பல்லழகன் – பகுதி 25 (நிறைவுப் பகுதி)

0

திவாகர்

 

“உனக்கு யாருடா சொன்னா இது.. அதுவும் நான் அன்னிக்கு எப்பவோ செஞ்ச காரியத்தை உனக்கு இப்போ வந்து யாருடா சொன்னாங்க?”

 

““சொல்லு.. உன் தம்பியையும் தம்பி பொண்டாட்டியையும் சேர்த்துக் கொன்னதையும் பாட்டி எனக்கு எப்பவோ ஒரு கடிதத்துல எழுதி என் பழைய புத்தகத்துல வெச்சிருந்தாங்க.. அதுலேர்ந்துதான் கண்டுபிடிச்சேன்.. அப்போ நீ செஞ்ச கொலையை ஒப்புக்கற இல்லையா?”

 

“ஆமாண்டா.. ஆமாம்.. நான் பாவம் பண்ணேன்னு யார்கிட்டய்யாவது ஒப்புக்கணுமில்லே.. உன் கிட்டே சொல்லறேன்.. நான் என் தம்பியையும் அவன் பொண்டாட்டியையும் கொன்னது வாஸ்தவம்தான்..”

 

“எதுக்காக அவங்களைக் கொலை பண்ணினே..எப்படி கொலை பண்ணினே”

 

கந்தசாமி முனகினார்.. பேச்சு வரவில்லை.. மறுபடி கேட்டான்.

 

சொல்லு..”

 

“ஆமாண்டா.. நான் என் தம்பி பொண்டாட்டி மேல ஆசப்பட்டுக் கூப்பிட்டேன். அந்தத் தம்பி பார்த்துட்டு அண்ணன்னு கூட மரியாதை கொடுக்காம என்னைப் பெரிய கம்பாலே அடி அடின்னு அடிச்சான். அந்தக் கோபம் தாங்காம அவங்க வீட்டுல தூங்கறச்சே ரெண்டு பேர் கழுத்தையும் ஒண்ணா கட்டி அதே துணியாலே நெறிச்சுக் கொலை பண்ணி அப்படியே தூக்குல மாட்டி விட்டேன். இதை எங்கம்மா.. உங்க பாட்டி பார்த்தது கூட வாஸ்தவம்.. அது கோபத்துல ஒரு ஆவேசத்துல செஞ்சதுடா.. அதுக்கு இத்தனை வருஷம் கழிச்சு ஏன் பழி வாங்கணும்டா.?”.

 

சட்டென அவன் ஃபோனைத் தன் கையில் எடுத்து தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறான்.

 

“உனக்கு நீ செஞ்சதே ஒரு குற்றமா கூட தெரியலே இல்லே.. உனக்கு சாவு வரக்கூடாதுடா.. இப்போ மார்புல வலதுபக்கம் ஓரமா பாய்ஞ்ச குண்டோட அவஸ்தைப்பட்டு நீ உயிர் வாழணும். நீ யார்கிட்டே போய் கம்ப்ளெயின் பண்ணினா கூட என்னை உன்னால குற்றம் சாட்ட முடியாது.. நான் நாளைக் காலைல வருவேன். ஆஸ்பத்திரில வந்து பார்ப்பேன். உன்னை அப்பப்போ வந்து இப்படியெல்லாம் துன்புறுத்தப் போறேன்.. நீ பண்ண ஒவ்வொரு பாவத்துக்கும் நீ அனுபவிக்கணும்.. உனக்கு சாவு மட்டும் வரக்கூடாதுன்னுதான் வலது மார்ல அதுவும் ஓரமா சுட்டேன்.. அடுத்த தடவை இப்படி வருவேன்.. யாருக்கும் தெரியாம உன் கையை வெட்டுவேன்.. அந்தக் கைதானே இ[ப்படி ஒரு கோரத்தைப் பண்ணினது.. இன்னொரு விஷயம் நீ சொன்ன விஷயத்தை வீடியோ ரிகார்ட் பண்ணியிருக்கேன்.. எப்போ எங்கே யூஸ் பண்ணனுமோ அப்போ அங்கே யூஸ் பண்ணப் போறேன்”

 

துப்பாக்கியை தன் கைக்குட்டையால் நன்றாகத் துடைத்து விட்டு மறுபடியும் அதை பீரோவில் வைத்துவிட்டுக் கிளம்புகிறான்.. கந்தசாமி மயக்கமாகப் பார்க்கிறார்..

 

“டே,, கொஞ்சம் தண்ணி குடுடா.. தண்ணி வேணும்டா…”

 

“இப்படித்தான் அவஸ்தைப்படணும்.. வெறி நாயா நீ செஞ்ச அந்தக் காரியத்துக்கும் நீ அனுபவிக்கணும்.”

