Tag: நூ.த.லோகசுந்தர முதலி

  • பட்டமங்கலம்

     

    திருசிற்றம்பலம்

    பட்ட மங்கலம்

    ஓர் பாண்டிய நாட்டு திருவாசக தலம்

    pttmngklm2raja

    நூ.த.முத்துமுதலி மயிலை

    தி.ஆ.2044/விஜய ஆடி 12 ஞாயிறு

     

    தமிழகத்து சித்தாந்த சைவநெறியின் பெருமறையாம் பன்னிரு திருமுறை 18000+ பாடல்களில் போற்றப்பட்ட 600க்கும் மேலுள்ள சிவவழிபாட்டிடங்கள் 1350 ஆண்டுகள் வரை பழமை உடையன எனும் மாண் பினால் இறை வழிபாட்டில் ஊக்கமுடையோர் வாழ்நாளில் ஒர் முறை சிலவற்றிற்காவது நேரடி வழிபடுதல் மரபெனக் கொண்டமை காண்கின்றோம். இக்கருத்தினிலேயே தென் இந்தியாவில் வாழ்வோர் வடகிழக்கு எல்லை இமயமலையில் உள்ள கயிலாயம் முதல் காசி போன்ற தலங்கள், ஈழத்திலுள்ள கேதீச்சரம் திரிகோணமலை எனும் தலங்களுக்கும் வடஇந்தியர் தென்கோடி இராமேசுவரம் வரை தீர்த்தங்கள் ஆட தெற்கே வருவதும் கண்கூடு.

    தேவாரப் பாடல் பெற்றத்தலங்களாவன திருநாவுக்கரசர், திஞானசம்பந்தர் சுந்தரர் எனும் மூவர்முதலிகளால் இயற்றப் பெற்று தே-வாரம் எனும் இனிமைமிகு பண்ணிசை அமைக்கப்படவை முதல் ஏழு திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ள 8274 பாடல்களில் குறைந்தது ஓர் பதிகமாவது பெற்றவை 276ஆகும். முழுபதிகம் ஏதும் கிடைக்கப் பெறாமல் இத்தேவாரப் பாடல்களின் ஊடே சிவனுறை கோயில் என குறிக்கப்படுவன, வைப்புத் தலங்கள் எனவும் அறியப்படுவன, 325 க்கும் மேலாகும் ஓர் வளர்தொடர் என ஆய்வாளர் வகுத்து வருவது

    தேவாரக் காலத்து அடுத்து 1150 ஆண்டுகளுக்கு முன் இயற்றப் பெற்று எட்டாம் திருமுறையாக வைக்கப் பட்டுள்ள மாணிக்கவாசகரின் திருவாசகம்/திருக்கோவையார், தேவாரம் குறித்த சிலவற்றுடன் காட்டாத சில தலஙகளை போற்றியது. உத்தரகோசமங்கை, ஓரியூர், கல்லாடம், கவைத்தலை, குவைப்பதி, கொடிமங்கை, கோகழி, சந்திரதீபம், சாந்தம்புத்தூர், பட்டமங்கலம், பஞ்சப்பள்ளி, பாண்டூர், புன்னைத்துறை, பூந்துறை, பூவலம், பெருந்துறை, மணற்குன்று, வேலம்புத்தூர் என்பன அவை.

    நாம் இங்கு காணவந்தது இதனில் ஒன்று பட்டமங்கலம். திருவாசகம் கீர்த்தித் திருஅகவல் குறிக்கும் ஓர் தலம், பாண்டி நாட்டு பாடல்பெற்றத் தலமாம் திருப்பத்தூருக்கு தெற்கில் காளையார்கோயில் என இந்நாள் வழங்கப்படும் மற்றோர் பாடல்பெற்றத் தலமாம் கானப்பேருக்கு இடையே கற்சாலையில்5 மற்றும் 20 கி மீ தூரத்தே நல்ல பேருந்து தடத்தினில் இந்நாள் தட்சணாமூர்த்தி கோயில் என வியாழன் எனும் கோள்சிறப்பு வழிபாட்டுக் கோயிலாக அப்பகுதி மக்களால் பெரிதும் போற்றப்படுகின்றது. தமிழக வைணவரின் பெருமறையாம் ஆழ்வார்கள் இயற்றிய 3892 பாசுரங்களிலுள்ள 108 இல்ஓர் திவ்யதேசமாம் திருக்கோட்டியூர் இதனுக்கு 5. கிமீ மேற்கே அமைந்துள்ளது.

