Tag: நடராஜன்கல்பட்டு

  • பாம்பைக் கண்டால்…. 2

    நடராஜன் கல்பட்டு

    சில இந்தியப் பாம்புகளைப் பற்றி சொல்வதற்கு முன் பாம்பின் உடலமைப்பில் உள்ள சில விசேஷங்கள் பற்றிக் கூற விரும்புகிறேன்.
    உடலுருப்புகள்  பாம்பின் உடல் குறுகலாய் நீண்டு ஒரு கொடி போல இருப்பதால் அதன் உள் உருப்புகளும் மெலிந்து நீண்டு இருக்கும்.  மற்ற மிருகங்களைப் போல் அதன் நுரை ஈரல்கள் இராது.  ஒன்றுடன் ஒன்று இணைந்திராமல், வலது ஈரல் நீண்டு உடலின் பாதி தூரம் வரை செல்லும்.  இடது நுரை ஈரல் குட்டையானது.  சில பாம்புகளில் இது இல்லாமல் கூட இருக்கலாம்.  அல்லது மூன்றாவதாக மிகக் குட்டியான ஒரு நுரை ஈரலும் இருக்கலாம்.  இவ்வாறு நீண்ட நுரை ஈரலைக் கொண்டதால் தான் பாம்பு மூச்சு விடுவது மனிதனையோ மற்ற மிருகங்களையோ போல இரண்டு மூன்று வினாடிகளில் முடிந்து விடாமல் பெரியதோர் பலூனிலிருந்து காற்றை விடுவது போல புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……….ஸென்று பல வினாடிகள் நீடிக்கின்றது.
    மூத்திரக் காய்கள் இரண்டு உண்டு.  ஆனால் ஒன்றன் பின் ஒன்றாய்.
    ருசி பார்த்தல் பாம்பினால் செய்ய முடியாத ஒரு காரியம்.  காரணம் அதன் நாக்கு மணம் நுகர்வதர்க்காக மட்டுமே அமைக்கப்பட்ட ஒன்று.  அதனால் என்ன?  கண்ணால் பார்த்து மணம் நுகர்ந்தால் போதுமே தனக்குப் பிடித்த உணவினைக் கண்டு கொள்ள.
    கீழ் வரும் படத்தினைப் பாருங்கள் பாம்பின் உடலுள் உருப்புகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று.
    பாம்பின் வாய்  பாம்பின் தாடைகள், நம் தாடைகளைப் போல் ஒன்றோடொன்று நிரந்தரமாக இணைக்கப் பட்டவை அல்ல.  தேவைப் படும் போது தாடை மூட்டுகள் கழன்று தாடைகளை வேண்டுமளவுக்கு விரித்துக் கொள்ள முடியும்.  அதனால் தான் பாம்பு தன் தலையை விட அதிக பருமனான இரையை கவ்வி விழுங்க முடிகிறது.
    இனப் பெருக்கம்  மிருகங்களை முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பவை, குட்டி போட்டு பால் கொடுப்பவை என இரு வகையாகப் பிரிப்பார்கள்.  ஆனால் பாம்புகளில் மூன்று வகை உண்டு.  முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பவை, முட்டையை வயிற்றுக்குள் வைத்திருந்து அது குஞ்சாக வெளி வரும்போது வெளிக் கொணரும் பாம்புகள் மற்றும் வயிற்றுக் குள்ளேயே கருவினுக்கு முட்டையின் வெள்ளைக் கருவினாலும், தொப்புள் கொடி போன்றதொரு அமைப்பின் மூலம் தன் உடலிலிருந்தே உணவு கொடுத்தும் வளர்த்துப் பின் குட்டி வளர்ச்சி அடைந்ததும் வெளிக் கொணரும் பாம்புகள் என்பவை அவை.