 

“தண்ணீ.. தண்ணீ வேணும்டா. தண்ணீ. “ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்…

 

அவன் முகத்தில் ஒரு திருப்தி. அவன் பீரோ ஹேண்டிலைத் துடைக்கிறான்.. பிறகு உள்கதவு தாழ்ப்பாளையும் தன் கைகுட்டையால் துடைக்கிறான். தன் கை எங்கெல்லாம் படுகிறதோ அங்கெல்லாம் துடைத்துவிட்டுதான் அங்கிருந்து கிளம்புகிறான். தன் கைக் கடிகாரத்தைப் பார்க்கிறான். சுற்றுமுற்றும் பார்க்கிறான். கிளம்பிப் போய்விடுகிறான்.

 

மறுபடியும் கோம்டியின் கிலினிக்கில்

 

“எங்கம்மா எப்படி செத்தாங்கன்னு பெரியம்மா சொன்னதா ஏன் சொல்லலைன்னா அந்தம்மா பேருல இனிமேயும் எந்தக் கறையும் படக்கூடாதுன்னு தெளிவா இருந்தேன். அதனால் செத்துப் போன பாட்டி சின்னதா எழுதிப் பழைய புத்தகத்துல வெச்சிருந்தத மாத்திரம் சொன்னேன். அதனாலதான் அவனும் என் பாட்டி இவன் கொலை செஞ்சதை நேரா பார்த்ததை ஒப்புகொண்டான்.”.

 

“புரியறது.. உங்க பெரியப்பாவுக்கு நீங்கதான் பழி வாங்கறீங்கன்றது நல்லாத் தெரியணும். அதே சமயத்துல அது செஞ்சதே நீங்கதான்னு மத்தவங்களுக்குத் தெரியக்கூடாதுன்னு இத்தனை ரிஸ்க் எடுத்துச் செஞ்சீங்கங்கிறது எனக்கு நல்லாவே புரியுது!”

 

“என்னோட ஒரே திட்டம் அவன் குண்டடி படணும். ஆனா சாகக்கூடாது. அவனைப் பயமுறுத்தி அவன்கிட்டே ஸ்டேட்மென்ட் வாங்கணும்.. மறுபடியும் இப்படி ஏதாவது அலிபியோட போய் அவனைத் துன்புறுத்தணும்.. அந்த ஸ்டேட்மென்ட் எனக்கு ஒரு பாதுகாப்புக்காகத்தான் வாங்கினேன். எனக்கு முரளியும் சுந்தரும் அந்த நேரத்துல ஆஃபீஸ்ல இருப்பாங்கன்ற விஷயம் கூட நல்லதாப் போச்சு. அப்படியும் ஏடாகூடமா ஏதேனும் ஆகிடுச்சுனா எனக்கு ஒரு புரொடெக்‌ஷன் வேணும். அவ்வளவுதான். அவன் சாகக்கூடாதுங்கிற விஷயத்துல ரொம்பக் கவனமா இருந்துதான் யோசிச்சு சுட்டேன்.. என் திட்டமும் கூட அப்படித்தான். அதனாலதானே நான் ரயில் வண்டி திட்டத்தையே ரெண்டு நாள் யோசிச்சு கஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்தேன். அடுத்த நாள் காலையிலே அப்பதான் ட்ரெயின்ல வந்தது போல அவனை ஆஸ்பத்திரியிலே பார்க்கணும்.. நமுட்டுச் சிரிப்பு சிரிக்கணும்.. அவன் அவஸ்தையை ரசிக்கணும்.. இவ்வளவுதான்.. எனக்கு இன்னொருத்தரைக் கொலை பண்ணனும்னு தோணலைங்க.. சினிமாவுல வேணா உணர்ச்சிகரமா பேசி அவனை அடி அடின்னு அடிச்சுக் கொல்லலாம். இது நிஜ வாழ்க்கைல நடந்த கோரம். ஆனா அவன் துன்பத்தை அவன் அனுபவிக்கணும். வாழ் நாள் பூரா தான் பண்ண பாவத்தை தானே சிந்திக்கணும்.. அவ்வளவுதான்.. சிம்பிள்.”

 

“புரியுது இப்போ.. இன்னொண்ணு.. கொலை செஞ்சுட்டு டிரெயினுல நீங்க வந்திருந்தீங்கன்னா உங்களாலே ரொம்ப கேசுவலா என்னோட விஜயவாடாவுல டிரெயின்ல எப்படி பேசியிருக்கமுடியும்?  ஆனா அவன் சாவான்னு நீங்க எதிர்ப்பார்க்கலே இல்லையா?” மெதுவான குரலில் சொன்னாள். முகத்தைத் துடைத்துக் கொண்டான் கல்யாண்.