     

    வடக்கு வாயில்

    pttmngklm1

     

    இந்நாள் புதுமையாக மிகமிக நேர்த்தியான கருங்கற்சிற்பங்கள் மிளிறும் நல்கற்றளியாக நாட்டுக்கோட்டை சமூகத்தினரால் கிழக்கு நோக்கிய 5 நிலை கோபுரத்துடன் காணப்பட்டாலும் முன் ஓர் பழமையான கோவில் ஆகும் எனலாம். இங்குள்ள ஏழேழ் விழுதுகள் கொண்ட தென்முகக் கடவுளாம் தட்சணாமூர்த்தி எங்கும் அமரும் ஓர்ஆலமரம் சிறப்பானதாக போற்றப்படுவதைக் காணலாம். அதான்று பெரியதான தெப்பக் குளமும் மேற்காக உள்ளது. மிகத்தூய்மையாக தனியாரர் மேற்பார்வையில் பேணப்படும் இக்கோயில் தமிழ்மக்கள் தம் வாழ்நாளில் தவறாமல் ஒர் நாள் சென்று வழிபட வேண்டிய ஒன்றே என்றால் மிகையாகாது.

    சிற்றூர் ஆனாலும் பல பேருந்து தடங்கள் திருப்பத்தூர், திருக்கோட்டியூர், கல்லல், ஆலங்குடி, என பல ஊர் களிலிருந்தும் செல்ல வாய்ப்புகள் மிகஎளிதாக உள்ளன. காரைக்குடி அருகுள்ள ரயிலடியாகும்.

     

    பட்ட மங்கையில் பாங்காய் இருந்(து) அங்கு

    அட்டமா சித்திகள் அருளிய அதுவும்

    திருவாசக கீர்த்தித் திருஅகவல் (வரி 62-63)

    தமிழகத்தே பட்டமங்கலம் என சில ஊர்ப் பெயர்கள் இருப்பதாக காணினும் இவற்றில் பாண்டிநாட்டில் அமைந்த மதுரைக்கு அருகு அமைந்த பட்டமங்கலமே பல திருவாசக வரிகள் காட்டும் திருவிளையாடல் தொடர்பினால் நன்கு பொருந்தும். மேலும் அருகுள்ள வாதவூரார் என வழங்கிய மாணிக்கவாசகரின் மதுரைப் பிணைப்பு நன்கே அறிந்த புராண வரலாறு. மணிவாசகரின் தொடர்புடைய மற்றொரு பெயர்பெற்ற தலம் ஆவுடையார்கோயில் என அறியப்படும் திருப்பெருந்துறையும் பாண்டிய நாட்டிலேயே அருகு அமைந்துள்ளது. உத்தரகோசமங்கை, ஓரியூர், கொடிமங்கை, என்பனவும் பாண்டிநாட்டில் அமைந்தவையே பல மதுரைத் திருவிளையாடல்கள் திருவாசக கீர்தித் திருவகவல் வரிகளிலேயே குறித்தல் காண்க.

     

    “பட்ட மங்கையில் பாங்காய் இருந்(து) அங்கு
    அட்ட மாசித்தி அருளிய அதுவும்” 8.2.62 – அட்டமா சித்திகள் செய்த படலம்

    “கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்” 8.2.17 – வலை வீசிய படலம்

    “பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித்
    தூவண மேனி காட்டிய தொன்மையும்” 8.2.51 – மெய்காட்டிட்ட படலம்

    “நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்” 8.2.36 – நரியைக் குதிரைஆக்கிய படலம்

    “பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று” 8.2.392 – நரியைக் குதிரைஆக்கிய படலம்

    “மதுரைப் பெருநல் மாநகர் இருந்து
    குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்” 8.2.45 – நரியைக் குதிரை ஆக்கிய படலம்

    பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்” 8.2.47 – பிட்டுக்கு மண்சுமந்த படலம்

    “தண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்து 8.2.58 – தண்ணீர்பந்தல் வைத்த படலம்

    நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்”
    “ஓரியூரில் உகந்(து) இனி(து) அருளி
    பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்” 8.2.68 – விருத்த குமார பாலனாகிய படலம்

     

     

    ஏழேழ்ழேழ் விழுது ஆல்

    pttmngklm2alam

    தெப்பக்குளம்

    theppakkulam

    Share
  • போந்தை

                                  உ
                             நமசிவாய

                            ‘போந்தை’

                     பதினோராம்  திருமுறை வைப்புத்தலம்

                        நூ த முத்து முதலி
                             மயிலை

    தமிழகத்து சித்தாந்த சைவ நெறியின் பெருமறைகளாம் பன்னிரு திருமுறைகளிலுள்ள 18000+
    பாடல்களில் பதிகம் ஏதும் கிட்டாது குறிக்கப்படும் பேறு மட்டும் பெற்ற மிக்க பழமைவாய்ந்த திருத்
    தலங்கள் ‘வைப்புத்தலங்கள்’ என வகைப்படுத்திய மரபில் காணும் ஓர் தொண்டைநாட்டுத் தலம்

     ‘திருப்போந்தை’

    தமிழகத்து வடஎல்லையில் அமைந்த திருவள்ளூர் மாவட்டத்தில் கவரப்பேட்டை மேற்காக ஊத்துக்
    கோட்டைக்கு வடக்காக ஆந்திர சத்தியவேடுக்கு அருகமைந்த சிற்றூராகும் இத்திருப்போந்தை.
    பராமரிப்பிலிருந்து இந்நாள் தனித்து விடப்பட்ட நிலையில் காணும் நூற்றுக்கணக்கான தமிழகத்துப்
    பழங்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

