Tag: ச. பிரியா

  • சித்தர் பாடல்களில் வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும்

                                  ச.பிரியா

                                  முனைவர் பட்டஆய்வாளர், தமிழாய்வுத்துறை

                                  பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி

                                  பெரம்பலூர்-621107. 

         இன்றைய சமுதாயம் நவீன நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. மேலும் இன்றைய சூழல் போட்டிகள் நிறைந்த ஒரு பரபரப்பான நிலையில் காணப்படுகிறது. பணம் சம்பாதிப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நிதானமில்லாதப் போக்கு நிலவுகிறது. மனிதன்  தன்னை நிலைநிறுத்திக் கொள்ள (survival) பிறரை அழிக்கவும் துணிகின்றான். இத்தகைய விலங்கியல் மனநிலையில் இருந்து மனிதனை மீட்கவும் நெறிப்படுத்தவும் தோன்றியதே   வழிகாட்டலும்(Guidance) அறிவுரை பகர்தலும்(Counseling) என்ற துறையாகும். இத்துறை மனிதனின் தேவையையும் இயலாமையையும் புரிந்து கொண்டு அவற்றை நிறைவேற்றித் தரும் வழிமுறைகளை ஆராய்ந்து கூறும் துறையாக, உலகளாவிய நிலையில் சிறந்து விளங்குகிறது.

                 தமிழ்ச்சமூகச்சூழலில் வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் இருப்பினும், இது பற்றிய கொள்கைகள் கருத்துகள் இல்லாதது போலவும், புதிது போலவும் நிலவுகிறது. ஆனால் வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் சங்ககால ஆற்றுப்படை நூல்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை பண்பாட்டு நிகழ்வாக ஓர் அறச்செயலாக இருந்தமையை  இலக்கியங்களின் வாயிலாக அறியமுடிகிறது. அவ்வடிப்படையில் சித்தர் பாடல்களில் இடம்பெறும் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரை பகர்தல் குறித்த செய்திகளை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

                வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் பற்றிக் கூறுவோர் , குறிப்பாக கல்வி மற்றும் உளவியல் சார்ந்த தளத்தில் ஆர்தர் ஜே.ஜோன்ஸ், குரோ மற்றும் குரோ, ருதர்ராங், ரோஜர்ஸ். கார்ல் போன்ற மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துகளை எடுத்துரைத்து அவற்றிலிருந்தே இத்துறை சார்ந்த பணிகளைத் தொடங்கினர். ஆனால் தமிழ் இலக்கியங்கள் காலந்தோறும் இத்தகைய பணியினைச் செய்து வந்துள்ளன. அந்தவகையில்  சித்தர் பாடல்களில் இடம்பெறும் வழிகாட்டல் அறிவுரை பகர்தல் குறித்த சிந்தனையை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    வழிகாட்டல்

            வழிகாட்டுதல் என்பது ஒரு தனிநபர் தனது திறமைகளையும், தேவைகளையும் நன்கு புரிந்து கொண்டு சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு செயல்படுவதாகும்.

         “ வழிகாட்டுதல் என்பது தனிநபர்களது பிரச்சனைகளைத் தீர்ப்பதல்ல, மாறாக பிரச்சனைகளைத் தானே தீர்த்துக்கொள்ள உதவிடுதல் ஆகும். ” என்று கி.நாகராஜன் கருத்துரைக்கிறார்.( வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் ப.2)

             குரோ மற்றும் குரோ(Crow & Crow.A) என்பவரது கருத்துப்படி “ எல்லா வழிகாட்டலின் அடிப்படைக்கருத்தும் திறன்மிக்கவர் பிறருக்கு வழிகாட்டி அவரைத் தன்வாழ்வு வளம் பெறத்தக்க வாழ்க்கைக் கண்ணோட்டத்தைத் தானே உருவாக்கிக் கொள்ளச் செய்து அதற்கேற்றவாறு முடிவுகளை எடுத்தும் செயற்படுத்தவும் உதவிடுதல்” என்கிறார்.( p .2)

           தமிழ் இலக்கியங்களில் வழிகாட்டுதல் என்பது ஆற்றுப்படுத்துதல் என்ற சொல்லில் வழங்கப்படுகிறது. தொல்காப்பியத்தில் இதற்கான இலக்கணம் கூறப்பட்டுள்ளது,

               “ கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

               ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

               பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்

               சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்”      (தொல். புறம் நூற். 36)

    என்ற தொல்காப்பிய நூற்பாவின்வழி அறிவில் சிறந்த சான்றோர்கள் தாம் பெற்ற இன்பத்தை (பொருளை) பெறாதவர்களுக்கு பெற்று பயனடையும்படி கூறி வழிகாட்டியுள்ளனர். எனவே வழிகாட்டுதல் என்பது அறிவில் சிறந்த அல்லது அனுபவமிக்கவர்களால் சொல்லப்படுவதாகும்.

