Tag: ஜெ. ஜெயகுமார்

  • தெய்வச்செயல் (சிறுகதை)

    ஜெ. ஜெயகுமார்
    சென்னை

    கத்தார் நாட்டு தலைநகரான தோஹாவில் ஐம்பது வயது அக்கவுண்டன்ட் அப்துல்லா வழக்கம்போல் அன்று அலுவலகம் நுழைந்தார்.

    லட்சக்கணக்கில் சம்பாதிக்க ஆசைப்பட்டு, கேரளாவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் மனித வெள்ளத்தின் ஒரு துளியாக, வருடக்கணக்கில் குடும்பம் மறந்து தியாக வாழ்க்கை வாழ்ந்து வரும் அப்துல்லா ஒரே ஒரு நிமிடத்தில் அன்று லட்சக்கணக்கில் கடனாளியாவோம் என்பதை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

    குடும்பத்தைப் பார்ப்பதற்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தரப்படும் ஒரு மாத விடுமுறைக்காக, முதலாளியின் அனுமதி கடைசி நாளில் கிடைத்து, அவசர கதியில் ஏர்போர்ட் வந்து, “டியூட்டி ஃப்ரீ”யில் சாக்லேட், பெர்ஃப்யூம், நெருங்கிய சினேகிதர்களுக்கு ஒரு “ரெட் லேபிள் ஜானி வாக்கர்” வாங்கிக்கொண்டு ஒரு சராசரி மலையாளியாக பட்டணம்திட்டா வந்து குடும்பத்துடன் ஒரு மாத தேனிலவு லௌகீக வாழ்க்கையை வாழ்ந்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து அயலக வாழ்க்கையை ஆரம்பிக்கும் அப்பாவி மனிதர் அப்துல்லா.

    இன்றிரவு கேரளா செல்ல வேண்டும் என்பதால் காலையிலிருந்தே அரக்கப் பரக்க அலைந்து கொண்டிருந்தார் அப்துல்லா. விடுமுறையில் அவருடைய பணியை செய்யப் போகும் பிஜூவையும் பாங்க்கிற்கு அழைத்து சென்றார்.

    அன்று அனைத்து நிறுவனப் பிரிவுகளின் ஊழியர்க்கு சம்பள நாள்.

    ரியால் வெள்ளம்.

    பாங்க் அருகே பார்க்கிங் கிடைக்காததால் பின்புறத்தெருவில் காரை நிறுத்திவிட்டு பாங்க்கில் மூன்று லட்சம் ரியால்களை (இந்திய மதிப்பில் அறுபது லட்சம் ரூபாய்) கட்டுக் கட்டாகப் பெற்றுக்கொண்டு சூட்கேஸ்சில் நேர்த்தியாக அடுக்கிக் கொண்டு சர்வ ஜாக்கிரதையாக இருவரும் காரின் பின்பக்கக் கதவைத் திறந்து சூட்கேஸ்சை வைத்து கதவை சாத்திவிட்டு திருப்தியுடன் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தனர்.

    பாங்க்கிலிருந்து வந்த பத்தான் உடையணிந்த ஒருவர் அப்துல்லாவைப் பார்த்து, “ஜீ! பாங்க் மானேஜர் உங்களை அவசரமாகக் கூப்பிடுகிறார்; ஏதோ “செக்”ல பிரச்சனையாம் ” என்று ஹிந்தியில் சொல்லிக்கொண்டே தன் கார் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தார்.

    “நல்லபடியாக ஊர் செல்லவேண்டும்” என்று நினைத்துக்கொண்டே அப்துல்லா காரைப் பூட்டி விட்டு பிஜுவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு வங்கிக்கு விரைந்தார்.

    சில நிமிடம் கழித்து வங்கியிலிருந்து வந்த மற்றொரு பத்தான் ஆசாமி, பிஜுவைப் பார்த்து ”யாரோ ஒரு மல்பாரி “டை-வாலா” (டை அணிந்த மனிதன்) பாங்க்கில் மயங்கி விழுந்து விட்டார்; போய்ப் பாருங்கள்; ஹார்ட் அட்டாக் போலிருக்கிறது என்று அனுதாபத்துடன் ஹிந்தியில் சொல்லிக்கொண்டே சென்றார்.

    அப்துல்லா “டை” அணிபவர் என்பதாலும், அவருக்கு “ஹார்ட்” பிரச்சனை உள்ளது என்பதாலும் பூட்டப்பட்ட காரின் சாவி அப்துல்லாவிடம் உள்ளது என்பதாலும் வேலைக்கு புதிது என்பதாலும் “ஒருக்கால் அவர் மயங்கி விழுந்திருந்தால் அவருக்கு உதவி செய்யலாமே” என்ற பதைபதைப்பாலும் படபடப்புடன் பாங்க் விரைந்தார் பிஜு.

    அப்துல்லா பாங்க் மேனேஜருடன் உரையாடிவிட்டு வெளியே வருவதைப் பார்த்துவிட்டு அப்துல்லாவிற்கு ஒன்றுமில்லை என்று அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார் பிஜு.

    “நீ ஏன் இங்கு வந்தாய்?’ என்று அப்துல்லா திடுக்கிட்டு வினவ, வந்த காரணத்தை பிஜு சொல்லிக்கொண்டே இருவரும் வெளியே வந்தனர். “அப்படி யாரும் பாங்க்கில் மயங்கி விழவில்லையே” என்று துணுக்குற்று பதிலுரைத்த அப்துல்லா மனதில் எங்கோ அபாயமணி அடித்தது.

    “என்னை பாங்க் மேனேஜர் கூப்பிடவேயில்லை” என்று பிஜூவிடம் சொல்லிக்கொண்டே வந்தவர் அதிர்ந்து உறைந்து நின்றார்.

    காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு மூன்று லட்சம் ரியால் சூட்கேஸ் களவாடப் பட்டிருந்தது.

    இந்த ஜன்மத்தில் இனிமேல் குடும்பத்தைப் பார்க்கப் போவதில்லை என்ற மின்னல் அப்துல்லாவை வெட்ட கார் பக்கவாட்டில் சரிந்தார்.

    அக்கம்பக்க அனுதாபங்கள், வயிற்றைக் கலக்கும் சைரனுடன் “லாண்ட் க்ரூய்ஸ்சர்” காரில் போலீஸ் வருகை, அவர்களின் அதிகார தோரணை, அரபி மொழி விசாரணை என்று உச்சக்கட்ட யுத்தக்கள களேபரம் அரங்கேறியது அங்கே.

    “இருபத்தி ஐந்து வருட அர்ப்பணிப்பு, உழைப்பு, எல்லாம் இரண்டே நிமிடங்களில் மண்ணோடு மண்ணாயிற்றே” என்று அப்துல்லா கூக்குரலிட்டு குமுறியது முதலாளி “ஷேக்”கையே ஒருகணம் நெகிழச் செய்தது.

    “கம்பெனி சார்பில் இரண்டு பேர் சென்றும் பணம் பறிபோயிற்றே” என்று மன உளைச்சல் அடைந்த ஷேக் சில கணங்களில் தன்னை மீட்டுக் கொண்டார்.

    அப்துல்லாவின் நேர்மையான உழைப்பின் முன்னால் அது பெரிய இழப்பு இல்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். மேலும் அவருக்கு தன் நாட்டு காவல் துறையின் மீது அபார நம்பிக்கை, எப்படியும் பணத்தை மீட்டு விடுவார்களென்று.