    பதினோராம் திருமுறையில் தொகுக்கப்பெற்ற பட்டினத்தாரின் 5 நூல்களுள் நான்காவதான திரு
    ஏகம்பமுடையார் திருவந்தாதியில் (65)

     “ஆலையங்கார் கருகாவை கச்சூர் திருக்காரிக்கரை
         வேலையங்கேறு திருவான்மியூர் திருஊறல் மிக்க
         சோலையங்கார் திருப்’போந்தை’ முக்கோணம் தொடர் கடுக்கை
         மாலையன் வாழ் திருஆலங்காடு ஏகம்பம் வாழ்த்துமினே” 11.990

    எனவரும் பாடலில்,
    கச்சூர், திருவான்மியூர், ஊறல், ஆலங்காடு காரிக்கரை எனும் தொண்டைநாட்டுத் தலங்களுடனேயே
    இப் போந்தையையும் பட்டினத்தார் பாடியுள்ளார்.

     

    போந்தை எனும் சொல் அடிமரத்தில் குடம்போல் பருத்துக்காணும் உள்ளினமாகிய பனைவகையைக்
    குறிக்கும் (புறம் 85) நன்கு வளர்ந்து விளங்கும் தொடர்பால் ஆகுபெயர்வழி ஓர் இடப்பொயரும் ஆனது

       “நாளிகேரம் செருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்
                 கோளி சாலந்தம் ஆலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்
                 தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்
                 நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும்”
                        78 திருத்தொண்டர் புராணம்

    என சேக்கிழார் பல்வகை பயிரினங்களைக் காட்டுமிடத்து நம் ‘போந்தை’யையும் குறித்துள்ளார். சங்க
    நூல்களிலும் போந்தை பெரிதும் பயின்றுள்ளமை இக்கருத்துரைக் கடைக்கண் இணைப்பில்  காண்க.

    நம் ‘போந்தை’த் தலத்தின் (‘போந்தை’வாக்கம்) அமைவிடம் (இணைத்துள்ள வரை படங்கள் காண்க)
    ஆந்திர எல்லை மிகமிக அருகு சென்னை மாநகருக்கு ஏறக்குறைய 55 கிமீ வடமேற்காகவும், டில்லி
    கல்கத்தா என வடக்காகச் செல்லும் பெருவழிக்கு (கவரப்பேட்டை) 15 கிமீ மேற்காகவும் காணலாம்.

    தன்னார்வத் தொண்டர்கள் வைத்துள்ள சிதலம் அடைந்த பிசாலீசுவரர் கோவிலின் தோற்றம் காண்க.

    தாய்நாட்டுப் பண்பாட்டை போற்றுவதில் தமிழ் மக்களை அவ்வப்போது விழித்தெழச்செய்யும் தூண்டுகோல்
    ஏந்துவோர் மக்கட்தொகைக்கு ஏற்ப வளர்தலும் வேண்டும்.

    திருச்சிற்றம்பலம்

    – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

    புள்இரியும் புகர்ப்போந்தை            பட்டினப்பாலை 74

    இரும்பனம் போந்தைத் தோடும்        பொருநர் ஆற்றுப்படை 141

    போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள்        16 அகம் 238

    முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று        7 புறம் 85

    வட்கர் போகிய வளரிளம் போந்தை        3 புறம் 100

    போந்தையம் தோட்டின் புனைந்தநர் தொடுத்து3 புறம் 265

    மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே    10 புறம் 297

    நெடுவேள் ஆதன் போந்தை அன்ன
    பெருஞ்சீர் அருங்கொண் டியளே  கருஞ்சினை
    வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்        6 புறம் 338
    (ஈங்கு போந்தை பனைதான் என்பது தெளிவு
    மேலும்    இப்புப்பாடலின் தலைப்புக் கொளுவில்
    “நெடுவேள் ஆதனுக்கு உரிய போந்தைப் பட்டினம்
    பற்றிய குறிப்பு” என உள்ளமை வரியின் பொருளுக்கு
    இயைய போந்தை இடப்பெயருக்கு இரட்டைச்சான்று)

    முழா அரைப் போந்தை அரவாய் மாமடல்        4 புறம் 375

    கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோட்டு    2 குறுந். 281

    தூஇரும் போந்தைப் பொழில்அணி பொலிதந்து10 பதிற்று. 51

    மறம்கெழு போந்தை வெண்தோடு புனைந்து    31 பதிற்று. 51

    வண்டிசை கடாவாத் தண்பனம் போந்தை        6 பதிற்று. 70

    புரைதீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன்    46 சிலம்பு 26 கால்கோள்

    வாகை தும்பை மணித்தோட்டுப் போந்தை        70 சிலம்பு 26 கால்கோள்

    போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை        219 சிலம்பு 26 கால்கோள்