    பாம்பின் முட்டைகள் கோழி முட்டை போல கெட்டியான ஓடுகள் கொண்டவை அல்ல.  மெல்லிய தோல் போன்ற ஒன்றுதான் முட்டையின் சட்டை.
    பல பாம்புகள், நல்ல பாம்பு உட்பட, முட்டை இட்டபின் அவற்றைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.  ராஜ நாகம் முட்டைகளை கூடு அமைத்து அதில் இடும்.  மலப்பாம்பு சுமார் முப்பது முதல் நூறு முட்டைகள் வரை இட்டு அவற்றை ஒன்றாகச் சேர்த்து தன் உடலால் சுருட்டி இறுக்க அணைத்துக் கொண்டு அடை காக்கும்.
    “உஸ்ஸ்ஸ்ஸ்………தொந்திரவு பண்ணாதீங்க. நான் அடை காத்துகிட்டு இருக்கேன்.”
    பாம்புகள் குளிர் ரத்தப் பிராணிகள் என்று சொல்வார்கள்.  அதாவது அவற்றின் உடல் உஷ்ணம் நம் உடல்கள் போல ஒரே நிலையில் இருக்காது.  வெளியெ என உஷ்ணமோ அதே நிலையில் இருக்கும்.  ஆனால் அடை காக்கும் மலைப் பாம்பு தன் உடலின் உஷ்ணத்தை முட்டைகள் குஞ்சுகளாக மாறத் தேவையான உஷ்ண நிலையான 88 முதல் 90 டிகிரி ஃபேரன்ஹீட் வரையான நிலையில் வைத்துக் கொள்கிறது.  எப்படித் தெரியுமா?  தன் உடலில் உள்ள தசைகளை இறுக்கி விரிப்பதன் மூலம் இந்த வேலையைச் செய்கிறது மலைப் பாம்பு.
    விரியன் பாம்புகள் குட்டி போடும் இனம்.
    தென் அமெரிக்கப்  பாம்புகளான பச்சை அனகொண்டாவும் போ கன்ஸ்ட்ரிக்டாரும் வயிற்றுக் குள்ளேயே முட்டையியனை வைத்து முட்டைக்குள் இருக்கும் கருவிற்கு, முட்டைக்குள் கருவினைச் சுற்றி இருக்கும் பதார்த்தம் மூலமாகவும், தன் உடலில் இருந்தே தொப்புள் கொடி போன்ற உருப்பின் வழியேயும் உணவளித்து பின் கரு குட்டியாக வளர்ச்சி அடைந்தவுடன் அதை வெளிக் கொணரும்.
    பச்சை அனகொண்டா
    போ கன்ஸ்ட்ரிக்டார்
    பாம்புகள் புணருதல்  நல்ல பாம்பும் சாரைப் பாம்பும் புணர்ந்துதான் பின் நல்ல பாம்புகள் முட்டை இடுகின்றன என்று சிலர் சொல்வார்கள்.  இது ஒரு தவறான கருத்து.  ஒரே இனப் பாம்புகள் தான் புணர்ந்து இனப் பெருக்கம் செய்கின்றன.
