மீண்டும் இணையவழிக் கல்வி

0
2

முனைவர் திரிவேணி சுப்ரமணியம்
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641014
மின்னஞ்சல்: venitamil@srcw.ac.in

“கல்வியைவிடப் பரிசுத்தமான ஒரு பொருளை மனிதன் எங்குமே கண்டறிய இயலாது” – பிளேட்டோ

தொன்மை காலந்தொட்டுக் கற்றலின் நோக்கமும் வடிவமும் மாறினாலும் கூடக் கல்வியின் முக்கியத்துவமும் மேன்மையும் போற்றப்பட்டு வந்திருக்கிறது. இந்தியக் கல்விமுறையானது மேம்பட்ட ஒன்றாக உலக நாடுகளால் மதிக்கப்பட்டிருந்தது. உலகின் பல நாடுகளில் இருந்தும் மாணவர்கள் வந்து பயிலும் இடமாக நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது. கணிதவியல், இலக்கணம், தத்துவம், மனையியல், உளவியல் முதலியவை இந்தியக் கல்வியின் தலைசிறந்த கொடைகளாகக் கருதப்பட்டன. பாரம்பரியக் கல்விமுறையில் இந்தியாவில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் கல்வி கற்றலின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்டன. அதன் மூலம் பலதரப்பட்ட அனுபவங்கள் கிடைக்கும் என்பதால் பயணங்கள் அப்போதைய கல்வியில் முதன்மை இடம் பெற்றிருந்தன.

ஆரம்பக் கல்வி, உயர் கல்வி எனக் கற்றல் இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தது. கல்வியின் எந்த நிலையிலும் அனுபவங்களும் செயல்வழிக் கற்றலும் முதன்மையானதாக வலியுறுத்தப்பட்டது. கல்வித்துறையில் உலகின் மிகப் பழமையான நாடான இந்தியா தற்போது மிகப் புதுமைக் கூறுகளைத் தன்னகத்தே ஏற்றுக்கொள்ளும் நாடாக விளங்குகிறது.

கொரோனா பரவல் காரணமாக மக்கள் வாழ்வில் பல இடர்ப்பாடுகள் இருந்தபோதிலும் தடைகளைக் கடந்து மாணவர்களைச் சென்றடைய இணையவழிக் கல்வி உதவியது. தற்பொழுது போர் காரணமாக எழுந்திருக்கும் எரிபொர்ள் தட்டுப்பாடென்னும் பெரும் இடர்ப்பாடு மீண்டும் உலகை ஐந்து வருடங்கள் பின்னோக்கித் திருப்புகிறது. மீண்டும் இணைய வழிக் கல்வியை நோக்கித் திரும்புவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் இணையவழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவது குறித்த கருதுகோள்கள் அதற்கு முன்னரே இருந்தாலும் நடைமுறையில் சாத்தியமற்ற, கற்பனைக்கெட்டாத ஒன்றாகவே கருதப்பட்டது. ஆனால் பெருந்தொற்றுக் காலம், உலகைப் பல்லாயிரம் மைல்கள் தூரத்தை ஒரே தாவலில் கடந்து செல்லத் தள்ளியிருக்கிறது. தற்போது இணையவழிக் கற்றல் நடைமுறைக்கு வந்துவிட்ட சூழலில் இணையவழிக் கற்றலில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாயினும் நன்மைகளும் அதிகம் என்பதை உணர்ந்து இணையவழிக் கற்றலைப் பயனுள்ளதாக்கிக் கொள்ள மாணவர்கள் முழுமுனைப்போடு செயல்பட வேண்டும். முழுமையாக இல்லாவிடினும் இணையவழிக் கற்றலை இனி எப்போதும் கைவிடாதிருப்பது கூடுதல் நன்மையாக அமையும்.

யாதும் ஊரே

இணையம் உலகிற்குக் கிடைத்த பெரும் கொடை. இதனால் இன்று எந்த ஊரிலிருந்தும் கல்வி, பணி என மக்கள் தங்களது வாழ்வைத் தொடரலாம். இணையமும் அலைபேசியும் பல்கிப் பெருகிவிட்ட தற்காலத்தில் அவற்றை சில தவறுகளுக்காகவும் குறைகளுக்காகவும் முடக்குவதைவிட, ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தக் கற்றுத்தரலாம். நகரமயமாக்கல், கிராமங்கள் மனிதர்களற்றுப் போதல் போன்ற சமூகக் குறைகளை இணையவழிக் கற்றலும் வேலைவாய்ப்பும் நிவர்த்தி செய்துள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை.

தீதும் நன்றும் பிறர் தர வாரா

இணையவழிக் கற்றலின் காரணமாகக் கல்வியை, அறிவைப் பெற விரும்பும் ஒருவர் தான் விரும்பிய துறையில் திறனடையலாம். வயது வேறுபாடு, இடம், சூழல் போன்ற எந்தத் தடைகளும் அதற்குக் கிடையாது. SWAYAM, NPTEL போன்ற இணையதளங்கள் மட்டுமல்லாது தற்போது குறிப்பிட்ட துறைசார் ஆர்வலர்களால் யூடியூப் கற்றலும் சாத்தியமாகி உள்ளது. இதனால் கற்க விரும்பும் ஒருவர் தான் விரும்பிய துறைகளை, விரும்பிய நேரத்தில் கற்கலாம்.