 

“நான் எதிர்பார்க்கலைதான். அவன் இதுக்கெல்லாம் அஞ்சமாட்டான்.. கோழை மாதிரி தற்கொலை பண்ணிக்கமாட்டான்னுதான் எதிர்பார்த்தேன்.. ஆனா கடவுள் வேற விதமா நினைச்சிருக்கணும்.. அதனாலதான் சீக்கிரமாவே அவனைக் கொண்டு போய்விட்டார். எப்பவுமே நம்ம திட்டம் சக்ஸஸ் ஆகுமா என்ன?.. பாருங்க.. வேற வழியில்லாம மெதுவா எழுந்து பீரோவைத் திறந்து துப்பாக்கியை எடுத்துத் தன்னைத் தானே சுட்டுக் கொண்டான். எனக்கு நீங்க சொல்லறவரைக்கும் சுந்தர் விஷயமோ முரளி விஷயமோ எதுவும் தெரியாது. கந்தசாமியைப் பொருத்தவரை ரெண்டு விஷயம் அந்த நேரத்துல உறுத்தியிருக்கணும். ஒண்ணு எனக்குத் தெரிஞ்சுபோன எங்கப்பா அம்மா கொலை விஷயம் அதனால அடிக்கடி என்னாலே பழிவாங்கப்படுவோம்ங்கிற பயம், இன்னொண்ணு இவன் அந்த விஜயா விஷயத்துல சுந்தர்கிட்டே ஒரு மிகப் பெரிய ஆதாரம் இருக்குங்கிறது அதுவும் தெரிஞ்சு போச்சுன்னா தன்னை யாரும் சும்மா விடமாட்டாங்கன்னு புரிஞ்சுதான் அவன் பீரோ வரைக்கும் நடந்து போய் துப்பாக்கியை எடுத்துத்  தற்கொலை பண்ணியிருக்கான். அதான் பீரோ ஹாண்டில்ல ரத்தக் கறையும் தரையில கூட ரத்தக் கறையும் படிஞ்சிருக்கு.. நான் துப்பாக்கியை நல்லா துடைச்சி பீரொவுல வெச்சுட்டுப் போனேனே.”

 

கல்யாண் தன் ஃபோனைத் திறந்து மறுபடியும் ஒரு வீடியோவைக் காண்பிக்கிறான். அதில் கந்தசாமி தன் தம்பியையும் தம்பி பெண்டாட்டியை எப்படிக் கொன்றேன் என்று மெதுவாக சொல்லி அழுகிறார். அவருடைய முகம் மட்டுமே இருக்கிறது.

 

கோம்டி தலையை அசைக்கிறாள்.

“அன்னிக்கு சாயங்காலம் 5.27க்கு சென்னை ஏர்போர்ட்ல இண்டிகோ கௌண்டர்ல உங்க பேருல விஜயவாடாக்கு உங்க ஃப்ளைட் போர்டிங்க் பாஸ் ரிஜிஸ்டர் ஆயிருக்குன்னு எனக்கு தகவல் வந்தது. சாந்திதான் பார்த்துக் கொடுத்தா. நிச்சயமா நீங்க 5.20 மணிக்கு ஏர்போர்ட்ல் இருந்தீங்கன்னா மினிமம் பதினைந்து இருபது நிமிஷம் முன்னாடியே பெரியப்பா வீட்லேர்ந்து கிளம்பியிருக்கீங்க. ஸோ, நெத்திப் பொட்டுல போட்ட ரெண்டாவது குண்டு அஞ்சறை மணிக்குப் பாயறச்சே நீங்க அங்க இல்லேன்னு ஆதாரம் சொல்லறது. இதையும் நானும் யோசிச்சேன். கொல்லணும்னு இத்தனை பிளான் போட்டவர் ஏன் கொல்லாமல் வலது மார்புல மட்டும் காயப்படுத்திட்டுப் போறார்னு எனக்கு சந்தேகம் இருந்தது. அதை நிவர்த்தி பண்ணிட்டிங்க..”

