Tag: ஜியாவுத்தீன்

  • “தங்கத் தலைவர்”– கர்மவீரர் காமராசர்!

    ஜியாவுத்தீன்.

    முன்னுரை:
    கர்மவீரரைப் பற்றித் துவங்கும் முன் சமீபத்தில் மறைந்த நமது அன்பின் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களைப் பற்றிக்குறிப்பிடுவது இங்குப் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோதுகடைப்பிடித்த நேர்மையும், அரசு இயந்திரத்தைத் தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளாததும், தன் குடும்பத்தினருக்கானசெலவுகளையும், வசதிகளையும், அரசாங்கக் கணக்கில் சேர்க்காமல், சொந்தப் பணத்தில் செலவு செய்ததையும், தன்பதவியைப் பயன்படுத்தி சொத்தோ லாபமோ அடையாததும், எந்தச் சூழ்நிலையிலும் தன் பதவியை தவறாகப்பயன்படுத்தாததும் என்று 5 வருடங்கள் பதவியில் இருந்தபோது அவர் நடந்துகொண்ட விதம் பற்றி சிலாகித்துப்பேசுகிறோம். பெருமைக்குரிய விஷயம், மனதுக்கு நிறைவான விஷயம். எனக்குத் தெரிந்து சமீப காலங்களில் இப்படிஉதாரணமாய் யாரும் வாழ்ந்ததாக நினைவிலில்லை. அதனால்தான் அப்துல் கலாம் ஐயா அவர்களை இந்தியா மட்டுமின்றிஅண்டை நாடுகளும் பெருமையுடன் கொண்டாடுகின்றன.

    ஐந்து வருடப் பதவியில் அப்துல் கலாம் அவர்கள் நடந்து கொண்டதுபோல், தன் வாழ்நாள் முழுதும் பன்மடங்கு உயர்வாகநடந்து கொண்டவரே நம் அன்புக்குரிய கர்மவீரர். அவரது வாழ்க்கையைப் பாடமாகவும், வழிகாட்டுதலாகவும் ஏற்றுக்கொண்டுதான் அப்துல் கலாம் அவர்கள் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.மனித இன வரலாற்றில் மறையாமல் இடம்பிடித்தோர் எல்லோரது வாழ்வும் எத்தனை முறை படித்தாலும், கேட்டாலும்,நாம் இன்றைய அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க முடியாததாக இருப்பதால்தான், அவர்கள் மாண்பு கொண்டவர்களாக,மகாத்மாக்களாக, மனிதரில் மாணிக்கங்களாக, மறையாப் புகழ் கொண்டவர்களாக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்து,மறையாமல் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நபிகள் நாயகம், இயேசு பிரான், புத்தன், மகாத்மா காந்திஎன்கிற வரிசையில், கர்ம வீரரின் வாழ்க்கையும் நாம் எளிதில் கடைப்பிடிக்க முடியாத ஒரு வாழ்க்கையாக இருந்ததேஅவர் ஒரு மகோன்னத மனிதர் என்பதற்கு அத்தாட்சி. அவரின் வாழ்க்கையைப் பாடமாக போதித்தும் யாராலும் அவர் போல்நடந்துகொள்ள முடியவில்லை, முடியவும் முடியாது. அந்த அளவுக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் ஒரு மாபெரும்மனிதரைப் பற்றி, 1000 வார்த்தைகளில் கட்டுரை என்பது, கவியரசரின் வார்த்தைகளில் ‘கங்கை வெள்ளம் சங்குக்குள்ளேஅடங்கிவிடாது’ என்றுதான் சொல்ல வேண்டும்.

    என் வாழ்வின் துரதிர்ஷ்டம்:
    அந்த மாமனிதரைப் பார்க்க என் வாழ்வில் வாய்த்த ஒரே ஒரு சந்தர்ப்பத்தைத் தவறவிட்டதை இன்றும் எனக்கு நேர்ந்த ஒருசாபமாக எண்ணிக்குமைந்து கொண்டுள்ளேன். ஆம்! 1973 அல்லது 74ம் வருடம் ஒருமுறை சேலம் மாவட்டம் மேட்டூர்அருகே ஒரு கிராமத்தில், அவரது பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. என் தந்தையுடன் 7 மணி அளவுக்குச் சென்றுகாத்திருந்தோம், அப்போதிருந்த போக்குவரத்து வசதிகளால் தலைவர்கள் தாமதமாக வர நேர்வதைத் தவிர்க்க முடியாதவிதிக்கு, கர்மவீரரும் விலக்கல்ல. இரவு 9.30 மணிவரை அவர் வராததால், என் தந்தை இரவு நேரப்பணிக்கு 10மணிக்குப்போக வேண்டி இருந்ததால், அதற்கு மேலும் காத்திருக்க முடியாமல் கனத்த மனதுடன் வீடு திரும்பினோம். மறுநாள்காலை தன் தந்தையுடன் சென்றிருந்த என் நண்பன் காமராசரைப் பார்த்தேன் என்று சொன்னபோது, பொறாமைஊற்றெடுத்தது உண்மை. அதன்பின் அவனிடம் நான் கேட்ட கேள்விகளால், அவன் கோபமுற்று, ‘டேய், அவர் வந்தாரு,பேசுனாரு, பாத்தேன், கேட்டேன், அவ்வளவுதான், இதுக்கு ஏண்டா இத்தனைக் கேள்வி கேக்குறே?’ என்றான். அந்தமாமனிதரைப் பார்க்கும் வாய்ப்பை நான் இழக்க ஏதோ ஒரு சாபம்தான் காரணம் என்று இன்றும் என் மனதில் ஒரு ஆதங்கம்உண்டு. அந்த அளவுக்கு என்னுடைய 9வது வயதிலேயே காமராசர் என்னுடைய மனதில் நல்ல இடம் பிடித்திருந்தார்.துரதிர்ஷ்டவசமாக அதன்பிறகு அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டாமலே போனது.

    எனக்கு நடிகர் திலகம் சிவாஜியை மிகவும் பிடிக்கும், சிவாஜிக்கு காமராசரைப் பிடிக்கும், அதனால் எனக்கும் காமராசரைப்பிடிக்கத் துவங்கியது. அப்போது பத்திரிகைகளில் வந்த செய்திகளால் அவரைப்பற்றி ஓரளவுக்குப் படித்து அறிந்திருந்தேன்.அதன்பின், பல சந்தர்ப்பங்களில் கேள்வி ஞானத்தினாலும், பத்திரிகைகள் வாயிலாகவும், பலரது அனுபவப் பகிர்வுகளாலும்,காமராசரைப் பற்றி அறிந்த ஒவ்வொரு தகவலும் உள்ளத்தில் ஆழப் பதிந்து அவரது உருவை மிகப் பிரம்மாண்டமாய்ப் பதியவைத்துள்ளன என்றால் மிகையில்லை. காமராசருடன் எப்போதும் சிவாஜி இருந்ததாலேயே, சிவாஜியை இன்னும்அதிகமாகப் பிடித்தது என்பதும் உண்மையே. ஆனால், அத்தகைய ஒரு மனிதரின் அருகாமையில் இருந்தும் சிவாஜிஅவர்கள் சரியான அரசியல் பாடத்தைக் கற்றுக் கொள்ளாதது, ஒரு வகையில் ஏமாற்றமே.

    தங்கத் தலைவர்:
    காமராசரைப் பற்றி, இனி யாரும் புதிதாக எதுவும் கண்டுபிடித்தோ, அறிந்தோ, அகழ்வாராய்ச்சி செய்தோ, விசாரித்தோஎதுவும் சொல்லிவிடப் போவதில்லை. அவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அவரது தாயார் தொடங்கி, அவரதுஉறவுகள், நண்பர்கள், அவரது இறுதித்தருணம் வரை உடனிருந்த உதவியாளர், அவரைப் பின்தொடர்ந்து சென்றுஅறிந்திருந்த பத்திரிகைகள், அவருடன் தொடர்பிலிருந்த தலைவர்கள், அவருடன் நட்பு பாராட்டிய நல்ல உள்ளங்கள்,அவரால் பயன்பெற்ற பாமர மக்கள் என்று அனைவரும் அவரைப் பற்றி அனைத்தையும் சொல்லிவிட்டார்கள். இங்கே நாம்செய்ய வேண்டியது, அவர் எந்த அளவுக்கு நம் மனதில் நிறைந்துள்ளார், என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்,அவரின் நினைவைப் போற்றும் வகையில் என்ன செய்ய முடியும், அவரது வாழ்வில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள்என்ன என்று அசைபோடுவதுதான் நம்மால் முடியும். ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் போல, அவரைப்பற்றி அறிகிறசெய்திகள் அனைத்துமே ஆச்சரியமான விஷயங்களே! இப்படிக்கூட ஒரு மனிதர் சிந்திக்க முடியுமா? கேள்வி கேட்கமுடியுமா? தாழ்ந்துபோக முடியுமா? தாக்கம் ஏற்படுத்த முடியுமா? விட்டுக்கொடுக்க முடியுமா? விடை காணமுடியுமா?வீரியமாய் செயலாற்ற முடியுமா? வீடு வீடாகத் தன் பெயரைத் தானே அறியாமல் பதிக்க முடியுமா? மக்கள் மனங்களை தன்செய்கைகளால் நிரப்ப முடியுமா? ஏழைகளின் வீடுகளில் நீக்கமற நிறைந்து நீங்காப் புகழ் பெற முடியுமா? என்றுகேள்விகளாய் நம் மனதைத் துளைக்கும் அந்த உத்தம மனிதரின் வாழ்க்கை எண்ணிப் பார்க்க முடியா உயரத்தில்நட்சத்திரமாய் அவரை ஜொலிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