    கீரியும் பாம்பும் : பாம்பின் ஜன்ம விரோதி கீரிப் பிள்ளை.  கீரியின் உணவு பாம்பு.  கீரி பாம்புடன் இயற்கைச் சூழலில் சண்டை போடுவது பார்க்க வேண்டிய ஒன்று.  கீரி தன் அடர்ந்த ரோமங்களை சிலிர்த்துக் கொண்டு தன் உருவத்தினை இரு மடங்குக்குமேல் ஆக்கிக் கொள்ளும்.  பின் பாம்பின் பாதி உடலைப் பிடித்துக் கவ்வுவது போல் பாசாங்கு செய்யும்.  பாம்பு அதனைக் கொத்த வரும்போது தன் தலையைத் திருப்பிக் கொண்டு விடும்.  பாம்பு தன் கண்ணுக்கு உடலெனத் தெரியும் கீரியின் ரோமங்களைத் தாக்கும்.  ஆனால் அதன் விஷப் பற்கள் கீரியின் உடலைத் தாக்காது.  ரோமங்களைத் தான் தாக்கும்.  இப்படியே பல முறை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகச் சுற்றிச் சுற்றி வந்து கீரி பாம்பினைக் களைப்படையச்செய்யும்.  பாம்பு முற்றிலுமாகக் களைத்திருக்கும் போது கீரி அதன் தலைக்கு சற்று கீழே கவ்விக் கடிக்கும்.  பாம்பின் உயிர் போனபின் மெல்ல மெல்லத் தலையைத் தவிற மற்ற பாகங்களைத் தின்று விடும்.
    பாம்பின் எதிரி கீரி
    பாம்பின் ஊணவு எலி, பல்லி, பறவைகள், சிறிய  விலங்குகள்.  அது சரி.  பாம்பு யாருக்கு உணவு?  கழுகு, கருடன், கீரி இவற்றுக்கு மட்டும் தானா?
    இல்லை.  பாம்பு மனிதனுக்கும் உணவு.  கிழக்காசிய நாடுகளில் பலருக்கு பாம்பு மிகப் பிடித்த உணவு.  தலையை வெட்டி விட்டால் பாம்பு ஒரு மாமிசப் புடலங்காய்தானே?
    பாம்பின் ரத்தத்தைக் குடித்தால் ஆணின் வீரியம் அதிகரிக்கும் என நம்புவோரும் உள்ளனர் கிழக்காசியாவில், அதுவும் பாம்பு உயிருடன் இருக்கும்போதெ அதன் உடலில் இருந்து எடுக்கப் படும் ரத்தம்!
    “கொடிய விஷமுள்ள பாம்பு எது, விஷமற்ற பாம்பு எது என்று கண்டு பிடிக்க முடியுமா?” என்றால் முடியும் பாம்பின் தலையைப் பார்த்துக் கண்டு பிடிக்கலாம்.
    விஷப் பாம்பைக் கண்டறிதல்
    1. விஷமற்ற பாம்பின் கண்களின் பாப்பா வட்ட வடிவில் இருக்கும்.  விஷமுள்ள பாம்புகளின் கண்களில் இது நடுவில் சற்றே அகன்று மேலிருந்து கீழாக இரு கோடுகள் போலிருக்கும்.
    2.  விஷமற்ற பாம்பின் மேல் தாடையில் கண்களுக்குக் கீழாக செதிள்கள் ஒரு வரிசைதான் இருக்கும்.  விஷமுள்ள பாம்பிற்கு இங்கு இரண்டு மூன்று வரிசைகள் செதிள்கள் காணப்படும்.
    3.  விஷப் பாம்பின் மேல் தாடையில் நாசித் துவாரங்களின் பக்க வாட்டில் சிறிய பள்ளம் இருக்கும்.
    ஆனால் ஒன்று.  பாம்பு நாம் பார்ப்பதற்காக தலையைக் காட்டிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்க வேண்டுமே! அதற்கு என்ன செய்ய?
    பாம்பு ஒருவரைக் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாமா?
    (தொடரும்)
    Share
  • ஆன்மீகமும் நானும் .. (18)

