Tag: துரை. வசந்தராசன்

  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! –  27

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 27

    மாதவரத்தார் நனைத்த மழை!

    முனைவர் ச.சுப்பிரமணியன்

     

    முன்னுரை

    வாழ்வியலின் மொழிபெயர்ப்பாக இருந்த கவிதை, கைதட்டலுக்காகவும் வெற்றுப் பாராட்டுகளுக்காகவும் வீரியமில்லா விருதுகளுக்காகவும் ஏங்கிச் சாகின்ற இரங்கத்தக்க நிலைக்கு ஆளாகிப் போனது கவலைப்பட வேண்டிய ஒன்றே. தமிழர்களின் வாழ்வியல்  பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே அமைந்தது. முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல் பாலை என்னும் திணைப்பகுப்பும் முதற்பொருளும் இயற்கையைச் சார்ந்தே வகுக்கப்பட்டன. இயற்கையின் மந்தணத்தைப் புரிந்துணராத ஒரு சமுதாயம் இத்தகைய பகுப்புக்குள் தனது வாழ்வியலை அடைகாத்திருக்க முடியாது. இயற்கையின் மூலம் மழை. தெய்வப்புலவன் இறைவனுக்கு அடுத்தபடியாக மழையைப் பாடியிருப்பதன் மந்தணம் இதுதான். இத்தகைய தரவுகளால் மழையின் அருமைப்பாட்டை உணர்ந்துகொண்ட தமிழர்கள் அதன் அழகியலையும் அனுபவித்துச் சுவைத்திருக்கிறார்கள்.  அத்தகைய நீண்ட நெடிய மரபில் வந்து தற்போது மாதவரத்தில் குடிகொண்டிருக்கும் தம்பி பண்ணைக் கவிக்கோ துரை வசந்தராசன் அனுபவித்து எழுதியுள்ள மழை பற்றிய கவிதை எனக்குள் செய்த சில மாயவித்தைகளையும் மலரும் நினைவுகளையும் மற்றவரும் அறிய வல்லமையில் பந்திவைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    தமிழிலக்கணத்தில் மழை

    நானறிந்தவரையில் பழந்தமிழிலக்கணப் பனுவலாகிய தொல்காப்பியத்தில் மழை என்பது எழுத்ததிகார உயிர் மயங்கியலில் ‘மழை என் கிளவி வளியியல் நிலையும் (287) என்ற இடத்தில் ஆளப்பட்டுள்ளது.  கற்பித்தல் முறையில் காப்பியரின் முறை தனித்துவம் மிக்கது. அவர் உயிர் மயங்கியலில் மூன்று சொற்களுக்கு ஒரே மாதிரியான புணர்ச்சியிலக்கணத்தைக் கூறுகிறார். அவை பனி, வளி, மழை என்பனவாம். இவற்றுள் முந்தைய இரண்டிற்கான புணர்ச்சியிலக்கணத்தை அடுத்தடுத்தும் மழை என்பதற்கான புணர்ச்சியிலக்கணத்தை நாற்பத்தைந்து நூற்பாக்கள் கடந்தும் எடுத்துரைக்கிறார்.

    1. ‘பனி’ என்னும் காலத்தைக் குறிக்கும் சொல் வேற்றுமைப் புணர்ச்சியில் அத்துச் சாரியையும் இன் சாரியையும் பெற்று வரும். “பனியென வரூஉம் கால வேற்றுமைக்கு அத்தும் இன்னும் சாரியை ஆகும்” (241). “பனியத்துச் சென்றான், பனியிற் கொண்டான்”

     

    1. ‘வளி’ என்னும் ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றினைக் குறிக்கும் சொல் மேலே பனி என்னும் காலத்தைக் குறிக்கும் சொல்லுக்கு ஓதப்பட்ட புணர்ச்சியிலக்கணத்தைப் பெற்றுவரும். “வளி என வரூஉம் பூதக் கிளவியும் அவ்வியல் நிலையல் செவ்விது என்ப” (242)

    இவ்விரண்டு நூற்பாக்களோடு ஒத்து முடியும் ‘மழை’ என்னும் சொல்லின் வேற்றுமைப் புணர்ச்சியை மாட்டேற்றாக 287ஆவது நூற்பாவில் எடுத்துரைக்கிறார். ஒரு இலக்கியம் சார்ந்த திறனாய்வுக் கட்டுரையில் இத்தகைய இலக்கண விளக்கம் தேவையா என நேயர்கள் உள்ளத்தில் ஐயம் தோன்றுவதை அறிவேன். வாயப்புக் கிட்டும்பொழுதெல்லாம் மரபின் மாண்புணர்வதும் உணர்த்துவதும் நம் கடமையல்லவா? ‘பனி’ என்னும் காலத்தைக் குறிக்கும் சொல், ‘வளி’ என்பது பூதத்தைக் குறிக்கும் சொல், என்பது தெளிவு தமிழனுக்கு இருந்திருக்கிறது. அன்றியும் தொல்காப்பியம் இலக்கணத்திற்கு இலக்கணம் இலக்கியத்திற்கு இலக்கியம் என்பதை உணர்த்துவதற்காகவும் என்க.

    பத்துப்பாட்டில் மழை

    அறிவியல் சிந்தனையும் கலையிலக்கிய உணர்வும் இணைந்து கைகோத்த காலம் சங்கக்காலம்.  சங்கச் சான்றோர்கள் நீரியியல் சுழற்சி
    குறித்துத்  தெளிவான சிந்தனையைக் கொண்டிருந்தனர். பத்துப்பாட்டு என்னும் தொகைக்கண் ஒன்பதாவது பாடலாகிய பட்டினப்பாலை  கி.பி. இரணடாம் நூற்றாண்டில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் இரண்டாம்  கரிகாலனைப் பாட்டுடைத் தலைவனாக்கிப் பாடியது.

    “வான்முகந்த நீர் மழை பொழியவும்
    மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
    மாரி பெய்யும் பருவம் போல்
    நீரின்றும் நிலத்து ஏற்றவும்
    நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
    அளந்து அறியாப் பல பண்டம்.” என்கிறார். (ப.பாலை, 126-131)

    கவிதைச் சுவைஞர்களுக்குத் தெரியும் உவமம் பொருளினும் உயர்ந்தது. புகார்த்துறையில் அன்றைக்கு நடந்த ஏற்றுமதி இறக்குமதி நிகழ்வைக் கண்ணனார் பாடுகிறார். மழையாகிய நீர்ச் சுழற்சியை உவமமாக்கிப் பாடுகிறார்.

    அதாவது ஒருபுறம் கடல்நீர் ஆவியாகி மேகமாகத் திரண்டு மழை பொழிகிறது.
    மறுபுறம் பெய்த மழை ஆறுகளில் ஓடிக் கடலில் கலக்கிறது. அதுபோன்று
    புகார்த்துறையில் ஒருபக்கம் கப்பல்களில் இருந்து பல பண்டங்கள் வரிசையாக
    நிலத்துக்கு இறக்கப்படுகின்றன. மறுபக்கம் நிலத்திலிருந்து பல பண்டங்கள்
    வரிசையாகக் கப்பலுக்கு ஏற்றப்படுகின்றனவாம். இப்பாடலில்
    கண்ணனார் நீரியல் சுழற்சியைப் புகார்த் துறையின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு
    ஒப்பிடுகிறார். நீரியல் சுழற்சி பற்றிய தெளிந்த சிந்தனை பழந்தமிழர்களிடம்
    இருந்தது என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது. இந்த உவமம்; திருக்குறள் வான்சிறப்பு (17) அதிகாரத்தின் தாக்கம் என்பது உண்மையேயாயினும். மழையின் தோற்றத்தைக் கவிதையில் உவமமாக்கி வைத்து ஆராய்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

    எட்டுத் தொகையில் மழை

    எட்டுத்தொகையின் இரண்டாவது தொகுப்பு குறுந்தொகை.  நல்ல குறுந்தொகை என்பதற்கேற்ப நல்ல நல்ல பாக்களைக் கொண்ட நூல் அது. அதில் தோழி. தலைவியை ஆற்றுவிப்பதாக ஒரு பாடல் இப்படி அமைந்திருக்கிறது.

     

    முந்நான்கு திங்கள் நிறைபொறுத்து அசைஇ

    ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்

    “கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
    விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
    செழும்பல் குன்றம் நோக்கிப்
    பெருங்கலி வான மேர்தரும் பொழுதே” (குறுந் 287)
    “பன்னிரண்டு திங்கள் நிறைந்து பசிய புளிச்சுவையில் கொண்ட ஒதுக்கப்படாத வேட்கையினைக் கொண்ட கர்ப்பிணி போல நீரைச் சுமந்துகொண்டு எடையால் மேலே எழமுடியாமல் தாழ்ந்து பறந்து மழைமேகங்கள் மலையை நோக்கிச் செல்கின்ற பொழுது” என்பது பொருள். மழையைப் பற்றி வண்ணனை செய்யும் இந்தப் பாட்டில் மகளிரின் நிறைகரு பன்னிரண்டு திங்கள் தங்கும் என்னும் குறிப்பு நோக்கத்தக்கது.

    பன்னிரண்டு திங்கள் வயிற்றிற் சுமந்த அப்பாங்கினால்

    என்னிளங் கொங்கை அமுதமூட்டி எடுத்து யான்

    பொன்னடி போலப் புலரியே கானிற் கன்றின் பின்

    என்னிளம் சிங்கத்தைப் போக்கினேன் எல்லே பாவமே!

    என்னும் பெரியாழ்வார் பாசுரத்திலும் தலைசிறந்த கரு பன்னிரு திங்கள் தங்கும் என்பது குறிப்பிடப்படுவது காண்க. கட்டுரைத் தலைப்பிற்குப் பொருந்தாதெனினும் தகவலுக்காக இசசெய்தி இங்குப் பதிவு செய்யப்படுகிறது. சங்க இலக்கியங்களில் பெரும்பாலானவை தலைவனைப் பிரிந்த தலைவியைப் பருவம் காட்டி ஆற்றாமை குறைக்கும் பணியைச் செய்யும் தோழிக்குத் துணையாகத்தான் மழை தன் கடமையைச் செய்திருக்கின்றது.  கடற்கரையிலிருந்தே கடலைப் பாடிய நெய்தலைப் போலவே வாசற்படியிலிருந்தே மழையைப் பாடிய பாடல்களே அதிகமாக இருக்கிறது. கடலுக்குள் சென்றோ மழையில் நனைந்தோ பாடிய பாடல்கள் அருகிலேயே காணப்படுகின்றன. ஐந்திணைகளில் ஏனைய திணைகளின் முதற்பொருள் சிறப்பதைப் போல நெய்தல் அவ்வளவு சிறக்கவில்லை என்பதும் இக்கட்டுரையாசிரியர் கருத்தாகும்.

     

    சிலப்பதிகாரத்தில் மழை

    ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்து இடம் பெறாததும் திங்கள் ஞாயிறு மழை, மற்றும் பூம்புகார் ஆகியவை தொடக்கநிலை வாழ்த்துக்குரியனவாக  அமைநதிருப்பதும் நோக்கத்தக்கது.

    “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

    நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

    மேல் நின்று தான் சுரத்தலான்!”

     

    என்னும் மங்கல வாழ்த்துப் பாடற்பகுதியில் மழை, மாமழை என அடைபுணர்த்துப் பாடப்படுகிறது. திருக்குறளின் வான்சிறப்பு அதிகாரக் கருத்துகளைச் செறித்துக்கொண்டு சிலப்பதிகாரத்தில் ‘உலகிற்குச் சுரத்தல்’ என்னும் இரண்டு சொற்கள் திகழ்கின்றன. பழந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் மழை பற்றிய குறிப்புக்கள் உண்டு. ஆனால் அவை கவிதை நயம் கொண்டு விளங்குகின்றனவா என்பது ஆராயத்தக்கது.

    பாவை இலக்கியங்களில் மழை

    மணிவாசகர் பாடிய திருவெம்பாவையில் மழை பற்றிய குறிப்புகள் இல்லாவிடினும் ஆண்டாள் பாடிய திருப்பாவையில் மழை பற்றிய குறிப்பு வேண்டுதலாக வெளிப்பட்டு நிற்பதைக் காணமுடிகிறது.

    “ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்!
    ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
    பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
    ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
    வாழ உலகினில் பெய்திடாய்”

    எனப் பெருமாளிடம் வைத்த திருப்பாவையின் வேண்டுதல் “ஆழி மழைக்கண்ணா!” என்றே தொடங்குகிறது. கார்மேகத்திற்குக் கண்ணனின் கார்மேனியும், மின்னலுக்கு அவன் சக்கரமும் இடியொலிக்கு அவன் சங்கொலியும் மழைத்துளிகளுக்கு அம்புகளும் உவமங்களாகக் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு பொருளை உவம வழியாகக் காட்சிப்படுத்த முனைவது மரபுசார்ந்த பழந்தமிழ் இலக்கியங்களின் படைப்புக் கொள்கையாகும். இந்தப் பாடல் கூட மழையைப் பற்றிப் பாடப்பட்டதாக இருக்கிறதே தவிர மழையில் நனைந்த அனுவத்தைப் பாடியதாக அமையவில்லை.

    மகாகவியும் மழையும்

    தேசியக் கவியான பாரதி தெய்வீகத்தையும் பாடியிருக்கிறார். இயற்கையையும் பாடியிருக்கிறார். எனக்குத் தெரிந்தவரை மழையைச் சரியான கோணத்தில் ஒளிப்பதிவு செய்திருக்கும் கவியாகவே பாரதியை நான் பார்க்கிறேன். பாரதியின் செவிப்புலனின் கூர்மையும் இயற்கையோடு அந்தக் கவிஞன் வாழ்ந்த வாழ்க்கையும் மழைபற்றிய இந்தப் பாடலில் முற்றுமாக வெளிப்பட்டு நிற்பதைக் காணலாம்

    “திக்குகள் எட்டும் சிதறி தக்கத்

    தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட

    பக்க மலைகள் உடைந்து வெள்ளம்

    பாயுது பாயுது பாயுது –தாம் திரிகிட

    தத்தத் தகிங்கிடத் தத்தோம் –அண்டம்

    சாயுது சாயுது சாயுது பேய் கொண்டு

    தக்கையடிக்குது காற்று – தாம் திரிகிட

    தாம் திரிகிட தாம் திரிகிட தாம் திரிகிட தாம் திரிகிட

    வெட்டியடிக்குது மின்னல் – கடல்

    வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது

    கொட்டியிடுக்குது மேகம் – கூ

    கூவென்று விண்ணைக் குடையுது காற்று

    சட்டச்சட சட்டச்சட டட்டா என்று

    தாளங்கொட்டிக் கனைத்தது வானம்

    எட்டுத் திசையும் இடிய மழை

    எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா?”