 

“அவ்வளவுதாங்க.. எங்கம்மாவுக்கும் எங்கப்பாவுக்கும் நேர்ந்த மரணம் மட்டுமல்லாம சுமதிக்கு நேர்ந்த அவமானங்கள், விஜயாவுக்கு ஏற்பட்ட கொடுமை இதெல்லாம் காரணத்துக்கு வலு சேர்த்திடுச்சு.  இப்படி ஒரு கொடூரமான மனுஷன் கூட வாழ்ந்திருக்கேன்னு நினைச்சுப் பாக்கறச்ச மனசு வலிக்கறதுதான். முரளிக்கு நேர்ந்த அவமானம்லாம் எனக்குப் பெரிசா படலே. அதுபோல சுந்தருக்கு ஏற்பட்ட கவலைங்க கூட என்னைப் பெரிசா அஃபெக்ட் பண்ணலே.. ஆனா சுமதி ஒரு விதத்துல, விஜயா இன்னொரு விதத்துலன்னு நிறைய பேருங்க இவனோட கொடுமைக்கு ஆளாகி இருக்காங்க.. இவங்களைக் காப்பாத்தற பொறுப்பையும் எடுத்துக்கணும் இல்லையா.. அத்தோட எனக்குள்ள இருக்கற மனசாட்சி என்னைக் கொலை பண்ற அளவுக்குக் கொண்டு போய்விடாதுங்க.”

 

ரவியும் தலையை அசைத்தான். ‘‘ஆமா கோம்டி! கல்யாண் எங்கிட்டே முன்னமேயே இப்படித்தான் செய்யணும்.. இப்படி செஞ்சாதான் கந்தசாமி தன் வாழ்நாள் பூரா தண்டனை கிடைக்கும்னு சொன்னான். அவன் சாகக்கூடாதுடான்னு எங்கிட்டே சொல்லியிருக்கான். அப்படிப்பட்டவன் செத்துட்டான்னு அடுத்த நாள் மார்னிங்க் கல்யாண் ஃபோன் செஞ்சவுடனே நான் இங்கே வந்தேன்.. ஆனா நாம் இந்த கேஸுல உள்ளே போகப்போக இந்த சுந்தர் பேருல சந்தேகம் ரொம்ப டீப்பா போச்சு இல்லையா.. நானும் கல்யாணுமே இந்தமாதிரி இவங்களை அதான் இந்த ரெண்டு கஸின் கதைங்களை எதிர்பார்க்கலே.. ஒரு கட்டத்துல இந்தக் கொலையை சுந்தரே கூட ரெண்டாவதா வந்து பண்ணியிருக்கலாம்னுதான் நாங்களே நினைச்சோம். அதாவது ரெண்டாவது குண்டு கந்தசாமி நெத்தியில சுட்டதைச் சொல்லறேன். ஆனா அவன் பண்ணலேங்கிறது அவன் மகாபலிபுரத்துல இந்த கொலை நடந்த சாயங்காலம் இருந்த ரிசார்ட் பார், அவன் அதுக்கு பே பண்ணின பில்லிங்க் டைம் எல்லாமே சாட்சியா இருந்தது.’ ரவி ஆச்சரியமாக பேசினான்.

 

திடீரென கோம்டி ஒரு சந்தேகம் கேட்டாள். ‘ஒருவேளை உங்க ஃப்ளைட் டிலே ஆகி விஜயவாடால வண்டியை தவறவிட்டீங்கன்னா என்ன செஞ்சிருப்பீங்க?’

 

“நான் அதையும் யோசிச்சுப் பார்த்தேன் கோம்டி. அப்படி விமானம் டிலே ஆச்சுன்னாலும் வைசாக்’ல  டிரெயின்ல நான் ஏறியது அலிபியாக இருக்கணும்ங்கிறதுதான் என்னோட பிளான். ஒருவேளை விஜயவாடால ஹவுரா மெயில மிஸ் பண்ணிட்டா கூட நான் அடுத்த டிரெயினைப் பிடிச்சு சென்னை வந்திருப்பேன். நான் கொண்டு வந்த பெட்டில கூட அவ்வளவு துணில்லாம் இல்லே. அதனால அந்தப் பெட்டி போனா கூட எனக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லைதான். அப்படியே ஏன் ஹவுரா மெயில்ல பெட்டியைத் தவற விட்டு வேற வண்டில வந்தீங்கன்னு போலீஸ் துருவித் துருவிக் கேட்டா கூட வழில விஜயவாடா ஸ்டேஷன் பேரைச் சொல்லி டிஃபன் சாப்பிட இறங்கி வண்டியை தவறவிட்டு அடுத்த வண்டி சர்க்கார் எக்ஸ்பிரஸ் பிடிச்சு வந்தேன்னு சொல்வேன். விஜயவாடால  ஒரு செகண்ட் கிளாஸ் ஆர்டினரி டிக்கெட்  கூட வாங்கி ரெடியா வெச்சிருப்பேன். ஆனா ஹவுரா மெயில்ல வந்தாதான் பக்கா அலிபியா இருக்கும். ஏன்னா ஸ்டேஷனுக்கு முரளியும் சுந்தரும் வந்து மீட் பண்ணனும் இல்லையா.. நாங்க ஏற்கனவே திட்டமிட்டபடி எல்லாக் காரியத்தையும் முடிச்சுதான் வந்தேன். சங்கல்பம் பண்ணித்தானே இந்தக் காரியத்தைப் பண்ணினேன். நிச்சயமா சக்ஸஸ் ஆகும்னு ஒரு நம்பிக்கை’.