    அப்துல்லாவை நோக்கி “ நீ ஊர் சென்று வா! அதற்குள் நம் பணம் கிடைத்து விடும்” என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.

    இந்தப் பிறவியில் நாம் இந்தியா திரும்பப் போவதில்லை என்று நினைத்திருந்த அப்துல்லா, ஷேக்கின் பெருந்ததன்மையை நினைத்து கண்ணீர் மல்க நன்றி கூறி ஏர்போர்ட் வந்தடைந்தார்.

    தன் அலுவலக மொபைல் ஃபோனை பிஜூவிடம் ஒப்படைத்துவிட்டு “செக் இன்” செய்ய “புறப்பாடு” உள்ளே நுழைந்தார்.

    அவ்வளவு மன உளைச்சலிலும் தான் வழக்கம்போல் செய்யும் ஒரு காரியத்தை செய்து விட்டு விமானம் ஏறினார்.

    வீடு சேர்ந்த கணவனிடத்தில் இயல்பான உற்சாகம் மிஸ்ஸிங், மாறாக எதையோ பறி கொடுத்தது போல் இருக்கிறாரே என்பதை அறிந்த மனைவி கேள்விகளால் துளைக்க, மனைவியிடம் மெள்ள விஷயத்தை சொல்ல அது இடியாக இறங்கியது அவள் தலையில்.

    கணவனின் தலைக்குள் இருக்கும் சுமையை படுக்கை அறையில் நொடியில் கண்டுபிடித்து விடுவார்கள் பெண்கள். அதுவும் ஒரு வருடமாக தனித்திருந்த, பசித்திருந்த அப்துல்லாவின் ஆக்ரோஷம் கலந்த அபரிமிதமான தாம்பத்திய தாகத்தை வருடா வருடம் அந்த ஒரு மாத தேனிலவு வாழ்க்கையின்போது தணித்துக் கொண்டவள்தானே அவள்.

    “இனி தோஹா போக வேண்டாம்; போனால் அவ்வளவுதான், திரும்ப மாட்டீர்கள்; வேலை போனால் போகிறது, மளிகைக் கடை வைத்து பிழைத்துக் கொள்ளலாம்” என்ற மனைவியின் புலம்பலால் அப்துல்லாவின் மனம் அலைக்கழிந்தது.

    சில நாட்கள் கழித்து, அப்துல்லாவின் கத்தார் மொபைல் ஃபோனிலிருந்து பிஜூவின் குரல் உற்சாக வெள்ளத்தில் ஒலித்தது.

    “சாரே! “டியூட்டி ஃப்ரீ”யில் நீங்கள் வாங்கின லாட்டரி சீட்டிற்கு பத்து லட்சம் ரியால் “ஃபர்ஸ்ட் ப்ரைஸ்” என்றார் பிஜு கும்மாளத்துடன்.

    அப்துல்லாவால் நம்பவே முடியவில்லை.

    “ஒருக்கால் பொய்யோ,” “தன்னை திரும்பவும் கத்தார் கொண்டு வருவதற்கு ஒரு சதியோ” என்று சந்தேகித்த அப்துல்லாவை, தோஹா நண்பர்கள் தொலைப்பேச்சு, “கல்ஃப் டைம்ஸ்” நாளிதழ் செய்தி. ”டியூட்டி ஃப்ரீ அதாரிட்டி”யின் கடிதம், அனைத்தும் பரிசுச் செய்தியை உறுதி செய்தன.

    நாட்கள் பரபரப்புடன் பறந்தன. இந்த இக்கட்டிலிருந்து மீண்டு வரவேண்டும், மீண்டும் கணவர் வீடு திரும்ப வேண்டும் என்று கண் கலங்கிய மனைவியைத் தேற்றிவிட்டு விமானம் ஏறி தோஹா வந்து “டியூட்டி ஃப்ரீ” அலுவலகத்தில் தன் பரிசு சீட்டைக் காண்பித்து அவர்கள் கேட்ட அனைத்து தரவுகளையும் சமர்ப்பித்து பத்து லட்சம் ரியால் பரிசுத் தொகை செக்”கை நடுங்கும் கரங்களில் பெற்றுக் கொண்டார்.

    முதல் வேலையாக ஷேக் ஆபீஸ் சென்று சந்தோஷ செய்தியை பகிர்ந்து கொண்டு அவரிடம் “ஷேக்! அல்லாவின் கருணைக்கு அளவில்லை! மீதி இருக்கும் ஏழு லட்சம் ரியால் (ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய்) எனக்கு போதும்” என்று சொல்லி மூன்று லட்சம் ரியாலுக்கு ஒரு செக்கை எழுதி அவரிடம் கொடுத்தார்.

    அப்துல்லாவை ஷேக் பாராட்டிவிட்டு “என் பணம் போனது போனதுதான்! அதை அல்லா எனக்கு எப்படியும் திருப்பிக் கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

    அப்துல்லாவை நோக்கி “இது உன் பணம்! உனக்கு அல்லா அளித்தது; பணத்தை இழந்தபோது எந்த அளவிற்கு நரக வேதனை அனுபவித்திருப்பாய் என்பதெல்லாம், இறைவனுக்குத்தான் தெரியும்;” என்று கூறி மூன்று லட்சம் ரியால் செக்கை அப்துல்லாவிடமே திருப்பிக் கொடுத்தார்.

    இப்படிப்பட்ட மனிதரிடம் நாம் வேலை செய்ய எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்று எண்ணிய அப்துல்லாவின் “பணியில் தொடர்கிறேன்” என்ற முடிவு அனைவர்க்கும் ஆச்சரியம் அளித்தது.

    நாட்கள் நகர்ந்தன.

    திருட்டு வழக்கில் தீவிரம் காட்டிய போலீஸ் முதற்கண், அனைத்து “மனி எக்ஸ்சேஞ்ச்” எனப்படும் அந்நியச் செலாவணி நிறுவனங்களுக்கு தகவல் அனுப்பி கண்காணிக்க ஆணையிட்டனர்.

    ஒருவரின் மொபைல் எண், “பதாக்கா” எண் போன்ற அத்தியாவசிய தரவுகள் சிறு பணப்பரிவர்த்தனைக்கும்கூட அவசியம் என்பதாலும், ஒரு மனிதனின் அனைத்து பணப்பரிவர்த்தனையும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு விட்டதாலும் ஒற்றர்களின் ஒத்துழைப்பாலும் போலீசின் மதிநுட்பத்தாலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு பெருமளவு பணம் மீட்கப்பட்டு ஷேக்கிடம் ஒப்படைக்கபட்டது.

    அனைத்தும் முடிந்த பின்னரே செய்தி குற்றவாளிகளின் கண்கள் மறைக்கப்பட்ட படங்களுடன் ஊடகங்களில் வெளியாயின.

    செய்தி அறிந்த அப்துல்லா, “ஷேக்! மிக்க மகிழ்ச்சி; இப்போதுதான் என் இதயபாரம் இறங்கியது; “நான் வேலையை ராஜினாமா செய்கிறேன்” என்றார்.

    அதை எதிர்பார்த்த ஷேக் “உனக்கும் வயதாகிறது! இனிமேலாவது வாழ்க்கையை குடும்பத்துடன் அனுபவி” என்று நன்றிப் பெருக்குடன் விடை கொடுத்தார்.

    ஏர்போர்ட்டில் “டியூட்டி ஃப்ரீ”யில் தேவையானதை வாங்கிக்கொண்டு விமானம் ஏறினார்.