     

    அடுக்குத் தொடர்களைப் போர்முழக்கப் பாடல் வரிகளாக மாற்றிக் காட்டும் கவியாளுமை பாரதியிடம் உண்டு என்பதற்கு இந்த வரிகள் சான்றாகின்றன. கட்டடம் இடிந்தது, மரங்கள் சாய்ந்தன, கப்பல்கள் கவிழ்ந்தன என்றெல்லாம் பாடுவோர் இடையே பாரதிதான் ‘எட்டுத் திசையும் இடிய’ என்று பாடினான்.  ‘திசைகள் இடிய’ என்னும் கற்பனை அதீதமானது! எவருக்கும் அவ்வளவு எளிதில் பிடிபடாதது. பாரதிக்கு எளிமையாகப் பிடிபடக்கூடியது. காரணம் அவன் கவிஞன்.  சிலர் கையொப்பம் இடுகிறபோது கூட ‘கவிஞன் கந்தசாமி’ என்று போட்டுப் பூரித்துப் போய்விடுகிறார்கள். கவிஞன் என்பதைக் கையெழுத்துக்குள் சுருக்காமல் பெருமிதத்தின் அடையாளமாகக் கொண்டவன் அவன். அவன் எழுதிய சீட்டுக்கவியில் இதனைக் காணலாம்.

    புதுக்கவிதைகளில் மழை

    மேலே காட்டப்பட்ட சில எடுத்துக்காட்டுகள் மழை பற்றிய மரபுக்கவிதைக் கூறுகள் என்றால் புதுக்கவிதைக்காரர்கள் பாடிய மழைப்பாடல்கள் இப்படி அமைந்திருக்கின்றன.

    நீ இல்லாத இடத்தில்
    கருகி போயின விவசாயம்..
    நீ வந்த இடத்தில் மூழ்கி போயின
    விவசாயம்!
    நீ என்ன மழையா? அல்ல்து பிழையா? .”

    என்று வினவுகிறது ஒரு கவிதை. அந்த வினாவில் ஒரு ‘கவிதை நியாயம்’ இருப்பதை உணர முடிகிறது. அறுவடைக் காலத்தில் பெய்யும் மழை விவசாயிக்கு மட்டுமன்று பயிர்களுக்கே வேதனையாம் ! எடுப்பதற்கும் கெடுப்பதற்குமான புதுக்கவிதை வடிவம் இது. இப்படியொரு கற்பனையைப் புதுக்கவிதைக்காரன் செய்திருக்கிறான்! இந்தக் கவிதையின் ஒரு பகுதியை இன்னும் மெருகேற்றியிருக்கிறான் இன்னொரு கவிஞன்.

    “அடைமழையைக் கண்டு

    ஆனந்தம் கொள்ளாமல்

    தவிக்கிறது

    அறுவடைக்குக் காத்திருக்கும் பயிர்கள்!”

     

    கவிதை சொல்லப்படும் பொருளில் அல்ல சொல்லப்படும் வகையில் அமைந்திருக்கிறது என்பதற்கு இந்தச் சில வரிகள் எடுத்துக்காட்டு. பாவலர்கள் மழைக்குப் பரவசமாகிறார்கள். பயிர்களோ மனம் வாடுகின்றன. இந்த முரண் இந்தச் சீர்களைக் கவிதையாக்குகிறது!

    “கண்ணாடிப் பூக்களாய்

    மண்மீது உடைகின்றாய்!

    கண்மூடித் திறக்குமுன்னே

    காணாமல் மறைகின்றாய்!”

     

    என்ற புதுக்கவிதை மழைத்துளியைக் கண்ணாடிப் பூக்கள் என்னும் தொடரால் அழகு பெறுகிறது. மழையை அனுபவித்துப் பாடிய கவிதை இது. ஒரு விவசாயக் கவிஞனின் பார்வை வேறு வகையாக அமைந்திருக்கிறது.

    “இப்போதெலலாம்

    எப்போதாவது பெய்யும் மழையால்

    காளான்கள் கூட முளைப்பதில்லை

     

    விளைச்சலுக்குப் பயன்படாமல்

    வீணே கொட்டித் தீர்க்கும்

    மழையில்

    ஏராளமாய் விளைந்து கிடக்கின்றன

    கவிதைகள்!

     

    அருங்காட்சியகத்தில் வைத்துப் பார்க்கும்

    பொருள் போல

    மழை எங்களுக்கு ஏனோ வெறும் பாடுபொருளானது

     

    பாடுபட்டு உழைத்தும் பயனில்லாது போனது

    மழையின் பயணத்திட்டத்தில்

    அடிக்கடி ஏற்படும் குளறுபடியினால்!”

     

    திருக்குறள் வான்சிறப்பு என்னும் அதிகார்த்தில் வரும் கெடுப்பதும் எடுப்பதும் என்னும் சொற்களுக்கான பொருளை “மழையின் பயணத்திட்டக் குளறுபடி” என்று புரிந்து  கொள்ளலாம். அருமை!

    மருதகாசி நனைந்த மழை

    மூன்றே நிமிடங்கள் வரக்கூடிய ஒரு திரையிசைப்பாடலில் மூன்று உவமங்களைக் கூறிப் பெய்யும் மழையைக் காட்சிப்படுத்துவதில் வெற்றிபெற்றவர் மருதகாசி.

    1. “முட்டாப் பயலே மூளையிருக்கா என்று ஏழை மேலே

    துட்டுப்படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற் வார்த்தைபோலே”

    1. “கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே”
    2. “அவன் கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே”

    மழை பெய்கிறதாம். பரபரப்பில்லாத தமிழில் அழகியல் மற்றும் வாழ்வியல் கருத்துகளைத் திரையிசையில் தந்து சென்ற கவிஞருள் ஒருவர் மருதகாசி. ஒரு திரையிசைப் பாடலிலும் சமுதாய அவலங்களை உவமங்களாகப் படம்பிடிக்க மழையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சதுரப்பாடு பெரிதும் போற்றத்தக்கதாக அமைந்திருக்கிறது.

    அப்துல் ரகுமான் கண்ட புகையும் மேகமும்

    அடக்கமுடைமையைப் பத்து உடைமைகளில் ஒன்றாக்குவார் திருவள்ளுவர். அந்த அதிகாரத்தில் ஆமையைக் காட்டி அடக்கத்தை வலியுறுத்தும் திருவள்ளுவர் அடக்கத்தையும் பணிவையும் ஒன்றாக்குவார். . கவிக்கோ அப்துல் ரகுமான்  பணிவின்மையைப் புகையாலும் பணிவைக் கார்மேகத்தாலும் விளக்குகிறார்.

    “காற்றுக்குக் கண்ணில்லை! அது

    புகையையும் மேலே கொண்டு போய் வந்துவிட்டது!

     

    மேலே வந்தவுடன்

    புகைக்குத் தலைகால் புரியவில்லை!

    அது சூரியனையும் சந்திரனையும்

    கர்வத்தோடு பார்த்தது!

     

    நானும் உங்களைப் போன்றவன்!

    இனிமேல் உங்கள் ராஜவீதியில்

    நானும் பவனி வருவேன் என்றது

     

    அது  மேகத்தைப் பாரத்துச் சொன்னது!

     

    “உன்னைப் போலவே உயரம்!

    உன்னைப் போலவே நிறம்!

    உன்னைப் போலவே உருவம்!”

    இனிமேல் நானும் மேகந்தான் என்றது

     

    புகையை மேகம் என்று நம்பிய

    சில முட்டாள் மயில்கள்

    தோகை விரித்தாடின!

     

    மேகம் கடகடவெனச் சிரித்துவிட்டு

    மழையாய் இறங்கியது!

     

    நனைந்து சிலிர்த்த பூமி  சொன்னது!

    பெருமை மேலே ஏறுவுதிலே இல்லை!

    கீழே இறங்குவதிலே இருக்கிறது!

     

    மழையை ரசித்ததோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த வான்வீதியையும் ரசித்துக் கவிதையெழுதிய ரகுமான் ஒரு ஆழமான வாழ்வியல் ;சிந்தனையைப் பதிவிடுவதற்கு மழையைப் பயன்படுத்திக் கொள்கிறார்.  இயற்கையை இப்படிப் பயன்படுத்திக் கொள்வதும் ஒரு கவிமரபாக இருப்பினும் இயற்கையொடு இயைந்து அனுபவித்த இன்பத்தைத் தம்பி வசந்தராசன் அழகியல் மீதூரப் பதிவிட்டிருக்கிறார் என்பதையே இக்கட்டுரை முன்னெடுக்கிறது.

     

     

     

    வசந்தராசன் கவிதைகளில் இயற்கை

    கவிஞர் வசந்தராசனின் கவிதை பற்றி நான் எழுதிய முதல் கட்டுரையில் கண்டெடுக்க முடியாத (படாத) காட்டுமூலிகை’ என்று குறிப்பிட்டிருந்தேன்.! நீரும் காற்றும் வெப்பமும் இல்லாத விதை சாம்பிவிடுவதைப் போல அவருடைய கவிதைகள் இன்றைக்கும் இருக்கின்றன என்பது என் கருத்து. முகநூலில் அவர் பதிவிடும் கவிதைகளில் எழுபத்தைந்து விழுக்காட்டுக் கவிதைகள் உலகத்தரம் வாய்ந்தன. கற்பனைத் திருமணங்களைச் சீர்களின் மந்திரத்தால் சிறக்கச் செய்கிறார்.  எனக்குத் தெரிந்தவரை இவரளவுக்குக் கற்பனை செய்யும் கவிஞர் இருக்கிறார்களா? அல்லது இவர் கவிதைகளில் காணப்படும் கற்பனை வளத்தோடு ஒப்பிடும் பிற கவிதைகளைக் காணமுடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. எண்சீர் விருத்தங்களில் முருகுசுந்தரம், பொன்னிவளவன் முதலியோரோடு எண்ணத்தகுந்த இவர் கற்பனையில் ஈரோடு சிற்பி, தமிழன்பன், அப்துல் ரகுமான், வைரமுத்து ஆகியோரோடு ஒப்பு வைத்து எண்ணத்தக்கவராக எனக்குப் படுகிறார். அவருள்ளும் இயற்கையைத் தனித்துவத்தோடு இவர் துய்ப்பதை இவருடைய கவிதைகள் காட்டுகின்றன.

    வானத்தைச் சுருட்டி

    முற்றத்தில் விரித்தேன்

    வாயிலில் ஆயிரம் மீன் குளங்கள்!

     

    என்றெழுதுகிறார். பூமியைப் பாயாய்ச் சுருட்டிய கற்பனை மிகுந்த தமிழ்க்கவிதை உலகில், வானைச் சுருட்டி முற்றத்தில் வைத்த புதுமைக்குச் சொந்தக்காரர். வானத்தோடு கூடிய விண்மீன்கள் இவர் வீட்டு முற்றத்தில்! என்ன அழகிய கற்பனை!

    வான்தோட்ட முதற்காய்ப்பா கதிரோன் பிஞ்சு?

    வளரிருளைப் பறித்திடவா நிலவுக் கொக்கி?

    மீன்தொட்டி வயல்தானா இரவு வானம்?

    மின்னலென்ன இடிசொடுக்குச் சாட்டைதானா?

    வான்பிடிக்கும் வலைவிரிப்பா மேக தாகம்?

    பால்வீதி தான்விண்மீன் குடியி ருப்பா? “

     

    என்று இன்னோர் இடத்தில் எழுதுகிறார். கதிரவன் நிலவுக்கு ஒளிக்கடன் தருகிறது என்பதும் ஒரு கற்பனைதான். ஆனால் வசந்தராசன் கதிரோனின் பிஞ்சாக நிலவைக் காண்கிறார். பிறைநிலவைக் கொக்கியாகப் பார்க்கும் பார்வை அற்புதமானதல்லவா? வானத்து மீன்கள் இயற்கை. அந்த இயற்கையை இவர் செயற்கையாக்குகிறார். மீன்தொட்டி என்கிறார்.

    மூக்கொழுகிக் கொண்டிருக்கும்!மோதும் காற்றால்

    முசுக்கென்று தும்மலிடும்! தாளின் ஈரத்

    தாக்குதலால் நடுக்கமுறும்! நீர்ச்சீப் பாலே

    தலைவாரித் தழைமுடியைத் தானு திர்க்கும்!

    சீக்குவந்த கோழியைப்போல் சுருங்கிக் கொள்ளும்!

    சூரியனின் வரவென்றால் தோகை அள்ளும்!

    நாக்குழற மழலைமொழி சிரிப்பில் ஆடும்

    நனைந்துவிட்ட மழைமரங்கள்! இன்று கண்டேன்!”