 

கோம்டி அவனை வருத்தத்தோடு பார்த்தாள்.

 

“அடுத்து என்ன உங்க திட்டம்..?”

 

“அடுத்து என்ன திட்டம்.. ஒண்ணுமில்லேங்க.. ரவிகிட்டே என் வைசாக் பிஸினஸை முழுசுமா கொடுத்துட்டேன். அவன் வேண்டாம்னு சொன்னாலும் அவனுக்கு கிட்டதட்ட வரதட்சிணை மாதிரி இருக்கட்டுமேன்னு கண்டிப்பா சொல்லிட்டேன்..

 

‘வரதட்சிணையா?’

 

ரவி கொஞ்சம் வெட்கப்பட்டுப் பேசினான்.

 

‘அப்படி எல்லாம் இல்லை கோம்டி.. நான் சுமதியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன். சுமதியை அடிக்கடி வந்து பார்த்துண்டேன் இல்லையா.. அப்போவே அவளோட நல்ல குணம் எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அவகிட்டயே கேட்டேன். கல்யாண் அண்ணாவோட ஃப்ரெண்டாச்சே. .. என்னைக் கல்யாணம் பண்ணிக்க அவளுக்கு சம்மதம்னு சொன்னா. சுமதியும் சம்மதிச்சவுடனேதான் கல்யாண்கிட்ட சொன்னேன். ரொம்ப சந்தோஷப்பட்டான். அத்தோட கல்யாண் விடாப்படியா இந்த பிஸினஸ் பூரா என்னதுன்னு சொல்றான். ஆனா இவனைத் தனியா எல்லாம் நான் விடமாட்டேன்’.

 

‘இருக்கட்டுமே கோம்டி. இன்னும் சுமதிக்குச் சேரவேண்டிய சொத்தையும் பணத்தையும் ஒழுங்கா சேர்க்கணும். விஜயாவை சுமதி இனிமே நல்லா பார்த்துப்பா.. முரளிக்கும் சுந்தருக்கும் ஏதாவது பணம் ஏற்பாடு பண்ணனும்.. இதுக்குல்லாம் எப்படியும் ஒரு வாரம் டைம் தேவைப்படும். அவ்வளவுதான்..’

 

ரவி அவனை அணைத்துக்கொண்டான். ‘ஒண்ணு சொல்றேன் கோம்டி! ஒருவேளை நீயே இவன் கேஸை எடுத்துண்டு போலீஸ்கிட்ட போனாலும் நான் அவனுக்காக எப்படியும் போராடி வெளியிலே கொண்டுவந்துடுவேன். பலமான சாட்சிகளா நான், சுமதி, சுமதியோட அம்மா எல்லாத்துக்கும் மேலே கல்யாண் கந்தசாமிகிட்டேயிருந்து வாங்கிய வாக்குமூலம்.. இவ்வளவு ஏன்.. இவங்கப்பா அம்மா கொலையையும் திரும்ப எடுத்து அது தற்கொலை இல்லே, கந்தசாமி செஞ்ச கொலைன்னு அங்க திருச்சியிலும் கேஸ் போடலாம்னு எனக்கு ஒரு திட்டம் இருக்கு.’

 

கல்யாண் அவனைக் குறுக்கிட்டான். ‘ஆனா அதை கோம்டி’யே தீர்மானிக்கட்டும் ரவி. நாம் எல்லாத்தையும் இப்போ சொல்லிட்டோம்.’ என்றவன் கோம்டியைப் பார்த்தான்.

 

“சரிங்க.. இப்ப எல்லாமே தெரிஞ்சுகிட்டீங்க.. எத்தனைதான் நான் செஞ்சதை நியாயப்படுத்தினாலும் சட்டப்படி நான் பண்ணினது கூட ஒரு குற்றம்தான்.. ஆனா நான் சொன்ன கடமைங்க ஒருவாரத்துல முடிஞ்சவுடனே நீங்க சொல்றபடி கேட்கிறேன்.. அதுக்கப்பறம் என்னை என்ன பண்ணப் போறீங்களோ உங்க இஷ்டம்..!”

 

மறுபடியும் அவனைப் பார்த்தாள்.