    தோடார் போந்தை தும்பையொடு முடித்து        45 சிலம்பு 27 நீர்ப்படை

    தோடார் போந்தை தும்பையொடு முடித்த        112 சிலம்பு 27 நீர்ப்படை

    போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள்    126 சிலம்பு 27 நீர்ப்படை

    தோடார் போந்தை வேலோன் தன்னிறை         175 சிலம்பு 27 நீர்ப்படை

    அரியிற் போந்தை அருந்தமி ழாற்றல்        189 சிலம்பு 27 நீர்ப்படை

    தோள்நலம் உணீஇய தும்பை போந்தையொடு    248 சிலம்பு 27 நீர்ப்படை

    போந்தைக் கண்ணிப் பொலம்பூந் தெரியல்    9 சிலம்பு 28 நடுகல்

    போந்தைக் கண்ணிநின் ஊங்கண்ஓர் மருங்    134 சிலம்பு 28 நடுகல்

    ஆரும் அணிஇளம் போந்தையும் வேம்பும்        262 பாண்டிக்கோவை

    தொடுத்த வேம்பின்மிசை துதைந்த போந்தை     நச்சி. உரை மேற்கோள்

    போர்எதிரில் போந்தையாம் பூ            பு வெ.மா.240

    போந்தை வேம்பே ஆர்என வரூஉம்        5 தொல்.புறத்திணையியல்

    Share
  • வாதாபி பூத நாதம் தேவார வைப்புத்தலம்

     


    நமசிவாய

    18 திருமுறை பாடல்களில் பெயர்வழி குறிக்கப் பெற்ற   ‘பூத நாத-வாதாபி’ ஓர் தேவார வைப்புத்தலம்

     

    நூ.த.லோகசுந்தரமுதலி

    மயிலை

     

    பாதாமி=வாதாபி, வடகருநாடகம், ஆதி  பூதநாதர்

     

                                                    பூத நாதனைப் பூம்புக லூரனைத்

                                                    தாதுஎனத் தவழும் மதி சூடியை

                                                    நாதனை நல்ல நான்மறை ஓதியை

                                                    வேதனை நெருநல் கண்டது வெண்ணியே

                                                                திருநாவுக்கரசர் – குறுந்தொகை 5.17.6

     

              புகுமுன்

    தமிழக சித்தாந்த சைவநெறியின் மறைகளாம் தேவாரம் திருவாசகம் எனும் தொடக்கத்தின வான நூற்களின் 18000+ பாடல்களில் பதிகம் ஏதும் பெறாமல் சிவபெருமான் உறையும் திருஊர்களாக குறிக்கப்பட்ட பெருமை மட்டும் உடைய சிவத்தலங்கள் ‘வைப்புத் தலங்கள் என வழங்கப்படும் மரபினை சிலரே அறிவர்.

     

              சிவபெருமான் பல்பெயர்த்தவன்

    சிவபெருமான் சீர்மை பாடும் இத்திருமுறைப் பதிகப் பாடல்கள் தன் தலைவரின் பண்பு களை பற்பல பெயர் கொண்டு ஒவியப்படுத்தியுள்ளன. ஆலநீழலான், பசுபதி, பாசுபதன், பிறைசூடி, நெய்யாடி, பிஞ்ஞகன், ஆதி, அவிநாசி, மணாளன், மாதொருபாகன், மணவா ளன், விகிர்தன், கபாலி, தாயுமானவன், கோளிலி, பிறப்பிலி, சடைமுடியன், காரோணன், ஆனேறி எனப் பல்வேறு  பெயர்களால் வழங்கி போற்றப் பெற்றமை காணலாம்.

     

              சிவபெருமான் பூத நாதன்

    அவ்வழி பூதநாதன் என்பது சிவபெருமானுக்கு வழங்கும் நூற்றுக்கணக்கான பெயர்களில் ஒன்று. நிலம், நீர், தீ, காற்று, வானம் எனும் ஐம்பெரும் பூதங்களை அடக்கி  பேணும் ‘நாதனாக விளங்குவதாலாகும்.  ஐந்துபூதங்களின்-நாதன் எனக்காட்டும் சிறப்பு வழிபாட்டிற்கென தனித்தனியே திருஆரூர், திருஆனைக்கா, திரு அண்ணாமலை, காளத்தி, தில்லை என 5 பூதத்தலங்களை அமைத்து போற்றுகிறோம். பூத நாதன் என பெயர் விளி காணும் 18 பாடல்களுடைய ‘பெயர்வழித் திருமுறை’ தொகுப்பு உள்ளது.