     

    என்று மற்றொரு பதிவில் மழையில் நனைந்த மரங்களைப் பாடுகிறார் வசந்தராசன். இலைசிந்தும் துளியழகு என்றார் வைரமுத்து.  இவரோ மரத்துக்கு மூக்கொழுகுகிறது என்கிறார். மழைத்தூறலாகிய சீப்பால் தலைவாரிக்கொள்ளும் மரம், அதன் வேகத்தால் பழுத்த இலைகளாகிய முடியை உதிர்க்கும் என்னும் கற்பனை அழகியலின் உச்சந் தொடும் முயற்சி!. இத்தகைய சில எடுத்துக்காட்டுகள் இயற்கையைப் பாடுகிற கவிஞராக வசந்தராசன் இல்லாமல் எப்போதும் அவர் மனம் இயற்கையோடு தோய்ந்திருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. இந்தப் பின்புலத்தில்தான் முகநூல் பதிவான  ‘மழை நனைத்தேன்’ என்னும் கவிதை இங்கே திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    காம்பணிந்த வெளவால்கள்

    ஒன்றைப் பிறர் நோக்காத கோணத்தில் நோக்குவதுதான் கவித்துவப் பார்வை. நமக்கெல்லாம் குடை தெரியும்கறுப்புத் துணி அல்லது வண்ணத்துணிகள் தெரியும்நடுக்கம்பியைச் சுற்றியுள்ள கம்பிகள் தெரியும்  மழையில் நனையும் குடைக்கு இருட்டில் வாழும் வெளவாலிடம் என்ன வேலைவசந்தராசனுக்கு கைப்பிடி கொண்ட கறுப்புக் குடை காம்பணிந்த வௌவலாகத் தெரிகிறது

    காம்பணிந்த வௌவால்கள் வானெ திர்க்கக்

    கருவானம் அம்பெய்தே அதைத்து ளைக்க

     

    மழைபற்றி மற்றவர்கள் நனையாமல் பாட வசந்தராசன் மழையில் நனைந்து கொண்டே (நனைத்துக் கொண்டே) பாடுகிறார். இது அவர் குடைபிடித்துக் கொண்டு வீதியில் நடந்து போனது கொண்டு பெறப்படுகிறது. உவமம் பொருளைப் பிரித்துக் காட்டும். படிமம் பொருளை மற்றொன்றாகக் காட்டும். வௌவால்கள் கண்டிருப்போம்.  கருங்குடைகளைக் கையில் பிடித்து மழையில் நனைந்திருபோம்! ஆனால் நம்மில் எத்தனைப்பேர் அந்தக் கருங்குடையை வௌவால்களாகக் கற்பனை செய்திருப்போம்? அது மட்டுமன்று. குடையின் கைப்பிடியை வௌவால்களின் காம்பாகக் காண்கிற கவித்துவம் நம்மில் எததனைப் பேருக்கு வரும்? நம்மில் என்பது இருக்கட்டும்? எததனைக் கவிஞர்களுக்கு வரும்? அதனால்தான் வசந்தராசன் கவிதைகளால் கவிஞரானவர என்கிறேன் நான்.

     

    ‘காம்பணிந்த வௌவால்கள் வானெதிர்க்க’

     

    குடை மழையை எதிர்க்கிறது என்றால் என்ன பொருள்? காற்றுச் சுழனறடிக்க மழையும் சுழன்றடிக்கும். அந்தச் சுழலுக்குத் தக்கவாறு மழையை எதிர்த்து குடையாளியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு குடைக்கு உண்டு. அதனால்தான் மழைபெய்யும் திசையெல்லாம் குடையெதிர்ப்பதாகக் கற்பனை செய்கிறார். கொட்டுகின்ற மழையைக் குடை வென்றதாக வரலாறு இல்லை. குடை என்பது ஒரு தற்காலிகத் தற்காப்பு. அவ்வளவுதான் சரமழையின் வேகததிற்குக் கள்ளிக்கோட்டை மான் மார்க் குடை ஈடுகொடுக்க இயலாது,

     

    “கருவானம் அம்பெய்தே அதைத்து ளைக்கத்”

     

    தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை” என்றாரே ஆண்டாள் அந்த மரபின் தாக்கம் இந்த வரிகளில்!.

    முகம் திருத்தும் செடிகொடிகள்

     

    புதுமையைப் பற்றிச் சொல்ல வந்த பாரதி, அப்புதுமை கவிதையின் அனைத்துக் கூறுகளிலும் படிந்திருக்க வேண்டுமென்பான், “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது “ என்பான்.  ஒரு கவிதை எந்நாளும் அழியாத மா கவிதையாக இருக்க வேண்டுமென்றால் இந்த நான்கு கூறுகளிலும் புதுமை மிளிர வேண்டும் என்பது பாரதியின் கவிதைக் கொள்கையாகக் கருத முடியும்.  செல்போன் புதியதாக வாங்கிவிட்டால் கவிதையும் புதியது என்று பலரும் எண்ணிவிடுவதுதான் கவிதையின் இன்றைய அலங்கோலத்திற்குக் காரணம்.   

     

    தேம்புமரம் செடிகொடிகள் கண்ணீர் சிந்தித்

    தேங்கியுள அடிநீரில் முகம்தி ருத்த

     

     

    என்னும் வரிகளில் கற்பனை புதியதாக அமைந்திருப்பதைக் காணலாம். மழை பெய்கிறது, தாவரங்களில் விழுகிறது, செடிகொடிகளில் விழுகின்ற மழைநீர் அவை தேம்பி அழுவதுபோல் தோற்றம் தருகிறது. அவ்வாறு அழுது வழிகின்ற நீர் அடிரம் நிற்கும் மண்ணில் தேங்கி நிற்க அந்த நீர்க்கண்ணாடியில் முகம் திருத்துகிறதாம் செடிகொடிகள்!  எவ்வளவு அழகிய கற்பனை? கண்ணீர் சிந்தியவுடன் முகம் திருத்த முடியுமா என்றால் இரண்டும் தனிததனி வினைகள். முன்னது மழை பெய்கிறபோது. பின்னது மழையடித்து ஓய்ந்துவிட்ட பின்பு.

     

    தசைப்பிடிப்பும் மின்னலும்

     

     

    இடி, மழை, மின்னல் பற்றிக் கவிக்கோ அப்துல் பாடியுள்ள ஒரு கவிதையில் மின்னலை இப்படிப் பாடியிருப்பார். “வினாடியில் வற்றும் வெளிச்ச ஆறு. நீலச் சகதியில் நெளியும் வெண்புழு”. தம்பி வசந்தராசன்

     

    பாம்புகள்போல் படமெடுத்துப் பாயும் மின்னல்

    பசிவயிற்றுத் தசைப்பிடிப்பாய்ச் சுருள வைக்க

     

    மின்னல் நேர்க்கோட்டில் மின்னாது. இதுதான் காட்சி. இந்தக் காட்சியை கவிஞர் பரும் அவரவர் ரசனைக்கும் பார்வைக்கும் ஏற்பக் கற்பனை செய்து பாடுகிறார்கள். சமுதாய அவலங்களைப் பாடும் இயல்பு கொண்ட வசந்தராசன், நெளிந்த மின்னலை பசியால் உண்டான ஏழையின் தசைப்பிடிப்ப்பாய்க் காணுகிறார். மின்னுவதற்குப் பாம்பின் படததையும் அதன் சுருளுக்குத் தசைப்பிடிப்பையும் உவமமாகக் காட்டிய கற்பனைத் திறன் சிறப்புக்குரியதல்லவா?.

     

    மண் செய்த மாதவம்

     

    விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பரிதுஎன்பார் திருவள்ளுவர். மழைத்துளி விழாதா என்னும் உழவனின் எதிர்பார்ப்பு வாழ்வியல். என் வறண்ட மேனியில் மழைத்துளி விழாதா பூமி எதிர்பார்ப்பது கவிதையியல்.

     

    நோன்பிருந்த தாய்மண்ணோ மடிவி ரித்து

    நோய்தீர்க்கும் விருந்துமழை ஊட்டி வைக்கும்!”

     

    மழையை மண் எதிர்பார்ப்பது நமக்குத் தெரியும். ஆனால் அது வானத்தை நோக்கித் தவம் செய்வது நமக்குத் தெரியுமா? தெரியாது, காரணம் நாம் கவிஞர்கள் அல்லர். மழைக்காகத் தவம் இருந்த பூமி, அந்த மழையை உள்வாங்கித் தாவரங்களுக்கு ஊட்டி விடுகிறதாம். வறுமை நோயைத் தீர்க்கும் விருந்தாக விழுகிறதாம் மழை!.

     

    மழை நனைந்த மண்மகள் கோலம்

     

    மகளிர் நாணத்தால் தரையைக் கீறுவது ஒரு பண்பாட்டு வெளிப்பாடு. மண்ணைப் பெண்ணாக உருவகம் செய்வது தமிழ்க்கவிதை நெடுமரபு.  மழை பெய்கிறது. அந்த வேக மழைக்கோடு தரையைக் கீறுகிறதாம். காய்ந்து கிடக்கும் தன் மகளான மண்ணுக்குத் தாயான வானம் கருணை காட்டுகிறதாம். வறட்சியில் புழுங்கிச் செத்த பூமி மழை நீர் பட்டுப் பெருகி உள்ளிருந்த வேர்வை கொப்புளம்போல் வெளிநடக்கிறதாம். காய்நது விட்ட மரத் தளிர்கள் மழைநீரில் மிதந்து செல்வது மண்ணின் தாகங்கள் படகுகளாய்ச் செல்வதுபோல் காட்சி தருகிறதாம்.

     

    நெளிந்தோடும் வெட்கமழை தரையைக் கீற

    நீர்ப்பெருக்கோ தாய்வானக் கருணை கூற

    குளிர்மண்ணின் வேர்வைகளோ வெளிந டந்து

    கொப்புளமாய்க் கொதிவெடிப்பை வீசிப் போகத்

    தளிர்நாட்கள் அசைபோட்ட சருகுக் கூட்டத்

    தாகங்கள் பெருமூச்சுப் படகாய்ப் போகும்! “

     

    என்றெழுதிக் கவிதை காட்சிப்படுத்தும். இறுதி வரிகளில்

     

    வெளிர்வானம் வரும்வரைக்கும் இவைந டக்கும்!

    வான்வெளுத்தால் உலகமெலாம் சாயம் போகும்!

     

    என்றெழுதி மழையின் மாண்பை உச்சாணிக் கொம்புக்கேற்றுகிறது.  மேலே கண்ட காட்சிகளெல்லாம் மழை பெய்கிற அந்தப் பொழுதில் மட்டுமே!. மழை நின்றவுடன் வானம் வெளுத்துவிடுகிறது. அப்போது உலகம் வெளிர் வாங்குகிறது. இதனைச் “சாயம் போகும்” என்னும் வழக்குச்சொல்லால் உயிர்பிக்கிறார் கவிஞர்.  “சாயம் வெளுத்துப் போச்சு” என்பது வழக்கு. ஒருவனுடைய உள்ளீடு போலியானால் அதாவது அந்த உள்ளீடு அவனுக்கு உரியது இல்லையென்றால் அது வெளிவந்தவுடன் அவன் போலியாகிறான். கற்றவன்போல வேடமிடுகிறவன் கல்லாதவர் அவையில். வெளுத்துவிடுவதிலலையா அது போல! பைந்தமிழ்க் கவிதைகளில் பழகுதமிழைக் கையாள்வதும் பாமர வழக்கைக் கையாள்வதும் அக்கவிதையின் உயிர்ப்புத்தன்மையை உயர்த்தும். “மண்வெட்டி கூலி தின்னலாச்சே!” என்பார் பாரதியார். “காப்பார் கடவுள் உமை கட்டையில் நீர் போகுமட்டும்” என்பார் பாவேநதர்!, “கட்டையில் போவது என்றால் மரணம். ‘வீடு முச்சூடும்’ அழும் என்பார் ஜீவா! முச்சூடும் என்றால் முழுமையும் என்பது பொருள். சாயம் போகும் என்னும் வழக்குச் சொலலுக்கு இலக்கிய மகுடம் சூட்டியிருக்கும் வசந்தராசன் ஒரு மரபுக்கவிஞராக மலர்வது இங்கேதான்!

     

    கற்பனைக் களஞ்சியம்

    பாட்டு முழுமையும் கற்பனையைக் கலவையாக்குவது இடைக்காலத் தமிழ்க்கவிதை மரபு. இடைக்காலத்திற்குப் பிறகு வந்த  நூற்றாண்டுகளில் கற்பனைக் களஞ்சியம் என்னும் பெருமைக்கு உரியவர் சிவப்பிரகாச சுவாமிகள். கவிச்சக்கரவர்த்தி கம்பனும் இந்தப் பெருமைக்கு உகந்தவனே! தம்பி வசந்தராசன் மழை பற்றி எழுதியிருக்கும் இந்த உருவக விருத்தத்தின் இறுதிப்பாடல் கற்பனைக் களஞ்சியமாகவே மிளீர்கிறது. முதல் வரியில் சொல்கிறார்.

     

    விழுதிவலை தவளையெனத் தாவிக் காட்ட

     

    மொக்குளாக விழுகின்ற நீர்த்துளிகளுக்குத் திவலை என்று பெயர். நீர்நிலைகளில் நீராடிவிட்டு வருவோர் வெற்றுடம்பில் இதனைக் காணலாம். வானின்று விழும் நீர்த்திவலைகள் துளித்துளிகளாக நிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுவது சிறு தவளை தாவிக்குதிப்பதுபோல இருக்கிறதாம்!

     

    வேர்த்ததுபோல் மரம்சிலவும் இலையுதிர்க்க

     

    மழைத்துளி இலைகளில் விழுகிறபோது அவற்றுக்கு வேர்ப்பதுபோல் இருக்கிறது.  காற்றின் அசைவில் இலைகள் ஆட, அவற்றின் மீது விழுந்த நீர் வேர்வைத்துளிகளாகச் சிதறுகிறது. “வேரின் மீது விழுந்த மழை” என்றும் ‘விறகின் மீது விழுந்த மழை’ என்றும் கருத்தியல் விளக்கத்துக்கு மழையைப் பாடும் வைரமுத்தின் பார்வையிலிருந்து “இலைகளில் விழுந்த மழை” என்னும் வசந்தராசனின் அழகியல் பார்வை இப்படி அமைந்திருக்கிறது.

    தொழுகையாய்ச் சிலமரங்கள் குளிர்ந டுங்க

     

    தொழுகை என்பது இஸ்லாமியர்களுக்கு உரியது. அவர்கள் பள்ளிவாசலில் தரையில் தலைவணங்கித் தொழுவது சமயச்சடங்கு. மழையினால் மரங்கள் சோர்ந்து அப்படியே சாய்ந்து எழுவது மழைக்காட்சி. இந்த மழைக்காட்சியைக் காணுகிற கவிஞர் மனத்துள் பள்ளிவாசல் காட்சி நினைவுக்கு வருகிறது. நூற்றுக்கணக்கான மரங்கள் தலைசாய்வதை நூற்றுக்கணக்கானவர்கள் தொழுவதாகக் காண்கிறார். தொழுகையாய் என்பதை தொடு கையாய் என்ப்பிரிததுச் சில மரக்கிளைகள் தொழுகின்ற கையைப் போலக் காட்சியளித்ததாகவும் கற்பனை செய்து கொள்ளலாம்.