 

“உங்களை நான் என்ன பண்றது? ம்.. சரி, இன்னிக்கு ராத்திரி போகட்டும். நாளைக்குக் காலைல இதுக்கு ஒரு வழி சொல்லறேன்.. நானும் யோசிக்க வேணாமா?”

 

அவன் அவள் கிலினிக்கிலிருந்து எழுந்து செல்கிறான். அவன் போனவுடன் தன் மொபைலில் இருந்து சாந்தியைக் கூப்பிடுகிறாள்.

 

“ஹேய் சாந்தி. அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸ்க்குத்தானே நாம போகணும்.?”.

 

“ஓ.. அப்ப நீயும் வர்றே இல்லையா. ஸோ ஹேப்பிடி! அமெரிக்கால இருக்கற எங்க சொந்தக்காரங்களுக்குச் சொல்லி கிலினிக் ஏற்பாடு பண்ணச் சொல்றேண்டி.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து முடிஞ்சவரைக்கும் அமெரிக்காவில இருக்கற அத்தனை பேர் பல்லையும் பிடுங்கலாம். பில்லையும் நிறையப் போடலாம். நாளைக்கே ரெண்டு டிக்கெட் சொல்லிடறேண்டி..”

 

“ரெண்டு இல்லடி.. மூணு டிக்கெட் சொல்லு..”

 

“மூணாவது யாருடி?”

 

“வேற யார்? நம்ம பல்லழகர்தான்..”

 

“தெத்துப்பல்லனா.. அவன் எதுக்குடி?”

 

“எப்படியும் நமக்கு அங்கே ஒரு நர்ஸோ இல்லை கம்பவுண்டரோ வேணும்டி.. பல்லழகர்தான் கம்பவுண்டர்..”

 

ஒருமாதம் கழித்து அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு வீட்டின் முன்னறையில் ‘டெண்டல் கிலினிக்’ என்ற போர்ட் இருக்கிறது. கல்யாண் அந்த வீட்டுக்கு வெளியே ஒரு பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கையில் ஒரு வெள்ளைக்காரன் அங்கு வருகிறான். ஆங்கிலத்தில் பேசுகிறான்.

 

“எனக்கு இன்று அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்காங்க.. டாக்டர் கோ..ம்..டீ உள்ள இருக்காரா?”

 

கோம்டி இல்லே.. கோமதி..

 

நோ நோ.. டாக்டர் கோம்டி.. கோம்டி.. டெண்டல் சர்ஜன்.

 

“உங்களுக்கு என்ன கம்ப்ளெயிண்ட்?” என்றவுடன் அவர் வாயைத் திறக்கிறார். அவருக்கும் ஒரு தெத்துப்பல் இருக்கிறது. அவரைத் தனியாக அழைத்துச் செல்கிறான்..

 

“தெத்துப்பல்லை எடுக்கணுமா?”

 

“ஆமாம்”

 

“ஏன்?”

 

“என் பார்ட்னருக்கு பிடிக்கலே..”

 

“இதோ பார்.. பார்ட்னர்னா பெண்ணா இல்லை ஆணா.. கோவிச்சுக்காதே..

 

ஹேய்,, பெண்தான்.. கேர்ள் ஃப்ரெண்ட். பியூடிஃபுல் கேர்ல்.

 

இப்போ புரியுது. நான் எதுக்குக் கேட்டேன்னா இந்தப் பெண்களுக்கு எப்பவுமே தன் பார்ட்னர் தன்னை விட அழகா இருக்கறதுப் பிடிக்காது, அதுவும் ஆம்பிளைக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் வருதுன்னா பிடிக்கவே பிடிக்காது.. தெத்துப்பல் இருந்தாதான் அதிர்ஷ்டம் அதிகமா இருக்கும்.. தெத்துப்பல்லை அப்படியே வெச்சுண்டு அட்ஜுஸ்ட் பண்ணிண்டே போகக் கத்துக்கணும். உனக்கு ஒரு அதிர்ஷ்டம்தான்.. ஆனா என்னைப் பாரு எனக்கு ரெண்டு அதிர்ஷ்டம்.. ரெண்டு தெத்துப்பல்லு. புரியுதா? உனக்கு ஒண்ணுதானே இருக்கு. அப்படியே வெச்சுக்கோ..”

 

‘ஓ.. எக்ஸெல்லென்ட். புரியுது.. தெத்துப்பல்லுன்னா ப்யூடின்னு சொல்லறே.. நன்றி!” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் போகிறான்.

 

பின்னால் நின்று இதைக் கேட்கும் கோம்டி அவனைப் பார்க்கிறாள். திடீரென கத்துகிறாள்..