     

     

    அறிவுரை பகர்தல்

              மனிதன் ஒரு சோதனைக்கு உள்ளாகும் போதும் சரியான முடிவெடுக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடிய தருணத்திலும் வீட்டில் உள்ள அனுபவமிக்க பெரியோர்கள் மற்றும் படித்த அறிவாற்றல் கொண்டவர்களிடம் ஆலோசனையை நாடுகிறான்.

              மனக்குழப்பத்தில் உழலும்போது நமக்கு நெருக்கமானவர்களிடம் மனம்விட்டுப் பேசுவதும் மனச்சுமையைக் குறைத்து ஆற்றுப்படுத்திக் கொள்வதும் இயல்பான ஒன்றாகும்.

          கார்ல்ரோஜர்ஸின் (Rogers Carl.R) கருத்துபடி,“ அறிவுரை பகர்தல் என்பது தொடர்ச்சியான நேர்முகத் தொடர்புகள் முலம் ஒருவரது மனப்பான்மைகளையும் நடத்தையையும் மாற்றியமைத்தலாகும்” என்கிறார். ( வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் ப.23)

          வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் முறையே தனித்தனியே வரையறைகளைக் கொண்டிருந்தாலும் இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தறிய முடியாத தொடர்பைக் கொண்டதாகும். ஒன்றின் துணையில்லாமல் மற்றொன்றின் பணி தனித்தியங்காது எனினும் வழிகாட்டலின் போது கையாளப்படும் உத்திமுறைகளுள் ஒன்றாகவே பின்பற்றப்படுகிறது.

        சமூகத்திற்கும் தனிமனிதனுக்கும் பயன்படும் விதத்தில் வழிகாட்டல் அறிவுரை பகர்தல் பல வகைப்படுத்தப்படுகிறது. தனிமனிதனுக்காக தனிநபர் வழிகாட்டல், உடல்நிலைசார்ந்த வழிகாட்டல், ஆளுமைவளர வழிகாட்டல், பாலுணர்வு சார்ந்த வழிகாட்டல், மணவாழ்க்கை குறித்த வழிகாட்டல், குடும்பம் சார்ந்த வழிகாட்டல், முதியவருக்கு வழிகாட்டல், தலைமைப்பண்புக்கான வழிகாட்டல், தொழில்முறை வழிகாட்டல், ஓய்வுநேரத்தை சரியாகப் பயன்படுத்த வழிகாட்டல் என பல நிலைகளில் இதன் தேவையை உணர முடிகிறது.

    சித்தர் பாடல்களில் வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும்

                  ஆதிகால சமூகவாழ்க்கையில் குடும்பத்தில் இருந்த மூத்தோரின் அறிவுரையை அனைவரும் கேட்டனர். ஆனால் இன்று பெருகிவரும் மக்கள்தொகை கூட்டுக்குடும்பவாழ்க்கை சிதைந்த சமூகநிலை, போட்டி, சச்சரவு மிகுந்த சிக்கலான சமூகச்சூழல், மாறிவரும் அறிவியல், அரசியல், பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் நுகர்வுக் கலாச்சாரமோகம் காரணமாக அனைத்து மனிதர்களுக்குமே வழிகாட்டல் தேவைப்படுகிறது.

           இன்றைய சமுதாயம் பசி, தனிமனித ஒழுக்ககேடு, இலஞ்சம், தன்னிறைவின்மை, சுயநலம், பொறாமை, உழைப்பின்மை, பிறன்பொருள் பறிப்பு, போதை, அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கு எனப் பல சமூகச்சீர்கேடுகள் மிகுந்துள்ளது. மேலும் அறிவியல், சமுக, அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பினில் உற்பத்தி, வினியோகம், போக்குவரத்து, பணப்பரிமாற்றம், செய்தித்தொடர்பு, கல்வி, மருத்துவம் ஆகிய அனைத்தும் சிக்கல் மிகுந்ததாக பணத்தை மையமிட்டதாக, கௌரவத்தை மையமிட்டதாக மாறியுள்ளன. எனவே இவற்றை தீர்க்க சரியான வழியில் செயல்பட சமூகத்திற்கு சித்தர்களின் வழிகாட்டல் அவசியமாகிறது.