     

    தொப்பைமரம் பூமிக்குக் குடைபி டிக்க

     

    அடிக்கிளைகளில் இலைகளற்று நுனிக்கிளைகளில் மட்டும் இலைநிறைந்து குடையைப் போல நிற்கின்ற மரங்கள் உண்டு, பெரிய வீடுகளிலும் சாலைகளிலும் பார்த்திருக்கலாம். அந்த மரங்களின் தாய் பூமியாம். பூமி தவமிருக்கிறது என்று கற்பனை செய்த கவிஞன், இந்த வரியில் அந்த பூமித்தாய் நனைந்துவிடக்கூடாதே என்பதற்காக மரங்கள் அதாவது தொப்பையான மரங்கள் கிளைக்குடையாகிய இலைக்குடை பிடித்ததாகக் கற்பனை செய்கிறார். முன்வரியில் காட்டியது இயல்பான மரம். இங்கே காட்டுவது தொப்பை மரம். உண்மைக் கவிஞர்களுக்குக் கற்பனைக்குப் பஞ்சமா என்ன?

     

    அழும்வானின் எதிர்நின்று வான வில்லாள்

    அழகொளிர்முந் தானைக்கை துடைக்க முந்த

     

    மழை பற்றிய கற்பனையில் இறுதியாக ஆனால் முத்தாய்ப்பாகப் பதிவு செய்கிறார். “வானம் அழுகிறது” என்பது பொதுவான கற்பனை மரபு. “வானம் அழுவது மழையெனும் போது” என்பார் கண்ணதாசன். மழைப்பொழுதில் வானவில் வண்ணவில்லாகத் தோன்றுவதும் இயல்பு. ஆனால் அந்த வானவில்லை அழுகின்ற வானின் கண்ணீரைத் துடைக்கும் முந்தானையாகக் கற்பனை செய்தது புதுமையிலும் புதுமை. “செங்கதிர் சுடர் போலே என் கரம் நீண்டிருந்தால்  சிங்காரச் சிலையை இங்கிருந்தே தொடுவேன்” என்பார் சுரதா!. பொதுவாகச் சேலையின் தலைப்புத்தான் முந்தானையாக அமையும். இங்கே எழுவண்ண வானவில் முந்தானையாதலின் “அழகொளிர் முந்தானை” என்கிறார்.

    முழுநாளும் மழைநனைத்தேன்! மழையெ னக்கு

    முற்றத்துப் பால்நிலவு! முன்றில் தோப்பு.! “

     

    ‘நனைந்தேன்’ என்னும் தன்வினையை ‘நனைத்தேன்’ எனப் பிறவினையாக்கிச் சொல்வதன் மூலம் தன் மனத்தின் விசுவரூப தரிசனததை வசந்தராசன் காட்சிப்படுத்துகிறார். மழை பெரியது! விரிந்தது! அகண்டது! உயரத்திலிருந்து கொட்டுவது! மனம் சிறியது! சுருங்கியது! குறுகியது! நம் உயரம் கூட இல்லாதது! எங்கிருக்கிறது என்பது கூடத் தெரியாதது!. பெரியது சிறியதை நனைக்கலாம். சிறியது பெரியதை எப்படி நனைக்க முடியும்? “விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!” என்றானே புரட்சிக்கவிஞன் அதன் மற்றொரு படிமக் காட்சி இது. ‘நனைத்தேன்’ என்பது நுண்ணிய சொல்லாட்சி. இப்போது அந்தப் பாடல்களைப் படித்துப் பாருங்கள்!

    காம்பணிந்த வௌவால்கள் வானெ திர்க்கக்

    கருவானம் அம்பெய்தே அதைத்து ளைக்கத்

    தேம்புமரம் செடிகொடிகள் கண்ணீர் சிந்தித்

    தேங்கியுள அடிநீரில் முகம்தி ருத்த

    பாம்புகள்போல் படமெடுத்துப் பாயும் மின்னல்

    பசிவயிற்றுத் தசைப்பிடிப்பாய்ச் சுருள வைக்க

    நோன்பிருந்த தாய்மண்ணோ மடிவி ரித்து

    நோய்தீர்க்கும் விருந்துமழை ஊட்டி வைக்கும்!

     

    நெளிந்தோடும் வெட்கமழை தரையைக் கீற

    நீர்ப்பெருக்கோ தாய்வானக் கருணை கூற

    குளிர்மண்ணின் வேர்வைகளோ வெளிந டந்து

    கொப்புளமாய்க் கொதிவெடிப்பை வீசிப் போகத்

    தளிர்நாட்கள் அசைபோட்ட சருகுக் கூட்டத்

    தாகங்கள் பெருமூச்சுப் படகாய்ப் போகும்!

    வெளிர்வானம் வரும்வரைக்கும் இவைந டக்கும்!

    வான்வெளுத்தால் உலகமெலாம் சாயம் போகும்!

     

    விழுதிவலை தவளையெனத் தாவிக் காட்ட

    வேர்த்ததுபோல் மரம்சிலவும் இலையுதிர்க்க

    தொழுகையாய்ச் சிலமரங்கள் குளிர்ந டுங்க

    தொப்பைமரம் பூமிக்குக் குடைபி டிக்க

    அழும்வானின் எதிர்நின்று வான வில்லாள்

    அழகொளிர்முந் தானைக்கை துடைக்க முந்த

    முழுநாளும் மழைநனைத்தேன்! மழையெ னக்கு

    முற்றத்துப் பால்நிலவு! முன்றில் தோப்பு.!

     

    நிறைவுரை

     

    மழை நனைந்தேன் என்றுதான் பிறரெல்லாம் பாடினார்கள். இவர்தான் மழை நனைத்தேன் என்று பாடியிருக்கிறார். ‘மழையை இவர் நனைத்தாரா’ என்பது நமக்குத் தெரியாது. நாம் காணவில்லை. ஆனால் இவருடைய கவிதை மழை முழுமையையும் ஈரமாக்கியிருக்கிறது. கவிஞர்களின் முகவரிகளையே தங்கள் முகவரிகளாகக் கொண்டு   கவிதை பெருகும் ஒரு பேரிடர் காலத்தில்  தமது கவிதைகளால் தன்னை அறிமுகம செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் வசந்தராசன் வளிமண்டலம், என்பது போல் கவிதா மண்டலமும் ஒன்றுண்டு. பாரதி தனது தாசனை அறிமுகம் செய்கிறபோது சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலததைச் சேர்ந்த சுப்புரத்தினம்” என்றுதான் குறிப்பிடுகிறார். கவிதா மண்டலம் என்பது இயற்கை அழகியல் மற்றும் சமுதாய அழுகியல் ஆகிய இரண்டினை உள்ளடக்கியது. அவ்விரண்டிலும் தன் உள்ளத்தை இறக்கிவைத்துக் கொண்டிருக்கிறார் வசந்தராசன். காட்டு மூலிகைபோல் கண்டெடுக்காது மாதவரக் காட்டுக்குள் மறைநது கிடக்கும் இந்த மழை நனைத்த மரபுக்கவிஞனுக்கு விண்வெளி தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை!

    (தொடரும்)

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 5

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 5

    முனைவர் ச. சுப்பிரமணியன்

     ‘நீ’தான் கவிதை!
    (துரை. வசந்தராசனின் கவிதைகளில் உத்தியால் சிறக்கும் உள்ளடக்கம்)

    முன்னுரை

    காட்டு மூலிகைபோல் கண்டெடுக்க முடியாமல் ஓட்டைக் குடிசைகளில் உயிர்வாழும் நடைப்பிணங்கள்” என்னும் ஓர் வரி நா.காமராசன் எழுதிய ‘கறுப்புமலர்கள்’ என்ற நூலில் வரும். மலைவாழ் பனியர் குல மக்களின் அவலத்தைப் பாடிய அந்த வரிகளை நான் படிக்கிறபோது வெளி உலகத்துக்குத் தெரியாமல் இருக்கும் கவிதை வல்லாளர்கள் சிலர் என் நினைவுக்கு வருவார்கள். தமிழ்நாட்டில் மருந்துக்கடைகள்போல் கவிஞர் இலட்சக்கணக்கில் இருந்தாலும்  கவிதைகள் கோவாக்சின் மருந்துபோலக் குறைவாகத்தான் கிடைக்கின்றன என்பது புகார் இல்லாமலேயே புலப்பட்ட உண்மை. அந்தக் கோவாக்சின் துளிகளில் ஒரு துளியாக முகநூலில் தன் முகம் காட்டுபவர் தம்பி வசந்தராசன்!. ‘பண்ணைக் கவிக்கோ என எல்லார் எண்ணத்திலும் இனிப்பவர் அவர்.!   அமர்ந்து படிக்க வேண்டிய அன்னாரது கவிதைகளைப் பலரும் நடந்து கொண்டே படித்து வீடு வந்து சேருமுன் ‘விரலாலே’யே விமர்சனமும் செய்து முடித்துவிடுகிறார்கள். அது அவர்கள் உரிமை. கவிதை என்றால் செறிவு, அழகு, எளிமை, உறுதியான கட்டுமானம் என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கும் இந்த எழுபத்தாறு வயது முதியவன் காலங்கடந்து கண்டெடுத்த என் தம்பி வசந்தனின் கவிதைளைப் பல்லில்லாமலேயே படித்துச் சுவைக்கிறேன். சுவைத்ததைப் பந்தி வைக்கிறேன்.! இது எனக்குப் பிடித்த பந்தி! உங்களுக்கும் பிடித்தால் பெருமை எனக்கன்று, வசந்தனுக்கு! பந்தியில் பரிமாறியவன் மட்டுமே நான். நெஞ்சத்து மடப்பள்ளியில் சீர் அரிசியை கவிதைப் பிரசாதமாக்கியவன் அவன் என்பதால்!

    கவிதைக் கட்டுமானம் என்றால் என்ன?

    வீடுகள் பலவகையான கட்டுமானங்களைக் கொண்டவை. ஒவ்வொரு வீட்டின் கட்டுமானமும் தனித்தன்மை உடையன. குடிசைக்கு ஒரு கட்டுமானம். தொகுப்பு வீட்டுக்கு ஒரு கட்டுமானம். தேவைக்கு ஒரு கட்டுமானம் அடக்கத்திற்கு ஒரு கட்டுமானம். ஆடம்பரத்திற்கு ஒரு கட்டுமானம். அவரவர் பொருளாதார வலிமைக்கு ஏற்பவும் இக்கட்டுமானம் மாறுபடுவதுண்டு. வாடகைக்கு விடுகிற வீடுகள் என்றால் அந்தக் கட்டுமானமே தனி!. புதுக்கவிதை உள்ளிட்ட அத்தனைக் கவிதைகளுக்கும் இது பொருந்தும். வீடுகளில் ஒரு கட்டுமானத்தை மற்றொரு கட்டுமானத்தோடு ஒப்பிடுவது அறியாமை. காரணம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வலுவான  பொருளாதார மற்றும் ரசனையாகிய காரணிகளின் பின்னால் வடிவமைக்கப்படுகிறது. கவிதையிலும் ஒன்றினை மற்றொன்றோடு ஒபபிட்டு மதிப்பிடுவது நெறியன்று. சங்கச் சான்றோர்கள் அவர்தம்  வெளிப்பாட்டுக்குப் பெரும்பாலும் ஆசிரியப்பாவையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். காரணம் பாடுபொருள் அகம் புறம் என்னும் இரண்டு மட்டுமே ஆனதால். இளங்கோ தன் கதைக்குத் தேர்ந்தேடுத்துக் கொண்ட வடிவம் ஆசிரியப்பா. அதன் வடிவம் பல இடங்களில் கற்பாருக்குச் சோர்வு தரும் எனக்கருதியோ என்னவோ வரிப்பாடல்களையும் குரவைப் பாடல்களையும் இணைத்துக் கொள்கிறார். இந்த நெறியைப் பாஞ்சாலி சபதத்தில் மகாகவி பாரதியும் வீரத்தாய் காவியத்தில் பாவேந்தரும் பின்பற்றுகின்றனர் பொருண்மைக்கேற்ற வடிவம் என்பதுதான் தமழ்க்கவிதைகளின் வடிவக்கோட்பாடு. இதில் இன்னொரு நுண்ணியமும் இருக்கிறது. அண்ணாமலை ரெட்டியார் எழுதித் தற்போது அச்சில் வந்திருக்கும் காவடிச்சிந்து இருபத்து மூன்று பாடல்களும் இருபத்து மூன்று தனித்தனிச் சந்தத்தைத் தமக்கென கொண்டவை. எழுத்து வடிவம் சிந்தாக இருந்தாலும் இசைவடிவம் இன்னும் நுண்ணியமாகிறது என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். கம்பராமாயணத்தை ஆசிரியப்பாவில் எழுதியிருந்தாலோ சீவகசிந்தாமணியை வெண்பாவில் எழுதியிருந்தாலோ அவ்விலக்கியங்கள் இத்தகைய வெற்றியைப் பெற்றிருக்க முடியாது. இந்தப் பின்புலத்தில் தம்பி வசந்தராசன் எழுதியிருக்கும் ஒரு கவிதையின் உள்ளடக்கமும் கட்டுமானமும் எப்படி இரண்டறக் கலந்து நிற்கிறது என்பதை இக்கட்டுரை சுருக்கமாக ஆராய முனைகிறது.

    முன்னிலைப் பரவல் என்றால் என்ன?