    மனிதருள் மாணிக்கம்:
    இன்றைய மலிவான அரசியல் களத்தில் மாமனிதர்களாய்த் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள சுயவிளம்பரங்களாலும்,கையூட்டுக் கொடுத்து காவடி தூக்க வைத்தும், தன் கட்சிக்காரர்களைக் கொண்டு புகழ்மாலையைப் பாமாலையாக்கித்துதிபாடவைத்தும், அரசு செலவில் அன்றாடம் தன் பெயரைப் பிரபலமாக்கியும் முயற்சி செய்யும் நவீன ‘மகாத்மா’க்களுக்குநடுவே கர்மவீரர் ஒரு பிரகாசமான சூரியனாய் நிலைகொண்டுள்ளார் என்பதும் உண்மை. காந்தியடிகள், பதவியில்இல்லாமல் தன் வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டவர். அதில் வியப்பில்லை. அது அவரது வாழ்க்கையின் இயல்பாகமாறிப் போனது. ஆனால், பதவி கிடைத்தும் தன் எளிமையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதும், அப்பதவியினால்கிடைக்கக் கூடிய பலன்களில் அணுவளவும் அனுபவிக்காமல் மறுப்பதும் அதனினும் உயர்ந்த பண்பாகும். வாய்ப்புகளேகிட்டாத ஒருவன் தவறே செய்யவில்லை என்று சொல்வதைவிட, வாய்ப்புகள் கிட்டியும் தவறு செய்யாமல் மனதைக்கட்டுப்படுத்துபவன் மனிதரில் மாணிக்கம் ஆவான். அந்த வகையில், கர்மவீரர் அவர்கள் நிச்சயம் ஒரு ‘மனிதருள்மாணிக்கம்தான்!’.

    படிக்காத மேதை:
    படிக்காத மேதை என்று அவரைச் சொல்கிறோம். ஆம்! அவர் பள்ளிப் படிப்பைப் படிக்காத பேதைதான், ஆனால் அனைத்துமக்களின் மனங்களையும் படித்த மாமேதை! அவர் அரசியலைப் படித்தார், ஏழை மக்கள், பணக்கார மக்கள், நடுத்தர மக்கள்என்று அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையைப் படித்தார். நம் தேசத்தின் வலிமை என்ன, பலவீனங்கள் என்ன, தேவைஎன்ன, தேவையற்றவை என்ன, செய்ய வேண்டியது என்ன, செய்யக்கூடாதது என்ன, தேடவேண்டியது என்ன, தேடாமல்இருக்க வேண்டியது என்ன, பார்க்க வேண்டியது என்ன, பார்க்கக் கூடாதது என்ன என்று எத்தனையோ விஷயங்களைப்படித்து ‘படிக்காத மேதை’யாகத் திகழ்ந்தார். பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் போனதால்தான் நமக்கு ஒரு கர்மவீரர்கிடைத்தார். அவர் தொடர்ந்து படித்திருந்தால், நமக்கு இப்படி ஒரு மாமேதை கிடைத்திருப்பாரா என்பது சந்தேகமே!

    அவர் ஏழைப்பங்காளன்தான், பணக்காரர்கள் எப்படி ஏழைகளின் பங்குகளைப் பிடுங்குகிறார்கள் என்பதை உணர்ந்ததால்,ஏழைப் பங்காளனாக இருந்து அவர்களுக்குரிய பங்குகளை சேதாரமின்றிப் பெற்றுத்தந்தார். அவர் காமராச நாடார், ஆயினும்அவர் பதவிகளை நாடார் என்று பாராட்டப் பட்டார். எந்தப் பதவிக்கும் அவர் விருப்பப்பட்டதில்லை, காரணம் அனைத்துப்பதவிகளும் அவருடன் ஒட்டிக்கொள்ள விரும்பின. அவர் பதவிகளைத் துறந்தார், காரணம் அவற்றால் வரும் சுகங்களைமறந்தார், மறுத்தார். எந்தப் பதவிக்கும் உரிய பணி செய்யாமல் அப்பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க அவர்விரும்பியதில்லை. காரணம், அப்படி அப்பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தால், அதற்குரிய மரியாதை தன்னோடு ஒட்டாதுஎன்று தெரிந்து வைத்திருந்தார். இன்று பதவியை பதவி என்று சொல்லாமல், பொறுப்பு என்றுதான் சொல்கிறோம் என்றுயார் யாரோ பேசுகிறார்கள், இதை தன் வாழ்நாளில் வாழ்ந்து காட்டியவர் கர்மவீரர் என்றால் மிகையில்லை. ஆம்! அவர்பதவிகளை பதவியாக எண்ணாமல், அது மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை நிறைவேற்றக் கிடைத்த ஒருவாய்ப்பாகத்தான் எண்ணினார். மக்கள் பணியும், தேசப் பணியும் தன் கடமைகள் என்று எண்ணியதால்தான், அந்தமாமனிதர் திருமணம்கூட செய்து கொள்ளாமல் நாட்டு நலனே தன் நலன் என்று இறுதிமூச்சுவரை வாழ்ந்து மறைந்தார்.

    சிவகாமியின் செல்வன்:
    கர்மவீரர் அவர்கள் ‘சிவகாமியின் செல்வன்’ என்று போற்றப்படுகிறார். ஆயினும் அந்த சிவகாமிக்கேகூட எந்தச் சலுகையும்காட்டாதவர் என்பது, இறைவன் அவருக்குப் பிரத்தியேகமாகப் படைத்து வழங்கிய இணையில்லாத இரும்பு இதயத்தின்இயல்பான கட்டுப்பாடேயன்றி வேறென்ன? தன் அன்புக்குரிய ஒரு தாய், மாநில முதல்வராயிருக்கிற தன் மகனிடம்போர்வை ஒன்றும், மின்விசிறி ஒன்றும் கேட்க, போர்வை தேவையெனில், மின்விசிறி தேவையில்லை, மின்விசிறிதேவையெனில் போர்வை தேவையில்லை. என்னால் ஏதாவது ஒன்றைத்தான் வாங்கித் தர முடியும், எது வேண்டும் என்றுமுடிவு செய்து சொல் என்று தாய்க்கே பதில் சொன்ன அந்த மனவலிமை, இப்புவியில் வேறு யாரிடமாவதுகண்டிருக்கிறோமா? அன்னை தண்ணீர் சுமந்து வர சிரமப்படுகிறார் என்று பஞ்சாயத்துக் குழாயை அவர் வீட்டு வாசலில்பதிக்கச் சொல்லி பரிந்துரைக்கச் சொன்ன உறவினரிடம், என் தாய்க்கு மட்டும் என்ன விதிவிலக்கு? அது என்வேலையில்லை, வேண்டுமானால் பஞ்சாயத்துத் தலைவரிடம் விண்ணப்பித்துப் பாருங்கள் என்று சொன்ன நேர்மை,இன்று எந்த ஒரு தலைவனுக்காவது உண்டா? இவையெல்லாமே அந்தச் சிவகாமியின் செல்வனுக்கு மட்டுமே உண்டு!அதனால்தான், மக்களுக்கு அருகே போவதே பாவம் என்றும், பயம் என்றும், தேவையற்றது என்றும் எண்ணுகிற பேடித்தலைவர்களுக்கிடையே, மக்களோடு மக்களாக நெருங்கிப் பழகி, அவர்களது தேவையென்ன, எதிர்பார்ப்பு என்ன என்பதைப்புரிந்துகொண்டு, அதற்கேற்ப திட்டங்கள் வகுக்க அவரால் முடிந்தது. அதன் வெளிப்பாடாகத்தான், சாத்தனூர் என்றும்,கிருட்டிணகிரி அணை என்றும், பள்ளிகளாகவும், சத்துணவாகவும், தொழிற்சாலைகளாகவும், தொழிற்பேட்டைகளாகவும்இன்னும் பலவாறாக அவர் பெயரைப் பறைசாற்றும் பல நினைவுத் தூண்களை தமிழகமெங்கும் காண்கிறோம்.