     

              பூத நாதன் பரந்தவன்

    இந்தியாவில் பூதநாதன் என மூர்த்திப் பெயர்கொண்ட தலங்கள் நூற்றுக்கும் மேலுள்ளதாக அறிகிறோம் காசி இராமேச்சுரம், கயிலாயம் எனும் புகழ்பெற்றவை தன் பெருமையால் பற்பல இடங்களில் விசுவநாதர், இராம நாதர், கயிலாய நாதர் என தல இறைவன் பெயரிட்டு வழிபட வழி கோலியது போல்

    பூத் நாத்’ மந்திர்கள் (பூத நாதர் கோயில்கள்) வடக்கே பாட் டியாலா முதல் கிழக்கே அசாம், மேற்கே ஜுனாகாட், தெற்கே காஞ்சி வரை உள்ளமை இணையதள பதிவுகள்வழி அறியமுடிகின்றது. எனவே பூத நாதம் எனும் ஆதியும் மூலமும் ஆன தொன்மைத்தலம் ஒன்று பழங்காலத்தில் புகழுடன் விளங்கியுள்ளமை வரலாறாகின்றது.

     

              பூத நாதன் திருவூர்கள்

    குனுபூர் (ஒரிசா); மண்டி (இ.பி); கானாபூர், வாதாபி, தோர்கல் கோட்டை (கருநாடகம்); பகாடி, பூர்ணியா (பீகார்); மகுவா, மந்துவா (ம.பி); லக்மண்கர், பிகானீர், ஜோத்பூர், ஜுனாகாட், பிலானி, அபு (இராஜஸ்தான்); பகாரா, பல்பிபூர், சோர்வட், பரூஷ், படகளா, நவசாரி, போர்பந்தர், பவநகர் (குஜராத்); கோனால், சந்திரேஷ்வர் (கோவா); நவாடி(ஜார்கண்ட்) கோலாகோகர்நாத், ரிஷ்கேஷ், (உ.பி.); சிந்துதுர்க், நேரூர், (மகாராஷ்டிரா); பொகரோ (சத்தீஷ்கர்); ஜிண்டு(அரியாணா); பர்துவான் (மே.வ) பாடியாலா, அமிர்தசரஸ் (பஞ்சாப்); முதலிய பற்பல ஊர்களில் பூத் நாத் கோயில்கள் பரந்து காணப்படுகின்றன.

     

    வளர்ந்த பூத நாதர் பெருமையால் பம்பாய், டில்லி, கல்கத்தா, லக்னோ, சிம்லா போன்ற மக்கள் பெருகி இடம் பெயர்ந்து வாழும் பெருநகரங்களிலும் புதிது புதிதாக பூத் நாத் என பெயர் தாங்கிய சிவபெருமான் கோயில்கள் பல தோன்றியுள்ளன. மேலும் பற்பல தலங்கள் (108) நிறுவப்பெற்ற காசி, பர்டுவான் புவனேசுவர் காஞ்சிபாலி  போன்ற புண்ணிய தலங்களிலும் ஓர் பூத் நாத் கோயிலைக் காணலாம். ஈங்கு சிவராத்திரி’விழா மிகச்சிறப்பாக நடைபெறுவதாகவும் இமாசலப்பிரதேச மண்டி’யிலும் கொங்கண  கோவா வில் மலைமீதமைந்த பூதநாதர் கோயிலும் அக்கம்பக்கத்து மக்களால் பெரிதும் போற்றப்படு கின்றதாம். மகாதேவ் எனும் பெயர் சிவனைக் குறிப்பதுபோல் பலஇடங்களில் பூத் நாத் என்பதே பொதுநிலையில் சிவபெருமான் என பொருள் படவே பயன்படுகின்றமையும் காணப்படுகின்றது.

     

               வாதாபி ஆதிமூல பூத நாதம்

    பழங்காலத்து கருநாடகத்தில் சீரும்சிறப்பும் பெற்றிருந்து இந்நாள் ஓர் சிற்றூராகும் பாதாமி யில் அதாவது முன்னாள் வடுகநாட்டு வாதாபி யில் எழில்மிகு அகத்தியர்’ ஏரிக்கரையில் அமைக்கபட்டுள்ள பூத நாதர்’ கோயிலே மிக்கபழமை உடையதாகத் தெரிகின்றது. சம்பந்தர் அப்பரடிகளின் காலம் 7ஆம் நூற்றாண்டில் சிறப்புற்றிருந்துள்ளது. இங்குகாணும் பலஅடுக்கு களில் அமைந்த குடைவரைக் கோயில்கள் இந்நாள் சீர்குலைந்து வழிபாடின்றி புராதன சின்னங்களாக நிற்கின்றன. தொல்லியல் துறையினர் ஆய்ந்த ஏழாம் நூற்றண்டு கல்வெட்டு களாலும் அடுத்தடுத்த குகைகளில் சிவபெருமானுடையதைத் தவிர அருகு திருமா லுக்கும் ஜைன தீர்தங்காரருக்கும் அமைந்த தனித்தனி குகைக் கோயில்கள் பழமைக்குச் சான்று பகர்கின்றன.