    இறைவனையோ பாட்டுடைத் தலைவரையோ, தலைவியையோ இயற்கைப் பொருள்களையோ படர்க்கையில் வைத்துப் பாடுவதே பெருவழக்கு.  சில நேர்வுகளில் வெளிப்பாட்டின் வேகம் குறைந்துவிடுகிறது என்றோ, உள்ளத்துக் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் சரியான முறையில் படர்க்கை நிலை வெளிப்பாட்டில் முழுமையாக கொண்டுவரவியலவில்லை என்று நினைத்தாலோ படைப்பாளனின் எண்ணவோட்டத்தினாலோ அவறறையெல்லாம் முன்னிலையிலேயே வைததுப் பாடி விடுவது என்பது  ஓர் இலக்கிய வெளிப்பாடடு மரபு. அல்லது இலக்கிய வெளிப்பாட்டு உத்தி.

    கவிதைகள் சிறப்பது உத்திகளால்.

    முல்லைக்குத் தேரளித்த பாரியை இப்படிப் பாடுகிறார் புலவர் ஒருவர்.

    “பூத்தலை அறாஅப் புனைக்கொடி முல்லை
    நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
    கறங்குமணி நெடுந்தேர் கொள்கென கொடுத்த
    பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர்”

    என்னும் வரிகளில் முல்லையின் பாட இயலாமை  படர்க்கையில் பாடப்பட்டிருப்பது காண்க.  பாடுபவர்க்கே பரிசளித்துப் பழக்கப்பட்ட மரபில் பாடுதற்கு நாக்கில்லா முல்லைக்குத் தேர்கொடுத்ததே வள்ளன்மைக்குப் பெருமை என்பதுதான் பாட்டின் சாரம். இன்னொரு புலவர் பாடுகிறார். ‘கொய்வார் இன்றி முல்லை வாடுகிறது’ என்பதைக் கருத்திற் கொண்டு அதனை முன்னிலையாக்கிப் பாடுகிறார்

    “இளையோர் கொய்யார்! வளையோர் சூடார்
    நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கி
    பாணன் சூடான், பாணினி அணியாள்.
    வல்வேல் சாத்தன் மாயந்த பின்றை
    முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே!”

    “முல்லையே நீ இப்போது பூத்து என்ன பயன்? வலிமை வாய்ந்த வேலையுடைய சாத்தன் மறைந்து போனான். அதனால் அமங்கலம் நிலவுகிறது நாடடில்! உன்னை இளையவர்கள பறிக்க மாட்டார்கள். வளைசூடிய இளம்பெண்களும் அணிய மாட்;டார்கள். யாழின் வளைவுகொண்டு ஒருபகுதியால் உனனை பாணனும் கொய்ய மாடடான். அதனால் பாணினியும் அணியமாட்டாள்! இந்த நிலையில் ஒல்லையூர் நாட்டில் நீ பூத்தனையோ? எனபதுதான் உள்ளடக்கம். உள்ளத்து எண்ணங்களைப் படர்க்கையில் சொன்னவர், முல்லையை நோக்கிய வினாவையும் ‘முல்லையும் பூத்ததே! எனப் படர்க்கையில் சொல்லியிருக்கலாம். அவர் அதனை விரும்பாமல் ‘முல்லையும் பூத்தியோ?’ என முன்னிலையில் விளித்துச் சொன்னது காண்க. முன்னிலைப் பரவலாகிய இந்த நெறி காலங்காலமாகத் தமிழ் இலக்கியப் படைப்புலகில் அதாவது கவிதையுலகில் படிந்துவருகிறது..

    மெல்லிசைப் பாடல்களில் முன்னிலை உத்தி!

    “நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என்பதும் ஒரு முன்னிலைப் பரவல். ‘நீயல்லால் தெய்வமில்லை’ என்பதும் ஒரு முன்னிலைப் பரவல். ‘கற்பனை எனறாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்பதும் ஒரு முன்னிலைப் பரவலே! இன்னொரு வகையான முன்னிலைப் பரவல் இப்படி அமைந்திருப்பதை அனைவரும் அறிந்திருக்கலாம். ‘ காலத்தை வென்றவன் நீ! காவியமானவன் நீ! வேதனை தீர்த்தவன் விழிகளில் நிறைந்தவன் வெற்றித்திருமகன் நீ’ “அன்புத் தெய்வம் நீ எங்கள் அன்னைவடிவம் நீ ….காமதேனு கற்பகம் நீயே! கோதையர் வணங்கும் குலமகள் நீயே!” ‘காலையும் நீயே மாலையும் நீயே! காற்றும் நீயே! கடலும் நீயே! ஆலய மணிவாய் ஓசையும் நீயே! அருள் வடிவாகும் தெய்வமும் நீயே!  “அமிழ்தாய் ஆழ்ந்த விதானம் நீ! அழகே நாயகி! விஷ்ணுவின் மோகினி அண்ட சராசர நிழல் நீ! வைகுண்ட நிவாஸினி என் தமிழ் நீ! என்பன போன்ற மெல்லிசைப் பாடல்களிலும் ‘நீ’ உததியால் பாடல்கள் சிறந்தன என்பது வரலாறு.

    புறத்திணையுள்  பாடாண் திணை

    தொல்காப்பியப் புறத்திணை பெரும்பாலும் மனித மதிப்புக்களையே தனது கருத்திற் கொண்டு அமைந்திருக்கிறது. போர்பற்றிப் பாட வேண்டிய புறத்திணை, புகழுக்கான காரணங்களைப் பாடுவதையும் அதன் பகுதிகளுள் ஒன்றாக்கியிருக்கிறது.  அத்தகைய புறவொழுக்கத்தைத்தான் ‘பாடாண் பகுதி’ எனக் குறித்தனர்;. இப்பாடாண்திணைப் பாடல்கள் முன்னிலையிலும் படர்க்கையிலும் அமையும். இதற்கான சான்றுகள் சங்க இலக்கியத்துள் பல உண்டு. எடுத்துக்காட்டாக,

    “கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி! நின்
    அசைவில் நோன்தாள் நசைவளன் ஏத்தி
    நாள்தொறும் நன்கலம் களிற்றொடு கொணர்ந்து,
    கூடுவிளங்குவியன்நகா;, பரிசில் முற்றளிப்ப
    பீடில் மன்னா; புகழ்ச்சி வேண்டி
    செய்யா கூறிக் கிளத்தல்
    எய்யாதாகின்று எம் சிறு செந்நாவே”

    ‘கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி!’ என வன்பரணா;, கண்டீரக் கோப்பெரு நள்ளியை முன்னிலைப்படுத்திப் பாடியிருக்கிறார்  இதனைப் போன்றே கோவூர்க் கிழார் ,

    “குணதிசை நின்று குடமுதல் செலினும்
    குடதிசை நின்று குணமுதல் செலினும்
    வடதிசை நின்று தென்வயின் செலினும்
    தென்திசை நின்று குறுகாது நீடினும்
    யாண்டும் நிற்க, வள்ளி., யாம்
    வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே”

    சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை,‘யாம்; வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே’ எனப் படர்க்கையில் வைத்துப் பாடியிருக்கிறார்.

    “விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும்
    அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
    திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
    மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
    அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
    திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ;
    ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
    மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
    நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
    புலமும், பூவனும், நாற்றமும், நீ;
    வலன் உயர் எழிலியும், மாக விசும்பும்,
    நிலனும், நீடிய இமயமும் நீ!.

    என்னும்; பரிபாடலில் திருமாலின் இலக்கணங்களாகிய  அறமும் அளியும் மறனும் அணங்கும் திங்களு; ஞாயிறும் அரனும அயனும்  அவர் செய்தொழிலும் விசும்பு முதலிய பூதமுமாகிய எல்லாப் பொருளும அவனே என்னும் கருத்தினை முன்னிலையாக்கிக் கூறுதல் காண்க.

     தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
    கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
    அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
    வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
    வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
    அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;  (பரிபாடல்)

    என்னும் கடுவன் இளவெயினனார் பாடலிலும்  இயற்கையாற்றல்கள் அத்தனையும் ‘நீ’ என்னும் ஒரு சொல்லால் குறித்திருப்பது காணலாம்.

    வாலி தொடங்கி பாரதி வரை

    வசந்தராசன் கவிதைகளில் உத்தியால் சிறக்கும் உள்ளடக்கம் பற்றி ஆராயும் இந்தக் கட்டுரையில் அது தொடர்பான முன்னுரை சற்று நீண்டிருப்பது போல் தோன்றக்கூடும்.  காரணம் நீட்சி என்பது மரபின் தொடர்ச்சி. இந்த வீடு இன்றைக்கு என் வீடு, நேற்றைக்குத் தந்தை வீடு, அதற்கு முன் பாட்டன் வீடு, அவருக்கு முன் பூட்டன் வீடு என்று சொன்னால்தானே தற்கால வீட்டின் வழிவழி வந்த பழம்பெருமை புலப்படும்? வசந்தராசன் சிந்தனையில் வந்த மரபு அவரையும் அறியாது வந்து விழுந்த மரபு என்பதுதான் கட்டுரையின் சாரம். அந்த மரபே உத்தியாகி உள்ளடக்கத்தை மேலும் சிறக்க வைக்கிறது என்பதுதான் கட்டுரை சொல்ல வந்த சேதி!.

    “ஏவு கூர் வாளியால்  எய்து நாய் அடியனேன்
    ஆவிபோம் வேளைவாய் அறிவு தந்து அருளினாய்!
    மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ!  மற்றும் நீ!
    பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ” (கம்ப 4063)

    என்று வாலி இராமனைப் போற்றுவதற்கும்

    “அப்பன் நீ, அம்மை நீ, ஐய னும் நீ,

    அன்பு உடைய மாமனும் மாமி யும் நீ,
    ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,

    ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ,
    துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,

    துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
    இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ,

    இறைவன் நீ ஏறுஊர்ந்த செல்வன் நீயே.

    என்று அப்பர் தாணடகம் பாடுதற்கும்

    “மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
    எண்ணும் நீ எழுத்தும் நீ இசைத்த பண் எழுத்தும் நீ
    கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ
    நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் “.

    என்று சிவவாக்கியர் தம் தத்துவத்தைப் பதிவு செய்வதற்கும்

    அறிவு நீ தருமம் நீ உள்ளம் நீ அதனிடை
    மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
    தோளிடை வன்பு நீ நெஞ்சத்து அன்பு நீ
    ஆலயந் தோறும் அணி பெற விளங்கும்
    தெய்வச் சிலையெலாம் தேவி இங்குனதே!

    என்று மகாகவி தன் சக்தியை வழிபடுதற்கும் இந்த ‘நீ’ என்னும் முன்னிலை உத்திதான் பயன்பட்டிருக்கிறது. அதனால் உள்ளடக்கம் சிறந்திருக்கிறது. ‘இதனால்தான் உள்ளடக்கம் சிறந்திருக்கிறது’ என்பதன்று. இந்த உத்தியினால் உள்ளடக்கச் சிறப்பு கூடியிருக்கிறது என்பதாம். இந்தப் பின்புலத்தில்தான் தம்பி வசந்தராசன் கலைஞரைப் பற்றிய கவிதை ஆராயப்படுகிறது, பாடாணில் தொடங்கிக் கையறுநிலையில் முடிந்திருக்கும் இந்தக் கவிதையை நான் படிக்கவில்லை. ஊரோடு வந்த உறவுபோல் விருத்தங்களின் சீரோடு பழகினேன்! சிலிர்த்துப் போனேன்!

    வாராக்கடனை வசூலித்தவன் நீ!

    பல்வகை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களில் ஒன்று ‘காய் காய் மா மா’ என்னும் அரையடி அமைப்பு. கொண்டது. கவிஞர் பலரும் இறுதி இரண்டு சீர்களை ‘மா மா’ எனக் கொள்வதால் தனித்தனி மாச்சீர்களுக்காக திக்குத் தெரியாமல் அலைந்து திரிகிறார்கள்.  அவர்கள் தேமாந்தண்பூவும் புளிமாந்தண்பூவும் கூவிளம் தண்பூவும் மா மா என்னும் இரண்டு இருசீர்களுக்குரியன என்பதை மறந்து விடுகிறார்கள். மேலும் மூவசைச்சீர்களை இரண்டு ஈரசைச்சீர்களாக ஆக்கலாம் என்னும் வித்தையும் தெரிவதில்லை. காரணம் முனைப்பு! சொற்கள் சீராகும். சீர்கள் வாய்பாட்டுக்குள் அடங்கும். அடங்க வேண்டும். இது மாறி, வாய்பாட்டைச் சீர்களுக்குள் அடக்கம் செய்து சீர்களைச் சொற்களுக்குள் தேடும் முயற்சிதான் இன்றைக்கு எண்சீர் விருத்தம் சவலை தட்டிப் போனதற்குக் காரணம். கவிஞன் எதனை எண்ணுகிறானோ அதனை அப்படியே கவித்துவம் பிசகாமல் கொட்டிவிட வேண்டும். பிறகு களையெடுக்க வேண்டும். களையே இல்லாமல் பயிர் செய்ய நினைத்தால் கவிதைப்பயிர் எப்படி வரும்? வளரும்? வசந்தராசன் கவிதைகளில் யாப்பமைதி என்பது தனித்த ஆய்வுக்குரியது. கலைஞரைப் பற்றி இந்த எண்சீர் விருத்தங்களில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய இடங்களைத் தவிர பிற அரையடிக்கான மூன்று மற்றும் நான்காம் சீர்களில் முழுமையான சொற்கள் இல்லை என்பதை நோக்குதல் வேண்டும். இது இயல்பாக அமைவது. இட்டுக்கட்டுவது அன்று. உணர்ச்சியும் உணர்வும் மொழிக்கட்டமைப்புக்குள் வரும்போது யாப்பு தானாக அமைந்துவிடும் என்பதற்கு வசந்தனின் கவிதைகள் போதுமான சான்றாகும்.

    பார்ப்புகட்குக் குடைபிடிக்கும் பறவைத் தாய்நீ !
    பாவலரைக் கூர்தீட்டும் உலைக்க ளம்நீ !
    வேர்த்திருந்தால் சிறகுகளால் விசிறு வாய்நீ !
    வேர்க்கருணை நீர்சுரக்கும் ஊற்றுக் கண்நீ !
    கார்திகைக்கும் வானம்நீ ! கதிர வன்நீ !
    கண்மலரில் கருணைத்தேன் தேக்கி வைத்துச்
    சேர்த்தூட்டும் காவலன்நீ ! சேயும் நீதான் !
    செத்துதினம் பிழைப்போர்க்கோ கடவு ளும்நீ !

