மோட்டார் சைக்கிள் எண் 4474 (சிறுகதை)

0

ஜெ. ஜெயகுமார்
சென்னை

“இன்றும் மற்றுமொரு நாளே” என்பதால் காலை எட்டு மணி அளவில் காந்தி ரோட்டில் மக்கள் கார்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் எதிர் காலக் கனவுகளைச் சுமந்து கொண்டிருந்த  எதிர்காலத் தலைமுறைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு பள்ளிக்கும் பின் பணியிடத்திற்கும் அரக்க பரக்க விரைந்து கொண்டிருந்தனர்.

எழுபது வயது விஜய் வழக்கம்போல் திரு.வி.க. பூங்காவில் நடைப் பயிற்சியில் இருந்தார், விரைவில் தன் வாழ்க்கையில் ஒரு கொலை வழக்கு நுழையும் என்பதையறியாமல்.

மனிதர்களை அவதானிப்பது விஜய்க்கு ஒரு தலையாய கடமை, ஒவ்வொரு மனிதர்க்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதால். அப்படித்தான் அந்த முப்பத்தி ஐந்து வயது ஜோடி நடைப்பயிற்சி செய்வதை கவனித்துக் கொண்டிருந்தார். அது ஒரு இயல்பான திருமண தம்பதி போல் தெரியவில்லை. கணவன், மனைவி என்றால் அவர்களுக்குள்ளே ஒரு சகஜத்தன்மை, அன்னியோன்யம், சற்றே சோம்பல் கலந்த டுகெதர்நெஸ், அதீத இனிப்பு சாப்பிட்டு திகட்டிப் போன அலுப்பு கலந்த நிறையுணர்வு, எல்லாம் இருக்கும். பொதுவெளியில் மிகவும் ஒட்டியும் இருக்க மாட்டார்கள்; எட்டியும் இருக்க மாட்டார்கள்.

அந்த ஜோடியின்  நடவடிக்கை செய்தித் தாளில் வரும் கள்ளக்காதல் ஜோடியின் ஆரம்ப நிலையாக அவருக்கு புலப்பட்டது. லோஹிப் சாரீயுடன் பாதி முதுகு தெரியும் ரவிக்கையணிந்த அந்தப் பெண்ணை  நெருங்கியும் விலக்கியும் நடந்து கொண்டிருந்தார் அந்த மனிதர். அவரிடம் ஓவர்-என்துசியாசம் எனப்படும் என்டார்பின் எனர்ஜி சுரந்து கொண்டேயிருந்தது.

அவர் கண்களில் “அடைந்தால் மகாதேவி; அடையாவிட்டால் மரணதேவி” காமம்;

அவள் அதை சில நேரங்களில் ஏற்றும் மறுத்தும் விரும்பியும் விலகியும் அவரோடு நடந்து கொண்டிருந்தாள் அளவளாவியபடியே.

வாக்கிங் முடிந்தபின் இருவரும் பூங்காவிற்கு வெளியே வந்து அவரவர் டூவீலர்களை எடுத்துக்கொண்டு ஆளுக்கொரு திசையில் சென்று நகர வாழ்க்கையில் கலந்து விட்டனர்.

அவர்களின்  கூடாநட்பு தினமும் நெருக்கமாகிக் கொண்டே இருந்ததை விஜய்யின் கண்கள் கணித்தன. இது எங்கே கொண்டு போய் விடுமோ என்று கவலைப் பட்டாலும் விஜய் கண்காணிப்பதை நிறுத்தவில்லை.

இப்போதெல்லாம் அந்த ஜோடி விதவிதமான விலை உயர்ந்த ஆடைகளில் வாக்கிங் வந்து போய்க் கொண்டிருந்தனர். ஒரு முறை நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த விஜய்யை அவர்கள் ஓவர் டேக் செய்து  கடந்த போது அவர்கள் அணிந்து இருந்த பெர்ஃப்யூம் ஆளைத் தாக்கியது. தூக்கியது.

திடீரென்று ஒரு நாள் அவர்கள் வாக்கிங்  வருவது நின்று போனது. ஒருக்கால் அவர்கள் வீட்டில் தெரிந்து விட்டதோ, என்று நினைத்த விஜய் வழக்கம்போல் வாக்கிங் வந்து சென்று கொண்டிருந்தார்.

சில நாட்கள் சென்று வழக்கம்போல் வீட்டிலிருந்து பூங்காவிற்கு நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று அந்த ஜோடி “உமா ஸ்டோர்ஸ்” தாண்டி தெருக்கோடியில் இருக்கும் “பாரதி பூங்கா”வை நோக்கி அவன் இடுப்பில் இவள் கை அணைத்திருக்க கூந்தல் முதுகில் இல்லாமல் முன்னே இருக்க  முக்கால் முதுகும் தெரியும் வண்ணம் ஒரு மோட்டார் சைக்கிளில்  விரைந்து கொண்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார் விஜய்.

