1721764009976-ed2b33a2-72cb-4078-ab6c-faaa16aa19b0

சக்தி சக்திதாசன்
இங்கிலாந்து

காரைக்குடியில் 1939ம் ஆண்டு ஏப்பிரல் மாதம்  2,3 ம் நாட்களில் கம்பனின் தமிழ்த்திறனைப் போற்றி சமுதாயத்துக்கு எடுத்துச் சொல்ல சா.கணேசன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே காரைக்குடி கம்பன் கழகம்.

கம்பனில் மோகம் கொண்ட அமரர்  சா.கணேசன் தமிழின் மீதும், தமிழின் முன்னோர்கள் மீதும் அளவிலா ஆர்வம் கொண்டவர்.

இந்திய தேசிய காங்கிரஸ், பின்னர் சுதந்திரா கட்சி எனும் கட்சிகளில் இணைந்து இந்திய விடுதலைப் போரிலும் அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் முன்னேறத்துக்காக அரசியலில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் பின்னர் தமிழக மேலவை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

கம்பன் கழகத்தை அமைத்து கம்பருக்காக திருநாள் எடுத்தவர் சா. கணேசன். அனைவருக்கும் “கம்பனடிப்பொடி” எனும் கெளரவப் பெயரால் அறியப்படுபவர்.

காரைக்குடியில் தொடங்கப்பட்ட கம்பன் கழகம் இன்று தமிழகத்தின் பல பாகங்களிலும், சர்வதேச அளவில் தமிழர் செறிந்து வாழும் பல நாடுகளிலும் கிளைகள் பரப்பி கம்பனின் தமிழ்ரசக் கனிகளைத் தாங்கி நிற்கிறது.

இலங்கையில் கம்பனடிப்பொடியின் நேரடி ஆசியுடன் உலகெங்கும் பறந்து கம்பனையும் தமிழையும் போற்றி வருகிறார் ஐயா இலங்கை ஜெயராஜ்.

அந்த வழியில் இன்று தமிழர்கள் செறிந்து வாழும் ஐக்கிய இராச்சியத்தில் இலண்டன் மாநகரில் கோலாகலமாக கம்பன் கழக இலண்டன் கிளை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

கம்பன் தமிழையும், தமிழிலக்கியத்தையும் கண்ணெனப் போற்றும் அன்பர்கள் ஒன்றிணைந்து யாம் பெற்ற இன்பம் பெறுக இங்கிலாந்து வாழ் தமிழர் என்பதற்காக இக்கம்பன் கழகத்தை தோற்றுவித்துள்ளார்கள்.

இவ்வங்குரார்ப்பன விழாவிற்காக தாய்த்மிழ்ப் பின்புலங்களில் இருந்து பண்பட்ட பேச்சாளர்கள், தமிழறிஞர்கள் வந்திருந்தார்கள்.

குறிப்பாக ” கம்பவாரிதி ” எனப் பெயர் பெற்ற திரு இலங்கை ஜெயராஜ்.

தமிழகத்தில் புகழ் பெற்ற பட்டி மன்ற பேச்சாளர், இலக்கிய சொற்பொழிவாளர் திருமதி பாரதி பாஸ்கர்,

தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளரும், ஆவணப்பட இயக்குனர், தயாரிப்பாளர் தமிழறிஞருமான திரு. பாரதி கிருஷ்ணகுமார்.

இலங்கை தமிழ் மற்றும் சமயச் சொற்பொழிவாளர் தமிழருவி சிவக்குமார்.

இலங்கையின் மற்றொரு சிறந்த இலக்கிய, சமயச் சொற்பொழிவாளர் முனைவர்  ஸ்ரீ பிரசாந்தன்.

முன்னால் மலேசிய துணை அமைச்சரும், தமிழ் ஆர்வலருமான திரு டத்தோ சரவணன்.

எனப் புகழ்பெற்ற பலரும் கலந்து கொண்ட இரண்டு நாட்கள் நிகழ்வு கடந்த ஜூலை 13,14ம் தேதிகளில் லண்டன் அல்பேர்ட்டன் சமூகக் கூட்டரங்கு மண்டபத்தில் மதியம் 3 மணிக்கு ஆரம்பித்து சுமார் இரவு 10 மணி வரை நடந்தது.

பட்டிமன்றம் , உரையரங்கம், நாட்டியநாடகம் எனப்பல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

துரதிர்ஷ்டவசமாக பல மாதங்களுக்கு முன்னராகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்ததால் முதலாம் நாள் அங்குரார்ப்பன நிகழ்வில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.