    இறுதியாக. ஆனால் இந்த முறை அவர் லாட்டரி டிக்கெட் வாங்கவில்லை.

    Share
  • மோட்டார் சைக்கிள் எண் 4474 (சிறுகதை)

    ஜெ. ஜெயகுமார்
    சென்னை

    “இன்றும் மற்றுமொரு நாளே” என்பதால் காலை எட்டு மணி அளவில் காந்தி ரோட்டில் மக்கள் கார்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் எதிர் காலக் கனவுகளைச் சுமந்து கொண்டிருந்த  எதிர்காலத் தலைமுறைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு பள்ளிக்கும் பின் பணியிடத்திற்கும் அரக்க பரக்க விரைந்து கொண்டிருந்தனர்.

    எழுபது வயது விஜய் வழக்கம்போல் திரு.வி.க. பூங்காவில் நடைப் பயிற்சியில் இருந்தார், விரைவில் தன் வாழ்க்கையில் ஒரு கொலை வழக்கு நுழையும் என்பதையறியாமல்.

    மனிதர்களை அவதானிப்பது விஜய்க்கு ஒரு தலையாய கடமை, ஒவ்வொரு மனிதர்க்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதால். அப்படித்தான் அந்த முப்பத்தி ஐந்து வயது ஜோடி நடைப்பயிற்சி செய்வதை கவனித்துக் கொண்டிருந்தார். அது ஒரு இயல்பான திருமண தம்பதி போல் தெரியவில்லை. கணவன், மனைவி என்றால் அவர்களுக்குள்ளே ஒரு சகஜத்தன்மை, அன்னியோன்யம், சற்றே சோம்பல் கலந்த டுகெதர்நெஸ், அதீத இனிப்பு சாப்பிட்டு திகட்டிப் போன அலுப்பு கலந்த நிறையுணர்வு, எல்லாம் இருக்கும். பொதுவெளியில் மிகவும் ஒட்டியும் இருக்க மாட்டார்கள்; எட்டியும் இருக்க மாட்டார்கள்.

    அந்த ஜோடியின்  நடவடிக்கை செய்தித் தாளில் வரும் கள்ளக்காதல் ஜோடியின் ஆரம்ப நிலையாக அவருக்கு புலப்பட்டது. லோஹிப் சாரீயுடன் பாதி முதுகு தெரியும் ரவிக்கையணிந்த அந்தப் பெண்ணை  நெருங்கியும் விலக்கியும் நடந்து கொண்டிருந்தார் அந்த மனிதர். அவரிடம் ஓவர்-என்துசியாசம் எனப்படும் என்டார்பின் எனர்ஜி சுரந்து கொண்டேயிருந்தது.

    அவர் கண்களில் “அடைந்தால் மகாதேவி; அடையாவிட்டால் மரணதேவி” காமம்;

    அவள் அதை சில நேரங்களில் ஏற்றும் மறுத்தும் விரும்பியும் விலகியும் அவரோடு நடந்து கொண்டிருந்தாள் அளவளாவியபடியே.

    வாக்கிங் முடிந்தபின் இருவரும் பூங்காவிற்கு வெளியே வந்து அவரவர் டூவீலர்களை எடுத்துக்கொண்டு ஆளுக்கொரு திசையில் சென்று நகர வாழ்க்கையில் கலந்து விட்டனர்.

    அவர்களின்  கூடாநட்பு தினமும் நெருக்கமாகிக் கொண்டே இருந்ததை விஜய்யின் கண்கள் கணித்தன. இது எங்கே கொண்டு போய் விடுமோ என்று கவலைப் பட்டாலும் விஜய் கண்காணிப்பதை நிறுத்தவில்லை.

    இப்போதெல்லாம் அந்த ஜோடி விதவிதமான விலை உயர்ந்த ஆடைகளில் வாக்கிங் வந்து போய்க் கொண்டிருந்தனர். ஒரு முறை நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த விஜய்யை அவர்கள் ஓவர் டேக் செய்து  கடந்த போது அவர்கள் அணிந்து இருந்த பெர்ஃப்யூம் ஆளைத் தாக்கியது. தூக்கியது.

    திடீரென்று ஒரு நாள் அவர்கள் வாக்கிங்  வருவது நின்று போனது. ஒருக்கால் அவர்கள் வீட்டில் தெரிந்து விட்டதோ, என்று நினைத்த விஜய் வழக்கம்போல் வாக்கிங் வந்து சென்று கொண்டிருந்தார்.

    சில நாட்கள் சென்று வழக்கம்போல் வீட்டிலிருந்து பூங்காவிற்கு நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று அந்த ஜோடி “உமா ஸ்டோர்ஸ்” தாண்டி தெருக்கோடியில் இருக்கும் “பாரதி பூங்கா”வை நோக்கி அவன் இடுப்பில் இவள் கை அணைத்திருக்க கூந்தல் முதுகில் இல்லாமல் முன்னே இருக்க  முக்கால் முதுகும் தெரியும் வண்ணம் ஒரு மோட்டார் சைக்கிளில்  விரைந்து கொண்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார் விஜய்.

    அந்த வண்டியின் ரிஜிஸ்டிரேசன் நம்பர் 4474. கல்லூரியில் படிக்கும்போது அவர் அட்மிஷன் நம்பர் அந்த நம்பர் தான் என்பதால் அது ஏனோ நினைவில் பதிந்தது. பின் தொடர்ந்து சென்ற அவர் அந்த ஜோடி இப்போதெல்லாம்  பாரதி பூங்காவிற்கு வருவதை இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கண்காணித்துத்  தெரிந்து கொண்டார்.

    “கர்மம்! கர்மம்! எக்கேடு கெட்டோ தொலையட்டும்” என்று அவர் திரு. வி. க. பூங்காவில் வாக்கிங் செல்வதைத் தொடர்ந்தார்.

    அங்கு தினமும் ஒரு ஆட்டோ வந்து நிற்பதையும் அந்த ஆட்டோ டிரைவர் சிரத்தையில்லாமல் வாக்கிங் என்ற பெயரில் கடமைக்கு சில அடிகள் நடப்பதையும் பூங்காவுக்குள் வந்து செல்லும் மனிதர்களை அந்த டிரைவர் உற்று கவனிப்பதையும் யாரோ ஒருவரின் வரவை எதிர்பார்த்து வரவில்லை என்பதால் பொறுமை இழப்பதையும் விஜய் அவதானித்தார். போதாக்குறைக்கு அந்த ஆட்டோ டிரைவர் அவ்வப்போது மொபைல் ஃபோனி”ல் பேசுவதையும் பேசிய சில நிமிடங்களில் டிரைவர் அங்கிருந்து கிளம்பி செல்வதையும்  விஜய் கவனித்தார்.

    தினம் பூங்காவிற்கு ஆட்டோ டிரைவர் வருகை, கவனிப்பு, கண்காணிப்பு, ஃபோன் பேச்சு என்று சில நாட்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததை ஏராளமான துப்பறியும் நாவல்களை வாசித்திருந்த விஜய் கவனிக்கத் தவறவில்லை.

    ஒரு நாள் வாக்கிங் முடிந்து அசதியுடன் இருந்த விஜய் ஆசுவாசப்படுத்திக்கொள்ள பார்க் பெஞ்ச்சில்  அமர்ந்திருந்தார். போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவரும் அவர் அருகே வந்து உட்கார்ந்தார்.