    இந்திய அளவில் அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டபோது, சரியான அணுகுமுறை, ஆலோசனை என்று அவற்றைத் தீர்க்கும்திறன் பெற்றிருந்தார். அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டபோது, அங்கே யாரைப் பொருத்த வேண்டும் என்பதைத்துல்லியமாகக் கணித்தார். இந்திய உயர்பதவிகள் அவரைத் தேடிவந்த போதும், நேர்வழியிலோ, குறுக்கு வழியிலோஅவற்றை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளாமல், பெருந்தன்மையாக மற்றவருக்கு விட்டுக் கொடுத்தார். அதனால்தான்,அகில இந்தியாவின் ஒரே ‘கிங் மேக்கர்‘ என்று புகழப்படுகிறார். பள்ளிக்கு வராத சிறுவர்களைக் கட்டாயப்படுத்தாமல்,அவர்கள் வராததற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்ததால்தான், மதிய உணவுத் திட்டம் வந்தது. பள்ளிக்குப் படிக்கபிள்ளைகள் வந்தார்கள். நீராதாரத்தைப் பெருக்க வேண்டும் என்று அணைகள் கட்டியதால்தான், விவசாயிகளின் வாழ்க்கைசெழிப்படைந்தது. தொழிற்சாலைகளை உருவாக்கியதால், தொழில் வளர்ச்சி பெருகியது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாயின.

    தமிழனின் நன்றியுணர்ச்சி:
    இத்தனையும் செய்தும் அந்த மாமனிதரையே தேர்தலில் தோற்கடித்தோமே, அதுதான் சராசரித் தமிழனின் ‘மாண்பு’!தனித்தன்மை! நன்றியுணர்ச்சி! இத்தனை நல்லவைகளைச் செய்த அந்த மனிதரைத் தோற்கடிக்குமளவு, அவர் செய்த தவறுஎன்ன? இன்றும் யாராலும் பதில் சொல்ல முடியாத கேள்வி, வரலாற்றுக்கே விடை தெரியாத வற்றாத கேள்வி! தமிழர்வரலாற்றில் அழிக்க முடியாத வடுவாய்ப் பதிந்துள்ள அருவருப்பான அரசியல் பக்கங்கள்!

    இயேசுவை சிலுவையில் அறைந்ததும், நபிகள் நாயகம் மீது குப்பை வாரிப் போட்டதும் போல, மாமனிதர்களை, மனிதகுலம் நயவஞ்சகம் செய்தது என்ற நியதிக்கேற்ப, காமராசரையும் தோற்கடித்தோம். பதவியைத் தந்தவரையே, அவசரநிலைப் பிரகடனம் மூலம் மனம் நோகச் செய்து, அந்த மன உளைச்சலே அவரது உயிரைக் காவு வாங்கவும் வைத்தோம்என்பது வரலாற்றில் பதிந்து போன களங்கமான பக்கங்கள்! இன்றும் ஆளும் கட்சிகளும், ஆள நினைக்கும் கட்சிகளும், ஏன்,காமராசருக்கு எதிராக அரசியல் செய்த கட்சிகளும்கூட ‘காமராசர் ஆட்சி’யைக் கொண்டு வருவோம் என்றுசொல்வதிலேயே தெரியவில்லையா, அவரது ஆட்சி எப்படி இருந்தது என்று. அப்படிக் குறைசொல்லவே முடியாத அளவுஆட்சி நடத்தியதாக யாரையுமே குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ‘காமராசர் ஆட்சி’யைக் கொண்டு வருவோம் என்றுசொல்பவர்கள் யாருமே அவரின் வாழ்வைப் பின்பற்றி, ஒரு சதவீதம் அளவேனும் நடந்து கொள்கிறார்களா என்றால்,இல்லை என்றுதான் சொல்ல வேண்டி வரும்! இனி ஒரு ஆட்சி, காமராசர் ஆட்சிபோல் வர வாய்ப்பே இல்லை என்பது,மறுக்க முடியாத ஏக்கமான உண்மை.

    முடிவுரை:
    பதவி கிடைத்தவுடன், விரைவாகப் பணம் பண்ணி, பார்க்கும் இடங்களெல்லாம் தன் பெயரில் மாற்றி, கட்டிடங்களும்,கடைகளும், தொழில்களும் துவங்கி, தனக்கும் தனக்குப் பிறகு தன் சந்ததியினரும் மகிழ்ந்திருக்கவும், தன் உறவினர்கள்,நண்பர்கள் பெயர்களிலெல்லாம் சொத்து சேர்க்கவும் வாய்ப்பிருக்கும் அரசியலில், ஆலாய்ப் பறக்கும் நிகழ்காலஅரசியல்வாதிகள்/அதிகாரிகள், மக்களுக்கு நல்லது செய்தால், இறுதியில் ஒரு பாழடைந்த வீட்டை நினைவிடமாகவும்,படித்த பள்ளிக்கு பெயராகவும், ஏதோ ஒரு தெருவுக்குப் பெயராகவும், தன் சாதி போராட ஒரு காரணியாகவும் மட்டுமேஇருக்க முடியும் என்கிற உண்மையை உளமார உணர்ந்திருப்பதால்தானோ, காமராசர் போல யாருமே மாறமுயற்சிப்பதில்லை என்று தோன்றுகிறது.

    தன் பிள்ளைகூட தன் பெயரைக் காப்பாற்றாமல் போகக் கூடும் என்பதை முன்கூட்டியே உணர்ந்ததினால்தானோ,அம்மாமனிதர் தன் சந்ததியை வளர்க்காமல் விட்டுப் போனார்? நல்ல மனிதர்களுக்கெல்லாம் நேரடி வாரிசுகள் இல்லாதுபோவதே, அவர்கள் உன்னதமான மனிதர்கள் என்று உலகுக்கு உணர்த்த இறைவன் செய்யும் ஏற்பாடுதான் போலும்.

    தோன்றிற் புகழொடு தோன்றுக – அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று’

    ‘நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் நம் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’

    என்று சொன்ன அப்துல் கலாம் அவர்களின் வாக்குக்கேற்ப, எங்கோ ஒரு கிராமத்தில் சிவகாமி அம்மாளின் மகன் என்று ஒருசம்பவமாகத் தோன்றிய காமராசர் என்பவர், கர்மவீரர் என்னும் குறியீட்டால், சாதனைகள் புரிந்து சரித்திரமாக மாறிஇன்றும் புகழுடன் திகழ்கிறார் என்றால், அவர் ஒரு ‘தங்கத் தலைவன், கர்மவீரன்’தான் என்பதில் ஐயமும் தோன்றுமோ?

    சிறந்த நிர்வாகத்தாலும், புத்திக்கூர்மையாலும், நேர்மையாலும், எளிமையாலும், தனித்துவமிக்க அணுகுமுறையாலும்,அனுபவங்களாலும், தன் வாழ்வில் நடைபோட்ட விதத்தாலும் தன் புகழை நம்முள் விட்டுப்போனது, கர்மவீரரின் சாதனை!அவரின் ஆட்சி யார்மூலமாவது மீண்டும் வராதா என்று அனுதினம் ஏங்க வைப்பதே இன்றைய ஆட்சியாளர்களின்,அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் சாதனை! நமக்கு நேர்ந்த வேதனை! இதுவும் நாம் வாங்கிவந்த வரமென்று உணர்ந்து, அம்மாமனிதனின் நினைவுகளை நெஞ்சில் சுமந்துகொண்டே வாழ்க்கைப் பாதையில் நடைபோடுவோம்!

    வாழ்க கர்மவீரர் காமராசர்! வளர்க அவரது புகழ்!

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

    –ஜியாவுத்தீன்.

    எம்ஜிஆர்:
    1936ல் தமிழ்த்திரையுலகத்தைத் தாக்க ஆரம்பித்த இந்தப் புயல்
    திரையில் ஓய்ந்தது 1977ல், சுந்தரபாண்டியனாக மதுரையை மீட்ட பின்பு!
    தரையில் ஓய்ந்தது 1987ல் தமிழகத்தை 11 வருடங்கள் ஆண்டபின்பு!
    அரசியல் எதிரிகள் மெதுவாக எட்டிப்பார்த்தனர் இவர் மாண்ட பின்பு!

    ஆனாலும், திரையுலகைத் தாண்டி அரசியலிலும், மக்கள் மனங்களிலும், ஏழைகளின் இதயங்களிலும் இன்னும் இந்த வசீகரப் புயல் நிலைகொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பெயர் இவ்வுலகுள்ளவரை நிலைத்திருக்கும் என்பதும் உண்மை. கண்ணை மூடிக்கொண்டு திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் முதல், தேர்தல் அரங்குகளுக்கு வரும் தொண்டர்கள் வரை இன்னும் இந்தப் பெயர் கோலோச்சி வருவது நாம் அனைவரும் கண்கூடாகக் காணும் நிகழ்வுகள்! இவரைப்பற்றி 1000 வார்த்தைகள், 1500 வார்த்தைகள் என்று வரையறுப்பதெல்லாம் காட்டாற்று வெள்ளத்துக்கு மணலால் அணை கட்டுவது போலாகும். இவரைப் பற்றி எழுத ஆரம்பித்தால் பல புத்தகங்களாக எழுதலாம். ஆராய்ச்சி செய்தால் பல முனைவர் பட்டங்கள் வெல்லலாம்! ‘புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம்’! இவருக்குரிய இம்மூன்று முக்கிய பட்டங்களிலேயே இவருடைய மொத்தப் புகழையும் வாழ்க்கையையும் அடக்கிவிடலாம்!