           சித்தர்களின் சிந்தனைகள் சமூகத்தையும் மனிதனையும் மேம்படுத்தும் வழிமுறைகளை எடுத்துக்கூறுவதாய் அமைந்துள்ளது. சித்தர்களின் வழிகாட்டல் குறித்து சற்குணன் கூறுகையில் “ சித்தர்கள் தங்களின் தூய சிந்தனைகளையே போதனைகளாக்கி மனித சமுதாயத்திற்கு வழிகாட்டிச் சென்றுள்ளனர். மேலும் சித்தர் இலக்கியம் முழுவதும் தனிமனிதனுக்கு உரிய வழிகாட்டல்கள் விழுமியங்களாகப் பதிவு செய்துள்ளனர்.” என்று கருத்துரைக்கிறார்.

          சிவவாக்கியர், கடுவெளிச்சித்தர், குதம்பைச்சித்தர், கொங்கணர் போன்றோர் தனிமனிதனுக்கு உரிய நல்ல பழக்கவழக்கங்களையும் ஒழுக்கமுறைகளையும் சமுதாயத்திற்கு தேவையான அறிவுரைகளையும் கூறியுள்ளனர்.

       “ சொல்லருஞ் சுதுபொய் மோசம் செய்தாற்

           சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்”

        “ நல்லவர் தம்மைத் தள்ளாதே – அறம்

              நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள்ளாதே”       (கடு.சித்.பா.1-2)

    என்று கடுவெளிச்சித்தர் பாடுகிறார். இவரது பாடல்கள் முழுவதுமே(29) தனிமனித மற்றும் சமூகத்திற்கு வழிகாட்டுபவையாகவே உள்ளது. பாவம் செய்யக்கூடாது, கோபம் கொள்ளக்கூடாது, கோள் சொல்லக்கூடாது, பிறருக்கு மோசம் செய்தால் உறவினருடன் அழிந்து போவாய் என்றும் நல்லவர்களின் தொடர்பை விலக்கிக்கொள்ளக்கூடாது, அறம் சார்ந்த செயல்களைச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார். மேலும் கஞ்சா, கள் குடிக்கக்கூடாது என்றும் கூறுகின்றார்.

    குதம்பைச்சித்தர் கூறுகையில்,

        “கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன்கோளிவை

        பாபத்துக்கு ஏதுவடி- குதம்பாய்

        பாபத்துக்கு ஏதுவடி”    (குதம்.சித்.பா. 83)

    என்ற பாடலில் கோபம், பொறாமை, கொடிய சொல், வலியகோள்முட்டல் ஆகியவை பாவம் என்கிறார். மேலும் பொருளாசைக்கூடாது, உத்தமர்களை இகழக்கூடாது என்பன குதம்பைச்சித்தர் கூறும் வழிகாட்டலாகும்.

          தனிமனித முன்னேற்றமின்றி ஒட்டுமொத்த நாட்டுயர்வு என்பது இயலாத ஒன்றாகும். ஒவ்வொருவரும் தத்தம் ஆற்றல்களை முழுமையாக உணர்ந்து செயலாற்றிட தனிமனித வழிகாட்டல் தேவைப்படுகிறது. தனிமனித ஒழுக்கக் கேட்டால் சமூகமும் நாட்டுயர்வும் பாதிக்கப்படும். இதனை உணர்ந்த கொங்கணர்,

         ஏழை, இயலாதவர்களுக்கு உதவவேண்டும். தஞ்சம் என வந்தோர்க்கு வஞ்சம் செய்யக்கூடாது. பெரியோர்களை மனதளவிலும் வையக்கூடாது. மனம்நோகச் செய்யக்கூடாது என்கிறார். இதனை பின்வரும் பாடலடிகளின் வழி அறியலாம்.

        “ ஏழைபனாதிக ளில்லையென்றாலவர்க்

               கிருந்தா லன்னங் கொடுக்க வேண்டும் ”    (கொங்.சித்.பா.86)

    “  மவுனமாகவும் வையா தேயவர்

              மனத்தை நோகவும் செய்யாதே”  (கொங்.சித்.பா. 89)

            சித்தர்கள் தங்கள் வழிகாட்டலை கண்டிப்புடன் கூறுகிறார்கள். சித்தர்கள் மனித சமுதாயத்திற்குக் காட்டிய வழிகாட்டலில் மிக முக்கியமானது,

    1. சமயப்பொறை
    2. சாதிசமய மறுப்பு
    3. பிற உயிர்களை வருத்தாமை
    4. கொல்லாமை
    5. பசிதீர்த்தல்
    6. பிறர்க்கு ஈதல்
    7. அன்பே முக்திக்கு வழி

          என்பன சமுதாயத்திற்கான வழிமுறைகளாகச் சித்தர்கள் கூறியுள்ளனர். சமூகத்திற்கு சாதியின் பெயரால் ,சமயத்தின் பெயரால் ஏற்படும் சண்டைகளையும் பூசல்களையும் தவிர்ப்பதற்கு சரியாக வழிகாட்டியுள்ளனர்.

         தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் அடிப்படைத் தேவை மனிதநேயம் ஆகும். ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டினாலே இறைவனை அடையலாம் என்பதை,

          “ எள்ளளவும் அன்பகத்தில் இல்லாதார் முக்தி

          எய்துவதும் தொல்லுலகில் இல்லை ”   (பாம்.சித்.பா- 89)

     என்ற பாடலில் பாம்பாட்டிச்சித்தர் அன்பின் அவசியத்தை வலியுறுத்துகின்றார். இவண்.

      “ அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

        வற்றல் மரந்தளிர்ந் தற்று  ”    (குறள்- 78)

    என்ற வள்ளுவரின் குறளும் ஒப்ப நோக்கதக்கதாகும்.

    இல்லறம் சிறக்க வழிகாட்டல்

            இல்வாழ்க்கை என்பது பல்வேறு முரண்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்கின்றது. கருத்து வேறுபாடுகளும் பிரிவுகளும் இதில் தவிர்க்க முடியாதனவாக விளங்குகின்றன. குடும்பத்தில் நேரும் சிக்கல்களைத் தவிர்த்துச் சிறந்த இல்வாழ்வை மேற்கொள்வதற்கு சிவவாக்கியர் பல அறிவுரைகளைப் பகர்ந்துள்ளார். மனைவி மக்களோடு வருகின்ற விருந்தினரை உபசரித்து வாழ்கின்ற இல்லறவாழ்வே சிறப்பானது என்கிறார். இதனை

         “ மாதர் தோள்சேராத தேவர் மானிலத்தில் இல்லையே

          மாதர் தோள் புணர்ந்தபோது மனிதவாழ்வு சிறக்குமே

          மாதராகுச் சத்தியொன்று மாட்டிக் கொண்டதால்

          மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே”      (சிவ.பா.530)

    என்றும்,

         “வருவிருந்தோடு உண்டுஉடுத்தி வளர்மனை சுகிப்பீரேல்

         வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே”      (சிவ.பா. 533)

    என்றும் பாடுவதின் வழி அறியலாம்.

          கணவன் மனைவியோடு சேர்ந்து வாழும் இல்வாழ்க்கையே சிறந்தது. இதில் கணவன் மனைவியோடு கருத்து முரண்பட்டு பிரிந்து வாழ்வதையும், மனைவி கணவனோடு கருத்து முரண்பட்டு பிரிந்து வாழ்வதையும் காணமுடிகிறது. இதற்கு காரணம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல் இருப்பது தான். இல்வாழ்க்கையில் முரண்பாடுகள் ஏற்பட்டு, பிரிவு ஒன்றே தீர்வு என்று முடிவு செய்து நீதிமன்றத்தை நாடுவதால் குழந்தைகளும் உறவுமுறைகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிவவாக்கியர் கூறியதுபோல் கணவன் மனைவி சேர்ந்து வாழ்ந்து இல்வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய விருந்தோம்பல் முதலான அறங்களைக் கடைபிடிப்பது அவசியமாகும்.

    முடிவுரை

    1. தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான சித்தர் இலக்கியம் வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும் பணியினைச் செம்மையாகப் பதிவு செய்துள்ளது.
    2. மெய்ஞ்ஞானிகளாகிய சித்தர்கள் தனிமனித உயர்வே நாட்டுயர்வு என்பதை அறிந்து தனிமனிதனுக்குரிய ஒழுகலாறுகளை அறிவுறுத்தி வழிகாட்டியுள்ளனர்.
    3. தனிமனித ஒழுக்கத்துடன் குடும்பம், நாடு, சமூகம் என அனைத்துக்குமான வழிகாட்டலை சித்தர்பாடல்களின் வழி காணஇயலுகிறது.
    4. கணவன் மனைவி சேர்ந்து வாழும் இல்லற வாழ்க்கையே சிறப்பானது என்ற அறிவுரையை சிவவாக்கியர் பாடலின் வழி அறியமுடிகிறது