இரண்டாம்நாள் நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு நானும் எனது மனைவியும் நண்பர் ஒருவருடன் மூன்று மணிக்கு முன்னதாகவே மணடபத்தை அடைந்து விட்டோம்.

மண்டப ஒழுங்கு மிக நேர்த்தியாகவே அமைக்கப்பட்டிருந்தது.

வாசலிலேயே தமிழ்க் கலாச்சாரப் பிரகாரம் மங்கக விளக்கின் ஒளியுடன் வரவேற்கக் காத்திருந்தார்கள்.

கையில் லண்டன் கம்பன் கழக  விழா மலர் கையளிப்புடன் மண்டபத்தினில் நுழைந்தோம்.

மண்டபம் நிறைந்து வழிந்தது அதிர்ஷ்டவசமாக மண்டபத்தின் பின் இருக்கைகளில் சில எமக்குக் கை கொடுத்தன.

மண்பத்தினுள் இருக்கையில் அமர்ந்திருக்கும் போது அங்கேருக்கும் ஓரிரண்டு இருக்கைகளில் யாராவது இருக்கிறார்களா ? என்று விழா அமைப்பாளர்களில் ஒருவர் வந்து வினவி புதிதாக வருபவர்களை உட்கார வைத்தது மிகவும் பாராட்டப்பட வேண்டியது.

இருக்கைகள் மண்டபத்தின் உள்ளே நிரம்பியதால் வெளியே வரவேற்புகூடத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சியின் முன்னால் ஒரு ஐம்பது இருக்கைகள் போடப்பட்டிருந்தது.

நிகழ்ச்சிகள் நேரலையாக அத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது.

இலவசமாக விருந்தினர்க்கு தேநீர் கூடத்தில் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

இரண்டாம் நாள் நிகழ்வின் ஆரம்பம் அழகாகத் தொகுப்பாளரினால் விவரிக்கப்பட்டது.

மங்கல விளக்கேற்றலையும் வரவேற்புரையையும்,தகைமை உரையையும் அடுத்து இங்கிலாந்திலே பிறந்து இங்கு பல்கலைக்கழகத்தில் புகுமுக மாணவர்களாக இருக்கும் ஒரு யுவனும், ஒரு யுவதியும் தமிழில் சிந்தனையரங்கத்தை ஆரம்பித்தார்கள்.

அது பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமாரின் முன்னிலையில் நடந்தது.

மிகவும் அருமையாக கம்ப இராமாயணத்தைப் பற்றி அவ்விளைஞனும், வளரும் தலைமுறை மத்தியில் தமிழின் வளர்ச்சி பற்றிய கருத்துரையை அந்த இளம் மாணவியும் உரை நிகழ்த்தினார்கள்.

அதைத் தொடர்ந்து பேசிய பாரதி கிருஷ்ணகுமார். இளைய பேச்சாளர்களின் திறமையை வெகுவாக பாராட்டி தனக்கெயுரிய நகைச்சுவை கலந்த பேச்சுடன் அரங்கை மகிழ்ச்சியிலாழ்த்தினார்.

தொடர்ந்த  இளம் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட இராமாயண நாட்டிய நாடகம் செவிகளுக்கும், கண்களுக்கும் விருந்தாக அமைந்தது.

முழு இராமாயணத்தின் சாரத்தையே வெறும் ஒரு மணி நேரத்துக்குள் அதன் மையக் கருத்துக் குன்றாமல் அச்சிறு நடிகர்கள் நிகழ்த்தியமை அரங்கத்தையே மகிழ்வான வியப்புக்குள் ஆழ்த்தியது.

இடைவெளியின் போது தமிழ் இலக்கிய நயத்தைக் குறிப்பாக கம்பனின் நயத்தை விருந்தாகத் தந்த அமைப்பினர் மிகவும் நியாயமான விலையில் சிற்றுண்டிகளை அளித்து வாய்க்கும் சுவையளித்தார்கள்.

இடைவேகைக்கு சற்று முன்னதாக மக்கள் பணிக்காகச் சேவையாற்றுபவர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலர் மாண்பளித்துக் கெகரவிக்கப்பட்டார்கள்.

இடைவேளையைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த பட்டிமன்றம் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

தலைப்பு கம்பைராமயணத்தின் வீரம் செறிந்த நிலம் இராமனின் அயோத்தியா ? அன்றி இராவணனின் இலங்கையா ? என்பதுவே அயோத்தியே என்று தமிழருவி சிவக்குமார், பாரதி கிருஷ்ணகுமார், ஆகியோர் வாதிட இலங்கையே என பேச்சாளர் ஸ்ரீ பிரசாந்தன், திருமதி பாரதி பாஸ்கர் ஆகியோர் வாதிட்டனர்.