    திரைப்படங்களில் கதாநாயகிகளைக் காப்பாற்றிப் பழக்கப்பட்ட இவரது கரங்கள், நிஜ வாழ்வில் பற்றியிருந்ததோ ஏழைகளின் கரங்களை! போலியாக புகைப்படங்களுக்கு மட்டும் காட்சியாக இல்லாமல், செல்லும் இடமெல்லாம் கூடும் மக்கள் கூட்டங்களில், முதியோர், வறியோர், எளியோர் என்று இவரது அன்புக் கரங்களுக்குள் அடைக்கலமானவர்கள் எண்ணிலடங்காதோர்! எந்தவித சஞ்சலமுமின்றி, ஏழைக்குழந்தைகளை இவர் வாரியணைத்த வண்ணக் கோலங்கள் எத்தனை எத்தனையோ! மக்களோடு மக்களாக, குழந்தைகளோடு குழந்தையாக இவர் சத்துணவும் சமபந்தி போஜனமும் சாப்பிட்ட காட்சிகள் கண்களுக்கு நிறைவளிப்பவை. இப்படி ஒரு ஏழைப்பங்காளனாக விளங்கிய இவரின் அரசியல் சமூகம் சார்ந்த வாழ்க்கைக்குள் போவதற்கு முன் …

    எம்.ஜி.ராமச்சந்திரன்:
    1917ம் ஆண்டு, இலங்கையில் பிறந்த மலையாளக் குடும்பத்துப் பிள்ளை இவர். ஆனால் வாழ்ந்து முடித்ததோ அன்னைத் தமிழ்நாட்டில், அச்சுப் பிறழாமல் அசல் தமிழனாக! மலையாளி என்றாலும் கேரளத்துக்கு வக்காலத்து வாங்கவில்லை, தமிழ்நாட்டுக்கு வந்தாலும், இலங்கையை மறந்து விடவுமில்லை! யாருக்கும் பாதகமின்றி தான் ஏற்றுக்கொண்ட பணிகளில், கொள்கைகளில் தடம் மாறாமல் தடம் பதித்தத் தங்கமகன் இவர்! தந்தையை இழந்து, தமிழ்நாட்டை நாடிவந்து, முதல் தடம் பதித்தது மதுரை பாய்ஸ் கம்பெனியில்! நாடக நடிகனாக வாழ்க்கையைத் தொடங்கிய நமது எம்ஜிஆர் அவர்கள், 1936ம் ஆண்டு அடியெடுத்து வைத்தார் தன் வலது காலை, தமிழ்த்திரையுலகில்! சதிலீலாவதி படம் மூலம் சதிராட இவர் வந்ததும், சதிராடிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் கதிகலங்கிப் போனார்கள்! போட்டியிட முடியாமல் ஒதுங்கியே நின்றார்கள்!

    பலரது பெயர்களுக்கிடையில் ஒரு பெயராய் வந்த எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் பெயர், விரைவிலேயே தனிப்பெயராய், தன்னிகரில்லா பெயராய், தரை டிக்கெட் முதல் பால்கனிவரை ரசிகர்களின் கைதட்டல்களைப் பெறும் பெயராய் உயர்ந்தது! சின்னச் சின்ன வேடங்களிலும் சிறப்பாய் நடித்து வந்தவரை, உச்சத்தில் கொண்டு சேர்த்தனர் மந்திரி குமாரியும், மலைக்கள்ளனும்! ரசிகர்களிடம் அப்போது துவங்கிய அந்தத் தாக்கம், இறுதிவரை இம்மியளவும் குறையவில்லை, இன்றளவும் அவரின்மீதுள்ள ஈர்ப்பு மறையவில்லை!

    இவரது திரைப்படங்களை ரசிகர்கள் திரைப்படங்களாகப் பார்க்கவில்லை, தம்மையே திரையில் பார்க்கும் உணர்வுடன் ஒன்றிப்போய்ப் பார்த்தார்கள். எம்ஜிஆரின் உருவத்தில் இளைஞர்கள் தங்களை எண்ணிக்கொண்டு, இறுமாப்புடன் வலம் வந்தார்கள். அதனால்தான், எம்ஜிஆரது திரைப்படங்களில் பலவும் சாதனைகள் படைத்தன, சரித்திரங்களாய் மாறின. நகரங்கள், கிராமங்கள் என்று பட்டிதொட்டியெங்கும் எம்ஜிஆரின் திரைப்படங்கள் வெளியாகும் நாட்கள்தான் பண்டிகை நாட்களாகக் கருதப்பட்டன.

    பொன்மனச்செம்மல்:
    துவக்கத்தில் காங்கிரசில் அரசியல் வாழ்வைத் துவக்கிய எம்ஜிஆர், பின்னர் பெரியாரின் சீடனாக, அறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பியாக திராவிடர் கழகத்தில் பகுத்தறிவுப் பாடம் பயின்றதன் விளைவாக, ஆன்மீக வேடங்களிலோ, ஆன்மீகத் திரைப்படங்களிலோ நடிப்பதில்லை என்கிற உறுதியான கொள்கையைக் கடைபிடித்தார். இறுதிவரையிலும் இக்கொள்கையை யாருக்காகவும் அவர் விட்டுக் கொடுத்ததில்லை. தனிப்பிறவி திரைப்படத்தில் முருகனாய்த் தோன்ற வைக்க சின்னப்பா தேவரவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்து நடிக்க வைத்ததாக பின்னாளில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் காரணத்துக்காக எந்த ஆன்மீகவாதியும் எம்ஜிஆரை விரும்பாமல் விட்டதுமில்லை. வெறுத்ததுமில்லை.

    அவர் கடைபிடித்த உறுதியான இன்னொரு கொள்கை புகை பிடிக்காததும், மது அருந்தாததும்! ஆம், மதுவும் புகையும் மலிவாகப் போன இவ்வுலகில், தன் திரை வாழ்விலும் சொந்த வாழ்விலும் அவற்றைக் கையாளாத அவரது சிறப்பு, அவரது ரசிகர் மனங்களில் மட்டுமின்றி, அனைவரது மனங்களிலும் ஆழப்பதிந்தது. அவருக்கென்று ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுத் தந்தது, அவரைப் பற்றிய தூய எண்ணத்தை வளர்த்தது. இந்த அரிய குணம்தான் எம்ஜிஆர் மிக நல்லவர் என்னும் நம்பிக்கையை அனைவரிடமும் விதைத்தது!

    திருடனாக வந்தாலும், கொள்ளைக்காரனாக வந்தாலும் ஏழைகளுக்கு உழைப்பவராக, உதவுபவராகவே கதாபாத்திரங்களை அமைத்து நடித்து வந்ததால், ரசிகர்களுக்கும் அவருக்குமான நெருக்கம் என்றும் மாறாமல் தொடர்ந்துகொண்டே வந்தது. விவசாயியாகவும், மீனவனாகவும், ரிக்க்ஷா ஓட்டுபவராகவும், குப்பத்தைக் கூட்டுபவராகவும் நடித்ததன் மூலம் தன்னுடைய ஏழைப்பங்காளன் எனும் ஆதர்ச கதாபாத்திரத்தை மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பதியவைத்துக் கொண்டார். ராஜா தேசிங்கு, விக்கிரமாதித்தன், போர்ப்படைத் தளபதி, சிப்பாய், அரசன், அமைச்சன், புலவன் என்று மக்கள் திலகத்தின் பல பரிமாணங்களில் மக்கள் மயங்கிக் கிடந்தார்கள். சங்க கால சரித்திரங்களும், புறநானூறு போன்ற காவியங்களும் போற்றும் தமிழரின் வீரத்தின் அடையாளமாக எம்ஜிஆரின் தினவெடுத்த தோள்களையும், பரந்து விரிந்த மார்புகளையும், வலிமையான கரங்களையும் கட்டுடலையும் கண்டு மகிழ்ந்தார்கள்.

    தெள்ளத் தெளிவான அழகுத் தமிழில் அவர் பேசிய வசனங்கள் செவிகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. பரபரவென்று அவரின் நடையும், வாளைச்சுழற்றும் லாவகமும், வளைய வரும் அவரது துடிப்பும், சண்டைக் காட்சிகளில் சதிராடிய வாளும், வேலும், சிலம்பமும், இடம் மாறி மாறித் துள்ளிக்குதித்து வில்லன்களைப் பந்தாடிய அவரது கரங்களும் மக்களை அசைய விடாமல் ஆண்டாண்டுகளாகக் கட்டிப் போட்டிருந்தன. உதாரணத்திற்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் நம்பியார் அவர்கள், ‘மதம்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று கேள்வி கேட்க, ‘சினம்கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்’ என்னும் எம்ஜிஆரின் பதிலுக்கு எப்போதும் அரங்கங்கள் அதிரும், ஆரவாரக் கைதட்டல் விண்னைத் தொடும்.