    பக்கத்தில் இருப்பது கிழவன் தானே என்று ஆட்டோ டிரைவர் அசால்ட்டாக

    போனில் “அண்ணே! அவங்க ரெண்டு பெரும் இங்க வரலைண்ணே! நானும் நீங்க சொல்றீங்களேன்னு தினம் இங்க வந்து வாட்ச் பண்ணிக்கிட்டுத் தான் இருக்கேன்; எனக்கு என்னமோ அவங்க இரண்டு பெரும் வேறு இடத்துக்கு போய்ட்டாங்களோன்னு  தோணுது அண்ணே!” என்று பேசிக் கொண்டிருந்தார்.

    விஜய்க்கு எப்பவுமே வாய் ஜாஸ்தி. அவர் மனைவி கீதா விஜய்யை அவ்வப்போது “ உங்களுக்கு வாய் கிழியறது; “தவளையும் தன் வாயால் கெடும்” என்பது போல் “போற இடத்தில் எல்லாம் பாலிட்டிக்ஸ் அது இதுன்னு வாயைக் கொடுத்து உங்களை கெடுத்துக்காதீங்கோ; காலம் கெட்டுக் கிடக்கு;” என்று அவ்வப்போது அபாய மணி அடிப்பதுண்டு;

    மனுஷன் கேட்டானா?

    டேவிட் பல்டாக்ஸி, டான் பிரவுன், ஜான் க்ரிஷாம், டாம்  க்லான்சி  என்றெல்லாம் ஏகப்பட்ட எழுத்தாளர்களின்  நாவல்களை வாசித்திருந்த விஜய்யின் மனம் ஆட்டோ டிரைவரின் ஃபோன் பேச்சால் குறுகுறுத்தது

    “ஓஹோ! இந்த ஆட்டோ டிரைவர் டெய்லி அவா ரெண்டுபேரையும் வாட்ச் பண்ணாத்தான் வரார் போல் இருக்கு; ஆளை  வச்சு நோட்டம் பாக்கறாப் போல இருக்கு”  என்று முடிவுக்கு வந்தார் விஜய்.

    ஆட்டோ டிரைவர் “தினம் இங்க வரவேண்டியது; வேவு பாக்க வேண்டியது; ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல; நம்ம பொழைப்புதான் வீணாப் போவுது என்று விஜய் காதில் பட அலுத்துக்  கொண்டார்.

    விஜய்யின் வாய்க்குள் இருந்த தவளை துள்ளிக் குதித்தது.

    “என்ன சார் ஏதாவது பிரச்சனையா? என்று ஆட்டோவை வினவினார் விஜய்.

    விஜய் எல்லோரையும் சார் என்று அழைப்பதுதான் வழக்கம்; மனிதர்களோடு பழகும்போது மரியாதை கொடுத்துப் பழக வேண்டும் என்று நினைப்பவர். மரியாதை கொடுப்பது என்பது இலவசம்தானே? காசா; பணமா? மரியாதை கொடுத்து மரியாதை பெறுவது இருவருக்கும் பரவசம்தானே?

    ஆட்டோ டிரைவர், “அதை  ஏன் சார் கேக்குறீங்க; எங்க முதலாளி சம்சாரம் யாரோடோயோ சுத்துறாங்கலாம்; ”கண்டு பிடிங்கடா” ன்னு எங்களுக்கு உத்தரவு போட்டு இருக்கார்; இருக்கற வேலை  பத்தாதுன்னு இது வேற எக்ஸ்ட்ரா தொல்லை’ என்று அலுத்துக்  கொண்டே மொபைல் ஃபோனை திறந்தபோது உள்ளே ஒரு பெண்மணியின் போட்டோ தெரிந்தது அருகிலிருந்த விஜய்க்கு.

    விஜய்யின் “ஷெர்லாக் ஹோம்” கண்கள் அந்த போட்டோவைப் பார்த்து திடுக்கிட்டு “இந்த அம்மா இப்பல்லாம் பாரதி பூங்காவுக்கு தினம் வர்ராங்க” என்றார் மிகப் பெரிய குற்றவாளியை கண்டு பிடித்த திருப்திப் புன்னகையுடன்.

    அறுதிப் பெரும்பான்மை அரசு அமைக்க ஆறு நாட்களாக ஆறு “எம்.எல்.ஏ”க்களுக்காக அலைந்து கொண்டிருந்து இறுதித் தருணத்தில் ஆறும் கிடைத்த  அரசியல்வாதியின் மகிழ்ச்சியை மிஞ்சும் வண்ணம் அந்த ஆட்டோ டிரைவர் ஆனந்த அதிர்ச்சியில் கிழவனுக்கு தாங்க்ஸ் சொல்லி விட்டு வெளியே ஓடி ஆட்டோவைக் கிளப்பினார் ஆம்புலன்ஸ் வேகத்தில்.

    நாட்கள் நகர்ந்தன. இப்போது அந்த ஆட்டோ டிரைவர் பூங்காவிற்கு வருவதில்லை. ஒருக்கால் நல்லபடியாகப் பேசி சுமூகமாகப் பிரச்சனையை தீர்த்துக் கொண்டுவிட்டார்கள் போலிருக்கிறது என்று விஜய் திருப்தி பட்டுக் கொண்டார்.

    வாக்கிங் சென்று  வந்த விஜய் ஒரு நாள் “ஷாலிமார் நியூஸ்” பார்த்துக் கொண்டிருந்தபோது “விருகம்பாக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி  மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி தூக்கி வீசப்பட்டு  மரணம்”. இருவரும் கணவன் மனைவி இல்லையென்பதால்  இது விபத்தா , கொலையா என்று போலீஸ் புலன் விசாரணை’ என்ற செய்தியுடன் வந்த வீடியோவைப் பார்த்த  விஜய் ஸ்தம்பித்து சாய்ந்து விட்டார் சோபாவில். வீடியோவில் உருக்குலைந்து கிடந்த அந்த மோட்டார் சைக்கிள் எண்  4474. பெண்ணின்முகம் ஆட்டோ டிரைவரின்  போனில் பார்த்த அதே முகம்.

    அன்றிரவு தூக்கம் வரவில்லை விஜய்க்கு. மனைவி கீதாவிடம் சொன்னால் கொன்று  கூறு போட்டு விடுவாள் என்ற பயம் வேறு.

    எவ்வளவோ எடக்கு மடக்கான இடங்களில் எக்குத் தப்பான பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு தன் புத்திசாலித்தனத்தால் தப்பியவர் விஜய்.

    “டேய் ஆட்டோ! நீ நினைக்கறமாதிரி நான் முட்டாள் கிழவன் இல்லைடா“

    என்று நினைத்துக் கொண்டே படுத்திருந்த  மனிதர்  கடந்த சில நாட்களில் பூங்காவில் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

    துப்பறியும் பொறி தட்டி தன் மொபைல் ஃபோனின் போட்டோக்களைத் தேடினார். தேடியது கிடைத்ததால்  நிம்மதி கலந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் உறங்கினார்.

    போலீஸ் அவர் வீட்டுக் கதவை தட்டும் முன் அவரே மறுநாள் காலை விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் சென்று “நடந்தது என்ன” என்பதையெல்லாம் விவரித்தார்.

    போலீஸ் அதிகாரியிடம் ஆதாரத்தையும் காட்டினார்.

