உன்னை ஈன்ற அன்னையைப் போற்று
தன்னுயிர் போகும் ஆபத்து எனினும்
உன்னுயிர் காத்தல் முக்கியமென்றெண்ணி
எண்ணற்ற வேண்டுதல்கள் ,எத்தனை பத்தியங்கள்
கண்மூடித் தூங்குகையிலும் கருத்தினிலே கருவிருக்கும்
உண்ணும் உணவினிலும் உன்மேலதான் கவனமெல்லாம்.
புரண்டு படுக்கையிலும் , பொறுப்பெல்லாம் கருவின்மேல்.
வறண்ட மனதினிலே ,வண்ண மலர்ச்சோலையாக
திரண்ட குழந்தைதான் திகட்டாத இன்பமன்றோ.
மனைவி எனும் நிலைமாறி , அன்னையெனும் நிலைபெறுதல்
நினைவினிலே சுகமளிக்கும்,நெஞ்சமெலாம் நிறைந்திருக்கும்.
உதிரத்தைப் பாலாக்கி உனக்குக் கொடுக்கையிலும்
உதிர்க்கும் வார்த்தைகளின் உன்னத மழலையிலும்
தொட்டிலிலிட்டு தாலாட்டு இசைப் பதிலும்
வட்டிலில் சோறுவைத்து வான் நிலா காட்டுவதிலும் ,
மடியினில் சுமந்த பிள்ளை ,மண்மீது தவழ்கையிலும்
அடிமேல் அடியெடுத்து ஆடி ஆடி நடக்கையிலும்
பள்ளிப் பருவத்தில் பாடம் சொல்லிக்கொடுப்பதிலும்
துள்ளி விளையாடுகையில் அள்ளி அணைப்பதிலும்,
ஒவ்வொரு கட்டத்திலும் , உன் ஒவ்வொரு அசைவினிலும்
ஒவ்வொரு முன்னேற்றத்தையும் , உவகையுடன் ரசிப்பதிலும்
உற்றாரும் ,மற்றோரும் பாராட்டும்போதேல்லாம்
சற்றே பெருமையுடன் , சந்தோஷப் படுவதிலும்.
சுணக்கமும் இல்லாமல் , சுமையாகக் கருதாமல்
தனக்கென்று வாழாமல் உனக்கென்று வாழ்வதிலும்
பாசத்தின் பொருளாக , தியாகத்தின் உருவாக
நேசத்தைப் பொழிகின்ற , அன்னையைப் போற்று.

விண்ணகத் தேவர்கள் , தங்கள் பிரதிநிதியாய்
மண்ணகத்தே படைத்த மாண்புக்கு அன்னையை
என்ன துன்பம் வரினும் , என்ன விலை கொடுத்தும்
கண் எனக் காப்பதுன் கடமைஎன்றுணர்ந்துகொள் .

எத்தனை பிறவிகள் எடுத்தாலும் , எண்ணற்ற செல்வம் கொடுத்தாலும்
அத்தனையும் போதாது , அன்னையின் கடன் தீர்க்க.
வித்தகனாய் விளங்குவதில் பெருமையில்லை , அன்னைக்கு
முத்தனைய பிள்ளையாய் வாழ்வதே பெருமையன்றோ.

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *