திவாகர்

 

‘ஒரு நாள் உங்கம்மா எங்கிட்டே வேகம் வேகமா ஓடிவந்தா.. என்னடி ஆச்சுன்னு கேட்டதுக்குதான் சொன்னா.. நிறைய தடவை கந்தசாமி தன்கிட்டே ஆசை வார்த்தை கூறி அடைய வர்றதாகவும் அவனைத் தடுக்கறது எப்படின்னு தெரியலன்னு அழுதா.. எனக்கு அதிர்ச்சிதான். நான் சொன்னேன். எப்படியாவது கந்தசாமியை நான் கல்யாணம் பண்ணிண்டு போயிடுவேன். கொஞ்ச நாள் பொறுத்து அவளைக் கணவனோடு தனிக்குடுத்தனம் போயிடுன்னேன்.. என்னவோ தெரியலே. அடுத்த ரெண்டு நாள்ல புருஷன் பெண்டாட்டி ரெண்டு பேரும் தற்கொலை பண்ணிகிட்டாங்கன்னு தெரிஞ்சவுடனே அங்க ஓடினேன்.. எனக்கு ஏதோ புரிஞ்சது.. அதுக்கப்பறம் ரெண்டு வருஷம் போன பிறகுதான் கந்தசாமி எங்கிட்டே வந்தான். தான் ஏதோ வாழ்க்கைல தோத்துப் போயிட்டதா நாடகம் ஆடினான். நானே கேட்டேன்.. ‘ஏன்யா.. என் ஃப்ரெண்ட் உன் மேல புகார் சொல்லிச்சு.. அது உண்மையா’ன்னு பச்சையா கேட்டேன், அவன் மழுப்பிட்டான்.. ஆனா நான் நம்பலே.. அவனை நான் எங்கிட்டே பழகவே அனுமதிக்கலே.. இப்படி இன்னும் ஒரு வருஷம் கழிச்சுதான் எங்கிட்டே  அழுது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி வசியம் பண்ணி அவன் வலைல நானும் விழுந்து ஒரு குழந்தையும் கொடுத்துட்டு தப்பிச்சுப் போயிட்டான் மகாபாவி. பெண்களை ஏமாத்தி மோசம் பண்றதுக்குன்னே இவன் பொறந்திருக்கான்பா..” பெரியம்மா அழுதாள்.

 

“ஐய்யோ அம்மா… எப்படிம்மா எங்கம்மா அப்பா அவங்க செத்தாங்க?” தன் தலையில் கை வைத்து அடித்துக் கொண்டான் கல்யாண்.

 

“ஆனா உங்கம்மாவுக்கும் உங்கப்பாவுக்கு நேர்ந்த கொடுமை ரொம்பப் பெரிசுன்னு அப்பவே தெரிஞ்சுண்டேன். என் கையிலே சுமதி ஒரு வருஷக் குழந்தை. இனிமேலும் இந்த வம்பு பேசும் ஊர்ப் பேச்சைக் காது கேட்க வாழ முடியாதுன்னு வேற வழியில்லாம உங்க தாத்தா பாட்டி வீட்டுக்கு கைக்குழந்தை சுமதியோட வந்தேன்பா. வீட்டுக்குள்ளே உங்க பாட்டிதான் இருந்தார். என்னைப் பார்த்தவுடனே ஓ’ன்னு அழுதாரு.. என் குழந்தை சுமதியைத் தூக்கி வெச்சிண்டாரு.. ‘ஆனா நீ இங்கே இருக்காதடி.. உன் தோழிக்கு நேர்ந்த அதே கொடுமை உனக்கு வேண்டாம்’னு அழுதாங்க.. பெரிய மவனே தன் தம்பியையும் தம்பி பொண்டாட்டியையும் கழுத்தை  நெறிச்சுக் கொன்னு போட்ட கொடுமை உனக்கும் வரவேண்டாம்னு சொன்னாங்கப்பா.. ‘அவன் கொன்னுட்டு தூக்குல போட்டுட்டாண்டி.. எங்கடி போய் சொல்லி நான் அழறது, நீ போடி.. நீ போடி இங்க இருக்காதடி..’ன்னு சொன்னாங்க.. எனக்கு அதிர்ச்சியா இருந்தது.. அப்பதான் அந்த கந்தசாமி வந்தான். என் குழந்தையை பாட்டி வெச்சிருந்ததைப் பார்த்துப் பிடுங்கி எங்கிட்டே தந்தான்.. என்னையும் கழுத்தைப் பிடிச்சு வெளியே துரத்திட்டான்பா.”

 

பெரியம்மா அழுதாள். ‘அப்புறமா என்னைத் தேடி உங்க பாட்டி எங்க வீட்டுக்கு வந்துதுப்பா. ஒரு டைரிய எங்கிட்ட கொடுத்தாங்க. இந்த டைரில்லாம் நீ படிக்காதடி.. இந்த கல்யாண் பெரிய பையனா ஆனதுக்கப்பறமா இதை எப்படியாவது அவன்கிட்டே சேர்த்துடும்மா.. அப்ப வரைக்கும் உங்கிட்டயே பத்திரமா வெச்சுக்க.. கல்யாண்க்குத் தெரியட்டும்மா.. இப்படி ஒரு ராட்சஸன் இருக்கான்னு அவன் தெரிஞ்சுக்கணும். அவனுக்காக இந்தக் கையாலாகாத பாட்டிக்கிழவி கடைசி காலம் வரை அழுதுண்டேதான் இருந்தான்னு நீ சொல்லு.  இந்த உதவியை நீ செஞ்சாலே போதும்மா.. அவனையும் உங்க ரெண்டுபேரையும் தெய்வம் காப்பாத்தும். கவலைப்படாதீங்க.. அப்படின்னு சொல்லிட்டு அழுதுண்டே போயிட்டாங்க.’

 

பெரியம்மா ஒரு பெட்டியைத் துழாவி ஒரு பழைய டைரியை எடுத்து வந்தாள். ‘நான் ஒவ்வொருதடவை நீ வரச்சே இந்த டைரியைக் கொடுக்கணும்னு நினைப்பேன்பா.. ஆனா இந்த டைரில என்ன எழுதியிருக்காங்க அந்தம்மான்னு எனக்கு அப்பவே ஒரு ஆசை.. அதுல படிச்சுப்பார்த்தேன். பயந்துட்டேன்பா.. உன் அப்பா அம்மாவை தூங்கறச்சே கழுத்தை நெறிச்சு அவங்களை தூக்குல மாட்டினதை என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தேன்..நு’ எழுதியிருக்காப்பா.. நான் துடிச்சுப் போயிட்டேன். என்னோட உயிர்த்தோழியை இப்படி கொலை பண்ணவன் எங்களையும் இப்படி பண்ணமாட்டான்னு என்ன நிச்சயம்?  யார்கிட்டயாவது சொன்னா உங்க பாட்டி குடும்பம் பாழாகும்.. எங்களுக்கும் அந்த நிலைமைதான் வரும்.. பாட்டி சொல்லறா மாதிரி ஆண்டவன் எப்பவாவது உன்னை என்னைப் பார்க்க அனுப்பினா அப்போ உனக்குக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணேன்பா.. அத்தோட சுமதிக்கு இந்த விஷயம் தெரியாது. ஏற்கனவே இப்படிப்பட்ட அயோக்கியனை அப்பாவா அடைஞ்சிருக்கோம்னு அவளுக்குக் கோபம். அவன் பெரிய கொலைகாரன்னு தெரிஞ்சா அவ தற்கொலையே பண்ணிப்பாப்பா.. இதோ இன்னிக்கு ஒரு அவகாசம் இப்படி கிடைச்சுது. பலவருஷமா எங்கிட்ட இருந்த இந்த டைரியை பாட்டியோட ஆசைப்படி உங்கிட்டே சேர்த்துட்டேன்.  ஆனா இப்போ நீ ஆவேசப்படாதே.. அவசரப்படாதே.. உனக்கு வாழ்க்கை நல்லா அமையணும்னு ஒரு அம்மாவா எனக்கு ஆசை இருக்கு. நிதானமா எடுத்துக்கோ. உனக்கு உண்மை தெரியணும்னுதான் கொடுத்தேன். ஒருவேளை இதைப் போலீஸ்ல கொடுத்து அவனைப் பிடிச்சு தூக்குல போட்டா கூட உனக்கு சாட்சி சொல்ல இந்த அம்மா உன் பக்கத்துலேயே இருப்பாப்பா.. அவன் செத்தா சந்தோஷப்படற முத ஆளும் நான்தான்பா.. அவன் எப்படியும் என் கண்முன்னே துடிதுடிக்க சாகணும்னு அம்மனுக்கு காசு கூட முடிஞ்சு விட்டுருக்கேன்பா” அழுதாள்.

 

மறுபடியும் தன் நிலைக்கு வந்தான் கல்யாண். கோம்டியின் கிலினிக்கில் கோம்டியைப் பார்த்தான்.

 

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல்லே கோம்டி.. தன்னோட தம்பியையும் தம்பி பொண்டாட்டியையும் கொன்னுட்டு நிம்மதியா ஒத்தன் ஊர்ல இருக்கற பெண்களையும் வசியப்படுத்திண்டு தன் இஷ்டத்துக்கு ஜாலியா வாழறதுங்கிறது யாராலதான் பொறுத்துக்க முடியும். இதை ரவிகிட்டே சொன்னதும்  உடனே உடனடியா அவனைக் கொலை பண்ணனும்ன்னு ஆவேசம்லாம் அவனுக்கு வந்தாலும் எனக்கு என் பாட்டி என் கண் முன்னால வந்தாங்க..  போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்துத் தண்டனை வாங்கித் தர முடிஞ்சா அவங்க எப்பவோ இல்லே செஞ்சிருப்பாங்க.. சாட்சியையெல்லாம் சுத்தமா அழிச்சுட்டான் ஆனா அதுக்குள்ளே பாட்டியைய்யும் கொலை பண்ணிட்டா?’

 

ரவி அவன் தோளைத் தட்டிக்கொடுத்தான். ‘அப்படியும் நான் சொன்னது அவங்கிட்டே போலீஸ்கிட்ட போகச் சொல்லித்தான். ஆனா ரொம்பநாள் கழிஞ்ச கேஸ் இல்லையா?’ போலீஸ் எப்படி டேக்கிள் பண்ணும்னு தெரியாது.’ ரவி சொல்லியதும் கல்யாண் ஆரம்பித்தான்.

 

‘இப்போ பாட்டியோட டைரியும் சாட்சி சொல்ல பெரியம்மாவும் இருக்கறச்சே இவனுக்குத் தண்டனை அதுவும் சட்டப்படி தூக்குத் தண்டனை வாங்கித் தரலாம்தான். ஆனா ஏற்கனவே பழைய கேஸ் ஆகி ஆறி அவலாகிப் போன இந்தக் கேஸை நிச்சயமா அஞ்சு வருஷமாவது இழுத்தடிப்பாங்க.. நமக்கு மனக்கஷ்டம்தான் மீறும்.  கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தேன். இல்லே.. இவன் பண்ணின குற்றத்துக்கு இவனுக்குக் கொலை தண்டனை உடனே வாங்கித் தரதை விட அவன் சுயமா அனுபவிச்சு சாகணும்…. அதுவும் என் கையால நான் சுயமா அவனைத் தண்டிக்கணும்.. அப்பதான் என்னோட அம்மாவும் அப்பாவும் அவங்களோட  என்னோட பாட்டியோட ஆத்மாவும் நிம்மதியாகும்னு தோணிச்சு.”

 

கோம்டி அவனை வருத்தத்துடன் பார்த்தாள். அவன் பார்க்காமல் தன் கண்ணில் வந்த நீரையும் துடைத்துக் கொண்டாள்.

 

“கோம்டி.. நான் அன்னிக்கு வைசாக் டிரெயின் ஏறினதும் சென்னையில் இறங்கினதும் நான் போட்ட திட்டப்படிதான் நடந்தது. என்னை சென்ட்ரல் ஸ்டேஷன்லயே பார்க்க முரளியும் சுந்தரும் வருவாங்கன்னு நான் எதிர்பார்த்து நடந்ததுதான். ஆனா நான் எதிர்பாராதது நடந்தது எதிர்வீட்டுல இருக்கற உங்களை, அதுவும் சாந்தியின் ஃப்ரெண்டான உங்களை வைசாக் ஸ்டேஷன்ல பார்த்ததுதான். முதல்ல கூட வரும் சாதாரண ரயில் பாஸஞ்சர் மாதிரிதானே பழகினோம். நீங்களே எதிரிவீட்டுல குடியிருக்கீங்கன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் அதிர்ச்சியாதான் இருந்தது. ஆனாலும் அதுவும் நம் நன்மைக்கேன்னு விட்டுட்டேன்.. என் கூட பயணம் செஞ்ச ஒரு காரணத்துக்காகவே என் மேல சந்தேகம்கிறது ஒரு துளி கூட வராதுன்னு புரிஞ்சுண்டேன். அத்தோட நான் பண்ணப் போகறது ஒரு மங்களகரமான காரியம். முடிஞ்சவரைக்கும் நம் உணர்ச்சிகளை காமிக்காத மாதிரிதான் இருக்கணும்.. சரி கோம்டி!, உங்களுக்கு என் மேல சந்தேகம் எங்க வந்தது?.. அதைச் சொல்லுங்க.. மீதியையும் நான் சொல்லறேன்..”

 

“நான் நேத்துக் காலைல போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல திருவேங்கடகிருஷ்ணமூர்த்தியை, அதான் உங்க பள்ளி நண்பர், அவரை எதேச்சையா பார்த்தேன்.. தன் வண்டி ஒண்ணு காணாமப் போனதுக்காக போலீஸ் கம்ப்ளெயின் பண்ண வந்தார்.. அவரான்னு கொஞ்சம் சந்தேகம்தான்.. ஆனா கால் நொண்டி நொண்டிப் போனதால அவராகத்தான் இருக்கும்னு நினைச்சு அவர் வெளியே வந்ததும் அவரோட முழுப்பேரைச் சொல்லிக் கூப்பிட்டேன், அவருக்கு அதுல பயங்கர சந்தோஷம்.  அவர்தான் நீங்க ஹவுரா மெயில்ல அவர் இருந்த எஸ் 1 கோச்சுக்கே வரலைன்னும் வண்டி கிளம்பின கொஞ்ச நேரத்துல தான் தூங்கிட்டதாகவும் விஜயவாடால எழுந்து தன் கையில கொண்டு வந்த டிபனைச் சாப்பிட்டு மறுபடி தூங்கிட்டதாகவும் சொன்னாரு.. அனகாபள்ளி ஸ்டேஷன்ல நீங்க இறங்கிட்டிங்கன்னு நினைச்சேன். அப்பதான் இன்னொண்ணு ஞாபகம் வந்தது..’.

 

‘என்னது அது?’ ரவி கேட்டான்.

 

‘நீயும் இவரும் என்னை வண்டில வைசாக் ஸ்டேஷன்ல டிராப் பண்ற வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் அனகாபள்ளி போகணும் அனகாபள்ளி போகணும்’னு அடிக்கடி சொன்னீங்களே..’ அதுக்கு இப்போதான் விடை கிடைச்சுது. அப்போ வைசாக்லேர்ந்து 35 கிலோ மீட்டர் தூரம் உள்ள அனகாபள்ளி ஸ்டேஷன் வெளில நீ கல்யாண்க்காக வெயிட் பண்ணி அவன் இறங்கினவுடனே  அனகாபள்ளிலேர்ந்து  வைசாக் ஏர்போர்ட் வரை அழைச்சிண்டு போகணும். ஏன்னா வைசாக் அனகாபள்ளி நடுவுல ஏர்போர்ட் இருக்கறது இல்லையா.. ரவி ஒருவேளை அனகாபள்ளில காத்திருந்து உங்களை அழைச்சுட்டுப் போயிருக்கணும். இந்த விஷயம் நடந்திருக்கணும்னு ஊகிச்சவுடனே சாந்திக்கு ஃபோன் போட்டு கொஞ்சம் தகவல் கேட்க வெச்சேன். சரியா கிடைச்சுது.. எல்லாம் லிங்க் பண்ணறச்சே நீங்க அனகாபள்ளிலேர்ந்து ரவியோட காருல வைசாக் ஏர்போர்ட் போயி அங்க உடனே இருக்கற ஃப்ளைட் ஏறி சென்னை வந்து உடனடியா கிண்டி வந்து பெரியப்பாவோட துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுட்டு நீங்க மறுபடியும் ஃப்ளைட் பிடிச்சு விஜயவாடா வந்து டாக்ஸி பிடிச்சு ஹவுரா மெயில்ல பிடிச்சு வழக்கப்படி வந்துட்டீங்க.. என்ன ஆச்சரியம்னா இந்த பிளேன் டைம், ட்ரெயின் டைம் எல்லாமே உங்க பிளானுக்கு ஏதுவா வகையா அப்படி அமைஞ்சுது.. அப்படித்தானே?”

 

“யெஸ்! அனகாபள்ளிக்கு ஹவுரா மெயில் 2.50 க்கு வருது.. ஏற்கனவே அனகாப்பள்ளி ஸ்டேஷன்கிட்டயே ரவி வெயிட் பண்ணினான். அங்கிருந்து பதினைஞ்சு நிமிஷத்துல ஏர்போர்ட் போயாச்சு. ஏற்கனவே போர்டிங்க் பாஸ் செக்கின் பண்ணி போர்டிங்க் பாஸ் பிரிண்ட் அவுட் எடுத்து வெச்சதாலே ஸ்ட்றெயிட்டா செக்யூரிடில நுழைஞ்சு சென்னை விமானத்துல ஏறியாச்சு.. ஃப்ளைட் 4.40க்கு சென்னை போகுது.. அஞ்சு மணிக்கு கிண்டில மாமா வீடு.. அதே சமயத்துல சென்னை விஜயவாடா விமானம் 6.15க்கு கிளம்பி 7.15க்கு விஜயவாடா கன்னாவரம் ஏர்போர்ட் வரும். ஹவுரா மெயில் விஜயவாடா வரும் நேரம் சரியா 7.50க்கு வந்து 8 மணிக்கு கிளம்பும். இந்த அஞ்சு மணி நேரத்துல என்னால அனகாபள்ளிலேர்ந்து கிளம்பி சென்னையில வேலையையும் முடிச்சுண்டு திரும்பவும் விஜயவாடா வரமுடியுமான்னு கணக்குப் பார்த்தேன். எங்கம்மாவை மனசுக்குள்ள வேண்டினேன். ஏதோ உத்வேகம்.. செஞ்சுடலாம்னு தோணிச்சு.. ஆனா ரயிலும் விமானமும் சரியா வந்தாலும், ரோடுலதான் பிராப்ளம்.. டிராஃபிக் ஜாஸ்தின்னாலே சரியா எட்டு மணிக்குதான் விஜயவாடா ஸ்டேஷன் நுழைய முடிஞ்சது.. வண்டி நல்ல காலமா ஒண்ணாம் நம்பர் பிளாட்ஃபார்ம்லதான் கிளம்பற நேரத்துலதான் ஏதோ ஒரு கோச்ல ஏறி உங்க கோச்க்கு வந்துட்டேன்.”