    திராவிடத்தின் தேர்க்கால்நீ ! தன்மா னம்நீ !
    திராவிடத்துப் பண்பாட்டை மீட்டெ டுத்த
    வராக்கடனை வசூலித்த வங்கி யும்நீ !
    வரலாற்றைத் திருத்தவந்த வாலி பம்நீ !
    இராசராச சோழன்நீ ! ராப்ப கல்நீ !
    இரகசியமே இல்லாத வள்ளு வம்நீ !
    திராணிகளின் திகைப்பும்நீ ! திருத்த மும்நீ |
    தெம்புதரும் நெஞ்சுக்கு நீதி யும்நீ !

    தமிழகத்தின் வரைபடம்நீ ! தமிழர்க் கெல்லாம்
    தாதுபுஷ்டி லேகியம்நீ ! உண்மை சொன்னால்
    உமர்கய்யாம் போதைநீ ! கரக ரத்த
    உடன்பிறப்பால் உயிர்சுண்ட திசைகள் எட்டைக்
    கவர்ந்திழுத்த காந்தம்நீ ! உன்போல் யாரோ
    கைவிரலில் போதிமரக் காட்டைச் செய்தார் ?
    உவந்திருக்கத் தன்மானக் கோட்டை தந்தார்?
    உயிர்த்திருக்கும் தன்மான உருவம் நீ !ஆம் !

    ஒவ்வொரு அசையாக நோக்கிச் சுவைக்க வேண்டிய நிலையில் வசந்தனின் பாட்டு அமைந்திருக்கிறது.  எனனை அவர் அறியார்.  அவரை நான் அறியேன். முகநூற் வயல் வரப்பில் நின்று ஒரு கவிதை கிட்டுமா என நாற்றிசையிலும் என் பார்வை அலைந்தபோது நான் ஒரு கவிதைக் காடடுக்குள் இருப்பதை உணர்ந்தேன். அந்தக் காட்டுக்குச் சொந்தமானவர் வசந்தன் என்பது எனக்கு தாமதமாக வந்த செய்தி!.

    ‘பார்ப்பு’ என்னும் தொடக்கமே இவர் ஒரு மரபுக காவலர் என்பதைக் காட்டிவிடுகிறது. ‘பார்ப்புகட்குக் குடைபிடிக்கும் பறவைத் தாய்நீ !என்னும் தொடரில் பறவைகளின் குஞ்சுகளுக்குப் பார்ப்பு என்பது பெயர் என்னும் மரபியல் நூற்பாவை நினைவுபடுத்திவிடுகிறார். யாப்பினை முறையாகக் கற்கும் வாய்ப்பின்றித் தன்னுடைய இறுதிக்காலம் வரை தான் முறையாகத் தமிழ் கற்கவில்லையே என்னும் ஏக்கத்தோடு மறைந்தவர் கலைஞர். ஆனால் தமிழகத்துக் கவிதைச் சிற்பிகள் எல்லாம் அவருடைய கவிதைவரிகளைக் கண்டு தம்மைச் செப்பம் செய்து கொண்டார்கள், செதுக்கிக் கொணடார்கள் என்பது மேடைக்கவிதை வரலாறு எழுதிவைத்துள்ள பின்குறிப்பு. ‘பாவலரைக் கூர்தீட்டும் உலைக்களம் நீ! என்னும் வரிகளின் உண்மைப் பொருளை உணர்ந்து சுவைக்க வேண்டுமானால் அக்காலத்தில் கலைஞர் தலைமையில் நடைபெற்ற கவியரங்குகளை இணையத்தில் காணவேண்டும்!. கார் மழையாகுமே தவிர வானம் மழையாகாது. ‘வான்சிறப்பு’ என்றால் வானத்தின் சிறப்பன்று மழையின் சிறப்பு.  ‘கார்’ என்பது கலைஞரால் கூர் தீட்டப் பெற்ற கவிஞர் கூட்டத்திற்கான உருவகம் என்றால்  கலைஞர் வானமாகிறார். வானம் கறுக்காது. பெய்யாது. ஆனால் கலைஞராகிய வானம் கொட்டுகிறது கவிதை மழையை! பெய்தும் வெளுக்காத கார், நீல வானத்தைக் கண்டு திகைக்கிறது என்கிறார். ‘கார் திகைக்கும் வானம்’ கலைஞராம்! தண்ணீருக்கே தாகம்! காற்றுக்கே வேர்வை! என்று கூன்விழுந்த புதுக்கவிதைக் கூறுகளைக் கண்டே களைத்துப் போன எனக்குக் ‘கார் திகைக்கும் வானம் கலைஞர்’ என்னும் தொடர் மருந்தால் கலைக்க  முடியாத மயக்கததைத் தந்திருக்கிறது. இனி கார்த்திகைக்கும் வானம்’ என்று கார்த்திகையைத் மழைத்திங்களாகக் கொண்டால் ‘கவிஞர் அனைவர்க்கும் கலைஞர் பேராசிரியர்’ என்பது விளங்கிக் கொள்ளலாம். ஏனைய திங்கள்களுக்கு மட்டுமன்று கார்த்திகைக்கும் கலைஞர்தான் வானம் என்பது நயம். பிரிமொழிச் சிலேடையை இப்படித்தான் கையாள வேண்டும்!

    வாராக்கடனை வசூலிக்க முடியாமல் அரசு திணறுகிறது என்பது தினச்செய்தி. பணத்தை வசூலிக்கத் திணறும் ஒரு கட்டமைப்பில் இனத்தை அதன் பணபாட்டை மீட்டெடுக்கும் பணியைக் கலைஞர் செய்திருக்கிறார். திராவிட இன மீட்பு என்பது கொள்ளையக்கப்பட்ட கட்டித் தங்கத்தை ஏழை தனியொருவனாக நின்று மீட்பது போன்றது.. பெரியார், அண்ணா என்னும் பெரியோர்கள் வழி நின்று திராவிடப் பண்பாடு என்னும் வாராக் கடனை மீட்டெடுத்த இனப்போராளி கலைஞர். இநத உருவகப் பாடடில் இனனொரு சேதியையும் இலாவகமாகச் சொல்லுகிறார் வசந்தன்.  அது திருக்குறள் பற்றியது. திருக்குறளில் எல்லாருக்கும் எல்லாம் தெரியும். புரியும். ஆனால் துறவறவியல் புரியாது. அதனால் அது மந்தணத்தை (இரகசியம்) உள்ளடக்கியது. ஆனால் கலைஞரின் கவிதையும் எழுத்தும் பேச்சும்  திறந்த புத்தகம். உப்பைப் போல் எல்லாருக்கும் உரியது, எவருக்கும் புரிவது!. ‘ரகசியமே இல்லாத வள்ளுவம் நீ!’ என்று இவர் பாடுவது குறளோவியத்தை உள்ளடக்கியும் என்பது அந்நூலைப் படித்தார்ககுப் புலனாம்.!

    தமிழகத்தின் பூகோளத்தைத் தம்முடைய ‘கால்களால்’ வரைந்தவர்கள் இருவர். ஒருவர் பெருந்தலைவர் காமராசர். மற்றொருவர் கலைஞர். ‘பூகோளம்’ என்பது ஆயிரத்துத் தொள்ளாயிர்த்து அறுபத்து ஏழுக்கு முன்பாகத் தமிழகப் பள்ளிகளில் புவியியல் பாடத்திற்கு வைக்கப்படடிருந்த பெயர். உண்மையில் அதற்குப் ‘பூமியாகிய கோளம்’ என்பதுதான் பொருள். ஆனால் புவியியல் என்பது ஆகுபெயராக அப்பாடத்தை உணர்த்தியதாம். பூகோளத்தில் ஆகுபெயரை அறிந்தவர்கள் நாம். காமராசரும் கலைஞரும் தமிழகத்துச் சாலைகளை வரைபடம் பார்த்து அறிந்தவர்கள் அல்லர். தலைச்சாலையிலிருந்து பிரியும் கிளைச்சாலை எந்த ஊருக்குப் போகும் என்பதை அவர்கள சென்னையிலிருந்தே சொல்லிவிடுவார்கள். மதகுகளின் எண்ணிக்கை அவர்களுக்குத் தெரியாது. ஆனால் தடுப்பணை எந்தெந்த ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளன என்பது பற்றி அதிகாரிகளுக்கு வகுப்பெடுப்பார்கள். எந்த மாவட்டத்தில் எத்தனை  ஏக்கரில் என்ன பயிர் விளையும் என்பது வேளாண் கல்லூரிக்குப் போகாத அந்தப் பெருமக்கள் விளக்கமளிப்பார்கள். இந்த இரு தலைவர்களும் செல்லாத ஊரில்லை. ஊர்களை மட்டுமன்று அந்த ஊர்களில் உள்ள தம் நண்பர்களை எப்போது சென்றாலும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அளப்பரிய நினைவாற்றல் கொண்டவர்கள்.  ‘தமிழகத்தின் வரைபடமே! என்னும் தொடர் கலைஞரின் பொதுவாழ்வுப் பயணத்தைச் சித்திரிக்கும் ஆத்திசூடி!  அருமை! கவிதை சுருக்கமானது! இது சுருக்கத்திலும் சுருக்கம்!

    உணர்வுகளுக்குப் பெருந்தமனி நீ!

    யாப்பமைக் கவிதைகளை எழுதுவார்க்கு முதல் எதுகையிலேயே தெரிந்து விடும் ‘இந்தப் பாட்டு என்ன கதிக்கு ஆளாகும்?’ என்று! கருத்துக்களும் சீர்களும் ஓரளவு புலப்பட்ட நிலையில் கைக்குக் கிட்டிவிடும் எதுகையால் கவிஞன் மகிழ்கிறானோ இல்லையோ கவிதைக்கு அன்றைக்குத் தீபாவளி! எண்சீர் விருத்தங்களில் எதுகையால் வெற்றி பெற்ற ஒரே கவிஞர் பாவேந்தரே!. ‘விருத்தத்தில் வெற்றிபெற்றார் பாவேந்தர்’ என்று சுரதா பாடியதற்குக் காரணம் பாவேந்தரின் எண்சீர் விருத்தங்களே. இந்த விருத்த வித்தையின் அனைத்து வேடிக்கைகளையும் செய்து காட்டியிருக்கிறார் வசந்தன்.  புதிதாக விருத்தம் எழுதுகிற அலலது எழுத விரும்புகிற அன்பர்கள் குறைந்த அளவு ஒரு நூறு விருத்தங்களையாவது மனப்பாடம் செய்திருக்க வேண்டும். கவிதை ஓட்டம் அப்போதுதான கைகூடும். சீர்கள் இறவாணத்தில் இல்லை என்பதையும்  கவிஞர் பிறரின் படைப்புக்களில் இருக்கின்றன என்பதையும் படைப்பாளர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ‘விழிப்புரை’ என்னும் சொல்லை இரண்டாவது சீரில் வைத்த வசந்தன் அதற்கான எதுகையை அடுத்த சீரில் ‘பொழிப்புரை’ என்று எழுதுவதும், பரப்புரை,  இடித்துரை,  படித்துறை என இயைபு நோக்கி எதுகை அமைப்பதும் கவிதை வலலாளர்களுக்கன்றிப் பிறரக்குக் கிட்டாத வரமாம். அதனால் இவர் வரம்பெற்ற வசந்தன்!

    “பெரியாரின் விழிப்புரைநீ !அண்ணா எங்கள்
    பேரறிஞர் பொழிப்புரைநீ ! திரைப்ப டத்தின்
    சரியான பரப்புரைநீ !சனாத னத்துச்
    சழக்கர்களின் இடித்துரைநீ ! சமூகத் திற்காய்
    விரிந்தமடி படித்துறைநீ ! வீணர் கட்கும்
    விளையாட்டுக் கடிந்துரைநீ ! வெற்றி யே நீ !
    புரிந்தவர்க்கோ புன்னகைநீ !புரியா தார்க்கோ
    புதிர்தான்நீ ! ஆனாலும் புதையல் நீதான் !

    அகரத்தைச் சிகரமாக்கும் அற்பு தம்நீ!
    அருந்தொண்டர் தோள்சுமக்கும் பெருந்தொண் டன்நீ !
    தகரத்தைத் தங்கமாக்கும் ரசவா தம்நீ !
    தமிழ்நிலத்தின் உயிர்முகம்நீ ! நிகழ்கா லத்தின்
    நிகரற்ற இலக்கியம்நீ ! நிலைத்து வாழும்
    நெஞ்சுக்கு நீதியும் நீ !என்போன் றோர்க்கு
    உகந்துவரும் உயிரெழுத்தே நீதான் !எங்கள்
    உணர்வுகளின் பெருந்தமனி நீயே தானே !

    பெரியார் தட்டி எழுப்பிய பிறகுதான் தமிழினம் தான் தூங்கிவிட்டதை அறிந்தது. கற்றவர்களுக்கு மடல் எழுதினார் அண்ணா! பெரியாரின் மூலத்திற்குப் பதவுரையை  அண்ணா எழுத அந்தப் பதவுரைக்குப் பொழிப்புரை எழுதி உடன்பிறப்புக்களைச் சிந்திக்க வைத்தவர் கலைஞர். கலைஞரின் எதிரிகள் யாராக இருந்தாலும் கோபாலபுரம் வீட்டில் ஒரு முறை அவரை நேரில் சந்தித்துவிட்டு வெளியே வருகிறபோது இதயத்தைச் ‘சுகமாகத் தொலைத்து’விட்டுத்  திரும்புவார்கள் என்பது அந்த வீட்டில் இன்னும் வைக்கப்படாத கல்வெட்டுச் செய்தி!. கலைஞரின் மனத்தை அறிவது அவ்வளவு எளிதன்று. அவர் அணிந்திருந்த கண்ணாடி கறுப்பாயினும் பிறரை எளிதில் படம்பிடித்துவிடும் ஆற்றல் வாய்ந்தது. அதனால்தான வசந்தன் அவரைப் புதிராகவும் பார்க்கிறார். புதையலாகவும் கண்டெடுக்கிறார்.

    ‘அருந்தொண்டன் தோள் சுமக்கும்’ என்னும்  இரட்டுற மொழிதல் மிகச் சிறப்பான வரிகள். தொண்டன் அவரைச் சுமக்கின்றான். தொண்டனை அவர் சுமக்கின்றார். முன்னதற்கு விளக்கம் தேவையில்லை. பின்னது பலராலும் அறியப்படாத செய்தி. கலைஞருக்குப பெருஞ்செல்வமே அவரது நினைவாற்றல்தான். முன்பே சொன்னதுபோல் எந்தச் சிற்றூருக்குச் சென்றாலும் அங்கேயிருக்கும் கடைசித் தொண்டனையும் அடையாளம் கண்டு பெயர் சொல்லி அழைக்கும் அசுர நினைவாற்றல் உடையவர் கலைஞர். ஒரு தலைவனைச் சுமக்கின்றவன தொண்டனாகிறான். தொண்டர்கள் அனைவரையும் சுமக்கின்றவன் பெருந்தொண்டனாகிறான். ‘பெருமை’ என்பதற்கு என்னால் இப்படித்தான்  பொருள்படுத்திக் கொள்ள முடிகிறது.

    எழுப்பியவனும் நீ! இழுத்து வந்தவனும் நீ!

    பாடப்படுபவன் பெருமை சொல்வதோடு அமைந்துவிடக் கூடாது ஒரு பாடாண்திணைப் பாட்டு! அழுது புலம்புவதோடு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுவிடக் கூடாது ஒரு கையறுநிலைப் பாட்டு. பரணர் பாட்டுப் போல் வரலாறு சொல்ல வேண்டும். வாழ்க்கை நெறி சொல்ல வேண்டும்.  அரசியல் சொல்ல வேண்டும். அக்காலச் சமுதாயம் சொல்ல வேண்டும். அனைத்தும் சொல்ல வேண்டும். வசந்தன் பாடல் அத்தனையும் மொத்தமாகச் சொல்கிற அற்புதக் களஞ்சியம். கலைஞரின் தொண்டைக்குரலைப் பாடியவர் பலர். அவர் அரசியல் தொண்டினைச் சுவைகுன்றாப் பாடலில் பதிவு செய்திருப்பவர் ஒரு சிலரே. அச்சிலருள் வசந்தனும் ஒருவர்.

    “குடிசைகளின் கோபுரம்நீ ! பாதை யோரக்
    கும்பிகளின் கூழும்நீ ! தனியு டைமைக்(குக்)
    கடிவாளக் கயிறும்நீ !பொதுவு டைமைக்
    கனவுகளின் மெய்ப்பொருள்நீ !சமூக நீதி
    வடிவமைப்பின் விடியல்நீ ! வரலாற் றுக்கோ
    வள்ளுவரின் கோட்டம்நீ ! கண்துஞ் சாது
    விடியலுக்காய்க் கதிரவனை எழுப்பி வைத்த
    வீரியம்நீ ! வீரன்நீ !வெற்றி யும்நீ !”

    குடிசைகளைப் பாடியவர்கள் இருந்தார்கள். ஆனால் குடிசைகளை வீடாக மாற்றும் சிந்தனையை ‘அரசியல் கவிஞர்’ கலைஞர்தான் முன்னெடுத்தார். குடிசைமாற்று வாரியத்தை அமைத்து  நாடடுக்கே வழிகாட்டியானார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து நாளில் போக்குவரத்துக் கழகங்களை நாடடுடைமையாக்கினார் கலைஞர். பொதுவுடைமைக் கனவுகளின் மெய்ப்பொருள் ஆனார்!, இன்றைக்கு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் அன்றைக்கு அனைத்துச் சாதியினரையும் ஒரே குடியிருப்பில் வைக்க பெரியார் சமத்துவபுரம் கண்ட பெரியார் கலைஞர். அந்த வரலாற்றைப் பாடிய நம் காலத்துப் பரணர் வசந்தன்!

    “நெருக்கடிக்கே நெருக்கடியைத் தந்த வன்நீ !
    நிமிர்ந்திருக்கத் தன்மானம் நெய்த வன்நீ !
    துருப்பிடிக்காத் தொண்டுள்ளத் தூய வன்நீ !
    தொலையாத எழுத்துக்குச் சொந்த மும்நீ !
    கருக்கரிவாள் கூர்ச்சொல்லின் கருப்பை நீ!வான்
    கார்மேகக் கருணைநீ ! கடலும் நீதான் !
    விருப்புற்று வந்தோர்க்கு நிதியும் நீதான் !
    விழுதுகளைத் தாங்குகின்ற வேரும் நீதான் !

    ஒருவருக்குப் பல வாரிசுகள் இருக்கலாம். ஆனால் கலைஞர் பலருக்கும் வாரிசாகத் திகழ்கிறார் என்பதுதான் கவிதை சொல்ல வரும் சேதி! கவிதை சொல்லப்படும் பொருளில் இல்லை. சொல்லப்படும் முறையில் இருக்கிறது. நெருக்கடிநிலை அமலில் இருந்த காலததில் அனைத்துவகையான ஊடகங்களும் தணிக்கைக்கு ஆளானபோது தணிக்கைக் குழுவின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவிய மந்திரக்காரன் கருணாநிதி! ‘வெங்காயம் உடல்நலததிற்கு நல்லது’ என்பது அன்றைய முரசொலி தலைப்புச் செய்தி!. தலைப்பை மட்டும் தணிக்கைக் குழு பாரத்தது. உள்ளடக்கத்தைக் கழகத் தொண்டன் புரிந்து கொணடான்.  நெருக்கடிக்கு நெருக்கடியைக் கலைஞர் தந்தது இப்படித்தான்!

    “இழிவகற்றி இருள்தின்ன பேனா வுக்குள்
    ஈரோட்டு மைபோட்ட செங்க திர்நீ !
    பழித்தவனைத் தாய்தடுத்தும் விடேன் என்ற
    பாவேந்தர் வழிநின்று வளர்ந்த வன்நீ !
    விழித்திருந்து விழித்திருந்து விடிய லையே
    இழுத்துவந்த அண்ணாவின் இதயம் நீ !உன்
    கழுத்துவரை அழுத்தங்கள் இருந்த போதும்
    கலங்காது தரைநடந்த கதிர வன்நீ !

    ‘இழிவகற்றி இருள் தின்ன’ என்பதை  ‘இருள் இழிவு அகற்றி’ என மாற்றியுரைக்க.  சமுதாயத்தின் பன்முக இழிவு இருளாக  உருவகம் செய்யப்பட்டது. இழிவாகிய இருளை அகற்ற ஈரோட்டு மைபோடப்பட்டது என்பதாம். ஈரோட்டு மை போடப்பட்டது கலைஞரின் பேனாவில் என்பதால், எழுதியே அகற்றியவர் என்பது பெறப்பட்டது. ‘கூவி வைப்போம விடியும் போது விடியட்டும்’ என்று திண்ணைக் கதை பேசியவர் அல்லர் கலைஞர். ‘தீ அணையாதா? தென்றல் வீசாதா? என்று விடியலுக்குக் காத்திருந்தவர் அவர்.  தமிழ்ச்சமுதாயத்தின் ஒவ்வொரு சிக்கலின் ஆழத்தையும் நன்கு புரிந்து கொண்டவர் அது தீர்கிறவரை மெய்வருத்தம் பாரார், கண்துஞ்சார். அதனால்தான் ‘விழித்திருந்து விழித்திருந்து விடியலையே இழுத்துவந்த அண்ணாவின் இதயம் நீ!’ என்கிறார் வசந்தன். ‘விடியலுக்காய்க் கதிரவனை எழுப்பி வைத்த வீரன்’ என்று முதற்பாட்டில் சொன்னவர், அவரை அங்கேயே அப்படியே விட்டுவிடாமல் கதிரவனோடு விடியலையும் கையோடு கொண்டுவந்தவர் என்று கவிதை பாடுகிறார். ‘தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு நந்த வனததிற்குள் நடந்து போனதாக’ வைரமுத்து எழுதுவார். விடியலின் கையை வலியப் பிடித்து இழுத்து வந்ததாக வசந்தன் கற்பனை செய்கிறார். வைரமுத்தின் கற்பனை அழகியல். வசந்தனின் கற்பனை நடப்பியல்!

    சுருக்குப்பை நிறைக்கவந்த உழவர் சந்தை நீ

    ஏசி அறையில் அமர்ந்து, கவிதை மாதிரி எழுதிக்கொண்டு பிறரைத் தொல்லைக்கு ஆளாக்குபவர் பலர். பட்டுக்கோட்டையைப் போல, கம்பதாசனைப் போல, தோழர் ஜீவா அவர்களைப் போல கே.சி.எஸ் அருணாசலத்தைப் போல மக்களில் ஒருவனாக இருந்து கொண்டு பாடுபவர் சிலர். ‘உழவர் சந்தை’ என்பது கலைஞரின் சிந்தனையில் பூத்த ஒரு சமுதாயத் திட்டம். நீண்ட சணல் சாக்கை விரித்து வைத்துப் பகல் முழுவதும் நடக்கின்ற விற்பனையில் நொண்டிக் கிழவியின் சுருக்குப்பையில் காசு விழும் சத்தம் பைக்கே கேட்காது. ஆனால் உழவர் சந்தை வந்தபிறகு கிழவியின் சுருக்குப்பை பேரப்பிள்ளைகளுக்கு அமுதசுரபியானது. இதனைச் சிந்திக்கிறார் வசந்தன்.

    “சுருக்குப்பை நிறைக்கவந்த உழவர் சந்தை !
    சுடர்விளக்காய் வீட்டுக்கோர் ஒளிவி ளக்கு!

    பொதுநன்மைக்கான மக்கள்நலத் திடட்மானாலும் ஒவ்வொரு தனிமனிதனும் மகிழ்ச்சிக்கு அது உதவினால்தான் முழுமையடையும். உழவர் சந்தை என்னும் பொதுநன்மை சார்ந்த திட்டம் இங்கே கிழவியின் சுருக்குப்பையை நிறைக்கிறது. “வெட்டவெளி உழவர் சந்தை வீட்டுக்கோர் விளக்கு!” அருமை! எழுபதுகளிலேயே மனிதனை மனிதன் வைத்து இழுக்கும் கொடுமைக்கு முடிவு கட்டிக் காலால் மிதிக்கின்ற ரிக்‌ஷாக்களை அரசுத் திட்டமாகச் செயல்படுத்தியும் மகளிர்க்கு இந்தியாவிலேயே முதன் முதலாகச் சொத்துரிமைக்குச் சட்டம் செய்தவரும் கலைஞரே!

    “இருப்பவனை இல்லாதோன் கையி ரண்டால்
    இழுத்துவந்த இழிநிலைக்குப் புதிய மாற்று ;
    பெருமையுடன் பெண்ணுக்கும் சமமாய்ப் பங்கு ;
    பெறுங்கல்வி இலவசம் முதல் தலை முறைக்கு !
    அருமையுடன் திட்டங்கள் செயல்ப டுத்தி
    ஆண்டவனும் நீதானே ! தமிழ்நாட் டுக்கு !

    என்று பாடுகிறார் வசந்தன். பொருளிருப்பவன் அமர்ந்திருக்கிறான். இல்லாத பொருளுக்காக, இருக்கின்ற கைகளால் இழுக்கிறானாம்!. இதில் என்ன சிறப்பு? பாடாண் திணை என்பது மன்னனின் தனிச்சிறப்புக்களைப் பாடுவது. நம்முடைய கவிஞர்கள் என்ன பாடுவார்கள் என்பதைக் கலைஞரைப் பற்றிய கவிதைகளைப் படித்தவர்கள் தெரிந்து கொள்ளலாம். அவருடைய நேர்வகிடு  பற்றிப் பாடுவார்கள். கரகரத்த குரலைப் பற்றிப் பாடுவார்கள். அவர் தோளில் போடும் நீண்ட துண்டு பற்றிப் பாடுவார்கள். பராசக்தி பற்றிப் பாடுவார்கள். மனோகராவை அவர்கள் மறப்பதே இல்லை. அவர் செய்த இவையெல்லாம் கவிதையில் இனிக்கும். ஆனால் அவருடைய சமுதாயப் பணிகளை எதிர்காலத்திற்கு அறிமுகப்படுத்தும் கவிதைகளில் செய்திகள் இருக்கும். கவிதை இருக்காது.  இனிக்காது. செய்திகளின் தொகுப்பு கவிதையாகாது. தகவல்களின் தொகுப்பு கவிதையாகாது. செய்தியைக் கவிதையாக்க முடியுமா? முடியும்? எப்படி? இப்படி! ‘சுருக்குப்பை நிறைக்க வந்த உழவர் சந்தை’ என்பதும் ஒரு செய்திதான்!. ஆனால் ஒரு மூதாட்டியைத் தோன்றா எழுவாயாக்கிச் செய்தியைக் கவிதையாக்குகிற வித்தை வசந்தனுக்கு கைவந்திருக்கிறது!.

    செயலகம் நீ!

    சமுதாய அக்கறையை, செய்ய வேண்டிய சமுதாயத் தொண்டுகளை அரசு பதவிகொண்டு நிறைவேற்றிய கலைஞரின் சாதனைகளைப் பாடிய வசந்தன் தொடர்ந்து  கலைஞருடைய பண்பாடு மற்றும் கலாச்சார மீட்புப் பணிகளையும் பாதுகாப்புப் பணிகளைப் பட்டியலிடுகிறார்.

    “குமரியிலே வள்ளுவன்நீ ! புகழே என்றும்
    குன்றாத பூம்புகார்நீ ! தந்தை தந்த
    திமிர்ந்தஞானப் பகுத்தறிவுச் செருக்கி ருந்தும்
    திருவாரூர்த் தேராய்நீ ! தேச மெங்கும்
    நிமிர்ந்திருக்கும் பாலமாய்நீ ! நெஞ்சைக் காக்கும்
    நூற்றாண்டு நூலகம்நீ ! அறிவின் ஆசான்
    அமர்ந்திருக்கும் சிலைமுன்னே செயல கம்நீ !
    அடடாவோ அத்தனையும் நீதான் !நீதான் !