 

“சாந்தி.. சீக்கிரம் வா இங்கே..”

 

சாந்தி ஓடி வருகிறாள்.

 

“என்னடி ஏன் கத்தறே?” என்றவளிடம் காதில் ஏதோ சொல்ல அவள் தலையாட்டுகிறாள். உள்ளறைக்குள் சென்று வந்து எதையோ அவள் கையில் மறைவாகக் கொடுக்க அவள் வாங்கிக் கொள்கிறாள்.

 

“கொஞ்சம் உள்ள வர்றீங்களா கல்யாண்..?”

 

கல்யாண் என்னவென்று புரியாமல் உள்ளே செல்கிறான்.

 

உள்ளே சென்றவுடன் அவன் பக்கத்தில் ஆசையாக வருவது போல வந்த கோம்டி அவன் கையைப் பற்றுகிறாள். அவன் வெட்கப்படுகிறான்.. அவன் கையை மெல்லத் தடவிக்கொண்டே இருந்தவள் அவன் கண்ணை மூடி ரசிக்கும்போது சட்டென அவன் மேல்கையைப் பிடித்து இன்னொரு கையில் இருந்த இஞ்செக்ஷன் ஊசி மூலம் மயக்கமருந்து செலுத்துகிறாள். இதனை எதிர்ப்பார்க்காத அவன் அவள் மேலேயே சாய்கிறான்..

 

“சாந்தி சீக்கிரம் வா.. சக்ஸஸ்..” என்று மறுபடியும் சாந்தியைக் கூப்பிட சாந்தி வருகிறாள். அவன் அவள் மேல் சாய்ந்து கிடப்பதைப் பார்த்து அங்கிருந்து போகிறாள்.

 

“ஓ.. சாரி, ராங்க் டைம்ல வந்துட்டேனா?”

 

“ஏய்.. ச்சீ.. முதல்ல நான் சொல்றதைச் செய்யுடி!” என்று அவள் சாந்திக்கு சில ஆணைகளைப் போடுகிறாள்.

“நீ என்ன செய்யு.. முதல்ல அந்த டென்டல் சேரை இவன் சைஸுக்கு சரிபண்ணு.. அதுக்கப்பறம் இவனோட தெத்துப்பல்லை பிடுங்கி எடுக்கறதுக்கான டூல்ஸ் எடுத்து வெச்சுக்கோ.. அப்பறம் இப்போ ரிசெண்டா வந்த அமெரிக்கன் டெக்னாலஜிப்படி பல்லு பிடிங்கின சூட்டோடு சூடா புதுப்பல்லும் பொருத்திடலாம். என் ஹேண்ட்பாக்ல இவன் சைஸா பார்த்து ரெண்டு புது பல்லு வாங்கி ஒரு பிளாஸ்டிக் கவர்ல வெச்சிருக்கேன். அதையும் எடுத்துக்க”

 

“ஏய்.. எல்லாம் எதிர்பார்த்துதான் ஏற்பாடு செஞ்சு கொண்டு வந்திருக்கியா.. பெரிய ஆளுடி!”

 

“சரிடி.. நான் சொன்னதைச் செய்யேன்.. இவன்கூட நாலு ஊர் போகறதா இருந்தா இந்த தெத்துப்பல்லோட எப்படிப் போவேன்? இன்னிக்கு சான்ஸ் கிடைச்சுடுச்சு.. விடுவேனா? சரி.. சரி.. இவனை எங்கிட்டேயிருந்து விலக்குடி..”

 

“இத்தனை நேரம் சுகமா அனுபவிச்ச இல்லே.. அப்படியே கிடக்கட்டும்.. நான் டூல்ஸ் கொண்டு வர வரைக்கும் அனுபவி..”

 

கண்ணடித்து விட்டுச் செல்கிறாள். சிறிது நேரத்தில் எல்லா டூல்களையும் தயார் நிலையில் வைக்க கல்யாண் அந்த டெண்டல் சேரில் உட்கார வைக்கப்பட்டு சிறிது நேரத்துக்குள் தெத்துப் பல் பிடுங்கப்பட்டு புதுப்பல்லும் பொருத்தப்படுகிறது.. கொஞ்ச நேரத்தில் அவன் கண் விழிக்க, வாயில் வலி சற்றே உணர, அவனுக்குக் கண்ணாடியைக் காண்பிக்கிறாள் கோம்டி.

 

திடுக்கிடுகிறான். அவன் தெத்துப்பல் பிடுங்கப்பட்டு புதுப்பல்லுடன் பார்க்க அவன் முகம் சோகமாகிறது.