    மதுரை வீரனிலும், மந்திரிகுமாரியிலும், மன்னாதிமன்னனிலும் மக்கள் திலகத்தின் தெள்ளுதமிழ் வசனங்களில் மயங்காத மனங்களும் உண்டோ? அந்தக்குரல் பாதிப்படைந்த பின், மக்கள் மனங்களில் தனக்கான இடம் மாறாமல் இருக்கிறதா என்பதை அறிய பரீட்சார்த்தமாக தன் சொந்தக் குரலிலேயே பேசி நடித்து வெளியிட்ட காவல்காரன் பட்டி தொட்டியெல்லாம் பிரமாதமாக ஓடி வெற்றிக்கொடி நாட்ட, தன் மீது மக்களுக்கு இருந்த அபிமானத்தைக் கண்டு எம்ஜிஆரே திக்கு முக்காடிப் போனார். துப்பாக்கியால் சுடப்பட்டும் தானே மருத்துவமனைக்கு காரோட்டிச் சென்று மருத்துவரிடம் நடந்ததை விளக்கி தானே சிகிச்சைக்கு உட்பட்டார் என்றால் அவரின் மனதைரியத்துக்கு வேறு என்ன சான்று வேண்டும்? கண் விழித்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி ‘ராதா அண்ணன் நலமாக இருக்கிறாரா?’ என்பதே. காரணம், எம் ஆர் ராதா எம்ஜிஆரை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொள்ள முயன்றார் என்பதே. தனக்கு தீங்கு நினைத்தவருக்கும் இரங்கும் இந்த உயரிய குணம் காண்பது மிக அரிது.

    எம்ஜிஆர் ஆன்மீகத்திலும் தவறான பழக்கங்களைக் கையாளும் கதாபாத்திரங்களிலும் நடிப்பதில்லை என்பதில் எந்த அளவு உறுதியுடன் இருந்தாரோ, அதே அளவு பெண்களை மதிப்பதிலும், தங்கையாக எண்ணுவதிலும், தாயாக எண்ணுவதிலும் தன் சொந்த வாழ்விலும், திரையிலும் எந்த வித்தியாசத்தையும் காட்டாத பண்பிலும் உறுதியுடன் இருந்தார். அவரின் திரைப்படங்களில் தாய் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருந்தன. தாய் சொல்லை மதித்து நடக்கும் அன்பு மகனாக அவர் வாழ்ந்து காட்டியது, ரசிகர்களை தாய்மீது அன்பு கொள்ள வைத்தது. தாயை மதிக்கும் பண்பை வளர்த்தது. தாயின் சொல்படி நடக்கும் பிள்ளைகள் சிறப்புறுவார்கள், சிறந்த புகழ் பெறுவார்கள் என்பதை வலியுறுத்திச் சொல்லியது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர் உண்மையாகவே தன் தாயின் மீது அளவிலாப் பாசமும் பற்றும் கொண்டிருந்தார். அதைத்தான் அவர் திரையில் வெளிப்படுத்தினார். மகளிர் மீது இவர் காட்டிய பரிவும் பாசமும் ‘தாய்க்குலம்’ என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்தது.

    30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் மட்டுமே நடித்து ரசிகர்களைப் பரவசப்படுத்தி தமிழ்த்திரையுலகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் என்பதுதான் உண்மை.

    எம்ஜிஆரின் இன்னுமொரு வலுவான ஆயுதம் பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக ரசிகர்களைக் கிறங்கடித்தன. அவரின் சமூக நோக்கத்தை வெளிப்படுத்தும் தத்துவப் பாடல்களும், அரசியல் சார்ந்த கொள்கைப்பாடல்களும், திராவிடப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பாடல்களும் ரசிகர்களின் மனங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்தன. அச்சம் என்பது மடமையடா, வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை, உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், புதிய வானம் புதிய பூமி, ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை, ஓடி ஓடி உழைக்கணும், கொடுத்ததெல்லாம் கொடுத்தான், கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று எண்ணிலடங்கா பாடல்கள் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டுள்ளன. தாயில்லாமல் நானில்லை, செல்லக் கிளியே மெல்லப் பேசு, உலகம் பிறந்தது எனக்காக, இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில், திருவளர்செல்வி மங்கையர்க்கரசி, பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்று பல பாடல்கள் பாசமழையில் நனைய வைக்கின்றன. உடுமலை நாராயணகவி தொடங்கி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசர் கண்ணதாசன், வாலி, புலமைப் பித்தன் என்று எம்ஜிஆருக்காகப் பாட்டெழுதும் கவிஞர்களுக்கு, வார்த்தைகளும் வரிகளும் அமுத சுரபியாய்க் கொட்டிக் குவித்தன. பாடல்களைத் தேர்வு செய்வதில் அவர் என்றும் சமரசம் செய்துகொண்டதேயில்லை. அதனால்தான், அவரது திரைப்படங்களில் பாடல்களுக்கு தனிச்சிறப்பு இருந்தது. அவரது பாடல்களுக்கு தனி மதிப்பும் இருந்தது.

    தன்னுடைய திரைப்படங்களால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார். அதனால்தான் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியை அமைத்து வெளியிடச் செய்தார். இடைவெளி அதிகரித்து ரசிகனும் ஏமாந்துவிடக் கூடாது, இடைவெளி குறைவதால், தயாரிப்பாளரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று சரியான தெளிவான திட்டமிட்டுத் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தார்.

    வீரம் பாசம் விவேகம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் எம்ஜிஆர் அவர்கள் குறை வைத்ததில்லை. அலிபாபாவும் 40 திருடர்களும், சபாஷ் மாப்பிளே, மாட்டுக்கார வேலன், பெரிய இடத்துப் பெண், குடியிருந்த கோயில் என்று பல படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை. உருக்கமான நடிப்புக்கு உதாரணங்களாய் பெற்றால்தான் பிள்ளையா, பணம் படைத்தவன், எங்க வீட்டுப் பிள்ளை என்றும், வீரத்துக்கு அடிமைப்பெண், அரச கட்டளை, மதுரை வீரன், மன்னாதி மன்னன், மகாதேவி என்றும் ஏராளமாய்! இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தும் நயமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, ரிக்சாக்காரன் திரைப்படத்துக்காக இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதும் பெற்றார்.

    திரைப்பட வாய்ப்புகளுக்காக எந்தக் கொள்கையையும் கட்டுப்பாட்டையும் விட்டுக் கொடுக்கும் மனிதர்களுக்கிடையில், தன் இறுதி மூச்சு வரை எதற்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்வதில்லை, கட்டுப்பாடுகளை விட்டுக்கொடுப்பதில்லை என்கிற அசைக்க முடியா உறுதியுடன் வாழ்ந்து காட்டியவர் இந்தப் பொன்மனச் செம்மல்.

    புரட்சித் தலைவர்:
    தன் திரைப்படங்களை தான் சார்ந்த அரசியல் இயக்கத்துக்குப் பயன்தரும் வகையில் அந்தந்தக் காலகட்டங்களில் அமைத்துக் கொண்டார். அதனால்தான், அறிஞர் அண்ணா அவர்கள் அரசியல் மேடைகளுக்கு கலைஞர் கருணாநிதியையும் திரைப்படங்களில் எம்ஜிஆர் அவர்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் துப்பாக்கியின் இரு குழல்களாக்கி கட்சியை வளர்த்தார், கொள்கைகளைப் பரப்பி வந்தார். அண்ணாவின் தொண்டனாகத் தொடங்கிய அரசியல் வாழ்வில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியுயர்வு பெற்றார். 1969ம் ஆண்டு அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்க, எம்ஜிஆர் கட்சியின் பொருளாளர் பொறுப்பேற்றார். சிறிது காலத்திலேயே கலைஞருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியை விட்டு விலக்கப்பட்டு தனிக்கட்சி கண்டார்.

    திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சி, அந்தப் பெயரும் மாறிவிடக் கூடாது, கருணாநிதியும் தன் கட்சிப் பெயரை தவறாக விமர்சிக்கக் கூடாது என்று யோசித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று அறிவுபூர்வமாகத் தன் கட்சிக்குப் பெயர் சூட்டினார். அவரது செல்வாக்கால் தனிக்கட்சி துவங்கி ஒரு ஆண்டுக்குள் திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தலில் முதன்முதலாகத் தன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரை வெல்ல வைத்தார். அடுத்த ஆண்டு திமுக ஆட்சிக் காலத்திலேயே ஆளும் கட்சிக்கு எதிராக இவரது கட்சியை கோயம்புத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் வெற்றிபெற வைத்தனர். கட்சி துவங்கி 5வது ஆண்டிலேயே தேர்தலில் வென்று தமிழகத்தின் முதலமைச்சரானார். நடிகராக இருந்து அரசியலில் ஈடுபட்டு நாடாள வந்து ஒரு புதிய புரட்சியைத் தோற்றுவித்தார். இவரைத் தொடர்ந்தே நடிகராக இருந்த பலரும் அரசியலில் ஈடுபட தைரியம் பெற்றனர். இரு துறைகளிலும் தான் மட்டுமே முதன்மையாக இருக்க வேண்டும் என்கிற பேராசை, கர்வம், ஆணவமின்றி, அரசியலில் முழுமையாக ஈடுபடவேண்டிய நிலை வந்ததும் தானாகவே திரையுலகை விட்டு விலகி, இளைய தலைமுறைக்கும் புதுமைக்கும் வழிவிட்டு ஒதுங்கினார்.