    துணைநின்ற நூல்கள்

    1. சி.எஸ்.முருகேசன், சித்தர் பாடல்கள், (பெரியஞானக்கோவை) சங்கர் பதிப்பகம், சென்னை-49, 2012.
    2. இளம்பூரணர்(உ.ஆ) தொல்காப்பியம், பொருளதிகாரம், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-18, 2001.
    3. Crow & Crow.A , An Introdution to Guidance principles and practices American Book company,1951.
    4. Rogers Carl.R, Counseling and Psychotherapy, Honghto Miffin ,1942.
    5. கி.நாகராஜன் மற்றும் ச.நடராஜன், வழிகாட்டலும் அறிவுரை பகர்தலும், இராம் பதிப்பகம், சென்னை-93, 2011.
    6. பரிமேலழகர்(உ.ஆ), திருக்குறள், சாரதா பதிப்பகம், சென்னை-14, 2004
    7. சை.சற்குணன், சித்தர் கருவூலம், அகில் பதிப்பகம் திண்டுக்கல்- 5, 2010.
    8. அ.குணசேகரன், சங்கஇலக்கியங்களில் வழிகாட்டலும் அறிவுரைபகர்தலும், அண்ணாமலைப்பல்கலைக்கழகம், சிதம்பரம்.-608 001,2004.

    Share
  • சித்தர் பாடல்கள் வெளிப்படுத்தும் கல்வியியல் சிந்தனைகள்

    -ச. பிரியா

            கல்வி மனித வாழ்விற்கு இன்றியமையாது வேண்டப்படும் ஒன்றாகும். கல்வி அறிவில்லாத சமுதாயம் என்றும் முன்னேறுவதில்லை இது வரலாறு. கல்வி என்பது வாழ்க்கையில் தோன்றும் அறியாமையை நீக்கி, அறிவைக் கொடுப்பதாகும். அனைவருக்கும் கல்வி என்பது அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி அடிப்படைத்தேவைகளில் ஒன்றாகும். இதன்படி கல்வி குறித்து சித்தர்கள் அவர்கள் காலத்திலேயே சிந்தித்து, பல கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர் அதனை விளக்குவதாகவே இக்கட்டுரை அமைகிறது.

    கல்வியின் சிறப்புகள்

    கற்கை நன்றே கற்கை நன்றே
        பிச்சைபுகினும் கற்கை நன்றே”     (நறுந்தொகை – 35)

    என்று அதிவீரராம பாண்டியனும்,

    உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
          பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே”      (புறம் – 183)    என்று பாண்டியன் நெடுஞ்செழியனும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து கூறியுள்ளனர். எனவே கல்வி என்பது எல்லாருக்கும் பொதுவானது. எந்தத் தனிப்பட்டவருக்கும் சொந்தமானது அன்று. அதனால்தான் எல்லாரும் கற்க வேண்டும். பிச்சைப்பெரினும் கற்றல் நன்று என்று கூறியுள்ளனர் நம்முன்னோர்கள்.

    கல்வி – உயர்ந்தோர்

         கல்வி அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். முன்னைப் பழங்காலத்தில் எந்தத்தொழில் செய்து வந்தாலும் எக்குடியில் பிறந்திருந்தாலும் எந்தவித தடையும் இன்றி கல்விகற்று வந்தனர். ஆரியரின் வருகைக்குப் பிறகே நிலைமை தலைகீழாக மாறியது எனலாம். நால்வகை வருணப்பாகுபாடுகள் தோன்றியதன் அடிப்படையில் கல்வி என்பது ஒரு சாராருக்கு உரியதாக மாறிப்போனது. இதனை,

         “ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன”      (தொல்.அகத்.26) என்ற தொல்காப்பிய அடிகளின்வழி அறியலாம். இதற்கு உரைகூறும் நச்சினார்க்கினியர்,

      “…அம்மூன்றனுள் ஒதற்பிரிவும் தூதிற் பிரிவும் அந்தணர் முதலிய முவரிடத்தன என்றவாறு. எனவே ஒழிந்த பகைவயின் பிரிவு அரசர்க்கே உரித்தென மேலே கூறுப. உயர்ந்தோரெனக் கூறலின் வேளாளரை ஒழித்தாரென்றுணர்க.” (ப-54)

    எனக் கூறியுள்ளார். இதன்படி நச்சினார்கினியர் உயர்ந்தோர் எனக் கருதுவது அந்தணர், அரசர், வணிகரையே. இம்மூவர் மட்டுமே உயர்கல்வி கற்கவும் வெளிநாடு செல்லவும் தகுதி படைத்தவர்கள். நான்காம் சாதியினருக்கு அவ்வுரிமை கொஞ்சமும் இல்லை எனத்தெரிகிறது.