    நடராஜன் கல்பட்டு 

    மூன்றாம் முறை அய்யப்ப தரிசனம்

    1979. பங்களூரில் பணி புரிந்து வந்த போது மீண்டும் அய்யப்பனைத் தரிசிக்கவேண்டும் என்னும் எண்ணம் வந்தது. அங்கிருந்த ஒரு குழுமத்துடன் இணைந்து பங்குனி மாதம் ஒரு நாள் மாலை அணிந்தேன். மாலை அணிந்து இரு வாரங்களுக்குப் பின் நான் பதினைந்து நாட்களுக்கு பம்பாய் செல்ல வேண்டி வந்தது. பின் அங்கிருந்து நான்கைந்து நாட்கள் கொச்சிக்குச் செல்லவேண்டும். நான் சேர்ந்திருந்த அய்யப்ப பக்தர் குழு பங்களூரில் இருந்து கொச்சி வரை ரயிலிலும் அங்கிருந்து வாடகைக் கார்களிலும் செல்வதாய் இருந்தது. ஆகவே நான் அவர்களிடம் கொச்சியில் சேர்ந்து கொள்வதாகச் சொல்லி விட்டு பம்பாய் கிளம்பினேன்.

    பம்பாய் கிளம்பு முன் எனது உறவினர் ஒருவர் தன் பையன் பம்பாய் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் சேர்ந்திருப்பதாகவும் அவன் தாய் தந்தையைப் பிரிந்து இருப்பதற்கு மிகவும் வருந்துவதாகவும், அடிக்கடி அவன் திரும்ப வந்து விடுவேன் எனச் சொல்வதாகவும், அவனை நான் சென்று பார்த்து புத்திமதி சொல்லி விட்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.. அதனால் ஒரு ஞாயிறு மத்தியானம் 11-00 மணிக்கு மாதுங்கா சென்றடைந்தேன். கால்களில் பாத ரக்ஷை இல்லை. ஆடை கருப்பு வண்ணம். வெய்யிலில் உருகி இருந்த தார் கால்களில் ஒட்டிக் கொண்டு பொரித்தது. ரயில் நிலயத்தில் இருந்து பி.ஐ.டீ. யை நோக்கி நடந்தேன். ஆனால் அன்று என் உறவினரின் மகன் சக மாணவர்களுடன் எங்கோ வெளியே போயிருந்தான். பின் ரயில் நிலயம் நோக்கி நடந்தேன்.

    ரயில் நிலையம் அருகே சாலையில் நான்காக மடித்த காகிதத் துண்டு கிடந்தது. உடனே குனிந்து அதைப் பொறுக்கி எடுத்ததேன். பிரித்துப் பார்த்தால் ஐந்து புதிய நூறு ரூபாய் நோட்டுக்கள். ஆரம்பித்தது என் மனத்துள் ஒரு குழப்பம்.

    ‘ஐயோ பாவம் யாரோ ஒருவர் இதைத் தவற விட்டிருக்க வேண்டும். இதைக் காவல் நிலையத்தில் சேர்த்து விட்டால் அவ்ருக்குப்போய்ச் சேர்ந்து விடும். நடப்போம் காவல் நிலையத்திற்கு’ என்று மீண்டும் பி.ஐ.டீ. யை நோக்கி நடந்தேன். அதன் அருகில்தான் இருந்தது காவல் நிலையம்.

    பாதி வழியில் ஒரு சந்தேகம், ‘துலைத்தவர் புகார் செய்யாதிருந்தால் காவல்காரர்கள் அல்லவோ இதை எடுத்துக் கொண்டு விடுவார்கள்? நானும்தான் எவ்வளவோ முறை பணத்தைத் துலைத்திருக்கிறேன். ஒருக்கால் அவற்றுக்கு பதிலாகத்தான் கடவுள் இதை எனக்குக் கொடுத்துள்ளாரோ?’ திரும்பினேன் ரயில் நிலயம் நோக்கி.

    மீண்டும் ஒரு குழப்பம். ‘அப்படி நானே வைத்துக் கொண்டால் அது பிறர் பொருளுக்கு ஆசைப் பட்டது ஆகி விடாது?’

    ‘சரி இப்போது போவாயில் இருக்கும் சின்மயா மிஷனின் தலமை அலுவலகத்திற்கு தானே போய்க் கொண்டிருக்கிறோம். அங்கு சுவாமிஜீயிடமே கேட்டு விடுவோம்’ என்று நினைத்து பேருந்தில் ஏறினேன் போவாய்க்கு.

    எனது துரதிருஷ்டம் சுவாமிகள் சின்மயானந்தா, தயானந்தா, மற்றும் ஹரிநாமானந்தா ஆகிய மூவரும் வெளியூர் சென்றிருந்தனர். ஏமாற்றத்துடன் திரும்பினேன் நான் தங்கி இருந்த இடத்திற்கு. அந்தப் பணத்தை செலவழித்து விடக் கூடாது என்பதற்காக என் வங்கிக் கணக்கில் செலுத்தினேன். பின் கொச்சி சென்றேன்..

    கொச்சியில் இருந்த மேலாளர் கேட்டார், “நடராஜன் சாயங்காலம் என்ன செய்யப் போகிறாய்?” என்று.

    “என்ன செய்ய? குளித்து விட்டு ரேடியோகேட்டுக் கொண்டு உட்கார்வேன். வேறு என்ன செய்ய?”

    “நீ தங்கி இருக்கும் ஒட்டல் அருகே உள்ள மைதானத்தில் சுவாமி தயானந்தாவின் சொற்பொழிவுத் தொடர் இன்று ஆரம்பமாகிறதே. அங்கு போகலாமே” என்றார் அவர்.

    மாலை குளித்து விட்டு மைதானத்திற்குச் சென்று முதல் வரிசையில் அமர்ந்தேன். சுவாமிகள் பேச்சைத் துவக்கினார், “உடலுக்கும் மனதுக்குமான போராட்டம் – உண்மை மதிப்பும் ஏற்றுக் கொண்டுள்ள வேடத்திற்கேற்ற மதிப்பும்.”