    அது ஒரு போட்டோ. தன் நீண்ட நாள் நண்பன் ராஜாராமனுடன் பூங்கா வாசலில் எடுத்துக் கொண்ட செல்ஃபி. அவர்களுக்குப்  பின்னே பளிச்சென்று ரிஜிஸ்டிரேசன் நம்பர் தெரிந்த அந்த ஆட்டோவும் அருகில் அந்த ஆட்டோ டிரைவரும்.

    Share
  • எரிமலை (சிறுகதை)

    ஜெ. ஜெயகுமார்
    சென்னை

    காந்தி ரோடு, திரு.வி.க. பூங்காவில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்து கொண்டு சுற்றிலும் உள்ள மனிதர்களை வழக்கம்போல் அவதானித்துக் கொண்டிருந்தார் எழுபது வயது விஜய்.

    சாத்வீகம் ததும்பும் ஒரு மனிதனின் கோர முகத்தை அன்று பார்க்கப் போகிறோம் என்பதையறியாமல்.

    ரிடையர்ட் ஆகியும் இன்னும் இன்றும் அதே வாத்தியாரம்மா தோரணையில் பேசும், நடக்கும் முன்னாள் ஆசிரியை; “ஆறுமாசம் அமெரிக்கா ஆறுமாசம் இந்தியா” என்று காலம் தள்ளும் அறுபது வயது அருண்குமார்; கையில் ஒரு பையுடன் தவறாது நூலகம் வந்து பத்திரிக்கைகள் வாசிக்கும் வளையாத முழங்காலில் பேண்டேஜ் போட்ட முத்துசாமி; என்று மனிதரில் எத்தனையோ நிறங்கள்;

    வலது பக்கம் “ஷியாமளா  டவர்ஸ்” அடுக்குமாடி வீடுகளில் இருந்து பரபரப்புடன் “பைக்”கில்  பறக்கும் இன்போசிஸ் இளைஞன்; வெய்யில், புழுதி மற்றும் காமக் கண்களிருந்து தப்பிக்க தீவிரவாதி போல உடலெல்லாம் உடையால் மறைத்துக்கொண்டு அவசரகதியில் “ஆக்டிவா” வில் அதிரடியாகக் கிளம்பும் மத்தியதரக் குடும்பப் பெண்மணி; என்று மனிதர்களின் வாழ்க்கைத் தேடல்களை கவனித்துக் கொண்டிருந்தார் விஜய் உடற் பயிற்சியுடன்.

    அரக்கு நிற “ஹ்யூண்டாய்” கார்  அபார்ட்மெண்ட் பார்க்கிங்கிலிருந்து  வீதிக்கு  வந்தவுடன், நெற்றியில் பளிச்சிடும் விபூதியுடன் இரண்டு பையன்கள் துள்ளிக் குதித்து ஏறிக் கொண்டவுடன் அவர்களது தந்தை அவர்களை ஸ்கூல்லில் டிராப் செய்துவிட்டு எங்கேயோ இருக்கும் அவரது அலுவலகம் செல்வது விஜய் அன்றாடம் கவனிக்கும் ஒரு நிகழ்வு.

    பூஜை முடித்த கையோடு பளபளக்கும் சந்தனம் குங்குமம்,அணிந்த அந்த நடுத்தர வயது எக்ஸிக்யூடிவ் அப்பாவின் நெற்றியில் விபூதியை விஞ்சும் கவலை ரேகைகள். இளைய மகன் வந்து காரின் முன்பக்கம் வழக்கம்போல் “பிராம்ப்ட்”டாக உட்கார்ந்து கொண்டாலும் பெரிய வகுப்பு படிக்கும் மூத்த பையன் இன்று லேட்.

    இவர்களை பள்ளியில் விட்டு விட்டு  ஆக்ஸிஜன் இல்லா ஆற்காடு ரோடு டிராஃபிக்கில் தட்டுதடுமாறி மேடு பள்ளங்களில் ஊர்ந்து சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டுமே என்ற “கூகிள் மேப்” கவலை அவர் முகத்தில்.

    நேரம் ஆக ஆக, வெயிட்டிங் எரிமலை வெடிக்கத்  தயாரானது.

    அன்றைய தினம் ஸ்கூல் யூனிஃபார்ம் ஒயிட் & ஒயிட் டிரஸ் கோடு என்பதாலோ என்னவோ  மூத்த மகன் ஒரு ஒயிட் சாக்ஸ் கிடைத்து, இன்னொரு சாக்ஸ் கண்டுபிடித்து போட்டுக் கொண்டு வருவதற்கு நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. (அந்தக் காலத்தில் “சங்கர்லால் வந்து விட்டார்” நாவல் ஆசிரியர் தமிழ்வாணன்  “சாக்ஸ்”சை  நடையன் என்று  மொழி பெயர்த்திருப்பார்.)

    “ஆஹா! இந்நேரம் பசங்களை டிராப் செய்து விட்டு போரூர் ஜங்ஷன் தாண்டியிருக்கலாமே” என்று ஆபிசர் அப்பா கோபத்தின் எவரெஸ்ட்டில் ஏறிக் கொண்டிருந்தார்.

    ஒரு வழியாக மூத்த பையன் காரில் ஏறி பின்பக்க கதவை சாத்துவதற்குள், அவனுக்கு லட்சார்ச்சனை!’ விடலைப் பையனான அவன் எடக்கு மடக்காக ஏதோ பதிலளிக்க எரிமலை இன்னும் விஸ்வரூபம் எடுத்து, டிரைவர் இருக்கைக்கு கீழே இருந்த ஒரு ரப்பர் செருப்பை எடுத்து பின் சீட்டில் அமர்ந்திருந்த மூத்தவனை  நோக்கி அடிக்க முயன்றார் ஆபிசர் அப்பா.

    பையன் லாவகமாக பின் சீட்டில் இங்கும் அங்கும் நகர்ந்து தப்பித்துக் கொள்ள அவருடைய காலணி ஆதிக்கம் பலவீனம் அடைய ஆரம்பித்தது.

    காருக்குள் நடப்பதை பொறுக்க முடியாமல் பார்க்கில் இருந்த விஜய் “ சார்! சார்! என்று அந்த ஆபிசர் அப்பாவை நோக்கி கத்தினார். “யாரோ தன்னைக் கூப்பிடுகிறார்கள்” என்று உணர்ந்த அந்த ஆபிசர் ஓங்கிய செருப்புடன் டிரைவர் இருக்கையிலிருந்து சத்தம் வந்த திசையில் திரும்பியபோது விஜய்,

    அவரை நோக்கி, சார்! சார்! வாட் இஸ் திஸ்?” “கோ ஹாப்பிலி”

    “சந்தோஷமா போய்ட்டு வாங்கோ” என்று கூக்குரலிட்டார்.

    சுதாரித்துக் கொண்ட அந்த ஆபிசர் செருப்பை காருக்குள் கீழே போட்டு விட்டு காரைக் கிளப்பிக் கொண்டு குற்ற உணர்வுடன் புறப்பட்டபோது

    மூத்த  பையனின் கண்களில் புண்பட்ட அவனுடைய இதயம் தெரிந்தது.

    “அவன்  மீது ஏன் இந்த வெறித்தனமான கோபம்? ஒரு வேளை அவன் நன்றாகப் படிக்கவில்லையோ? இல்லை, நேரமே வாழ்க்கை என்னும் நெருக்கடியால் வந்த வன்மமா? ஒரு நடுத்தர வர்க்கத்தின் அன்றாட நகர வாழ்க்கை  இவ்வளவு அலைச்சல், உளைச்சல், உணர்ச்சி கொந்தளிப்பு  நிறைந்ததாக ஆகி விட்டதே“ என்று கவலையுடன் வீடு திரும்பினார் விஜய்.