        நாலாம் சாதியாம் சூத்திரர்கள், உழைக்கும் வர்க்கமாகிய பெரும்பான்மை மக்கள் படிக்கவே கூடாது எனத் தடைபோடப்பட்டது. அப்படி மீறிப் படித்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டதாக மனுதர்ம விதி கூறுகிறது. என்பதை,

         “ சூத்திரன் படித்தால் நாவை அறுக்க வேண்டும். படிக்கக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்”. (ப.49)

    என்ற வரிகளின்வழி அறியலாம். ஒருவன் படிக்கக் கூடாது என அறிவுக்கு தடைபோடும் மனுநீதிக்கு எதிராக முழக்கம் இட்டவர்கள் சித்தர்கள் ஆவர்.

    இவர்கள் கூறும் கல்விமுறை ஒழுக்கத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் குறிக்கிறது. ஆனால் சித்தர்களின் காலக்கட்டதில் குருகுலக் கல்விமுறை பயிலப்பட்டதை,

    “மூங்கிலை வெட்டி நார் உரித்துப் பதப்படுத்தி நூல்களைத் தயாரித்தனர். அவை புத்தகம் என்றழைக்கப்பட்டன. அரச குடும்பத்தைச் சார்ந்தவர்களும் அந்தணர்களும் மற்றும் வசதி மிகுந்தவர்களுமே கல்வி கற்றனர். கல்வியும் வேதங்கள் ,சாத்திரங்கள், இதிகாசங்கள், புராணங்கள் முதலானவற்றைக் கற்பிப்பதாகவே அமைந்திருந்தது. நாட்டில் வேத பாடசாலைகள் இருந்தன. குருகுலமுறையில் கல்வி கற்பிக்கப்பட்டது” என்ற இளமதி சானகிராமன் கருத்தால் குருகுலக்கல்வியும் வேதசாத்திரங்கள் பயிலப்பட்டதையும் அறியமுடிகிறது. (ப-211)

           சித்தர்கள் கல்விமுறையானது மக்களின் அறிவை வளர்க்காமல் அறியாமை நிலைக்கு இட்டுச்செல்வதால் அர்த்தமற்றது, பொய்யானது என்று சாடினர். மேலும் பிராமணர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நியதியைக் கண்டு சீற்றம் கொண்டனர். சித்தர்களின் காலம் 15ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இக்காலக்கட்டத்தில் நாயக்கர்கள் முதலான வேற்று மன்னர்களின் ஆட்சியில் தமிழகம் சிக்கியது. இக்காலநிலையில் கல்விநிலை குறித்து

          “திருமலைநாயக்கர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருகின்றார். இதில் 3000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாகச் செய்து தரப்பட்டுள்ளன. இதில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பிராமணர்களே. அவர்களைத் தவிர வேறு எவருமே இல்லை” என்று இராபர்ட் டி நொபிலி குறிப்பிடுகிறார். (ப.54). இவர் கருத்திலிருந்து பிராமணர்கள் தவிர மற்றவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதை அறியமுடிகிறது.

          சித்தர்கள் பிராமணர்கள் தவிர மற்றவர்கள் கல்விபயில மறுக்கப்பட்டதையும் கல்வியாகக் கற்பிக்கப்பட்ட வேதபுராண சாத்திரங்களையும் கடுமையாக விமர்சித்தனர். ஏட்டுக்கல்வியானது பொய்க்கல்வி என்பதை,

          “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கிங் கெய்திடாது” (பாம்.சித்.பா.129)

    என்ற வரியில் ஏட்டுக்கல்வி வாழ்க்கைக்கு உதவாது என்பதை உணர்த்துகிறது. இதனை நாம் நடைமுறையில் நன்கு அறிந்துகொள்ளமுடிகிறது. இன்றைய இளைஞர்களில் பலர் பார்க்கும் பணிக்கும் படித்த படிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறியலாம். மேலும்,

      “பொய்யான கல்விகற்றுப் பொருண் மயக்கம் கொள்ளாமல்
        மெய்ஞானக் கல்வி விரும்புவாய் கன்மனமே ”    (இடை.சித்.பா.249)

    என்ற வரிகளில் பகுத்தறிவு கொண்டு எதனையும் ஆராய்ந்து கூறும் மெய்க்கல்வியை கற்றால் மட்டுமே வாழ்வி ஈடேற்றம் கிடைக்கும் என்று இடைக்காடர் அறிவுறுத்துகின்றார்.