நோதலும் தணிதலும்

இணையவழிக் கற்றலில் சைபர் க்ரைம், தவறான வழிகாட்டுதல், உடல் மற்றும் மனநலச் சீர்கேடுகள் போன்றவை குறித்த அறிவு புகட்டலும் வழிகாட்டுதல்களும் அவற்றைச் சரியாகக் கையாளத் தேவையான பயிற்சிகளை வழங்குவதும் அத்தியாவசியமானது. இதுவும் ஒருவகைக் கற்றலேயாகும்.

கல்வியின் முக்கியக் கூறுகள்

கற்றவர் – கற்பிப்பவர் – சமூகம் என்ற அமைப்புடையது கல்வி. இம்மூன்று தளங்களிலும் இணையவழிக் கல்வி நன்மை பயக்கக் கூடியதாகும். கற்பவருக்குச் சுதந்திரமும் ஈடுபாடும் தரவல்லதாக ஒலி- ஒளி அமைப்பு, வீடியோக்களுடன் கூடிய இணைய வழிக் கல்வி ஈர்க்கிறது.

கற்பித்தலில் நன்மைகள்

கற்பித்தலில் மூன்று படிநிலைகள் உள்ளன.

  1. கற்பித்தல்
  2. மதிப்பீடு
  3. திறன் மேம்பாடு

கற்பித்தலில் பலவித நன்மை தரும் செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இணையவழிக் கற்றல் அமைகிறது. யூடியூப் வீடியோ, படக்கதை, உருக்காட்சிப் பயன்பாடு, படக்கோப்புகள் எனப் பல வகைகளைக் குறிப்பிடலாம்.

மதிப்பீட்டுக்கு உதவும் இணைய வழித் தளங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. Quizizzes.com, Kahoot.com, google forms போன்றவை வினாக்களை மாற்றித் தருவது, உடனடி மதிப்பீடு, மதிப்பீட்டில் துல்லியம் எனப் பல பயன்களோடு கூடுதலாக மாணவர் ஆர்வத்தைத் தூண்டும் அம்சங்களோடும் அமைந்துள்ளன.

திறன் மேம்பாடு

ஒளிப்படங்களை உருவாக்குதல், ஒலி – ஒளிக் கோப்புகளை உள்ளீடு செய்தல் போன்ற செயல்களால் ஒவ்வொரு பாடத்துக்கும் பாட்டு, கதை, உரையாடல் எனச் சுவையான கோப்புகளை உருவாக்க முடியும். அரசுப் பள்ளிகளில் பாடத்திட்டம் இவ்வாறாக வடிவமைக்கப்பட்ட பிறகு மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதே இதன் நன்மைக்குச் சான்றாகும். கல்லூரிகளில் அல்லது உயர் வகுப்புகளில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கு இத்தகைய கோப்புகளையும் வீடியோக்களையும் அவர்களே உருவாக்க வழிகாட்டும் போது அவர்களுக்குக் கற்றல் இனிமையானதாக அமையும்.

மீம்ஸ் உருவாக்கமும் காணொளிகளை உருவாக்குவதும் தற்போது மிகப் பிரபலமாகி வருகிறது. பாடம் சார்ந்த மீம்ஸ்களையும் காணொளிகளையும் இசைக்கொர்ப்பு மற்றும் பாடல்களுடன் சேர்த்து மாணவர்களே உருவாக்கினால்  கற்றலில் ஈடுபாடு அதிகமாகும். அவர்களது படைப்பாற்றல் மற்றும் கற்பனைத் திறனும் மேற்கூறிய செயல்பாடுகளால் மேம்படும்.

மனிதமும் கல்வியும் உலகம் முழுமைக்கும் பொதுவானது. அவற்றை எத்தகைய கால இடர்களுக்கும் பலியாக்காமல் காப்பது மனிதர்களாகிய நம் கடமை. நம் தலைமுறையானது பெருந்தொற்று மற்றும் போர்கள் எனப் பல கடினமான சவால்களைக் கண்டும் கடந்தும் வருகிறது. இவற்றால் கிடைக்கும் அனுபவங்களும் மிக வல்லமைமிக்கதாக இருக்கும். எதிர்கால மக்களுக்குப் பொறுப்புள்ளவர்களாகச் சில கடமைகளை மேற்கொள்வதும் சிலவற்றை அத்தியாவசியமானது என இனங்கண்டு கடைபிடிக்க வேண்டியதும் நம் கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கல்வி என்பது உயிரும் உடலும் மனமும் இணைந்த மனிதர்களுக்கானது. அதை உயிரற்ற சுவர்களுக்குள் சம்பிரதாயமான சடங்காக மாற்றாமல் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளதாக, செயல்வழிக் கற்றலாக மாற்றும் போது அறிவானது மாணவர்களின் உள்ளத்தில் இருந்து மலரக் கூடியதாக அமையும். தன்னம்பிக்கையும் சுய சார்பும் பழக்கமாகும். அவர்களின் படைப்பாற்றலையும் சுய சிந்தனையும் மழுங்கடிக்கப்படாமலிருக்க இணையவழிக் கற்றல் பெரிதும் உதவும்.

விழுந்த இடத்திலேயே வாழ்வதற்கான வல்லமை பெற்று வருவது தானே மனிதனின் மாண்பு. தனக்கான வாழ்வு தேடி வரும் ஒரு விதை போல மனித இனமும் முழு உலகுக்கும் விஸ்வரூபம் எடுத்து எழுந்து நின்று எல்லைகள் கடந்து அறிவால் ஆள இணையவழிக் கற்றலைப் பரவலாக்குவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.