    நடிகருக்கு நாடாளத் தெரியுமா என்று கேள்வி எழுப்பியவர்களுக்கெல்லாம் ஒரே பதில்: இவரது மரணம்வரை இவரை யாராலும் வீழ்த்த முடியவில்லை என்பதே. கருணாநிதியை எதிர்த்து கட்சி துவங்கினாலும், அவர்மீது வைத்திருந்த மரியாதையை எம்ஜிஆர் எப்போதும் குறைத்ததேயில்லை. முக்கியமாக, தன் இறுதி மூச்சுவரை ‘கருணாநிதி’ என்று அழைக்காமல் ‘கலைஞர்’ என்று மரியாதையுடன் அழைத்து வந்தார். அதுதான் எம்ஜிஆர்.! இவருடன் நடித்த நடிகர்கள் பலபேர் இவரது கட்சியில் அடைக்கலமாகி சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என அரசியலில் வலுவான பதவிகளைப் பெற்றனர். இவரது தொண்டர்கள் மந்திரிகளாக மாண்பு பெற்றனர். கிராமங்கள்தோறும் எம்ஜிஆரின் புகழ் ஒவ்வொரு குடிசையிலும் அரியாசனமிட்டு கோலோச்சிக் கொண்டிருந்தது. ஏழைகளைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக கர்மவீரர் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக மாற்றி ஏழைக்குழந்தைகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி சாதனை புரிந்தார்.

    அரசியலாகட்டும், திரைப்படங்களாகட்டும், தன் ஆளுமையை என்றுமே அவர் இழந்ததில்லை. அவரை முழுமையாக நம்பியவர்களை அவர் என்றுமே ஏமாற்றியதில்லை, மாறாக அவரால் பலனடைந்து பணம் சம்பாதித்தவர்கள் ஏராளம்.

    மக்கள் திலகம்:
    எம்ஜிஆரின் இல்லத்துக்குச் சென்றுவிட்டு யாரும் உணவருந்தாமல் திரும்பமுடியாது. தாய்மைப் பண்புக்குதாரணமாய், வயிற்றுப் பசிக்கு உணவிட்டு அனுப்புவது அவரது தலையாய பண்பு. அதேபோல், ஏழைகள் யாரும் உதவி என்று அவரது வீட்டுப் படியேறினால் வெறும் கையுடன் திரும்புவதும் நடக்காத ஒன்று. கேட்டு செய்த உதவிகள் ஒருபுறம், வெளியுலகுக்குத் தெரியாமல் கேளாமலே செய்த உதவிகள் எண்ணிலடங்கா.

    எம்ஜிஆரை நாடி, அவரது ஆதரவை நாடி, அவரது புகழெனும் ஆலமரத்தினடியில் இளைப்பாற ஆயிரக்கணக்கானோர் வந்தனர். ஆனால் யாரிடமும் கையேந்தி நிற்க ஆண்டவன் அவரைத் தாழ்த்தியதுமில்லை, அந்நிலைக்கு அவரைத் தள்ளியதுமில்லை. தன் இறுதி மூச்சுவரை வாரி வாரி வழங்கினாரே தவிர, தனக்கு வேண்டும் என்று வாரி வைத்துக் கொண்டதில்லை. ஏழைக்கு உதவுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாரே தவிர, ஏழையின் சாபத்திற்கு என்றும் ஆளானதில்லை. தமிழ் மக்கள்மீது பாசத்தைப் பொழிந்தாரேயன்றி, அரசியல் வேசத்தைக் காட்டி ஏமாற்றியதில்லை. யார் வயிற்றிலும் அடிக்கவில்லை, வள்ளல் என்றே பெயர் பெற்றார். யார் குடியையும் கெடுத்ததில்லை, பலரின் குடி உயர காரணமாய் இருந்திருக்கிறார். தமிழன் என்று சொல்லிக்கொண்டு, தமிழருக்கே துரோகமிழைக்கும் பலருக்கு நடுவில், மலையாளி என்றாலும் தன்மீது அன்பும் நம்பிக்கையும் வைத்த தமிழ் மக்களுக்கு உண்மையானவராக இருந்தார். தமிழரெல்லாம் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு வந்த நாகரிகத்திற்கு மாற்றாக, தமிழில் கையெழுத்திட்டு தன்னை வளர்த்த மண்ணுக்கு மாண்பைக் கூட்டினார், நன்றியைக் காட்டினார்! பொழுதுபோக்காக மட்டுமே இருந்த திரைப்படம் என்னும் சாதாரண ஊடகத்தை, கருத்துக்களை விதைக்கவும், கொள்கைகளை முழங்கவும், தத்துவங்களை உரைக்கவும் விழிப்புணர்வை வெளிப்படுத்தவும் கூடிய பலமான ஆயுதமாக மாற்றிக் காட்டினார். மக்கள் மனங்களில் இடம்பிடித்து விட்டால் போதும், உலகையே வெல்லலாம் என்பதை தன் வாழ்வில் நிரூபித்துக் காட்டினார்.

    பிரச்சாரத்திற்கே போகாமல் மருத்துவமனையில் படுத்துக் கொண்டே தேர்தலில் வென்றார். துப்பாக்கி குண்டுகள்கூட துளைக்க முடியாமல் துவண்டு போக மறுபிறவி கண்டார். இட்ட அடியெல்லாம் வெற்றிப்படிக்கட்டுகளாக மாற்றிக் காட்டினார். தொட்டதெல்லாம் பொன்னாக துலங்கச் செய்தார். திக்குத் தெரியாமல் திசை தெரியாமல் அல்லாடியவர்களுக்கு விடிவெள்ளியாகக் காட்சி தந்தார்.

    1950களில் தொடங்கி 1977 வரை தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னனாய் வலம் வந்த மக்கள் திலகம், அதன்பின் தமிழ்நாட்டின் முடிசூடா மன்னனாக மாறி, தமிழ் மக்களின் இதயங்களில் முதல்வராய் வலம் வந்தார். உடற்பயிற்சி, தங்க பஸ்பம், ஆரோக்கியம் என்று அனைவருக்கும் போதித்த அந்தத் தேக்குமர தேகத்தை, பொன்னொத்த பளிங்கு மேனியை, வெற்றிகளால் வேயப்பட்டிருந்த அந்த நிழல்தரும் குடிலை, கதாநாயகிகள் ஊஞ்சலாடிய அந்தக் கட்டுடலை, நோய் என்னும் சாத்தான் ஏதோ ஒரு துரதிர்ஷ்ட சமயத்தில் ஏமாற்றி உள்நுழைந்து, உருக்குலைக்கத் துவங்கினான். அந்தச் செய்தி கேட்டு, அகில உலகமும் அதிர்ச்சியடைந்தது, அல்லாடித்தான் போனது, ஆறுதல் கொள்ள வழியின்றி கதறித் துடித்தது. அவரது அருமையும் தேவையும் தெரிந்த அன்னை இந்திராகாந்தி, தனி விமானம் தந்து உடனடியாக அமெரிக்காவுக்கு அனுப்பி சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார்.

    சிகிச்சை முடிந்து திரும்பியவரை வரவேற்க தமிழகமே விமான நிலையத்தில் திரண்டது. தன் வலிமை குறைந்து விடவில்லை என்பதை அதன்பின் பல நிகழ்ச்சிகளில் அவர் நிரூபித்திருக்கிறார். ஆனாலும் விதி வலியது என்னும் சொல்லுக்கேற்ப காலன் அவர்மீது காதல் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் கவர்ந்து போய்விட்டான்.

    அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா போயிருந்த சமயத்தில் அனைத்து திரையரங்குகளிலும் அவர் குணம்பெறவேண்டி, காட்சி தவறாமல் ஒளிபரப்பப்பட்ட ‘ஆண்டவனே உன் பாதங்களை கண்ணீரால் நீராட்டினேன்’ மற்றும் ‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற’ ஆகிய பாடல்கள் திரையில் இடம்பெற்ற போது அவருக்காக கண்ணீர் சிந்திய மனங்களில் அன்று மட்டுமல்ல, இன்று மட்டுமல்ல, என்றும் எம்ஜிஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார், வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது தமிழ் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு.