    காரை ஓட்டுபவர்கள் “ரோட் ரேஜ் “ என்ற கோபத்  தணலில் மாட்டிக்கொண்டு நிதானம் தவறுவது உண்டு. அது போலத்தான் இந்த மனிதரின் கார் கோபமா? இது போன்ற விநாடித் தருணங்களில்தான் கொலை கூட நடக்கிறது போலும்  என்றெல்லாம் விஜய்யின் மனம் அலை பாய்ந்தது.

    மறு நாள் அதே விஜய்; அதே பார்க்; அதே நேரம்; அதே அரக்கு காரில் குழைத்து விபூதி அணிந்த அதே மூவர், இன்னொரு நாள் வாழ்க்கையோடு முட்டி மோதிப்  போராடி ஜெயிக்க.

    கண்டும் காணாமலும் விஜய் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

    காரில்  இருந்த ஆபிசர் அப்பா, கண்ணாடியைத் தாழ்த்தி “சார்! சார்! என்று விஜய்யை கூவி அழைத்தார்.

    “சாரி சார்! நேத்திக்கி ஒரு நிமிஷம் நான் மிருகம் ஆயிட்டேன்! “ஐ லாஸ்ட் மைசெல்ஃப்”; நல்ல வேளை! நீங்க என்னை பழைய நிலைக்கு கொண்டு வந்துட்டீங்க! டெர்ரிபிலி சாரி சார்! “எக்ஸ்க்யூஸ் மீ; தாங்க்ஸ் சார் “என்று விஜய்யிடம் சொல்லிக் கொண்டே காரைக் கிளப்பினார்.

    இப்போது அந்த மூவரும் பழைய அன்யோன்ய நிலமைக்கு வந்து விட்டிருந்தனர்.

    விஜய், “இட்ஸ் ஓகே; அவன் மூத்த பையன் சார்; அவனை இப்ப நீங்க நன்னா பாத்துண்டாத்தான் பிற்காலத்திலே நீங்க என்  வயசுல இருக்கும்போது உங்களை அவன் நன்னா பாத்துப்பான்; வாழ்க்கைங்கறது ஒரு நாள் இல்ல; ஒரு வருஷம் இல்ல, ஒரு ஜன்மம் சார்! எல்லோருக்குமே  “தொட்டிலில் இருந்து காலில்லாக் கட்டில் வரைதான் வாழ்க்கை” ன்னு கவிஞர் சுரதா சொல்லியிருக்கார் சார்!

    “சீயர்ஃபுல்லா போட்டு வாங்கோ! டைம்  ஆறது; ஆல் த பெஸ்ட்”; என்று விடை கொடுத்து விட்டு அவசரமாக திரும்பிக் கொண்டார் விஜய்.

    அந்த ஆபிசர் அவ்வளவு தூரத்தில் இருந்தும் விஜய்யின் கண்களின் ஈரத்தைக் கவனிக்கத் தவறவில்லை அவருடைய கண்களே  ஈரமாக இருந்தபோதிலும்!

    Share
  • செவ்வாய் தோஷம் (சிறுகதை)

    செவ்வாய் தோஷம் (சிறுகதை)

    ஜெ. ஜெயகுமார்
    சென்னை

    சென்னையிலிருந்து உற்சாகமாகப் புறப்படத்தயாராயிருந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் படபடப்புடன் ஏறி ஏ.சி. மூன்றடுக்கு கோச்சில் இட்லி, சட்னி, தயிர் சாதம் சகிதம் ஒரே ஒரு  “பேக் பேக்”குடன் முரளியும் ரமாவும் அமர்ந்தனர்.

    அவர்கள் மாயவரம் என்கிற மயிலாடுதுறை சென்று அங்கிருந்து அருகிலுள்ள திருக்கடையூர் சென்று அடுத்த  மாதம் நடைபெறவிருக்கும் தங்கள் “சஷ்டி அப்த பூர்த்தி” என்கிற அறுபதாம் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை முன்னேற்பாடாக செய்ய  ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று காலை சோழன் எக்ஸ்பிரஸில் சென்று அதே இரவில் உழவன் எக்ஸ்பிரஸில் சென்னை திரும்ப முன்பதிவு செய்திருந்தனர்.

    எழும்பூரில், அருகில் உள்ள பிளாட்பாரத்தில், தஞ்சாவூரிலிருந்து இரவெல்லாம் கண் விழித்து அர்த்த ராத்திரியில் ஊர் ஊராக சுற்றிவிட்டு அலுத்து களைத்து நின்றிருந்தது “உழவன் எக்ஸ்பிரஸ்”..

    “நாளை காலை நாம் இந்த ரயிலில்தான் சென்னை திரும்புவோம்” என்று மனைவி ரமாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார் முரளி. அந்த ரயிலிலிருந்து முரளியும் ரமாவும் இறங்கி சென்று விட்டனர் என்பதை அறியாது!

    சோழன் சோழ நாட்டிற்கு செல்ல சைரன் ஊதியவண்ணம் கிளம்பினான். வழியில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல் மருவத்தூர் என்றெல்லாம் நின்று நின்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு போய்க்கொண்டிருந்தான்.

    வழியெங்கும் வித விதமான மனிதர்கள் வித விதமான சிறுவர் சிறுமியருடன் வித விதமான பைகளை எடுத்துக்கொண்டு ஆரவாரத்துடன் தட்டுத்தடுமாறி அவரவர் இருக்கைகளில் அவசரம் அவசரமாக அமர்ந்துகொண்டு “அப்பாடா” என்று ஆனந்தப்பட்டுக்கொண்டிருந்தனர்.

    சற்று நேரத்தில் டிக்கட் பரிசோதகர் வந்தார். முன்பெல்லாம் அவர் ஒரு பெரிய கிளிப் வைத்த கனரக அட்டையில் பயணிகள் சார்ட்களை வைத்துக்கொண்டு, கறுப்புக்கோட் அணிந்து கொண்டு தொந்தி, புட்டிக்கண்ணாடி யுடன் அனைவரது டிக்கட்களையும் “செக்” செய்து “டிக்” அடித்துவிட்டு ஒரு முறை அனைவரையும் அவரவர் அவரவர் வயதுப்பிரகாரம் இருக்கிறார்களா என்று அனுமானித்துக்கொண்டு அங்கிருந்து அடுத்த கம்பார்ட்மெண்ட் செல்வார்.

    நாமும் ரயில் ஏறுவதற்கு முன்பு கோச்சில் வெளியே ஒட்டப்பட்டிருக்கும் சார்ட்டில் நம் பெயரும் இருக்கிறதா என்று பார்த்து விட்டு, இருந்தால்,” ஐ. ஏ. எஸ்.” பாஸ் செய்த நிம்மதி உணர்வுடன் உள்ளே  ஏறி அமர்வோம்.

    இப்போதெல்லாம் காலம் மாறிப்போச்சு. பல வருடங்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து விட்டதால் இது ஒரு இன்ப அதிர்ச்சி முரளி தம்பதிக்கு.