 

“ஆஹா.. என் அதிர்ஷ்டப் பல்லு போயிடுச்சா?” அவன் சோகத்தைப் புரிந்து கொள்கிறாள் கோம்டி.

 

“இப்போதுதான் கல்யாண் உங்கள் முகத்தின் அழகு எடுப்பா இருக்கு.. நீங்க என் க்லினிக்ல அன்னிக்கு ராத்திரி உங்க பெரியப்பா எப்படி கொலையானார்ங்கிற உண்மையைச் சொல்லறச்சே ஒரு விஷயம் சொல்லிட்டு ஆரம்பிச்சீங்களே.. நினைவிருக்கா?”

 

தலையை அசைத்து ‘இல்லை’ என சொன்னான்.

 

“நல்லா ஞாபகப்படுத்திச் சொல்லுங்க..”

 

“எதுவும் ஞாபகம் இல்லை கோம்டி..”

 

“அன்னிக்கு ராத்திரி ரொம்ப சீரியஸ்ஸா என்னைப் பாராட்டிட்டு நீங்க சொன்னீங்களே..”

 

“என்ன சொன்னேன்”

 

“உங்களைக் கல்யாணம் பண்ணிக்கறவரு ரொம்ப அதிர்ஷ்டக்காரன்னீங்க.. ஞாபகமில்லே?..”

 

“ஆமாம். சொன்னேன்.. இப்பவும் சொல்வேன்.. அதுக்கென்ன இப்போ?”

 

“அந்த அதிர்ஷ்டக்காரர் நீங்கதான் கல்யாண்.. பார்த்தீங்களா.. உங்க தெத்துப்பல்லு போச்சு.. நான் அதிர்ஷ்டமா உங்களுக்குக் கிடைச்சிருக்கேன்.. உங்களுக்குக் கிடைச்ச தெத்துப் பல்லு அதிர்ஷ்டமா இல்லே.. நான் அதிர்ஷ்டமா”

 

“கோமதி.. இல்லல்ல.. கோம்டி.. நிஜம்மாவா சொல்லறீங்க?”

 

“நிஜம்தான் கல்யாண்.. எப்போ நான் யூ எஸ் வர முடிவு செஞ்சு உங்களையும் கூட வரணும்னு சொன்னேனோ அப்பவே நீங்கதான் என்னோட புருஷன்னும் முடிவு செஞ்சுதான் உங்களை அழைச்சிட்டு வந்தேன்.. உங்க மரமண்டைக்குதான் இன்னும் புரியலே..”

 

“நிஜம்மாவே நான் இவ்வளோ அதிர்ஷ்டக்காரனா? அப்போ அந்த வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோசியன் சொன்னது கரெக்ட்தான், கொஞ்ச நாள்ல எனக்கு அதிர்ஷ்ட தேவதை தானாத் தேடி வரும்னு சொன்னான். ஆனா அது அவுராமெயில்ல ஆரம்பிச்சு அமெரிக்கா வரை தொடர்ந்து என்னோடு அப்படியே இருக்கும்னு சொல்லலே..”

 

அப்போது “நான் உள்ளே வரலாமா?” எனும் குரல் கேட்க அங்கே சாந்தி நிற்கிறாள்.

 

“இன்னிக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்த அந்த ஆள் வெளியே வெயிட்டிங்க். அந்த தெத்துப் பல்லோட வந்தா அவன் கேர்ள் ஃப்ரெண்ட் இனிமே தொடர்பை கட் பண்ணிடலாம்னு சொன்னாளாம்.. அது அதிர்ஷ்டம் இல்லயாம்.. எப்படியாவது எடுத்துடுங்கன்னு அங்க வெளில வெயிட்டிங்க் பண்றான்.. நாம   இப்போ ஆரம்பிக்கலாமா இல்லே கொஞ்ச நேரம் ஆகுமா..”

 

சாந்தி சிரிக்கிறாள். கோம்டி புன்னகைத்துக் கொண்டே கல்யாணிடம் சொல்கிறாள்.

 

“பார்த்தீங்களா.. தெத்துப்பல் போன அதிர்ஷ்டம்.. கையை விட்டுப் போன கேஸ் திரும்ப வந்திடுச்சு..”

 

சிரிக்கிறாள்.. அவன் அவளை முறைக்கிறான். பின் அவனும் சேர்ந்து சிரிக்கிறான்.. தெத்துப் பல்லு போன சிரிப்பாக இருப்பதை அவனும் உணர்கிறான்.

 

“என்ன இருந்தாலும் ஒரு தெத்துப்பல்லின் அழகான கதை முடிஞ்சு போச்சு இல்லே..”

 

சாந்தியும் கூடவே சிரிக்கிறாள்.

 

சுபம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.