            “ சதுர்வேதம் அறுவகைச் சாத்திரம் பல
             தந்திரம் புராணங்களைச் சாற்று மாகமம்
            விதம்வித மானவான வேறு நூல்களும்
       வீணாண நூல்களே யென்றாடு பாம்பே”   (பாம்.சித்.பா.54)

     என்ற பாடலில் பாம்பாட்டிச்சித்தர் நால்வகை வேதங்கள் ஆறுவகைச் சாத்திரங்கள், புராணங்கள், தந்திரம் ஆகமம் ஆகிய அனைத்தும் வீணாண நூல்கள் என்று குறிப்பிடுகின்றார். இவையாவும் பிதற்றல்களே என்று சிவவாக்கியரும் குறிப்பிடுகிறார், இதனை,

           “ நட்டதாவரங்களும் நவின்ற சாத்திரங்களும்
                 இட்டமான ஒமகுண்ட மிசைந்த நாலுவேதமும்
              கட்டி வைத்த புத்தகம் கடும் பிதற்றி தற்கெலாம்
              பெட்டதாய் முடிந்தே பிராணயான றியயோ”   (சிவ.பா.184)

    என்ற பாடலின்வழி மெய்ஞானமாம் இறைவனின் அருளை அடைந்தவர்களுக்கு மற்ற அனைத்தும் பிதற்றல்கள் என்று சாடுகின்றார்.

           சித்தர்கள் மெய்ஞானமான இறைஞானம் பெற்றால் மற்றவை எல்லாம் தேவையில்லாதது என்கின்றனர். இதனை சுவாமி விவேகானந்தரும்,

         “கல்வி என்பது இயற்கையாக மனிதனுள்ளே புதைந்துள்ள தெய்வீகமான பூரணத்தை வெளிக் கொணர்வதாகும்.” (ப-1).

           எனவே ,பொய்யான புராண சாத்திரங்கள் தேவையில்லாதது. இயற்கையில் உள்ள தெய்வீகத்தை வெளிக்கொணர்வதே அடிப்படைத்தேவை என்று சித்தர்கள் கூறுகின்றனர்.

            தமிழகத்தில் சித்தர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். உலக வாழ்வு பற்றியும் உலகப்பொருள்கள் பற்றியும் மிகுதியாகச் சிந்தித்தவர்கள். இறுதியில் அனைத்துமே மாயை என்ற முடிவிற்கு வந்தவர்கள். நாம் சித்தர்கள் வரிசையில் முதலில் சொல்லக்கூடியவர் திருமூலர்தான். திருமந்திரத்தில் கல்வி, கேள்வி, கல்லாமை என்னும் முத்தலைப்பில் முப்பது பாடல்களில் கல்விகுறித்துக் குறிப்பிடுகிறார்.,

       தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் கல்வி, கேள்வி, கல்லாமைக்கும் திருமூலர் சொல்வதற்கும் வேறுபாடுகள் சற்று மிகுதி. அவர்கள் எல்லாம் லோகாயதத்தை (பொருள் முதல்வாதம்) சொன்னார்கள் என்றால், திருமூலர் மெய்ஞ்ஞானத்தைச் (கருத்தியல் வாதம்) சொல்கிறார்.” என்று மு.அண்ணாமலை குறிப்பிடுகிறார். (தமிழ் நாட்டில் கல்வி அன்றும் இன்றும் ப.130)

    கல்வியே தக்கதுணை

    மனிதனுக்குக் கடைசிவரை தக்க துணையாக இருப்பது கல்வி மட்டுமே, மற்ற பொன், பொருள், உறவுகள் அனைத்தும் துணையாவதில்லை. என்பதை,

        “துணையது வாய்வருந் தூயநற் சோதி
            துணையது வாய்வருந் தூயநற் சொல்லாம்
            துணையது வாய்வருந் தூயநற் சந்தம்
            துணையது வாய்வருந் தூயநற் கல்வியே”      (திருமந். 294)

    என்ற பாடலில் திருமூலர் மனிதனுக்கு கடைசியில் துணையாக வருவது தேடிய புகழ், சொன்னசொல், கற்றகல்வி ஆகியவை மட்டுமே என்கிறார்.

      “ கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்று அவ்வையாரும்,

      “யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
       சாந்துணையும் கல்லாத வாறு”   (குறள்- 394)

     என்று கற்றவர்களுக்கு எல்லா இடங்களிலும் கல்வியே துணையாக வரும் என்ற கருத்தும் இவண் ஒப்புநோக்கத் தக்கதாகும்.

    அனுபவஅறிவு – பட்டறிவு

         கல்வியில் ஒன்று அனுபவக்கல்வி ஆகும். வாழ்க்கையில் உணர்ந்த பட்டறிவே அனுபவ அறிவாகும். இந்த அறிவு ஒருவனை எந்தச் சூழலிலும் கைவிடாதது என்கிறார்.