    சற்று இளைஞராக வெள்ளை பாண்ட், வெள்ளை ஷர்ட்டில் ட்ரிம்மாக கையில் ஏதோ” ஐ. பேட் “போல வைத்துக்கொண்டு, ரமா முரளி  என்று பெயர் சொன்னவுடன் சம்மதத்துடன் நகர்ந்து விட்டார் அங்கிருந்து, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் என்ற எந்த தரவுகளையும்  கேட்காமலேயே!

    பள்ளிக்கூடத்தில் மாவட்டக்கல்வி அதிகாரி வகுப்பு வாரியாக இன்ஸ்பெக்ஷன் முடித்து விட்டு, அடுத்த வகுப்புக்கு செல்லும்போது “அப்பாடா! போய்ட்டார்”! என்று மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதுபோல, டிக்கட் பரிசோதகர் அந்தப்பக்கம் சென்றவுடன் அவரவர் தம் குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்கு ஏதோ கொடுத்துவிட்டு தத்தம் மொபைல் குழந்தைகளுடன் “ஆளுக்கு பதினைந்து லட்சம் போடப்பட்டுவிட்டதா” போன்ற விஷயங்களை எதிர்பார்த்து போன்களை தடவத்தொடங்கினர்.

    இதுவே முப்பது, நாற்பது வருடங்கள் முன்பு என்றால், வெளியே பார்க்கவேண்டிய ஊர்கள், மரம், செடி, கொடிகள், ஏரிகளையெல்லாம் பார்த்துக்கொண்டே, பக்கத்து சீட்டில் உள்ள மனிதர்களோடு பேச்சுக்கொடுத்து, உறவாடி, அவர்களின் பத்திரிக்கைகள், வாரஇதழ்களை கேட்டு வாங்கி  படித்துக் கொண்டு , கொண்டு வந்த உணவு வகைகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு, இறங்கும் இடங்கள் வரும்போது ரயில் சினேகிதர்களாக இறங்கி மறைவர். சில நேரங்களில் நல்ல வரன், நல்ல வேலை வாய்ப்புகள் அமைவதுமுண்டு.

    இப்போதெல்லாம் அருகிலுள்ளவர் ஏதோ ஒரு பிஸ்கட் பாக்கெட்டை பிரித்தாலே “மயக்க பிஸ்கட்” டாக இருக்குமோ என்று பயந்து அனைவரும் அந்தப்பக்கம் திருப்பியமர்ந்து கொண்டு விடுகின்றனர்.

    ரமாவிற்கு செவ்வாய்க்கிழமை என்றால் ஆகாது. செவ்வாய் “வெறும் வாய்” என்பாள். முரளி சேல்ஸ் & மார்கெட்டிங் துறையில் பணி  புரிந்ததால் தன் அனுபவத்தில் செவ்வாய் “வருவாய்” என்ற புரிதல்.

    ரமாவிற்கு செவ்வாயன்று ஏதேனும் துளி அசம்பாவிதம் நடந்தாலே “எனக்கு அப்பவே தெரியும்” “ஏன்னா! இன்னிக்கு செவ்வாய்” என்று குறைப்பட்டுக்கொள்வாள்.

    “ஒரு மனிதன் எண்பது வயது வரை வாழ்கிறான் என்றால் ஏறத்தாழ நாலாயிரம் செவ்வாய்க்கிழமைகளை அவன் வாழ வேண்டியிருக்கும்; அத்தனை செவ்வாயும் அபசகுனம் என்று சொல்ல முடியாது” என்று மனைவியை ஆற்றுப்படுத்துவார்.

    இருந்தாலும் ரமா மனதில் ஏதோ உறுத்திக்கொண்டேயிருந்தது.

    அப்பர் பெர்த்தில் அமர்ந்துகொண்டு விடாமல் வீடியோ கேம்ஸ் விளையாடும் மாணவன், அதைப்பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அவன் பெற்றோர், “மசாலாவடை, பஜ்ஜி, கொய்யாப்பழம்,” என்று எதையெல்லாமோ விற்றுக்கொண்டு ஏ. சி. கம்பார்ட்மெண்ட் என்ற முக்கியத்துவமே இல்லாமல் அங்கும் இங்கும் அலைமோதி தலையில், இடுப்பில் சுமந்த கூடையுடன் விற்பனை செய்யும் ஏழை விற்பனை மகளிர் ;

    வடை, பஜ்ஜி எல்லாம் எந்த எண்ணெயில் பண்ணினார்களோ, கொய்யாப்பழத்தை அலம்பாமலேயே எல்லோரும் சாப்பிடுகிறார்கள் என்று கவலைப்பட்டாள் ரமா, சிறு வயதில் அவளே இதையெல்லாம் அப்போது இப்படித்தான்  சாப்பிட்டிருக்கிறாள் என்பதை மறந்து!

    “இவர்கள் எல்லாம் எப்படி வீட்டை விட்டு ரயிலில் வெகுதூரம் டிக்கட் இல்லாமல் சென்று விற்பனை முடிந்து எந்த ரயிலில் திரும்பவும் ஊர் திரும்புவர்” என்று ரமா யோசனை செய்து கொண்டிருக்கும்போதே அவர்கள் கிராஸிங்கில் நின்று கொண்டிருந்த எதிர் ரயிலில் ஏறி மீண்டும் அங்கும் விற்பனை செய்து கொண்டே சொந்த ஊர் அடைந்து காணாமலானார்கள். “இன்க்ரீடிப்பிள் இந்தியா”  என்று ரமா மனதுக்குள்  உச்சரித்துக்கொண்டாள்.

    மயிலாடுதுறை சென்று ஒரு காரில் திருக்கடையூர் சென்று அறுபதாம் கல்யாணத்திற்கு வரக்கூடிய விருந்தினருக்கு தேவையான ஹோட்டல் ரூம்கள், அவர்கள் சாப்பாடு, போன்றவற்றை பேசி  முடித்துக்கொண்டு புரோகிதர் ஆபிஸ் சென்றனர்.

    வழக்கம்போல எங்கும் ரமாதான் அனைத்தையும் முன்னெடுத்து உரையாடினாள். ரமா ஒரு ஆல்பா பெண்மணி என்பதால் முரளிக்கு அவ்வளவாக வேலையில்லை. போதாக்குறைக்கு அவருக்கு காது கேட்கும் திறன் மிகவும் குறைவு.

    ரமா புரோகிதரிடம் அனைத்தும் பேசிகொண்டிருக்கும் போது அந்த ஆபீஸ் சுவரில் கடவுள் மறுப்பு திராவிட தலைவரின் பீமரத சாந்திக்கு (எழுபதாவது பிறந்த நாள்) அவரது துணைவியார் வந்து கலந்து கொண்ட வைபவத்தை அங்கிருந்த போட்டோ மூலமாக அவதானித்துக்கொண்டிருந்தார் முரளி.

    அனைத்தையும் நல்லபடியாக செய்துவிட்டு  ஒரு காரில்  மீண்டும் மயிலாடுதுறை திரும்பியபோது இரவு மணி பதினொன்று ஆகிவிட்டது. இன்னும் ஓரிரு மணி நேரத்தில் உழவன் எக்ஸ்பிரஸ் வரும்;

    ஏறிப்படுத்தால் ஏ. சி. சுகத்தில் ஜாம் ஜாமென்று தூங்கி காலை ஏழு மணி அளவில் எழும்பூரில் இறங்கலாம் என்று இருவரும் நிம்மதியுடன் “வெய்ட்டிங் ஹாலில்” அமர்ந்து மொபைல் போனில் யதேச்சையாக ரிட்டன் டிக்கட் ரிஸர்வேஷன் தரவுகளைப்பார்த்தபோது இடி தாக்கியது போல அப்படியே உறைந்து அமர்ந்தாள் ரமா.