    மக்களின் திலகமாக, பொன்மனச் செம்மலாக, புரட்சித்தலைவராக, முதல்வராக, நமது குடும்பத்தில் ஒருவர்போல் தோன்றிய, இளைஞர்களின் உதாரண புருஷனாக, தாய்க்குலத்தின் தவப்புதல்வனாக, இளம்பெண்களின் சகோதரனாக, கனவுக் கண்ணனாக, நல்லபல மனிதர்களின் உற்ற நண்பனாக சிரமத்தில் கைகொடுக்கும் ஆபத்பாந்தவனாக, கஷ்டங்களில் கண்ணீரைத் துடைக்கும் ரட்சகனாக, தமிழ்நாட்டை மட்டுமின்றி தமிழர் இருந்த இடங்களிலெல்லாம் குதூகலம் குடிகொள்ள வைத்த இணையில்லா கலைஞனாகத் திகழ்ந்த அம்மாமனிதர், என்றும் மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் என்று சொல்வதில் கர்வப்படுகிறேன். அவரது ரசிகன் என்பதில் பெருமைப் படுகிறேன். அவரின் மறைவுக்குப் பின்னும் அவரது புகழின் தாக்கத்தை உணர்ந்ததனால்தான் இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ அவரைத் தேடி வந்து தஞ்சமடைந்தது.

    வாழ்க எம்ஜிஆர் எனும் பெயர்! ஓங்குக அவரது புகழ்!

    Share
  • ஞாலம் போற்றும் தமிழ்க்காதலன்!

    –ஜியாவுத்தீன்.

    கண்ணதாசன் பிறந்தநாள் நக்கீரன் படம்

    கண்ணதாசன்!

    காலத்தை வென்ற கவிஞன்!
    ஞாலம் போற்றும் தமிழ்க்காதலன்!

    இந்தப் பெயரை உச்சரிக்கும்போதே, எழுதும்போதே உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுவதுதான் நம்மீதான அவரின் தாக்கம் என்றால் மிகையில்லை.

    என் பார்வையில் என்றில்லை, யார் பார்வையிலும் ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் அடங்காத மகோன்னதக் கவிஞன்தான் கண்ணதாசன். பாரதியின் நாவில் சரஸ்வதி குடிகொண்டிருந்தாள் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். பாரதி மறைந்தபின் குடிகொள்ள இடமின்றித் தள்ளாடிக் கொண்டிருந்த சரஸ்வதி கண்ணதாசன் பிறந்தவுடன் அவரின் நாவில் குடிகொண்டுவிட்டாள் போலும். அதனால்தான் இம்மனிதனின் நா உதிர்த்த வார்த்தைகளெல்லாம் பாடல்களாயின, பாடல்கள் ஒவ்வொன்றும் தமிழ்மகனின் வேதங்களாயின.

    சோழசபையில் அம்பிகாபதியின் புலமையைப் பரிசோதிக்க பக்திப் பாடல்கள் 100ஐ தொடர்ந்து பாடவேண்டும் என்று கட்டளையிடப்பட்ட கதையைக் கேட்டிருக்கிறோம். அது எப்படி 100 பாடல்கள் பாட முடியும் என்று வியந்து நம்பாமல்கூட இருந்திருப்போம். ஆனால், கண்ணதாசனின் கதையைக் கேட்கும்போது, திறமையாளர்களுக்கு அது ஒன்றும் திணறும் காரியமல்ல என்பதை உறுதியாய் நம்பத் துவங்குகிறோம். ஆம்! இவரிடம் எத்தனை பாடல்கள் கேட்டாலும், எத்தனை விதமாய்க் கேட்டாலும், எந்த நிலையில் கேட்டாலும் சரம்சரமாய்க் கொட்டின என்று இவருடன் பழகிய பலரும் கூறக் கேட்கையில், தமிழுலகில் இவரை ‘பாடல்களின் அமுதசுரபி’ என்று சொல்லத் தோன்றுகிறது.

    அரிய விஷயங்களை, அற்புதமான மனிதர்களை, மனிதர்கள் ஏங்குமளவு அவர்களுக்குப் பிடித்தமானவற்றை இறைவன் எதிர்பாரா தருணங்களில், எதிர்பார்க்கும் காலத்துக்கும் முன்பாகவே பறித்துக் கொண்டுவிடுவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறான். அதன் நிதர்சன உதாரணங்கள், பாரதியும் கண்ணதாசனும். இப்பூவுலகில் பாரமாய், மனிதகுலத்தை மாசுபடுத்தும் நச்சுக்களாய் எத்தனையோ ஜீவன்கள் நீண்ட காலம் வாழும் நிலையில், நம் இதயம் கவர்ந்தவர்களை இறைவன் கவர்ந்துவிடும்போது, அவன்மேல் கோபமாய்த்தான் வருகிறது. என்ன செய்வது? இயற்கையின் திருவிளையாடல், இறைவனின் திருவிளையாடல். ஜீரணிக்கக் கஷ்டமாயினும் ஏற்றுக் கொண்டுவிடுகிறோம்.

    என் பார்வையில் கண்ணதாசனை மனசாட்சியென்றுதான் சொல்லத் தோன்றுகிறது. என் மனசாட்சி மட்டுமில்லை, நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும்தான். ஆம், அவரின் பாடல்களில் ஏதாவதொரு பாடல், நம் ஒவ்வொருவரின் மனநிலைக்கும் சூழ்நிலைக்கும் உணர்வுகளுக்கும் ஏற்ப பொருந்துகின்றன என்பதை வேறு எப்படிச் சொல்வது? நாம் துவளும்போது தத்துவம் சொல்லி உத்வேகம் தரும், நாம் மகிழும்போது நண்பனாய் நமக்கு வாழ்த்துச் சொல்லும், நாம் கோபப்படும்போது, சகோதரனாய் ஆசுவாசப்படுத்தும், நாம் காதல் கொண்டால், நம் உளமறிந்து லாலி பாடும். நமக்கு சோகம் நேர்ந்தால், சுகமாக்கும் மருந்தாய்த் தோன்றும். இப்படி ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ப கவியரசரின் பாடல்கள் நம்முடன் வரும்போது, அதை ‘மனசாட்சி’ என்று சொல்வதில் தவறில்லை அல்லவா?

    இம்மனிதர் பணத்திலும் திளைத்திருக்கிறார், பணமின்றித் தவித்தும் இருக்கிறார். வெற்றி பெற்ற அரசியலிலும் இருந்திருக்கிறார், தோல்வியுற்ற அரசியல்வாதியுடனும் இருந்திருக்கிறார். கட்சிகள் மாறியிருக்கிறார், மாறியபின் வசை பாடியுமிருக்கிறார். போகுமுன்னே தூது விட்டிருக்கிறார், போனபின்னே வாழ்த்தியுமிருக்கிறார். கட்டிய மனைவியிடம் காதலாய்க் கசிந்திருக்கிறார், கன்னியரிடம் மனதைக் காமுறவும் விட்டிருக்கிறார். குழந்தைகளை நேசித்திருக்கிறார், குழந்தையாகவே மாறி குமரிகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுமிருக்கிறார்.

    அமைதியாய் சலசலப்பின்றி ஓடும் ஆறாய் இருந்ததில்லை இவரின் வாழ்க்கை. ஆரவாரமாய், மேடுபள்ளங்களைக் கடந்து பாயும் அருவியாய் இருந்திருக்கிறது. கள்ளம் கபடமின்றி வாழ்ந்திருக்கின்றார், உள்ளங்களெல்லாம் வெள்ளை என்று எண்ணி ஏமாந்துமிருக்கிறார். வஞ்சகத்தைக் கண்டிருக்கிறார், தன் வார்த்தைகளால் அவற்றை வென்றிருக்கிறார். அன்பிலே மிதந்திருக்கிறார், அதை பாடல்களாய்த் தொடுத்துமிருக்கிறார். வேதனையில் வெந்திருக்கிறார், அதை சாதனைப் பாடலும் ஆக்கியிருக்கிறார். சோகத்தில் புழுங்கியிருக்கிறார், ஆனாலும் சுகமாகப் பாட்டிசைத்திருக்கிறார். அன்புக்கு ஏங்கி தாகத்தில் தவித்திருக்கிறார். அற்புதமான சொற்களால் வேகமாய்ப் பாடியிருக்கிறார். இப்படி கண்ணதாசனைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

    இந்திய நாட்டைக் குறிப்பிடும்போது, வேற்றுமையில் ஒற்றுமை, வேறுபாடுகள் நிறைந்த நாடு என்று வரலாற்றுப் பாடம் படித்திருக்கிறோம். அதேபோலத்தான், கண்ணதாசனையும் வேற்றுமையில் ஒற்றுமை என்றும், வேறுபாடுகள் நிறைந்த மனிதர் என்றும் மேற்சொன்னவற்றின் மூலம் குறிப்பிடலாம். இத்தனை அறிவார்ந்த மனிதனை, ஆண்டவன் ஏன் சோதனைகளுக்கு உட்படுத்தினான் என்று எண்ணினால், உண்மை விளங்கும். நல்லவர்களைத்தான் ஆண்டவன் சோதிப்பான் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விட முடியாது.