    “சுட்டெரிக்கும் வெய்யிலில் பம்பாய்த் தெரு ஒன்றில் ஒருவன் நடந்து கொண்டிருக்கிறான். தெருவில் மடித்த நிலையில் காகிதத் துண்டுகள் கண்டு உடனே குனிந்து அதைப் பொறுக்குகிறான். அவனுக்குத் தெரியும் அதன் மதிப்பு. குழந்தையாய் இருந்தபோது எவ்வளவு நேரம் கையை நீட்டினாலும் கடைக்காரன் மிட்டாயை அவனுக்குத் தருவதில்லையே அம்மாவின் காசு கை மாறினால் ஒழிய.

    காகிதத்தைப் பொறுக்கியவன் அதை பிரித்துப் பார்க்கிறான். ஐந்து புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டுக்கள். ஆரம்பிக்கிறது அவன் மனத்துள் போராட்டம், காவல் நிலையம் சென்று அதை அவர்களிடம் சேர்ப்பதா அல்லது தானே வைத்துக் கொள்வதா என்று.”

    மேலும் தொடர்ந்தார் சுவாமீஜி தன் பேச்சை ‘உண்மை மதிப்பும் ஏற்றுள்ள மதிப்பும்’ (Intrinsic values and acquired values) என்பது பற்றி. அவர் பேசியபோது என் உடலில் உள்ள உரோமங்கள் எல்லாம் செங்குத்தாய் நின்றன. சொற்பொழிவு முடிந்ததும் அவருடனே அவர் அறைக்குச் சென்றேன். (என் அதிருஷ்டம் அவரும் நான் தங்கி இருந்த விடுதியில் தான் தங்கி இருந்தார்.) ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரை நெருங்கி என் மனக் குழப்பதிற்கு ஒரு விடை காண முடியவில்லை.

    மறு நாள் மதிய உணவிற்குப்பின் சுவாமிஜீயின் அறைக்குச் சென்றேன். அப்போது அங்கு அதிகக் கூட்டம் இல்லை. ஐந்தாறு நபர்களே இருந்தார்கள். அவரை நமஸ்கரித்து, “ஸ்வாமீஜீ நேற்று நீங்கள் பம்பாயில் சுட்டெரிக்கும் வெய்யிலில் நடந்த ஒருவன் கதையையும், அவனுக்குக் கிடைத்த ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள் பறியும் பின் அதனைத் தொடர்ந்த அவனது மனக் குழப்பத்தையும் பற்றிச் சொன்னீர்கள். ஆனால் குழப்பம் தீர்வதற்கான விடை தரவில்லையே” என்றேன்.

    “என்ன புதிர் போடறே நடராஜா?” என்றார் ஸ்வாமீஜீ.

    பத்து நாட்களுக்கு முன்பு எனக்கு பம்பாயில் நேர்ந்த அனுபவத்தைச் சொன்னேன்.

    “என்ன தாடி, மீசை வெச்சிண்டு இருக்கே?”

    “சபரி மலை போறேன் இன்னும் மூணு நாள்லெ.”

    “அப்பொ அந்த ஐநூறு ரூபாயெ அவன் உண்டியல்லெ சேத்தூடு. அவன் அது எங்கெ போய்ச் சேரணுமோ அங்கெ சேத்தூடுவான். ஒன் மனசுலெ இருக்கற பாரமும் கொறெஞ்சூடும்.”

    மறு நாள் என் அலுவலகத்தில் ஒரு காசோலையினைக் கொடுத்து ஐநூறு ரூபாய் வாங்கி இரண்டு நாட்களில் சபரி மலை உண்டியலில் சேர்த்தேன்.

    பின் ஒரு சமயம் சுவாமி ஹரிநாமானந்தாவைச் சந்தித்த போது அவரிடம் எனது விஜயவாடா, பம்பாய், கொச்சி அனுபவங்களைச் சொல்லிக் கேட்டேன், “எனக்கு ஏன் இப்படி யெல்லாம் நடக்கிறது?” என்று.