    மனைவியின் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று புருவத்தை உயர்த்தி முரளி வினவ, ரமா தன் செல்பேசியை முரளியிடம் கொடுத்து சென்னை செல்லும் டிக்கட் விபரங்களை பார்க்கும்படி சைகை செய்தாள்.

    முரளியும் டிக்கட் விபரங்களை பார்த்துவிட்டு சரியாகத்தான் இருக்கிறதே என்பதுபோல் மனைவியைப்பார்த்தார்.  திக்பிரமையிலிருந்து மீண்ட ரமா, ரயில் பயணத்தேதியை பார்க்கும்படி தழுதழுத்த குரலில் முரளியிடம் உளறினாள். முரளியும் மீண்டும் ரயில் நம்பர், கோச் நம்பர், பெர்த் எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது என்று சந்தேகமாக பதிலளித்தார்.

    “தேதியைப்பாருங்க” என்று தடுமாறினாள் மனைவி. தேதியைப்பார்த்து விட்டு “இன்று இருபத்தி ஐந்தாம் தேதி, கரெக்ட்தானே? என்று வினவினார்.

    ரமா குழறிய குரலில் “அதுதான் தப்பு!” “இன்று இருபத்தி ஐந்தாம் தேதி காலை சோழனின் கிளம்பி எல்லா வேலையையும் முடித்துவிட்டு இப்ப ஊர் திரும்ப இருக்கிறோம்! ஆனால் ராத்திரி பன்னிரெண்டு மணிக்குப்பின்னால் இருபத்தி ஆறாம் தேதி  பிறந்து விடுமே?

    “இருபத்தி  ஆறாம் தேதி என்றுதானே நாம் ரிசர்வ் செய்திருக்கவேண்டும்! நம் டிக்கட் 25 என்று இருக்கிறது! நம் டிரெயின் நேற்று இரவே இங்கு வந்து இன்று காலை சென்னை போய்ச்சேர்ந்து விட்டது”!

    “இன்று காலை நாம் சோழனில் கிளம்பும்போது பக்கத்து பிளாட்பாரத்தில் உழவன் நின்றுகொண்டிருந்ததை பார்த்தோமல்லவா? அப்போதிருந்தே என் மனசு சரியில்லை! எங்கோ ஏதோ தப்புன்னு மனசு தத்தளித்தது  “என்று விரக்தியுடன் முடித்தாள்  ரமா.

    இப்பொழுது முரளிக்கு ஷாக்! வெளிநாடுகள் செல்லும்போதெல்லாம் இரவு 12 மணிக்குமேல் அடுத்த நாள் பிறந்து விடும் என்பதை ஒன்றுக்கு இரண்டு  முறை உறுதிப்படுத்திக்கொண்டு பிளைட்  ரிஸர்வேஷன் செய்யும் நாம் உள்ளூர்  ரயில் பதிவு விஷயத்தில் கோட்டை விட்டு விட்டோமே என்று அதிர்ச்சியடைந்தார் முரளி.

    இத்தனைக்கும்  ரமாதான் “சோழன்”, “உழவன்” என்று பல ரயில்களைப் பார்த்துப் பார்த்து டிக்கட் பதிவு பண்ணினாள். முரளியும் அனைத்தையும் மேம்போக்காக பார்த்து விட்டு “சரியாக இருக்கிறது” என்று சொன்னவுடன் அவள் வங்கிக்கார்டில் பணம் செலுத்தி டிக்கட் பதிவை உறுதிப்படுத்தி க்கொண்டாள்.

    தவறு என்பது இருவர் மீதுமே!

    ரமா டென்ஷன் குரலில் “இதற்குத்தான் நான் செவ்வாய்க்கிழமையன்று இது போன்ற முக்கியமான விஷயங்களை செய்வதில்லை” என்று விரக்தியுடன் அலுத்துக்கொண்டாள். முரளிக்கு ஒரு நிமிஷம் என்ன சொல்வது, என்ன செய்வது என்றே புரியவில்லை.

    வீட்டு காரியங்களாகட்டும், இந்தியாவில் ஆபீஸ் செக்ரேட்டரி பணியாகட்டும், முரளி வெளிநாட்டில் பணி புரிந்துகொண்டிருந்தபோது, ஒற்றை மனுஷியாக மகன் இன்ஜினியரிங் அட்மிஷன், அவன் ஆஸ்திரேலியா மேல்படிப்பு, அவனுக்கு வரன் தேடும் படலம், பின்னர் திருமண ஏற்பாடுகள், பின்னர் மெல்பெர்னில் பேரன் பிரசவம் என்று சிங்கக்குட்டியாக அனைத்தையும் தனி ஒருத்தியாக சாதித்திருக்கிறாள். ரமா ஒன் உமன் ஆர்மி!

    முரளி வெளிநாட்டிலிருந்து மாதாமாதம் பணம் அனுப்பி, வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாதம் தேனிலவு போன்ற விடுமுறையில் இந்தியா வந்து திரும்புவதோடு சரி!

    இருந்தாலும் “மென் ஆர் ப்ரம் மார்ஸ், விமன் ஆர் ப்ரம் வீனஸ் ” (Men are from  Mars, Women are from Venus) என்பதுபோல, செவ்வாய்க்கிழமை என்றாலே சற்று டென்ஷன்தான் அவளுக்கு!

    அன்று பயணப்பதிவு செய்யும்போது, “இன்று செவ்வாக்கிழமை, வேண்டாம், நாளை புக் பண்ணலாம் ” என்று அவள் சொன்னதை மீறி அவளை வற்புறுத்தி ரிசர்வ் செய்ததை நினைத்து இப்போது வருத்தப்பட்டார் முரளி.

    வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும், பயணம் செய்யும்போது இது போன்ற தடாலடி அனுபவங்கள் நிறையப்பெற்றிருந்ததால், முரளி உடனடியாக ரெகவரி ஆகி செல்பேசி மூலம் இன்னும் சிலமணிநேரங்களில் வரவிருக்கின்ற , திங்கள்கிழமை மட்டும் ஓடும் அயோத்தியா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸில் நல்ல வேளையாக அதே  மூன்றடுக்கு  ஏ. சி.  யில் இடம் கிடைத்து வங்கி கார்டில் பணம் அனுப்பி டிக்கட் பெற்றபிறகுதான் ஏதோ அவள் மனசு கொஞ்சம்  ஆறுதல் அடைந்தது.

    இருந்தாலும், வழியெல்லாம், அனாவசியமாக ஆயிரத்தி ஐநூறு ரூபாய் வீணாகிவிட்டதே என்ற கவலை அவள் முகத்தில்.

    சில நேரங்களில் சில தவறுகள்! அந்தகாயம்  ஆற சென்னை வாழ்க்கையில் இன்னும்சில மாதங்களாகும்.

    ஓலா, ஊபர்  போன்ற   டாக்ஸிகளில்  செல்லாமல்   ஆட்டோவில்  சென்றும் இன்னும் சில  விஷயங்களில்  சிக்கனமாக  இருந்தும் அந்த உழவன் எக்ஸ்பிரஸ் ஆயிரத்து ஐநூறு ரூபாயை மீட்க முடிவு செய்தாள் ரமா.

    Share