அந்த வண்டியின் ரிஜிஸ்டிரேசன் நம்பர் 4474. கல்லூரியில் படிக்கும்போது அவர் அட்மிஷன் நம்பர் அந்த நம்பர் தான் என்பதால் அது ஏனோ நினைவில் பதிந்தது. பின் தொடர்ந்து சென்ற அவர் அந்த ஜோடி இப்போதெல்லாம்  பாரதி பூங்காவிற்கு வருவதை இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து கண்காணித்துத்  தெரிந்து கொண்டார்.

“கர்மம்! கர்மம்! எக்கேடு கெட்டோ தொலையட்டும்” என்று அவர் திரு. வி. க. பூங்காவில் வாக்கிங் செல்வதைத் தொடர்ந்தார்.

அங்கு தினமும் ஒரு ஆட்டோ வந்து நிற்பதையும் அந்த ஆட்டோ டிரைவர் சிரத்தையில்லாமல் வாக்கிங் என்ற பெயரில் கடமைக்கு சில அடிகள் நடப்பதையும் பூங்காவுக்குள் வந்து செல்லும் மனிதர்களை அந்த டிரைவர் உற்று கவனிப்பதையும் யாரோ ஒருவரின் வரவை எதிர்பார்த்து வரவில்லை என்பதால் பொறுமை இழப்பதையும் விஜய் அவதானித்தார். போதாக்குறைக்கு அந்த ஆட்டோ டிரைவர் அவ்வப்போது மொபைல் ஃபோனி”ல் பேசுவதையும் பேசிய சில நிமிடங்களில் டிரைவர் அங்கிருந்து கிளம்பி செல்வதையும்  விஜய் கவனித்தார்.

தினம் பூங்காவிற்கு ஆட்டோ டிரைவர் வருகை, கவனிப்பு, கண்காணிப்பு, ஃபோன் பேச்சு என்று சில நாட்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததை ஏராளமான துப்பறியும் நாவல்களை வாசித்திருந்த விஜய் கவனிக்கத் தவறவில்லை.

ஒரு நாள் வாக்கிங் முடிந்து அசதியுடன் இருந்த விஜய் ஆசுவாசப்படுத்திக்கொள்ள பார்க் பெஞ்ச்சில்  அமர்ந்திருந்தார். போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவரும் அவர் அருகே வந்து உட்கார்ந்தார்.

பக்கத்தில் இருப்பது கிழவன் தானே என்று ஆட்டோ டிரைவர் அசால்ட்டாக

போனில் “அண்ணே! அவங்க ரெண்டு பெரும் இங்க வரலைண்ணே! நானும் நீங்க சொல்றீங்களேன்னு தினம் இங்க வந்து வாட்ச் பண்ணிக்கிட்டுத் தான் இருக்கேன்; எனக்கு என்னமோ அவங்க இரண்டு பெரும் வேறு இடத்துக்கு போய்ட்டாங்களோன்னு  தோணுது அண்ணே!” என்று பேசிக் கொண்டிருந்தார்.

விஜய்க்கு எப்பவுமே வாய் ஜாஸ்தி. அவர் மனைவி கீதா விஜய்யை அவ்வப்போது “ உங்களுக்கு வாய் கிழியறது; “தவளையும் தன் வாயால் கெடும்” என்பது போல் “போற இடத்தில் எல்லாம் பாலிட்டிக்ஸ் அது இதுன்னு வாயைக் கொடுத்து உங்களை கெடுத்துக்காதீங்கோ; காலம் கெட்டுக் கிடக்கு;” என்று அவ்வப்போது அபாய மணி அடிப்பதுண்டு;

மனுஷன் கேட்டானா?

டேவிட் பல்டாக்ஸி, டான் பிரவுன், ஜான் க்ரிஷாம், டாம்  க்லான்சி  என்றெல்லாம் ஏகப்பட்ட எழுத்தாளர்களின்  நாவல்களை வாசித்திருந்த விஜய்யின் மனம் ஆட்டோ டிரைவரின் ஃபோன் பேச்சால் குறுகுறுத்தது

“ஓஹோ! இந்த ஆட்டோ டிரைவர் டெய்லி அவா ரெண்டுபேரையும் வாட்ச் பண்ணாத்தான் வரார் போல் இருக்கு; ஆளை  வச்சு நோட்டம் பாக்கறாப் போல இருக்கு”  என்று முடிவுக்கு வந்தார் விஜய்.

ஆட்டோ டிரைவர் “தினம் இங்க வரவேண்டியது; வேவு பாக்க வேண்டியது; ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல; நம்ம பொழைப்புதான் வீணாப் போவுது என்று விஜய் காதில் பட அலுத்துக்  கொண்டார்.

விஜய்யின் வாய்க்குள் இருந்த தவளை துள்ளிக் குதித்தது.

“என்ன சார் ஏதாவது பிரச்சனையா? என்று ஆட்டோவை வினவினார் விஜய்.

