்றோரும் பாராட்டும்போதேல்லாம்
    சற்றே பெருமையுடன் , சந்தோஷப் படுவதிலும்.
    சுணக்கமும் இல்லாமல் , சுமையாகக் கருதாமல்
    தனக்கென்று வாழாமல் உனக்கென்று வாழ்வதிலும்
    பாசத்தின் பொருளாக , தியாகத்தின் உருவாக
    நேசத்தைப் பொழிகின்ற , அன்னையைப் போற்று.

    விண்ணகத் தேவர்கள் , தங்கள் பிரதிநிதியாய்
    மண்ணகத்தே படைத்த மாண்புக்கு அன்னையை
    என்ன துன்பம் வரினும் , என்ன விலை கொடுத்தும்
    கண் எனக் காப்பதுன் கடமைஎன்றுணர்ந்துகொள் .

    எத்தனை பிறவிகள் எடுத்தாலும் , எண்ணற்ற செல்வம் கொடுத்தாலும்
    அத்தனையும் போதாது , அன்னையின் கடன் தீர்க்க.
    வித்தகனாய் விளங்குவதில் பெருமையில்லை , அன்னைக்கு
    முத்தனைய பிள்ளையாய் வாழ்வதே பெருமையன்றோ.

    சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

    Share