    “ஒரு சாதகன் முன்னால் இந்த மாதிரியான சில மின்னல்கள் தோன்றும். அதைத் தனக்கு சக்தி பிறந்து விட்டதாக எண்ணி இறுமாப்பு அடைந்தால் கொக்கென்று நினைத்த கொங்கணவனுக்கு ஏற்பட்ட கதி தான் எற்படும்” என்றார் அவர்.

    கொக்கென்று நினைத்த கொங்கணவன் கதை நாளை பார்ப்போம்.

    (தொடரும்….)

    Share
  • எங்க ஊரு சந்தெ

    நடராஜன்கல்பட்டு

    எங்கெ ஊருன்னு நான் எப்பொவுமே சொல்லிக்கிறது திருச்சி பக்கத்துலெ இருக்குற பொன்மலை தாங்க.  ஏன்னா அந்த ஊருலெ தான் நான் பொறந்தது லேந்து இருபது வயசு வரெ இருந்துருக்கேன்.

    அந்த நாளுலெ, அதாங்க ஒரு எண்பது வருசத்துக்கு முன்னெ, வெள்ளெக் காரன் நம்ம நாட்டெ ஆண்டுகிட்டு இருந்த காலத்துலெ, எங்க ஊருலெ தான் இந்தியாவுலேயே பெரிய ரயில்வே தொழிற்சாலை இருந்துதுங்க.  அங்கெ இந்தியா பூராலேந்தும் ப்ராடு கேஜு, மீட்டர் கேஜு, நேரோ கேஜு எஞ்சினுங்க, பயணிங்க போற பொட்டீங்க எல்லாம் ரிப்பேருக்கு வருங்க.  ஒரு விசேசம் அந்த நாளுலெ எங்க ஊருலெதான் மூணு வித எஞ்சினுங்க, வண்டிங்க, அதுக்கான லயனுங்க இதுகளெப் பாக்க முடியும்.

    எங்க ஊருக்குப் பொன்மலைனு ஏன் பேரு வெச்சாங்க தெரியுமா?  ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக் காரனுக்கும் சண்டெ நடெந்த போது பிரெஞ்சு தளபதி டூப்ளேயோட சோல்ஜருங்க எங்க ஊருலெ இருக்குற மலெயோட குகைலெ ஓளிஞ்சிகிட்டாங்க.  அவுங்களெத் தொரத்திகிட்டு வந்த கிளைவோட, அதாங்க வெள்ளெக் காரனோட தளபதி, ஆளுங்க குகெலெ ஒளிஞ்சு கிட்ட இருந்த சோல்ஜருங்களெ கொன்னு அந்த இடெத்தெக் காலி பண்ண போது அவங்க ஒளிச்சு வெச்சிருந்த தங்கக் காசுங்க அங்கெ கெடெச்சுதான்.  அதுனாலெ அந்த மலெய்க்குப் பொன் மலென்னு பேரு வெச்சங்களாம்.

    மலெ அடிவாரததுலெ பொன்னேஸ்வரி அம்மன் கோவிலும், மலெயோட கால் பங்கு ஒயரத்துலெ முருகன் கோவிலும் இருக்குங்க.   அந்த முருகன் கோவில் பக்கத்துலெயே ஒரு குட்டி மொட்டெ மலெ.  கோவிலுக்குப் போயிட்டு அந்த மொட்டெ மலேலெ கொஞ்ச நாளி குந்தி அரெட்டெ அடிச்சூட்டுதான் ஊட்டுக்குத் திரும்புவோம் நாங்க.  அங்கெ எங்கெ பேரெக் கூட பதிச்சிருக்கோம்.  தேடினா ஆயிரத்துலெ ஒண்ணா எங்க பேரும் கெடெய்க்கலாமுங்க.