     

    ‘வாதாபியே மிகப்பழமையான பூதூர் எனவும், அதன் நடுநாயகமான பூத நாதர் கோயிலும் ஐயமின்றி சால பழமை உடையது. இக்குடைவரைக் கோயில்கள் மகேந்திரவர்ம பல்லவன் காலத்து சாளுக்கிய மன்னன் புலிகேசியின் ஆணைவழி ஏழாம்நூற்றாண்டில் கட்டப் பட்டவைகள் என ஆய்வாவணங்கள் உள்ளன. சேக்கிழாரின் பெரிய புராணக் கருத்துவழி சிறுத்தொண்டர் பல்லவப் போர்த் தலைமை ஏற்று வடுகநாட்டுப் போரில் வென்று திரும்பிய பழமைஉடைய வாதாபி இதுவே. இணையவழி கண்ட மற்ற கோயில்கள் எவற்றிற்கும் அவற்றின் தோற்றம், கிட்டிய ஆவணம்வழி இவ்வகை பழமை காணப்படவில்லை. பற்பல மிகமிக பிற்காலத்தவை. ஓருசில சென்ற நூற்றாண்டில் தொடரும் பழங்கீர்த்தியில் கிளைத்தவை ஆகும்

     

              வாதாபி வைப்புத்தலம்

    தேவாரம் குறித்த ஓங்காரம், திரியம்பகம், சோமேச்சுரம், நாகேச்சுரம், மாகாளேச்சுரம்என்பன ஓர்வகையில் நிரல்பட்டு போற்றப் பெறும் அம் ஈற்று வடநாட்டுத் தலங்கள் போன்று பூத நாதன் என ஓர் தல இறைவன் 18 பாடல்களில் போற்றப்பெற்ற பெயர்வழி பெறப்படும் தலம் ‘பூநாம்‘. வாதாபியில் உள்ள ஆதி பூத நாதர் கோயிலே என அதனை ஓர் தேவார வைப்புத்தலம் எனக் கொள்ளலாம்.

     

                பூத நாயகன், பூ தேச்சுரம்

    தேவார திருமுறைகளில் பூத நாதன் போன்று பூத நாயகன்‘ எனஓர் பெயரும் மேலும் 10 பாடல்களில் காணப்படுகின்றது. வடநாட்டிலும் பூத் நாத் உடன் ‘பூ தேஷ்வர்’ என பெயர் வழங்கும் ‘மந்திர்கள் நூற்றுக்கும் மேலுள்ளன. நுணிகிய நிலையில் இவ்விரு சொற்களுக்கு இடையுள்ள ஒற்றுமையும் வேற்றுமை, பூதம் எனும் சொல்லின் மாற்றுப் பொருள்கள், பூதகண-பதி’ வழிபாடு, அதன் வாதாபித் தொடர்பு முதலியன அடுத்து தொடரும் ஓர் கருத்துரையில் காண்போம்.

     

    கீழ்காணும் படங்களின் தொகுப்பினில், இந்தியாவில் பரந்துள்ளசில பூத் நாத் மந்திர் களைக் காண்க. இவற்றில் மிகச்சிலவே பழமையான. பற்பல மிகமிகப் புதியன. 

     

     

    திருச்சிற்றம்பலம்

    <><><><><>

     

     

    3 attachments — Download all attachments   View all images  
      endimage.jpg
    214K   View   Download  
      imageatstart.jpg
    110K   View   Download  
    Share
  • சீன யாத்திரிகர் யுவாங் சுவாங்

     

    சீன யாத்திரிகர் யுவாங் சுவாங்

     
    பற்றி பலரும் பலமுறை கேள்வியுற்றிருப்பார்கள்
     
    சிறுவரும் வரலாற்றுப்படத்தில் படித்திருப்பர்
     
    ஆனால் அவர் உருவம் எப்படிஇருக்கும் ???
     
    என படத்தில் பார்துள்ளோர் சிலரே ஆகலாம் !!!!
     
    பார்கக்காதவர் நிரலில் யானும் உள்ளேன்
     
    இணைய தளங்களில் உலாவரும்போது கண்டது 
     
    பார்த்தவர் பார்க்காதவர் என எல்லொரும் காண
     
    அவரது சிலை
     
    இந்தியாவில்
     
    நாளந்தாவில் 
     
    அவர் நினைவிடத்தில்
     
    உள்ளது படத்தில் கண்டேன்
     
     
     
     
    தாங்களும் காண்க
     
    நூ த லோ சு
     
    மயிலை
     
     
     
     
     
    Share
  • தேவாரத் தலங்கள் – மாந்துறை

     