 

அவன் பெருமூச்சு விட்டான். கோம்டி ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

 

“ஆமா.. நீங்க வந்த அவசரமும் என்னோட சாப்பாட்டை காணாததைக் கண்டா மாதிரி கபகபன்னு தின்ன விதானமும் இன்னும் மனசுலேயே ஞாபகமிருக்கு. சரி, எத்தனை மணிக்கு உங்க பெரியப்பாவைப் பாத்தீங்க.. என்ன பேசினீங்க? அவர் எப்படி இருந்தார். உங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைஞ்சிருப்பாரே.. உங்க ரியாக்ஷன் என்ன?”

 

“எத்தனை கேள்விங்க.. சரிதான்.. நான் சென்னை ஏர்போர்ட்லயே கையில லக்கேஜ் இல்லாதபடியாலே உடனடியா வெளியே வந்தேன்.. அன்னிக்கு ஃப்ளைட்டே பத்து நிமிஷம் சீக்கிரமா வந்ததாலே 4.40க்கு நான் வெளில வந்தாச்சு. ஒரு டாக்ஸியை உடனடியா பிடிச்சு ரிடர்ன் ஜர்னிக்குமா சேர்த்துப் பேசிட்டேன். அவன் காரை நம்ம வீதி முனைலே நிறுத்திக்கச் சொன்னேன். அஞ்சு மணிக்குள்ளயே கிண்டில வீட்டுக்கு  வந்துட்டேன்.. வீட்ல திடீர்னு வந்த என்னைப் பார்த்துட்டு பயங்கரமா அதிர்ச்சியாகிப் போனார்தான் பெரியப்பா..

 

கந்தசாமியின் வீடு

 

பெரியப்பாவின் கண்களில் அதிர்ச்சி.. கல்யாணை எப்படியும் அப்போது எதிர்பார்க்கவில்லை அவர். கல்யாண் தங்கள் வீட்டின் உள் கதவைத் தாள் போட்டுக்கொண்டான்.

 

“அட கல்யாண்.. நீயாடா.. டிரெயின்ல இல்லே வருவேன்னு சொன்னே.. ஃப்ளைட்ல வந்துட்டியா.. நல்ல வேலை செஞ்சே..’

 

கல்யாண் எதுவும் பேசாமல் கந்தசாமியின் பீரோவைத் திறந்தான். அவரின் துப்பாக்கியை எடுத்தான். அவர் அருகே வந்தான்.. துப்பாக்கியை அவர் மார்பு அருகே கொண்டு போனான். அவர் பயந்து போனார்.

 

“கல்யாண்.. வந்ததும் வராதுமா.. என்னடா இது.. என்னை.. என்னை என்னடா பண்ணப்போறே?”

 

ஒன்றும் பேசாமல் அவர் வலது மார்பில் சுட்டான். உடனடியாக அவர் கீழே விழுந்தார். தரையில் கிடந்தபடியே அதிர்ச்சியோடு மெதுவாகப் பேசினார்..

 

“கல்யாண்.. அந்த துப்பாக்கியை எங்கிட்டே கொடு.. இதோ பார்.. உனக்கு எதுக்குடா வீண் பழி.. நானே சுட்டுக்கறேன்..”

 

“இல்லே.. எங்கம்மா அப்பாவைக் கொலை பண்ணியே…  அதுக்காகத்தான் உன்னைச் சுட்டேன்.. எனக்கு அந்த உண்மையைச் சொல்லு.. ஏன் சுட்டே?”

 

அவர் கையை மார்பருகே பிடித்துக்கொண்டார். அவர் வாயருகே தன் ஃபோனை வைத்து ரிகார்ட் செய்தான்.

 

“உனக்கு கடைசி சந்தர்ப்பம் தர்றேன்.. அதாவது பாவமன்னிப்பு மாதிரி.. எங்கம்மா அப்பாவை எப்படிக் கொன்னே.. அத மாத்திரம் சொல்லு..”

 

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.