    கோவில உட்டு வெளியெ வந்தோம்னா ஒரு சதுரக் கெணறு.  கொஞ்சமா பதினெஞ்சு இருபது அடி ஆழம்தான் இருக்கும்.  கைப்பிடி சுவரெல்லாம் கெடெயாதுங்க.  எட்டிப் பாத்தா தண்ணி, நீரு கலந்த பாலு கலருலெ இருக்குங்க.  அந்தத் தண்ணியெ குடிச்சீங்கன்னா மெய்யாலுமே பாலு குடிக்கிறீங்களோன்னு சந்தேகம் வருங்க.  அவ்வொளோ தித்திப்புங்க (அதே கலருலெ தண்ணியெ 1965லே பங்களூருலெ பன்னேர்கட்டா போற வளிலெ இருந்த சுந்தர் ராஜ் என்பவரோட ஊட்டுக் கெணத்துல பாத்திருக்கேங்க.)  பக்கத்து ஊருங்களான பொமைலைப் பட்டி, கொட்டைப் பட்டி கிராமங்களுக்குப் பூரா குடி தண்ணி அந்தக் கெணத்துலேந்து தான் எடுத்து கிட்டுப் போவாங்க. (நாப்பது வருசத்துக்கு முன்னெ ஒரு வாட்டிப் போனேங்க எங்க ஊருக்கு.  அந்தக் கெணெத்தெ எட்டிப் பாத்தா பாறெதான் தெரிஞ்சுது.  எங்க ஊடும் பாழடெஞ்ச ஊடு மாதிரி இருந்தீச்சு.

    எங்க ஊட்டுலேந்து பாத்தா எதுத்தாப்புல ஏரோபிளேனுங்க இறங்கறதும் ஏறுறதும் தெரியுங்க.  ஏன்னா ஒரு மைலு தொலவுலெ ரன்வேங்க.  அதுல உலக யுத்தம் நடந்த நாளுலெ ஏரோபிளேனுங்க நிறுத்தி வெச்சிருப்பாங்க.  கிட்டெ போயி பாக்கலாமுங்க.  ஏன், அதுங்கள்லெ ஏறிக் கூட பாக்கலாமுங்க.  நான் ரெண்டு மூணுக்குள்ளெ ஏறிப் பாத்துருக்கேனுங்க பக்கத்துலெ நின்னு கிட்டு இருந்த சோல்ஜரு கிட்டெ சொல்லீட்டு.  ‘ஆர்டெமிஸ், ஆஸ்ற்றேயியா’ ன்னு பேருங்க அதுங்க ரெண்டுக்கும்,

    சரி அதெல்லாம் உடுங்க.  மெயின் மேடருக்கு வருவோங்க, அதான் சந்தெய்க்கு வருவோங்க.

    எங்க ஊருலெ வாராவாரம் ஒரு சந்தெ கூடும்.  ஆனா அதெ விட முக்கியமான சந்தெ மாசா மாசம் ஒண்ணாந் தேதியும், பதினஞ்சாந் தேதியும் ஒர்க் ஷாப்பு வாசலுலெ கூடுற சந்தெய்ங்க.  அந்த ரெண்டு தேதிங்கள்லெ ஒர்க் ஷாப்புலெ சம்பளம் தருவாங்க.  அதுனாலெ தான் அந்த ரெண்டு நாளு சந்தெ கூடுறது.  இந்த சந்தேலெ பாருங்க ஊட்டுக்கு வேணுங்கெற துணி, மணி, அரிசி, பருப்பு, காய் கறி, சோப்பு, சீப்பு, கண்ணாடி, அலுமினிய, இரும்பு, பித்தாளெ பத்திரங்க இப்பிடி எல்லா ஜாமானுங்களுமே கெடெய்க்குங்க,

    எங்க அப்பாரு ஒரு சோப்பு ஃபேக்டரி வெச்சிருந்தாரு. சிம்மா சோப்பு ஒர்க்ஸ்னு பேரு அதுக்கு.  அவரு பண்ணுற துணி தோய்க்கிறெ சோப்பு ரொம்பப் பிரபலங்க மார்கெட்டுலெ.  அந்த சந்தெலெ நாங்களும் கடெ வெச்சிருப்போம் ஒரு கண்ணாடி தள்ளு வண்டிலெ.  அரெ மணிலெ வித்துப் போயிடும் வண்டிலெ கொண்டாந்த சரக்கு பூரா.

    எங்க கடெய்க்குப் பக்கத்துலெ தரெலெ ஆறுக்கு எட்டுலெ ஒரு ஜமுக்காளத்துலெ கடெ பரெப்பி இருப்பாரு ஒருத்தரு.  அது ரொம்ப ரொம்ப விசேஷ மான கடெய்ங்க.  வாங்க அதெப் போயி பாக்கலாம்.