    நூ த லோகசுந்தர முதலி

    மயிலை

    இக்குறுத் தொடரில் திருச்சி சமயபுரம் அருகு முதற்கண் பிடவூர் ஊற்றத்தூர் என இரு வைப்புத் தலங்களைக் கண்டோம். பின்பு திருச்சி மாநகருக்கு வடகிழக்கே காவிரி-கொள்ளிடம் (தோல்கேட்) கடந்து வடக்காக சமயபுரம் செல்லாமல் கிழக்காக லால்குடிக்கு பிறிந்து செல்லும பெருவழியில் 5 கி மீ சென்றால் காணும்  மாந்துறை எனும் ஞானசம்பந்தர் பதிகம் பெற்ற தலத்தினைக் காணலாம். இருந்தும் செலவுவழி பொருத்தமாக அமைய நேராக மேலும் 2 கிமீ கிழக்கு திருத்தவத்துறை என தேவாரம் குறிக்கும் லாலல்குடி வைப்புத் தலத்தினைக் வழிபட்டோம் பிறகு அதற்கு மேலும் 5 கிமீ கிழக்கமைந்த அன்பிலுளள்ள ஆலந்துறை எனும் பாடல் பெற்றத்தலத்தினையும் கண்டு இப்போது கடைசியாக திருச்சி திரும்பும் முன்பு இரண்டாம் திருமுறையில் திருஞானசம்பந்தரின் நட்டராகப் பண்ணமைந்த ஓர் பதிகம் உள்ள மாந்துறை திருத்தலத்தினைக் காண்போம்

    இதன் பதிகப் பாடல் ஒவ்வொன்றிலிலும் வடகரை என வேறு ஒரு மாந்துறையிலிருந்து வேறு படுத்திக் காட்டும் சிறப்புள்ளது. காவிரி வெள்ள நீரில் சுமந்து வரும் பல்வகைப் மலைவளப் பொருள்கள் நிரல்பெற குறிக்கப்படுவது மிக நன்றாக உள்ளது.

    வேங்கை ஞாழல் செருந்தி செண்பகம் மாதவி சுரபுன்னை குருந்தம் ஆரம் (சந்தனம்) விளா மூங்கில் குன்றி பூகம் (பாக்குவகை) இலவம் ஈஞ்சு (ஈச்சமரம்) இளமருது இலவங்கம் குரா கோங்கு செண்பகம் குருந்து பாதிரி சந்தனம் காரகில் நறவம் மல்லிகை முல்லை மௌவல் கழை(முங்கில்) நறவு வேலம் மா கதலி (வாழை) என நீளும் 32 பயிர்வகைகளும் ஆனைக்கொம்பு மயிற்பீலி மாணிக்கம் நீலமணி நித்திலம் என மிதந்து வரும் மாண்புடை பொருள்களும் மந்திகள் மாங்கனி மாந்தல் முதலிய இயற்கை வருணனைகள் முதலியவையும் இப்பதிகப்பாடலில் பேசப்பட்டுள்ளன.

    மேலும்
    திரையார்புனல் கெடில வீரட்டமும் திருவாரூர் தேவூர் திருநெல்லிக்கா
    உரையார் தொழநின்ற ஒற்றியூரும் ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும்
    வரையார் அருவிசூழ் மாநதியும் மாகாளம் கேதாரம் மாமேருவும்
    கரையார் புனல் ஒழுகு காவிரிசூழ் கடம்பந் துறை உறைவார் காப்புக்களே 6.7.4
    அப்பரடிகள் தேவாரம்-திருவீரட்டானம்-காப்புத்திருத்தாண்டகம்
    நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே
    மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே
    மறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே
    இறைக்காட் டாயே எங்கட் குன்னை எம்மான் றம்மானே. 7.47.3

    சுந்தரர் தேவாரம் – ஊர்த்தொகை

    ஊரெலாம் துஞ்சி உலகெலாம் நள்ளென்று
    பாரெலாம் பாட இந்தப் பாய் இருள்கண்-சீருலாம்
    மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைகாட்டுப்
    பூந்துறைவாய் மேய்ந்(து) உறங்கா புள் 11.295

    சேரமான் பெருமான் பாசுரம்- திருவாரூர் மும்மணிக்கோவை 26

    என வரும் திருமுறைப்படல்களிலும் மாந்துறை / திருமாந்துறை என இரு தலங்கள் காட்டப்பட்டுள்ளன. இவைப்பற்றி வேறு துணைக் குறிப்புகள்/முன்அடை/பின்அடை ஏதும் காணாமையால் இவை வேறு வைப்புத் தலங்களாகவும் கொள்ளலாம்.

    நன்காய்ந்த பின்பே பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் பெருந்தகை ஞானசம்பந்தரின் வழிபாட்டுச் செலவு பற்றி விளக்குங்கால்
                   கஞ்சனூர் ஆண்ட தம்கோவைக் கண்உற்று இறைஞ்சி முன்போந்து  
                   மஞ்சணி மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி
                  அஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாகச்
                 செஞ்சடை வேதியர் மன்னும் திருமங்கலக் குடி சேர்ந்தார் 6.1.293
    என கூறுகிறார்