             “ பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
              முற்றது எல்லா முதல்வன் அருள்பெறின்
              கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
              கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே ” (திரு- 298)

    என்ற திருமந்திரவரிகள் பட்டறிவு பெற்றவர்கள் பேரின்பம் பெற்றவர்கள் என்கிறது. மேலும்,

            “ கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொ ண்ணாது
             கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடாக் காட்சி
            கணக்கறிந் துண்மையைக் கண்ட நிற்கும்
            கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே”           (திரு.316)

    என்ற பாடலில் அனுபவக்கல்வியாம் மெய்ஞ்ஞானக் கல்வியே இறைவனை அடைய உதவும். மெய்ஞ்ஞானமே உண்மையான கல்வி என்று கூறுகிறார் திருமூலர்.

        எனவே சித்தர்கள் கூறும் கல்வி அனுபவக்கல்வி ஆகும். இது உண்மைப் பொருளை உணர்ந்தறியும் மெய்ஞ்ஞானக் கல்வியை குறிக்கிறது. உலகியல் அறிவைத் தரும் பள்ளிக்கல்வியையும் வேத புராண, சாத்திரக் கல்வியையும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

         சித்தர்களின் கல்வி குறித்த சாடல்களும் ஏசல்களும் நவீன உலகிற்கும் பொருந்தும். இன்றைய கவிஞர்கள் கல்விமுறை குறித்து,

            “ புத்தகங்களே
             சமர்த்தாய் இருங்கள்
             குழந்தைகளைக்
             கிழித்து விடாதீர்கள்”                  (பித்தன் ப.80)

    என்றும்

      “ குழந்தைகளே பாடப்புத்தகங்களாக
                இருக்கிறார்கள்
               அவர்கள் கையில் ஏன்
               காகிதக்குப்பைகளைத் தருகிறார்கள்” (பித்தன் ப-80)

     என்ற கவிதையில் அப்துல் ரகுமான் புத்தகங்களைக் காகிதக்குப்பைகள் என்று கூறுகின்றார். எதிர்கால வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ள ஏட்டுக்கல்வி வழிகாட்டவில்லை என்பதை கூறுவதில் சித்தர்களின் சாடல்முறையை நவீன கவிஞர்களும் பின்பற்றுகின்றனர்.

    முடிவுரை

    • கல்வியில் எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் மெய்மையை விளக்கும் கல்வியே மெய்ஞ்ஞானமாகும்.
    • சித்தர்கள் மெய்ம்மையியல் விஞ்ஞானிகளாகவும் அறிவுத்துறை விஞ்ஞானிகளாகவும் செயல்பட்டிருந்தார்கள் என்பதை அறியமுடிகின்றது.
    • திருமூலர் அனுபவக்கல்வியாம் மெய்மைக்கல்வியை வலியுறுத்துகிறார். மற்ற சித்தர்கள் வேதபுராணக் கல்வியாம் ஏட்டுக்கல்வியைக் கடுமையாகச் சாடியுள்ளனர். ஏனெனில் புராணக்கல்வி என்பது ஒருசாராருக்கு மட்டுமே உரிய கல்வியாகவும் கற்பனைக்கல்வியாகவும் அமைகிறது.

    துணைநின்ற நூல்கள்

    1. சி.எஸ்.முருகேசன், சித்தர் பாடல்கள், (பெரியஞானக்கோவை) சங்கர் பதிப்பகம், சென்னை-49, 2012.
    2. பரிமேலழகர் (உ.ஆ), திருக்குறள், சாரதா பதிப்பகம், சென்னை-14, 2004.
    3. தொல்காப்பியம், பொருளதிகாரம், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-18, 2001.
    4. அப்துல் ரகுமான், பித்தன், நேசனல் பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2003.
    5. மு.அண்ணாமலை, தமிழ்நாட்டில் கல்வி அன்றும் இன்றும் ,அம்மன் புத்தகக் குழுமம், சென்னை- 5, 2005.
    6. இளமதி சானகிராமன், சித்தர் இலக்கியம், கோகுலம், புதுச்சேரி- 8.2007.
    7. அவ்வை.சு.துரைசாமிப்பிள்ளை(உ.ஆ), புறநானூறு, கழகவெளியிடு, சென்னை-18,ம.ப.2007.
    8. கி.நாகராசன், மலரும் இந்தியச்சமுதாயத்தில் கல்வி, இராம் பதிப்பகம், சென்னை-93,2009.

     

     

    Share