    இந்தப் பட்டியலில் தன் நெஞ்சுக்கு நெருக்கமான பெரியாரையும் அண்ணாவையும் மறக்காமல் கலைஞர் செய்திருக்கும் பணிகளை நிரல்படுத்துகிறார். சில முரண்களைச் சாதுரியமாகச் சுட்டுகிறார். குறளோவியம் எழுதிக் குமரியில் வள்ளுவனுக்குச் சிலை வைத்த கலைஞர் திருவாரூர் தேரை ஒடச் செய்தார். “ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கிக் கிடக்கையிலே தேரோட்டம் உனக்கெதற்கு தியாகராசா? என்னும் கொள்கையுடையவர் பெரியார். அவருடைய ‘திமிர்ந்த ஞானச செருக்கு’ கலைஞரின் நெஞ்சுக்குள் இருந்தும் ஊர்ப்பணி கருதி தேர்ப்பணி செய்தார். “செந்தமிழ்ச செல்வி சிலப்பதிகாரத் தலைவி, வீரத் தமிழகத்தின் விடிவிளக்கு வெற்றிக் காவியத்தின் பேசும் பெண்தெய்வம்” என்று கலைஞராலேயே புகழப்பெற்ற கண்ணகி வாழ்ந்த பூம்புகாரை மீட்டுருவாக்கம் செய்தது, அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்தது ஆகிய செய்திகளை ‘நீ’ என்னும் முன்னிலையால் அடக்கிக் காட்டுகிறார். அறிவாளி அண்ணா நூலகம் அமைத்ததும் நோயாளிகளுக்காக அதனை மருத்துவமனையாக்கியதும் வரலாறு!

    உரசல்கள் இல்லாத உயிரெழுதது நீ!

    ‘தமிழகத்தின் வரைபடமே!’ என்று பாடியவர் பரிணாமத்தால் ‘திராவிடத்தின் வரைபடமே’ என்கிறார். கால்டுவெல்லைப் படிக்காதவர்களுக்கு இந்தக் கருத்து அவ்வளவாகப் புரிய வாய்ப்பில்லை. அவசர நிலைக்காலத்தில் அவர் முரசொலியில் எழுதிய ஒவ்வொரு உடன்பிறப்புக்கான மடலும் ஒவ்வொரு முனைவர்ப் பட்ட கருதுகோளாகலாம்!.

    “திராவிடத்தின் வரைபடமுன்கையெ ழுத்து!
    ……………………………………………………………|
    மிசாவுக்கோ நீமட்டும் ஆய்தெ ழுத்து !
    உரசல்க ளில்லாத உயிரெ ழுத்தே!
    உண்மையில்நீ தமிழ்நிலத்தின்பொன்னெ ழுத்து !”

    என்னும் வரிகளில் ‘உரசல்கள் இல்லாத உயிரெழுத்து’ என்பதுதான் கவிதை. தமிழெழுத்துக்களின் பிறப்புக்களை ஆராயும் தொல்காப்பியம் முதலில் உயிரெழுத்துக்களின் பிறப்புக்களை ஆராய்ந்து சொல்கிற முடிவு இதுதான். “உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் வாய்திறத்தல், நாவின் விளிம்பு நிலை, இதழ்குவித்தல் என்னும் முத்திறத்துக்குள அடங்கும்.” உச்சரரிப்பில் எத்தகைய  இடர்ப்பாடும் இல்லாத பிறப்புக்குரியன உயிரெழுத்து என்பதை ‘தத்தம் திரிபே சிறிய என்ப’ என்னும் விதிக்குள் அடக்கிக் காட்டுவார். கலைஞரின் பொதுவாழ்க்கையும் தமிழின் உயிரெழுத்துக்களின் உச்சரிப்பைப் போல் உரசல் இலலாதது. எவரையும் பகைத்துக் கொள்ளும் அல்லது உறழ்ந்து நோக்கும் போக்கு அவரிடம் காணாதது. காண முடியாதது. தன்னைக் கட்டமைப்பதிலும் தன் திறமையை, வளர்த்துக் கொள்வதிலும் தன்னைத் தானே பக்குவப்படுததிக் கொள்வதிலுமே முழுக்கவனத்தையும் செலுத்தியவர். வசந்தனின் பாடுபொருளில் நாம் கருணாநிதியைக் காணவில்லை. கலைஞரைத்தான் காணுகிறோம்  தனக்குத்தானே புடம்போட்டுக் கொண்ட தங்கம் கலைஞர் என்பதைத்தான் தமிழகத்தின் பொன்னெழுத்து என்கிறார் வசந்தன்!

    வாய்மை வரைந்து கொணட ஓவியம் நீ!

    உயர்வு நவிற்சி அணி என்று ஒன்று உண்டு. இதனை மிகைக் கற்பனை என்றும் சொல்வார்கள் இதிகாசங்களிலும் தொன்மங்களிலும் சிறந்திருக்கும் இது பொதுவாக இலக்கியங்களில் சிறப்பதில்லை.

    “வைரத்தால் புள்ளிவைத்துத் தன்னைத் தானே
    வாய்மையே வரைந்துகொண்ட ஓவி யம்நீ !”

    வசந்தன் எழுதுகிறார் இப்படி. வாய்மை வினைமுதல்!  அது ஒரு ஓவியம் வரைகிறது.  புள்ளி வைக்கிறது. வஞ்சி கோலமிட கோலமாவு போதும். வாய்மையென்னும் சத்தியவதி கோலமிட்டால் கோலமாவு போதுமா? எனவே வைரத்தைக் கொண்டு புள்ளிவைக்கிறாளாம். எந்தத் திறனாய்வு அளவுகோலாலும் அளக்க முடியாத கற்பனை!. ‘தெள்ளுதமிழ் பாடம் எழுதப் பள்ளியில் சேர்க்க வரும்  மாமனை’ப் பற்றிக் காமாட்சி சுந்தரம்  எழுதினார் அன்று  ‘வெள்ளியினால் செய்த ஏட்டில் நல்ல வைர எழுத்தாணி கொண்டு’ என்று!  ஏடு வெள்ளி! எழுதியவன் கல்யாணியின் மகன்! எழுதுகோல் வைரம்! மொழி தெள்ளுதமிழ்! அனைத்தும் ஒரே அலைவரிசை! இதுதான் கவிதை! வைரத்தைத் தங்கத்திலே வைத்தால் மதிப்பா?  தகரத்தில் வைத்தால் மதிப்பா?

    பாடாண் திணைக்குள் ஒரு கையறு நிலை!

    இந்தப் பாடலை ‘நீ’ என்னும் முன்னிலையில் தொடங்கிப் பாடிய வசந்தன் பல நுண்ணியங்களைப் பதிவு செய்திருப்பதை என்னால் உணர முடிகிறது. உணர்ந்து சுவைக்க முடிகிறது. பாட்டுடைத் தலைவனை நிகழ்காலத்தில் பாடினால் அது பாடாண் இழந்த நிலையில் இறந்த காலத்தில் பாடினால் அது கையறு நிலை!. கையறு நிலைக்குள் பாடாண் அடக்கம். ஆனால் பாடாணுக்குள் கையறு நிலை அடங்காது.  முதல் பன்னிரண்டு விருத்தங்களில் பாடாண் குறிப்புடன் பாடிய வசந்தனால் இறுதி விருத்தததை அவ்வாறு பாட முடியவில்லை. ‘கலைஞர் இல்லை’ என்னும் உண்மை அவரைப் பிழிகிறது.  அவரையும் அறியாமல் கொட்டுகிறார்.

    “நீரின்றி நிழலின்றிக் காற்று மின்றி
    நிலைகுலைந்து குடைசாய்ந்தே கிடக்க எங்கள்
    வேர்சாய்ந்து வான்பார்த்தால் என்ன செய்வோம் ?
    வெறுங்கையைப் பிசைந்துள்ளோம் !

    பாட்டுடைத் தலைவன் மறைவையும் அதனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளையும் வெற்றிடத்தையும் ஏழு எச்சங்களால் அடுக்கிக் காட்டுகிறார்.  “நீரின்றி நிழலின்றிக் காற்றுமின்றி நிலைகுலைந்து குடைசாய்ந்தே கிடக்க ….. வேர்சாய்ந்து” என்னும் எச்சங்கள் எல்லாம் கலைஞரைப் பற்றிய எதிர்மறை உருவகங்கள். ‘எல்லாமாக இருந்த நீ போய்விட்டதால் ஏதுமற்ற ஏழையானோம்’ என்பதை ‘வெறுங்கையைப் பிசைந்துள்ளோம்’ என்னும் மரபுத் தொடரால் புரிய வைக்கிறார்.

    வாழ்கிற காலத்தில் எவரையும் உரிமையோடு பேசலாம் என்பதால் இதுவரை ‘நீ’ என்று பாடி வந்தவர், ‘கலைஞர் இனி இல்லை’ என்னும் உண்மை உறுத்த,  இறுதி விருத்தத்தில்

    “………………………………………………………………………நீங்கள் வந்தால்
    தேர்வந்த தெருவாக மகிழ்ந்தி ருப்போம் !
    தென்னிமயம் கண்டுயிர்த்து களித்தி ருப்போம் !

    என்று ‘நீங்கள்’ என்று அழைப்பது காண்க. இதில் என்ன நயம் இருக்கிறது? எனச் சிலர் வினவக்கூடும். மகாகவி பாடிய ‘நந்தலாலா’வைக் கவனித்தவர்களுக்கு இந்த நுண்ணியம் புரியும். அந்தப் பாடடில் உள்ள நான்கு கண்ணிகளில் முதலிரண்டு கண்ணிகளில் ‘தோன்றுதையே!’ என்று விளித்த பாரதி, அடுத்த இரண்டு கண்ணிகளில் ‘தோன்றுதடா’ என்று விளிப்பார். இறைவன் எட்ட நிற்கிறபோது ‘ஐயே’ என்று வணங்கியும் அருகில் வந்து இனிக்கிறபோது ‘அடா’ என்ற  உரிமையோடும் அழைப்பது கவித்துவ நுண்ணியம். அது வசந்தன் பாட்டில் இடம் மாறியிருக்கிறது. கலைஞர் உயிரோடு இருக்கிறபோது உரிமையுடன் ‘நீ’ என்றவர், அவர் திரும்பாத இடத்திற்குச் சென்றுவிட்டார் என்று கைபிசைந்து நிற்கிறபோது ‘நீங்கள்’ என வணங்கி மதிப்பளித்துப் பாடுகிறார் என்பதாம். இது இச்சை வெளிப்பாடு அன்று. அனிச்சை வெளிப்பாடு!

    “சீர்கொண்டு வரும்சிரிப்பே ! வா! பி றந்து !
    சிறுநகையில் உயிர்மீட்பாய் ! சீக்கி ரம்வா !”

    உணர்ச்சியின் உச்சம் கவிதை என்பதை ‘பிறந்து வா என்பதை ‘வா பிறந்து என்னும் பிறழ்ச்சியில் உணர்க. பிறப்பு தாய்க்கு மகிழ்ச்சி. வருவது சமுதாயத்திற்குப் பயன். போய் வா! சென்று வா! வென்று வா! ஆடி வா! பாடி வா! என எச்சத்தை முன்னாக்கி ஏவலைப் பின்னாக்குவதுதான் பொதுமை. ‘இன்று போய் நின் தானையொடு நாளை வா!” என்பது கம்பன் தமிழ்! இந்தப் பொதுமையில்  பழகியவர்க்கு ‘வா! பிறந்து! என்பது மாற்றுச் சுவையைத் தரககூடும்!.

    நிறைவுரை

    இயற்கையைப் பாடலாம்! இறைவனைப பாடலாம்! தமிழைப் பாடலாம்! தத்துவத்தைப் பாடலாம்! ஆனால் தனிமனிதச் சிறப்புக்களைப் பாடுபொருளாக்கிக் கவிதைத் தொழில் செய்வது அவ்வளவு எளிதானதன்று. காரணம் பாட்டுடைத் தலைவனின் பண்புகளும் செயல்களுமே முன்னிற்பதால் கற்பனை குறைந்த அந்தச் சூழலில், அவற்றைக் கவிதையில் கொண்டுவருவது மிகமிகக் கடினம். ‘அன்பு மக்கள் கடலின் மீதில் அறிவுத் தேக்கம் தங்கத்தேரில்! என்று தந்தை பெரியாரைப் பாவேந்தரால் பாட முடிகிறது என்றால் அவர் பாவேந்தர்! அதனால் முடிகிறது!  ’சாவே! உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ?” என்ற கையறுநிலையில் நேருவைப் பாடவந்த கண்ணதாசன் சாவை நோக்கி ஏசுவது காண்க! “நான் வருகிறபோது மீண்டும் உன் (அண்ணாவின்)  இதயத்தைக் கொண்டு வந்து அவர் கால் மலரில் வைப்பேன்” என்னும் கற்பனையைக் கையறு நிலையில் கொண்டுவருவது கலைஞருக்கு எளிது! எல்லாருக்கும் எளிதன்று. பாடாண் மற்றும் கையறு நிலையில் நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பே இடம் பெறும். இத்தகைய இத்தகைய சிக்கலான துறையில் ‘நீ’ என்னும் முன்னிலையை உத்தியாக்கிக் கற்பனை கலந்து கவிதைத் தொழில் செய்து களவெற்றிக் கண்டிருக்கிறார் வசந்தராசன். மீள் பார்வை செய்யாததாலும், அவசரம் காரணமாகவும் எளிதாகத் தவிரத்திருக்க வேண்டிய யாப்புக் குறைகள் உட்பட சில குறைகள் ஆங்காங்கே தென்படுகின்றன.  இந்த ஆய்வு கொழுக்கட்டைச் சுவைபற்றியதாதலின் பானையின் ஓட்டையைப் பொருட்படுத்தவில்லை! தம்பி வசந்தராசனின் உள்ளங்கை விரல்களுக்கு ஒரு குருணி வாழ்த்துக்கள்!

    (தொடரும்)

    Share