மிக நீண்ட ஆய்வுக்குப் பின்னர் அயோத்திதான் வீரம் செறிந்த நிலம் என்று நடுவர் கம்பவாரிதி தீர்ப்பளித்தார்.

சிறப்புரை மாண்புமிகு முன்னாள் மலேசிய துணையமைச்சர் டத்தோ சரவணன் அவர்களால் வழங்கபட்டது.

அருமையான நிகழ்வுகளுடன் இனிதே முடிந்த விழாவின் இறுதியில் அனைவருக்கும் அருமையான சாத்வீக விருந்தளித்து விடைதனுப்பி வைத்தார்கள்.

இவ்விழாவில் நீண்ட நாட்களுக்குப் பின்னால் பல தமிழ் இலக்கிய ஆளுமைகள், இலக்கிய நேசர்கள் எனப் பகரச் சந்தித்து உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது எனது பாக்கியமே !

எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்குப் பின்னாலும் பல காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மனங்களில் கம்பனின் ஆளுமையும், அதனுடன் கலந்த இலக்கிய நேசமும் எத்தகைய ஆழமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது.

தமிழை நேசிப்பவன், தமிழை வாசிப்பவன், தமிழை யாசிப்பவன் எனும் ஒரு சாதாரண பாமர ரசிகனின் உள்ளக் கிடக்கையை வெளியிட வேண்டியது எனது கடமை என எண்ணுகிறேன்.

விழா முடிந்த பின்னால் விழா அமைப்பாளர்கள் ஒருவருடன் பேசும் சந்தர்ப்பம் கிட்டியது.

இலண்டனில் அதுவும் புலம்பெயர் சமூகத்தின் மத்தியில் ஒரு சாதாரண பிறந்தநாள் விழாவிற்கே ஏற்படும் செலவினைப் பற்றி அறிந்தவன்.

இத்தகைய அளவில் இலக்கிய விழா ஒன்றை அமைப்பதில் உள்ளப் பொருளாதார, நிர்வாகச் சிக்கல்கள் உணரக்கூடியதே.

இவ்விழாவிற்கான செலவினில் பல நல்ல உள்ளங்கள் விழா அமைப்புக்குழுவிற்கு உதவியதை அவர்களே பிரசுரத்தின் மூலம் தெரியப்படுத்தி உள்ளார்கள்.

இலவச அனுமதியுடன் தேநீர் இரவு உணவு உபசாரங்களுடன் விழா நடைபெற்றது.

அங்கே மண்டபத்தின் உள்ளேயும், வெளியேயும் நன்கொடை செய்ய விரும்புவோர்களுக்கான பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

இரண்டு நாட்களையும் சேர்த்து அண்ணளவாக ஆயிரம் பார்வையாகர்கள் வந்திருந்ததாக அவ்வமைப்பாளர் சொன்னார்.

அமைப்பாளர்கள் ஒரு தேநீர் லண்டன் காசில் ஒரு பவுண்டு என்று அறவிட்டிருந்தால் கூட சுமார் 800 பவுண்டுகள் வரை அதவது இந்திய ரூபாய் எட்டு லட்சம் அறவிட்டிருக்கலாம்.

ஆனால் அங்கிருந்த நன்கொடைப் பெட்டிகளின் மொத்தம் அதன் அரைப்பங்காவது வந்திருக்குமா என்பது சந்தேகமே !

ஒரு சினிமா பார்ப்பதற்கு 15 பவுண்டுகள் கொடுக்கிறோம்.

சினிமா நடிகர்கள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு குறைந்தது 30 பவுண்ட்ஸ் கொடுத்துக் கலந்து கொள்கிறோம்.

அதைப் பார்ப்பது தவறென்பதல்ல எனது வாதம் ஏனெனில் ஒவ்வொருவருடைய மகிழ்ச்சியும் அவர்களது தெரிவு.

ஆனால் இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து கம்பன் எனும் கவிச்சக்கரவர்த்தியின் தமிழை ரசிக்க வந்த ரசிகர்கள் எத்தனை தூரம் இதைப்பற்றிச் சிந்திக்கிறார்கள் என்பதுவே கேள்வி.

எமது அடுத்த தலைமுறையை நோக்கி இலக்கிய நகர்வுகளை வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டுமானால் அருகி வரும் பார்வையாளர்களின் பங்களிப்பின்றி நிறைவேறாது.

அடுத்த வருடம் கம்பன் விழாவில் சந்திப்போம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.