    “ஓடிவா…ஓடிவா….. ஒங் கஷ்டம் என்னவானாலும் ஒடிவா……இருக்கு அதுக்கு மருந்து எங்கிட்டெ..”  “டக…டக…டக…” இது அவர் ஒரு கொட்டாங்கச்சி டமாரத்தில் எழுப்பும் ஒலிங்க.

    தயங்கித் தயங்கி வருகிறார் ஓமக் குச்சி வடிவமும் சோவின் தலையையும் கொண்ட ஒருவர்.

    “என்னையா?  மயிரு வளறணுமா?  வாங்கித் தேயி இந்தத் தைலெத்தெ.  பத்தே நாளுலெ வளர ஆரம்பிக்கும் பாரு ஒம் முடி.  சின்ன பாட்டிலு எட்டணா.  பெரிய பாட்டிலு ஒரு ரூவா.  சட்டுனு வாங்கு.  பட்டுனு தேயு.  வளருது பாரு ஒம் முடி.  சோதனெ பண்ணதையா இந்தத் தைலம்.  பத்தே நாளுலெ முட்டைக்கெ மயிரு முளெச்சுதுன்னா பாத்துக்க.”

    “பெரிய பாட்டிலே குடுங்க.”

    அடுத்து வருகிறார் கரடியா? மனிதரா? என்று சந்தேகிக்கும் படியான செந்தில் போல ஒரு ஆளு.

    “என்னையா?  ஒடம்புலேந்து ஒனக்கு மயிரு கொட்டணுமா?  அதுக்கும் இருக்குது எங்கிட்டெ தைலம்.  சின்ன பாட்டிலு எட்டணா.  பெரிய பாட்டிலு ஒரு ரூவா.”

    “ஆமாங்க.  சட்டெ போடாமெ வெளிலெ கெளெம்பவே முடியறதில்லீங்க.  தெருவுலெ சுத்துற குறும்புப் பசங்க, ‘டேய் கரடி வருதுடா’ ன்னு கிண்டல் பண்ணுறானுவ.”

    “சின்ன பாட்டிலா இல்லெ பெரிய பாட்டிலா?”

    “பெரிசே குடுங்க.  அது தான் என் பெரிய ஒடம்புக்குப் பத்து நாளெய்க்கு வரும்.”

    “டக… டக…. டக…. ஓடிவா….. ஓடிவா… ஒங் கஷ்டம் எதுவானாலும் ஓடிவா.  இருக்குது எங்கிட்டெ மருந்து அதுக்கு.  டக…டக…டக…”

    “ஒடெம்பெல்லாம் அரிச்சுப் புடுங்குதுங்க.  சொறிஞ்சு சொறிஞ்சு ஒடெம்பே புண்ணாயிப் போயிடுதுங்க.  அதுக்கு எதுனா……”

    “இருக்கு அதுக்கும் எங்கிட்டெ தைலம்.  சொறியோ, சிரங்கோ, கரப்பானோ, படையோ எதுவானாலும் பத்தே நாளுலெ பறந்து போயிடும் இந்த எண்ணெயெத் தடவினையானா.  சின்ன பாட்டில் எட்டணா.  பெரிய பாட்டிலு ஒரு ரூவா.  எடு காசெ.  எது வேணும் ஒனக்கு?”

    “பெரிசே குடுங்க,  அப்பொ தானே பத்து நாளெய்க்கு வரூம்?”

    “ஆமாம்.  இந்தா புடி.  டக… டக…. டக…. ஓடிவா….. ஓடிவா… ஒங் கஷ்டம் எதுவானாலும் ஓடிவா.  இருக்குது எங்கிட்டெ மருந்து அதுக்கு.  டக…டக…டக… அடுத்த சந்தைக்கு வர மாட்டார் சாயபு.  ஹைதராபாத் போறாரு அவரு.”

    பதினைந்து நாட்களுக்குப் பிறகு கூடுகிறது மீண்டும் சந்தை.  எங்கள் கடைக்குப் பக்கத்துக் கடை அதே சகல வியாதி நிவாரணி மருந்துக் கடை!

    (கதையல்ல.  கற்பனையல்ல.  கட கட கட… அக்மார்க் நிஜம் இது.)

    (சந்தை படங்கள் இணையத்தில் இருந்து)

    Share