விஜய் எல்லோரையும் சார் என்று அழைப்பதுதான் வழக்கம்; மனிதர்களோடு பழகும்போது மரியாதை கொடுத்துப் பழக வேண்டும் என்று நினைப்பவர். மரியாதை கொடுப்பது என்பது இலவசம்தானே? காசா; பணமா? மரியாதை கொடுத்து மரியாதை பெறுவது இருவருக்கும் பரவசம்தானே?

ஆட்டோ டிரைவர், “அதை  ஏன் சார் கேக்குறீங்க; எங்க முதலாளி சம்சாரம் யாரோடோயோ சுத்துறாங்கலாம்; ”கண்டு பிடிங்கடா” ன்னு எங்களுக்கு உத்தரவு போட்டு இருக்கார்; இருக்கற வேலை  பத்தாதுன்னு இது வேற எக்ஸ்ட்ரா தொல்லை’ என்று அலுத்துக்  கொண்டே மொபைல் ஃபோனை திறந்தபோது உள்ளே ஒரு பெண்மணியின் போட்டோ தெரிந்தது அருகிலிருந்த விஜய்க்கு.

விஜய்யின் “ஷெர்லாக் ஹோம்” கண்கள் அந்த போட்டோவைப் பார்த்து திடுக்கிட்டு “இந்த அம்மா இப்பல்லாம் பாரதி பூங்காவுக்கு தினம் வர்ராங்க” என்றார் மிகப் பெரிய குற்றவாளியை கண்டு பிடித்த திருப்திப் புன்னகையுடன்.

அறுதிப் பெரும்பான்மை அரசு அமைக்க ஆறு நாட்களாக ஆறு “எம்.எல்.ஏ”க்களுக்காக அலைந்து கொண்டிருந்து இறுதித் தருணத்தில் ஆறும் கிடைத்த  அரசியல்வாதியின் மகிழ்ச்சியை மிஞ்சும் வண்ணம் அந்த ஆட்டோ டிரைவர் ஆனந்த அதிர்ச்சியில் கிழவனுக்கு தாங்க்ஸ் சொல்லி விட்டு வெளியே ஓடி ஆட்டோவைக் கிளப்பினார் ஆம்புலன்ஸ் வேகத்தில்.

நாட்கள் நகர்ந்தன. இப்போது அந்த ஆட்டோ டிரைவர் பூங்காவிற்கு வருவதில்லை. ஒருக்கால் நல்லபடியாகப் பேசி சுமூகமாகப் பிரச்சனையை தீர்த்துக் கொண்டுவிட்டார்கள் போலிருக்கிறது என்று விஜய் திருப்தி பட்டுக் கொண்டார்.

வாக்கிங் சென்று  வந்த விஜய் ஒரு நாள் “ஷாலிமார் நியூஸ்” பார்த்துக் கொண்டிருந்தபோது “விருகம்பாக்கத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி  மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி தூக்கி வீசப்பட்டு  மரணம்”. இருவரும் கணவன் மனைவி இல்லையென்பதால்  இது விபத்தா , கொலையா என்று போலீஸ் புலன் விசாரணை’ என்ற செய்தியுடன் வந்த வீடியோவைப் பார்த்த  விஜய் ஸ்தம்பித்து சாய்ந்து விட்டார் சோபாவில். வீடியோவில் உருக்குலைந்து கிடந்த அந்த மோட்டார் சைக்கிள் எண்  4474. பெண்ணின்முகம் ஆட்டோ டிரைவரின்  போனில் பார்த்த அதே முகம்.

அன்றிரவு தூக்கம் வரவில்லை விஜய்க்கு. மனைவி கீதாவிடம் சொன்னால் கொன்று  கூறு போட்டு விடுவாள் என்ற பயம் வேறு.

எவ்வளவோ எடக்கு மடக்கான இடங்களில் எக்குத் தப்பான பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு தன் புத்திசாலித்தனத்தால் தப்பியவர் விஜய்.

“டேய் ஆட்டோ! நீ நினைக்கறமாதிரி நான் முட்டாள் கிழவன் இல்லைடா“

என்று நினைத்துக் கொண்டே படுத்திருந்த  மனிதர்  கடந்த சில நாட்களில் பூங்காவில் நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

துப்பறியும் பொறி தட்டி தன் மொபைல் ஃபோனின் போட்டோக்களைத் தேடினார். தேடியது கிடைத்ததால்  நிம்மதி கலந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் உறங்கினார்.

போலீஸ் அவர் வீட்டுக் கதவை தட்டும் முன் அவரே மறுநாள் காலை விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் சென்று “நடந்தது என்ன” என்பதையெல்லாம் விவரித்தார்.

போலீஸ் அதிகாரியிடம் ஆதாரத்தையும் காட்டினார்.

அது ஒரு போட்டோ. தன் நீண்ட நாள் நண்பன் ராஜாராமனுடன் பூங்கா வாசலில் எடுத்துக் கொண்ட செல்ஃபி. அவர்களுக்குப்  பின்னே பளிச்சென்று ரிஜிஸ்டிரேசன் நம்பர் தெரிந்த அந்த ஆட்டோவும் அருகில் அந்த ஆட்டோ டிரைவரும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.