    ஒருவேளை, ஆண்டவன் கண்ணதாசனை சோதனைகளுக்கு உட்படுத்தாமல் இருந்திருந்தால், நமக்கு கண்ணதாசன் என்னும் மகாக்கவிஞன் கிடைக்காமலே போயிருக்கவும் வாய்ப்புண்டு. ஆம்! இறைவன் ஒவ்வொருமுறையும், ஒவ்வொரு விதமாய் கவிஞரை சோதனைகளுக்கு உள்ளாக்கிய போதெல்லாம், சாதனைகள் படைத்த பல நல்ல பாடல்கள் நமக்குக் கிடைத்தன என்பதுதான் உண்மை. அவர் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஆளான போதெல்லாம் ஒவ்வொரு பாடலும் வீரியமாய் விழுந்தன. அதற்கு அவரின் திரைப்பட இசையமைப்பாளர்களின் மெட்டுக்கள் உரமிட்டன என்பதுதான் உண்மை. இன்னும் சொல்லப் போனால், அவர் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் போதெல்லாம், உணர்வுபூர்வமாக அழுத்தமாக இன்னும் ஆழமாகப் பாடல்கள் வெளிப்பட்டன. இங்கே அவரின் பாடல்களைத் தனியாகக் குறிப்பிடப் போவதில்லை. அவை இத்தமிழுலகம் அன்றாடம் அள்ளிப் பருகும் தேமதுர கானங்கள். எனவே, அவற்றை எழுதவேண்டிய அவசியமில்லை.

    மேலே குறிப்பிட்டதுபோல், அவர் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஆட்படாமல் போயிருந்தால், அப்போது வெளிப்பட்ட சிறந்த பல பாடல்கள் கிடைக்காமல் போயிருக்குமோ என்னும் அச்சம் ஏற்படுவது இயற்கைதானே? இது என்னுடைய (நம்முடைய?) ஒருவித சுயநலம் என்றுகூட தோன்றுகிறது. ஆனாலும் பாவமில்லை, அவரின் சிரமங்களில் தோன்றிய பாடல்களனைத்தும், நமக்கு பாடம் கற்றுத்தரும் பள்ளிக்கூடங்கள் என்றால் மிகையில்லைதானே?

    பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட பக்தி இலக்கியங்களை, பத்துவரிப் பாடலில் விளங்க வைத்தார். பல ஆண்டுகளில் கிடைக்கும் அனுபவங்களை, நான்கு நிமிடப் பாடலில் சுருங்க வைத்தார். படித்துப் பட்டம் பெற்று உணரும் கல்வியறிவை, கேட்கும் பாடலிலேயே புரிந்துகொள்ளும் எளிமை விதைத்தார். விதைத்தவனாயினும், வதைப்பவன் ஆண்டவன் என்றால், கேள்வி கேட்கத் தயங்காதே என்று தைரியம் வளர்த்தார். நண்பனாயினும், நயவஞ்சகனாய் மாறிவிட்டால், நடித்துக் கொண்டிராதே, நட்பை முடித்துக்கொண்டுவிடு என்று போதனை ஊட்டினார். வஞ்சகியின் வலையில் விழுந்துவிட்டால், வாழ்க்கை நஞ்சாய் மாறிவிடும் என்பதை அறிவுறுத்தினார். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

    இன்னும் சொல்லப் போனால், அவரவர் மதங்கள் சார்ந்த வேதங்களைக் கூட கற்காமல் இருந்திருப்பார்கள், ஆனால் கண்ணதாசனின் பாடல்களைக் கேட்காமல் இருந்திருக்க மாட்டார்கள். கல்விச்சாலைகளுக்குக் கூட செல்லாமல் இருந்திருப்பார்கள், கண்ணதாசனின் பாட்டுச் சோலைகளில் திளைக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். மதுக்கடைகளை நாடாதவர் எத்தனையோ பேர், ஆனால், இவர் பாடல்களைக் கேட்டு மதுவுண்ட வண்டுகளாய் மனம் கிறங்கிப் போவார்கள்.

    இக்கவிஞனின் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், ஆனால், அதன்மூலம் அவன் கற்றுணர்ந்து நமக்கு விட்டுப் போயிருப்பது விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள். சாலையில் போகும்போது இடறும் கல்லை எடுத்து தூரப் போட வேண்டும் அல்லது இங்கே உள்ள கல்லில் இடறிவிடாதீர்கள், கவனமாயிருங்கள் என்று ஒரு சிறிய அறிவிப்பையாவது அங்கு வைக்க வேண்டும். கண்ணதாசனை இடறிய எத்தனையோ தடைகளை அவரால் எடுத்துப் போட்டிருக்க முடியாது என்று வைத்துக் கொண்டாலும் ‘இத்தடைகள் என்னை இடறின, அடுத்து வருபவர்கள், எச்சரிக்கையாய் இருங்கள்’ என்று அழுத்தமாக, ஆழமாக அறிவிப்புப் பலகையை அசைக்க முடியாதவாறு அகிலத்தில் நட்டுச் சென்றிருக்கிறார் அம்மகாக் கவிஞர். அதைப் பின்பற்றுவதும், பின்பற்றாமலிருப்பதும் அவரவர் விருப்பம். ஆனாலும் கவிஞர் ஒரு காலக்கண்ணாடியாய் என்றென்றும் இப்பூவுலகில் நீக்கமற நிறைந்திருப்பார் என்பது நிதர்சனமான உண்மை.

    அவரைப்பற்றி ஏதேதோ குறைகள் கூறுபவர்கள்கூட, அவர் யாரையாவது ஏமாற்றினார் என்றோ, யாருக்காவது துரோகமிழைத்தார் என்றோ, புறம் பேசினார் என்றோ, யாருக்காவது வஞ்சகம் நினைத்தார் என்றோ எதையும் கூறியதில்லை. அத்தனையும் அவரின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை பற்றிய தகவல்கள். அவற்றைப் பற்றி விமர்சிக்க யாருக்கும் உரிமையும் கிடையாது, தகுதியும் கிடையாது என்பது நிச்சயம். அறிஞர்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ரகசியமான எத்தனையோ பக்கங்கள் இருக்கக்கூடும்தான். அவற்றை ஆராய்வது நம் வேலையல்ல, அவர்கள் சமுதாயத்திற்கும் மனித இனத்திற்கும் அறிவிப்பது என்ன? விட்டுப்போனது என்ன? சொல்ல விரும்புவது என்ன? என்பவை பற்றியதாகத்தான் நம் வேட்கை இருக்க வேண்டும்.

    இந்த பூமியிலே எத்தனையோ கவிஞர்கள் வருகிறார்கள் எழுதுகிறார்கள் போகிறார்கள். ஆனால், யாராவது கண்ணதாசனின் உயரத்தைத் தொட்டார்களா? தொடுவார்களா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாம் தமிழர்கள் அனைவரும் தமிழில்தான் படிக்கிறோம், பேசுகிறோம், எழுதுகிறோம், தமிழிலேயே வாழ்வதாகக்கூட சொல்லிக் கொள்கிறோம். ஆனால், அவனுக்கு மட்டும் வாழ்க்கையின் கடினமான விஷயங்களைக்கூட எளிமையான வார்த்தைகளால் கோர்க்கத் தெரிந்த வித்தையெது? சந்தக்களுக்குள் சொந்தம் ஏற்படுத்தும் வண்ணம் சொற்கள் தைத்த மந்திரமெது? வாய் திறந்தால் வார்த்தைகளாய்க் கொட்டிய வசியமென்ன? தமிழன்னை தன் கரம் நிறைய வரங்கள் வைத்துக்கொண்டு, காத்திருக்க, வரமாய் வந்த கண்ணதாசன் அவ்வரங்களைக் கைகொள்ளும் கலனாய் மாறிப்போனார் என்பதுதானே உண்மை? படித்தவனுக்கும் பாமரனுக்கும் சரிசமமாய்ப் புரிந்தன அவரின் பாடல்கள்! ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தும் வண்ணம் ஆயிரமாயிரம் சங்கதிகளைக் கொண்டு படைக்கப்பட்டவை அவரின் நூல்கள்! அவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுப்பாடம்!

    அந்த வகையில், கண்ணதாசன் நமக்காக விட்டுப்போயிருக்கும் பொக்கிஷத்தைப் புரிந்துகொண்டு, அவற்றின் அர்த்தங்களைத் தெரிந்துகொண்டு, அவைதரும் பாடங்களை அறிந்துகொண்டு வாழ்வில் உன்னதமடைவோம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    எனவே, மீண்டுமொருமுறை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்,

    என் பார்வையில் கண்ணதாசன் என்னுள்ளிருக்கும் ‘மனசாட்சி’!
    என்றென்றும் தொடர்ந்துகொண்டேயிருக்கும் அவன் பாடல்களின் அரசாட்சி!
    எவரும் என் கூற்றை ஏற்றுக்கொள்வர் என்பதுவே இதற்கு தெளிவான சாட்சி!

    வாழ்க கண்ணதாசன்! ஓங்குக அவன் புகழ்!

    படம் உதவி நக்கீரன் இணையதளம்: http://www.nakkheeran.in/users/frmGallery.aspx?G=41226&GS=4&GV=1972

    Share