    இங்கு ஒரு மாந்துறைதனை காட்டுவதன்றி அதற்கு பதிகம் பாடி உள்ளதாகவும்  கூறுகின்றார். “மஞ்சணி மதில் சூழ்ந்த” என்பதால் குறைந்தது சேக்கிழார் காலமாகிய 13 ம் நூற்றாண்டில் இருந்துள்ள ஓர் கோயில் பெறப்படுகின்றது. இஃது தற்காலத்தில் போற்றுதலுடன் விளங்கும் சூரியனார் கோயிலிலிருந்து சிறிது துரத்தே அமைந்துள்ளது என்கின்றனர். சம்பந்தர் பதிகப் பாடல்களில் காணும் விளக்கங்கள்படி அது ஓர் அகண்ட காவேரிக் கரையில்தான் இருக்க வேண்டும் அப்பண்பு இக்கஞ்சனூர் மங்கலக்குடி இடையுள்ளதற்கு சிறிதும் பொருந்தாது.சேக்கிழார் காலத்திருந்து பின் தொலைந்து பட்ட ஓர் பதிகமாவதற்கு வாய்ப் மிகக்குறைவே. ஆக இதனில் ஏதோ ஓர் கருத்து வைப்பினில் முரண்பாடுள்ளது.

    ஆனால், நம் வடகரை மாந்துறை பற்றி பேசுங்கால் சேக்கிழார் மிகச் சரியாகவே சம்பந்தர் பதிக 6வது பாடலில் குறிக்கப்பட்ட சூரிய சந்திரர் வழிபாட்டினை காட்டுவதால் பாடல்பெற்ற வடகரை மாந்துறை பற்றி யாதொரு ஐயமுமில்லை
         
    மேலும்
    திருமாந்துறை என ஓர்த்தலம் பெரம்பலுர் மாவட்டத்தில் தொழுதூர் அருகு ஓர் சீரிய ஆற்றங் கரையில் அமைந்துள்ளது. தற்காலம் திருச்சி சென்னை பெருஞ்சாலைவழியில் திருச்சிக்கு அடுத்து காணும் சாலை வரி தண்டும் TOLL PLAZA அமைந்த திருமாந்துறையிலும் பெரிய
    பழமையான கோயில் உள்ளது.

    எனவே குறிக்க மட்டும் காணும் இம் மாந்துறைகளை வைப்புத் தலங்களாகக் கொள்ளவது மரபு எனலாம்

    நம் வடகரை மாந்துறை இறைவர்=மாந்துறை நாதர் அம்மை=பாலாம்பிகை, தலப்பயிரினம்=மா. கோயில் சாலைக்கு மிக அருகேயே உள்ளது. சிறிய சீர்மிகு 3 நிலை 7 கலச பதுமைகள் நிறைந்த கோபுரம் தேவார திருப்புகழ்ப் பாடல்கள் பொளித்த கற்பலகைகள் சில நூற்றாண்டு பழமையான கல்வெட்டு ஒன்றும் அம்மை அப்பன் திருமுன்களை சூற்றிவர அகன்ற தூய்மையாக பராமரிக்கப்பட்டுள்ள திருச்சுற்றும் காணப்படுகின்ன.

    முன்பு குறித்தபடியே லால்குடி அன்பில் மாந்துறை என மூன்றினையும் ஓர் முற்பகலிலலேயே திருச்சியிலிருந்து நகரப்பேருந்து பிடித்தே சென்று ஆரவாரமற்ற தியான நிலையில் வழிபட்டு திரும்ப முடியும்.

    என் கருவி உட்கொண்ட சில காட்சிகளை இணைப்பினில் காண்க

    முறையான திட்டத்துடன் திருமுறைத் தலங்களை வழிபட நினைவோர் திருவானைக்கா பாச்சில் பைஞ்ஞீலி பாற்றுறை எனும் அணித்தே உள்ள ஏனைய காவிரி வடகரைத் தலங்களுடன் இணைந்தும் இவற்றை வழிபடலாம்.

    11 attachments — Download all attachments   View all images  
    1mAntuRairaja.jpg 1mAntuRairaja.jpg
    140K   View   Download  
    2talavaralARu-kal1.jpg 2talavaralARu-kal1.jpg
    95K   View   Download  
    3talavarlRu-kal2.jpg 3talavarlRu-kal2.jpg
    355K   View   Download  
    4mAntuRai-gnAnatEvAram.jpg 4mAntuRai-gnAnatEvAram.jpg
    208K   View   Download  
    5mAntuRai-gnAnatEvAram2.jpg 5mAntuRai-gnAnatEvAram2.jpg
    272K   View   Download  
    6mAntuRai-tEvAram-d-f.jpg 6mAntuRai-tEvAram-d-f.jpg
    552K   View   Download  
    6mAntuRai-tiruppukazh.jpg 6mAntuRai-tiruppukazh.jpg
    231K   View   Download  
    7mAntuRai_inscr.jpg 7mAntuRai_inscr.jpg
    445K   View   Download  
    7mAntuRaisuRRukkoyilkaL.JPG 7mAntuRaisuRRukkoyilkaL.JPG
    124K   View   Download  
    8mAntuRaimUlaSW.jpg 8mAntuRaimUlaSW.jpg
    417K   View   Download  
    9mAntuRaimUlaNW.jpg 9mAntuRaimUlaNW.jpg
    406K   View   Download  

     

    Share